ஞாயிறு, 21 ஜூலை, 2024

மண் கடத்திய வேர்களின் வலி நூலெங்கும் பரவியிருக்கிறது - பாவலர் வையவன்


ஒருவரின் காதல் எதன்மீதாக இருக்கவேண்டும்? என்னவாக இருக்கவேண்டும்? ஆண் அல்லது பெண்ணின்மீது கொள்ளும் காதல் மட்டும்தான் காதலா? நிலத்தின்மீதும் இனத்தின்மீதும் மொழியின்மீதும் கொள்ளும் காதல் காதலாகதா? 

இம் மூன்றின்மீது கொள்ளும் காதலே மற்ற காதல்களை முழுமையாக்கும் என்பது என் கருத்து. அதற்கு தமிழினத்தின் வரலாறு நெடுக சான்று உள்ளது. அப்படி அம்மூன்றின் மீதும் காதல் இல்லையாயின் அடிமைக் காதலும் அடமான வாழ்வுமே வாய்க்கும். வாழ்வின் இலக்கணமே நிலமும் பொழுதும்தானே! 

நிலத்தையும் இனத்தையும் தீராது நேசிக்கும் ‘தமிழ்த்தோழர்’ மகாராசன் அண்மையில் அவரது படைப்பான ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பினை எனக்கு அனுப்பிவைத்தார். நூலிலுள்ள ஐம்பத்தைந்து கவிதையிலும் பஃறுளியும் குமரிக்கோடுமாய் பரவியிருந்த ஆதி தமிழ்நிலத்தின் மண் அப்படியே ஒட்டியிருக்கிறது. அத்தோடு அந்நிலத்தில் தாய்ப் பாலாய் ஓடிய ஆறுகள் இன்று கண்ணீராய்ச் சிந்திக்கொண்டிருக்கிற கவலையும் அப்பியிருக்கிறது. மண் கடத்திய வேர்களின் வலி மகாராசன் தூரிகை வழியே நூலெங்கும் பரவியிருக்கிறது.

குவிந்து கிடக்கும் ஒத்தடச் சொற்களால் தணிவதல்ல அவ் வலிகள். கடந்த அரை நூற்றாண்டின் பெருந்தாகம் நிலமெங்கும் விக்கலாய் வெளிப்படுகிறது. பசித்த கண்கள் பழிதீர்க்க முடியாமல் பரிதவிக்கிறது. 

இன்னும் மிச்சமிருக்கும் புழுதிக் காடுகளின் பனையோலை தூர் இடுக்குகளில் எச்சங்களை விதைத்துச் செல்லும் பறவைகள் மட்டுமே நிலத்தின் நம்பிக்கையாக இருக்கின்றன. 

கரும்பச்சைக் கூடாரமாய் நீண்டு படுத்திருந்த மலைத் தாய்ச்சியின் மனிதப் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாய்க் கீழிறக்கப்பட்டார்கள்; நிலத்திற்கு வந்தேறியவர்கள் வனத்தைச் சொந்தமாக்கி மெல்ல மெல்ல மேலேறினார்கள். பழுப்பேறிய உழைப்பும் வெள்ளந்தி வாழ்க்கையும் பச்சையம் இழந்த நிலமும் கந்தல் துணியாய் நைந்து நைந்து இத்துப் போயிருக்கின்றன. 

வியர்வை மணக்கும் நெல்லினை அள்ளி அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம் இன்று பருக்கைகளுக்காகக் கையேந்திக் காத்துக் கிடக்கின்றன. கூடிழந்த பறவைகளாய் வீடிழந்து நிற்கிறது இனம். சோற்றுக்கு வாலாட்டிய நாய்கள் போக தப்பிய புலிகளின் கால்தடம் பதியக் காத்திருக்கிறது ஒரு நிலம். அதற்கு வாய்க்கும் பொழுது.

வாங்கிப் படியுங்கள்; வட்டம் போடுங்கள் !

கட்டுரையாளர்:
பாவலர் வையவன்
திருவண்ணாமலை.
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக