வெள்ளி, 17 மே, 2024

மாணவர்களைக் குறித்த சமூக மனிதனின் பார்வை: டி.ஏ.பி.சங்கர்


இன்றைய காலகட்டத்தில் மாணவர்களைப் பற்றிய ஆய்வுகளையும், சமூகப் பொருளாதார அரசியல் காரணங்களால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் பற்றி விரிவாகப் பேசுகிறது இச்சிறிய நூல். 

சமூக மாற்றங்களுக்கான உரையாடல்களைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பேராசிரியர் ஏர் மகாராசன், இணைய இதழ்களில் எழுதிய இரண்டு முக்கியமான கட்டுரைகளே மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து என்ற இந்நூல்.

கட்டுரை 1:

மாணவர்கள் கல்வியை விடுத்து இடை நிற்பதற்கான காரணங்கள் என்னென்ன என ஆராய்ந்து, அவற்றைப் பற்றி விரிவாகப் பேசத் தொடங்கும் போது, 2022-23 ஆண்டில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத வராத 50000 மாணவர்களையும், அவர்களைத் தடுக்கும் புற மற்றும் அகச்சூழல்களையும் அடுக்குக்கிறார். இப்போதுள்ள பாடத்திட்டப் பொருன்மையில் உள்ள குறைகளைப் பதிவு செய்வது மட்டுமின்றி, அதற்கான காரணமாக:

மீத்திறன் மாணவர்கள் மட்டுமே படிக்கும் வகையில் கடினமாக உள்ளது. 

மெல்லக் கற்கும் மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகக் கற்க முடியாமல் திணறுவது.

அனைத்து வகையான மாணவர்களையும் உட்படுத்தாத கல்வி முறை

ஆகியனவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் புதிய பாடத்திட்டத்தைக் கண்டு தயங்கி, விலகி, தனிமைப் படுவதையும், அவர்களைத் தொடர்ந்து பள்ளிக்கு வரச் செய்து படிக்க வைக்க முடியாமல் தவிக்கும் ஆசிரியர்களையும் கண்டு வருந்துகிறார். 

இவ்வாறு பள்ளியைத் துறந்து, தேர்வுகளைத் தவிர்க்கும் சூழலுக்குத் தள்ளப்பட்ட வகையில், மெல்லக் கற்கும் மாணவர்கள் மீது வலிந்து திணிக்கப்படும் இந்தப் பாடத்திட்டம் ஒரு வகையில், நவீனத் தீண்டாமை என்று குறிப்பிடுகிறார். 

இவ்வாறு, தேர்வுகளைத் தவிர்க்கும் மாணவர்கள், அடுத்த கட்டமாக உயர்கல்வி பெற முடியாத சூழலில், வேலை வாய்ப்பின்றி, சமூகத்தில் உதிரிகளாக மாறிவிடும் அபாயம் ஏற்படுகிறது.

கட்டுரை 2:

அடுத்த முக்கியமான கட்டுரை, சமீபத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திராசெல்வி மீது நடத்தப்பட்ட சாதி வெறியாட்டத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பற்றியது. 

கல்வி கற்க வரும் பள்ளிக்கூடத்தில் சாதிய வேறுபாடுகளை ஏற்படுத்தி, அதன்மூலம் சுயசாதிப் பெருமைகளையும், தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சீண்டல்கள், தாக்குதல்கள் முதலியவற்றைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார். 

இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடத்திய அந்த மூன்று மாணவர்கள் (16/17 வயதுடையவர்கள்) காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வேளையில், அவர்களுடைய பெற்றோர் யாரும் அங்கு இல்லை. அதுமட்டுமின்றி, இப்படி ஒரு சம்பவம் நடந்ததைக் குறித்த எந்த ஒரு குற்ற உணர்வுமின்றித் தமக்குள் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்திருக்கின்றனர். இவர்கள் இப்படி ஒரு மனநிலைக்குச் செல்வதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது, இவ்வாறான சாதி அடையாளம் கொண்ட நடவடிக்கைகளுக்குக் காரணம் அதே பகுதிகளில் ஏற்கனவே படித்து முடித்த சாதி இந்து இளைஞர்கள்தான் என்று எடுத்துரைக்கிறார். இவர்கள்தான் இப்போது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சாதிய ரீதியாகத் தூண்டிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்கின்றனர்.

இவ்வாறு, அந்த நிகழ்வின் காரணங்கள், அதன் விளைவுகள், அரசுத் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என, கள நிலவரங்களைத் தெரிவிக்கும் அதேநேரம், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கையாள்வது எப்படி? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உரிமைகள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சுயமரியாதை மற்றும் சுதந்திரத்தையும் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

மேலும், அறம் சார்ந்த கல்வியைப் பயிற்றுவிக்கும் பாடங்கள் வெறும் மொழிப்பாடங்களாக, அவையும் குறைந்த அளவிலான மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே உள்ளன என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், மாணவர்கள் மத்தியில் அறம் என்ற ஒன்றை விதைக்கத் தவறி விட்டது என்கிறார் ஆசிரியர்.

லும்பர்கள் எனப்படும் இந்தச் சமூக உதிரிகளாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிப்பருவ வயதுடையவர்கள் மாற்றப்படுவதற்கு முக்கியமான காரணங்கள் என:

1. சாதிவெறி

2. போதை வெறி

3. அரசியல் கட்சிகள் பின்புலம்

4. அரசு அதிகார மட்டத்தின் செயல்பாடு

5. அந்நியப்படுத்தப்பட்ட கல்விமுறை

6. பெற்றோரின் வளர்ப்பு மற்றும் குடும்பச் சூழல்

7. சமூக ஊடகப் பயன்பாடு 

போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். 

இவர்கள் இவ்வாறு உதிரிகளாக்கப்படுவது உயர்சாதி என்று தன்னை நினைத்துக் கொள்பவர்கள் மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களையும்தான் என்னும் நூலாசிரியர், அதற்கான காரணிகளாக, சுயசாதிப் பெருமை பேசவும் பரப்பவும் நடத்தப்படும் சாதிவாரியான மாநாடுகள், திருவிழாக்கள், குருபூஜைகள் மற்றும் சாதியப் பதாகைகள் தாங்கிய திருமண நிகழ்வுகள் என்கிறார்.  

சமூகத்தில் உதிரிகளாக மாற்றப்படுபவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்களே எனக் குறிப்பிடும் மகாராசன், இவர்களை உதிரிகளாக ஆக்குவதில் சில ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு என்கிறார். சாதி அடையாளம் என்பதுவும், சாதி ரீதியான மனப்பான்மை என்பதும் சில ஆசிரியர்களிடமும் கல்வியாளர்களிடமும் இருப்பது வேதனைக்குரியது. அதனால், பாடத்திட்டத்தை உருவாக்குவதில் இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பும், சமத்துவ மனப்பான்மையும் இன்றைய தேவை என்று வலியுறுத்துகிறார். 

பிறகு, இட ஒதுக்கீடு குறித்த முழுமையான புரிதல் என்பது இங்கு பெரும்பாலோருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை என்றும், அதனுடைய நீட்சியே பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் விளக்குகிறார். 

இறுதியாக, சாதிய மனநிலையில் பேசிய ஆசிரியரிடம், "எல்லாருமே சமம்தானே டீச்சர்?" எனக் கேட்கும் மாணவன் முனீசுவரனின் சமத்துவக் குரலுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறார்.

மாணவர்களின் வளர்ச்சிக்குச் சமூகம் எவ்வளவு முக்கியமான அங்கம் வகிக்கிறது என்பதை புரிந்து கொள்வதாலும், ஆசிரியர் - மாணவர் உறவு மேம்படுவதாலும், ஆசிரியர், மாணவர், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து செயல்படுவதே இதற்குத் தீர்வு.. தான் ஒரு ஆசிரியர் என்பதையும் தாண்டி, ஒரு சமூக மனிதனின் வாயிலாக இந்தப் பார்வையை முன்வைத்திருக்கிறார் மகாராசன்.

நூல்: மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து.
ஆசிரியர்: மகாராசன்.
பக்கங்கள்: 72.
வெளியீடு: ஆதி பதிப்பகம்.
99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
90805 14506.
*
கட்டுரையாளர்:
டி.ஏ.பி.சங்கர்,
மண்டல மேலாளர், 
சுசூகி வாகனங்கள்,
சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக