வியாழன், 15 ஜூலை, 2021

என் எழுத்துகளின் நிறம்: மகாராசன்


மானுடத்தின் பாடுகளையும் நிலத்தின் பாடுகளையும் பண்பாட்டு நோக்கில் எடுத்துரைப்பதே எனது எழுத்துகளின் ஆத்மா என்று உணர்கிறேன். அந்த வகையில் மானுட விடுதலைக்கான அரசியல் தத்துவத்தின் நிறமான சிவப்பும், நிலம் உள்ளிட்ட சூழலியல் காப்புக்கான நிறமாகப் பச்சையும் சேர்ந்த செம்பச்சை நிறம் தான் எனது எழுத்துகளுக்கான நிறம். 

குறிப்பாக, தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் மரபில் காணலாகும் அறத்தையும் அழகியலையும் அரசியலையும் தனித்துவமாக அடையாளப்படுத்துவதே எனது எழுத்துகளின் தனித்துவமாகக் கருதுகிறேன்.

ஏர் மகாராசன்

**

ஒளிப்படம்: நித்யன்

திங்கள், 5 ஜூலை, 2021

விதைத்திருக்கிறேன்; முளைத்திருக்கிறது : மகாராசன்


விதைத்துக் கொண்டே இருங்கள். முளைத்தால் மரமாகட்டும்; இல்லையேல், மண்ணுக்கு உரமாகட்டும் என்பார் அய்யா நம்மாழ்வார். எமது கற்பித்தல் பணியில் தொடர்ந்தும் விடாமலும் விதைத்துக்கொண்டேதான் இருக்கிறேன். தேனி மாவட்டத்தில் தனியார் பதின்மப் (மெட்ரிக்) பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைத் தமிழாசிரியர்களுக்குப் புதிய தமிழ்ப்பாடநூல் தொடர்பாகப் பயிற்சியளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர்களிடமும் எப்போதும்போல விதைத்துவிட்டு வந்தேன். அவர்களிடமும் அது முளைத்துக் கொண்டிருப்பது அறிந்து நெகிழ்கிறேன்; மகிழ்கிறேன்.

அந்த ஆசிரிய நண்பர்களின் பதிவு வருமாறு: 

தேனியில் ஒரு பள்ளியில் புதிய பாடப் புத்தகத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது. மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை. எமக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. முதுகலை ஆசிரியர் தேர்வுக்குக்குத் தாங்கள் வழங்கிய வழிகாட்டுதல் வழியில் பயணித்துக் கொண்டிருப்போருக்கு, உங்கள் ஒவ்வொரு சொல்லின் பயன் எவ்வளவு என்று உணர்ந்து கொள்ளமுடியும். நான் உணர்கிறேன்; பயணிக்கிறேன். அதன் பயனை ஓராண்டில் என்னால் உணர முடிந்தது. 

என்னிடம் பெரும்பாலான நண்பர்கள் கேட்கும் கேள்வி இதுதான். நீங்கள் எப்படி தூய தமிழில் தொடர்ந்து பேசுகிறீர்கள் என்று. (குறிப்பாகத் தமிழ் ஆசிரியர்கள்) அவர்களிடம் நான் சொல்லும் பதில், மரியாதைக்குரிய மகாராசன் ஐயா நீங்கள்தான் என்பதை மார்தட்டிச் சொல்வேன். உங்களின் அன்றைய ஒருநாள் வகுப்பு நிறைய மாற்றங்களை உருவாக்கின. 

புத்தக வாசிப்பு ஆர்வம், நூல்கள் சேகரிப்பு, தேர்வுகளுக்குத் தயாராகும் முறை, மூலநூல் வாசிப்பு இன்றுவரை தொடர்கிறது. இதுவரை தங்களுடைய இல்லத்தில் நான்கு, ஐந்து முறை சந்தித்திருக்கிறேன். அப்பொழுது செம்பச்சை நூலகத்தைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுதும் தாங்கள் கடந்து வந்த பாதைகள், விடாமுயற்சிகள், வெற்றிக்கான வழிகாட்டுதல் அனைத்தும் கல்வெட்டுப் போல் மனதில் இன்றும் அழிக்க முடியாதவை. 

முன்பெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாமா என ஐயம் தொற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை ஐயா. நூறு விழுக்காடு வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கை உள்ளது. பெரும் மகிழ்ச்சி ஐயா, நன்றி.

திரு.பிரபு,

முதுகலைத் தமிழாசிரியர்,

வல்லி வரதராஜ் பதின்மப் பள்ளி, தேனி.

*

அந்த வகுப்பில் நானும் கலந்துகொண்டேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படியொரு பதிவு அந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது மட்டுமின்றி, என்னைப்போன்ற அனைவருக்கும் மறக்கமுடியாத மறுக்கவும் முடியாத அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரபு ஐயா அவர்களுக்கும், தூங்கும் புலியைப் பறை கொண்டு எழுப்புவோம்; தூய தமிழரை தமிழ்கொண்டு எழுப்புவோம் என்ற வரிகளுக்கு இணங்க, தமிழோடு இரண்டறக் கலந்துள்ள மகாராசன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து வழிகாட்டுங்கள் என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

திருமதி தனலட்சுமி,

துணை முதல்வர்,

பத்மா ராமசாமி பதின்மப் பள்ளி, தேனி.

சனி, 3 ஜூலை, 2021

ஏறு தழுவுதல்: எனது நூலும் தமிழ்ப்பாட நூல் எடுத்துரைப்பும் - மகாராசன்








தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையால் வடிவமைக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பிற்கான புதிய தமிழ்ப் பாடத்திட்டத்தில் ஏறு தழுவுதல் குறித்த கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ஒன்பதாம் வகுப்பு பயிலும் எனது மகள், அக்கட்டுரையைப் படித்து விட்டு, 'அப்பா, இது நீங்க எழுதின ஏறு தழுவுதல் புத்தகத்துல எழுதியிருக்கிற செய்திகளா இருக்கு. நீங்களா இந்தக் கட்டுரைய எழுதினீங்க? என்று கேட்டார். நானும் அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தேன். 

நான் எழுதிய 'ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' என்ற நூலில் விவரிக்கப்பட்ட செய்திகளே அந்தக் கட்டுரையில் நான்கு பக்க அளவில் சுருக்கிச் சொல்லப்பட்டுள்ளன. எனது நூலில் உள்ள சில பல பத்திகளும் கூட அப்படியே இடம்பெற்றுள்ளன. இளந்தலைமுறை ஏறு தழுவுதல் பண்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பொது நோக்கில் இந்தக் கட்டுரை பாடப்புத்தகத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது தான். ஆயினும், அந்தக் கட்டுரையில் ஓரிடத்தில் கூட எனது நூலின் பெயரோ அல்லது எனது பெயரோ இடம் பெற்றிருக்கவில்லை. எனது நூல் என்றில்லாவிட்டாலும், அந்தக் கட்டுரைக்கான தரவுகள் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன என்கிற குறிப்புகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும். 

பாடத்திட்ட உள்ளடக்கம், வடிவமைப்பு போன்றவை மேம்பட்ட நோக்குகளோடு அமைந்திருக்கிற நிலையில், ஒரு கட்டுரைத் தரவுக்கான பார்வை நூல்கள் எவையெனக் குறிப்பிடாமல் இருப்பது ஆய்வு முறையியலைக் கேள்விக்கு உள்ளாக்கக் கூடும். இந்தக் குறைபாட்டை மறுபதிப்பு செய்கிற போது சரி செய்திட வேண்டியது பாடத்திட்ட வல்லுநர்களின் கடமையாகும். குறைந்தளவு, பார்வை நூலாகக் கூடக் குறிப்பிடலாம்.

ஏறு தழுவுதல் பண்பாடு பன்னெடுங்காலமாய் நிகழ்த்தப்பட்டு வந்து கொண்டிருந்தாலும், அந் நிகழ்த்துப் பண்பாட்டைக் குறித்துச் சொல்லிக் கொள்ளும்படியாகத் தமிழில் நூல்கள் வெளிவந்திருக்கவில்லை. இந்தச் சூழலில் தான், தோழர் பாவெல் பாரதி அவர்கள் தொகுத்தளித்த ஏறு தழுவுதல் - சல்லிக்கட்டு : தொன்மை பண்பாடு அரசியல் எனும் தொகுப்பு நூல் கருத்துப் பட்டறைப் பதிப்பக முயற்சியால் வெளிவந்தது. 

அதே வேளையில், ஏறு தழுவுதல் பண்பாட்டைக் குறித்து வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கப்படுத்தும் நூல் தமிழில் வெளிவந்திராத சூழலில், அத்தகையக் கண்ணோட்டத்தில் நான் எழுதிய நூலே ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்கிற நூலாகும். 

ஏறு தழுவுதல் பண்பாட்டுக்கு இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், அப்பண்பாட்டைக் குறித்து மிகையாகவும் எதிர்மறையாகவும் கருத்து வாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், அப் பண்பாட்டின் தோற்றம் குறித்தும், மனித சமூக உற்பத்தியில் அப்பண்பாட்டின் வகிபாகம் குறித்தும், நிலத்தோடு அப் பண்பாட்டிற்கு உள்ள தொடர்பு குறித்தும், குறிஞ்சி முல்லை மருதம் பாலை என்கிற நானிலம் சார்ந்த மக்களோடு அப் பண்பாட்டின் உறவு நிலைகள் குறித்தும் விளக்கப்படுத்தி வெளிவந்த நூலே அதுவாகும். 

2017 சனவரியில் நடைபெற்ற ஏறு தழுவுதல் பண்பாட்டு மீட்சிக்கான போராட்டத்தில் இந்நூலின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் தீவிர வாசிப்புக்கு உதவியாக அமைந்தன. இந்நூல் அதே காலகட்டத்தில் அடவி பதிப்பகத்தால் அச்சு நூலாகவும் வெளிக்கொண்டு வரப்பட்டது. 

ஏறு தழுவுதல் குறித்து வெளிவந்திருக்கும் நூல்களுள் நான் எழுதியதும், பாவெல் பாரதி தொகுத்த நூலும் மிக முக்கியமானவை.

ஆகவே, பாடத்திட்ட வல்லுநர்களும், பாடப்பகுதி எழுதக்கூடியவர்களும் கட்டுரைக்கான தரவுகளுக்கு உதவிய நூல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்படுதல் வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது, அக்கட்டுரைக்கான உரிமை கோரலோ, பாடத் திட்டக் குழு மீதான விமர்சனமோ அல்ல. ஏறு தழுவுதல் பண்பாட்டைக் குறித்து இளந்தலைமுறை மாணவர்களின் அதிகப்படியான தேடலுக்கு உதவுக் கூடும் என்பதாலேயே.

பிற்குறிப்பு:

தமிழ்ப்பாட நூலுக்கு ஏறு தழுவுதல் பற்றிய கட்டுரையை எழுதிக் கொடுத்த ஆய்வறிஞர் இரெங்கையா முருகன் அவர்கள், நான் எழுதிய ஏறுதழுவுதல் நூலை அடிப்படையாக வைத்தே அந்தக் கட்டுரை எழுதியதாகவும், அந்தக் கட்டுரையில் எனது நூலைத்தான் பார்வை நூலாகக் குறிப்பிட்டதாகவும் தகவலைப் பகிர்ந்திருந்தார். கடைசியில், கட்டுரை எழுதிய அவரது பெயரும் இல்லை; நூலாசிரியர் எமது பெயரும் இல்லை. பாடநூல் வல்லுநர்களிடம் இதுபற்றிய முறையீட்டை முன்வைத்தாலும், எந்த மாற்றங்களும் நடைபெறவில்லை.

ஏர் மகாராசன்