வியாழன், 18 மே, 2023

இனம் அழுத நிலம் : மகாராசன்


ஒரு நிலத்தில்
வாழ்ந்த இனத்தின்
இலைகளும் தளிர்களும் 
கிளைகளும் வேர்களும்கூட கொத்துக்கொத்தாய்க் கொல்லப்பட்டபோது 
கதறித்துடித்தன 
அழுகைக்கூக்குரல்கள்.
கையேந்திக் கிடந்த கண்ணீர்த்துளிகளும் உயிர்கொப்பளித்த அரத்தமும்
கசிந்து நசிந்து
மண்ணெல்லாம் சேர்ந்தழுதன.
அந்த நிலமும் இனமும் 
நீட்டிய கைகள்
எட்டாமல் போயிருக்கலாம்.
கடல் தாண்ட முடியாமல்
கால்கள் தவித்திருக்கலாம்.
புத்தன் பெயரால்
பெருங்கொலையில் துடித்திட்ட 
ஓர் இனத்தின் அழுகுரல்
உலகின் காதில் விழுந்தாலும் 
புரியாமல் போயிருக்கலாம்.
ஆனாலும்,
நம் காதில் விழுந்தது;
நமக்குப் புரிந்தது.
அதன் அழுகைமொழி புரிந்த
எட்டுக் கோடிப் பேர்களும்
உயிர் சாட்சிகளாய் நின்றது
அதனிலும் பெருந்துயரம்.

ஏர் மகாராசன்

ஈழப்பனையும் குருவிகளும் : மகாராசன்


கண்ணீர் சுமக்கும் 
தொன்மங்கள் பரவிய
தொல் நிலத்தில்
சிதறிக் கிடக்கின்றன
விதைகள்.
கொத்துக் குண்டுகள் 
புத்தன் பெயரால் ஏவியதில்
காயம்பட்டு நிற்கிறது
நெடிய பனை.
குலைகள் பூத்து
உதிர்ந்த விதைகள்
வரலாறு படித்தன
தாய்ப்பனையின் 
எச்சம் உறிஞ்சி.
பாட்டன் பாட்டிமார்
அரத்தம் தோய்ந்த
காலடித் தடங்கள்
காயும் முன்னே
வேர்கள் பிடுங்குவதைப்
பார்த்துக் கொண்டிருக்குமா
விதைகள்.
ஓங்கிய உயரமும் 
அடர் கருப்புமென
அடையாளம்.
அரத்த வெள்ளம்
வடிந்த ஈரத்தில்
முளை கட்டுகின்றன
விதைகள்.
வடுக்களே
விதைகளாகும் காலம் முளைக்கிறது.
பனைகளும் முளைத்தன
நாடு முழுதும்.
கொஞ்ச காலத்தில்
பொடிப் பனைகள்
ஈனும் பருவத்தில்
குலையாய்க் தொங்கும்
ஈழம்.
கூடுகள் இழந்து
காயங்கள் சுமந்த
தூக்கணாங்குருவிகள்
மீண்டு
மீண்டும் வரும்.

ஏர் மகாராசன்

புதன், 10 மே, 2023

ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கம் செய்திருக்கும் மலக்குழிக் கதையாடல் : மகாராசன்.


ஒரு காலகட்டத்தியச் சமூக அமைப்பில் கட்டமைக்கப்படுகிற ஒரு பெருங்கதையாடல், அச்சமூக அமைப்பில் உள்ள எல்லாத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லை; எல்லோருக்கும் உகந்ததாக அல்லது சமமாகப் பாவிப்பதும் இல்லை.

பன்மைத்துவம் நிரம்பிய ஒரு சமூக அமைப்பில் ஏதோ ஒரு தரப்பையோ அல்லது ஒரு சில தரப்பினரையோ தான் அடையாளப்படுத்தும்; கண்டுகொள்ளப்படாத தரப்புகள் ஏராளமாகவும் இருக்கும். ஆயினும், அந்தப் பெருங்கதையாடல் சமூகத்தில் எப்பொழுதெல்லாம் புழங்கப்படுகிறதோ அல்லது முன்னெடுக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அந்தப் பெருங்கதையாடலுக்கு நிகரான/இணையான/எதிரான/மாற்றான கதையாடல்கள் எழுப்பப்படுவதும்; கட்டமைக்கப்படுவதும் நேர்வதுண்டு.

அதாவது, ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கும் கதையாடல்களும், எதிர்க் கதையாடல்களும், மாற்றுக் கதையாடல்களும் பன்மைத்துவச் சமூக அமைப்பில் எல்லாக் காலங்களிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், இராமாயணப் பெருங்கதையாடலுக்கு நிகரான/எதிரான/மாற்றான/ தலைகீழ்க் கதையாடல்களும் இந்திய நிலப்பரப்பெங்கும் பல்வேறு வடிவங்களில் இன்னும்கூட வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. அதேபோலத்தான், மகாபாரதக் கதையாடல்களும், சிலப்பதிகாரக் கதையாடல்களும் பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன.

பன்மைத்துவச் சமூக அமைப்பில் இவ்வாறுதான் பல பெருங்கதையாடல்கள் பல்வேறு வடிவங்களில் உருவாகி வந்திருக்கின்றன. 

விடுதலை சிகப்பியின் மலக்குழிக் கவிதைகூட, ஒரு பெருங்கதையாடலைத் தலைகீழாக்கும் இன்னோர் எதிர்க் கதையாடலின் நீட்சிதான். பகடியால் ஒரு பெருங்கதையாடலைக் கவிதையால் எதிர்க் கதையாடலை முன்வைத்திருக்கிறார் அவர். 

ஒரு பெருங்கதையாடலை வெளிப்படுத்துவதற்கு உள்ள அத்தனை உரிமைகளும், எதிர்/மாற்றுக் கதையாடல்களை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. அந்தவகையில், ஒரு கதையாடலை வெளிப்படுத்துவதற்கு யாவருக்கும் உரிமை உண்டு. சனநாயக அமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச அடிப்படை உரிமையும்கூட. அதேபோல, ஒரு கதையாடலை சட்டரீதியாக எதிர்ப்பதும்கூட சனநாயக அமைப்பில் வழங்கப்பட்டிருக்கும்  உரிமையும்கூட. அதாவது, கருத்துச் சுதந்திரம் இருப்பதைப்போல, அந்தக் கருத்தை எதிர்ப்பதற்கும் சட்ட வாய்ப்புகளே அதற்கான உரிமைகளை வழங்கி இருக்கின்றன. 

விடுதலை சிகப்பியின் மலக்குழி பற்றிய கதையாடல் ஓர் எதிர்க்கதையாடலாக இருப்பதைப் போலவே, கருத்து சுதந்திரத்திற்கு எதிராகப் பதியப்பட்டிருக்கும் அவதூறு வழக்கையும் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும். 

மேட்டிமையும் அதிகாரமும் சாதிய ஏற்றத்தாழ்வும் நிரம்பிய ஒரு பெருங்கதையாடலை எதிர்க்கத் துணிந்திருக்கும் மலக்குழிக் கதையாடல், உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையாடலாகும். உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கதையாடலை வெளியிடுவதற்கான குறைந்தபட்ச கருத்து சுதந்திரத்தைக்கூடப் பறிப்பது சனநாயக விரோதமானதுமாகும்; கண்டிக்கத்தக்கதுமாகும்.

இந்நிலையில், அதிகாரம் நிரம்பிய ஒரு பெருங்கதையாடலைப் பகடியாக்கம் செய்து தலைகீழாக்கம் செய்திருக்கும் விடுதலை சிகப்பியின் கதையாடலை ஆதரிக்கிறோமோ இல்லையோ அல்லது உடன்படுகிறோமோ இல்லையோ, விடுதலை சிகப்பி போன்றோரின் அனைவரின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாக நிற்பதே சனநாயக அறமாகும். 

விடுதலை சிகப்பிக்கு மட்டுமல்ல; தமிழ்த் தேசிய இனத்தின் - உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்கப்பட்ட தரப்பின் அனைவரது கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவாகவே நாம் நிற்போம்.

ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
10.05.2023.

செவ்வாய், 9 மே, 2023

தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகக் குறுக்கிப் பார்த்தல் கூடாது :மகாராசன்



தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 


தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 


தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.


தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 


இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும்.  இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.


ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.


தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 


தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.


தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 


ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

09.05.2023

வியாழன், 4 மே, 2023

யாத்திசை - திரைப்புனைவும் வரலாற்று நுண் உணர்வும் : மகாராசன்


தமிழர் வரலாற்றைக் கலைப் படைப்பாக்கும் பெருமுயற்சியில் யாத்திசை திரைப்படமானது முன்களத்திற்கு வந்திருக்கிறது.

யா எனில் தெற்கு என்பது பொருள். யாத்திசை எனில், தென்திசை என்பது பொருள். தமிழ் நிலத்தின் தென்திசையில் நிகழ்ந்த அதிகார முரண்களைப் பேச வந்திருக்கிறது யாத்திசை எனும் திரைப்படம். 

அதிகாரத்தை நுகரத் துடிக்கும் ஒரு தரப்புக்கும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் இன்னொரு தரப்புக்குமான பகையும் போரும் வெற்றியும் தோல்வியும்தான் யாத்திசை படத்தின் திரைகதைக்கருவும் களமும் ஆகும்.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் நிகழ்வதாகக் காட்சி மொழியில் விரியும் கதையானது, பாண்டிய மரபின் இரணதீர பாண்டியருக்கும், சோழ நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதான எயினக் குடிக்குமான அதிகாரச் சண்டையை வரலாற்றுப் புனைவாக விவரித்திருக்கிறது.

பாண்டியர்கள் சோழநாட்டைக் கைப்பற்றியபோது, சோழ நிலத்திலிருந்த எயினக் குடிகள் பாலைநிலத்திற்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். பாலை நிலத்தில் வேட்டைச் சமூக வாழ்வியல் நெருக்கடிக்குள் உழன்று தவிக்கும் எயினர்கள், மீளவும் தங்கள் நிலத்தையும் அதிகாரத்தையும் அடையத் துடிக்கிறார்கள். தமது வருங்காலத் தலைமுறை இந்த வாழ்வை அனுபவிக்கக் கூடாது எனக் கருதும் எயினக் குடியின் கொதி என்பான், தமது குடிகளை இரணதீரப் பாண்டியனுக்கு எதிராகப் போர் செய்திடத் தயார்படுத்துகிறான். அந்தவாறே, சோழ நிலத்திலிருக்கும் பாண்டியரின் கோட்டையைக் கைப்பற்றுகின்றன எயினப் படைகள். இந்நிலையில், பதுங்கியிருக்கும் சோழர்களின் படை உதவியைப் பெறமுடியாத நிலையில், பெரும்பள்ளிகளின் பெருந் துணையோடு பாண்டியப் படைகளின் சுற்றிவளைப்பில் சிக்குண்டு போகிறது கொதியும் எயினப் படைகளும். 

இரு தரப்பும் போர்க்கள உயிர்ப்பலியை விரும்பாத நிலையில், இரணதீரப் பாண்டியனும் கொதியும் தனியர்களாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். தனியர்களாகச் சண்டையிடுவோரில் எவர் வெல்கிறார் என்பதே திரைப்படத்தின் உச்சமும் முடிவும். களத்தில் எயினக் குடியின் கொதியைத் தோற்கடித்துக் கொன்று விடுகிறான்; பாண்டிய அதிகாரத்தை நிலைநிறுத்துகிறான் இரணதீரப் பாண்டியன் என்பதாகப் படம் நிறைவடைகிறது.

படத்தில் வரும் கதைமாந்தர்கள், நடிப்புப் புலப்பாடுகள், போர்க்களக் காட்சிகள், களப்பலிகள், போர்ச் சடங்குகள், அதிகாரக் கட்டுமானங்கள், காட்சிப்படுத்திய விதங்கள், பின்னணி இசை, நடனங்கள், கதைக் களங்கள், கதைத் தொடர்ச்சி, உரையாடல்கள் யாவும் திரைமொழியில் ஒருவகையான புதிய புதிய அனுபவங்களைத் தந்திருக்கின்றன. வழக்கமான வணிகத் திரைப்படப் பாணியிலிருந்து விலகிய ஒரு புதிய திரைப்பாணியை யாத்திசை காட்டியிருக்கிறது. இதுபோன்ற கலைப்படைப்பாக்க முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை; பாராட்டப்படவேண்டியவை.

வரலாற்று நிகழ்வைப் பேசியிருப்பதில் நிறைய திரிபுகளும் விடுபடல்களும் குறைகளும் இருப்பினும், பாண்டிய நிலப்பரப்பையும், பாண்டியர்களின் வரலாற்றையும், சிறு சிறு குடிகளின் வரலாற்று இருப்பையும் திரைக்கலைக்குள் கொண்டுவந்திருக்கும் யாத்திசை திரைப்படத்தைத் தமிழர்கள் வரவேற்றுப் போற்றிட வேண்டும்; துணை நிற்க வேண்டும். 

ஏனெனில், தமிழர் மரபின் பாண்டிய வரலாற்றை உள்ளபடித் தேடிப்பார்க்கும் தூண்டலை இப்படம் தந்திருக்கிறது என்பது மட்டுமல்ல; தமிழர் வரலாற்று நுண் உணர்வுகளையும் இப்படம் தந்திருக்கிறது. ஆகையாலே, யாத்திசை தமிழர் மரபின் ஆகச் சிறந்த கலைப் படைப்பாகவே மிளிர்கிறது. அதேவேளை, இந்தப் படத்தை முன்வைத்த வரலாற்றுத் தரவுகள் குறித்த விமர்சனங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 

வரலாற்று நிகழ்வுகளைப் புனைவாக்கும்போது, குறிப்பாகக் காட்சி மொழியில் புனைவாக்கும்போது வரலாற்றுத் திரிபுகள் நேர்ந்திடக்கூடாது. மொழி, நாகரிகம், வாழ்வியல், கலையறிவு, நாகரிகம், போர்நிகழ்வுகள், பண்பாடு போன்ற தனித்துவங்களைத் தரவிறக்கம் செய்திடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது கலைப்படைப்பாளர்கள் கவனிக்க வேண்டிய கூறுகள்.

கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தமிழர் வாழ்வியலும், உடல், உடைத் தோற்றப் புலப்பாடுகளும், போர்நெறிகளும் மிக வளர்ச்சி அடைந்த நாகரிக அடையாளங்களைக் கொண்டிருப்பவை. கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகான காலத்திலேயே நாகரிக வாழ்வியலும் தமிழர் அடையாளத் தோற்றப்பாடுகளும் பண்பட்ட நாகரிகத் தோற்றத்தைக் கொண்டிருந்தவை என இலக்கிய இலக்கணச் சான்றுகள் நிறையக் காட்டுகின்றன. ஆகையால், தமிழரின் உடலியல், உடை, முகத் தோற்றப்பாடுகள் குறித்து இனிவரும் கலைப்படைப்புகளில் கவனம் கொள்ள வேண்டும்.

படத்தில் வரும் பழந்தமிழ் வழக்குகள் திரைமொழியில் தனித்துவ முயற்சி. பழந்தமிழ் வழக்குகளைத் திரை உரையாடலுக்குள் கொண்டுவந்தமைக்குப் பாராட்டுகள். அதேவேளை, இது வலிந்து புனைந்ததாகவே படுகிறது. தமிழரின் மொழி வழக்கு இரண்டு தன்மைகளைக் கொண்டிருப்பதாகும். அன்றாட வாழ்வியலின் பேச்சு வழக்கு ஒன்று. பேச்சு மொழிவழக்கு என்பதும் மொழியின் ஒரு தனித்த அடையாளம். அதேபோல, எழுத்து வழக்கு என்பதும் இன்னொரு வகை. 

பேச்சின் கூறுகளை எழுத்தாக்கும்போது அது எழுத்து வழக்கு எனும் தனித்த வழக்கைப் பெற்று விடுகிறது. பேசும்போது எழுத்து வழக்காகவோ, எழுதும்போது பேச்சு வழக்காகவோ புழங்குவது தமிழர் வழக்கல்ல. இதைத்தான் நாடக வழக்கு(எழுத்து மரபு) எனவும், உலகியல் வழக்கு(பேச்சு மரபு) எனவும் இலக்கண நூல்கள் வேறுபடுத்திச் சுட்டுகின்றன. அதாவது, பேச்சு வழக்கை இயல்பு வழக்கு எனவும், எழுத்து வழக்கைச் செய்யுள் வழக்கு எனவும் சுட்டுவர். 

படத்தில் இயல்பு வழக்கான பேச்சு வழக்கையே பயன்படுத்தியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டுக் காலத்திலேயே புழங்கிய திருந்திய பேச்சு வழக்குகள் இப்போதும்கூட புரியக்கூடியவைதான். படத்தில் வரும் பழங்காலப் பேச்சுகளுக்கு சங்ககாலத்தில் நிலவிய எழுத்து வழக்குகளைப் பயன்படுத்தியிருப்பதில் நிறையக் கால இடைவெளியும், புரிந்துகொள்வதில் இடைவெளியும் ஏற்படுகின்றன.

படத்தில், பாலைநிலக் குடியாக எயினர்கள் காட்டப்படுகிறார்கள். பெரும்பள்ளிகள் பாண்டியர்களின் துணைப்படையினராகக் காட்டப்படுகிறார்கள். பாண்டிய மரபின் இரணதீரப் பாண்டியனுக்கு மட்டும் குடி அடையாளம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. எனினும், பாண்டியர்கள், பெரும்பள்ளிகள், எயினர்கள் போன்றோரின் அடையாள நுண் அரசியலை உள்பொதிந்தே வைத்திருக்கிறது யாத்திசை. அதாவது, தமிழரின் மூன்று பெரும் சமூகங்களைக் குறியீடுகளாக அடையாளப்படுத்தியிருக்கிறது.

தமிழர் வரலாற்றைக் குறித்தும், யாத்திசை குறித்தும் நிறைப் பேச இருக்கிறது. அதேவேளை, நிறையவும் பேசவைத்திருக்கிறது யாத்திசை.

பழங்கால வரலாற்று நிகழ்வுக்குள் திரைப் புனைவின் வழியாக அழைத்துச் சென்றிருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது யாத்திசை. யாத்திசைப் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்; பாராட்டுகள். தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அன்பு நண்பர் இயக்குநர் தரணி ராசேந்திரன் அவர்களுக்கும், படக் குழுவினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளும் அன்பும் நன்றியும்.

ஏர் மகாராசன், 
மக்கள் தமிழ் ஆய்வரண்.
04.05.2023