செவ்வாய், 21 நவம்பர், 2017

நா.வானமாமலையும் உழவுக் குடிகளைக் குறித்த எழுத்தும்.




தமிழ்ச் சமூக வரலாற்று நிகழ்வுகளையும், தமிழ்க் கலை, இலக்கியம், பண்பாடு, தத்துவமெனும் மெய்யியல் மரபுகளையும் பெருமிதமாகவும் மிகையாகவுமே எடுத்துரைத்த பெரும்போக்கு நிலவிய காலகட்டத்தில், வரலாற்றுப் பொருள்முதல்வாத மற்றும் இயங்கியல் பொருள்முதல்வாதங்களை அடிப்படையாகக் கொண்ட மார்க்சியச் சிந்தனைக் கண்ணோட்டத்திலான எடுத்துரைப்புகளைத் தமிழியல் ஆய்வுகளின் வாயிலாகப் புலப்படுத்தி, மார்க்சியத் தமிழியல் சிந்தனை மரபை வளப்படுத்திய அறிஞர் நா.வானமாமலை ஆவார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தொ.மு.சி.இரகுநாதன், தி.க.சிவசங்கரன், சிந்துபூந்துறை சண்முகம் ஆகியோருடன் சேர்ந்து 1947இல் நெல்லை இலக்கியச் சங்கத்தை உருவாக்கி இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை  முன்னின்று நடத்தியவர்.

எவ்விதமான முன் தகுதிகளோ, கல்வித்துறை ஏற்புகளோ, அடையாள வரையறைகளோ இல்லை; அறிவியல் நோக்கு, சமூக அக்கறை, ஆய்வு ஈடுபாடு, படிப்பில் ஈடுபாடு, விடாமுயற்சி போன்றவை உடைய யாவரும் உறுப்பினராக ஆகலாம் என்கிற அறிவிப்போடு 1967இல் நெல்லை ஆய்வுக் குழுவை ஏற்படுத்தியவர்.

தமிழ் இலக்கிய மரபில் மார்க்சிய நோக்கிலான சிந்தனைப் போக்கை வளர்த்தெடுக்கும் முயற்சியில் பல இதழ்கள் வெளிவந்தன. அவற்றுள், தொ.மு.சி.இரகுநாதனின் சாந்தி, விசயபாசுகரனின் சரசுவதி ஆகியவை முதன்மையானவை. இவ்வரிசையில், மார்க்சியச் சிந்தனைப்புல நோக்கில் தமிழியல் ஆய்வு முறைமைக்கான நிறுவனமயப்படுத்தும் முயற்சியாக நா.வானமாமலை அவர்களால் 1969இல் ஆராய்ச்சி எனும் இதழ் தொடங்கப்பட்டது. இவரது பொறுப்பில் தொடர்ந்து வெளிவந்த ஆராய்ச்சி இதழானது தமிழ் அறிவுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலும் அதன் முன்னணி அமைப்புகளிலும் பல பொறுப்புகளை வகித்தவர். குறிப்பாக, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தவர். தமிழ் அறிவுச் சூழலில் நிறுவனமயப்படுத்தப்பட்ட  கல்விப்புலங்களுக்கு வெளியிலிருந்து ஆய்வு முறையியலை வளப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அதாவது, நிறுவனமயப்பட்ட கல்விப் புலங்களின் ஆசிரியர்களாலும் பேராசிரியர்களாலும் ஆய்வாளர்களாலும் முன் வைக்கப்படுகிற ஆய்வுகள்தான் ஆய்வுகள் என்றும், அத்தகையக் கல்விப்புலச் சூழலே அறிவுச்சூழல் என்றும் பெருவாரியாய் நம்பிக்கொண்டிருந்த தமிழ்ச்சூழலில், நிறுவனமயப்பட்ட கல்விப்புலங்களுக்கு வெளியிலிருந்து தமது ஆய்வுகள் வாயிலாகத் தமிழ் அறிவுச்சூழலை உருவாக்கியும் நடைமுறைப்படுத்தியும் காட்டியவர் நா.வானமாமலைதான். பல்கலைக் கழகத்திலோ கல்லூரியிலோ பேராசிரியராக இவர் பணிபுரியவில்லை என்றாலும்கூட, பேராசிரியர் எனும் அடைமொழி நா.வானமாமலை எனும் பெயருடன் மதிப்பாய்ந்த பொருண்மையோடுதான் இணைந்து நிற்கிறது.

தமிழ்ச் சமூக ஆய்வுகளில் மேற்கத்திய முன்மாதிரிகளையோ கருத்தாக்கங்களையோ அப்படியே வறட்டுத்தனமாகப் பயன்படுத்த இயலாது; கூடாது என்பதைத் தமது ஆய்வுகளின் வழியே புலப்படுத்தியவர். மேலும், எழுத்து மரபின் வழியாக உருவாக்கப்பட்டிருந்த தமிழ் அடையாளங்களைச் சமூக அடித்தளங்கள் நோக்கி நகர்த்தியதில் நா.வாவிற்குப் பெரும் பங்குண்டு.


நா.வாவின் ஆய்வுத் தடத்தில் முதன்மைத்துவம் பெறுபவை நாட்டுப்புற மக்கள் வழக்காறுகள் குறித்தானவை. களத்தரவுகள், பாடல்கள், கதைப்பாடல்கள், வாய்மொழி வழக்காறுகள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், பதிப்பு, ஆய்வு எனத் தமிழ் நாட்டுப்புற வழக்காற்றியலை வளப்படுத்தியதில் குறிப்பிடத்தக்கவர்.

நாட்டுப்புறப் பண்பாட்டு அலகுகளில் காணப்படுகிற நிலம், உடல், உணர்ச்சிகள், உழைப்பு, சுரண்டல், ஒடுக்குமுறை, எதிர்ப்புணர்வு போன்றவற்றை அடையாளப்படுத்தியதில் இவரின் எழுத்துக்கள் தனித்துவம் நிறைந்தவை. குறிப்பாக, உழைக்கும் மக்களின் பண்பாட்டுக் கோலங்களை முன்வைப்பதாகவே இவரது எழுத்துகள் அமைந்திருந்தன.

தமிழ்ச் சமூகத்தின் மொழி, இலக்கியம், கலை, வரலாறு, சமயம், பண்பாடு, மெய்யியல், அறிவியல், மொழிபெயர்ப்பு, ஆய்வு, பதிப்பு, ஆவணப்படுத்தல் போன்ற பல தளங்களிலும் திறம்படச் செயலாற்றி இருக்கிறார் நா.வா. இவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல; இப்போதும்கூட முன்மாதிரியாகவே தெரிகிறார்.

தமிழ்ச் சமூக வரைவியலில் நா.வாவின் பங்களிப்பும் உழைப்பும் பெரும்பங்கு வகித்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் உழவுக்குடிகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் தனித்துவம் வாய்ந்தவை.

பொதுவாக, உழவுத் தொழிலோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சமூகப் பிரிவினரைக் குறித்த பதிவுகள் தமிழில் ஏராளம் உண்டு. பல்வேறு தொழில் மரபினரின் பங்கேற்புகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவி இருந்தாலும், உழவுத் தொழில் மரபினரின் பங்கேற்புகள்தான் தமிழ்ச் சமூகத்தின் உணவு உற்பத்தியைத் திறம்பட இயங்கச் செய்திருக்கிறது. அதனால்தான்,
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை 
என்கிறார் வள்ளுவர். அதேபோல, உணவளிப்பவரே உயிர் கொடுப்பவர் எனும் பொருளில்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்கிறது புறநானூறு. 

உயிர் வாழ்வுக்கான உணவை அளிப்பதுதான் அறம் எனக் குறிக்கும் வகையில்,
அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
எனச் சுட்டுகிறது மணிமேகலை.

மனித வாழ்வின் அடிப்படைக்குப் பல பொருட்கள் தேவைப்பட்டாலும்கூட, உணவுப் பொருள் ஒன்றே முதன்மையானதும் தலையாயதுமாகும். சமூகத்தில் பல்வேறு தொழில் மரபினர் இருந்தாலும், எல்லாத் தொழில் மரபினருக்குமான உணவுத் தேவையையும் நிறைவு செய்கிறவர்கள் உழவர்கள்தான். இதனை,
உழுவார் உலகத்தார்க்கு ஆணி; அஃதுஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
என்கிறார் வள்ளுவர். அதாவது, பலவகைப்பட்ட தொழில் புரிகின்றவர்களுக்கும் உயிர் தாங்கிடப் பசி போக்கும் தொழிலாக இருப்பது உழவுத் தொழிலே. அதனால்தான், உழவர்கள் உலக மக்களின் அச்சாணி எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். உழவுத் தொழில் என்பதே, அத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் உணவுத் தேவையை நிறைவு செய்கிறது; அத்தொழில் சாராத மற்றவர்களின் உணவுத் தேவைக்கும் உதவுகிறது.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு
எனும் குறள் ஒப்புரவு என்னும் உதவி செய்தலைக் குறித்துப் பேசுகிறது. ஒரு பொருள் தமக்கும் பயன்பட வேண்டும்; மற்றவர்க்கும் பயன்பட வேண்டும். அதாவது,  வேளாண்மைத் தொழில் போலப் பயன்பட வேண்டும் என்கிறது அக்குறள். 

வேளாண்மை உழவர்களின் மற்றொரு குணவியல்பு, மற்றவர்களின் பசி வலி அறிதல்தான். அதனால்தான்,
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
என்கிறார் நல்லாதனார்.

உணவை உற்பத்தி செய்யும் உழவரே, இல்லாதோருக்கும் இருப்பவர்க்கும், ஒத்தாருக்கும் உயர்த்திக்கொண்டோருக்கும், ஊர் உலகை ஆள்வோருக்கும்கூட  உணவைக் கொடுக்கும் தன்மை நிறைந்தவர். அதனால்தான் இரப்போர் சுற்றத்தார்; புரப்போர் கொற்றத்தார் என்றெல்லாம் குறிக்கப்படுகிறார். 

இத்தகைய உழவுத் தொழில் மரபினரை உழவர், களமர், கம்பளர், காராளர், கடைசியர், கடைஞர், வினைஞர், கிளைஞர், தொழுவர், கருங்களமர், மேழியர், மள்ளர், வேளாளர் எனப் பல பெயர்களில் குறிக்கிறது தமிழ் இலக்கிய மரபு.

அஞ்சுவண்ணன், அணியர், அளவன், அதிகாரி, ஆற்றுக்காலாடி,  இந்திர சாதி, உழவர், ஊரன், ஒண்டிப்புலி, ஒளியர், கடம்பர், கணக்கன், கடையர், கடைசியர், களமர், கருங்களமர், காலாடி, குடும்பர், கூத்தாடி, கூத்தர், தொண்டைமான், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், நாட்டார், நீராணியம் (மடையர்), நீர்கட்டி, படையாட்சி, பண்ணாடி, பணிக்கன், பலகான், பழையர், பள்ளர், பள்ளி, பளியர், பாண்டியர், பாவாணர், பூசி, மகிழ்நன், மண்ணாடி, மல்லர், மழவர், மள்ளர், மன்றாடி, முதலி, மூப்பன், செட்டி மூப்பன், நாட்டு மூப்பன், புள்ளி மூப்பன், வலவன், வாதிரியார், வாய்க்காரர், வாரியன், வெண்களமர், வெள்ளாளர், வேந்தர், வேள் போன்ற குலப் பிரிவுகளால் அடையாளப்பட்ட அல்லது அடையாளப்படுகிற சமூகப் பிரிவினர் உழவுத் தொழில் மரபைச் சார்ந்தவர்கள் எனப் பதிகிறது வழக்காற்று மரபு.

வாய்மொழி மரபிலும், எழுத்து மரபிலும், வரலாற்றுத் தரவுகளிலும் உழவுத் தொழில் மரபினரைக் குறித்த விவரிப்புகள் நிரம்பக் கிடைக்கின்றன. எனினும், இவ் உழவுக்குடியினர் பள்ளர் எனும் பொதுவழக்குச் சொல்லாடலாலும், மள்ளர் எனும் இலக்கிய வழக்குச் சொல்லாடலாலும், தேவேந்திர குல வேளாளர் எனும் அரசியல் சொல்லாடலாலும் பெருவழக்காய்க் குறிக்கப்படுகின்றனர்.

தமிழ்ச் சிற்றிலக்கிய மரபில் பள்ளு எனும் இலக்கிய வகையாக அடையாளப்படுத்தப்பட்ட பெருவாரியான பள்ளு இலக்கியங்கள் பள்ளர் எனும் உழவுக் குடிகளைக் கதை மாந்தர்களாகக் காட்சிப்படுத்துகின்றன. ஏர் மங்கலம், உழத்திப் பாட்டு போன்ற இலக்கிய மரபின் நீட்சியாகப் பள்ளு இலக்கியங்கள் தோற்றம் பெற்றதாகக் கருதப்பட்டாலும், உழவுக் குடிகளின் வரலாற்றுப் படிமங்களையும், வாழ்வியல் இருப்புகளையும், நிலத்தோடு கொண்டிருந்த உறவுகளையும், பண்பாட்டுக் கோலங்களையும் தரவிறக்கம் செய்யும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டன என்கிற கருத்தும் உண்டு.

உழவுத் தொழிலின் அடிப்படை ஆதாரம் நிலம் தான். நிலத்தில் தமக்கான உரிமை இருந்த காரணத்தாலேயே, காலங்காலமாக நிலத்தில் உழைப்பைச் செலுத்தி வந்துள்ளனர் உழவுக்குடிகள். நிலத்தின் மீதான உரிமைதான் நிலத்தின் மீதும், உழைப்பின் மீதும், உழவின் மீதும் ஓர் உயிர்ப்பான உறவை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், உழவுத் தொழில் மரபு பெருமித அடையாளமாக உழவுக்குடிகளால் கருதப்பட்டிருக்கிறது. 

நிலத்தோடு உழவுக் குடிகள் உறவாடிக் கிடந்தாலும், நிலத்தின் மீதான உரிமைகளை அதிகார அமைப்புகளும் ஆள்வோர்களும் அதிகாரச் சேவகர்களும் கோயில்களின் பேராலும், வரிகளின் பேராலும், கொடைகளின் பேராலும், மடங்களின் பேராலும், மெல்ல மெல்லத் தம்வயப்படுத்திக் கொண்டதை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

நிலத்தின் மீதான குறைந்தளவு உரிமைகளையும் பறிக்க முயன்றதின் பண்பாட்டு ஏமாற்றுதல்கள்தான் – பண்பாட்டு ஒடுக்குமுறையின் வடிவங்கள்தான் பள்ளு இலக்கிய உருவாக்கங்கள். நிலத்தோடு உரிமையும் உணர்வுநிலைப்பட்ட உறவும் கொண்டிருந்த உழவுக் குடிகளைப் பண்ணை அடிமைகள் போலக் கதையாடல்களைப் புனைவாக்கம் செய்துள்ளன பள்ளு இலக்கியங்கள். 

பிற்காலங்களில், இத்தகையப் பள்ளு இலக்கியங்கள் வாயிலாகவே – அவை உருவாக்கிய படிமங்கள் வாயிலாகவே உழவுக்குடிகள் கீழ்மைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், தற்சார்புடனும் தன்மானத்துடனும் வேளாண் தொழிலை மேற்கொண்டு வந்த உழவுக் குடிகள், நிலத்தின் மீதான உரிமையை இழக்க நேர்ந்தாலும், வேளாண் உழவுத் தொழில் மரபையும் உறவையும் இழந்திடவில்லை. வேளாண் உழவுத் தொழில் சார்ந்த அறிவும் திறமும் உழைப்பும் பண்பாடும் வாழ்வும் என யாவுமே உழவுக் குடிகளின் கையிருப்பாக இருந்து வந்திருப்பதைப் பள்ளு இலக்கியங்களுமேகூடப் புலப்படுத்தி வைத்திருக்கின்றன. 

ஒவ்வொரு காலத்திய இலக்கியப் படைப்புகளும் அவ்வக்காலத்தியச் சமூக ஆவணங்கள்தான். அவ்வகையில், பள்ளு இலக்கியங்களை உழவுக்குடிகளின் எதிர் இலக்கியங்களாகப் பாவிக்க வேண்டியதில்லை. ஏனெனில், பள்ளு இலக்கியங்கள்தான் உழவுக்குடிகளின் நில உரிமையைத் தவிர்த்து, நிலத்தோடு தொடர்புடைய ஏனைய மரபுகளைக் குறித்து விரிவான தரவுகளை முன் வைத்துள்ளன. ஆகவேதான், உழவுக்குடிகளைக் குறித்த சான்றாவணங்களாகப் பள்ளு இலக்கியங்கள் கருதப்படுகின்றன.

பள்ளு இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வுகள் பெரும்பாலும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் வழிமொழிந்தும் அமைந்திருப்பவை. அவ்விலக்கியங்கள் குறித்து ஆழமான விரிவான மீளாய்வுகள் இன்னும் வெளிவரவில்லை. வஞ்சிக்கப்பட்ட உழவுக்குடிகளின் தொழில் மரபு, பண்பாடு, வரலாறு பற்றிய உரையாடல்களும், பள்ளு இலக்கியம் பற்றியதான உரையாடல்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. இவை பற்றின மீளாய்வுகள் தொடர்வதற்கான திறப்புகளைத்தான் நா.வானமாமலை தமது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளின் வழியாகப் புலப்படுத்தி உள்ளார். 

உழவுக் குடிகளைக் குறித்த உரையாடல்களுக்கும் மீளாய்வுகளுக்கும் இவரது கட்டுரைகள் துணை செய்யக்கூடியவை. எனினும், 1956-57 காலகட்டத்தில் சரசுவதி இதழில் பள்ளுப் பாட்டு குறித்தும் உழவுக்குடிகளைக் குறித்தும் நா.வானமாமலை எழுதிய  கட்டுரைகள் இதுவரையிலும் தனி நூலாக்கம் பெறாமலே  கிடப்பிலே கிடந்திருக்கின்றன. 

நா.வானமாமலை அவர்களின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் இந்தச் சூழலிலாவது பள்ளுப் பாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் தனி நூலாக வெளிவருவது, அவரது நூற்றாண்டு விழாவை மட்டுமல்ல, உழவுக் குடிகளையுமே சிறப்பிக்கும்.



ஞாயிறு, 19 நவம்பர், 2017

குறியீடு : ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் காட்சி மொழியில் திருப்பிச் செய்திருக்கும் குறும்படம் '



சமூக அக்கறையோடு அத்தி பூத்தாற்போல எப்போதாவது சில வணிகப் படங்கள் வருவதுண்டு. ஒரு முழு நீள வணிகப் படம் ஏற்படுத்தும் உணர்வுப் பறிமாற்றங்களைக் குறும் படங்களாலும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு யூ டியூப்பில் வெளிவந்திருக்கும்  "குறியீடு" கட்டியம் கூறுவதாய் அமைந்திருக்கிறது.

 உரையாடல்கள் எதுவுமின்றி காட்சிகள் வழியாக விரிகின்ற திரை மொழியில் சமூகத்தின் ஆதிக்கக் கூறுகளையும் வன்மங்களையும் புலப்படுத்தி இருப்பது கவனிக்க வேண்டியதாகிறது.

கற்களும் கள்ளிகளும் மண்டிக் கிடக்கும் மலைக் காடுகளில் காட்சிகள் நகர்கின்றன. காதல் வயப்பட்ட இரு வேறு சமூக மனிதர்களைச் சாதியம் எப்படிக் கொல்லத் துணிகிறது ? அதன் கோர முகம் எது ? என்பதையெல்லாம் காட்சிகளில் விரித்துக் கிடத்தியிருக்கிறார் இயக்குநர்.

சாதிய ஆணவப் படுகொலைகள் நிகழும் நிலப்பரப்பில் , சாதிய ஆணவத்தைப் படுகொலை செய்வதாய்ப் படம் முடிவது, வழக்கமான அழுகையும் ஒப்பாரியுமாய் இப்படம் அல்ல என்பதைச் சொல்லி விடுகிறது.
திருப்பிச் செய்தலின் திரை மொழியாய்க் குறியீட்டுப் பொருளை உணர்த்தி நிற்கிறது குறியீடு எனும் இப்படம் . சாகச் செய்வாரைச்
சாகச் செய்தல் வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதால் குறியீடு என்றாயிற்று எனவும் கூறலாம்

படத்தில் நடித்த நடிகர்கள் தங்களது உடல் மொழியால் உணர்வுகளையும் உரையாடல்களையும் கச்சிதமாகப் புலப்படுத்தி இருக்கிறார்கள். வறண்ட நிலப்பரப்பையும் வரட்டுக் குணம் கொண்ட மனிதர்களையும் காதல் அரும்பிய இளசுகளையும், சாகடிக்கப்பட்ட காதலனின் காதலியாகப் பயித்தியமாகித் திரியும் அவலத்தையும், கருப்பனாய் ஆணவம் அழிக்கும் தாண்டவத்தையும் தவிப்போடும் உயிர்ப்போடும் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாராட்டப்பட வேண்டியவர்.

படத்தின் மிகப் பெரிய பலமே பின்னணி இசைதான். படம் நெடுகப் பயணிக்கும் இசைதான் காட்சி மொழிகளை இன்னும் வலுவுடனும் உயிருடனும் நம்மோடு நெருக்கப் படுத்தி விடுகிறது.

சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் காட்சி மொழியில் குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் வினோத் மிசுரா மற்றும் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

சனி, 18 நவம்பர், 2017

புதியக் கல்விக் கொள்கையில் மறைந்திருக்கும் பார்ப்பனிய ஆணாதிக்க வணிகமயக் குரல்.



கற்றுக் கொள்வதையும் கற்றுக் கொடுப்பதையும் ஒருங்கே கொண்டிருக்கும் உயிர்ப்பான செய்கை தான் கல்வி .

ஒவ்வொரு மனித சமூகமும் தமக்கு உகந்த கல்விச் சூழலைக் காலத்திற்கேற்ற படியும் சமூகத்திற்குப் பயனளிக்கும்படியும் கல்விச் செயன்மைகள் குறித்த வரைவுகளை உருவாக்கியே வந்துள்ளன.

இந்தியச் சமூக அமைப்பில் கடந்த காலத்தில் நிலவிய கல்வி முறைகள் சாதிய, பாலின, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டு வந்துள்ளன. ஆங்கிலேய   வன்குடியேற்ற அதிகாரம் நிலவிய காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வி முறையானது எல்லோருக்குமான கல்வி வாய்ப்புகளைத் தரும்படியாக இருந்திருப்பினும், ஆங்கிலேய அதிகாரத்திற்குச் சேவகம் செய்யும் மங்குனிகளை உருவாக்குவதிலேதான் குறியாய் இருந்தன. குறிப்பாக, மனப்பாடக் கல்வி முறையே நவீனக் கல்வி முறையாக மெக்காலேவால் வடிவமைக்கப்பட்டது.

பெயரளவிலான இந்திய விடுதலைக்குப் பின்பும் மெக்காலே கல்வி முறையே வெகு காலமாக நீடித்து வருகின்றது. அதோடு, தாய் மொழிக் கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆங்கில வழிக் கல்வியே சிறந்தது எனும் கருத்து நிலை மேலோங்கச் செய்யப்பட்டுள்ளது.

கல்வி என்பது அறிவையும் ஆற்றலையும் பண்பையும் அறத்தையும் ஆளுமையையும் உருவாக்கித் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். கல்வி பெறும் ஒரு மனிதர், அக்கல்வியால் இச் சமூகத்திற்கான பங்களிப்பைச் செய்பவராக மாற்றி அமைக்க வேண்டும்.

சமூகப் பயன்மிக்கதாகத்தான் கல்விச் செயல்பாடு அமைய வேண்டும். ஆனால், இதுவரைக்குமான கல்விச் செயல்பாடுகளும் அதன் கொள்கைகளும் சமத்துவத்தையோ அறிவுத் திறப்புகளையோ படைப்பாக்கத்தினையோ வளர்ப்பதற்குப் பதிலாக, ஆளும் அதிகார வர்க்கத்தினருக்கான மிகச்சிறந்த சேவகர்களையே உருவாக்கி வந்திருக்கின்றன. சொல்லப்போனால், தன்னறிவையும் தன்மானத்தையும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதற்குப் பதிலாக, தன்னலமும் குறுகிய எண்ணமும் கொண்ட அடிமைகளையே உருவாக்கியிருக்கின்றன.

கடந்த காலத்திய அனைத்துக் கல்வி முறைகளும் அவற்றின் கொள்கைகளும் பார்ப்பனிய ஆணாதிக்கத்தை உள்ளும் புறமுமாகப் பூடகமாய்க் கொண்டிருந்தன.

இப்போதைய அதிகார மய்யத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையானது, பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் ஆணாதிக்கத் திமிரையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருப்பதோடு, கல்வியைக் காசாக்கிப் பார்க்கும் வணிகத்திற்கான சந்தைப் பொருளாகவும் ஆக்கியிருக்கிறது. இன்னும் கூடுதலாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கான திறமையான அடிமைகளை உருவாக்குவதில் முனைப்பாய் இருக்கின்றது.

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கான சமசுக்கிருதத்தின் முக்கியத்துவம், இந்தியக் கலாச்சார ஒற்றுமைக்கு அதன் தனித்துவமான பங்களிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை சமசுக்கிருதம் பயில்வதற்கான வசதிகள் தாராளமாகச் செய்து தரப்படும் எனப் புதிய கல்விக் கொள்கையின் உள்ளீட்டில் கூறப்பட்டுள்ளது.  

மக்கள் வழக்கில் இல்லாத ஒரு மொழிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம், அது தேவ பாசை என்ற பார்ப்பனியக் கருத்தாக்கம் தான். இந்தியாவில் 1721 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 122 மொழிகள் வளர்ச்சி அடைந்தவை. மீதமுள்ள 1599 மொழிகளின் வளர்ச்சி குறித்து எந்த அறிவிப்பும் புதிய கல்விக் கொள்கையில் இல்லை.

தமிழ் உள்ளிட்ட 18 தேசிய மொழிகளின் ஆட்சி மொழி மற்றும் பயிற்று மொழி குறித்தும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் அக்கறை செலுத்தவில்லை. மாறாக, செத்துப் போன ஒரு மொழியை உயிர்ப்பித்து அதனையே இந்திய தேசத்தின் தேவ பாசையாக உருவாக்குவதில் முனைப்பும் வேகமும் காட்டுகிறது. சமக்கிருதம் உயிர்த்தெழ வைக்கச் செய்வதன் நோக்கமே பழைய குருகுலக்கல்வி - பார்ப்பனியக் கல்வி - வேதக்கல்வி முறையை நவீனப்படுத்துவதற்குத்தான்.

சமக்கிருத வளர்ச்சிக்கு எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், தமிழ் போல அதுவும் ஒரு மொழி தான். பிரச்சினை எதுவென்றால், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கே சமக்கிருதம் தான் காரணம், அதனால் சமக்கிருத மொழியின் வளர்ச்சி அவசியம் என்பதாகச் சொல்வது தான் பிரச்சினை. அதாவது, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் யாவும் திராவிட மொழிக் குடும்பம் எனும் தனித்த மொழியினத்தைச் சார்ந்தவை. தமிழி மொழிக் குடும்பங்கள் வேறு, சமக்கிருத மொழிக் குடும்பம் வேறு.

தமிழும் சமக்கிருதமும் வேறு வேறு. எதிரும் புதிருமானது. நிலைமை இவ்வாறிருக்க, சமக்கிருதமே தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் தாய் என்கிற பழங்கதையை மீண்டும் கட்டமைக்க முயற்சிப்பதன் வெளிப்பாடு தான் புதிய கல்விக் கொள்கையில் சமக்கிருத மொழிக்கு முதன்மை அளித்திருப்பதாகும். சமக்கிருத மேலாதிக்கத்தின் வெளிப்பாடு இது.

புதிய கல்விக் கொள்கையின் இன்னொரு ஆபத்து, இட ஒதுக்கீட்டு முறை நீக்கம் என்பதாகும்.
கல்வி மற்றும் பணியிடங்களில் நிலவுகிற சாதி, சமய, பாலின, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் தீண்டாமைகளையும் சுரண்டல்களையும் நீக்குவதற்கான எந்த வழிமுறைகளையும் சொல்லவில்லை என்பதோடு, பட்டியல் மற்றும் பழங்குடியினர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்புகளைக் குறித்து மவுனத்தையே வெளிக்காட்டுகிறது. புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் ஏதேனும் ஒரு சொல் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது என்றால் அது இட ஒதுக்கீடு எனும் சொல்தான். ஆக, கல்வி வேலைவாய்ப்புகளில் இருந்து வரும் இட ஒதுக்கீடு எனும் முறையே கூட நீக்கப்படுவதற்கான முன்னெடுப்பாகத்தான் இவ் வரைவு அமைந்திருக்கிறது. இட ஒதுக்கீடு நீக்கம் என்பது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகவே முன்நிறுத்தப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கையின் வரைவில் ஒன்று, இணைப்புப் பள்ளிகளை உருவாக்குதல் என்பதாகும். அதாவது, குறைந்த மாணவர் சேரக்கையும் உள்கட்டமைப்பும் இல்லாத பள்ளிகளை உருவாக்குதல் என்பது திட்டம். இது நல்ல திட்டம் என்பது போலத் தோன்றும். ஆனால், அதன் நோக்கம் வேறு. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருதல், போதிய ஆசிரியர்களை நியமித்தல் போன்றவற்றின் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குப் பதிலாக, அம்மாதிரியான பள்ளிகளை ஒழித்து ஒரே பள்ளியாக _ இணைப்புப் பள்ளிகளாக உருவாக்குதல் என்பது, ஏழை எளிய அடித்தள மக்கள் வாழிடப் பகுதிகளில் அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் எனும் கோட்பாட்டிற்கே நேர் எதிரானது ஆகும். இணைப்புப் பள்ளிகள் எனும் இத்திட்டம், பள்ளிகள் தனியார்மயமாதலை மறைமுகமாக ஆதரிக்கும் திட்டமாகும்.

புதிய கல்விக் கொள்கையின் அபத்தங்களுள் ஒன்று, பெண் ஆசிரியர்களைக் குறித்த மதிப்பீடு ஆகும். பள்ளிக் கல்விச் சீரழிவிற்கு, பெண் ஆசிரியர்கள் அதிக அளவுக்குப் பணி அமர்த்தப்பட்டிருப்பது தான் காரணம் எனப் புதிய கல்விக் கொள்கை வரைவு தொடர்பாகக் குசராத் அரசின் கருத்துரு  அமைந்திருக்கிறது. அதாவது, அறிவு ஆற்றல் ஆளுமை என யாவுமே ஆண்களால் தான் கற்றுத் தரப்பட வேண்டும். அறிவிலும் ஆற்றலிலும் ஆணே மேலோங்கி இருப்பவர். பெண் என்பவர் குறைவுடைய ஆண் என்கிற ஆண்நோக்கு - ஆணாதிக்கம் வெளிப்படும் களமாகக் கல்வித்துறையையும் வடிவமைக்க புதிய கல்விக் கொள்கை முயல்கிறது என அப்பட்டமாகவே தெரிகிறது. இது, தொடக்கக் கல்வி நிலையில் பெண் ஆசிரியர்களே இருப்பது நல்லது என்கிற கருத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

புதிய கல்விக் கொள்கை வரைவானது பிற்போக்கானது மட்டுமல்ல, உலகமயச் சந்தையில் கல்வியும் ஒரு வணிகப் பொருளாக ஆக்கப்பட்டுள்ள பண்டம் எனும் அபத்த நிலையையும் உருவாக்கியுள்ளது.

உயர் கல்வி என்பது படிக்கிற அந்தத் தனிநபருக்குத்தான் பயனளிக்கிறது. சமூகத்திற்கு அதனால் எந்தப் பயனும் இல்லை. எனவே அதற்குச் செலவிடும் தொகைக்கு அந்தத் தனி நபரே பொறுப்பேற்க வேண்டும். ஆகையால், உயர் கல்வியை ஒரு பொது மக்களுக்கான பொருளாகக் கொள்ள முடியாது. அதை ஒரு திறன் சாராப் பொருள் என்றே கொள்ள வேண்டும் என இந்திய அரசின் முன்னைக் கல்வி அமைச்சர் யுனெசுகோ மாநாட்டில் பேசியது குறிப்பிடத்தக்கது.  அதன் நீட்சிதான் காட் ஒப்பந்தமும் கூட.

உயர் கல்வி அனைத்தும் சேவைத் துறையிலிருந்து வணிகத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பதையே காட் ஒப்பந்தம் சுட்டுகிறது. உலகமயமாக்கலின் ஓர் அங்கம் தான் காட் ஒப்பந்தம் . காட் ஒப்பந்த விதிகளின்படி தான் புதிய கல்விக் கொள்கை.

சேவைக் கட்டணங்கள் செலுத்தி அயல் நாட்டு விற்பனையாளரிடமிருந்து இணையதளம் மூலமாகக் கல்வி பெறுதல்,

 வெளிநாட்டிற்கு நேரடியாகச் சென்று கட்டணங்கள் செலுத்திக் கல்வி பெறுதல்,

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து சேவைக் கட்டணம் வசூலித்துக் கல்வி வழங்குதல்,

வெளிநாட்டு ஆசிரியர்கள் தனியாட்கள் என்ற முறையில் இந்தியாவுக்கு வந்து, இங்குள்ள நிறுவனங்களில் சேவை வழங்கி கட்டணங்கள் வசூலித்தல்
என்பவை தான் காட் ஒப்பந்த விதிகளின் -புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கின்றன.

அதாவது, கல்வி என்பது பணம் கொடுத்து வாங்கும் ஒரு பண்டம். இந்த வணிகத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை. கல்வியை அளிக்கும் பொறுப்பு அரசிடம் கிடையாது, அது தனியார் பொறுப்பு. பணம் இருப்பவர் மட்டுமே கல்வியைப் பெறலாம். பணமில்லாதவர் படிக்கும் கனவைக் கலைத்து விட்டு, குலத்தொழில் என ஏதாவது ஒன்று இருந்தால்  அதைச் செய்யப் போகலாம் என்கிற நிலைமைகளை வழிமொழிவதாகவே புதிய கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. இது சாமானியர்களின் கல்வி உரிமைக்கு எதிரானது.

ஆக,
சமக்கிருத - பார்ப்பனிய மேலாதிக்கத்தைப் போதிக்கிற, ஆணாதிக்கத் திமிரைக் காட்டுகிற,
இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக்கு எதிராக இருக்கிற, ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, கல்வியை விற்பனைப் பண்டமாக்கி வணிகப்படுத்துகிற
கல்விக் கொள்கையாகவே புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே,
புதிய கல்விக் கொள்கையை நாம் எதிர்த்தாக வேண்டியது நாம் வாழும் காலத்தின் கட்டாயம்.

புதிய கல்விக் கொள்கை குறித்துக் கீழ்க்காணும் நூல்கள் மேலும் விளக்கப்படுத்தியுள்ளன.

புதிய கல்விக் கொள்கை அபத்தங்களும் ஆபத்துகளும் - அ.மார்க்சு.

தேசிய கல்விக் கொள்கை: மகாராசாவின் புதிய ஆடை - தேனி சுந்தர்.

புதிய கல்விக் கொள்கை:
பற்றி எரியும் ரோம்.. ஊர் சுற்றும் நீரோ - இரா.நடராசன்.

புதிய கல்விக் கொள்கை: மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?- நா.மணி.

திங்கள், 13 நவம்பர், 2017

இலட்சுமி குறும் படமும் பாலியல் குறித்த மேட்டிமையும்..


இரு வேறு வர்க்கக் குணாம்சத்தில் நெளியும் பாலியல் துய்ப்பைப் பேசுகிற சாக்கில், உடல் உழைப்பாளிகளிடம் வெளிப்படுகிற பாலியல் எந்திரமயமானதாகவும், அறிவாளித்தனமான ஆண்களிடம் வெளிப்படுகிற பாலியல் அழகியதாகவும் இருக்கிறது என்பதைத் தான் அந்தப் படம் சொல்ல வருகிறது.
கருப்பு வெள்ளைக் காட்சிகளும், பிறகு வண்ணப் படக்காட்சிகளுமாய் படம் விரிய விரிய ஒன்று இழிவு, மற்றொன்று அழகு என்பதான மேட்டிமைக் கருத்தாக்கத்தையே இந்தப் படமும் வலியுறுத்துகிறது.
வெறும் பாலியல் துய்ப்புக்கு ஏங்கித் திரியும் பெண்ணாகக் காட்டப்பட்டிருப்பதும், அதை நியாயப்படுத்துவதற்கான காட்சி நகர்வுகளாகவும் தான் அந்தப் படம் இருக்கிறது.
அறிவாளித்தனம் இருந்தால் ஒரு பெண்ணை பாலியல் வட்டத்துள் எளிதாய் வீழ்த்தி விட முடியும் என்பதைத் தானே இப்படமும் தெளித்துப் போட்டிருக்கிறது.
இதைப் பேசுவதால் பெண்ணின் பாலியல் தெரிவுக்கும் விடுதலைக்கும் எதிரானவராக அல்லது மரபுவாதியாகச் சுருக்கிப் பார்க்கவும் கூடும். ஆயினும், பெண் நோக்கு எனும் பேரில் உருவான ஆண்நோக்குப் படம் என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை. அதுதான் உண்மையும் கூட.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

மகாராசன் புத்தகங்கள் பற்றிய வெளியீட்டுக் குறிப்புகள்(13 புத்தகங்கள்)


ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின்
நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் (2017).
நூலாசிரியர் : மகாராசன்.
விலை: உரூ 60
வெளியீடு : அடவி பதிப்பகம், சென்னை.
பேச : 9994880005


மொழியில் நிமிரும் வரலாறு(2016)
நூலாசிரியர் : மகாராசன்.
விலை: உரூ 150
வெளியீடு : கருத்து = பட்டறை பதிப்பகம், மதுரை.
பேச : 9842265884


முல்லைப்பாட்டு உரைப்பனுவல்(2012)
உரையாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 30
வெளியீடு : மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
பேச : O452 2345971


தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க
எதிர் மரபும்(2010)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 100
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


பெண் மொழி இயங்கியல்(2010)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 250
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


அவதூறுகளை முறியடிப்போம்:
தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் (2010)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 90
வெளியீடு : பாலை பதிப்பகம், மதுரை.
பேச : 9842265884


மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சிசினைகளும்( 2009)
ஆசிரியர் : ஸ்டாலின்
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 130
வெளியீடு : தோழமைப் பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


மொழி இயங்கியல்(2008)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 60
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


தமிழில் பெண் மொழி மரபு (2008)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 50
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை
பேச : 9444302967


ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துதுவமும் காதலற்ற முத்ததங்களும் (2007)
பெண்விடுதலை குறித்த லெனின் கிளாரா ஜெட்கின் கட்டுரைகள் உரையாடல்கள்.
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 80
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை.
பேச : 9444302967


ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும் (2007)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 75
வெளியீடு : கருப்புப் பிரதிகள் பதிப்பகம், சென்னை
பேச : 9444272500


அரவாணிகள்: 
உடலியல் உளவியல் வாழ்வியல் (2007)
தொகுப்பாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 210
வெளியீடு : தோழமை பதிப்பகம், சென்னை
பேச : 9444302967


கீழிருந்து எழுகின்ற வரலாறு (2006)
நூலாசிரியர் : மகாராசன்
விலை: உரூ 50
வெளியீடு : பரிசல் பதிப்பகம், சென்னை.
பேச : 9382853646