வெள்ளி, 5 ஜூலை, 2024

சொற்களால் நிலத்தின் வாசனையை நீளச் செய்யும் தொகுப்பு.



கவிதை வடிவம் நுட்பமும் அழகியலும் நிறைந்த இலக்கிய வடிவம். படைப்பாளனின் கருத்தியலை, சார்புத் தன்மையை வெளிப்படுத்தக் கவிதை வடிவத்தை விட வேறு இலக்கிய வடிவம் எதுவும் இருக்கவியலாது என்பதைச் சமகால இலக்கியப் படைப்பாக்கங்களை நோக்கி முடிவு கூறலாம். 

இத்தகைய கவிதை வடிவம் படைப்பாளனின் அகவுணர்வுகளையும், சமூகம் சார்ந்தெழும் புறவுணர்வுகளையும் வெகுநேர்த்தியாக வாசகருக்குக் கடத்துவதில் வெற்றிபெறுகிறது. 

இப்பின்னணியில் இந்தத் தொகுப்புள் இடம் பெற்றுள்ள கவிதைகள் தேர்ந்த சொற்களில் அடர்த்தியான உள்ளடக்கங்களைக் கொண்டு யாக்கப் பெற்றுள்ளன. மொத்தம் 55 கவிதைகள் இத்தொகுப்புள் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு கவிதையும் சொற்கள், எடுத்துரைப்பு, உள்ளடக்கம் எனும் அடிப்படைகளில் வெகு நுட்பமாகக் கருத்துப் புலப்படுத்தம் செய்கின்றது. ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போதும் சொற்களின் ஊடாகக் கொள்ளும் பிணைப்பு அறுபடாத கன்னியாய்த் தொடர்கிறது. 

தொகுப்பின் தலைப்பைப் போலவே, ஒவ்வொரு கவிதையும் நிலத்தின் வாசனையை நாசிக்குள் செலுத்தி நாபிக் கமலத்தில் நங்கூரமிடச் செய்கிறது. ஓரிடத்தில், மண்மீட்டிய வேர்களின் இசை / காடெல்லாம் மணத்துப் பரவியது என்கிறார் கவிஞர். இந்த வரிகளில் மனம் தோய்ந்து போகிறது. இப்படி நூல் முழுதும் நுட்பமான கருத்தியல், அழகியல் நிரம்பி, சொற்களால் நிலத்தின் வாசனையை நீளச்செய்கிறது இந்தத் தொகுப்பு.

நிலத்தில் முளைத்த சொற்கள், மகாராசன் / மே 2024 / கவிதை / /பக்112 / விலை ரூ100- /யாப்பு வெளியீடு எண்.5, ஏரிக்கரைச் சாலை, 2ஆவது தெரு, சீனிவாசபுரம், கொரட்டூர், சென்னை. தொடர்புக்கு: 9080514506.

நன்றி: பேசும் புதிய சக்தி மாத இதழ், சூலை 2024.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக