செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

நிலத்தில் தோய்ந்த இளம்பருவத்து ஆத்மாக்களின் வலியும், வாழையடி வாழையும் - ஏர் மகாராசன்


பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காப் போகாம, வாத்தியாரு செத்துப் போனாருனு பல தடவ பொய்கள் சொல்லி ஏமாத்துனதப் பாத்துப்புட்டு, படிப்புக்கே இவன் தோதுப்பட மாட்டான்னு நெனச்சி மனசுக்குள்ள அழுதுக்கிட்டாரு அப்பா.

நாம்பட்ட கருமாயத்த நீயும் படனுமாடான்னு சில நேரங்கள்ல கண்ணீர் பொங்கப் பேசுவார்.

என்னத்தச் சொல்ல, ஓம்பொழப்பு மண்ணோட மண்ணா சீரழியப் போவுதுனு  அழுகாத கொறையாச் சொல்வாரு.

எஞ்சோட்டுப் பய புள்ளைகளெல்லாரும் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிட்டும், மத்த நாள்ள கம்மாய்க்குள்ள நீச்சலடிச்சிக்கிட்டுமா இருந்த ஒரு மழக் காலத்துலதான் , எங் கையில ஒரு மம்பட்டியக் கொடுத்து, வாடா தம்பி பின்னாலன்னு பெரிய காணிக்குக் கூட்டிட்டுப் போனாரு.

உழுது தொளியாக் கெடந்த அந்த வயக்காட்டுச் சனி மூலயில எறங்கி நின்னுக்கிட்டு என்னயவும் எறங்கச் சொல்லி, புல்லும் புளிச்சியுமாக் கெடந்த வரப்புல அரிஞ்சி அரிஞ்சியே வெட்டி, மண்ண இழுத்துத் தொளிக்குள்ள போட்டுக்கிட்டே போனாரு.

நம்மள எதுக்குடா இங்க வரச் சொன்னாருனு தெகச்சி நிக்கும் போதுதான், நாஞ் சும்மா நிக்குறதப் பாத்துப் புட்டு, ங்கோத்தா மவனே வரப்ப வெட்டுடான்னு அமட்டுனாரு. இதென்ன பெருய மசுரான்னு நெனச்சி நானும் வரப்ப வெட்டலாம்னு மம்பட்டியப் புடிச்சி வெட்டுனேன். 

வடக்கத்தி வரப்ப முடிச்சுப்புட்டு மேக்கத்தி வரப்புல பாதிகூடத் தாண்ட முடியல. உள்ளங்கயி ரெண்டுலயும் கொப்புளம் கொப்புளமாய் நீர் கோத்துக்கிச்சு. எம் பக்கமா திரும்பிக் கூடப் பாக்காம அவரு பாட்டுக்கு வரப்ப வெட்டிக்கிட்டே போனாரு அப்பா.

இடுப்பெல்லாங் கடுக்குது, உள்ளங்கையி காந்துது. தொட ரெண்டுமே கிடு கிடுன்னு நடுங்குது. அழுக அழுகயா முட்டிக்கிட்டு வருது. சார சாரயா வேத்து ஊத்துது. குனியவும் முடியல; நிமிரவும் முடியல. வயித்துப் பசியும் அல்லயப் புடுங்குது. மேக்கத்தி வரப்பச் செதுக்கிட்டு தெக்கத்தி வரப்பு மூலயில நின்னுக்கிட்டு, கொறய வெட்டிட்டு வரப் போறீயா என்னான்னு கோவமா கத்துனாரு அப்பா.

என்னால இதுக்கு மேல முடியலப்பான்னு அழுதே புட்டேன். இந்தக் காணிய முடிக்காம வெளியேறப்டாதுன்னு மூஞ்சில அடிச்சாப்ல சொல்லிப்புட்டாரு. வேற வழியே இல்லாம மம்பட்டியப் புடிச்சி வெட்டலாம்னு குனிஞ்சா வின்னுவின்னுன்னு இடுப்புத் தெறிக்குது. ரெண்டு எட்டு வரப்ப வெட்டிப் போக முடியல. உள்ளங்கையி கொப்பளம் ஒவ்வொன்னா ஒடஞ்சு போனதால அந்த எடமெல்லாம் காந்துது. யாராச்சும் நம்மளக் காப்பாத்த வர மாட்டாங்களான்னு தவிச்சுக்கிட்டு நிக்கும் போதுதான் , நாலஞ்சு காணி தள்ளி அம்மா வாரதப் பாத்துப் புட்டேன்.

அப்புடியே மம்பட்டிய தொளிக்குள்ள போட்டுப்புட்டு அம்மாகிட்ட ஓடிப்போனேன். அம்மா என்னயக் காப்பாத்துமான்னு அம்மா காலப் புடிச்சிக்கிட்டு அழுது அழுது கெஞ்சினேன். எங் கைய்யப் பாத்துப்புட்டு அம்மாவும் சன்ன அழுகயா அழுதுச்சு. பதறிப் போயி ரெண்டு பேருமா மாத்தி மாத்தி அழுததுல, கொண்டாந்த சோத்துச் சட்டியும் கொட்டிப் போச்சு.

இத எதயுமே கண்டுக்காத மாதிரியே கெழக்கத்தி வரப்புல முக்காவாசிய வெட்டிக்கிட்டு இருந்தாரு அப்பா. எங் கையப் புடிச்சிக்கிட்டு விங்கு விங்குன்னு அப்பாக்கிட்ட இழுத்து வந்துச்சு அம்மா. அப்பாவ ஏன்டான்னே அம்மா கேட்டது அன்னிக்குத்தான். ஏன்டா ஒனக்குப் புத்தி கித்திப் பேதலிச்சுப் போச்சா? பச்சப்புள்ளய இந்தப் பாடு படுத்திருக்க ? ஒத்தப் புள்ளயச் சாவடிச்சுப்புடுவ போலன்னு கோவந்தாவமா பேசுனா அம்மா.

பேசாமப் போயி கெணத்தடியல இருங்களா. இத அரிக்கிப்பிட்டு வாரேன்னு அப்பா சொன்னாலும், அம்மா விடல. ஏளா பேசாம இருளான்னு அப்பா சொல்லவும், கெணத்தடிக் குடிசக்கிக் கூட்டிட்டுப் போனா அம்மா. அப்பா கொண்டாந்திருந்த தூக்கு வாளியில இருந்த நீச்சத் தண்ணிய எடுத்துக் குடிக்கச் சொல்லித் தவிப்பாத்தினாள்.

பெரிய காணி முழுசயும் வெட்டி முடிச்சுப்புட்டு தம்பாயமில்லாம நடந்து வந்து எங்கிட்ட வந்து ஒக்காந்தார் அப்பா. உள்ளங்கை ரெண்டையும் விரிக்கச் சொல்லிப் பாத்தாரு. ரொம்ப வலிக்குதாப்பான்னு குரல் தழுதழுக்கக் கேட்டாரு. உள்ளங்கையெல்லாம் செவந்து போனதப் பாத்துப் புட்டு ரொம்பவே வேதனப்பட்டாரு.

பாத்துக்கோ தம்பி, நீ பள்ளிக்கோடம் போகலாட்டினா, ஒழுங்காப் படிக்காட்டினா காலம் பூராவும் இப்டித்தான் கருமாயப்படனும்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, இல்லப்பா, நா பள்ளிக் கொடத்துக்குப் போறேனுப்பா, ஒழுங்காப் படிப்பேம்பான்னு சொல்லி முடிக்குங்குள்ள, என்ன அப்புடியே கட்டிப் புடிச்சி அழுதே விட்டார் அப்பா. அப்பாவும் நானும் அழுகுறதப் பாத்துப்புட்டு அம்மாவும் சேந்தழுதுச்சு. 

கொஞ்ச நஞ்ச நெலமும் கெணமும் இருந்ததுனால, காட்டுலயும் வயக்காட்டுலயும் வெள்ளாம செய்யுறதும், கத்தரி, வெண்டி, தக்காளி, சீனியவரை, கம்பு, சோளம், வெங்காயம், கடலை, வாழை, நெல்லுனு வெள்ளாம பாக்குறதும், ஆடு மாடு கோழின்னு வாயத்த சீவன்கள வளக்குறதும், கொஞ்சூண்டு நெலமும் சம்சாரித்தனமும் எங்க ஊருல இருக்கிற அத்தனப் பேத்தோட வாழ்க்கையுமா இருந்துச்சு. 

சம்சாரித்தனமும் அதுக்குண்டான அத்தன வேலப்பாடுகளையும் செய்யுறதையும் சம்சாரிக் குடும்பத்துல இருக்குற எல்லாருமே ஒன்னாச் சேர்ந்து பாத்தாத்தான் நாலு காசு மிச்சத்தப் பாக்க முடியும். ஒருத்தரு வேல செய்யுறதும், இன்னொருத்தரு சும்மா இருக்கிறதும் சம்சாரிக் குடும்பத்துல வெளங்காது. 

என்னதான், பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வந்தாலும், படிப்பச் சாக்குப் போக்குச் சொன்னாலும், சம்சாரி குடும்பத்துல பொறந்ததுனால சம்சாரிக் குடும்பத்துப் பாடுகளோடு பாடா ஒன்னு மண்ணுமா கெடக்க வேண்டியதாப் போச்சு.

காட்டுலயும் வயக்காட்டுலயும் வெளையுறத மதுரைச் சந்தையில கொண்டு போயி வித்துப்புட்டு வரணும். அதுக்கு முன்னாடி, விடியக் கருக்கல்லேயே எந்துருச்சு காட்டுக்கும் வயக்காட்டுக்கும் போயி, காய்களப் புடுங்கி, ரெண்டு மூனு மூட்டையில போட்டு, அம்மா ஒரு தலயிலயும், அப்பா ஒரு தலயிலயும், நா ஒரு தலயிலயுமாச் சுமந்து ரெண்டு கிலோ மீட்டர் தொலவு இருக்குற நிறுத்தத்து வரைக்கும் தலச் சுமயாச் சொமந்து போயி பேருந்து வண்டியில ஏத்தி விடனும்.

கிட்டத்தட்ட முப்பது நாப்பது கிலோ இருக்குற காய் மூட்டையத் தலச் சுமயாச் சொமந்து போகும் போது தலயும் கழுத்தும் காலும் இடுப்பும் வின்னு வின்னுன்னு நோகும். அதுக்கப்புறமாத்தான் பள்ளிக்கூடத்துக்குப் போகனும். இப்படித்தான் பத்தாப்பு படிக்கிற வரைக்கும் எம் பாடு இருந்துச்சு. பெரும்பாலான கிராமத்துச் சம்சாரிகளின் பிள்ளைகளும், காடு மேடுன்னு ஒழைக்கிற குடும்பத்துப் பிள்ளைகளும் குடும்பத்துக்கு ஒத்தாசையா இருந்தாத்தான கஞ்சி தண்ணி குடிக்க முடியும். 

கிராமத்துல மட்டுமல்ல; நகரத்துல வாழ்கிற ஒழைக்கிற குடும்பத்துப் பிள்ளைகளும் ஏதாவது ஒரு வேல வெட்டிகளச் செஞ்சாத்தான் சீவன வளக்க முடியும். ஒழைக்கிற சனங்க எல்லாச் சாதியிலயும் இருக்காக. ஒழைக்கிற சம்சாரிகளும் எல்லாச் சாதியிலயும் இருக்காக. அப்பேற்பட்ட குடும்பத்துல பொறந்து வளர்ந்து படிக்கிற பிஞ்சு வயசுல ஒழைச்சுதான் ஆகனும்னு இருக்கையில ஒழைச்சாத்தான் உசுரு வாழும். இதுல ஒடம்புதான் ஒழைப்புக்கு மூல ஆதாரமா இருக்கும். அந்த ஒழைப்புல ஒன்னு மண்ணுமாக் கெடக்குற பசங்களோட ஒடம்பு வலி நோவும் மனசு வலி நோவும் இந்த நெலம் பூராவும் பரவிக் கெடக்கு.

இப்படியான வலியும் அழுகையும் ஒழைக்கிற சம்சாரிக் குடும்பத்துல பொறந்த எல்லாத்துக்குமே இருக்கும். 

அந்த வலிகள எல்லாத்தையும் எழுத எழுதத் தீராது; பாடுனாலும் கொறையாது. ஆனாலும், அந்த வலிய மத்தவங்களுக்குக் கடத்த முடியும். எனக்குத் தெரிஞ்ச மொழியில, என்னோட படைப்புல, என்னோட எழுத்துலக் கடத்த முடியும்; காட்ட முடியும். 

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கலைத் தன்ம ஊடாடிக் கிடக்கும். அந்தக் கலைப் படைப்பு வழியா அவரவரோட அனுபவத்தக் கடத்தும் போது சமூக அனுபவமா மாறிப்போகுது. சமூகம் பேச வேண்டிய அனுபவமா மாறிப் போகுது. தன்னோட அனுபவத்தையும், தன்னப் போல இருக்கிற மத்தவங்க அனுபவத்தையும் சமூக அனுபவமாகவும் சமூகம் பேச வேண்டிய அனுபவமாகவும் தரும்போது அந்தக் கலைப் படைப்பு வெகுமக்கள் ஏற்புக்கும் பாராட்டுக்கும் உள்ளாகுது. 

இயக்குநர் மாரி செல்வராசு அவர்களின் திரைப் படைப்பாக வெளிவந்திருக்கும் வாழை திரைப்படமானது, நிலம் தோய்ந்த உழைப்பில் உடல் நோகப் பங்கேற்கும் இளம் பருவத்து ஆத்மாக்களின் வலியை உணர்வுப்பூர்வமாகவும் கலைப்பூர்வமாகவும் காட்சி மொழியில் காண்பித்திருக்கிறது. மாரி செல்வராசு உள்ளிட்ட வாழை படக்குழுவினர் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

வாழைத்தார் சுமந்து உழைக்கும் எளிய மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்திருக்கும் வாழை படத்தைப் போலவே, வாழைத்தார் சுமக்கும் கூலி சம்சாரிகளின் வாழ்வியலை வாழையடி.. எனும் சிறுகதையின் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சோ.தர்மன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த வாழையடி கதை எழுத்தின் சித்திரம், தற்போது வாழையின் ஒளிச் சித்திரம் வாயிலாகவும் வேறொரு கோணத்தில் பதிவாகி இருக்கிறது. வாழைத்தார் சுமக்கும் உழைக்கும் கூட்டமும், சம்சாரிக் குடும்பங்களும் வாழையடி வாழையாய் வலியைச் சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

படிப்பு வாசனை என்னைத் தொற்றிக் கொண்டாலும், அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்ட தொளி வாசனையும் வியர்வை வாசனையும், அம்மாவிடமிருந்த உழைப்பு வாசனையும் எம்மிடமிருந்து விலகவுமில்லை. அதனால்தான் என் எழுத்துகள் யாவற்றிலும் நிலத்தில் தோய்ந்து வலி நோகும் ஆத்மாக்களின் வலியையும் வாழ்வையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.

ஏர் மகாராசன், 
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
27.08.2024

சனி, 17 ஆகஸ்ட், 2024

விதைச்சொற்களால் கவிச்சித்திரம்: முனைவர் இரா.காமராசு


மகாராசன் மாணவராயிருந்த பொழுதே கருத்தியல் களமாடியவர். ஈழம் குறித்தக் கரிசனமும் அடித்தள விளிம்புநிலை ஆய்வுப் பார்வையும் மீதூரப் பெற்றவர். கவிதை, திறனாய்வு, ஆய்வு, பண்பாட்டுச் செயல்பாடு, இதழியல், கல்வி எனப் பன்முக ஆளுமையாக மிளிர்பவர். கலாநிதி கா.சிவத்தம்பி வார்த்தைகளில் சொன்னால் பண்பாட்டுச் செயற்பாட்டாளர். மகாராசனின் அண்மைக் கவிதைத் தொகுப்பு 'நிலத்தில் முளைத்த சொற்கள்'.

இவரின் முதல் கவிதைத்தொகுப்பு 'சொல் நிலம்' (2017). இவருக்கு நிலம் தான் எல்லாமும். நிலத்தின் மக்கள் குறித்த அக்கறையும் ஆதங்கமுமே இவரின் கவிதைகள். பிரபஞ்சத்தின் ஆதித்தாய் நிலம். உயிர்களும் பயிர்களும் இவற்றின் இயங்கு நிலையும் நிலத்திலேயே கால்பாவி நிற்கின்றன.

இந்தக் கவிதைகள் யாவும் எளியவைதாம். எனினும் வலியவை. நேர்கோட்டுக் கவிதைகள் என்றாலும் கிடைமட்ட, செங்குத்துப் பார்வைக் கோணங்களைக் கொண்டவை.

நீரும் நிலமும் ஆதிப் பொது அதிசயங்கள். இவை அதிகாரத் தூண்டில்களுக்கு அகப்பட்ட வரலாற்றை, உரிமையுடைய மனிதர்கள் அகதிமையாக்கப்பட்ட வரலாற்றை இந்த நிலத்தில் முளைத்த சொற்கள் சித்திரப்படுத்துகின்றன.

"அண்டத்தின் ஆதியை உணர்ந்து / மூதாதைகளின் தொன்மங்களைத் தேடி / தொல் நிலத்தில் வேர்கள் பாய்ச்சி / உறவுக் கிளைகள் சேர்த்து / பேரிசைப் பண்கள் பாடி / மூச்சுக்காற்றை நிறைத்து / ஐந்திணைகளின் காமம் சுவைத்து / வழியெங்கும் கால் தடம் பதித்து / நீர்மையாய் வழிந்தோடும் / சொற்களால் நனைந்து நனைந்து / பசப்படித்தது நிலம் / கருப்பம் கொண்ட / பிள்ளைத்தாய்ச்சியாய் / உயிர்த்தலைச் சுமக்கின்றன/ நிலம் கோதிய சொற்கள்" எனத் தொடங்கி நிலத்தின் பன்முகப் பரிமாணங்களைக் கவிதைகளாகத் தருகிறார். இனம், மொழி, சாதி, பால், வர்க்கம் ஆகியவற்றை நிலத்தினொடு நிறுத்தி விவாதிக்கின்றன இக்கவிதைகள். 

'மண் மீட்டிய வேர்களின் இசை' என்றும், 'நிழலை அள்ளிப் பருகிக் கொண்டது உச்சி வெயில்'' என்றும், 'நீர் முலைத் தாய்ச்சிகள்' என்றும், செம்மூதாய்த் தொல் நிலம்' என்றும், 'ஒற்றைச் செம்போத்தின் நெடுங்கூவல்' என்றும், 'மழைக்காலத்தின் களவுப்பூ' என்றும் நிலத்தின் சொற்கள் விதவிதமாய் விரிகின்றன. 

கருத்தியல் தெளிவும் அழகியல் நளினமும் அரசியல் கூர்மையும் மகாராசனின் கவிதையியலாக அமைகிறது.

மலைத்தாய்ச்சி, நிலத்தாய்ச்சி, கடல்தாய்ச்சி, மரத்தாய்ச்சி.. என்றெல்லாம் மிக இயல்பாக இவர் எழுதிச் செல்கிறார். மனிதர்களை மட்டுமல்ல சக உயிர்களோடு உயிரற்ற இயற்கைப் படைப்புகளையும்கூடத் தாயாக, உயிராகப் பார்க்கும் இந்த உயிர் நேயம் தமிழர் தொல்மரபின் நீட்சி.

தொகுப்பு முழுக்க உழுகுடிகளின் உயிர் அசைவு நுணுக்கமாகப் பதிவாகி உள்ளது.

'உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள் / நிலமெனும் ஆத்மாக்களின் / அழுகைத் துளிகள் / கால்கள் நோகவும் / கொப்புளங்கள் பூக்கவும் / அரத்தம் கசியவும் நடந்த பாதங்கள் / பசி தீர்க்கும் ஒளி நிலங்கள் / உயிர் நோகும் நிலத்தின் அழுகையை / கால் தோய நடந்து நடந்து / நைந்து போயிருக்கும் / உயிர்ச்சாமிகள்'.

நிகழ் வாழ்வின் பெரும் சிக்கல்களையும் இவரின் கவிதைகள் கவனப்படுத்துகின்றன.

"ஊருக்குள்ளிருந்த மச்சு வீட்டையும் / சேரிக்குள்ளிருந்த குச்சுக் குடிசையையும் / வாரிச் சுருட்டிக் கொண்டு / ஊரையும் சேரியையும் / ஒன்றாக்கி விட்டுப் போயிருக்கிறது / இந்நிலத்துப் புயல் மழை'.

"கண்களில் பூத்திருந்த / மகரந்தத் தூள்களை அப்பிக்கொண்ட / பூஞ்செடி இதழ்களில் தேன் பருகி / திக்குகளில் பறந்து திரிந்தன / வண்ணத்துப் பூச்சிகள் / கீகாட்டுப் பூக்களும் / மேகாட்டுப் பூக்களும் / அணைத்து மணத்துக் கூடிக் கிடந்தன / வனப்பேறிய வாஞ்சையோடு / பிஞ்சுகளை ஈனுகின்றன / நிறைசூலிப் பூக்கள்.

விதை நெத்துக்களின் காலடியில் / மக்கிக் குவிந்திருக்கிறது / மனித வாழ்வின் சாதி ஆணவம்". இந்தக் கவித்தெறிப்பு மகாராசனின் மானிட நோக்கை உணர்த்தும்.

மருதநில மக்கள் வாழ்வை மட்டுமல்ல, மனித குலத்தின் ஒட்டுமொத்த வாழ்வையும் நிலத்தின் சொற்களில் கவிச்சித்திரங்களாக்கி உள்ளார். மொழியின், இனத்தின் வலியை, வாழ்வை, வதையை, வளத்தை, வலிமையை நிலத்தில் வேரூன்றி விதைச் சொற்களாக்கி விடுகிறார்.

கட்டுரையாளர்:
முனைவர் இரா.காமராசு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
நாட்டுப்புறவியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
*
நன்றி: 
கண்ணாமூச்சி இதழ், சித்திரை-ஆனி 2024.
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112, 
விலை: ரூ100/- 
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு 
பேச : 9080514506


வியாழன், 1 ஆகஸ்ட், 2024

பாபுசசிதரனின் ஆணியை நம்பும் கடவுள் - மகாராசன்

எழுத்து, பேச்சு, பதிப்பு என இலக்கியச் செயல்பாட்டைத் தொய்வின்றி முன்னெடுக்கும் நண்பர் பாபுசசிதரன் அவர்கள் எழுதிய கவிதைகள் ‘ஆணியை நம்பும் கடவுள்’ எனும் தொகுப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது.   

நவீன வாழ்வின் மீதான சுய விமர்சனங்களையும், பொது சமூக மனிதர்களால் கண்டு கொள்ளப்படாத நிலம், பொருள்கள், இடங்கள், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள், வாழ்க்கை அனுபவங்கள் எனப் பலபடித்தான உணர்வுத் தடங்கள் யாவற்றையும் கவிதைகளுக்குள் உலவச் செய்திருக்கிறார் பாபுசசிதரன்.

உணர்வுப் பெருக்கும், உள்ளூறும் சமூக அக்கறையும், கசிந்துருகும் கவிதை மனமும் கலந்து, பல்வேறு கருத்துக் கோலங்கள் நிரம்பிய கவிதைகளாய் வந்திருப்பது இத்தொகுப்பின் பெரும் பலம். 

இந்தச் சமூகம் தந்திருக்கும் பல்வேறு அனுபவ அடுக்குகளைக் கவிதைகளின் வழியாக அடையாளப்படுத்தியிருக்கிறார். அவற்றுள் மிக முக்கியமானது நிலம் பற்றியதும் நிலம் சார்ந்த வாழ்வு பற்றியதுமாகும்.

சூழலியல் சார்ந்த அறிவுணர்வுகள் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருக்கும் இச்சூழலில், அவை குறித்த புரிந்துணர்வைக் கவிதையாக்கத்தின் வழியே புலப்படுத்தியுள்ளார்.

பிய்ந்து கிடக்கிறது 
தூக்கணாங்குருவி கூடு.
கட்டுமான நுட்பங்களை 
செய்முறை நேர்த்தியை 
பேசி வியக்கிறார்கள்.
கூடிழந்த குருவியின் தவிப்பை யோசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

இறப்பின் பட்டியலை விடவும் பிரம்மாண்டமான அளவு கொண்டது இழப்பின் பட்டியல்.
இயன்றால் பட்டியலிடுங்கள் 
நீங்களும் இருப்பீர்கள் அதில் .
மரம் செடி கொடிகளைத்தான் 
மண்ணில் சாய்த்தன 
உமது சுரண்டல் சூறாவளிகள்; மண்ணை அல்ல.
நாங்கள் வேர்களால் வாழ்கிறோம். பலவந்தமாய் பறித்த நிலங்களை மலிவாக விற்பதாக விளம்பரம் செய்கிறீர்கள்.
கவனம் இருக்கட்டும்,
எங்கள் வேர்கள் ஒருநாள் 
உங்களுக்குத் தூக்குக் கயிறாகும்
என, இருப்பிடம் இழந்தவர்களின் வாழ்வைக் குறித்த துயரச் சித்திரத்தை அக்கவிதை பதிவு செய்திருக்கிறது.

குபுக் குபுக் எனும் ஊற்றுக்கண்களையும் 
சலசலவெனக் கசியும் நீர்ப்பாறைகளையும் 
பார்த்த கடைசித் தலைமுறை நாம். நேற்று வெட்டிய கிணற்றின் நீரை எட்டிப்பார்க்க யாருமில்லை.. 
இன்று, கிணறுமில்லை நீருமில்லை.. என, கொலையுண்ட நீர்த் தடங்களைக் கவலையோடு காண்பித்துச் செல்கிறது ஒரு கவிதை.

காடுகளும், வனங்களும், மலைகளும், சமவெளி நிலங்களும், ஆறுகளும், கடலும் மனிதர்களின் வாழ்வுக்கானவை; நுகர்வுக்கானவை என்பதாகவே மனித சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்து கிடக்கின்றன. அவை யாவும் மனிதர்களுக்கானவை மட்டுமல்ல; எண்ணற்ற தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்துக்குமான உயிர் ஆதாரமாய் அமைந்திருப்பவை. சூழலியல் அங்கத்தின் உயிர்நாடியாய் இருக்கும் கானுயிர் வளத்தை அழித்துச் சீரழிப்பது மனித நுகர்வின் உச்ச வெறியாய் மாறிக் கொண்டிருக்கிறது. 

மனித சமூகத்தின் நுகர்வுப் போக்கைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த இன்னொரு கவிதை, காட்டின் மூலவர்களாக இருக்கும் யானைகள் பற்றியது.

தான் காடு இழந்த சோகத்தை சொல்லிடக் கையுயர்த்தி இருக்கலாம்.
அது தெரியாமல் 
ரூபாய்த் தாளை வைத்துவிட்டு அதன் சாபத்தைப் பெற்று வந்தோம் ஆசையாய்... ஆசியாய்.

பெருங்காட்டையே அளந்த 
அதன் கால்களில் 
தாலியைப்போல கம்பி வளையம்.
வயல்களை அழித்து விட்டதாக..
வழித்தடங்களை மறித்ததாக..
குடியிருப்பைப் பெயர்த்தெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள். 
காடுகளை உல்லாச விடுதிகளாக்கியதை 
பாவம் அவைகள் அறிந்திருக்கவில்லை.

யாரோ பிடிக்கிறார்கள் 
யாருக்கோ பழக்குகிறார்கள் 
யார் யாரோ தின்னக்கொடுக்கிறார்கள்.
பெயர்கூட வைக்கிறார்கள்.
எப்பொழுது கிடைக்கும் 
அதன் காடு...

அங்குசத்தின் காவலில் அடைப்பட்டிருக்கும் அதனிடம் சொல்லி விடாதீர்கள்.
பெரும் மரத்தை வேரோடு பிடுங்கி உண்ட இனம் அதுவென்று..

பிள்ளைப் பிடிப்பவர்களைப்போல் பிடித்துவந்து 
பிச்சை எடுக்க வைத்ததைவிட பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை
இந்த மிருகங்கள்... 
மன்னிக்கவும் "மனிதர்கள்".

காட்டிலிருந்து நாட்டிற்கு புலம்பெயர்த்தப்பட்டு கடவுளாக்கினாலும்                              அவை அகதிகள்தான் 
என, யானைகளின் ஏதிலி வாழ்வின் சோகத்தைப் பதிவு செய்திருக்கிறது அந்நீள் கவிதை. இன்னும் இதுபோன்ற நிறையக் கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன.

இச்சமூகம் விசித்திரமானது. இந்த உலகம் விந்தையானது. இவர்களின் மனம் மோசமானது. இம்மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்று இயற்கை கருதலாம். எல்லாவற்றிற்கும் காரணம் ஆறாம் அறிவுதான் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். இப்பூமியை மனிதன் கலங்கடித்தது போன்று வேறு எந்த உயிரினமும் இப்படியொரு அழிவை ஏற்படுத்தியதில்லை. இவர்கள் இதற்குக் காரணமானவர்களை விட்டுவிட்டு, காரியங்களைக் கொண்டாடுகிறார்கள். 

இங்கு பூக்களுக்கு இருக்கும் மரியாதை வேர்களுக்கு இருப்பதில்லை. கனிகளை ஆராதிக்கும் இவர்கள் அதனைப் பாதுகாக்கும் தோல்களை அவரோகனங்களாக்கி விடுகிறார்கள். கிரீடங்களைக் கொண்டாடும் இவர்களுக்குச் செருப்புகளின் புனிதம் புரிவதில்லை. அவைகளுக்குக் கொடுக்கவேண்டிய குறைந்தபட்ச மரியாதையைக் கூட இவர்கள் கொடுப்பதில்லை. 

இங்கு கறுப்பு வண்ணமாகப் பார்க்கப்படுவதில்லை; வர்ணமாகப் பார்க்கப்படுகிறது. இழிவின் குறியீடாக, தாழ்வின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது என்பதாகத் தன்னுரையில் பதிவு செய்கிறார் பாபுசசிதரன். 

இந்தப் பொருண்மையிலும், அதன் அழகியலிலும், அதன் அரசியலாகவும் கவிதை மூலங்களைப் படைத்திருப்பதும், எளிமையான மொழித் துலங்கலும் படைப்புக்கான பன்முகப் பரிமாணங்களைத் தந்திருக்கின்றன.

கவிஞருக்கு வாழ்த்துகள்.

ஏர் மகாராசன் ,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
01.08.2024
*
ஆணியை நம்பும் கடவுள் (கவிதைகள்),
கா. பாபுசசிதரன்,

முதல் பதிப்பு, டிச 2023,
விலை - உரூ 150/-
நிமிர் புத்தகப் பட்டறை வெளியீடு,
சென்னை.
தொடர்புக்கு: 9444009730.