வியாழன், 17 டிசம்பர், 2020

வேளாண் மரபினரின் பெயர் மாற்றம் & பட்டியல் மாற்றம்: பொது சமூக மனசாட்சியின் கேள்விகளுக்கான பதில்கள். :- மகாராசன்.

 


அண்மையில் உழவர் போராட்ட ஆதரவும் இரட்டைவேட நிலைப்பாடும் எனும் கட்டுரையை எழுதி இருந்தேன்.

பார்க்க: 

https://maharasan.blogspot.com/2020/12/blog-post.html

வேளாண் தொழில் மரபினர், தங்களை வேளாளர் என்று அரசாணையால் அங்கீகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை சமூக சனநாயக சக்திகள் எவ்வாறு அணுக வேண்டும்; பார்க்க வேண்டும் என்ற புரிதலையும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அந்தக் கட்டுரை இந்தது. 

ஆயினும், அந்தக் கட்டுரை பேசுயிருக்கும் பேசு பொருளுக்குள்ளேயே வராமல், பொத்தாம் பொதுவாக எதிர்ப்பதும் சாடுவதுமாகத் தோழர் அரங்க குணசேகரன் மற்றும் அவரது தோழமை வட்டத்தினர் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். 

இன்னொரு தோழர் திருநாவுக்கரசு நாடிமுத்து என்பார், இதைக் குறித்து விளங்கிக்கொள்வதற்காக எம்மிடம் 18 கேள்விகளை முகநூலில் முன்வைத்துப் பகிர்ந்திருந்தார். 

அவரது கேள்விகளும் எமது பதில்களும் வருமாறு:

கேள்வி 1.

நீங்கள் இந்து சமூக அமைப்பை ஒப்புக் கொள்கிறீர்கள், இல்லையா?

பதில்:

வைதீக பிராமணிய இந்துமதம் வேறு; தமிழர் சமய மரபு வேறு. சைவ, வைணவ, நாட்டுப்புற வழிபாட்டு முறைகள் என இந்துமதத்திற்கு அப்பாற்பட்ட சமய வழிபாட்டு மரபு ஒன்று இருக்கிறது. எனினும், அவை இந்து சமய மரபாக அரசியல் சட்ட வடிவம் பெற்றதாக ஆக்கப்பட்டு விட்டது. இதை ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இந்து என்கிற சமூகமாகத்தான் சட்டப்படியாகவும் சமூகப்படியாகவும் பார்க்கப்படுகிறது.

கேள்வி 2.

அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இப்போது உள்ள பள்ளர் முதலான ஏழு சாதிகளின் சாதிப் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டன? யார் சூட்டியது?'

பதில்:

பள்ளர் முதலான ஏழு சாதிகளும் பண்டைக் காலத்தில் இருந்து வழங்கிவரும் காரணப்பெயர்கள். சமூக வாழ்வியல் போக்கில் சமூகம் வழங்கிய பெயர்கள்.

1. குடும்பர்- குடும்பம்-குடும்பு நிர்வாகத்தைத் தோற்றுவித்தமையால் அமைந்த பெயர்.

2. பள்ளர்- பள்ளமான வயல் பகுதி உழவு செய்தமையால் அமைந்த பெயர்.

3. காலாடி- காலாட்படைப் போர்ப் பிரிவால் அமைந்த பெயர்.

4. வாரியான்- நீர் வாரியான்/ஏரி வாரியான் என நீர் வாரியம் மேலாண்மையால் அமைந்த பெயர்.

5. மூப்பர்- குடிகளில் மூப்பானது என்பதால் அமைந்த பெயர்.

6. தேவேந்திரகுலத்தான்- வேளாண்மைக்கு உகந்த மழைக் கடவுளான இந்திரரை வழிபடும் குலத்தைச் சார்ந்ததால் அமைந்த பெயர்.

7. பண்ணாடி- பண்ணையம் உருவாக்கி வேளாண்மை செய்தமையால் அமைந்த பெயர்.

மேற்குறித்த பெயர்கள் யாவும் சமூகப் பங்கேற்பு, தொழில், குலம் தொடர்பான காரணப்பெயர்கள். 

(இவை தொடர்பான வரலாற்றுச் செய்திகளும் பண்பாட்டுத் தரவுகளும் நிறைய நூல்களில் பரவிக் கிடக்கின்றன).

கேள்வி 3. 

இப்போதுள்ள சாதிப் பெயர்கள், அந்த 7 சாதிகளுக்கும் உள்ளவை எவ்வகையில் இழிவான பெயர்கள் என்று கருதுகிறீர்கள்?

பதில்:

அந்த ஏழு சாதிப் பெயர்களும் இழிவான பெயர்கள் கிடையாது. மிகச்சிறப்பான காரணப்பெயர்கள்.

கேள்வி 4. 

பெருந்திரள் மக்கள் இழி சாதியாகவும் கீழ்ச் சாதியாகவும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளீர்கள். அப்படியெனில், நீங்கள் உயர்ந்த சாதி! அதில் ஒன்றும் உங்களுக்கு அய்யப்பாடு இல்லையே?அப்படியெனில் தம்மை மஹர் என்றும், தீண்டப்படாதன் என்றும் அறிவித்துக் கொண்ட அம்பேட்கரின் இயக்கங்கள் உங்களை ஆதரிக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:

ஒருவரைப் பலரும் நாயே என்று அழைக்கிறார்கள்; அவ்வாறே பாவிக்கிறார்கள் எனும் சூழலில், தான் நாய் இல்லை; நான் மனிதர் என்று அவர் அறிவித்துக்கொள்வதும், அதன்படியாக அவர் மனிதராகப் பாவித்துக் கொள்வதும் எப்படிச் சரியானதோ, அதே போல, ஒரு மக்கள் திரளை இழி சாதி; கீழ்ச்சாதி என மற்றவர் பாவிக்கிறபோது, தான் கீழ்ச்சாதி-இழிசாதி இல்லை என்று சொல்வது எப்படிப் பிழையாகும்? 

கீழ்ச்சாதி இல்லை என்று சொல்வது மேல்சாதி எனும் உணர்வால் அல்ல; தம்மை எந்தவொரு தரப்பும் சாதியால் கீழ்மைப்படுத்தக்கூடாது எனும் எதிர்ப்புணர்வில் இருந்து வருவதுதான். கீழ்ச் சாதி என ஒத்துக்கொண்டால், கீழ்ச்சாதியாகவே இருக்க வேண்டும் எனும் சமூக உளவியலை இன்னும் வலுப்படுத்தவே செய்யும்.

சாதியக் கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை எல்லா இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள சாதிகளின் பட்டியல் மாற்றம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறி உள்ளார். அம்பேத்கரை முழுமையாகப் புரிந்துகொண்ட இயக்கங்கள் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் இதை ஆதரிப்பதுதான் நியாயமும் கூட.

கேள்வி 5. 

சாதியின் பெயரை மாற்றிவிட்டால், சாதி இழிவு நீங்கிவிடும் என்பதற்கு அடிப்படை ஏதேனும் உள்ளதா?

பதில்:

மதம் மாறிவிட்டால் சமூக இழிவு நீங்கும் என்று அம்பேத்கரே கூறி இருக்கிறார்.

குருடர், செவிடர், முடவர், ஊமை என்றெல்லாம் ஒருகாலத்தில் அழைக்கப்பட்டவர்கள் உடல் ஊனமுற்றோர் எனப்பட்டனர், அதுவும்கூட சரியில்லை என்று மாற்றுத் திறனாளி என்று அழைக்கப்பட்டனர்.

அலி, ஒம்போது, அரவாணி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்கள் திருநங்கை என்று மதிப்புமிக்க மனிதர்களாக அடையாளப்பட்டுள்ளனர்.

சூத்திரர், நீசர் என்ற பெயரில் குறிக்கப்பட்டதற்கு எதிராகத்தானே சுயமரியாதை இயக்கம் திராவிட அரசியலை முன்னெடுத்தது.

அரிசன், பஞ்சமன் என்று குறிக்கப்பட்டவர்கள் ஆதி திராவிடர்கள், தலித்துகள் என்று குறிக்கவும் அடையாளப்படுத்தப்படுகிறார்களே. 

மாதாரி சக்கிலி, பகடை என்று குறிக்கப்பட்டவர்கள் அருந்ததியர் என்று குறிக்கப்படுகிறார்கள்.

சின்னமேளம், பெரியமேளம் என இருந்த சாதிகள் இசை வேளாளர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெயர் மாற்றம் செய்த உடனே திடீர்மாற்றங்கள் எதிலும் ஏற்படப்போவதில்லை. ஆனால், மாற்றங்களுக்கு அதுவும் ஒரு அடிப்படை.

கேள்வி 6.

ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் உள்ள உட்சாதிப் பிரிவுகளில், ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருடன் உறவுமுறைக் கொள்வதில்லை. நீங்கள் எப்படி?அந்த ஏழு சாதிகளுக்குள்ளுமாவது உறவு கலப்பு ஏற்பட்டு ஒரே சாதியாகிவிடுமா?

பதில்:

அந்த ஏழு சாதிகளுக்குள் திருமண உறவு உண்டு. அகமணமுறையும் உண்டு. புறமண முறையும் உண்டு. அந்த ஏழு சாதிகளும் ஒரே சாதியாகத்தான் அவர்களுக்குள் பாவித்துக்கொள்கிறார்கள். அந்த ஏழு சாதிகளும் கலப்பு ஏற்பட்டு ஒரே சாதியாகக் காலப்போக்கில் மாறும்.

கேள்வி 7.

நீங்கள் உயர்ந்த சாதியாகி விட்டால், உங்களுக்கு கீழ்ச்சாதிகள் யார் யார்? உங்களுக்கும் உயர்வான சாதிகள் எவை?

பதில்:

கீழ்ச்சாதி இல்லை எனும் எதிர்ப்பும் குரலும் நகர்வுமானது உயர்சாதி எனும் இலக்கைக் கொண்டதல்ல; சாதி சமத்துவத்துக்கான - சமூக சமத்துவத்துக்கான நகர்வே அது. தமக்கு மேல் என்று எந்தச் சாதியுமில்லை; தமக்குக் கீழ் என்று எந்தச் சாதியுமில்லை.

கேள்வி 8.

சரி, அட்டவணைச் சாதியிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா இல்லையா?

பதில்:

எஸ்.சி எனும் அட்டவணைப் பிரிவிலிருந்து விடுவித்து/ வேறு அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என்பதே கோரிக்கை. 

கேள்வி 9.

அவ்வாறு விரும்பினால், எந்த இனப் பட்டியலில் சேரப் போகிறீர்கள்? அல்லது என்ன இனப் பெயரில் உங்களை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்கள்?

பதில்:

இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (OBC). அது பிசியாகவோ எம்பிசியாகவோ இருக்கலாம்.

கேள்வி 10.

சலுகைகள், குறிப்பாக இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று சொல்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இட ஒதுக்கீடு கேட்டால் எந்த இனத்தின் இட ஒதுக்கீட்டில் பங்கு கேட்பீர்கள்?

பதில்:

எஸ்.சி எனும் பட்டியலில் இருந்துதான் விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். எஸ்.சி பட்டியலில் இருந்து வேறு பட்டியலுக்கு மாற்றம் கோருவது இடஒதுக்கீடு வேண்டும் எனும் பொருள் கொண்டது. எஸ்.சி பட்டியலை விட்டு வெளியேறுவதால் இடஒதுக்கீடே வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. எஸ்.சி பிரிவில் இடஒதுக்கீடு வேண்டாம்; ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

கேள்வி 11. 

அட்டவணைச் சாதியில் இடம் பெற்று இவ்வளவு நாள் சலுகைகளைப் பெற்றுள்ளதால், அந்த இனத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டின் விழுக்காட்டில் பெறுவதுதான் நியாயம். அவ்வாறு பெற்றால் அது உள் ஒதுக்கீடு ஆகும்.உங்கள் மாணவர்களை அதன் பின் ஆதிக்க சாதி மாணவர்கள் 'சுக்கு'என்று அழைக்கமாட்டார்களா?

பதில்:

எஸ்.சி பிரிவில் இதுவரைகாலம் வைத்திருந்தமையால் எஸ்.சி பிரிவில் இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர். ஒருவேளை, ஓபிசியில் வைத்திருந்தால் அந்தப் பிரிவில் இடஒதுக்கீடு பெற்று இருப்பர். இடஒதுக்கீட்டுச் சலுகைகள் எல்லாப் பிரிவினருக்கும் இருக்கிறது. எஸ்.சி பிரிவினர் மட்டும் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறுவது இல்லை. ஓபிசியினரும் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறவே செய்கின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி சாதிவாரி இட ஒதுக்கீடு கொடுக்கும்போது யாரும் எவரும் சுக்கு என்று கூறிட முடியாது. எல்லோருமே சுக்குதான்.

கேள்வி 12. 

இட ஒதுக்கீடே தேவையில்லை என்றால், கால் சட்டை இல்லாமல் அம்மணமாக நிற்கும் பள்ளர் சாதிக் குழந்தைகளை நீங்கள் பார்த்ததுண்டா?அவர்கள் எவ்வாறு கல்வி பெறுவது?

பதில்:

இடஒதுக்கீடு தேவை இல்லை என்று யாரும் கூறவில்லை.

கால்சட்டை இல்லாத பள்ளர் குழந்தைகள் மட்டுமல்ல, ஓபிசி பிரிவில் இருக்கும் அத்தனை சாதியிலும் உள்ள வறுமையில் உள்ள குழந்தைகளும் அம்மணமாக இருப்பதை நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ நான் நாள்தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

எல்லாச் சாதியினருக்கும்தான் இடஒதுக்கீடு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்போது, எல்லாச் சாதியிலும் அம்மணமாகக் குழந்தைகள் திரிவது ஏன்? இடஒதுக்கீடு என்பது கல்வி, வேலைவாய்ப்புக்கான பிரதிநிதித்துவமே தவிர, அது வறுமையை ஏழ்மையை பொருளாதார மாற்றத்தை உண்டுபண்ணும் ஒரே தீர்வாகக் கருத இயலாது.

எந்தச் சாதிக் குழந்தையானாலும் கல்விக்கு இடஒதுக்கீடு உண்டு.

கேள்வி 13. 

சாதிப் பெயர் மாறியதும் அதே கிராமங்களில் வசிக்கப் போகிறீர்களா? அல்லது வேறு பகுதிக்குக் குடிபெயரப் போகிறீர்களா? அதே பகுதியில் வசித்தால் உங்கள் மீதான இழிசாதிப் பார்வையை எவ்வாறு ஆதிக்கச் சாதியினர் மாற்றிக் கொள்வர்?

பதில்:

அரிசனர், பஞ்சமர் என்போர் ஆதிதிராவிடர் என்று பெயர் மாற்றிக்கொண்டு வேறுவேறு ஊர்களுக்குக் குடிபெயரவில்லையே. சூத்திரர் என்று குறிக்கப்பட்டவர்கள் திராவிடர் என்று கூறிக்கொண்டு அயலகம் போய்விடவில்லை. நாடார் சமூகத்தினரும் வேறு புலம் நோக்கிப்போய்விடவில்லை.

பெயர் மாற்றம்/ பட்டியல் மாற்றும் கிடைக்கும் தருவாயில் அதே பூர்வீக ஊரில்தான் வாழ முடியும். கல்வி வேலை தொழில் சார்ந்து இடம்பெயரவோ குடிபெயரவோ என்பது தேவையின் பொருட்டு அமைவது. பெயர் மற்றும் பட்டியல் மாற்றத்திற்காக ஊர் விட்டுப் புலம்பெயவர்வது தேவையில்லாத ஒன்று. அப்படிப் புலம்பெயர மாட்டார்கள். உயர்த்திக்கொண்ட சாதியினர் உடனடியாக இல்லாவிட்டாலும், படிப்படியாக மெல்லமெல்ல தங்களது பார்வையை அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நடக்கும். அதற்கு நிறைய சமூக உதாரணங்கள் இருக்கின்றன.

கேள்வி 13.

டாக்டர் கிருஷ்ணசாமி தான் பட்டியல் சாதி வெளியேற்றத்தை முன் வைக்கிறார்! நீங்கள் குறிப்பிட்ட இயக்கங்களுக்கு அவர் ஆதரவானவரில்லை. அவர் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் ஆதரவானவர். அவர்களிடம் தானே நீங்கள் ஆதரவு கோர முடியும்? மற்ற இயக்கங்கள் ஆதரவளிக்கவில்லை என்றால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! அதற்கு காரணம் கிருஷ்ணசாமியா இல்லையா?

பதில்:

1923லிருந்து பெயர் மாற்றம்/ பட்டியல் மாற்றக் கோரிக்கை அந்தச் சமூகத்தால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேக்கம்பட்டி பாலசுந்தராசு, தேவ ஆசீர்வாதம், குருசாமி சித்தர் உள்ளிட்டவர்களின் இது சார்ந்த கருத்தாடல்கள் அந்தச் சமூகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே நிலவி வருகின்றன. அந்தச் சமூகத்தின் பெரும்பான்மைக் கோரிக்கையாக அந்தச் சமூகத்திடம் நிலவுகிறபோது, அந்தக் கோரிக்கையை மரு.கிருசுணசாமியும் இதரத் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அவ்வளவே.

இந்தக் கோரிக்கையை அரசியல் ஆதாயத்துக்காகவே பாசகவும் அதிமுகவும் இதரக் கட்சிகளும் அணுகுகின்றன. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மற்ற இயக்கங்கள் அந்த மக்களின் இந்தக் கோரிக்கையை ஆதரித்து இருந்தால், மதவாத சக்திகள் அந்த மக்களின் பக்கம் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே ஆதரிக்காத பட்சத்தில் இதைப் பயன்படுத்தி மதவாத சக்திகள் அந்த மக்களிடம் ஊடுறுவி உள்ளனர். அதன் வெளிப்பாடே அந்தச் சமூகத்தின் ஒரு சில தலைமைகள் மதவாத சக்திகளுடன் கூட்டு வைத்திருப்பதாகும்.

அந்த மக்களின் கோரிக்கையை மதவாத சக்திகள் ஆதரிப்பதைக் காட்டிலும், சமூக சனநாயக சக்திகள் ஆதரிப்பதே அந்த மக்களுக்கும் சமூகத்திற்கும் நல்லது.

கேள்வி 14. 

இப்படித் தெருவில் வந்து எங்கள் சாதிப் பெயரை வைத்துக் கொண்டுள்ள நாய்கள் குரைக்கின்றன.இது நியாயமா என்று ஆளும் பாஜக,அதிமுக விடம்,"ஏன் அந்த பொது சமூக மனசாட்சியைக் கொன்று போட்டு விட்டீர்கள்?" என்று நீங்கள் கேள்வி கேட்கவில்லை?

பதில்:

அவர்கள் மட்டுமல்ல, நீங்களும்கூட கேட்கலாம்; கேட்க வேண்டும். சமூக பொது மனசாட்சியைக் கொல்வதும் தூண்டுவதும்கூட நீங்கள் குறிப்பிட்ட அவர்களாகக் கூட இருக்கலாம்தானே. நான் கேட்பது, பொதுமனசாட்சியான நீங்கள் கேட்டீர்களா? ஏன் ஒரு சமூகத்திற்கு வேளாளர் என்று பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? அவர்களது கோரிக்கை நியாயம்தானே என்று சாதியவாதிகளைப் பார்த்து அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சேர்ந்து கேளுங்கள்.

கேள்வி 15.

கடந்தப் பாராளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி என்னடா ஆயிற்று? என்று மோடியின் சட்டை முன் பகுதியை இழுத்து ஏன் கேள்வி கேட்கவில்லை?

பதில்:

அப்படிக் கேட்க வேண்டும் என்றுதான் சமூக சனநாயக சக்திகளையும் துணைக்கு அழைக்கிறார்கள்.

கேள்வி16.

நீங்களும் இந்துக்கள் என்பதாலா அவ்வாறு கேள்வி கேட்க முடியவில்லை?

பதில் :

அப்படிக் கேள்வி கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவன்.

கேள்வி 17.

மதத்தையும், சாதியையும் உதறித் தள்ளவில்லை என்றாலும், மதம் மற்றும் சாதியை ஏற்கவில்லை என்று கொள்கையளவில் உள்ள கட்சிகள் ஒரு சாதியை உருவாக்கத் துணைபுரியும் என்று எதிர்பார்பது வேடிக்கை இல்லையா?

பதில்:

தலித் அரசியல் என்பது குறிப்பிட்ட சாதிகளை மய்யப்படுத்திய சாதி அரசியல் உருவாக்கம்தானே. அண்மையில் அருந்ததியர் பெயர் மாற்றம் என்பது சாதியை உருவாக்கும் ஒன்றாக யாரும் பார்க்கவில்லை. இதை மட்டும் சாதியை உருவாக்கத் துணைபுரிவதாகக் கருதுவதுதான் வேடிக்கை.

கேள்வி 18.

அட்டவணை சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் இனி கிருஷ்ணசாமியோ அல்லது அந்த ஏழு சாதியினரோ தேர்தலில் நிற்கப் போவதில்லை என முடிவு செய்துவிட்டீர்களா?

பதில்:

ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும்போது, அந்த வீடு பிடிக்காமலோ அல்லது வீட்டு உரிமையாளர் வெளியேறச் சொன்னாலோ உடனே நடுத்தெருவுக்கு வந்துவிட முடியாது. வேறு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கும்போதுதான் அந்தப் பழைய வீட்டிலிருந்து காலி செய்ய முடியும். 

எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேற்றிவிட்டால், விரும்பினால்கூட தனித் தொகுதியில் நிற்க முடியாதுதானே. அதுவரை, தனித் தொகுதியிலோ பொதுத் தொகுதியிலோ நிற்பதுதானே சரியானது. 

ஒரு வேலை பிடிக்கவில்லை என்றால், வேறு வேலை கிடைக்கின்ற வரையில் ஏற்கனவே இருக்கும் அந்த வேலையில் நீடிப்பதுதான் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல; சரியான முறையும் கூட. புதிய வேலை கிடைத்த பிறகு பழைய வேலையை உதறிப்போவதில் இழப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.


ஏர் மகாராசன்

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

17.12.2020

புதன், 16 டிசம்பர், 2020

பண்பாட்டு அழகியலும் அரசியலும்: மிகுந்த ஆழமான தேடுதலோடும் எளிதாகப் புரியும் வண்ணமும் விளக்குகிற நூல்:- கவிஞர் கண்மணிராசா



ஓர் அருமையான ஆய்வு நூலாகத் திகழ்கிறது தோழர் ஏர் மகாராசன் அவர்களின் 'பண்பாட்டு அழகியலும் அரசியலும்' என்கிற நூல். அதுவும் விவசாயிகளின் போராட்டம் வெடித்துக் கிளம்பியிருக்கும் இத்தருணத்தில் இந்நூலை வாசிக்க வாசிக்கப் பிரமிப்பாக இருந்தது. 

மூன்று கட்டுரைகள் தமிழகத்தில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னிட்டு எழுதியவை.  ஏன் சல்லிக்கட்டு வேண்டும்...? என்பதற்கான விரிவான பதிலாக மட்டுமல்லாது, சல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் தமிழரின் குறிப்பாக, நிலத்தோடு நெருங்கிய தொடர்புடைய விவசாயிகளின் பண்பாட்டு உரிமையும்கூட என்பதைப் பல்வேறு தொல்தரவுகள் மூலமும் சங்க இலக்கியங்களின் ஆதாரங்கள் மூலமாகவும், சல்லிக்கட்டுத் தடை என்பதற்குப் பின்னுள்ள பார்ப்பனிய அரசியல் குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளது சிறப்பு. 

ஆய்வாக மட்டுமல்லாது நேரடியாக மதுரையில் நடந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற பட்டறிவையும், போராட்ட வழியெங்கும் நிறைந்து ததும்பிய உழைக்கும் மக்களின் அன்பையும் ஆதரவையும் பதிவு செய்துள்ளார்.

பேராசான் நா. வானமாமலையின் உழவுக்குடிகள் தொடர்பான ஆய்வுகள் பற்றிய கட்டுரையொன்றும், கீழடி ஆய்வுக்கட்டுரையும், கார்த்திகை எனப்படும் மா ஒளித் திருநாள் பற்றிய ஆழமான கட்டுரையும் உள்ளன.

ஏனைய கட்டுரைகள் சாதி... காட்சிமொழி... கவிதையின் அழகியல் அரசியல்... புதிய கல்விக் கொள்கை.. பெண் அரசியல் எனப் பேசுகின்றன. 

எடுத்துக்கொண்ட விசயத்தை மிகுந்த ஆழமான தேடுதலோடு.. ஆனால், எளிதாகப் புரியும் வண்ணம் விளக்குகிற ஆசிரியரின் எழுத்து அபாரம். 

எழுத்தில் மட்டுமல்ல தன் வாழ்விலும் உழைக்கும் மக்களின் மீதும்,  தமிழ் மண்ணின் மீதும்

தீராத காதல் கொண்ட 

ஏர் மகாராசன் தோழருக்கு அன்பும் நன்றியும். 

அவரின் பிறநூல்கள்:

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு... 

நா. வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி... 

ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும்... காதலற்ற முத்தங்களும்... 

(பெண்விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்கள்) 

சொல்நிலம்... கவிதை நூல் 

உட்பட பல நூல்களின் ஆசிரியர். 


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தோழர் கண்மணி ராசா அவர்களது அறிமுக மதிப்புரை.

*

பண்பாட்டு அழகியலும் அரசியலும்... 

ஆதி பதிப்பகம். 

ரூ. 120.


நூல் வேண்டுவோர் 

தொடர்புக்கு:

அடவி முரளி

9994880005

திங்கள், 14 டிசம்பர், 2020

உழவர் போராட்ட ஆதரவும் இரட்டை வேட நிலைப்பாடும்: மகாராசன்

அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், உழவர்களின் வேளாண் உற்பத்தி வாழ்வியலைப் பாதுகாக்கும் நோக்கிலும், சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வேளாண் துறையைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்தியாவின் வடபகுதி உழவர்கள் பெருந்திரளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டு வருகிறது. போராடிக் கொண்டிருக்கும் உழவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் தமது தார்மீக ஆதரவைத் தந்து கொண்டிருக்கின்றனர்.

வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், உழவர்களின் வாழ்வியலுக்கு எதிராகச் சட்டங்களை இயற்றிக் கொண்டும், உழவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலும் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் பல்வேறு தரப்பினர் தமது உழவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பெரும்பகுதித் தரப்பினரின் ஆதரவைப் பெற்றதாக வடக்கத்தி உழவர்களின் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கிறது.

வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தமது தார்மீக ஆதரவைத் தெரியப்படுத்தி வருகின்றனர். வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்ச் சமூகத்தின் பொது மனசாட்சி தமது ஆதரவைத் தார்மீகமாகத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. உழவர் இயக்கங்கள், சமூக சனநாயக சக்திகள், பல்வேறு அரசியல் கட்சிகள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், தமிழ்தேசிய இயக்கங்கள் போன்றவை வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை தார்மீகமாக ஆதரித்தும், பல்வேறு ஆதரவுப் போராட்டங்களை நடத்தியும் வருகின்றன.

சுவரொட்டி, துண்டறிக்கை, தெருமுனைக்கூட்டம், ஆர்ப்பாட்டம், மறியல், பரப்புரை போன்ற பல்வேறு வகையில் வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தத்தமது அரசியல் களங்களில் செயலாற்றி வருவதோடு, சமூக ஊடகங்கள் பலவற்றிலும் தீவிரப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்திலும் பரப்புரையிலும் செயலாற்றும் தமிழகத்தின் அனைத்துச் சனநாயக சக்திகள், உழவர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் வரவேற்கத்தக்கவை; பாராட்டத்தக்கவை. போராடுகிற உழவர்களின் பக்கம் அனைவரும் நிற்பதே நியாயமும் கூட.

உழவர்களின் பக்கம் நிற்பதாகக் கருதும் அல்லது சொல்லிக்கொள்ளும் அல்லது களம் காணும் அனைத்துத் தரப்பினரும் வடக்கத்தி உழவர்களின் நியாயத்தைத்தான் உணர்ந்திருக்கிறார்களே ஒழிய, தெக்கத்தி உழவர்களின், குறிப்பாகத் தமிழகத்துப் பெருந்திரள் உழவர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து கொள்ளவுமில்லை; புரிந்துகொள்ளவுமில்லை. 

பெருந்திரள் உழவர்களின் அடையாளப் போராட்டங்களையும் தன்மானப் போராட்டங்களையும் கண்டும் காணாமல் இருப்பதும், அவர்களது கோரிக்கையில் இருக்கும் உண்மைத் தன்மைகளையோ அல்லது நியாயத்தையோகூட காதுகொடுத்துக் கேட்கவும் பொது சமூக மனசாட்சி மறுத்துக்கொண்டேதான் இருக்கிறது. வடக்கத்தி உழவர்களின் நியாயத்தை உணர்ந்த பொது சமூக மனசாட்சியானது, தமிழக உழவர்களின் பெருந்திரள் கோரிக்கையின் நியாயத்தை உணர மறுக்கிறது; கள்ள மவுனம் காக்கிறது. கூடவே, உள்ளுக்குள் இருக்கும் சாதியாதிக்க உணர்வுக்கும், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதியாதிக்கக் கருத்தியலுக்கும் அதன் பிழைப்புவாத சக்திகளுக்கும் ஏதோ ஒருவகையில் பலியாகிக் கிடக்கிறது; அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது; ஒத்தூதிக் கிடக்கிறது.
ஆனால், வடக்கில் போராடும் உழவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக வேடம் கட்டிக்கொள்கிறது.

வடக்கில் போராடும் உழவர்கள் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரையிலும் தங்களை உழவர்களாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளனர். பல்வேறு மொழி பேசக்கூடியவர்களாக இருந்தாலும், பல்வேறு தேசிய இனங்களாக இருந்தாலும், பல்வேறு வட்டாரத்தினராக இருந்தாலும், பல்வேறு சாதி மதத்தினராக இருந்தாலும், வேளாண்மை செய்கிற அவர்கள் தங்களை உழவர்கள் என்றும், வேளாண்மை செய்கின்ற அவர்களை உழவர்கள் என்றே இந்தியாவின் வடபகுதி உழவர்கள் அடையாளப்படுகின்றனர். 

புரிதலுக்காகச் சொல்வதெனில், இந்தியாவின் வட பகுதியில் வேளாண்மை செய்கிற அவர்கள் வடக்கத்தி வேளாளர்கள்/ உழவர்கள். தாங்கள் செய்து வருகிற வேளாண் தொழில்சார்ந்த அடையாளப் பெயரோடுதான் அவர்கள் அடையாளப்படுகின்றனர். வேளாண் தொழில்சார்ந்த அடையாளத்தைப் பெற்றிருப்பதிலோ அல்லது பெறுவதிலோ வடக்கத்தி உழவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அப்படியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதனால்தான், அவர்கள் நேரிடையாகவே வேளாண் சட்டங்களை எதிர்த்துக் குறிப்பான பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தமிழகத்து உழவர்களின் பிரச்சினைப்பாடுகள் வேறு மாதிரியானவை. ஆதி காலத்திலிருந்து இன்றுவரையிலும் வேளாண் தொழிலைச் செய்து வருகிற பல்வேறு வேளாண் தொழில் மரபினர் தமிழகத்துப் பூர்வக்குடிகளாக இருக்கின்றனர். வேளாண்மை செய்கிற தொழில் மரபினரைத் தொழிற்பெயரால் பல்வேறு வகையில் அடையாளப்படுத்துகிற வழக்கம் தமிழகத்தில் இன்றுவரையிலும் இருக்கின்றது. உழவுத்தொழில் செய்வதால் உழவர் என்றும், வேளாண்மை செய்வதால் வேளாளர் என்றும் குறிப்பதே தமிழரின் பெருவழக்காக இருந்திருக்கிறது. இத்தகைய வேளாண் தொழிலைப் பல்வேறு குலங்களும் குடிகளும் குழுக்களும் செய்து வந்திருக்கின்றன. இதில் பல்வேறு மறைந்துபோயின; வேறு தொழிலுக்கு மாறிக்கொண்டன; புதியதாகவும் வந்துசேர்ந்தன. ஆனாலும், ஆதிகாலத்திலிருந்து இன்றுவரையிலும் வேளாண்மையோடும் வேளாண் தொழில் மரபோடும் பிண்ணிப் பிணைந்து வருகின்றவை மிகச்சில குலங்களும் குடிகளும் மட்டுமே.

அதிலும் குறிப்பாக, இன்றளவிலும் வேளாண் தொழில் மரபினராக இருப்பதோடு மட்டுமல்லாமல், தொல்லியல் அகழாய்வு, கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, பிற நாட்டார் குறிப்புகள் போன்ற வரலாற்று ஆவணங்களிலும், இலக்கணம், இலக்கியம் போன்ற தமிழ்மொழிசார் பதிவுகளிலும், நாட்டுப்புற வழக்காறுகள், வழிபாடு, சடங்கு உள்ளிட்ட பண்பாட்டு நடத்தைகளிலும் வேளாண் மரபினராகவே அடையாளப் படுத்தப்பட்டிருப்பவர்கள் மிகச்சில குலங்கள் மட்டுமே. குலத்தாலும் குடியாலும் வட்டாரத்தாலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் வேளாண் தொழில் செய்துவந்த தொழில் மரபினரை வேளாளர் என்ற தொழிற்பெயர் அடையாளத்தால்தான் குறிக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.

15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நுழைந்துவிட்ட ஆட்சி அதிகார மாற்றங்கள்/படையெடுப்புகள்/வன் குடியேற்றங்கள் போன்றவற்றால், தமிழகப் பூர்வீக வேளாண்மைக் குடிகளின் பெரும்பகுதி வேளாண் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன; பூர்வீக நிலங்களிலிருந்து பெரும்பகுதி வேளாண் குலங்கள் துரத்தப்பட்டுள்ளன. பூர்வீக வேளாண் தொழில் மரபினரோடு இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. பூர்வீக வேளாண் குலங்களிடம் இருந்து வந்த குடும்பு ஆட்சிமுறை எனும் நிர்வாக முறைகள்கூட மாற்றியமைக்கப்பட்டன. பூர்வீகக் குடிகளின் ஆட்சி, அதிகார, உற்பத்தி முறையோடு அவர்களுக்கிருந்த உறவு முற்றாக அழித்தொழிக்கப்பட்டன. கூடவே, பன்னெடும் காலமாக வேளாளராகவும், வேளாண் குலங்களாகவும் திகழ்ந்துவந்த பெருந்திரள் சமூகத்தை இழி சாதியாகவும் கீழ்ச் சாதியாகவும் சித்தரிப்பு செய்து, வேளாளர் எனும் அவர்களது தொழிற்பெயர் அடையாளங்களை வேளாண்மையோடு துளியும் தொடர்பில்லாத பிற குலங்களுக்கும் குடிகளுக்கும் வழங்பட்டுவிட்டன அல்லது அபகரித்துக்கொண்டன. 

பெயரளவில் வேளாளர் என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டிருக்கும் எந்தவொரு குலமும் குடியும்கூட வேளாண் தொழில் மரபினருக்கான வரலாற்றுத் தொடர்ச்சியும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்டவை கிடையாது.

அதேவேளையில், வேளாண்மையோடும் வேளாண் தொழில் மரபோடும் தம்மை அடையாளப்படுத்தி வருகின்ற பெருந்திரள் சமூகமானது, வரலாற்றுத் தொடர்ச்சியையும் பண்பாட்டுத் தொடர்பையும் முன்வைத்து, வேளாளர் எனும் தொழிற்பெயருக்கும் தங்களுக்கும் இருக்கிற தொன்மைச் சான்றாதாரங்களை அகச்சான்றுகளாகவும் புறச்சான்றுகளாகவும் முன்வைத்துத் தம்மை வேளாளர் எனும் பின்னொட்டுத் தொழில் பெயரால் அடையாளப்படுத்த வேண்டும் எனவும், வேளாண்மை செய்கிற தொழில் மரபினரான தங்களை வேளாளர் எனும் பின்னொட்டுத் தொழிற்பெயரால் அரசும் பொது சமூகமும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் போராடி வருகிறது உழவர் சமூகத்தின் ஒரு பகுதி.

ஆனால், வேளாண் தொழில் மரபினரின் தொழிற்பெயர் அடையாளக் கோரிக்கையான வேளாளர் எனும் பின்னொட்டுப் பெயர் அடையாளத்தை, குறிப்பிட்ட சில பல சாதியினருக்கான அடையாளம் போலவும், சாதிப் பட்டம் போலவும் கருதிக் கொண்டு, வேளாளர் எனும் தொழிற்பெயர் அடையாளத்தை வேளாண் தொழில் மரபினராகத் தொடரும் பெருந்திரள் சமூகத்திற்கு வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வேளாளர் என்பது சாதிப்பெயரோ குலப்பட்டமோ அல்ல. வேளாளர் என்னும் சொல்லானது, வேளாண்மைத் தொழில் செய்வதால் உருவான தொழிற்பெயர்ச் சொல். வேளாண்மை செய்கிற தொழில் மரபினர் யாவருக்கும் பொதுவான தொழிற்பெயர் அடையாளச் சொல். வேளாண்மை செய்கிற எந்தக் குலமும் குடியும் அடையாளப்படுத்திக் கொள்கிற தொழிற்பெயர் அடையாளமே வேளாளர் எனும் சொல்லாகும். இந்தத் தொழிற்பெயர் அடையாளச் சொல்லைப் பல குலங்களும் குடிகளும் தங்களது அடையாளப் பெயர்களோடு முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் இணைத்துக் கொண்டுள்ளன.

முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வேளாளர் எனும் சொல்லைக் கொண்டிருக்கிற பல குலங்களும் உண்மையில் வேளாண்மையோடு தொடர்பு கொண்டவை கிடையாது. அவ்வாறு, வேளாளர் எனும் பெயரை ஒட்டாகக் கொண்ட பல குலங்களும் ஒரே சாதியினரும் கிடையாது. பல சாதியினரும் வேளாளர் எனும் ஒட்டுச் சொல்லால் குறிக்கப்படுகின்றனர். வேளாண்மையோடு துளியும் தொடர்பில்லாதவர்களே தங்களை ஏதோ ஒருவகையில் வேளாளர் என அழைத்துக்கொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிற வேளாளச் சாதியினர், உண்மையாகவே காலங்காலமாக வேளாண்மையோடு தொடர்பு கொண்டிருக்கிற வேளாண் தொழில் மரபினர் தங்களையும் வேளாளர் என்று அடையாளப்படுத்தவும் அங்கீகரிக்கவும் வேண்டும் என்று கேட்கும்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வேளாண்மையோடு தொடர்பில்லாத போலி வேளாளர்கள்தான், வேளாண்மையோடு உண்மையாகவே தொடர்பு கொண்ட பெருந்திரள் சமூகத்தை வேளாளர் என அடையாளப்படுத்துவதை மறுக்கிறது; எதிர்க்கிறது; போராடுகிறது.

உண்மையாகவே வேளாளர் என்ற தகுதிக்கும் அடையாளத்திற்கும் உரியவர்களான பெருந்திரள் வேளாண் சமூத்தினரின் பெயர் மாற்றக் கோரிக்கையானது பண்பாட்டு அடையாள மீட்பும் தன்மதிப்புக்கான போராட்டமும் நிறைந்த ஒன்றாகும்.

வேளாண் தொழில் பெயர் அடையாளத்திற்காகப் போராடும் வேளாண் தொழில் மரபினரின் கோரிக்கையையும் பொது சமூக மனசாட்சி தார்மீகமாக ஆதரிப்பதுதானே நியாயம். இதை ஆதரிப்பதும் ஆதரிக்காமல் இருப்பதும்கூட ஒரு பக்கம் இருக்கட்டும்.

வேளாண்மையே செய்யத் தெரியாத, ஆணும் பெண்ணுமாய்ச் சேறு சகதியில் இறங்காத, வேளாண் தொழில்திறமும் நுட்பமும் இல்லாத, வேளாண்மையோடு பண்பாட்டு ஒட்டுறவு இல்லாத பல சாதியினர் தங்களை வேளாளர் எனச் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி அவர்கள் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் யாவரும் போலியான வேளாளர்கள்தான்.

வேளாண் தொழில் மரபோடு தொடர்பில்லாத பல சாதியினரும் தங்களை வேளாளர் என அழைத்துக்கொண்டும் அடையாளப்படுத்திக் கொண்டும் இருப்பதோடு மட்டுமல்லாமல், வேளாண் தொழிலை உண்மையாகச் செய்து வருகிற தொழில் மரபினரை வேளாளர் என அடையாளப்படுத்தக் கூடாது எனப் போலி வேளாளர்கள் எதிர்ப்புக் காட்டுவதும், மறுப்புக் காட்டுவதும், போராட்டம் செய்வதுமாகத் தீவிரம் காட்டுகின்றனர்.

யார் யாருக்கோ, எந்தெந்தக் குலங்களுக்கோ சாதியினருக்கோ வேளாளர் எனும் அடையாளப் பெயர் இருக்கும்போதும் வழங்கும்போதும் எதிர்ப்பும் மறுப்பும் போராட்டமும் செய்திடாத போலி வேளாளர்கள், உண்மையான வேளாண் தொழில் மரபினருக்கு வேளாளர் எனும் அடையாளப் பெயரை வழங்குவதற்கு எதிர்ப்பும் மறுப்பும் காட்டுகிறார்கள். அண்மைக்காலமாகப் பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். போலி வேளாளர்களின் இத்தகையப் போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பது அப்பட்டமான சாதியாதிக்க வெறியும் காழ்ப்பும் வன்மமும் அன்றி வேறில்லைதான்.

உண்மையான வேளாண் மரபினரின் அடையாளமான வேளாளர் என்னும் தொழிற்பெயரை அவர்களுக்கானதாக ஏற்கவும் அல்லது அவர்களுக்கு வழங்கவும் அங்கீகரிக்கவும் செய்வதுதான் நியாயம்.

அதேபோல, வேளாண் தொழில் மரபினருக்கு வேளாளர் எனும் பெயர் கொண்டு அடையாளப்படுத்துவதற்கு எதிர்ப்புக் காட்டுகிற
போலி வேளாளர்களின் சாதிய வெறியை, சாதியக் காழ்ப்பை, சாதிய வன்மத்தை எதிர்ப்பதும்தானே நியாயமானது.

ஆனால், போலி வேளாளர்களின் சாதியாதிக்க வெறியை, சாதிய வன்மத்தை, சாதியக் காழ்ப்பைப் பொது சமூக மனசாட்சி மட்டுமல்ல, சாதியொழிப்பு பேசுகிற - தீண்டாமை ஒழிப்பு பேசுகிற - பாட்டாளி வர்க்க விடுதலை பேசுகிற - ஒடுக்கப்பட்டோர் விடுதலை பேசுகிற - தமிழ்த் தேச விடுதலை பேசுகிற - சமூக சனநாயகம் பேசுகிற - சமூகநீதி பேசுகிற எந்தவோர் சமூக இயக்கங்களும் எதிர்க்கவோ கண்டிக்கவோகூட முன்வரவில்லை.

போலி வேளாளர்களின் சாதியாதிக்க வெறியோடும், சாதியக் காழ்ப்போடும், சாதிய வன்மத்தோடும் நடைபெற்று வருகிற சிற்சில போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களைக்கூட ஊதிப் பெரிதாக்கிக் காட்டும் வேலைகளைத்தான் அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் செய்து வருகின்றன.

வடக்கத்தி வேளாளர்கள் தங்கள் வேளாண் தொழிலைப் பாதுகாக்கப் பெரிதும் போராடி வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தெக்கத்தி வேளாளர்களோ தங்களை வேளாளர் என்று அடையாளப்படுத்துங்கள்; அங்கீகரியுங்கள் என்று பெயர் அடையாளத்திற்கே போராடும் சூழலில்தான் இருந்து கொண்டிருக்கின்றனர். இன்னொருபக்கம், வேளாளர் என்று போலியாகச் சொல்லிக்கொள்ளும் போலி வேளாளர்களோ, உண்மையான வேளாளர்களுக்கு வேளாளர் என்று அடையாளம் வந்துவிடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தில்லியிலும் வடக்கிலும் நடக்கின்ற உழவர்களின் போராட்டத்தின் பக்கம் நிற்பது உண்மையென்றால், வடக்கத்தி வேளாளர்களின் போராட்டத்தை ஆதரிப்பது உண்மையென்றால், தமிழ்நாட்டின் தெக்கத்தி உழவர்களின் பெயர் அடையாளப் போராட்டத்தின் பக்கமும் நில்லுங்கள்; தெக்கத்தி வேளாளர்களின் பக்கமும் நில்லுங்கள். தெக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையின் நியாயத்தை ஆதரியுங்கள். போலி வேளாளர்களின் சாதியவெறி, சாதியக்காழ்ப்பு, சாதிய வன்மத்தைக் கண்டியுங்கள்.

உழவர்களின் பக்கம் நிற்பது உண்மையானால், வடக்கத்தி வேளாளர்களின் பக்கம் நிற்பதைப்போல, தெக்கத்தி வேளாளர்களின் பக்கமும் நில்லுங்கள். வடக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையை ஆதரிப்பதுபோல, தெக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையையும் ஆதரியுங்கள்.

உழவர்களின் பக்கம் நின்று, வடக்கத்தி உழவர்களுக்கு/வேளாளருக்கு எதிராக இருக்கும் போலி சனநாயக அரசை அம்பலப்படுத்துவதுபோல, தெக்கத்தி உழவர்களுக்கு / வேளாளருக்கு எதிராக இருக்கும் போலி வேளாளர்களின் சாதி விரோதத்தையும் அம்பலப்படுத்துங்கள். இதுவும்தான் உழவர் பக்கம் நிற்பதன் உண்மையான நிலைப்பாடு.

மாறாக, வடக்கத்தி வேளாளர்களை மட்டுமே ஆதரிப்பதும்; வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தெக்கத்தி வேளாளர்களின் அடையாளப் போராட்டத்தை ஆதரிக்காமலும், போலி வேளாளர்களின் சாதியாதிக்கத் திமிர்த்தனத்தை எதிர்க்காமல் இருப்பதும் நேர்மையான நிலைப்பாடாகக் கருதமுடியாது. இரட்டை வேடம் போடும் இத்தகைய நிலைப்பாடு என்பது சாதி ஆதிக்கத்தின் பக்கமே நிற்பதாகும்.

இதைக் குறித்து, திராவிட இயக்கங்கள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் மட்டுமல்ல, புரட்சிகர மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கூட இன்னும் விளங்கிக்கொள்ளவும் இல்லை; அறிந்து கொள்ளக்கூட முன்வரவுமில்லை. அதனால்தான், அந்த மக்களிடமிருந்து மெல்லமெல்ல அவை அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு மத பயங்கரவாத சக்திகள் ஊடுறுவிக் கொண்டிருக்கின்றன.

பாவம் அவர்கள். எவரது துணையுமின்றி ஒண்டியாய் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். உழவர்களின் பக்கம் நிற்பது உண்மை எனில், பெயர் அடையாளத்துக்காகவும் வேளாண்மைத் தொழிலுக்காகவும் போராடுகிற உண்மையான வேளாளர் பக்கம் நில்லுங்கள்; அவர்களுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுங்கள். இதுவே சமூக நீதியும் சமத்துவ நீதியும்கூட.

ஏர் மகாராசன்
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
14.12.2020.
*
ஒளிப்படம் உதவி:
ஊடகவியலாளர் 
இரா.சிவக்குமார், மதுரை.