சனி, 20 ஆகஸ்ட், 2016

முரண் தொடைச் செய்யுள் - கவிதை

முரண் தொடைச் செய்யுள்.

சில்லரைக் குவியத்தின்
உச்சியில் நின்று
எகத்தாளம் விதைக்கிறாய்
உரக்கக் கூவியபடி.

ஆற்றின் ஓட்டத்தில்
வளையும் நாணல்
வேர்களை அள்ளித்
தானம் கொடுத்து
வாழ்வதில்லை.

வளையும் குணம்
அதன் இரத்தல் என்று
ஓங்கிய பனையின்
ஓலைக் கிளையிலிருந்தபடி ஒய்யாரம் பாடுகிறாய்.

வெயிலுக்குள் வராத
உன் வெளுப்பு மேனியில் வியர்வை வழியும் துளைகளில் கொப்பளங்கள் பூத்திட்டால்
ஏது செய்வாய்?

ஓடி ஓடி
கோடிகள் சேர்த்தாலும்
காலம் எழுதிச் செல்லும் கவிதைகளில்
நான் மட்டுமல்ல
நீயும் கூட
எச்சம்தான்.

இந்நேரம்
புலம்பித் தவிப்பாய்
எனை நினைத்து.

நான் நிம்மதியாய்
உறங்குவது தெரியாமலே.

நாடு போற்றுதும்? - கவிதை

"நாடு போற்றுதும்?"

அடுப்புத் தீயை
அணைத்தன
எந்திர பூதங்கள்.

பசித் தீ மூட்டி
கிடப்பில் தறிகள்.

சோறு கொடுத்த
நிலங்களில் முளைக்கும்
கோபுரங்கள்.

விளை நிலத்து மரங்களில்
தூக்கில் தொங்கும்
சம்சாரிகள்.

காசாய்ப் போயின கல்வி
கனவாய்ப் போனது வாழ்க்கை.

அடகுக் கடைகளில்
வட்டியாய்க் கிடப்பன
பண்டங்கள் மட்டுமல்ல
மானமும் தான்.

கோவணம் அவிழ்த்து
சுதேசிக் கொடி ஏற்றி
கஞ்சித்தொட்டி திற.

எங்கள் நாடு
இனிய நாடு.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பட்ட மரம் - கவிதை

இரு மன
அழுகை ஓலங்களின் அதிர்வுகளில்
நால் விழிகள்
குளம்.
வேகம் சுருக்கி
மெல்லத் தவழும் காற்றைப்
பகையெனப் பதைபதைத்து
சுட்டியில் தவிக்கும்
சுடராய் நான்.
நீ
பிடித்துத் தந்த
நம்பிக்கை ஒளிக்கீற்றைத்
தோள் சேர்த்து,
என்னில் விரிந்த
கிளைகளை முறித்துத்
தனியே பயணம்.
தீர்ந்து போனது
வாழ்க்கை.