வெள்ளி, 16 டிசம்பர், 2022

ஜெயமோகனின் புறப்பாடு - பயணங்களும் படிப்பினைகளும்: அ.ம.அங்கவை யாழிசை




நான் பதினோராம் வகுப்பு பயின்ற காலத்தில், தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்த 'யானை டாக்டர்' எனும் கதையைப் படித்தபோதுதான் 'ஜெயமோகன்' எனும் எழுத்தாளர் பெயர் அறிமுகமானது. ஜெயமோகன் எழுதிய கதைகளையும் மற்ற நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆசை அப்போது இருந்தது.

இதைக் குறித்து எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயமோகன் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும்  இருப்பதாகக் கூறினார். இரண்டொரு நாளிலேயே எங்களது 'செம்பச்சை' நூலகத்திற்கு ஜெயமோகன் நூல்கள் பலவற்றை வாங்கிவிட்டார் அப்பா. 


எந்தப் புத்தகத்தையும் மாதக்கணக்கில் சிறுகச் சிறுகப் படிக்கும் என் அம்மாவை, ஒரே மூச்சில் படித்து முடிக்க வைத்த முதல் புத்தகம் ஜெயமோகனின் 'எழுதுக' எனும் புத்தகம்தான். அவரின் எழுதுக எனும் நூல் அவருக்கு மிக முக்கியமான நூல் என்பார். அந்தப் புத்தகத்தை அவர் படித்து முடித்த கையோடு, ஜெயமோகன் எழுதிய 'புறப்பாடு' எனும் நூலையும் படிக்கத் தொடங்கினார். எந்நேரமும் அந்தப் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தார்.


புறப்பாட்டைப் படித்து முடித்த பிறகு ஜெயமோகனின் மிகத் தீவிர ரசிகையாக ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெயமோகனின் பேச்சுகளைக் காணொளி வாயிலாகப் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருப்பார். 


புறப்பாடு புத்தகத்தைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, அந்த நூலைப் பற்றி விரிவாக ஏதும் கூற மறுத்து விட்டார். "அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள். மனுஷன் போய்க்கிட்டே இருப்பாரு… போய்க்கிட்டே இருந்திருக்காரு…" என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டார். அப்போதிருந்தே ஜெயமோகனும் புறப்பாடும் எனக்கு நன்றாகவே அறிமுகம்.


பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கல்லூரியில் சேர்வதற்கான காத்திருப்புக்கு இடையில் கிடைத்த விடுமுறை நாட்களில் நிறைய நூல்களை வாசித்திட வேண்டும் என, புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நூல்களைச் சொல்லியிருந்தார் அப்பா. 


போன மாதம் கிட்டத்தட்ட இதே நாளில்தான் புறப்பாடு வாசிக்கத் தொடங்கினேன். என் அப்பாதான் 'இதை உன் அடுத்த இலக்காக வை. பெரும்பாலும் வரலாற்று நாவல்களையே வாசித்து உலவிய உனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும்' என்றார்.


புறப்பாடு படிக்க ஆரம்பித்தேன். அதில் என் வாசிப்புப் பயணமும் ஆரம்பமானது. நூலின் கால்வாசிப் பக்கங்களை வாசித்த பின்பு நிறுத்திவிட்டேன். இதுவரை வாசித்தவற்றை நினைத்துப் பார்த்தேன். எவ்வளவு முயன்றாலும் அவரது சித்திரத்தை இந்தப் பயணத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.


நூலில் வருகின்ற இந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தவையா? புனைந்தவையா? இது நிகழ்ந்திருக்காது, நிகழ்ந்திருந்தாலும் இவருக்கு அல்ல என மீண்டும் மீண்டும் எனக்குள் பலவாறாகத் தோன்றியது.


அவர் வீட்டை விட்டு வெளியேறுவார். இல்லையெனில், ஓடி விடுவார். ஏதாவது ஒரு விடுதியில் தங்குவார். ஒரு சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்புவார். நண்பனின் இறப்பு நிகழும். மறுபடியும் ஓடிவிடுவார். கங்கை, காசி, ஹரித்துவார், மும்பை எனப் பல இடங்களுக்குச் செல்வார். அதற்கு முன் பூனேயில் மண் சுமக்கும் வேலை, பிறகு சென்னையில் அச்சகத்தில் வேலை, அடுத்து வீடு திரும்புவார். சில காலம் கழித்து மறுபடியும் ஓடிவிடுவார். இப்படி எங்காவது ஓடிவிடுவார்; ஓடிக்கொண்டே இருப்பார்.


அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது என்ன எண்ணினார்? வெளியேறிய பின்பு வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று என்னவில்லையா? என, எனக்குத் தோன்றும்.


இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர் வீட்டை ஒரு விடுதியாகவே பாவித்தது போல் தோன்றியது. வருவார், தங்குவார், செல்வார். அவரது வீட்டில் அங்கு வாழவேயில்லை என்ற எண்ணம் தோன்றும். இப்படியெல்லாம் ஓடுவதும் வருவதும் போவதும் சாத்தியம்தானா? ஒரு வாலிபரால் அப்படி அவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆனாலும், அவர் அலைந்தார்; பறந்தார்.


எங்கும் நிலையில்லாத ஆற்று நீர் போல அலைந்து திரிந்து கடலில் கலந்திருப்பாரா? என்று தோன்றும். இல்லை, அவர் இன்னும் அலைந்து கொண்டிருப்பார் காற்றைப் போல.


முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததைக்கூட அப்படியே விவரிக்கிறார். அவரது ஞாபகத் திறன் வியக்க வைக்கிறது. அவர் சம்பவங்களை விவரிப்பதால் இப்படிக் கூறவில்லை. சம்பவங்களின் பின்னணியை விவரிப்பதன் நுணுக்கத்தை வாசிப்பில் உணர்ந்ததால் கூறுகிறேன். மிகச்சிறிய தகவலையும்கூடத் துல்லியமாக விவரிப்பது ஒரு கலைதான். அப்படிப்பட்டவர்களை நான் எப்போதும் ரசிப்பதுண்டு.


அவர் பல வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். சிமெண்ட் வேலை, மணல் அள்ளுதல், பிழை திருத்தம், புத்தகம் படைத்தல் எனப் பல வேலைகள் செய்திருக்கிறார். ஆனாலும், புத்தகம் வாசிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை. 


இந்தப் புத்தகத்தை முக்கால்வாசியளவு வாசித்து முடித்திருந்தபோது, எனக்குக் கவலையாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. நான் எனது புத்தக வாசிப்புப் பயணத்தை மிகத் தாமதமாக ஆரம்பித்து விட்டதாக ஒரு தவிப்பு தோன்றியது. இன்னும் முன்னரே வாசிப்புப் பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. என்மேல் நானே கோபப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, அப்போதுதான் அவரைப்போல நானும் சுற்ற வாய்ப்புகள் கிட்டும் என எண்ணி இருக்கலாம்.


இந்தப் புத்தகத்தில் வரும் அவருடைய மொழிநடையைப் பற்றி நான் பேசியே ஆக வேண்டும். எப்படி அப்படி எழுதினார்? எளிமையான சொற்கள்தான். ஆனாலும், இந்தப் புத்தகம் இன்னும் மெருகேற்றிய வாக்கியத்தால் ஆகியிருக்கிறது. என்றாலும், எல்லோராலும் இதை வாசிக்க முடியாது என்றே தோன்றியது. நான் அதைப் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் இன்னும் பக்குவப்படவில்லையோ என எனக்குப் பட்டது. எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா என்பதும் தெரியவில்லை.


இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில், என் அப்பா தினமும் கேட்பார் "புறப்பாடு எப்படிப் போகுது?" என்று. எனது ஒரே பதில், வழக்கமான பதில் "போய்க்கிட்டே இருக்குப்பா''. ஆம், போய்க்கொண்டே, நீண்டு கொண்டே, விரிந்து கொண்டே சென்றது முடிவில்லாதது போல. எனக்கு ஒரு கட்டத்தில் அழுகை வந்துவிட்டது. எனக்கும்தான் அலைந்து திரிய ஆசை. ஆனால், முடியவில்லை. ஒரு கணம் அப்படியே கிளம்பினால் என்ன? என்று தோன்றும். அந்த எண்ணம் மறுகணம் செத்துப் போகும்.


இவர் குறிப்பிடும் ஒப்புமைகள் பிரமிப்பில் ஆழ்த்தும். அவரது ஒப்புமைப்படுத்தும் திறன் மகத்தானது. ஆங்கிலத்தில் அதை அனாலஜி என்கிறார்கள். எதையெதையோ எதனுடனும் ஒப்பிடுவார். அவ்விரண்டையும் வைத்து நான் கற்பனைகூட செய்திருக்க மாட்டேன். ஆனால், படித்த பிறகு சரிதானே என்று தோன்றும். அந்த ஒப்புமையைக் கண்டு நானே சிரிப்பேன். நனைந்த சாலைகளைச் சாக்கடைகள் என்பார். இரவில் சாலைச் சந்திப்புகளைப் பிரம்மாண்டமான ஒரு தோல் செருப்பின் வார் போல இருக்கிறது என்பார். ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதை, அது மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது என்பார். ரயிலில் பயணம் செய்யும் பொழுது போடுகின்ற பாடல்கள் பயணிப்பவர்களின் பல உணர்வுகள் கொண்டாட்டங்கள் நிறைந்தது என்று கூறிவிட்டு, அதை ஓட்டல் தட்டுகள் என்பார். யார் யாரோ வந்து எதையெதையோ வைத்துத் தின்ற தட்டு என்று கூறுவார். இப்படி, சிறு பொருளையாவது ஒப்பிட்டுத்தான் எந்தவொரு காட்சியையும் நகர்த்துவார்.


சரம் சரமாகப் பேராசிரியர் பொழிந்து கொண்டிருந்த வகுப்பில் மதிய நேர மயக்கம். ஆங்கிலமும் தமிழும் எப்போதுமே சோற்றுக்கு மேலேதான் என்பார். இந்த வரியைத் தாமதமாகவே நான் புரிந்து கொண்டேன். உணவிற்குப்பின் பாடம் நடத்தப்படுகிறது என்று பிறகு புரிந்தது. புத்தகம் முழுவதிலும் சாமர்த்தியமாகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு பொருளையும் விவரிக்கும் அவரது கலை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.


என் அப்பா இந்தப் புத்தகத்தை என்னிடம் தரும்போதே 'படித்து முடித்தபின் அதைப்பற்றி எழுத வேண்டும்' என்று கூறிவிட்டார். அதற்காகப் படிக்கும்போதே குறிப்பு எடுக்கவும் சொன்னார். ஆனால், எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. எப்படி எழுதுவது? அவர் இங்கு இருந்து அங்கு சென்றார். பிறகு அங்கிருந்து வேறு எங்கோ சென்றார். அங்கு இல்லாமல் எங்கெங்கோ சென்றார் என்பதையா எழுதுவது? சட்டென்று நான் ஒரு உதவாக்காரியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். இந்த விசாலமான பயணத்தையும், படைப்பாளரின் அந்த அறிவையும் எழுத்தாக்க என் அறிவு போதாது என்ற இயலாமையின் வெளிப்பாடு அது.


உலாவுதல் ஒரு உன்னதமான தியானத்தைக் கொடுப்பது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஞானத்திற்கு ஈடு இல்லை. ஜெயமோகனின் புறப்பாட்டை எண்ணிப் பார்க்கையில், அவர் பயணத்தை எழுத்தாக்கவில்லை. இதை எழுதுவதற்காகத்தான் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டாரோ என்று எண்ணத் தோன்றும்.


உலாவுதலில் கிடைக்கும் நிம்மதி வேறெதிலும் எனக்குக் கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் என்னவோ, நான் ஒரு சிறு தூரமேனும் உலாவுவேன். புதிதாய் ஒன்றைப் பார்ப்பேன். அதன் நினைப்பே கிளர்ச்சியூட்டும். இந்த எதிர்பார்ப்போடு புறப்பாடு என்னை மிகக் கவனமாக அந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றது. நாற்பது வருடங்களுக்கு முந்தைய பயணம். ஆனாலும், நான் காணாத பலவற்றை அந்தப் பயணத்தில் கண்டேன்; உணர்ந்தேன். 


ஒரு கட்டத்தில், யார் இந்த மனிதர்? சாமானியர்தானா எல்லாவற்றையும் செய்கிறார் என்று பட்டது. இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில்கூட, ஒரு பொருளின் மீதுகூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக் கொண்டார் போலும்.


புறப்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, "அவர் பிழைப்பிற்காக ஓடினாரா? இலக்கியத்திற்காக ஓடினாரா? என்றே தெரியாது" என அம்மா கூறினார். ஆம், இந்தப் பயணம் அவருக்கு ஒரு படிப்பினை. இந்தப் படிப்பினைகள்தான் படைப்பாளிக்கும் படைப்பிற்கும் அடிப்படையாக இருந்திருக்கலாம். பயணம் எல்லோருக்கும் படிப்பினைதானே.


ஜெயமோகனின் புறப்பாடு புத்தகமானது, இந்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களின் பிம்பமாக - பிரதிபலிப்பாகவே இருப்பதாகப் பார்க்கிறேன். இந்தப் பயணத்தில் அவரோடு சேர்ந்து நானும் அந்த வாழ்வில் பங்கெடுத்தது போல உணர்கிறேன். 


சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும் போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன. சேரியில் அவர் தங்கி இருந்த பொழுது விவரிக்கும் பகுதிகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சேரியில் இரவில் கொசுக்கள் அளவுக்கு அதிகமாக மொய்க்கும். சேரியில் குழந்தைகள் பிறந்து சிறிது காலத்தில் இறந்து விடுவார்கள். அவற்றைக் கூறுகையில், அக்குழந்தை பிறப்பதற்கு ஒரே அர்த்தம்தான். கொசுக்களுக்குச் சில லிட்டர் ரத்தத்தை உற்பத்தி செய்து கொடுத்திருக்கிறது அவ்வளவுதான் என்பார். மழைக் காலங்களில் சாக்கடைகளை அடித்தளமாகக் கொண்ட குடிசைகள், சாக்கடைகள் பெருகி ஓடும்போது கட்டைகளில் பிணங்கள் முட்டி நின்ற சம்பவங்களையும் பதிவு செய்திருப்பார். இந்த வாழ்வெல்லாம்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வு. 


அதேபோல, மும்பையில் அவர் தங்கிய இடங்கள் பற்றிய விவரிப்பும் என்னை வெகுவாகப் பாதித்தது. அங்கெல்லாம் அப்படியான மனிதர்கள் வாழ முடியுமா? வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு,  "இந்த நாடு முழுக்க அவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஒரு போர்வையாக அவர்களை மறைத்து ஒளித்து வைத்திருக்கிறார்கள்" என்று பட்டது. அந்தவகையில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பக்கங்களையும் புறப்பாடு எனக்குக் காண்பித்திருக்கிறது.


காசியில் காளி வேசம் போடும் பெண்ணைப்பற்றிப் படிக்கையில் என் மூளை மரத்துவிட்டதுபோல இருந்தது. பெண் என்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் எந்த வழியிலும் சுரண்டப்படுகிறாள் என்பதைத்தான் காளி வேடப் பெண்ணின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன. 


ஜெயமோகன் ஓர் ஆணாக இருந்ததால் கிளம்பிவிட்டார்; ஓடிவிட்டார். பெண்ணாகிய நான் ஓட நினைத்தால், ஊர் சுற்ற நினைத்தால், உலாவ நினைத்தால் என்னாவது? என்னவெல்லாம் நடக்கும்? என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சமூகம் என்ன மாதிரியான படிப்பினைகள் தந்திருக்கும்? பெண்களை இந்தச் சமூகம் நடத்துவதும், பெண்களுக்கு இந்தச் சமூக மனிதர்களும் ஆண்களும் தருகின்ற மோசமான படிப்பினைகளை நினைக்கும்போதும் எனக்குப் பீதியூட்டுகிறது; பயமாய் இருக்கிறது. அதனாலேயே நான் ஓடிப் போகவும் ஊர் சுற்றவும் நினைத்த எண்ணம் செத்துப் போனது. ஆண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறு; பெண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறுதானே.


ஆனாலும், புறப்பாடு புத்தகமானது அதன் பயணங்களில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணரும் நல்லதோர் பயணமாக, இயல்பான பயணமாக, பரபரப்பான பயணமாக இருந்தது. பயண அனுபவங்களை வாசிப்பின் மூலமாகப் பெறுவதற்கு, புறப்பாடு தந்த ஜெயமோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.


அ.ம.அங்கவை யாழிசை

15.12.2022


புதன், 14 டிசம்பர், 2022

தமிழ் எழுத்து மரபின் பண்பாட்டுப் பின்புலத்தை விவரிக்கும் நூல்: மா.அருணாச்சலம்



அண்மையில், மகாராசன் எழுதிய "தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு'' நூலைப் படித்தேன். நல்ல ஆய்வு நூலாக இருந்தது. நூலின் முதல் பகுதி மொழி, எவ்வாறு உருவானது என்பதைக் குறித்து மிக விரிவாக விளக்குகிறது. "வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவி கொண்டு இவற்றிக்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும்தான் மொழி பிறந்தது. மொழி என்பதற்கு அடுப்படை பேச்சொலி என்றாலும்கூட, எல்லா பேச்சொலிகளும் மொழி என்றாகி வருவதில்லை. முறைப்படுத்தப்படுகிற பேச்சொலிகளே மொழி வரம்பிற்குள் வரமுடிகிறது" என்ற தெளிவான பார்வையை முன்வைகிறார் நூலாசிரியர்.

ஓவியங்கள், குறியீடுகள், ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள் என்பதன் நீட்சியாகவே எழுத்து என்கிற மரபும் ஒரு மொழியின் இயங்குதலுக்கு அடிப்படை என்பதை தொல்லெழுத்தியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியத் தரவுகளைக் கொண்டு மிக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் மகாராசன்.

பிள்ளையார் சுழி என்பதைக் குறித்துப் பண்பாட்டு நோக்கிலும் புதிய கண்ணோட்டத்திலும் மிக ஆழமான விரிவான ஆய்வுத் தரவுகளை இந்நூல் தந்திருக்கிறது.

பாட்டியல் நூல்கள் தமிழ் எழுத்துகளின் மீது பாகுபாடுகளையும் மேல்கீழ் / உயர்வு தாழ்வுப் பேதங்களையும் கொண்ட கற்பிதங்களை எவ்வாறு கட்டமைத்திருக்கின்றன என்பதைக் குறித்து விவரிக்கும் நூலின் பகுதிகள், நான் அறிந்திராத புதுமையான செய்திகளாக இருக்கின்றன.

உலகில் உள்ள எல்லா மொழிகளும் அவற்றின் எழுத்துகளும் கடவுளோடும் சமயத்தோடும் அல்லது ஏதாவது ஓர் அதிகார மட்டத்தோடும் தொடர்புடையவைகளாக இருக்கின்றன. அதாவது, உலகின் மொழிகள் யாவும் ஏதாவது ஒன்றினோடு சார்புத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அதேவேளை, தமிழ் மொழிக்கும் தமிழ் எழுத்து மரபிற்கும் அரசதிகாரம்/சமயம்/சாதி/வர்க்கம்/பாலினம்/வட்டாரம் சார்ந்த எவ்வகைச் சார்புத் தன்மைகளும் கிடையாது என்பதைத் தெளிவுபட நிறுவுகிறார் மகாராசன்.

தமிழ் வரி வடிவங்களை எழுதும் வழக்கம், இடமிருந்து ஆரம்பமாகி வலப்பக்கமாக முடிகிறது.. இது மாதிரியாக எழுதும் வழக்கம் தமிழைத் தவிர வேறு மொழிகளில் உள்ளனவா? தமிழுக்கு முன்னதாக வேறு மொழிகளில் ஏதேனும் உள்ளனவா? இது தமிழ் மொழிக்கு மட்டுமே இயல்பாக அமைந்த ஒன்றா? அப்படி அமைந்திருந்தால் அதற்கான காரணங்கள் எதுவும் உண்டா? என, இந்நூலைப் படித்து முடித்தவுடன் கேள்விகள் எழுகின்றன. அதற்கான தேடலை இந்நூல் ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற தமிழ் ஆய்வு நூல்களை மகாராசன் அவர்களால் தொடர்ந்து எழுதப்படவேண்டும். 

ஆதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல், தமிழர்களின் எழுத்துகளுக்கு ஒரு பண்பாட்டு மரபு இருக்கின்றது என்பதையும், அதன் பின்புலத்தையும் ஆழமாக விவரித்திருக்கிறது.



சனி, 3 டிசம்பர், 2022

வேளாண் தொழில் மரபு குறித்த ஆகச்சிறந்த நூல்: அஜீத கேச கம்பளன்


வேளாண் மரபின் தமிழ் அடையாளம்  :    உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்!

இதன் ஆசிரியர் முனைவர் மகாராசன், சமூக மாற்றத்திற்கான ஏர் எனப்படும் சிற்றிதழை நடத்தி, பரவலான கவனம் பெற்றவர்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள் கொள்ளப்பட்டு இருக்கிறது. அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் எனப் படர்ந்து விரிந்திருக்கிறது…. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும், அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு எனத் தொடக்கத்திலேயே அழகாகச் சொல்லிவிடும் ஆசிரியர், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசு பொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை என்பதால், தானே அதை முன் எடுத்துள்ளார், இந்த நூலின் வாயிலாக! அந்த வகையில் வேளாண் மக்களின் வேட்கையையும் கோரிக்கைகளையும் சிறப்பாகவே கவனப்படுத்தி உள்ளார்.

வேளாண்மை உழவுத் தொழில் பற்றிய முதல் வரைவியல் இலக்கியமாகக் கம்பரின் ஏர் எழுபது நூல் தான் தனித்துவம் வாய்ந்ததாகும் என அதில் உள்ள சிறப்புகளைக் குறிப்பிடுகிறார்.

நெல்லும் உயிரன்றே 

நீரும் உயிரன்றே

மன்னர் தானே மலர் தலை உலகம்

என்ற புற நானூற்றுப் பாடலையும்,

வரப்பு உயர நீர் உயரும்,

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோன் உயரும்

என்ற அவ்வையின் பாடலையும் கூறி, உழவர்க்கு உள்ள முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். 

தமிழ் நிலத்தின் வேளாண் மரபினரைக் குறித்தும், வேளாண் மரபினரின் தொழில் மரபுகள் குறித்தும், இதன் தொழில் நுட்பங்கள், பண்பாட்டு மரபியல் குறித்துப் பள்ளு இலக்கியங்கள் மிக அதிகமாகவே பதிவு செய்துள்ளதையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.

வேளாண் மரபில் ஆசீவகத் தடங்கள் என்ற தலைப்பில் சில அபூர்வச் செய்திகளையும் தருகிறார். மூவேந்தர்கள் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்ட யானை, காளை, திருமரு முதலான சின்னங்கள், அம்மன்னர்களின் ஆசீவக ஈடுபாட்டினை விளக்கும் வரலாற்றுச் சான்றுகள் என்கிறார். வேளாண்மைக்கு உகந்த கண்மாய், குளம், ஏரி போன்ற பெரும்பாலான நீர் ஆதாரப் பகுதிகளில் ஆசீவகத்தின் அய்யனார் வழிபடு தெய்வமாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதைப் போலவே வேளாண் மரபில் பவுத்த அடையாளமாக விளங்குவது பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கு என்கிறார்.

வேளாண் மரபினருக்கும், ஆரியர்களுக்குமான பகையும் முரணும் என்ற தலைப்பில் சுவையான செய்திகளைச் சொல்கிறார். முதன்முதலாக நிலவுடைமைச் சமூக அமைப்பின் தோற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்களே. கால் நடைகள் மேய்ப்பதைக் குலத் தொழிலாய்ச் கொண்டிருந்த பிராமணர்கள் புதிய சமூக அமைப்பில் தங்கள் இருப்பு கேள்விக்கு உள்ளாவதாகக் கோபம் அடைந்தனர்! தங்கள் வேள்விகள், யாகங்கள் போன்ற சடங்குகளில் பல்லாயிரக்கணக்கில் கால் நடைகளை வானோர்க்குப் பலியிட்டு, தாங்களும் உண்டு வந்த பிராமணர்களை வேளாண் குடிகள் தடுத்ததோடு, கால் நடைகளை உழவுத் தொழிலின் நண்பனாக, பங்காளனாக, தெய்வமாகத் தாங்கள் கருதி வணங்குவதால் முரண்பட்டனர். இந்தப் பகை காலப் போக்கில் பிராமணர்களைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வந்ததையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

வேளாண் மரபினரின் பண்பாட்டு அடையாளப் போராட்டங்களை சொல்லும் போது, உழவுத் தொழில் மரபினரின் தேவேந்திர குல வேளாளர் எனும் அடையாளப்படுத்தலானது, வேளாண் தொழில் அடையாளத்தையும் – வேளாண் தொழிலின் பண்பாட்டு அடையாளத்தையுமே உள்ளீடாகக் கொண்டுள்ளது. இது ஆரிய வைதீகத்தில் இருந்து உருவானதில்லை. மருத நிலத்தின் மரபில் இருந்தும், மழைத் தெய்வ வழிபாட்டில் இருந்தும் உருவானது என்கிறார்.

வேளாண்மைத் தொழில் மரபின் நீட்சியாக இருக்கும் உழவுக்குடிகள் யாவரும் வேளாளர்கள் தான்! அவ் வகையில், வரலாற்றிலும், வாழ்வியலிலும், பண்பாட்டு வழக்கங்களிலும் உழவுத் தொழில் மரபினராகப் பல குலத்தினரும் பன்னெடுங்காலமாக அடையளப்பட்டு வருகின்றனர் என்கிறார்.

வேளாண் மரபினரின் நீர் மேலாண்மை குறித்த செய்திகளும் நூலில் நிறைந்துள்ளன! மழைப் பொழிவில் வழிகின்ற வழி நீரையும், மழைப் பொழிவுக்குப் பின்பாகத் தன் போக்கில் செல்லும் ஆற்று நீரையும் பயன்பாடு கருதியும், வேளாண் தொழில் கருதியும் தேக்கி வைத்து, திசை திருப்பி, முறைப்படுத்தி, பயன்படுத்தி வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர். இந்த வகையில் உருவாக்கப்பட்டதே அகழி, இலஞ்சி, ஊருணி, ஏரி, கம்மாய், கலிங்கு, குட்டை,கேணி, தாங்கல், மடை, மறுகால்.. போன்றவை! இப்படியாகப் பலவற்றைக் குறித்தும் அவை உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் அழகாகக் குறிப்பிட்டு உள்ளார்.

நீர் மேளாண்மையின் அங்கமான குடிமராமத்து பற்றியும், அதை அன்றைய தமிழ்ச் சமூகம் எவ்வளவு சிரத்தையுடன் பேணிப் பாதுகாத்தது என்பது குறித்தும் நல்ல தகவல்களைத் தந்துள்ளார். மன்னர் காலங்களில் நீர் நிலைகளின் மேலாண்மை அனைத்தும் கிராமப் பொதுச் சொத்தாகவே இருந்தன! அதில் அக்கால மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளதையும் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் இந்த நூல் வேளாண் தொழில் மரபு குறித்த ஆகச் சிறந்த தகவல்களை தருவதோடு, இன்றைய நமது பின்னடைவுகள் குறித்த புரிதலையும், அதில் இருந்து மீள்வதற்கான உந்துதலையும் தருகிறது.

நூல் விமர்சனம்: அஜீத கேச கம்பளன்

நூல் ஆசிரியர்: ஏர்.மகாராசன்

யாப்பு வெளியீடு,

விலை;ரு250

கொரட்டூர், சென்னை.

பேச; 9080514506.

நன்றி: அறம் இணைய இதழ்.

திங்கள், 31 அக்டோபர், 2022

மீனாட்சி: சொல்லாடலும் பொருள்கோடலும் - மகாராசன்






மீனாட்சி அம்மனைக் குறிக்கும் சொல் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படவில்லை என்கிற குறிப்புரை பற்றிய உரையாடல்கள் அண்மையில், வெளிக் கிளம்பியிருக்கின்றன.

மீனாட்சி எனும் சொல்லாடல் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படாமல் இருக்கலாம். ஆனால், மீனாட்சி எனும் சொல்லாடலும் அதற்கான பொருள்கோடலும் தமிழ் மரபில் பொருள் பொதிந்தே காணப்படுகின்றன.

மீனாட்சி என்பதை மீன் + அட்சி = மீன் போன்ற கண்களை உடையவர் என்பதாகப் பொருள் கொள்வர். இதனையே அம்+கயல்+கண்ணி= அங்கையர்க்கண்ணி என மீன் போன்ற கண்களை உடையவள் எனத் தமிழில் பொருள் கொள்வர். மீன் போன்ற கண்களைக் கொண்ட பெண்ணைக் குறிக்க மீனாட்சி, அங்கையர்க்கண்ணி எனும் சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

அதேவேளை, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் தெய்வப் பெயரையும் மீனாட்சி எனக் குறிக்கும் வழக்கமும் இருக்கிறது. மதுரைத் தெய்வப் பெயராகக் குறிக்கப்படும் மீனாட்சி என்பது மீன் போன்ற கண்களை உடையவள் என்பதாக மட்டும் சுட்டி நிற்கவில்லை. கூடவே, வேறு ஒருவகையிலும் பொருள் கொள்ள வேண்டிய சொல்லாடலாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, மீன் ஆட்சி என்பதன் மரூஉச் சொல்தான் மீனாட்சி. மீன்+ஆட்சி = மீனாட்சி. தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதியின்படி மிகச் சரியான சொல். மீன் ஆட்சி எனில், மீன் கொடி ஆட்சி எனப் பொருள். அரச மரபில் கொடி, குடை, கோல், முரசம் என்பவை ஆட்சி அதிகாரக் குறியீடுகள். 

மீன்கொடி பாண்டியர்களுடையது எனில், பாண்டியரின் மீன் கொடிதான் ஆட்சி செய்திருக்கிறது. கோ எனில் மன்னன், அரசன் எனப்பொருள். மீன் கொடி ஆட்சி செய்த கோ இருந்த இல் மீனாட்சி கோயில் என்றாகி இருக்கிறது. 

ஆகவே, மீனாட்சி என்பதை மீன் அக்சி என்றோ அல்லது வேறு புறம்பான சொல் அல்லது பொருள் என்றோ கருத வேண்டியதில்லை. மீன் கொடி ஆட்சியை இழந்தது போல, மீனாட்சி எனும் பெயர் அடையாளத்தையும் இழந்துவிட வேண்டியதில்லை. 

ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பது போல, ஒரு பொருளுக்குப் பல சொற்களும் தமிழ் மரபில் உண்டு. அதேபோல, மதுரைக் கோயிலில் தெய்வமென உறைந்திருக்கும் மீனாட்சிக்கும் பல பெயர்கள் இருந்திருக்கும். மேலும், ஒன்றைக் குறித்துக் கல்வெட்டுகளில் ஒருவிதமாகவும், இலக்கியங்களில் வேறுவிதமாகவும், மக்களின் அன்றாடப் புழங்கல் மொழியில் வேறுவிதமாகவும் குறிக்கப்படுவதுண்டு. வேறு வேறு காலங்களிலும் வேறுவேறு பெயர்களில் வழங்கப்படுவதுமுண்டு. 

ஆகவே, மீனாட்சி எனும் சொல்லாடலைப் புறக்கணிக்கவோ மறுக்கவோ வேண்டியதில்லை. மீன்கொடி ஆட்சியள் தான் மீனாட்சி எனப் பொருள்கோடல் கொள்வதே நன்றாம்.

*

ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

31.10.202

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

சூரியதீபனின் தமிழ்த்தேசியப் பங்களிப்பு - மகாராசன்




தமிழ்த் தேசியக் கருத்தியலின் உரத்த குரலை முன்னெடுத்த தோழர் சூரியதீபன் எனும் பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவுற்றார். 

*

புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியலையும், பண்பாட்டுப் படைப்புச் செயல்பாட்டையும் தம் எழுத்துகளின் வழியாகவும் பேச்சுகளின் வழியாகவும் தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வழிநடத்தியும் வந்தவர் தோழர் சூரியதீபன்.

2008-09 காலகட்டங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இக்கட்டான சூழலையும், பேரிழப்புகளையும், இனப்படுகொலை நிகழ்வுகளையும் தாயக மண்ணில் எதிர்கொண்டிருந்தபோது, அவ்விடுதலைப் போராட்டம் குறித்தும், போராளிகள் குறித்தும் பல்வேறு வகையில் அவதூறுகளையும் வன்மங்களையும் இங்குள்ளோர் அறிவுசீவிகள் பலரும் - சில இயக்கங்கள் பலவும் மிகத் தீவிரமாகப் பரப்பிக்கொண்டிருந்தனர். தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் மவுனித்திருந்த காலகட்டங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுக் குரலை வலுவாக முன்னெடுத்துச் செயலாற்றியவர் தோழர் பா.செ. அதோடு மட்டுமல்லாமல், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அவதூறுகளையும் வன்மங்களையும் மறுத்தும் எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளையும் நூல் வெளியீடுகளையும் கொண்டுவந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் என்கிற நூல் தொகுப்பு முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தபோது பல்வேறு வகையில் துணை நின்று வழிகாட்டியதோடு, அத்தொகுப்பிற்காகத் தாம் எழுதிய கட்டுரைகள் சிலவற்றையும் வழங்கினார்.

என் மீதும், என் எழுத்துகளின் மீதும், எனது அரசியல் செயல்பாடுகளின் மீதும் அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் கொண்டிருந்த அந்தத் தோழமைமிக்க உறவாடல் எம் எழுத்துச் செயல்பாட்டை வளப்படுத்தி வந்திருக்கிறது.

தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களது மறைவு, தமிழ்த் தேசியச் சக்திகளுக்கும் - ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.

தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவுக்கு வீரவணக்கம்.

ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்

23.10.2022

திங்கள், 26 செப்டம்பர், 2022

திலீபனின் பசி : மகாராசன்


தமிழ் இனத்தின் 
விடுதலைப் பசிக்கு,
தன்னுயிரை
மெல்ல மெல்லத் 
தின்னக்கொடுத்து,
ஈழக் கனவை
நிலத்தில் விதைத்து,
சொட்டு நீரும் அருந்தாமல்
உண்ணா நோன்பிருந்து
உயிர் நீத்து,
அறத்தையும் மறத்தையும்
காண்பித்துப் போன
ஈகத்தின் பெருஞ்சுடர்
திலீபன்.

திலீபனின்
தாயகப் பசிதான்
இன்னும் அடங்கவில்லை.

ஏர் மகாராசன்
26.09.2022


வியாழன், 22 செப்டம்பர், 2022

அறிஞர் தொ.பரமசிவன்:தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரைவியலின் முன்னத்தி ஏர் - மகாராசன்

 


தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்மைகளைத் தமிழியல் ஆய்வுகளாக எடுத்துரைக்கும் போக்கிலிருந்து அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது பேச்சுகளும் எழுத்துகளும் வேறாகவே இருந்தன.


அதாவது, நாட்டுப்புற வழக்காற்றியல் மரபுகளில் பொதிந்திருக்கும் பண்பாட்டு அசைவுகளின் அழகியலையும், அவற்றின் நுண் அரசியலையும், அதனதன் வேர்த் தடங்களையும் எடுத்துரைக்கும் ஆய்வுத் திசைவெளிகளையும் வழிமுறைகளையும் தொ.ப அவர்களின் அறிவுச்செயல்பாடுகள் காண்பித்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்ச் சமூகத்தின் பன்மைப் பண்பாட்டுக் கோலங்களைப் பண்பாட்டியல் தமிழியலாகக் கட்டமைக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியிருக்கின்றன.


தமிழர்களின் நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுகள் நிறுவனப்படுத்தப்பட்டிருக்கும் செவ்வியல் மரபுகளைப் போல அல்லாமல், நாட்டுப்புறத்துத் தமிழர்களைப் போலவே மிக எளிமையானவை; வெள்ளந்தியானவை; பாசாங்கற்றவை. ஆனாலும், செவ்வியல் மரபுகளிலிருந்தும் - வைதீக ஆரிய மரபுகளிலிருந்தும் மிகமிக வேறுபட்டதும் எதிரானதுமான பண்பாட்டு உயிர்ப்பை நாட்டுப்புற மரபுகள் கொண்டிருக்கும் பாங்கை மிக எளிதாகவும் நுணுக்கமாகவும் எடுத்துரைத்ததில் தொ.ப அவர்கள் தனித்துவமான புலப்பாட்டு நெறிகளையே கொண்டிருந்தார்.


தமிழ்ச் செவ்வியல் மரபுகளை வைதீக ஆரிய மரபுகள் மெல்லமெல்ல தன்வயப்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், நாட்டுப்புற மரபுகளில் எஞ்சி நிற்கும் பண்பாட்டு வடிவங்களில் காணலாகும் வைதீக ஆரிய மரபுகளுக்கெதிரான கூறுகளைத் தக்கவைப்பதும் மறுகட்டமைப்பு செய்வதுமான பண்பாட்டு அரசியல் செயல்பாட்டை அறிவுத்தளத்திலும் வெகுமக்கள் தளத்திலும் பரவலாக முன்னெடுக்க வேண்டியதன் தேவையைத் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக்கியவர்களுள் முதன்மையானவர் தொ.ப அவர்கள்தான்.


தமிழியல் ஆய்வுகளிலும், தமிழ்ப் பண்பாட்டியல் ஆய்வுகளிலும் பல அறிஞர் பெருமக்கள் தத்தமது அறிவுச் செயல்பாட்டுப் பங்களிப்பைச் செவ்வனே செய்திருக்கின்றனர். ஆனாலும், அவரவர் ஆய்வுத் தடங்களில் - அறிவுச் செயல்பாட்டுத் தளங்களில் அடுத்தடுத்த இளம் தலைமுறையினரைப் பங்கேற்க வைத்ததில் நிறைய போதாமைகள் இருந்திருக்கின்றன. அதேவேளையில், பண்பாட்டுத் தமிழியலின் அறிவுச் செயல்பாட்டுத் தளத்திற்குள் மிகப்பெருவாரியான இளம் தலைமுறையினரை அடுத்தடுத்துப் பங்கேற்கச் செய்ததிலும், அவர்களுக்கெல்லாம் மிக ஈடுபாட்டோடு வழிகாட்டி ஊக்கப்படுத்தியதிலும் தொ.ப அவர்களின் பங்களிப்பு மிக அதிகப்படியாகவே இருந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டியல் ஆய்வுகளை மிகப் பலரும் இப்போது முன்னெடுத்துக்கொண்டிருப்பதற்கான உந்துதலைத் தொ.ப அவர்களிடமிருந்தே பெற்றிருக்கக் கூடும். அந்தளவுக்கு இளம் தலைமுறையினரோடு பண்பாட்டு உரையாடல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கிறார் தொ.ப.


திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாடுகளோடும், பெரியார் அவர்களின் கருத்தியல் செயல்பாடுகளோடும் தொ.ப அவர்கள் பற்றுதலோடு பயணித்து வந்திருந்தாலும், அதன் அரசியலை ஆதரித்து வந்திருந்தாலும், திராவிட இயக்கங்களின் அரசியல் கண்ணோட்டத்திலிருந்தும் - பெரியாரியக் கண்ணோட்டத்திலிருந்தும் வேறுபட்டதான - முரண்பட்டதான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தவர்தான் தொ.ப.


தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை - பன்மைப் பண்பாட்டுக் கோலங்களுக்குள் நிலவுகிற சமூக அசைவியக்கங்களைச் செவ்வியல் மரபுக் கண்ணோட்டத்திலிருந்தும் வைதீக ஆரிய மரபுக் கண்ணோட்டத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் அதேவேளையில், திராவிட இயக்கங்களின் - பெரியாரியக் கண்ணோட்டங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டியதிலும், தமிழர்களின் பண்பாட்டு அசைவியக்கங்கள் குறித்த திராவிட இயக்கங்களின் - பெரியாரியத்தின் கண்ணோட்டப் போதாமைகளையும் தொ.ப அவர்கள் எடுத்துரைக்கவும் தவறவில்லை.


வைதீக ஆரிய மரபுகளின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிராகவும், தமிழர்களின் பண்பாட்டு மரபுகளைத் தன்வயப்படுத்திச் சிதைக்கும் வைதீக ஆரிய மரபுகளுக்கு எதிராகவுமான தமிழ்ச் சமூக அரசியல் செயல்பாட்டுக் களங்களுள் திராவிட இயக்கங்களையும் - பெரியாரியச் செயல்பாட்டுக் களங்களையும் பெரும் நம்பிக்கையுடன் அணுகி வந்திருக்கும் தொ.ப அவர்களின் அறிவுச் செயல்பாடுகள், திராவிட இயக்கங்களின் - பெரியாரியத்தின் அறிவுச் செயல்பாடுகளையும் அரசியல் செயல்பாடுகளையும் விமர்சிக்கத் தவறியதுமில்லை. திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட வேண்டும் என்று தொ.ப அவர்கள் கூறுவது கூட, திராவிட இயக்கங்கள் அரசியலாய் நீர்த்துப்போயிருப்பதனால்தான். 


அதேவேளையில், தமிழ்ச் சமூகத்தில் வலுப்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் செயல்பாடுகளையும், தமிழ்த் தேசியத்திற்கான அறிவுச்செயல்பாடுகளையும் மிகத் தீவிரமாக ஆதரித்தே வந்திருக்கிறார். தமிழ்த் தேசிய அறிவுச் செயல்பாட்டுக்கான பல்வேறு வழிகாட்டல்களையும் அளித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார். அதாவது, தமது பண்பாட்டியல் ஆய்வுகளின் மூலமும், பண்பாட்டு உரையாடல்களின் மூலமும் தமிழ்த் தேசியப் பண்பாட்டியல் வரைவுக்கான அறிவுச்செயல்பாட்டுப் பங்களிப்பைத் தந்தபடியேதான் இருந்திருக்கிறார். 


அறிஞர் தொ.ப அவர்களோடு நிகழ்ந்த உரையாடல்கள் யாவும், அறிவுச் செயல்பாட்டுத் தளத்திற்கான - பண்பாட்டு அரசியலுக்கான மிக எளிதான நுண்திறப்புகளைக் கொண்டிருக்கக் கூடியவை. அந்தவகையில், அன்புத்தோழரும் ஊடகவியலாளருமான தயாளன் அவர்கள், அறிஞர் தொ.ப அவர்களுடன் நிகழ்த்தியிருக்கும் ஓர் உரையாடல் சந்திப்பை நேர்காணல் வடிவத்தில் நூலாக்கம் செய்திருக்கிறார்.


தொ.ப அவர்களின் இறுதிக் காலப்பகுதியில் அவரோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த உரையாடல்கள், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அரசியலையே மிக அழுத்தமாக வலியுறுத்துகின்றன. குறிப்பாக, வைதீக ஆரிய மரபுகளுக்கு எதிரான குரலையே உரக்கப் பேசுகின்றன. அதோடு, சாதியற்ற தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டும்; உருவாகும் என்கிற வேட்கையையும் வெளிப்படுத்தியிருக்கின்றன. 


தமிழ்ப் பண்பாட்டு வரைவியலின் முன்னத்தி ஏரான அறிஞர் தொ.ப அவர்களோடு நிகழ்த்திய இவ்வுரையாடல்களை நூலாகக் கொண்டுவருகிற தோழர் தயாளன் அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. இந்நூலைப் பதிப்பித்துச் சிறப்பித்திருக்கும் யாப்பு வெளியீடு செந்தில் வரதவேல் அவர்களுக்குப் பாராட்டுகள்.


தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கு இச்சிறு நூலும் உதவும் என்றே பெரிதும் நம்புகிறேன். 


தோழமையுடன்

முனைவர் ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

*

சாதியற்ற சமூகம் 

உருவாகுமென நம்புகிறேன்: அறிஞர் தொ.பரமசிவன் நேர்காணல்,

தயாளன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு, செப்தம்பர் 2022,

விலை: உரூ 50/-

நூல் வேண்டுவோர் 

தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்

90805 14506.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

கையறுநதி: மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்பு நூல் - மகாராசன்

கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் சமூகப் பண்பாட்டு வரைவியல் உருவாக்கத்தில் தனித்துவப் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் ஆய்வறிஞர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் கையறு நதி எனும் இந்த வரைவுப் பிரதியோடு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் செம்மையாக்கப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோதுதான், அந்தப் பிரதி என்னையே கொஞ்சம் கொஞ்சமாய்ச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்ததை மெல்ல உணர்ந்தேன்.

நண்பர்களின் நூல் உருவாக்கத்திலும் செம்மையாக்கத்திலும் எம்மால் இயன்ற உதவிகளையும் வழிகாட்டல்களையும் செய்திருந்தாலும், கையறு நதியில் பயணிக்க நான் கொஞ்சம் மெனக்கெடுக்க வேண்டியிருந்தது. போகிற போக்கிலோ அல்லது அவ்வளவு எளிதாகவோ கடந்துபோகிற புனைவு நூலோ, வரலாற்று நூலோ, ஆய்வு நூலோ இதுவல்ல. 

இந்த உலகில் வாழும் பலதரப்பட்ட மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல்களுள் கையறு நதியான இந்த நூல் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஆகும். 

மனப்பிறழ்வு என்பதாகக் கருதப்பட்டு, குடும்பத்தாராலும் பொது சமூகத்தாலும், கல்வி நிறுவனங்களாலும் ஒதுக்கலுக்கு உள்ளான ஓர் இளம்பெண்ணைச் சூழ்ந்திருக்கும் இவ்வுலகத்தையும், அதனை அப்பெண் அணுகும் விதங்களையும், அப்பெண்ணுக்குத் தகப்பனாய் வாய்த்திருக்கும் ஓர் ஆண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், தமது மகளுக்கும், மகளைப் போல பிற மனிதர்களுக்கும் நேர்ந்திருக்கும் உடலியல் சார்ந்தும் உளவியல் சார்ந்துமான இடர்ப்பாடுகள் நிரம்பி வழியும் உலகைக் காணும் விதங்களும் தமிழ்ப் புனைவுகளிலோ அல்லது தன்வரலாற்று நூல்களிலோ விரிவாகவோ ஆழமாகவோ புலப்படுத்தப்படவில்லை. 

கையறு நதி எனும் இந்த நூல்தான், புனைவின் வழியாகத் தன்வரலாற்றைப்  பேசுவது அல்லது தன்வரலாற்றைப் பேசுவதுபோல புனைவெழுத்தாக்கித் தருவது எனும் எழுத்துப் பாணியில் மகளுக்கும் அப்பாவுக்குமான உணர்வுப்பூர்வமான உறவையும், உயிர்ப்பான நேயத்தையும் உளவியல்பூர்வமான பரிமாணங்களையும் சக மனிதர்களுக்கு எழுத்து வழியாகப் பகிர்ந்திருக்கிறது. 

வாசிப்பின் வழியாகப் புதிய புதிய மனிதர்களையும், புதிய புதிய அனுபவங்களையும் இந்நூல் நிறையவே அடையாளம் காட்டியிருக்கின்றது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மன உலகம் இருக்கின்றது. ஒவ்வொருவர் பார்வையிலும் மற்றவர்கள் உலகம் ஏதோ குறைபாடு உடையதாகவே தான் கருதப்படுகின்றது. எல்லா மனிதர்ளும் ஏதோ ஒருவகையில் மனக்குறைபாடு உடையவர்களாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

மனக் குறைபாடு பெரிதல்ல; அப்படியான மனிதர்களோடு சக மனிதர்கள் காட்டும்அன்பும் பரிவும் இரக்கமும்தான் மிக அடிப்படைத் தேவை.

மனிதர்களைப் புரிந்துகொள்ள முனைவதும், புரிந்துகொள்வதில் போதாமைகள் இருப்பதுமான மன உலகைப்பற்றிய உணர்வுத் துளிகள் கையறு நதியில் நிரம்பி வழிந்திருக்கிறது.

பிள்ளைகளைப் பெற்றிருக்கும் தாய்களுக்கும் தகப்பன்களுக்கும், பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் இரண்டாவது பெற்றோர்களான ஆசிரியர்களுக்கும் இந்தப் புத்தகம் மிக முக்கியமான உளவியல் வழிகாட்டி நூலாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது. 

இளம் தலைமுறையினருக்கு உளவியல் ஆற்றுப்படுத்தவும், இளம் தலைமுறையினரின் மனக்கோலங்கள் மட்டுமல்ல, பெற்றோர்களாக - ஆசிரியர்களாக இருக்கும் அத்தனைப் பேரின் மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் இந்நூல்  வழிகாட்டியிருக்கிறது. அந்தவகையில், கல்வித்துறையினர் கவனிக்க வேண்டிய நூல்களுள் இந்நூலும் ஒன்றாகும்.

கையறு நதியில் பயணிக்கச் செய்து, செம்மைப்படுத்தும் வாய்ப்பை நல்கியற்கும், இந்நூலைச் சமூகத் தேவை கருதி ஆக்கித்தந்தமைக்கும் வறீதையா கான்ஸ்தந்தின் அய்யா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும். 

ஏர் மகாராசன்

மக்கள் தமிழ் ஆய்வரண்.

30.08.2022.

*

கையறுநதி, வறீதையா_கான்ஸ்தந்தின், கடல்வெளி பதிப்பகம்,  ரூ 220/- தொடர்புக்கு: 9442242629.

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

மார்க்சிய இயங்கியலும், மனிதகுல விடுதலைக்கான ஸ்டாலினின் பங்களிப்பும்: மகாராசன்


மனித சமூக அமைப்பானது அது தோன்றிய காலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது. மேலும், ஒவ்வொரு காலகட்டத்திற்குத் தகுந்தாற்போன்ற உற்பத்தி முறைகளையும் - அவற்றுக்கான உற்பத்தி உறவுகளையும் அது கட்டமைத்துக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சமூகக் கட்டமைப்புகளுக்கு உடன்பட்டும் ஒத்திசைந்தும், மறுத்தும் மாறுபட்டதுமான சிந்தனைப்போக்குகள் வெவ்வேறு தன்மைகளிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சிந்தனைப் போக்குகளின் ஊடாகவே இயற்கை -மனிதர் - சமூகம் குறித்த உலகக் கண்ணோட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இயற்கை-மனிதர்-சமூகம் குறித்த அந்தந்தக் காலத்திய உலகக் கண்ணோட்டச் சிந்தனைகளே அந்தந்தக் காலத்தியத் தத்துவங்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான தத்துவங்களைச் சமூக அறிவியல் அடிப்படையில் பொருள்முதல்வாதம் எனவும் கருத்துமுதல்வாதம் எனவும் வகைப்படுத்துவர். 

பொதுவாக, தத்துவங்கள் யாவும் உலகைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை அதனதன் நிலைப்பாட்டிலிருந்து விளக்கி நிற்கின்றன. சுருக்கமாகச் சொல்வதெனில், உலகில் தோன்றிய அனைத்துவகைத் தத்துவங்களும் உலகைப் பற்றிய - அதாவது, இயற்கை-மனிதர்-சமூகம் குறித்த விவரிப்புகளாகவும் விளக்கங்களாகவுமே அமைந்திருக்கின்றனவே ஒழிய, அவற்றை மாற்றியமைப்பதற்கான வழிகாட்டுதல்களை எந்தத் தத்துவங்களும் முன்வைக்கவில்லை. 

இந்நிலையில், கருத்து முதல்வாதத் தத்துவங்களிலிருந்தும் மற்ற பொருள்முதல்வாதத் தத்துவங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்பது மார்க்சியத் தத்துவம்தான்.

மார்க்சியத்தின் அடிப்படை, பொருள் முதல்வாதம்தான். எனினும், இதுவரையிலான பொருள்முதல்வாதத் தத்துவங் களில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, வளர்ச்சியடைந்த சமூக அறிவியலாக இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவமாக மார்க்சியம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உலகைப் புரிந்து கொள்வதற்கும்-அதை மாற்றியமைப்பதற்கும் வழி காட்டும் தத்துவமாக இருந்துகொண்டிருப்பது மார்க்சியத் தத்துவம் மட்டும்தான்.

மார்க்சியமானது மற்ற தத்துவங்களைப்போல வறட்டுக் கோட்பாட்டைக் கொண்டதல்ல; அது வளரும் அறிவியல். உலகில் புதிய நிலைமைகள் தோன்றும்போது அதைப் புரிந்து கொள்ளவும், புரட்சிகரமானதாக மாற்றியமைக்கவும் மார்க்சியம் வழிகாட்டுவதோடு அதுவும் வளர்ச்சியடைகின்றது. இதுதான் மார்க்சியத் தத்துவத்தின் இயங்கியல். அதாவது, காரல் மார்க்சு-ஏங்கெல்சு ஆகியோர் முன்மொழிந்த இயங்கியல் பொருள் முதல்வாதத் தத்துவம்தான் முழுமையான சமூக அறிவியல் கோட்பாடாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. 

சமூக வரலாற்றை முதன் முதலாக உற்பத்தி உறவுடன் தொடர்புபடுத்திச் சொன்னவர்கள் மார்க்சு ஏங்கெல்சு ஆவர். பின்தங்கிய - பிற்போக்கான அல்லது ஆளும் உடைமை வர்க்கத்திற்குச் சாதகமான உற்பத்தி உறவுகளைத் துடைத்தெறிந்து, முன்னேறிய அல்லது உழைக்கும் வர்க்கத்திற்குச் சார்பான உற்பத்தி உறவுகளையும், அதற்கு ஒத்திசைந்த சமூக அமைப்பு, அவற்றுக்கான தத்துவம், கட்சி, செயன்மை போன்றவற்றின் தேவைகளையும் அறிவியல் அடிப்படையிலான கோட்பாடாக உருவாக்கி வலியுறுத்தி வழிகாட்டியவர்கள் மார்க்சு-ஏங்கெல்சு ஆவர். இவர்கள் முன்வைத்த கோட்பாடுதான் புரட்சிக்கு வழிகாட்டும் தத்துவமாக அமைந்திருந்தது / அமைந்திருக்கின்றது.

உலகில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த ஒரு புதிய நிலைமை தோன்றியபோது, அதை மார்க்சிய அடிப்படையில் விளக்கிப் புரட்சிக்கு வழிகாட்டியதோடு நிகழ்த்தியும் காட்டியவர் லெனின் ஆவார். இரசியாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவி, அக்கட்சியின் மூலமாக மக்களை ஒன்றுதிரட்டிப் புரட்சியை ஏற்படுத்தியவர் லெனின். லெனினால் உருவாக்கப்பட்ட இரசிய சோசலிசப் புரட்சிதான் உலகின் பின்தங்கிய நாடுகளிலும் புரட்சியை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது / கொடுக்கின்றது. இங்கு மார்க்சியமானது மார்க்சிய லெனினியமாக வளர்ச்சியடைந்திருக்கின்றது.

மாபெரும் மக்கள் புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட இரசிய சோசலிசத்தை லெனினுக்குப்பின்பு பேணிப் பாதுகாத்தவர் 

ஜே.வி.ஸ்டாலின் ஆவார். லெனின் உருவாக்கிய இரசிய சோசலிசத்திற்கு எதிராக இருந்த ஏகாதிபத்தியவாதிகள், கட்சிக்குள்ளேயே இருந்த துரோகிகள், முதலாளித்துவ முகவர்களின் பலவகைப்பட்ட சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி அவற்றையெல்லாம் முறியடித்து இரசிய சோசலிசத்தையும் மார்க்சிய லெனினியத்தையும் பாதுகாக்கும் அரணாகவும், அவற்றுக்குச் செயன்மை வடிவமும் கொடுத்தவர் ஸ்டாலின்தான்.

1960களிலிருந்து உலகில் சோசலிச நாடுகளில் முதலாளித்துவ நீட்சியும் அதற்கெதிரான போராட்டங்களும் தொடங்கியிருக்கின்றன. இரசியாவில் மார்க்சியத் திரிபுவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவந்து சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழித்திருந்தார்கள். இத்தகைய நிலைமைகளை மார்க்சிய லெனினிய அடிப்படையில் புரிந்து விளக்கிப் புரட்சிக்கு வழிகாட்டியவர் மாவோ ஆவார். சோசலிச சமூக அமைப்பில் இருந்து கம்யூனிச சமூக அமைப் பிற்குச் செல்வதற்கான புரட்சிகரத் திசைவழியைச் சீனப் புரட்சியின் மூலம் ஏற்படுத்திக் காட்டியவர் மாவோ. 

அதாவது, சோசலிச நாடுகளில் முதலாளித்துவப் பாதையாளர்களுக்கு எதிராகவும், முதலாளித்துவ மீட்சிக்கு எதிராகவும் பாட்டாளி வர்க்கத்தைத் தயார்படுத்துவதாக மாவோவின் புரட்சிகர நடவடிக்கைகளும் சிந்தனைகளும் அமைந்திருந்தன/அமைந்திருக்கின்றன. பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு மாவோவியம் வழிகாட்டுகின்றது. இங்கு, மார்க்சிய லெனினியமானது மார்க்சிய லெனினிய மாவோவியமாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. 

ஆக, மார்க்சு-ஏங்கெல்சு முன்வைத்ததை மட்டுமே மார்க்சியம் என்பதாகப் பொத்தாம் பொதுவாக வரையறுத்திட முடியாது. மார்க்சிய லெனினிய மாவோவியத்தின் மொத்தத் தொகுப்பையே மார்க்சியம் என வரையறுப்பதுதான் சமூக அறிவியல் கோட்பாட்டைச் சரியான முறையில் புரிந்துகொண்டதற்கான / புரிந்துகொள்வதற்கான பொருளாகும். 

மார்க்சு, ஏங்கெல்சு, லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் ஒட்டுமொத்தச் சிந்தனைத் தொகுப்பே மார்க்சியத் தத்துவத்தின் முழுமையாகும். மார்க்சிய லெனினிய மாவோவியத்தின் கூட்டுத்தொகுப்பே உலகின் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் தத்துவமாக அமைந்திருக்கின்றது. ஆனால், மார்க்சியம் குறித்து எழுதவும் பேசவும் கூடிய அறிவுஜீவிகள், மார்க்சியம் என்பதின் எல்லையை மார்க்சு-ஏங்கெல்சு முன்மொழிந்தவற்றை மட்டும் வரையறுப்பதோடு நின்று கொள்கிறார்கள். மார்க்சு, ஏங்கெல்சு ஆகியோரின் புரட்சிகரச் சிந்தனைகளோடு லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் புரட்சிகரச் சிந்தனைகள் மார்க்சிய வளர்ச்சி நிலையாய் அமைந்திருப்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள்; பார்க்க மறுக்கிறார்கள். அதேவேளையில், மரபு மார்க்சியம், நவமார்க்சியம், பண்பாட்டு மார்க்சியம் என்றெல்லாம் மார்க்சியத்தை வகைப்படுத்துகின்ற பேரில் மார்க்சியத்திற்கு மாறான திரிபுவாதங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காவுட்ஸ்கி, ட்ராட்ஸ்கி, அல்தூசர், அந்தோணியா கிராம்சி, ப்ராங்பர்ட்மார்க்சியர், ஹெபர் மார்க்சு... போன்றவர்கள் முன்வைத்துள்ள சிந்தனைகளையே மார்க்சியம் என அறிவுஜீவிகள் பலர் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் லெனின், ஸ்டாலின், மாவோ சிந்தனைகளை மார்க்சியம் என ஒத்துக்கொள்ள மறுப்பதோடு, அவர்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளையே முன்வைத்துள்ளனர் / முன்வைக்கின்றனர். லெனின், ஸ்டாலின், மாவோ குறித்த மார்க்சியத் திரிபுவாதிகளின் மதிப்பீடுகள் யாவும் அவர்களைக் கொடூரமானவர்களாகவும் சர்வதிகாரிகளாகவுமே காட்டுகின்றன. 

உழைக்கும் பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தின் பக்கம் நின்றவர்களை வெறுமனே சர்வதிகாரிகள் என முத்திரை குத்திக் கொச்சைப்படுத்துவதோடு, அவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பிவிடுவது முதலாளிய வர்க்கத்தின் சிந்தனை முறை. இச்சிந்தனைமுறை மார்க்சியத்தின் பேரால் இயங்கிக் கொண்டிருக்கும் சில பல அறிவுஜீவிகளிடமும் இருந்து கொண்டுதானிருக்கிறது. இத்தகைய அறிவுஜீவிகள் மார்க்சியத்தின் பக்கம் நிற்கிறோம் என்கிறபேரில் உழைக்கும் பாட்டாளி வர்க்க நலனுக்கு எதிராக இருந்துகொண்டிருக்கிறார்கள்; மார்க்சியத்தின் அடிப்படையே தெரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க நலனில் அக்கறை கொண்டு பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தோடு சோசலிசப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்கள் லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோராவர். இவர்கள் மார்க்சியத்தின் பக்கம் நின்றார்கள்; பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்றார்கள்; புரட்சியின் பக்கம் நின்றார்கள். இதன் காரணமாகவே, ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், உடைமை வர்க்க முதலாளியச் சிந்தனை முகவர்கள், மார்க்சியத் திரிபுவாதிகள், மார்க்சிய இயக்கத் துரோகிகள் போன்றோர் லெனின், ஸ்டாலின், மாவோ பற்றிய தவறான மதிப்பீடுகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக, ஸ்டாலின் மீதான அவதூறுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுப் பரப்பப் பட்டன. ஸ்டாலின் மீதான அவதூறுகள் யாவும் மார்க்சியத் திரிபுவாதிகளால்-மார்க்சிய எதிராளிகளால் உருவாக்கப்பட்டவை. உண்மையில், ஸ்டாலின் மார்க்சியத்தின் பக்கமே நின்றிருக்கிறார். அதாவது, ஸ்டாலினின் புரட்சிகர நடவடிக்கைகளும் சிந்தனைகளும் மார்க்சியத்திற்கும் சோசலிச சமூக அமைப்பிற்கும் பெரும் பங்களிப்பாக அமைந்திருந்தன என்பதைப் புரட்சிகர வரலாறு பதிவு செய்திருக்கிறது.

புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் லெனின் உருவாக்கிய சோசலிச இரசியாவைப் பேணிப் பாதுகாத்ததோடு, பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டியவர் ஸ்டாலின். மேலும், சோவியத் இரசியாவில் உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான விவசாயக் கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர் ஸ்டாலின்தான். 

அதாவது, விவசாயிகளுக்கு நிலங்களைப் பகிர்ந்தளித்து-அவர்களைக் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடச்செய்து-அவ்வுற்பத்திப் பொருட்களை அவ்விவசாயிகளே சந்தைப்படுத்தி விற்பனை செய்வதில் பெறக்கூடிய இலாபத்தை உழைப்புக்கேற்ற ஊதியமாகப் பங்கீடு செய்துகொள்ளச் செய்து, மீதமுள்ள இலாபத்தைச் சமூகத்தின் மற்ற பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்வதுமான வழிமுறைகளால், விவசாயிகள் தற்சார்புடன் திகழ்வதற்கான கூட்டுப் பண்ணை உற்பத்தி முறையை சோவியத் இரசிய நாடெங்கிலும் அறிமுகப்படுத்திச் செயன்மைப்படுத்தி வெற்றியும் கண்டவர் ஸ்டாலின். 

மேலும், வேலைக்கு உத்திரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தறிவின்மை முழுநீக்கம் போன்ற பயன்களுடன் கூடிய உலகின் முதல் சோசலிச அமைப்பு சோவியத் இரசியாவில் ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உலக பாசிச பயங்கரவாதியான இட்லரை எதிர்த்த போராட்டத்தைத் தீரமுடன் வழிநடத்தி வெற்றி கண்டவர் ஸ்டாலின். இவருடைய பெருமுயற்சியாலும் வழிகாட்டுதலாலும்தான் கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் அனைத்தும் விடுதலை பெறுவதோடு சோசலிச நாடுகளாகவும் மாற்றம் பெறுகின்றன. மேலும், முதலாளித்துவச் சீர்கேடுகளால் சோசலிச நாடுகள் சீர்குலைவதைத் தவிர்க்கும் வகையில் சோசலிச நாடுகளோடு முதலாளித்துவ நாடுகள் அண்டுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஸ்டாலின்தான். 

மேலும், சீனா, கியூபா, பொலிவியா, வியட்நாம், கொரியா, கம்போடியா போன்ற நாடுகள் விடுதலை பெறுவதற்கான புரட்சிகரப் போராட்டங்கள் அனைத்திற்கும் பேருதவி புரிந்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியவாதிகள்-அனைத்துப் பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து புரட்சிகர வரலாற்றின் முன்னணியில் நின்றவர் ஸ்டாலின்தான்.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத் தன்மைகொண்ட வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு சோவியத் அரசுக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலைமை தாங்கியவர் ஸ்டாலின். உலகம் முழுவதும் மனிதர் இருக்குமிடத்திற்கெல்லாம் மார்க்சியம் போய்ச் சேரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் புரட்சிகரத் தத்துவ நூல்கள், புரட்சிகர இலக்கியங்கள், சோசலிச சமூக அமைப்பு குறித்த நூல்கள், மார்க்சிய அடிப்படையிலான வரலாற்று நூல்கள், மார்க்சியக் கல்வி தொடர்பான அனைத்தும் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாஸ்கோ முன்னேற்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது ஸ்டாலின் காலத்தில்தான்.

ஸ்டாலின் குறித்தும், அவரது புரட்சிகர நடவடிக்கைகள் குறித்தும் இன்னும் அதிகமாகப் பட்டியலிட முடியும். ஸ்டாலினைப் புனித புருசராகவோ அல்லது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவோ அல்லது உயர்வகை அவதாரமாகவோ காட்டுவதற்காக மேற்குறித்த தரவுகளை முன்வைக்கவில்லை; முன்வைக்கவும் கூடாது. எல்லா மனிதர்களும் - எல்லா வகைத் தத்துவங்களும் -எல்லா வகையான நடவடிக்கைகளும் விமர்சனத்திற்கும் சுய விமர்சனத்திற்கும் உட்பட்டவைதான். மார்க்சியத் தத்துவம் உட்பட எதையும் புனிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை; அப்படிப் புனிதப்படுத்தவும் கூடாது. அதேபோல, ஸ்டாலின் உட்பட யாராக இருப்பினும் விமர்சனத்திற்கும் சுய விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தான் ஆகவேண்டும். ஸ்டாலின் ஒன்றும் விதிவிலக்கானவரல்ல. 

அதேவேளையில், எதைப்பற்றிய விமர்சனமாக இருந்தாலும் - யாரைப்பற்றிய விமர்சனமாக இருந்தாலும் அது நேர்மையான-சரியான ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தாக வேண்டும். ஆனால், ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் யாவும் அவதூறு களையும் பழி சுமத்தல்களையுமே கொண்டிருந்தன. இதே வேளையில், ஸ்டாலின் குறித்து ஆக்கப்பூர்வமான முறையில் விமர்சனம் செய்தவர் மாவோதான்.

மார்க்சியம் குறித்தும் சோசலிசம் குறித்தும் எதிர்மறையான விமர்சனங்கள் உலகநாடுகளிடம் பரவிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு மாவோ கையாண்ட விமர்சனம் சரியான முறையில் அமைந்திருந்தது. ஸ்டாலின் முன்வைத்த அல்லது மேற்கொண்ட நடவடிக்கைகளில் சரியின் பக்கம் நின்றுகொண்டு அவற்றின் தவறுகளை நேர்மையோடு விமர்சித்தவர் மாவோ. அந்தவகையில், மாவோ முன்வைத்த “மாபெரும் விவாதாம்,” “இரசியப் பொருளாதாரம் பற்றிய விமர்சனம்” ஆகிய இரு விமர்சன நூல்களும் மார்க்சியத்தையும் ஸ்டாலின் முன்வைத்தவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்வதற்கு வழிகாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கவையாகும்.

இரசிய சோசலிச சமூகத்தில் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிறைகுறைகள் இருந்தாலும், அவரின் நடவடிக்கைகள் யாவும் பாட்டாளி வர்க்க நலனை நோக்கப் படுத்தியே அமைந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஸ்டாலின் பங்களிப்பானது புரட்சிகர நடவடிக்கைகளோடு மட்டும் தொடர்புடையனவாக அமைந்திருக்கவில்லை. மார்க்சிய வளர்ச்சி நிலைக்கு ஸ்டாலினின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்டாலின் தொகுத்த “இரசிய போல்சுவிக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு” மற்றும் “லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள்” போன்ற நூல்கள் மாபெரும் மதிப்பு மிக்கவையாகத் திகழ்கின்றன.

மனித சமூக அமைப்பில் மொழியின் இயங்குதல் பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை அளிக்கும் வகையில் ஸ்டாலின் எழுதிய “மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்” என்ற நூல் மிகமிகக் குறிப்பான நூலாகும். 

மொழி என்பதை வெறுமனே வரிவடிவத்தோடும் மாற்றத்தோடும் மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் மொழியியல் ஆய்வாகவும் அணுகுமுறையாகவும் வழமைப்படுத்தி வைத்திருக்கின்றனர் பெரும்பாலோர். ஆனால். ஸ்டாலினின் மேற்குறித்த நூலானது மொழியின் உள்ளடக்கம் குறித்தும், அதன் மாறுதல்கள் குறித்தும் வரலாற்றுப் பொருள் முதல்வாத இயங்கியல் அடிப்படையில் விளக்குவதாக அமைந்திருப்பதோடு, மொழி என்பதின் இயங்கியல் தன்மையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்குப் பேருதவி புரிவதாக அமைந்திருக்கின்றது.

“மார்க்சியமும் மொழியியல் பிரச்சனைகளும்” என்ற நூலைப் போலவே, “மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற நூலானது மார்க்சியத்தைச் செழுமைப்படுத்துவதாகவும், மனித குல விடுதலைக்குரிய மாபெரும் பங்களிப்பாகவும் அமைந்திருக்கின்றது. உலகில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் பொதுப்பிரச்சினைகள் குறித்தும், அத்தேசிய இனங்களின் விடுதலை குறித்தும் மார்க்சிய அடிப்படையில் விளக்குவதாக - தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் திசை வழிகளைக் காட்டுவதாக அந்நூல் விளங்குகின்றது. 

ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்கள் உயர்த்திப் பிடிக்கவேண்டிய நூலாகவும் இந்நூல் அமைந்திருக்கின்றது. அதாவது, உலகில் உள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான விடுதலைக்கும் வழிகாட்டும் கோட்பாடாக அமைந்திருப்பதும் இந்நூல்தான். ஸ்டாலின் எழுதிய “மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்”, “மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற இரு நூல்களுமே மார்க்சியக் கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதோடு, மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுத்துச் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அந்தவகையில், ஸ்டாலினின் பங்களிப்பானது மார்க்சியத் தத்துவத்திற்குக் கூடுதல் பரிமாணத்தைத் தந்திருக்கிறது எனலாம்.

பாட்டாளி வர்க்க விடுதலைக்காக மட்டுமல்ல; எல்லா மனிதரின் விடுதலைக்காக; எல்லா மனிதரின் சமத்துவத்திற்காக; எல்லா தேசிய இனங்களின் விடுதலைக்காகவே மார்க்சியம் வழிகாட்டும் தத்துவமாக இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேசிய இனமும் விடுதலை பெறுவதும், அவ்விடுதலைக்காகப் போராடுவதும் அந்தந்த தேசிய இனத்தின் அடிப்படை உரிமை. இதைத்தான் மார்க்சியம் முன்வைக்கின்றது. 

ஆனால், மார்க்சிய அடிப்படையிலான சோசலிசப் புரட்சி நடைபெற்ற இரசியா, சீனா போன்ற நாடுகளும், சோசலிச நாடுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற கியூபா, பொலிவியா போன்ற நாடுகளும் மார்க்சியத்திற்கு எதிரான நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் தற்போது வெளிப்படுத்தி வருகின்றன. அந்நாடுகள் மார்க்சியத்திற்கு விரோதமான ஏகாதிபத்திய நாடுகளாகவும் முதலாளித்துவ நாடுகளாகவும் சீரழிந்துவிட்டன. அதனால்தான் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதைத்தான் அந்நாடுகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. உலகில் நடைபெறும் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை அந்நாடுகள் எடுத்திருப்பதின் மூலம் தங்களின் உண்மையான ஏகாதிபத்திய முதலாளித்துவ அடையாளத்தை வெளிப்படுத்திவிட்டன என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

மார்க்சிய வழிகாட்டுதலின்படியோ அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவதின் வழியாகவோ ஒவ்வொரு தேசிய இனமும் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதைத்தான் மார்க்சியம் முன்வைக்கின்றது. இது குறித்து லெனின் கூறும் போது “எவரொருவர் தேசிய இனங்கள், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காகப் போராடவில்லையோ; எல்லா தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையையும் சமத்துவமின்மையும் எதிர்த்துப் போராடவில்லையோ அவர் ஒரு மார்க்சியவாதியே அல்ல; அவர் ஒரு ஜனநாயகவாதியே அல்ல; அதில் சந்தேகமில்லை” என்கிறார். ஆக, மார்க்சியமானது தேசிய இனவிடுதலையை வலியுறுத்துகிறது; ஆதரிக்கிறது; வழிகாட்டுகிறது என்பது தெளிவாகின்றது.

*

மார்க்சியமும் 
மொழியியல் - தேசிய இனப் பிரச்சினைகளும்.
ஆசிரியர்: ஜே.வி.ஸ்டாலின்
தொகுப்பாசிரியர்: மகாராசன்.
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
யாப்பு வெளியீடு, சென்னை.
பக்கங்கள்: 184
விலை: உரூ 200/-
கழிவு விலையில்: உரூ 180/-
அஞ்சல் செலவு: 
பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு,
செந்தில் வரதவேல்
90805 14506

சனி, 9 ஜூலை, 2022

நெல் விதைப்பும் நடவுச் சடங்கும்: மகாராசன்

வேளாண்மை சார்ந்த வளமைச் சடங்குகளுள் விதைப்புச் சடங்கும் நடவுச் சடங்கும் மிக முக்கியமானவை. பெரும்பாலும், விதைப்புச் சடங்கானது உழவுச் சடங்கோடு சேர்ந்தே நிகழ்த்தப்படுகிறது. விதைப்புச் சடங்கு, வித்துகளோடு தொடர்புடையது. நடவுச் சடங்கு, பயிர்களோடு தொடர்புடையது. விதைப்பும் நடவும் வேளாண்மையோடு தொடர்புடையவை. மருத நில வயல் பகுதிகளில் நெல் வேளாண்மையே முதன்மையானதாகும். 

நிலத்தைப் பொருத்தும் நீரைப் பொருத்தும் நெல் வேளாண்மையில் விதைப்பும் உண்டு; நடவும் உண்டு. எனினும், உழவு மரபினர் நெல் வேளாண்மையில் நாற்று நடவு முறையையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர். நாற்றாங்காலில் முளை கட்டிய நெல் விதைகள் பாவி, நெல் விதைகள் நாற்றாக முளைத்த பிறகு, நாற்றாகப் பறித்து, அந்நெல் நாற்றை நடவு வயலில் நடுவதையே நடுகை அல்லது நடவு எனக் குறிப்பர் உழவு மரபினர். 

உழவுத் தொழில் மரபையும், அதன் நுட்பத்தையும், வேளாண் உற்பத்திக் கருவிகளையும், உழவுத் தொழில் செயல்பாடுகளையும், உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களைக் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கும் ஏர் எழுபது நூலானது, நெல் நாற்றைக் குறித்தும், உழத்தியர்களின் நடவுப் பாங்கைக் குறித்தும் விவரித்திருக்கிறது. இவ்விடங்களில் எல்லாம், உழவுத் தொழில் மரபினரை வேளாளர் என்றே பதிவு செய்திருக்கிறார் கம்பர்.

ஏறு வளர்த்திடும் முகிலும் இசை வளர்க்கும் என உரைப்பின்

ஆறு வளர்த்திடுவது சென்று அலை கடலைத் தானன்றோ!

வேறு வளர்ப்பன கிடப்ப வேளாளர் விளை வயலின்

நாறு வளர்த்திடல் அன்றி ஞாலம் உயிர் வளராதே!

என்கிறார் கம்பர். அதாவது, உழவுத் தொழில் மரபினர்களான வேளாளர்களது உழைப்பினாலும் முயற்சியினாலும் விளைவு பெருகும். வயல்களில் உள்ள நெல் நாற்றுகள் செழிப்பாக வளர்ந்தால்தான், உலகில் உள்ள உயிர்கள் யாவுமே நிலைத்து வளரும் என்பதை அப்பாடல் வலியுறுத்துகிறது.

நெல் நாற்றுகளைப் பறித்து நடவு வயலில் நடுகின்ற நிகழ்வைக் குறிக்கும் கம்பர், போர்முனையைக் காட்டிலும் மேலானது என்கிறார். நாற்று நடுகின்ற வயல் களத்தை நடவு முனை எனப் புலப்படுத்தும் வகையில்,

உலகத்தில் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்

அலறத்திண் பகடுழக்கும் அதுவுமொரு முனையாமோ?

உலகத்தில் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்

சிலவர் உழச் சிலவர் நடும் அவையன்றோ திருமுனையே!

என்கிறார் கம்பர். 

அதாவது, உலகத்திலே ஏறுபோல உலாவும் புகழ்பெற்ற முடியினரான ஆற்றலுடைய அரசர்கள், போர்க் களத்தின் இடத்தே பகைவர்கள் அலறியோடுமாறு யானைகொண்டு போரிட்டுக் கலக்கும் போர்முனையும் நல்வாழ்வுக்கு ஏற்றவொரு முனையாகுமோ? ஆகாது. உலகில் கடாக்கள் உழுதலையுடைய - உயரிய நாற்று முடிகளைக் கொள்ளுகின்ற வேளாளர் சிலர் உழவும், சிலர் நடவுமாக வயல் முனையின்கண் விளங்குகின்றனரே, அவையன்றோ உண்மையான வெற்றி முனையாகும்.

போர் முனை பகையொழித்து வெற்றி தரும். எனினும், அதனால் உயிர்கட்கு அழிவேயன்றி வளர்ச்சியேதும் இல்லை. அது பற்றியே, போர் முனை வெற்றியினும் விளை பொருள் மிகுத்தலே ஒரு நாட்டின் வாழ்வுக்கு இன்பம் தருவது என்பது இது. பகை, நொதுமலுக்கேயன்றிப் பகை கொண்டு எழுபவர்க்கும் துயர் விளைக்கும். உழவு எவர்க்குமே இன்ப வாழ்வு தரும் என, அப்பாடலுக்குப் பொருளுரைக்கிறார் புலியூர் கேசிகன். உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களது உழவுக் களமும் நடவுக் களமுமே திருக்களமாகும் எனும் வகையில் நடவு முனை அமைந்திருக்கிறது.

உழுது, தொளி புரட்டி, பரம்படித்துச் சமன் செய்யப்பட்ட வயலில் விளம்பப்பட்டிருக்கும் நாற்று முடிகளை எடுத்து நடுகின்ற வேளாள உழத்திகளின் நடவுக் கைப்பக்குவம் - நடவுக் கைப்பாங்கு குறித்து எடுத்துரைக்கும் கம்பர்,

செய்ப்பாங்கு படக் கிடந்த செழுஞ்சாலி நன்நாற்றைக்

கைப்பாங்கு பகுத்துநடக் கற்றாரே கற்றாரே

என்கிறார். அதாவது, வயலின் பல பகுதிகளிலும் விளம்பப்பட்ட நாற்று முடிகளை அப்படியே பற்றி நடுவதற்கு இயலாது. ஒரு முடியை எடுத்தவுடன் ஒரு சிறு பகுதியைத் தம் கைக் கொள்ளுமளவு எடுத்து வைத்துக் கொண்டே நாற்று நடுவர். 

இவ்வாறு, இடக்கையில் கையளவு நாற்று எடுத்துக் கொண்டு, இடக்கையிலுள்ள நாற்றுப் பிடியிலிருந்து சிறுசிறு நாற்றாய் வலக்கையால் பிரித்து, நெல் நாற்றின் தூர்ப் பகுதியைத் தொளியில் ஊன்றி நடுவதே நடுகையாகும். சீரான இடைவெளியோடு நடுகையிடும் நடவு நுட்பமே கைப்பக்குவம் அல்லது கைப்பாங்கு என்பர் உழத்தியர்கள். 

நாற்று நடும் கைப்பாங்கைக் கொண்ட  உழத்தியர்களே பயன் தரும் கல்வியைக் கற்றவர்கள் ஆவர் எனும் பொருளில்தான் கம்பர் அவ்வாறு பாடியிருக்கிறார். அதாவது, நெல் நாற்றைக் கைப்பாடம் பெறப் பகுத்து நடுவதற்குக் கற்ற உழத்தியர்களே உண்மையாகப் பயன் தரும் கல்வியினைக் கற்றவர் ஆவர் என்கிறார் அவர்.

நெல் நாற்றை நடுகின்ற போது நெருங்கவும் நடக்கூடாது; கலந்தும் நடக் கூடாது. நடுகையானது சீரான இடைவெளியோடு இருத்தல் வேண்டும். இதுவே உழத்திகளின் நடவுக் கைப்பாங்கு ஆகும். இவ்வாறு கைப்பாங்குடன் நெல் நடவு செய்யும் உழத்தியர்களைக் குறித்துப் பள்ளு நூல்கள் அனைத்தும் பதிவு செய்திருக்கின்றன. உழத்திகளின் நடுகை நுட்பம் பற்றி எடுத்துரைக்கும் வையாபுரிப் பள்ளு நூல் பாடலானது,

நாற்றை எடுத்து உங்கள் நெற்றி வைத்து

     நாலு திசைகளை நோக்கி வாழ்த்திப்

போற்றித் துதித்து நிரை வகுத்துப்

     புகழ்ந்து குரவை முழக்கிப் பயிர்

சற்றே நெருங்காமல் அணியணியாய்

     இடையில் கலந்து போகாமல் மெல்ல

மாற்றியே நண்டது ஊடே போகாமல்

     வளமாய் நடுங்கடி பள்ளீரே

எனப் பதிவு செய்திருக்கிறது.

நெல் வேளாண்மையின் ஓர் அங்கமாக இருக்கும் நடவுச் செயல்பாடும்கூட, வளமைச் சடங்காக வேளாண் மரபில் நிகழ்த்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது. இத்தகைய நடவுச் சடங்கானது, வேளாண் நிலத்தில் நடவு செய்யும் நெல்நாற்று முடியை இந்திர அடையாளத்தோடுதான் புலப்படுத்துகிறது. 

பள்ளுப் பிரபந்தம் எனப்படும் பள்ளு இலக்கியத்தின் உள்ளடக்கப் பொருண்மை குறித்து எடுத்துரைக்கும் தியாகராசக் கவிராயர்,

இந்திரத் தெய்வதம் போற்றி எக்காலும்

சிந்தை இன்புற்று இகழ்தரும் தகைத்தாய்

உள்ளி ஆன்றோர்கள் உரைக்கும் பிரபந்தம்

என்றுரைக்கிறார். அதாவது, இந்திரனையே வழிபடு தெய்வமாகக் கொண்டிருக்கும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினரைப் பற்றிய சிற்றிலக்கிய வகையே பள்ளு இலக்கியங்களாகும் என்கிறார் அவர். அவ்வகையில், வேளாண்மைத் தொழில் மரபோடு ஒன்றிப்போனதாக இந்திரன் அடையாளம் அமைந்திருக்கின்றது.

மள்ளர் எனும் உழவர்கள் இந்திரனைத் தொழுது, வயலை உழுது, சேற்றைப் பரம்படித்துச் சமன்செய்து, வெண்முளை கட்டிய நெல்மணிகளை நாற்றங்காலில் தெளித்து, பின்பு நாற்றங்காலில் உள்ள நீரை முறையாக வடித்ததாகக் கூறும்போது, 

பழுதின் மள்ளர் பயிற்றி வலாரியைத் 

தொழுது வெண்முளை தூவித் தெளித்தபின் 

முழுது நீரைக் கவிழ்ப்பர் முறைமையால் 

என விநாயகப் புராணம் கூறுகிறது.   இந்திரனைக் குறிக்கும் வேறு பெயரான வலாரி என்னும் சொல்லால் குறிப்பதோடு, நெல் விதைப்பு முறையையும் புலப்படுத்துகிறது அப்பாடல்.

உழவர்களின் வழக்காற்று மரபில், நடுகை தொடங்குவதற்கு முன்பாக நெல் நாற்று முடியைக் குலவையிட்டு வணங்கிய பிறகே நடத் தொடங்குவர் உழத்தியர்கள். மருத நில உழத்தியர்கள் இந்திரனை வணங்கிய பின்பே நாற்று நடுவர் என்பதை, 

உழுத சால்மிக ஊறித் தெளிந்த சேறு 

இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் 

தொழுது நாறு நடுவார் தொகுதியே 

பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்

என்கிறது பெரிய புராணம். உழத்தியர்கள் வணங்கும் முதல் நாற்று முடியை, இந்திர முடி என வழங்கும் உழவர் வழக்காற்று மரபும் இங்கு ஒப்பத்தக்கது ஆகும்.

மேலும், கி.பி 12ஆம் நூற்றாண்டு சீவலமாற பாண்டிய மன்னன், தான் எழுதிய சங்கர நாராயணசாமி கோயில் புராணத்தில், மள்ளர்கள் ஒரு நல்ல நாளில் இந்திரக் கடவுளைத் தொழுது, எருதுகளை ஏரில் பூட்டி உழுது, நாற்றங்காலில் நெல் விதைத்தனர் என்பதை,

ஏர்தரு மூரியேறும் இருங்கடா ஆவினமுங் கட்டிக் 

கூர்நுனிக் கொழுக்கள் ஆழ உழவற உழுது கோட்கள் 

சீர்தரு நாளில் வானோர்க்கு இறைவனாந் தெய்வம் போற்றிக்

கார்நிற மள்ளர் சாலி முளைத்தனர் களிப்பால்

என்று குறிப்பிடுகிறார். வானோர்க் கோமான் இந்திரனையே, வானோர்க்கு இறைவனாம் தெய்வம் என்கிறது அப்பாடல். 

திருமகள் வாணி சசி முதலான தேவியர் பள்ளியராகி

இருகையில் அணிந்த குருகினந் தெழிப்ப விட்டிடை வருந்த வார்செவியின்

மருவிய தோடு நாலவார் கூந்தன் மல்கிய தோளின் வீழ்ந்தலைய

உருகெழு பச்சைப் பள்ளியோடு அயர்ந்திட்டு ஒண்முடி நாறு நட்டனரால்

எனக் கூறும் பேரூர்ப் புராணப் பாடலானது, உழவுத் தொழில் மரபினரான பள்ளியர் உழத்திகளோடு பெண் தெய்வங்களாகக் குறிக்கப்படும் இலக்குமி, சரசுவதி, இந்திராணி போன்றோரும் நடவு செய்ததாகக் கூறுகின்றது. அதாவது, செல்வ மகள், கல்வி மகள், மண் மகள் என யாவராக இருப்பினும், உழத்தியர்களின் நடுகைத் திறம் அறிந்தவர்களாகவும், அவர்வழி மரபினராகவும் இருந்ததாக அப்பாடல் சுட்டுகிறது.

மேற்சுட்டிய பேரூர்ப் புராணத்தின் பாட்டுடைத் தலைவராகக் குறிக்கப்படும் பட்டீசுவரர் கோயிலில்தான், வேளாண்மை உழவுத் தொழிலின் அங்கங்கள் யாவும் சடங்கியல் வழிபாட்டு மரபுகளாக இன்னும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் அருகே பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோயிலில் நடைபெற்றுவரும் சடங்குகளுள், நெல் நாற்று நடவுச் சடங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கி.பி 18ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட நூல் பேரூர்ப் புராணம் ஆகும். இந்நூலில் உள்ள பள்ளுப் படலப் பகுதியானது, சிவன், பார்வதி, முருகன், விநாயகர் மற்றுமுள்ள தேவர்கள் யாவரும் உழவுத் தொழில் மரபினராக - மள்ளர்களாக - பள்ளர்களாக வயலில் இறங்கி உழவுத் தொழில் செய்ததாக மிக விரிவாக எடுத்துரைக்கின்றது. 

இதன் கதைச் சுருக்கத்தை எடுத்துரைக்கும் தே.ஞானசேகரன், கொங்கு நாட்டிற்குச் சுந்தரர் மூன்றாவது முறையாக வருகை தந்தபோது பேரூருக்கு வருகை புரிந்தார். அச்சமயம் பேரூரில் குடியிருக்கும் பட்டீசுவரர், அருகிலிருக்கும் வயலில் மள்ளராக - பள்ளராக மாறி வேலை செய்கின்றார். பார்வதி தேவியார் பள்ளியாக மாறி கழனியிலே நாற்று நடுகிறார். விநாயகனும் முருகனும் மள்ளச் சிறார்களாக மாறி வயலில் விளையாடுகின்றனர். 

திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் நுகம், கலப்பை, மேழி, கொழுவு, வார், தார்க்கோல், எருது, விதைகள், நாற்று ஆகிய அனைத்து உழவுக் கருவிகள், இடுபொருட்களுடன் வந்தனர். இலக்குமி, சரசுவதி, இந்திராணி முதலிய தேவ மகளிர் மள்ளத்தியர்களாக மாறி, பச்சை நாயகி உமாதேவியோடு வயலில் நாற்று நட்டனர். 

இவ்வாறு, இவர்கள் கழனியிலே வேலை செய்வது தெரியாது கோயிலுக்குள் சென்ற சுந்தரர், சிவபெருமானை அங்கே காணப் பெறாமல் வினவ, நந்தி கடைக்கண் காட்ட, வயலில் வந்து சுவாமியையும் அம்மையையும் கண்டு வணங்கினார். இதுவே திருப்பேரூர்ப் புராணம் தரும் செய்தி என விவரிக்கிறார். 

இலக்கியத்தில் அவ்வாறு மிகையாகவோ புனைவாகவோ பதிவு செய்திருப்பதாகக் கருதுவது ஒருபுறம் இருந்தாலும், பேரூர் பட்டீசுவரர் கோயிலில் நடைபெறும் வழிபாட்டுச் சடங்குகள், பேரூர்ப் புராணம் மேற்குறித்தவாறு எடுத்துரைத்த உழவுத் தொழில் மரபையும் வரலாற்றையுமே சடங்கியல் வடிவில் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் நடந்து வரும் நாற்று நடவுச் சடங்குத் திருவிழாவானது, உழவுத் தொழில் மரபினரையும், அவர்களின் வேளாண்மை உற்பத்தி நடவடிக்கையையும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக அடையாளப்படுத்தி வருகின்றது. இதைக் குறித்து விவரிக்கும் கோவைக்கிழாரின் கருத்தும் ஒப்புநோக்கத்தக்கது. 

சுந்தரர் கொங்கு நாட்டிற்கு வந்த காலம் கி.பி 850 ஆகும். அக்காலத்திலிருந்தே பள்ளர்களும் கோயில் விழாக்களில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று ஐதீகத்திலிருந்து நாம் ஊகிக்க முடியும். இந்த நாளிலும் அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக அமைந்த நாற்று நடவு, அவர்கள் கலந்து கொள்வது போல வேறு தளங்களில் நாம் பார்க்க முடியாது என்பார் கோவைக்கிழார். பன்னெடுங்காலமாகவே அங்கு நெல் நாற்று நடவுச் சடங்கு நடைபெற்று வருவதை இலக்கிய மரபிலும் மட்டுமல்லாமல், வழிபடு பண்பாட்டு மரபிலும் காண முடிகிறது. 

ஆனி எனும் ஆடவை மாதத்தில் நடைபெறும் நாற்று நடவுத் திருவிழாவை, ஆனி திருமஞ்சனப் பொன்னேர் நாற்று நடவுத் திருவிழா, சித்திரமேழிப் பொன்னேர் விழா, ஆனி உற்சவம், நாற்று வெள்ளி, இந்திர விழா, நாற்று நடவு உற்சவம், ஆனி உற்சவ நாற்று நடவுத் திருவிழா, இந்திர விழா என்னும் பொன்னேர் பூட்டும் விழா எனப் பல பெயர்களால் அப்பகுதி மக்கள் குறிக்கின்றனர். வழிபாட்டுச் சடங்காகவும் வளமைச் சடங்காகவும் நடைபெற்று வருகிற நாற்று நடவுச் சடங்கானது, உழவுத் தொழில் மரபினரின் வேளாண் பண்பாட்டு அடையாளச் சடங்காகவும் நடைபெற்று வருகின்றது. 

இந்நடவுச் சடங்கானது, இரண்டு வகையான சடங்கியல் தன்மைகளையும் நோக்கங்களையும் புலப்படுத்துகிறது. இதுகுறித்துக் கூறும் தே.ஞானசேகரன், இவ்விழா இரண்டு விழாவினைத் தன்னுள் கொண்டிருக்கிறது. ஒன்று, இந்திர விழா. மற்றொன்று, மள்ளராக மாறிய சிவபெருமானின் புராணக் கதையை மறுபடியும் நடித்துக் காட்டும் விழா என, அங்கு நடைபெறும் சடங்குகளை இருவேறாகப் பிரித்துக் காட்டுகிறார். 

பேரூர்ப் புராணம் கூறுகிற கதையாடல்களின்படி, சிவன் உள்ளிட்ட தெய்வங்கள் யாவும் உழவுத் தொழில் புரிந்ததன் மேன்மையை - உழவுத்தொழில் செயல்பாடுகளைப் போலச்செய்தல் சடங்கியலாக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. கோயிலுக்கும் - தொன்மக் கதையாடலுக்கும் - வேளாண்மைக்கும் - வேளாண் மரபினருக்குமான  பிணைப்பை இத்தகையப் போலச்செய்தல் சடங்கு வலுப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறது.

பட்டீசுவரர் கோயில் வளாகத்திற்கு முன்புள்ள தேவேந்திரர் சமூக மடத்தில் நடைபெறும் நாற்று நடவுச் சடங்கானது, இந்திர வழிபாட்டின் நீட்சியாக நடைபெறும் வளமைச் சடங்காகவும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனி மாதத்தில் நடைபெறும் இவ் வளமைச் சடங்கின் முதல் நாளில், நாற்றங்காலில் நெல் விதை பாவுதல் சடங்கு நடைபெறுகிறது. இதை நாற்று விடுதல் என்றழைக்கின்றனர். ஓரிரு வாரத்திற்குள் நடுவதற்குப் பக்குவமான வளர்ச்சியை அடைந்த பிறகு, ஏற்கனவே குறிக்கப்பட்ட ஒரு நாளில் நாற்று நடவுச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. 

நாற்றுக் கழனிக்கு வருகின்றவர்கள், நெல் நாற்றை இந்திரன் முடி என்பதாக வணங்குவர் என்பதாகக் கூறும் தே.ஞானசேகரன், பெண்கள் நாற்றுக் கழனியைச் சுற்றி நின்று கும்மியடிக்கின்றனர். இவ்வாறு கும்மியடிக்கும்போது, ஒரு சின்னப் பெண்ணை அமரச் செய்து, அப்பெண்ணைச் சுற்றி இந்திர விழாப் பாடலைப் பாடிக் கும்மியடிக்கின்றனர். இக்கும்மியடிக்கும் சடங்கு, பல குழுவாக மடத்தின் பல பகுதிகளில் நடைபெறுகின்றன. இங்கு பாடப்படும் பாடல்களை உழத்திப்பாட்டு என்றும், இந்திர விழாப் பாடல்கள் என்றும் கும்மியடிப்போர் கூறுவதாகப் பதிவு செய்கிறார்.  

நாற்றுப் பறித்தல் சடங்கின்போதும், நாற்று நடவுச் சடங்கின்போதும் வேளாண் மரபினரின் உழத்தியர்களால் பாடப்படும் கும்மிப் பாடல்கள், இந்திர அடையாளத்தையும் - வேளாண் மரபின் பண்பாட்டு நீட்சியையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

சந்திரரே சூரியரே சாமி பகவானே

இந்திரனை நோக்கி எடுத்தேன் இளமுடியை

இளமுடியும் வாடாம என் குரல் மங்காம

தேவேந்திர மார்கள் எல்லாம் சேரக் குலவை இடுங்கள்

தேவேந்திர ராசனுக்கு…

யானையின்னா யானை ஐராவதத்து யானை

குட்டி மத யானை கொம்பு இரண்டும் பொன் யானை

குண்டு குழியைக் கண்டால் குலுங்குமாம் அந்த யானை.

பள்ளன் படுகையைக் கண்டால் பதுங்குமாம் அந்த யானை.

நம்ம செந்நெல்லுக்கு நீர் போக்கி

தேவேந்திரப் பெண்கள் சேரக் குலவையிடுங்கள்

என, நாற்று நடவுச் சடங்கில் பாடப்படும் இதுபோன்ற கும்மிப் பாடல்களிலும், உழவுத் தொழில் சார்ந்த இதுபோன்ற சடங்குப் பாடல்களிலும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினரின் இந்திர வழிபாட்டு மரபின் நீட்சியைக் காண முடிகிறது. 

பொருள் சார்ந்த உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு தொழில் மரபினரும், தத்தமது தொழில் மரபுகளை உற்பத்திச் செயல்பாட்டு நிலையிலும், சடங்கியல் போன்ற பண்பாட்டு நிலையிலும் தக்கவைத்து வந்திருக்கின்றனர். அத்தகையத் தொழில் மரபுகளைத் தக்க வைத்ததில் - தக்க வைப்பதில் போதாமைகளையும் இயலாமைகளையும் கடந்து, ஒருசில தொழில் மரபினரே உற்பத்திச் செயல்பாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் தத்தமது அடையாளங்களைத் தக்க வைத்திருக்கின்றனர். 

தத்தமது தொழில் மரபுகளை அறிவூட்டலாகவும் மகிழ்வூட்டலாகவும் கூட்டுணர்வையும் கூட்டுழைப்பையும் வலியுறுத்துவதாகவும்தான், பண்பாட்டுச் சடங்கியல் வகைமைகளையும் வெளிகளையும் உருவாக்கி வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர். 

அவ்வகையில், வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்டு வந்திருக்கும் - ஈடுபட்டு வருகின்ற உழவுத் தொழில் மரபினர், வேளாண்மை சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளைத் தொழில் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் புலப்படுத்தியே வந்திருக்கின்றனர். தமிழர் மரபில் புலப்படுகிற பெரும்பாலான பண்பாட்டு நடத்தைகளும் சடங்கியல் கூறுகளும் உற்பத்தி சார்ந்த கூட்டுச் செயல்பாடுகளை - கூட்டு வாழ்வியலை - கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலில் இருந்து...

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை-76

விலை: ரூ.250

தொடர்புக்கு: 

செந்தில் வரதவேல்

9080514506.