திங்கள், 18 ஏப்ரல், 2022

தமிழ் ஆண்டுப் பிறப்பை எதுவாகக் கொள்வது? - மகாராசன்


தமிழ் நிலம் முழுவதையும் ஒரே மன்னர் ஆண்டிருக்கவில்லை. வட்டார அடிப்படையிலும் மண்டல அடிப்படையிலும் பல்வேறு பெருநில மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். 

தமிழ் நிலம் பல்வேறு அயல் இனத்தாரின் படையெடுப்புகளுக்கு உள்ளாகி, பல்வேறு அயல் மொழி, பண்பாட்டு அதிகாரங்கள் பல காலம் நீடித்திருக்கின்றன. 

ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நடைமுறைப்படுத்திய - பின்பற்றிய ஆட்சி ஆண்டு நடைமுறைகளே அந்தந்த காலகட்டத்தில் ஆண்டுப் பிறப்பாகவும் கொண்டாட்டமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, தமிழர்கள் எல்லா பருவங்களையும் இன்முகத்தோடு வரவேற்கும் பண்பாட்டு நடத்தைகளைக் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். 

இளவேனில், முதுவேனில், முன்பனி, பின்பனி, கார், கூதிர் என ஆறு பருவகாலங்களையும் வரவேற்று மகிழ்ந்திருக்கின்றனர். அந்தவகையில், தையும் வரவேற்றுக் கொண்டாடப்பட்டிருக்கிறது. சித்திரையும் வரவேற்றுக் கொண்டாடப்பட்டிருக்கிறது. தமிழ் ஆண்டுத் தொடக்கம் தையா? சித்திரையா? எனும் குழப்பங்களும் விவாதங்கள் இன்னும் நடந்துகொண்டிருப்பதற்கான காரணம் யாதெனில், எல்லாக் காலத்திலும் குறிப்பிட்ட மாதத்தை மட்டும் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடியிருக்கவில்லை என்பதுதான். 

இப்போதைய காலகட்டத்தில், தமிழர்களுக்கான ஆண்டுப் பிறப்பை எதுவாகக் கொள்வது?

சித்திரையும் தையும் ஆண்டுப் பிறப்பு மாதங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்த இரண்டில் எதை ஏற்பது? சித்திரையை ஆரியமும் முன்மொழிந்திருக்கிறது; வழிமொழிந்திருக்கிறது. தமிழ் மரபில் சித்திரையும் உண்டு; தையும் உண்டு. இறுதியாக, ஆண்டுக் கணக்கிற்கு- ஆண்டுத் தொடக்கத்திற்கு உரிய மாதமாகக் கொள்வது எதை? 

ஆரியத்திற்கு எதிராகவும் மறுப்பாகவும் இருந்திருப்பதே தமிழர் மரபு. அவ்வகையில், ஆரியத்திற்கு எதிரானதான பண்பாட்டு நடத்தையாகக் கொள்ளும் வகையில், தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டாகக் கருதலாம். சித்திரையை வேனில்காலத் தொடக்கமாய்க் கொண்டாடலாம்.



ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

தமிழ் எழுத்துகளின் பண்பாட்டு மெய்யியலை எடுத்துரைக்கும் மிக முக்கியமான நூல்: செ.தமிழ்நேயன்

தமிழ் மொழியாய்வு மற்றும் மாந்த இன வரலாறு குறித்த நூல்கள் பல வந்திருக்கின்றன. அந்த நூல்களெல்லாம் கவனிக்கத் தவறிய பகுதியை எடுத்துக்கொண்டு, பெரும் ஆய்வுப் பரப்பை அடையாளம் காட்டும் வகையில் வெளிவந்திருக்கிறது மகாராசன் எழுதிய 'தமிழர் எழுத்துப்பண்பாட்டு மரபு' எனும் நூல்.


மொழியின் துணையில்லாமல் மாந்த இனம் வளர்ச்சியை நோக்கிப் பயணித்திருக்க முடியாது. அதேபோல, மொழியும் மாந்தரின் துணையில்லாமல் செழுமை பெற்றிருக்க முடியாது. 

மொழி என்பது வெறும் தொடர்புக் கருவியாகப் பார்க்கப்படுகிறது. இன்னொருபுறம், மொழிப் பெருமிதம் காரணமாகத் தூய புனித நிலைக்கு அடையாளப்படுத்தும் போக்கும் நிலவுகின்றது. 

மொழியின் அடிப்படை பேச்சு. பேச்சின் அடிப்படை சிந்தனை. மாந்தன் சிந்திக்கத் துவங்கிய நிகழ்வு, தற்செயல் நடவடிக்கையாகதான் அறிவியல் உலகம் பார்க்கிறது. அகண்ட பெரிய பரப்பில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்த தொகுப்பில் மாந்த இனம் மட்டுமே பேசக் கற்றுக்கொண்டது. இந்தப் பேச்சை கற்றுக்கொள்வதற்குப் பல்வேறு போராட்டங்களை நேர்கொண்டது முந்து நிலை மாந்தர் கூட்டம்.

இந்நிலையில், இயற்கைப் பெருவெளியில் - பல்வேறு உயிரினங்கள் வாழும் தொகுப்பில் மாந்த இனமே மட்டும் பேசக் கற்றுக்கொண்ட உயிரினமாகப் பரிணமித்து வந்திருக்கும் மாந்தரினச் செயல்பாடுகளையும், மொழித்தோற்றத்தின் முதன்மை நிலையில் உள்ள ஒலிகளைத் தொடர்புக் கருவியாக மாற்றிய மாந்தன் முயற்சி நிலைகளைப் பற்றியும் சமூகவியல் கண்ணோட்டத்தில் விவரித்திருப்பதோடு, மொழி தோன்றுவதற்கு அடிப்படைக் கூறுகளாகக் கருதப்படுகிற ஒலி, ஓவியம், கீறல்கள், வாயொலி, பேச்சு, எழுத்து இவற்றைப் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.

மாந்தர் கூடி வாழும் முறைக்கு அடிப்படையே பேச்சு. பேசுவதைக் கடத்துவதற்குக் குறியீடுகளைப் பண்டைய மாந்தர் பயன்படுத்தினர் என்றும், குகைகளில், பாறைகளில் காணப்படும் கீறல்கள் தொடர்புக் கருவியாக இருந்திருப்பதையும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறார் மகாராசன்.

மேலும், கீறல்கள் ஒழுங்கு முறை வடிவம் பெற்ற பின்னர், சித்திர எழுத்துகளாக மாறி உள்ளன. எழுத்துக்களின் முந்தைய நிலை ஓவியம், வரி இருந்திருக்கின்றன என்றும், விலங்குகளின் ஒலியைக் குறிக்கும் வகையில் ஒலி எழுத்துரு முறை இருந்தது என்பதையும் காட்சிப்படுத்துகிறார்.

இன்றைய வணிகப் பயன்பாட்டில் உள்ள கணினி வரையிலான குறியீடுகள் பண்டைக்கால வரைவுக் கோடுகளை நினைவுப்படுத்துகின்றன. மேலும், குழுக்குறிச் சொற்களும் அவற்றின் நீட்சியாகத் தான் தெரிகின்றது என்பதையும் விவரிக்கிறது இந்நூல்.

உணவுத் தேவையின் காரணமாக வேட்டைச் சமூக நிலையில் இருந்த சமூகம் உற்பத்தி நிலையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய காலத்தில்தான் மொழி அறிவு தோன்றியிருக்கக்கூடும். எண்ணங்களைப் பரிமாறுவதற்காகக் கோடுகள், ஓவியங்கள், எழுத்துக்கள் போன்ற வடிவில் தொடர்பு நிலை இருந்திருக்க வேண்டும். தொடர்பு நிலை மேலும் செழுமை அடைந்த பின்னர், அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் மொழிக்கான இலக்கணம், இலக்கியங்கள் படைக்கப்பெற்றிருக்கும் என்ற பார்வையும் தோன்றுகிறது.

மொழியை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இலக்கணக் குறிப்புகள் தோன்றியிருக்கின்றன. வாய்மொழிச் சொற்கள் வரி வடிவத்தில் இடம்பெறவும் இலக்கண மரபுகளை வகுத்திருந்தனர் பண்டையத்தமிழர். 

பண்டையத்தமிழர் வணிகத்தில் சிறந்து விளங்கினர். குறியீடுகள் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தன என்றும், அதற்குக் கண்ணெழுத்து என்ற பெயர் இருந்தது என்பதையும் இலக்கியச்சான்றுகளோடு நிறுவுகிறது இந்நூல்.

இலக்கியமும் இலக்கணமும் ஒரு மொழியின் இருகண்கள் போன்றது. அந்தக் கண்களுக்கு ஒளி கொடுப்பது எழுத்துகள் மட்டுமே. அந்த எழுத்துக்களின் வகைப்பாடுகள் பற்றிய குறிப்புகளை இலக்கியச் சான்றுகளின் உதவியோடு பட்டியலிடுகிறது நூல். மேலும், பாட்டியல் நூல்களில் உள்ள முரண்பாடுகளையும் பதிவு செய்வதோடு, எழுத்துகள் மீதான பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் காட்சிப்படுத்துகிறது.

பண்டையத் தமிழி எழுத்துக்கள் மற்றும் பிராமி எழுத்துக்களுக்கு இடையேயான வேறுபாடுகள், தமிழி எழுத்துகளின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் உள்ள முரண்களையும் பதிவு செய்துள்ளார் மகாராசன். கிரந்த மொழிப்பயன்பாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துகிறது இந்நூல்.

தமிழ் எழுத்து மரபின் வளர்ச்சி நிலைகள் கடந்து வந்த பாதைகளை வரலாற்றுத் தடங்களோடு நிறுவும் மகாராசன், தமிழ் எழுத்துக்கள் வகைப்பாடு என்ற பெயரில் பாலினம், சமயம், சாதி, விலங்கு என்ற பெயரில் வேறுபடுத்தி உள்ள அறுவெறுப்பு நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். தமிழர் மட்டும் ஒடுக்குமுறையை நேர்கொள்ளவில்லை. தமிழ் எழுத்துகளும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின என்பதையும் சான்றுகளோடு நிறுவுகிறார்.

மேலும், தமிழ் எழுத்துக்களின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் ஆய்வாளர்களின் சறுக்கல்களையும், இரண்டகத்தினையும் காட்சிப்படுத்துவதோடு, தமிழ் எழுத்துகள் தனித்த மரபு கொண்டவை என்பதையும் விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

தமிழர் எழுத்து முறையை வைதீக மரபு தன்வயப்படுத்தும் நோக்கில், தமிழ் எழுத்து வரிவடிவத்தைப் பிராமிய அடையாளத்தோடு சேர்த்து, தமிழ் பிராமி என்ற அடையாளத் திணிப்பின் பின்னணியில் உள்ள வைதீக நிறுவன சமயத்தின் போக்குகளையும் பதிவு செய்துள்ளார் மகாராசன்.

உலகப் பெரும்பரப்பில் மாந்த இனத்தின் குமுகக் கூட்டமைப்பிற்கு மொழியின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகும். பண்பாடு என்பது ஒழுங்கு வடிவம் பெற்ற நிலையாகும். அந்தப் பண்பாட்டு ஒழுங்கு முறை எழுத்துகளுக்கும் பொருந்தும் என்ற வகையில் எழுத்துகளின் பண்பாட்டியல் பின்புலத்தைப் பதிவு செய்கிறார் மகாராசன்.

மொழி வரலாற்று நூல்கள் பெரும்பாலும் இலக்கண, இலக்கியச் சான்றுகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் வேளையில், தமிழ் எழுத்துக்கென்று ஒரு பண்பாட்டு வரலாறு இருக்கிறது; அத்தகைய எழுத்துப் பண்பாட்டு மரபின் உள்ளே மண் சார்ந்த மக்களின் பண்பாட்டு அரசியலும் இருக்கிறது என்பதைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

பிள்ளையார் வழிபாடு சார்ந்த இயங்கியல் முறைகளில், வைதீக மரபிற்கும் தமிழ் மரபிற்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துக்கும் மகாராசன், பிள்ளையார் சுழி என்ற குறியீடு உணர்த்தும் பண்பாட்டு மெய்ப்பொருளை மிக ஆழமாகவும் நுணுக்கமாகவும் விவரிக்கிறார்.

சமக்கிருத மொழியின் - வைதீக மரபின் பிள்ளையார் உருவத்தின் குறியீடு பழங்குடிகள் வீழ்ச்சியின் அடையாளத்தைத் தான் நினைவுபடுத்துகின்றன. தமிழர் வழிபடும் பிள்ளையார் உருவமற்ற பிடிமண் வகையைச் சார்ந்த ஒன்றாகும்.

இந்நிலையில், தமிழில் உள்ள "உ" என்ற குறியீட்டின் பண்பாட்டு மெய்பொருளை இலக்கியச் சான்றுகளின் துணைக்கொண்டு நிறுவுகிறார் மகாராசன். அவ்வகையில், உ என்ற குறியீட்டின் அடையாளம் என்பது, நிலம் என்னும் உலகத்தைக் குறிக்கிறது என்று பதிவு செய்கிறார்.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று உழவுப்பண்பாடு. அந்தப் பண்பாட்டின் கருப்பொருளில் உலகைப் போற்றும் வகையில் பிள்ளையார் பிடித்தல் செய்முறையும், நாற்றுமுடிக்குப் பிள்ளை முடி என்று விளிப்பதும் தனித்த பண்பாட்டு மரபின் அடையாளமாகத்தான் தெரிகிறது.

தமிழர்களின் அனைத்து நற்செயல்களில் ஆவணப்படுத்தப்படும் "உ"என்ற எழுத்து உணர்த்தும் பண்பாட்டு மெய்யியலைப் பதிவு செய்கிறது. தமிழின் உ என்ற எழுத்து உலகத்தைக் குறிக்கும் பொருட்டே பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பல்வேறு சான்றுகளைக் கொண்டு நிறுவுகின்றது நூல். 

செழுமையான இலக்கண, இலக்கியங்கள் கொண்டது தமிழ்மொழி. இச்சிறப்பிற்கு அடிப்படையான தமிழ் எழுத்துக்களின் பண்பாட்டு மெய்யியல் மரபு பற்றி மானுடவியல், தொல்லியல், இலக்கண இலக்கியம், வரலாறு, பண்பாடு எனப் பன்முக நோக்கில் தமிழர் எழுத்து மரபின் அறத்தையும் அரசியலையும் பேசுகின்ற மிக முக்கியமான ஆய்வு நூலாகத் திகழ்கிறது இந்நூல்.

தமிழ்ச்சமூகத்திற்காக ஆய்வுத் தளத்தில் தொடர்ந்து இயங்கிவரும் மகாராசனின் படைப்பான தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு எனும் ஆய்வு நூல், அறிவுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆதி பதிப்பகம் மிக நேர்த்தியாக வடிவமைப்பு செய்து வெளியிட்டிருக்கிறது. வாழ்த்துகள்.

கட்டுரையாளர்: 
செ.தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.




வியாழன், 14 ஏப்ரல், 2022

பொன்னேர் உழவுச் சடங்கும் பண்பாட்டு நடத்தைகளும் : மகாராசன்




வேளாண்மை செய்யும் நிலத்தில், முதன் முதலாக உழவு செய்வதைப் பொன்னேர் பூட்டல் என்றே உழவுத் தொழில் மரபினர் சிறப்புடன் கொண்டாடி வருகிறார்கள். இதனை வேளாண்மை உழவுத் தொழிலுக்கான வளமைச் சடங்காகவே நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலும் பிற வட்டாரங்களிலும் சித்திரை அமாவாசை முடிந்தவுடன் வளர்பிறையிலோ அல்லது சித்திரை முதல் நாளிலோ அல்லது முதல் வாரத்திலோ அந்தந்த ஊர்களில் உள்ள உழவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரே நிலத்தில் கோடை உழவு செய்யும் சடங்கைச் செய்து வருகின்றனர்.


தமிழ்நாட்டின் சிற்றூர்ப் புறங்களில் நடைபெற்று வருகின்ற உழவுச் சடங்கின் பின்புலத்தில் இருக்கும் பண்பாட்டு நடத்தைகள் பற்றி, கப்பிகுளம் ஜெ.பிரபாகர் காட்சிப்படுத்தும் விவரிப்புகள் அத்தகைய வளமைச் சடங்கின் நோக்கத்தையும் பின்புலத்தையும் புலப்படுத்தியுள்ளன.

அதாவது, அதிகாலையில் வீடு கழுவி, வேளாண் புழங்கு பொருட்களைச் சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி, கலப்பையுடன் ஊர்க்குடும்பர் நிலத்தில் ஒன்று கூடுவார்கள். ஏர் ஓட்டுவதற்குப் பழகாத புதிய காளைகளும், ஏர் ஓட்டிப் பழகாத இளந்தாரிகளும் அங்கே இருப்பார்கள். வேடிக்கை பார்க்க வருபவர்களும், சாட்டைக்கம்பு எனும் தார்க்குச்சிகளைப் புதிதாகச் செய்து கொண்டு வருவார்கள். 

கலப்பை, மேழி, கொழு, கயிறு, தார்க்குச்சி மட்டுமின்றி மாடுகளுக்கும் மஞ்சள், சந்தனம் பூசி, பூச்சூடி, மாலை அணிவிப்பார்கள். நிலத்தின் வடகிழக்குப் பகுதியில், நாழி நிறைய நெல் வைத்து, தேங்காய், பழம், சந்தனத்துடன் சூரியனை நோக்கி வேண்டுவார்கள்.

நிலக்கிழார்கள் என்றழைக்கப்படும் பெரிய விவசாயிகளும், மாடு, வண்டி, சிறிதளவு நிலம் வைத்துள்ள நடுத்தர விவசாயிகளும், சிறு விவசாயிகளும் ஒட்டுமொத்தமாக ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பார்கள். ஊர் நாட்டாண்மை, நீர்ப் பாய்ச்சி முன்னிலையில் ஊர்க்குடும்பரின் நிலத்தில் சம்சாரிகள் உழவு செய்வார்கள். 

பெண்கள் பனை ஓலைப் பெட்டியில் இருக்கும் நெல், கம்பு, சோளம், வரகு, கேழ்வரகுத் தானியங்களை விதைப்பார்கள். புதிதாக உழவு பழகும் காளைகளையும் ஏரில் பூட்டி உழவுக்குப் பழக்குவார்கள். இதை உழவு மாடு வசக்குதல் என்பர். ஏர் ஓட்டிப் பழக நினைக்கும் இளைஞர்களும் ஏர்க்கலப்பையைப் பிடித்து உழவு செய்வார்கள். 

பின்னர், கூடியிருக்கும் அனைவருக்கும் தேங்காய், பழம் மட்டுமின்றி பானக்கரையம் என்றழைக்கப்படும் புளிக்கரைசல், பனங்கருப்பட்டி சேர்த்த பானகம் வழங்குவார்கள். படையலில் வைத்த கப்பியரிசியை அதாவது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து பனை வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்து அனைவருக்கும் வழங்குவார்கள். வேளாண் கிராமங்களில் அன்று தோசை, இட்லி காலை உணவாக இருக்கும். காய்கறி குழம்பு, ஆடு, கோழி கறிச்சோறுடன் மதிய விருந்து நடக்கும்.

புஞ்சையை நோக்கி அணிவகுத்துச் செல்லும் மாடுகளை, பொன்னேர் பூட்டி முடித்தவுடன் அவிழ்த்து விட்டு விடுவார்கள். வீடுகள் நோக்கி மாடுகள் ஓடி வரும். இளைஞர்கள் வீடு திரும்பும்போது முறைப்பெண்கள் மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்வும் சில கிராமங்களில் நடப்பதுண்டு. நாளேர் உழவு முடிந்ததும், அவரவர் விவசாய நிலங்களில் கோடை உழவு செய்வார்கள் என விவரிக்கிறார் கப்பிகுளம் ஜெ.பிரபாகர். 

பொன்னேர் உழவு எனும் இத்தகைய உழவுச் சடங்கானது, வேளாண்மை உழவுத் தொழில் சார்ந்த வளமைச் சடங்காகவும், வேளாண் உழவு மரபின் பண்பாட்டு அடையாளமாகவும் மட்டுமல்லாமல், வேளாண்மை உழவுத் தொழில் செயல்பாடுகளுக்கான ஒத்திகைச் சடங்காகவும் பயிலுகைச் சடங்காகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வேளாண்மை உழவுத் தொழில் மரபையும் நுட்பத்தையும் அறிவையும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் அல்லது கையளிக்கும் வகையில்தான் உழவுச் சடங்கின் உள்ளீடும் நோக்கமும் அமைந்திருக்கின்றன.

கால மாற்றமும் சமூக மாற்றமும் புதிய புதிய வேளாண்மை உற்பத்தி முறைகளையும், உற்பத்திக் கருவிகளையும் தந்திருக்கின்றன. அவற்றுள் நிறைய சாதக பாதகங்கள் இருந்தாலும், வேளாண்மை உழவுத் தொழிலும், அதனை மேற்கொண்டு செய்துவரும் உழவுத் தொழில் மரபினரும் இருக்கவே செய்கின்றனர். 

கடந்த காலத்தில் இருந்தது போன்று இப்போது பெருவாரியாக மாடுகளும் இல்லை; ஏர்க் கலப்பைகளும் இல்லை. ஒவ்வோர் ஊரிலும் ஒரு சிலர்தான் உழவு மாடுகளையும் ஏர்க் கலப்பைகளையும் வைத்திருக்கின்றனர். உழவுந்துகளும், உழவுந்துக் கொக்கிக் கலப்பைகளும் சட்டிக் கலப்பைகளும்தான் பெருவாரியான உழவுக் கருவிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றன.  

ஆனாலும், வேளாண்மை சார்ந்த சிற்றூர்ப் புறங்களில் உழவுச் சடங்குகள் இன்னும் உயிர்ப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். அதனால்தான், ஒருசில உழவு மாடுகளின் ஏர்களுக்குப் பின்னே உழவுந்துகளும் அணிவகுத்து நிற்கின்றன. உழவு மாடுகளையும் ஏர்க் கலப்பைகளையும் அலங்கரிப்பதைப் போன்றே உழவுந்துகளின் இயந்திரக் கலப்பைக்கும் மஞ்சள், குங்குமம், மாலை கட்டி அலங்கரிக்கப்படுகிறது. 

ஏர் மாடுகளோடு உழவுந்துகளையும் சேர்த்துக்கொண்டு ஊர்க் குடும்பர், நீர்ப் பாய்ச்சி நிலத்திலோ, கோவில் நிலத்திலோ, ஊரின் பொது நிலத்திலோ புழுதியை உழவு செய்கின்றனர். இதற்கும் நாளேர் பூட்டுதல் - பொன்னேர் பூட்டுதல் என்றுதான் பெயர். உழவுக் கருவிகள் மட்டும்தான் மாறி இருக்கின்றன; உழவுத் தொழில் மரபினரோ அவர்களின் உழவுச் சடங்கு மரபோ இன்னும் மாறவுமில்லை; மறையவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

புஞ்சை நிலத்தில் மட்டுமின்றி நஞ்சை நிலத்திலும் நாளேர் பூட்டுதல் நடக்கின்றன. மானாவாரிப் பகுதிகளில் மட்டுமல்லாமல், ஆறுகள் பாயும் ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு நாளில் பொன்னேர் பூட்டும் நிகழ்வு நடக்கிறது. நாளேர் பூட்டினால்தான் - உழவுச் சடங்கை நிகழ்த்தினால்தான் விளைச்சல், அறுவடை நன்றாக இருக்கும் என்பது உழவுத் தொழில் மரபினரின் நம்பிக்கையாக மட்டுமல்ல; பட்டறிவின் புலப்பாடாகவும் இருகின்றது. 

வேளாண்மை உழவுத் தொழிலின் பட்டறிவைத் தொழில் மரபாகக் கொண்ட உழவுத் தொழில் மரபினரே, உழவுத் தொழில் மரபின் நீட்சியாக இருந்து வருவதை இத்தகைய உழவுச் சடங்குகள் புலப்படுத்துகின்றன. கோயம்புத்தூர் பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நாற்று நடவுத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவின் ஓர் அங்கமாக, தங்கக் கலப்பையால் ஏர் பூட்டும் சித்திரமேழி உழவு என்றழைக்கப்படும் உழவுச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. 

மேலும், ஊர், நாடு, பட்டி, பதி, பாளையம், வட்டகை பதினெட்டுக் குடும்புகளின் பிரதிநிதியாக நான்கு வம்சங்களைச் சேர்ந்த பேரூர் நாட்டுப் பட்டக்காரர்கள், ஊர்ப் பண்ணாடிகள் முன்னிலையில் வயலில் இறங்கி பொன்னேர் பூட்டி உழுகின்ற சடங்கும் நிகழ்த்தப்படுகிறது. அதாவது, சடங்கு மரபிலும் தொழில் மரபிலும் உழவுத் தொழில் மரபின் நீட்சி இருப்பதை அச்சடங்கு தெரிவிக்கிறது. 

உழவுச் சடங்கின் பண்பாட்டுப் பரவலை உலகின் பல பகுதிகளிலும் காண முடிகிறது. பொன்னேர் பூட்டும் அல்லது நல்லேர் பூட்டும் இத்தகைய உழவுச்சடங்கு, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, ஈழத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் அவ்வப்பகுதி உழவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, சித்திரை மாதத்தில் கம்போடியா நாட்டிலும் அங்குள்ள அரச பரம்பரையினர் தங்கத்தினால் ஆன ஏர் கொண்டு நிலத்தில் உழுது உழவைத் தொடங்கி வைப்பதும், அதன்பின்னர் உழவர்கள் தத்தம் வயலில் உழுவதுமான உழவுச் சடங்கு இன்றும் அங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதும் ஒப்பிடத்தக்கது. 




இவ்வாறாக, வேளாண்மை உற்பத்திச் செயல்பாடுகளை உழவுத் தொழிலாகவும் உழவுச் சடங்காகவும் புலப்படுத்தி வருகின்ற உழவுத் தொழில் மரபினரே - வேளாண் மரபினரே, வேளாண் மாந்தராக - உழவுத் தொழில் வேளாளராக இருந்து வருவதை இத்தகைய உழவுச் சடங்குகள்வழி அறிய முடிகிறது.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
*
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506


புதன், 13 ஏப்ரல், 2022

பொன்னேர் - நாளேர் பூட்டல் பண்பாடு - வரலாற்றுக் குறிப்புகள் : மகாராசன்




தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் யாவும் காரண காரிய இயல்பைக் கொண்டிருக்கக் கூடியவை. தமிழர்களின் இதுபோன்ற பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய வைதீகமானது தன்வயப்படுத்திக்கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பலகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், சித்திரை ஆண்டுப் பிறப்பாக முன்வைத்திருக்கும் கதைகளும் புராணங்களும். 

சித்திரை முதல்நாள் கோடை உழவின் முதல் நாளாகவும், நாளேர் பூட்டும் உழவுத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஆரிய வைதீக மரபின் பண்பாட்டுப் புனைவுகளைக் கொடுத்து ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாகக் கட்டமைத்து விட்டனர் ஆரிய வைதீக மரபினர். எனினும், கோடை உழவுத் திருநாளாக - நாளேர் பூட்டுத் திருநாளாக - பொன்னேர் பூட்டுத் திருநாளாக - ஏர்பூட்டுத் திருநாளாக, ஆரியத்தின் சாயல் படாமல் உழவுப் பண்பாட்டுச் சடங்கை முன்னெடுத்து வந்துள்ளனர் உழவுத் தொழில் மரபினர். பழந்தமிழ் நூல்களும் இத்தகைய மரபைப் பதிவு செய்திருக்கின்றன.

கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து

விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்

பாருடைப்பனர்போற் பழிச்சினர் கைதொழ

ஏரொடு நின்றோர் ஏர்மங்கலமும்

என வரும் சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதைப் பகுதியானது, ஏர் மங்கலம் பாடி நல்லேர் உழுததைப் பற்றிக் குறிப்பிடுகிறது. 

கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்

தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்; 

பொன்னேர் பசலை பாவின்று மன்னே;

பொன்னேர் பசலை ஊர்தரப் பொறிவரி

நல்மா மேனி தொலைதல் நோக்கி

என, அகநானூற்றின் பாடல்கள் பொன்னேர் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. பொன்னேர் உழுதலை, நல்லேர் நடத்தல் என்பதாக மதுரைக்காஞ்சி கூறுகையில்,

நல்லேர் நடந்த நகைசால் விளைவயல்

என்கிறது. இதனைக் கடி ஏர் என்னும் சொல்லால் அடையாளப்படுத்தும் வகையில், 

அருஞ்செலல் பேர்யாற்று இகுகரை உடைத்து

கடியேர் பூட்டிக் கடுக்கை மலைய

வரைவில் அதிர்சிலை முழக்கிப் பெயல் சிறந்து

ஆர்கலி வானம் தளி சொரிந்து ஆங்கு

என்கிறது பதிற்றுப்பத்துப் பாடல். 

மழை காக்கவேண்டும் என்று வேண்டி, ஆண்டில் முதல்முதலாக ஏர் பூட்டுவது கடியேர் எனக் குறிக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. அதனால்தான், வானம் கடியேர் பூட்டி பேர்யாற்றுக் கரையை உடுத்து உழுதது எனக் கூறுவதன் மூலம், கடியேர் விழாவினை அப்பாடல் நினைவூட்டுகிறது. 

திருவிளையாடற்புராணம், இத்தகைய உழவுச் சடங்கு நிகழ்வை

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடல்

குளமகிழ் சிறாரின் ஏறும் ஒருத்தலும் உவகை தூங்க

வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற

அளமரு பொறிபோலே வலாற்றவாள் வினையின் மூண்டார்

எனப் பதிவு செய்திருக்கிறது. இவ்வாறு, முதன் முதலாக உழுகின்ற உழவுச் சடங்கைப் பல பெயர்களால் இலக்கியங்கள் குறித்திருக்கின்றன.

தமிழர்களின் பண்பாடும், பண்டிகையும் மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. நாளேர், நல்லேர், சித்திர மேழி என்றழைக்கப்படும் பொன்னேர் நிகழ்வும் வேளாண் மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போனதாகவே உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் ஆந்திரம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் பொன்னேர் விழா நடக்கிறது. 

இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மன்னர்களும் மக்களும் பொன்னேர் உழுதலை (Royal Ploughing Ceremony) கொண்டாட்டமாகவே நடத்துகின்றனர் எனக் கூறும் கப்பிகுளம் ஜெ.பிரபாகர், பொன்னேர் உழவு எனும் இச்சடங்கைப் பருவ காலத்தோடு தொடர்புடையது என்பதாக விவரிக்கிறார். 

பண்டையத் தமிழர்கள் அறுபது நாழிகை, ஆறு சிறு பொழுதுகள், ஆறு பருவங்கள் எனக் காலத்தை வகுத்தனர். தை, மாசி - இளவேனில்; பங்குனி, சித்திரை - முதுவேனில்; வைகாசி, ஆனி - கார்; ஆடி, ஆவணி - கூதிர்; புரட்டாசி, ஐப்பசி - முன்பனி; கார்த்திகை, மார்கழி - பின்பனி என்று காலங்களுக்கு ஏற்பவே வேளாண்மை செய்தனர். வைகாசி, ஆனியில் தென்மேற்குப் பருவமழை அடைமழையாகப் பெய்யும். ஐப்பசியில் வடகிழக்குப் பருவமழை. சித்திரையில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்யும்; வெயில் அதிக உச்சத்தை அடைந்து முதுவேனில் தொடங்கும். 

அறுவடைத் திருநாளைத் தைத் திங்களில் நடத்தி விட்டு, இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டி, மாசி, பங்குனியில் இளவேனிற்கால வசந்தத்தை வரவேற்று, பங்குனி முழு நிலவில் குல தெய்வங்களை வழிபட்டு, சித்திரைத் திங்களில் கடற்கரை, ஆற்றங்கரை மணலில் முழு நிலவு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர். மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் சித்ரா பெளர்ணமி நாளில் இந்திர விழாக்கள் நடைபெற்றுள்ளன. அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறைந்திருக்கும் சித்திரை மாதம் வேளாண் மக்களின் கொண்டாட்ட மாதமாகும் என்கிறார் கப்பிகுளம் ஜெ.பிரபாகர்.

வேளாண் மக்களின் இத்தகைய உழவுச் சடங்கு பற்றிய செய்திகள் கல்வெட்டுக் குறிப்புகளிலும் காணப்படுகின்றன என்பதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். முதன்முதலாகப் பிடிக்கும் ஏர் உழவுச் சடங்கை - பொன்னேர் உழுதல் எனும் சடங்கை உவா ஏர், உவாவேர், கரிழ்சணை, கர்சணம் எனக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. முதல் ஏர் பூட்டி முதன் முதலாக உழுகின்ற உழவுச் சடங்கைப் பொன்னேர் உழவு எனக் குறிக்கப்பட்டதன் பின்புலத்தை விவரிக்கும் பாண்டிய மள்ளர், இச்சடங்கை வேந்தர்களே ஏர் பிடித்துத் தொடங்கி வைத்ததாகக் கூறுகிறார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, மருதநில மள்ளர்கள் உழுதலை முறையாகத் தொடங்குவதற்கு ஒற்றுமையுடன் ஒரு சடங்கினைச் செய்தனர். அதனைப் பொன்னேர் பூட்டுதல் என்று அழைத்தனர். இதற்கு, நாளேர் பூட்டுதல் என்ற பெயரும் உண்டு. சங்க காலத்தில் வேளிர்கள் முதற்கொண்டு வேந்தர்கள்வரை தங்கள் எல்லைக்குட்பட்ட ஒரு பொது இடத்தில் இவ்விழாவைத் துவங்கினர் என அறிஞர்கள் கூறுவர். இன்றும் மள்ளர் சமூகத்தவர்கள் வாழும் ஊரில் ஒவ்வொரு வருடமும் இந்த விழாவானது சித்திரை மாதத்தில் நடத்தப்படுகிறது. 

முதலில் ஊர்க் குடும்பன் ஏர்பூட்டி தன் நிலத்தை உழுது, நெல்மணிகளைத் தூவி வழிபடுவார். அதைத் தொடர்ந்து உழவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஏர்களைப் பூட்டி தங்கள் நிலத்தை உழுது நெல்மணிகளைத் தூவி வழிபடுவர். தங்கத்தால் செய்யப்பட்ட ஏர்க் கலப்பையை - பொன் ஏர் கொண்டு, வருடத்தின் முதல்நாளில் அரசன் உழவைத் தொடங்கி வைப்பான். இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து, முதலில் நான் உழவன்; அதன்பிறகே அரசன் என்பதை, இந்நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்பட்டது என்கிறார் அவர்.

இத்தகைய உழவுச் சடங்கு, பழங்காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வந்திருப்பதைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் சான்று பகர்ந்துள்ளன. வேந்தர்களாலும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினராலும் நிகழ்த்தப்பட்டு வந்த, பொன்னேர் உழவு எனும் இச்சடங்கின் பண்பாட்டு முக்கியத்துவத்தை அறிந்திருந்த கம்பரும், வடநாட்டுச் சனக மன்னனைப் பற்றிக் குறிக்கும் ஓரிடத்தில், பொன்னால் செய்த கலப்பையில் மாடுகளைப் பூட்டி உழுதார் என்று பதிவு செய்திருக்கிறார். 

வரம்பின்மணிப் பொற்கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு

உரம்பொருவி நிலம் வேள்விக்கலகில் பல சால் உழுதேம் 

என, பொன்னேர் உழுதலைப் பொற்கலப்பை உழவு என்பதாகக் குறித்திருக்கிறது கம்பராமாயணம்.

இதேபோல, பொன்னால் செய்த நுகத்தடிகளில் எருதுகளைப் பூட்டி, ஒளி பொருந்திய பங்குனி உத்திர நன்நாளில், விண்ணயன் எனப்பட்ட இந்திரனைத் தொழும் மள்ளர்கள் எனும் உழவுத் தொழில் மரபினர் பொன்னேர் பூட்டி உழுதனர் என்பதைத் தென்புதுவைப் புராணம் கூறுகையில், 

மன்னியவேலுடன் மணிவொறுத்தலும் 

பொன்னிய நுகத்திடை புணர்த்து வீக்கியே 

ஒண்ணிய பங்குனி உத்திரத்தினில்

விண்ணயன் மள்ளர் பொன்னேர்கள் பூட்டினார்

எனத் தெரிவிக்கிறது. அதேபோல, மருத நில வேளாண்மையை எடுத்துரைக்கும் எல்லாப் பள்ளு இலக்கியங்களும் பொன்னேர் பூட்டுதலான உழவுச் சடங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. 

உழவுத் தொலில் மரபினர் தமது உழவுச் செயல்பாடுகளை வானியல் கணிப்புகளுக்கு ஏற்பவே நடத்தியிருக்கின்றனர். இதனை நாளேர் எனவும் குறிப்பது வழக்கம். நல்ல நேரத்தில் நாளேர் பூட்டி உழுததாகத் திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு கூறும்போது, 

உழவுமள்ளர் திரண்டு சஞ்சுவங் கொண்டு

உழுங் காளைகள் அனைத்தும் பற்றிக் கொண்டுபோய் 

புலவர்தமிழ் மணக்கும் நல்லூர்த் தருமன்

பிள்ளையார் குளப்புரவில் உட்கிடைச் செய்யில் 

வலவர் அடியில் நின்ற செடியும் வெட்டி

வரம்பில் மடை உயர்த்திப் புனல் நிறுத்திக் 

குலவு கணக்கன் ஓரை ராசத வேளையும் வந்து 

கூடும் கடிகையில் நாளேரைப் பூட்டினரே

எனக் குறிப்பிடுகிறது. 

வேளாண்மை உழவுத் தொழிலுக்கு மட்டுமல்லாமல், அரசாட்சியின் எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும், அதன்பொருட்டுத் தாங்கள் மேற்கொள்ளும் எந்த ஓர் அரச நிகழ்வுகளுக்கு முன்பும், பொன்னேர் பூட்டி உழும் சடங்கை ஒரு வழக்கமாக மேற்கொண்ட வழக்கமும் இருந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் விதமான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. 

அரிகேசரி பராக்கிரம பாண்டியன், காசி விசுவநாதர் ஆலயம்போல் ஒன்றை, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் கட்டுவதெனத் தீர்மானித்து கி.பி. 6.5.1446ஆம் நாளில் பொன் ஏர் பூட்டி உழுது, உழுத இடத்தில் கோயில் கட்டும் பணியைத் தொடங்கியதாகவும், ஆலயத்தை ஓராண்டில் கட்டி முடித்து 15.6.1447ஆம் நாளில் அபிசேகம் செய்தார் எனவும் கல்வெட்டு கூறுகிறது. 

அக்கல்வெட்டில் உள்ள கரிழ்சணை பற்றிய வாசகப் பகுதி வருமாறு:

அன்பினுடன் சகாத்தமாயிரத்து முன்னூற்றறுபத் தெட்டதன்மெல் வைகாசித்திங்கள் மன்தியது யீரைந்திற் பூறுவபக்க மருவு தெசமியில் வெள்ளிவாரந் தன்னில் மினதி சூழுத்திரநாள் மீனத்தில், வாகைவெலரிகேசரி பராக்கிரம மகீபன் தென்திசையிற் காசி நகரக்கோயில் காணச்சென்று நின்று, கரிழ்சணை தான் செய்வித்தானெ என்பதாகக் கூறும் அக்கல்வெட்டு, பொன்னேர் உழவு எனும் உழவுச் சடங்கை நிகழ்த்திய செய்தியைத் தருகின்றது. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 26 / 537 and A. R. No. 507 of 1909). 

பொன்னேர் உழும் சடங்கைக் கரிழ்சணை எனக் குறிக்கும் அக்கல்வெட்டுச் செய்தி பற்றிய தொல்லியல் துறையின் குறிப்புரையானது, It records that the king visited the temple at Tenkasi on Saka 1368, Vaikasi 10, Su. 10, Friday, Uttiram=1446 A.D., May 6 and arranged for the performance of the ceremony of ploughing (karilsanai Skt. karshanam). Then on the date quoted above the construction of the central shrine of the Siva temple at Tenkasi was completed (SSI No.537, Page No 366, A. R. No. 507 of 1909) என விவரித்திருக்கிறது.

அரிகேசரி பராக்கிரம பாண்டியருக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவருடைய மகன் பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டியரும், அந்த ஆலயத்தில் சிற்சிலக் கோயில்களைக் கட்டியுள்ளார். அந்தப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பும், தன் தந்தையைப் போல் அவரும் கரிழ்சணை என்கிற பொன்னேர் உழவுச் சடங்கு விழா நடத்தியே பணிகளைத் தொடங்கியுள்ளார் எனக் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது. 

கரிழ்சணை பற்றிய அக்கல்வெட்டு வாசகப் பகுதி வருமாறு:

நமக்கு தட்சிண காசியாக ஆலயஞ் செய்து தரவேனும் என்று, எங்களுடைய கர்த்தர் பெருமாள் அரிகேசரி தேவர் என்று திருநாமமுடைய பொன்னின் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவர் இருந்தருளிய இடத்தின் உடனே சுப்னத்திலே திருவுள்ளம் பற்றி அருளுகையாலே, முன்னாள் சகாத்தம் ஆயிரத்து முன்னூற்று ஆறுபத்தெட்டின் மேல் ரிஷப ஞாயற்றுப் பத்தாத் தியதியும் பூர்வ பக்ஷத்து தசமியும் சுக்ரவாரமும் பெற்ற உத்திரத்து நாள் மீனமு சுத்தமாக, கரிழ்சணையும் செய்து.. 

தட்சிண காசியாகத் திருப்படை வீடும் உண்டு ஆக்கி, உடையார் விஸ்வநாயனையும் நாச்சியார் உலகமுழுதுமுடைய நாச்சியாரையும் பிரதிஷ்டித்து, இன்னாயனார்க்குத் திருக்கோயில் உபாநாஷித்துபெயத்தமாகவும் அர்தமண்டபம் இடைய நாழிகை மகாமண்டபம் சோபானம் ஆவர்ண ஹொவீராஷிகளுந் திருப்பணி செய்து, நாச்சியார் உலகமுழுமுடைய நாச்சியார்க்குந் திருக்கோயிலும் ஆவரணமுங் குறைவற திருப்பணியுஞ் செய்து, ஹொபுரமுமாரம்பித்து சகஸ்வரலிங்காலயமும் சக்திபீடாலயமும் செய்து ரிஷபதேவர் முதலாக உள்ள பரிவார நாயன்மாரையும் பிரதிஷ்டித்து…. 

அரிகேசரி நங்கை என்று திருநாமமுடைய பிடாரியையும் பிரதிஷிடித்து, பிடாரி கோயிலும் மேலை அஞ்சாந்திருவீதியில் அரிகேசரிப் பிள்ளையார் திருக்கோயிலும் ஆரூட்டு மண்டபமும் வெச்சமுது மண்டபமும், மற்றுமிக் கோயில்களிலுள்ள திருப்பணிகளும் மஹாகோபுரமும் எங்கள் கர்த்தர் இருந்தளிய இடம் முன்னாள் இரண்டாவதின் எதிர் இருப்பதிரண்டாவது வைகாசி மாதந் துடங்கி, முப்பத்து ஒன்றாவதின் எதிர் ஒப்பதாவது வரை பதினேழு வருஷத்துக்குள்ளுத் திருப்பணி செய்து நிறைவேற்றின இது, மானுஷமல்ல தேவிகமென்று எல்லாருமறிந்து கொள்ளவும், எங்களுடைய கர்த்தர் இருந்தருளிய இடம் திருவுள்ளம் பற்றி அருள நாங்களுங் கரிழ்சணை துடங்கி… 

இந்தத் திருப்பணியெல்லாங் கூடச் செய்கையுஞ் செய்து, எங்கள் இருந்தருளிய இடம் இன்னாயனார்க்கும் நாச்சியார்க்கும் மற்றுள்ள நாயன்மார்க்கும் பூஜாங்கத்துக்கு வேண்டும் அனைத்துக் கொத்திலுள்ளாரையுங் கற்பித்து திருவாபரணமும் பரிகல பரிஸந்நமுங் குடுத்து பூசையுங் குறைவற நடத்த.... என, பொன்னேர் உழவுச் சடங்கு பற்றிய வரலாற்றுக் குறிப்பைத் தந்திருக்கிறது அக்கல்வெட்டு. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 26 / 561 and A. R. No. 531 of 1900).

அதேபோல, திருக்கோயிலூரில் உள்ள திருவிக்கிரம பெருமாள் எனும் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டானது, அக்கோயிலுக்கு இராசராச சோழன் இரண்டு பொன் ஏர்கள் (தங்கக் கலப்பைகள்) கொடுத்ததை, பொந்நெர் இரண்டு திருமஞ்சணமுஞ் செய்து இப்பொந்நில் திருமஞ(ச)ணம்தொறும் எண்ணாழிக்காலால் கலக்கல அரிசி அமுது செய்வித்து என, அக்கல்வெட்டு வாசகம் குறிப்பிடுகிறது. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் 7 /142. and A.R. No. 129 of 1900).

இதேபோல, பல இடங்களில் தங்கள் திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, பாண்டிய வேந்தர்கள் பொன் ஏர் பூட்டி உழுது உழவுச் சடங்கு விழாவை நடத்தியுள்ளனர் என்பதைப் பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரன் குளத்தில் கிடைத்த தங்க ஏர் (கலப்பை) பற்றிய செய்தி அதை உறுதிப்படுத்தவும் செய்கிறது. 

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அருமைராஜ், சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய மின்சக்தித் தகடு (சோலார்) பணி நடந்து வருகிறது. இதில் கயத்தாறு மற்றும் ஓட்டபிடாரம் தாலுகாக்களில் தெற்கு மயிலோடை மற்றும் கோவிந்தபுரம் கிராமங்களில் சோலார் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்தப் பகுதிகளில் சோலார் பணிக்காகத் தோண்டியபோது பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி, மனித எலும்புகள் தினந்தோறும் கிடைத்து வருகிறது. சித்தாறு ஆற்றுப்படுகையில் பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரகுளம் அமைந்துள்ள பகுதியில் கற்சிற்பங்கள் உள்ளிட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன...

ஏற்கனவே இந்தப் பகுதியில் தங்க ஏர்க் கலப்பை கண்டெடுக்கப்பட்டு நெல்லை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, பராக்கிரம பாண்டியன் குளம் என்ற இந்திரகுளம் பகுதியைத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். பிற பணிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. இங்கு கண்டெடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைப் பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ள செய்தி கவனிக்கத்தக்கது. அதேபோல, கோவைக்கு அருகில் உள்ள முட்டம் அகழாய்வில் சிறிய காளைகளுடன் கூடிய பொன் ஏர்த் திருமேனி கிடைத்துள்ளதாகவும் இரா.ப.கருணானந்தன் குறிப்பிடுகிறார். 

இந்நிலையில், கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திரமேழிக் கல்வெட்டானது, பழங்கால உழவுத்தொழிலின் சிறப்பை விளக்கும் வகையிலும், பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கைக் குறிப்பதாகவும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகேயுள்ள கல்நார்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது உருவம் செதுக்கப்பட்டிருந்ததை ஆ.பிரபு தலைமையிலான குழுவினர் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளனர். 

இது குறித்து ஆ.பிரபு கூறும்போது, திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் களப்பணி மேற்கொள்கையில் கல்நார்சாம்பட்டியில் மாந்தோப்பின் நடுவே ஒரு கல்லின் மீது கோட்டுருவம் இருப்பதை அறிந்தோம். தொடர்ந்து அந்தக் கல்லினைச் சுத்தம் செய்து மாவு தடவிப் படியெடுத்துப் பார்க்கையில், அது பழமையான ‘சித்திரமேழி’க் கல்வெட்டு என்பதை அறிய முடிந்தது. 

‘மேழி’ என்பது உழவுக் கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும். சித்திரமேழி என்றால் அழகிய கலப்பையைக் குறிக்கும் சொல்லாகும். சித்திரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும் உழவுக் கலப்பை முத்திரையே சித்திரமேழி எனக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வணிகக் குழுவிற்கான கல்வெட்டாகும். சித்திரமேழி என்ற சின்னம் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண் மக்கள் கூட்டமைப்பின் அதிகாரக் குறியீடாக அக்காலத்தில் கருதப்பட்டது. 

கல்நார்சாம்பட்டியில் உள்ள இக்கல்வெட்டில் பூமாதேவி (தமிழில் நிலமகள்) தலையில் கிரீடத்துடன் அமர்ந்த நிலையில் தம் இரு கைகளிலும் மலர்ச்செண்டுகளை ஏந்தியவாறு காட்சியளிக்கிறாள். அவளது வலது பக்கம் இரு அடுக்குகளைக் கொண்ட குத்துவிளக்கும் அதன் மேல் கும்பக் கலசமும் உள்ளன. பூமாதேவியின் இடதுபக்கம் கலப்பையும் கண்ணாடியும் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்லானது 3 அடி அகலமும், 2அடி உயரமும் கொண்டதாக உள்ளது. இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் பல்வேறு வணிகக் குழுக்கள் செயல்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் பெரும்பாலும் ‘சித்திரமேழிப் பெரிய நாட்டார் சபை’ என்று அழைக்கப்படும் என்கிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இந்தக் கல்வெட்டு பழங்கால உழவுத் தொழிலின் சிறப்பை விளக்குகிறது. ஏரோட்டும் சடங்குகளாக, கல்நார்சாம்பட்டி மக்கள் பொங்கல் பண்டிகையின்போது காணும் பொங்கலன்று கரகம் எடுத்துச் சுற்றிவந்து, இக்கல்வெட்டின் அருகே மாடுகளை அழைத்து வந்து இவ்விடத்தில் கட்டி வைத்துப் பாரதம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் முதல் புதன் கிழமையன்று ஏர்பூட்டி தங்கள் நிலத்தில் உழுது, முளை கட்டிய நவதானியங்களைத் தூவி வழிபடுகின்றனர். இவ்வழக்கமானது பண்டைக் காலத்தில் ‘பொன்னேர்‘ பூட்டி உழும் சடங்கினை நினைவூட்டுவதாக உள்ளது என்கிறார். 

இவ்வாறு, ஆங்காங்கு மேற்கொள்ளப்படும் தொல்லியல் அகழாய்வில் கிடைத்திருக்கும் தங்கக் கலப்பைகள் (பொன் ஏர்கள்) பண்டைக் காலத்தில் வேந்தர்கள் ‘பொன்னேர்’ பூட்டி உழுத சடங்கினைப் புலப்படுத்துகின்றது. இத்தகையப் பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கை வேந்தர்கள் மட்டுமல்லாமல், உழவுத் தொழில் வேளாண் மரபினரும் நிகழ்த்தி வந்துள்ளதையும் தொல்லியல் சான்றுகளும் இலக்கியத் தரவுகளும் மெய்ப்பித்துள்ளன. பொன்னேர் பூட்டும் இத்தகைய உழவுச் சடங்கு, ஆதிகாலம் தொட்டு இன்றுவரையிலும் உழவுத் தொழில் மரபினரால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
*
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506




பொன்னேர் உழவுச் சடங்கு - உழவுப் பண்பாட்டின் அகமும் புறமும்: மகாராசன்



சித்திரை எனும் மேழம் மாதம் என்பது, கோடைக் காலத்தின் தொடக்க காலம். தை மாதத்து அறுவடைக் காலம் முடிந்தபிறகு, வெள்ளாமை விளைந்த வயல்களிலும் காடுகளிலும் அறுவடையில் எஞ்சியிருக்கும் அடித்தட்டைகள் அல்லது அடித்தாள்கள் எனப்படும் அடித்தூர்கள் முனை மழுங்கிக் காய்ந்தும், இலை தழைகள் காய்ந்து சருகாகிக்கொண்டும் இருக்கும். வெள்ளாமை பார்த்த வயல்களும் காடுகளும் அறுவடை முடிந்த காலத்திற்குப் பிறகு கொஞ்சம் காய்ந்தும் கொஞ்சம் பொதுபொதுவென்றும் இருக்கும். 

கோடை வெயில் தொடங்கியதற்குப் பிறகு அடுத்தடுத்து வெயிலில் கிடக்கும் வயலும் காடும் கெட்டி தட்டி இறுகிப்போகும். மழை பெய்த பிறகு இலகுவாக உழுகவும் முடியாது. ஆகையினாலேதான், கோடைக் காலத்தில் நிலத்தைச் சும்மா போட்டுவிடக் கூடாது என்பதற்காக, எந்த விதைப்பும் நடவும் இல்லாமல் நிலத்தை உழுது போடுவார்கள் உழவர்கள். உழுது போட்ட இந்த நிலத்தில் குப்பை மற்றும் கரம்பையைச் சிதறுவார்கள். உழுது கிளர்ந்த நிலத்தில் கோடை வெயில் படுவது அடுத்த வெள்ளாமைக்கு உகந்தது என்பார்கள். 

கோடை முடியும் தருவாயில் அல்லது முடிந்தபிறகு பெய்கின்ற மழைநீரின் பெரும்பகுதியை உழுத நிலங்களின் புழுதிகள் அதிகப்படியாகக் கீழே உறிஞ்சிக்கொள்ளும். நிலத்தடியில் மழைநீரைச் சேமித்துக்கொள்ளும். பிறகுதான், மழை நின்றபிறகு பதம் பார்த்து மறுபடியும் உழவைத் தொடங்கி விதைப்பு நடக்கும். ஆக, அறுவடைக் காலம் முடிந்து, கோடைக் காலம் தொடங்கும்போது வெள்ளாமை நிலத்தைப் புழுதி உழவாக உழுது போடும் உழவுத்தொழில் நுட்ப மரபாக இருந்து வருவது சித்திரை மாதத்துக் கோடை உழவாகும். 

கோடை உழவு செய்வதால், இறுகலான நிலம் பொலபொலவென நெகிழ்ந்து காற்றோட்டத்தைப் பெறும். மேலும், பயிர்களுக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதனால், பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் எளிதாகக் கிடைக்கும். உழவுச் சால்கள் மழைநீரை உறிஞ்சி வேளாண்மை செய்யும் நிலத்திற்குள் தக்க வைப்பதோடு, மண்ணரிப்பையும் தடுத்திடும். 

இத்தகையக் கோடை உழவானது, வேளாண் பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் புழு, பூச்சிகள், களைச்செடிகள் போன்றவற்றை அப்புறப்படுத்தவும் செய்வதோடு, வேளாண்மை நிலத்தின் வளம் பாதுகாக்கப்படும். வேளாண்மை உழவுத் தொழிலின் பட்டறிவு இதுபோன்ற உழவுச் செயல்பாடுகளில் புலப்படுவதைக் காணலாம். அதனால்தான், சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று புகழப்பட்டிருக்கிறது. இந்தக் கோடை உழவு சித்திரை மாதத்தின் முதல்நாளில் தொடங்குவதை, சிற்றூர்ப்புறங்களில் உழவுச் சடங்காகவே நிகழ்த்தி வருகின்றனர் உழவுத்தொழில் மரபினர். 

கோடை உழவு நடைபெறுகின்ற நாளில், உழவு மாடுகள் வைத்திருக்கும் உழவர் யாவரும், ஏர்க்கலப்பைகளோடு மாடுகளையும் கலப்பைகளையும் அலங்கரித்து ஊர் மந்தை வந்து சேர்வர். மந்தையம்மனை வணங்கிவிட்டு அங்கிருந்து வரிசையாகக் கிளம்பி வந்து கண்மாய் ஓரமிருக்கும் காடுகளில் ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பர். வானத்தையும் நிலத்தையும் மாடுகளையும் கலப்பைகளையும் வணங்கிவிட்டு முன்னத்தி ஏராக ஒன்று செல்ல, அதைத்தொடர்ந்து பின்னத்தி ஏர்களும் உழுது வட்டமடித்து வரும். 

ஊர்மக்கள் யாவரும் உழவர்களை ஆரத்தி எடுத்து கண்ணேறு கழித்து வரவேற்பர். பச்சரிசி, வெல்லம், பொரிகடலை, வேப்பிலை கலந்த காப்பரிசி எல்லோருக்கும் வழங்கி மகிழ்வர். அன்றைய நாளில் முறைப்பெண்கள் முறைப் பையன்கள் மற்றும் முறைமாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆடிப்பாடி மகிழ்வர். ஊர் முழுக்க அன்றைய நாளில் மஞ்சள் தெளிப்பு விளையாட்டு நடக்கும். 

இத்தகையக் கோடை உழவுச் சடங்கைத்தான் ஏர் பூட்டுத் திருவிழா, நல்லேர் பூட்டுதல், பொன்னேர் பூட்டுதல் என்ற பெயர்களில் உழவர்கள் நடத்தி வருகின்றனர். வரலாற்றுச் சான்றுகள் பலவும், இத்தகையக் கோடை உழவுச் சடங்கைப் பல்வேறு பெயர்களில் குறித்துள்ளன. கோடை உழவுச் செயல்பாட்டையும் சடங்கியலாக நிகழ்த்தும் பண்பாட்டு மரபு தமிழர்களிடம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில்தான், கோடை உழவுச் செயல்பாடு தொடங்கும் சித்திரை முதல்நாள் தமிழர்களின் பண்பாட்டுக்கூறாய் வழக்காற்றில் இருந்து வருகிறது. 

இத்தகையப் பொன்னேர் உழவு பற்றிக் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறும்போது, தமிழக மரபில் பொன்னேர் உழவுக்கு ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஏர்க் கலப்பை, எருதுகள், நிலங்களை வைத்துச் செய்யப்படும் ஒரு புனிதமான சடங்கு இது. கோடையில் உழும் உழவுதான் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. 

இன்னொன்று, இந்தச் சடங்கின் போது சிறிய தங்கக் கலப்பையை வைத்து வழிபடுவதும் வழக்கம். இது வட்டார வழக்குதான். வட்டாரத்துக்கு வட்டாரம் இந்த வழக்கம் மாறுபடும். இதோடு கலப்பைகளுக்கு மஞ்சள், சந்தனம் பூசியும் வழிபடுவார்கள். சித்திரையில் உழவு செய்யப்படும் மானாவாரி மற்றும் பாசன நிலங்களில் களைகள் அழிந்து, அந்த நிலம் விதைப்புக்குத் தயாராகிவிடும். அடுத்து வருகிற தென் மேற்குப் பருவ மழைக்கு நிலங்களில் விதைப்பு தொடங்கிவிடும். 

எப்போது பொன்னேர் கட்டணும் என்பதற்கும் பஞ்சாங்கத்தில் நாட்கள் குறிக்கப்பட்டிருக்கும். அந்தந்த வட்டாரப் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் நாட்களில் பொன்னேர் கட்டலாம். பஞ்சாங்கக் கணிப்புகள் வானியல் அடிப்படையில் கணிக்கப்பட்டவைதான். இந்த வழக்கம் தமிழகத்தில் மட்டுமில்லை. ஆந்திரா மாநிலத்திலும் உண்டு. தமிழ் நூல்களிலும், சுவடிகளிலும் இதுபற்றிய குறிப்புகள் உண்டு என்கிறார். 

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் - வேளாண்மை உழவுத் தொழில் நடைபெறும் சிற்றூர்ப் புறங்களில், கோடைக் காலத்து உழவுச் சடங்குகள் இன்றளவிலும் நடைபெற்று வருகின்றன. இச்சடங்கு, சில வட்டாரங்களில் சித்திரை பத்தாம் நாள் நடைபெறுவதாகக் கூறும் வெள் உவன், வருடம்தோறும் சித்திரை மாதம் பத்தாம் நாளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் நடைபெறும் ஒரு நிகழ்வு பொன்னேர் பூட்டுதல் ஆகும். அன்று ஊர்க் கோயில் நிலத்தில் அனைத்து வேளாண் மக்களும் தங்கள் ஏர் கொண்டு உழுவதே இந்நிகழ்ச்சியின் தலையாயது. சில பகுதியில் இதை நல்லேர் கட்டுதல் என்பர். 

அன்று அதிகாலையிலேயே வீடுகளைக் கழுவி, மாடுகளைக் குளிப்பாட்டிக் குளித்து, கலப்பையைத் தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க, அவர்களின் பின்னால் மொத்தக் குடும்ப உறுப்பினர்களும் பூஜைப் பொருட்கள், நவதானியங்கள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துச் செல்வர். கூடவே ஒரு கூடையில் மாட்டு எரு கொஞ்சமும் எடுத்துச் செல்வர். 

வயலில் மண்ணால் சிறு மேடை அமைத்து அதன் மேல் சாணம் அல்லது மஞ்சள் தூள் குழைத்துப் பிள்ளையார் செய்து, கொண்டுவ‌ந்திருக்கும் பொருட்களை அதன் முன் பரப்பி வைத்துவிட்டு, பஞ்சாங்கத்தின்படி அன்று எந்தத் திசை நல்ல திசையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அத்திசையை நோக்கி எருதுகளை நிற்க வைத்து ஏர் பூட்டி உழுவார்கள். 

குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் அனைவரும் அன்று ஏர் ஓட்டுவார்கள். இது ஒரு சம்பிரதாய உழவு என்பதால், வயலின் சிறுபகுதியை மட்டும் உழவு செய்துவிட்டு எருதுகளை அவிழ்த்து விட்டு விடுவார்கள். பிறகு உழவு செய்த இடத்தில் எருவைக் கொட்டி அதன் மீது நவதானியங்களை விதைத்துவிட்டு, எருதுகள், கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, அந்த வருடம் விளைச்சல் சிறப்பாய் இருக்க இறைவ‌னை வேண்டிப் பூஜைகள் செய்து, இனிப்பு கலந்த பச்சரிசியைப் பிரசாதமாக வழங்குவர். 

இந்தச் சித்திரைப் பத்து என்பது, இன்றைய தமிழ்ப் பூமியில் சூரியன் உச்சிக்கு வரும் நாள் என்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இந்த நாளே புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதின் குறியீடாக இந்த நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. சில அம்மன் ஆலயங்களில் இந்த நாள் ‘பத்தாம் உதயம்’ என்ற பெயரில் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுவதும் உண்டு. 

சில ஊர்களில் அங்குள்ள தச்சு ஆசாரியை அழைத்து ஊர்க் கோயிலில் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து சன்மானம் வழங்கும் வழக்கமும் இருக்கிறது. உழவுக்கு வேண்டிய கருவிகளைச் செய்து கொடுப்பதால் அவருக்கு இந்தச் சிறப்பு மரியாதை வேளாண் மக்களால் செய்யப்படுகிறதாம். இந்தப் பொன்னேரு பூட்டல் சடங்கு சிந்து வெளியிலும் கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்று என்று சொல்லப்படுகிறது என்கிறார். 


மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
*
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506