செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

கையறுநதி: மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்பு நூல் - மகாராசன்

கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் சமூகப் பண்பாட்டு வரைவியல் உருவாக்கத்தில் தனித்துவப் பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் ஆய்வறிஞர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் கையறு நதி எனும் இந்த வரைவுப் பிரதியோடு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் செம்மையாக்கப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோதுதான், அந்தப் பிரதி என்னையே கொஞ்சம் கொஞ்சமாய்ச் செம்மைப்படுத்திக் கொண்டிருந்ததை மெல்ல உணர்ந்தேன்.

நண்பர்களின் நூல் உருவாக்கத்திலும் செம்மையாக்கத்திலும் எம்மால் இயன்ற உதவிகளையும் வழிகாட்டல்களையும் செய்திருந்தாலும், கையறு நதியில் பயணிக்க நான் கொஞ்சம் மெனக்கெடுக்க வேண்டியிருந்தது. போகிற போக்கிலோ அல்லது அவ்வளவு எளிதாகவோ கடந்துபோகிற புனைவு நூலோ, வரலாற்று நூலோ, ஆய்வு நூலோ இதுவல்ல. 

இந்த உலகில் வாழும் பலதரப்பட்ட மனிதர்களின் பலவகைப்பட்ட மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் வரைந்து பார்ப்பதற்குமான வழித் திறப்புகளைக் காண்பிக்கும் மிகமிக அரிதான நூல்களுள் கையறு நதியான இந்த நூல் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஆகும். 

மனப்பிறழ்வு என்பதாகக் கருதப்பட்டு, குடும்பத்தாராலும் பொது சமூகத்தாலும், கல்வி நிறுவனங்களாலும் ஒதுக்கலுக்கு உள்ளான ஓர் இளம்பெண்ணைச் சூழ்ந்திருக்கும் இவ்வுலகத்தையும், அதனை அப்பெண் அணுகும் விதங்களையும், அப்பெண்ணுக்குத் தகப்பனாய் வாய்த்திருக்கும் ஓர் ஆண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், தமது மகளுக்கும், மகளைப் போல பிற மனிதர்களுக்கும் நேர்ந்திருக்கும் உடலியல் சார்ந்தும் உளவியல் சார்ந்துமான இடர்ப்பாடுகள் நிரம்பி வழியும் உலகைக் காணும் விதங்களும் தமிழ்ப் புனைவுகளிலோ அல்லது தன்வரலாற்று நூல்களிலோ விரிவாகவோ ஆழமாகவோ புலப்படுத்தப்படவில்லை. 

கையறு நதி எனும் இந்த நூல்தான், புனைவின் வழியாகத் தன்வரலாற்றைப்  பேசுவது அல்லது தன்வரலாற்றைப் பேசுவதுபோல புனைவெழுத்தாக்கித் தருவது எனும் எழுத்துப் பாணியில் மகளுக்கும் அப்பாவுக்குமான உணர்வுப்பூர்வமான உறவையும், உயிர்ப்பான நேயத்தையும் உளவியல்பூர்வமான பரிமாணங்களையும் சக மனிதர்களுக்கு எழுத்து வழியாகப் பகிர்ந்திருக்கிறது. 

வாசிப்பின் வழியாகப் புதிய புதிய மனிதர்களையும், புதிய புதிய அனுபவங்களையும் இந்நூல் நிறையவே அடையாளம் காட்டியிருக்கின்றது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மன உலகம் இருக்கின்றது. ஒவ்வொருவர் பார்வையிலும் மற்றவர்கள் உலகம் ஏதோ குறைபாடு உடையதாகவே தான் கருதப்படுகின்றது. எல்லா மனிதர்ளும் ஏதோ ஒருவகையில் மனக்குறைபாடு உடையவர்களாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

மனக் குறைபாடு பெரிதல்ல; அப்படியான மனிதர்களோடு சக மனிதர்கள் காட்டும்அன்பும் பரிவும் இரக்கமும்தான் மிக அடிப்படைத் தேவை.

மனிதர்களைப் புரிந்துகொள்ள முனைவதும், புரிந்துகொள்வதில் போதாமைகள் இருப்பதுமான மன உலகைப்பற்றிய உணர்வுத் துளிகள் கையறு நதியில் நிரம்பி வழிந்திருக்கிறது.

பிள்ளைகளைப் பெற்றிருக்கும் தாய்களுக்கும் தகப்பன்களுக்கும், பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் இரண்டாவது பெற்றோர்களான ஆசிரியர்களுக்கும் இந்தப் புத்தகம் மிக முக்கியமான உளவியல் வழிகாட்டி நூலாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது. 

இளம் தலைமுறையினருக்கு உளவியல் ஆற்றுப்படுத்தவும், இளம் தலைமுறையினரின் மனக்கோலங்கள் மட்டுமல்ல, பெற்றோர்களாக - ஆசிரியர்களாக இருக்கும் அத்தனைப் பேரின் மனக்கோலங்களைப் புரிந்துகொள்வதற்கும் இந்நூல்  வழிகாட்டியிருக்கிறது. அந்தவகையில், கல்வித்துறையினர் கவனிக்க வேண்டிய நூல்களுள் இந்நூலும் ஒன்றாகும்.

கையறு நதியில் பயணிக்கச் செய்து, செம்மைப்படுத்தும் வாய்ப்பை நல்கியற்கும், இந்நூலைச் சமூகத் தேவை கருதி ஆக்கித்தந்தமைக்கும் வறீதையா கான்ஸ்தந்தின் அய்யா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும். 

ஏர் மகாராசன்

மக்கள் தமிழ் ஆய்வரண்.

30.08.2022.

*

கையறுநதி, வறீதையா_கான்ஸ்தந்தின், கடல்வெளி பதிப்பகம்,  ரூ 220/- தொடர்புக்கு: 9442242629.

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

மார்க்சிய இயங்கியலும், மனிதகுல விடுதலைக்கான ஸ்டாலினின் பங்களிப்பும்: மகாராசன்


மனித சமூக அமைப்பானது அது தோன்றிய காலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது. மேலும், ஒவ்வொரு காலகட்டத்திற்குத் தகுந்தாற்போன்ற உற்பத்தி முறைகளையும் - அவற்றுக்கான உற்பத்தி உறவுகளையும் அது கட்டமைத்துக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சமூகக் கட்டமைப்புகளுக்கு உடன்பட்டும் ஒத்திசைந்தும், மறுத்தும் மாறுபட்டதுமான சிந்தனைப்போக்குகள் வெவ்வேறு தன்மைகளிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான சிந்தனைப் போக்குகளின் ஊடாகவே இயற்கை -மனிதர் - சமூகம் குறித்த உலகக் கண்ணோட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இயற்கை-மனிதர்-சமூகம் குறித்த அந்தந்தக் காலத்திய உலகக் கண்ணோட்டச் சிந்தனைகளே அந்தந்தக் காலத்தியத் தத்துவங்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான தத்துவங்களைச் சமூக அறிவியல் அடிப்படையில் பொருள்முதல்வாதம் எனவும் கருத்துமுதல்வாதம் எனவும் வகைப்படுத்துவர். 

பொதுவாக, தத்துவங்கள் யாவும் உலகைப் புரிந்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை அதனதன் நிலைப்பாட்டிலிருந்து விளக்கி நிற்கின்றன. சுருக்கமாகச் சொல்வதெனில், உலகில் தோன்றிய அனைத்துவகைத் தத்துவங்களும் உலகைப் பற்றிய - அதாவது, இயற்கை-மனிதர்-சமூகம் குறித்த விவரிப்புகளாகவும் விளக்கங்களாகவுமே அமைந்திருக்கின்றனவே ஒழிய, அவற்றை மாற்றியமைப்பதற்கான வழிகாட்டுதல்களை எந்தத் தத்துவங்களும் முன்வைக்கவில்லை. 

இந்நிலையில், கருத்து முதல்வாதத் தத்துவங்களிலிருந்தும் மற்ற பொருள்முதல்வாதத் தத்துவங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்பது மார்க்சியத் தத்துவம்தான்.

மார்க்சியத்தின் அடிப்படை, பொருள் முதல்வாதம்தான். எனினும், இதுவரையிலான பொருள்முதல்வாதத் தத்துவங் களில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, வளர்ச்சியடைந்த சமூக அறிவியலாக இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவமாக மார்க்சியம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உலகைப் புரிந்து கொள்வதற்கும்-அதை மாற்றியமைப்பதற்கும் வழி காட்டும் தத்துவமாக இருந்துகொண்டிருப்பது மார்க்சியத் தத்துவம் மட்டும்தான்.

மார்க்சியமானது மற்ற தத்துவங்களைப்போல வறட்டுக் கோட்பாட்டைக் கொண்டதல்ல; அது வளரும் அறிவியல். உலகில் புதிய நிலைமைகள் தோன்றும்போது அதைப் புரிந்து கொள்ளவும், புரட்சிகரமானதாக மாற்றியமைக்கவும் மார்க்சியம் வழிகாட்டுவதோடு அதுவும் வளர்ச்சியடைகின்றது. இதுதான் மார்க்சியத் தத்துவத்தின் இயங்கியல். அதாவது, காரல் மார்க்சு-ஏங்கெல்சு ஆகியோர் முன்மொழிந்த இயங்கியல் பொருள் முதல்வாதத் தத்துவம்தான் முழுமையான சமூக அறிவியல் கோட்பாடாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. 

சமூக வரலாற்றை முதன் முதலாக உற்பத்தி உறவுடன் தொடர்புபடுத்திச் சொன்னவர்கள் மார்க்சு ஏங்கெல்சு ஆவர். பின்தங்கிய - பிற்போக்கான அல்லது ஆளும் உடைமை வர்க்கத்திற்குச் சாதகமான உற்பத்தி உறவுகளைத் துடைத்தெறிந்து, முன்னேறிய அல்லது உழைக்கும் வர்க்கத்திற்குச் சார்பான உற்பத்தி உறவுகளையும், அதற்கு ஒத்திசைந்த சமூக அமைப்பு, அவற்றுக்கான தத்துவம், கட்சி, செயன்மை போன்றவற்றின் தேவைகளையும் அறிவியல் அடிப்படையிலான கோட்பாடாக உருவாக்கி வலியுறுத்தி வழிகாட்டியவர்கள் மார்க்சு-ஏங்கெல்சு ஆவர். இவர்கள் முன்வைத்த கோட்பாடுதான் புரட்சிக்கு வழிகாட்டும் தத்துவமாக அமைந்திருந்தது / அமைந்திருக்கின்றது.

உலகில் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த ஒரு புதிய நிலைமை தோன்றியபோது, அதை மார்க்சிய அடிப்படையில் விளக்கிப் புரட்சிக்கு வழிகாட்டியதோடு நிகழ்த்தியும் காட்டியவர் லெனின் ஆவார். இரசியாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவி, அக்கட்சியின் மூலமாக மக்களை ஒன்றுதிரட்டிப் புரட்சியை ஏற்படுத்தியவர் லெனின். லெனினால் உருவாக்கப்பட்ட இரசிய சோசலிசப் புரட்சிதான் உலகின் பின்தங்கிய நாடுகளிலும் புரட்சியை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது / கொடுக்கின்றது. இங்கு மார்க்சியமானது மார்க்சிய லெனினியமாக வளர்ச்சியடைந்திருக்கின்றது.

மாபெரும் மக்கள் புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட இரசிய சோசலிசத்தை லெனினுக்குப்பின்பு பேணிப் பாதுகாத்தவர் 

ஜே.வி.ஸ்டாலின் ஆவார். லெனின் உருவாக்கிய இரசிய சோசலிசத்திற்கு எதிராக இருந்த ஏகாதிபத்தியவாதிகள், கட்சிக்குள்ளேயே இருந்த துரோகிகள், முதலாளித்துவ முகவர்களின் பலவகைப்பட்ட சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி அவற்றையெல்லாம் முறியடித்து இரசிய சோசலிசத்தையும் மார்க்சிய லெனினியத்தையும் பாதுகாக்கும் அரணாகவும், அவற்றுக்குச் செயன்மை வடிவமும் கொடுத்தவர் ஸ்டாலின்தான்.

1960களிலிருந்து உலகில் சோசலிச நாடுகளில் முதலாளித்துவ நீட்சியும் அதற்கெதிரான போராட்டங்களும் தொடங்கியிருக்கின்றன. இரசியாவில் மார்க்சியத் திரிபுவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவந்து சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழித்திருந்தார்கள். இத்தகைய நிலைமைகளை மார்க்சிய லெனினிய அடிப்படையில் புரிந்து விளக்கிப் புரட்சிக்கு வழிகாட்டியவர் மாவோ ஆவார். சோசலிச சமூக அமைப்பில் இருந்து கம்யூனிச சமூக அமைப் பிற்குச் செல்வதற்கான புரட்சிகரத் திசைவழியைச் சீனப் புரட்சியின் மூலம் ஏற்படுத்திக் காட்டியவர் மாவோ. 

அதாவது, சோசலிச நாடுகளில் முதலாளித்துவப் பாதையாளர்களுக்கு எதிராகவும், முதலாளித்துவ மீட்சிக்கு எதிராகவும் பாட்டாளி வர்க்கத்தைத் தயார்படுத்துவதாக மாவோவின் புரட்சிகர நடவடிக்கைகளும் சிந்தனைகளும் அமைந்திருந்தன/அமைந்திருக்கின்றன. பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் கம்யூனிச சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு மாவோவியம் வழிகாட்டுகின்றது. இங்கு, மார்க்சிய லெனினியமானது மார்க்சிய லெனினிய மாவோவியமாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. 

ஆக, மார்க்சு-ஏங்கெல்சு முன்வைத்ததை மட்டுமே மார்க்சியம் என்பதாகப் பொத்தாம் பொதுவாக வரையறுத்திட முடியாது. மார்க்சிய லெனினிய மாவோவியத்தின் மொத்தத் தொகுப்பையே மார்க்சியம் என வரையறுப்பதுதான் சமூக அறிவியல் கோட்பாட்டைச் சரியான முறையில் புரிந்துகொண்டதற்கான / புரிந்துகொள்வதற்கான பொருளாகும். 

மார்க்சு, ஏங்கெல்சு, லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் ஒட்டுமொத்தச் சிந்தனைத் தொகுப்பே மார்க்சியத் தத்துவத்தின் முழுமையாகும். மார்க்சிய லெனினிய மாவோவியத்தின் கூட்டுத்தொகுப்பே உலகின் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் தத்துவமாக அமைந்திருக்கின்றது. ஆனால், மார்க்சியம் குறித்து எழுதவும் பேசவும் கூடிய அறிவுஜீவிகள், மார்க்சியம் என்பதின் எல்லையை மார்க்சு-ஏங்கெல்சு முன்மொழிந்தவற்றை மட்டும் வரையறுப்பதோடு நின்று கொள்கிறார்கள். மார்க்சு, ஏங்கெல்சு ஆகியோரின் புரட்சிகரச் சிந்தனைகளோடு லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் புரட்சிகரச் சிந்தனைகள் மார்க்சிய வளர்ச்சி நிலையாய் அமைந்திருப்பதைப் பார்க்கத் தவறுகிறார்கள்; பார்க்க மறுக்கிறார்கள். அதேவேளையில், மரபு மார்க்சியம், நவமார்க்சியம், பண்பாட்டு மார்க்சியம் என்றெல்லாம் மார்க்சியத்தை வகைப்படுத்துகின்ற பேரில் மார்க்சியத்திற்கு மாறான திரிபுவாதங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காவுட்ஸ்கி, ட்ராட்ஸ்கி, அல்தூசர், அந்தோணியா கிராம்சி, ப்ராங்பர்ட்மார்க்சியர், ஹெபர் மார்க்சு... போன்றவர்கள் முன்வைத்துள்ள சிந்தனைகளையே மார்க்சியம் என அறிவுஜீவிகள் பலர் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் லெனின், ஸ்டாலின், மாவோ சிந்தனைகளை மார்க்சியம் என ஒத்துக்கொள்ள மறுப்பதோடு, அவர்களைப் பற்றிய தவறான மதிப்பீடுகளையே முன்வைத்துள்ளனர் / முன்வைக்கின்றனர். லெனின், ஸ்டாலின், மாவோ குறித்த மார்க்சியத் திரிபுவாதிகளின் மதிப்பீடுகள் யாவும் அவர்களைக் கொடூரமானவர்களாகவும் சர்வதிகாரிகளாகவுமே காட்டுகின்றன. 

உழைக்கும் பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தின் பக்கம் நின்றவர்களை வெறுமனே சர்வதிகாரிகள் என முத்திரை குத்திக் கொச்சைப்படுத்துவதோடு, அவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பிவிடுவது முதலாளிய வர்க்கத்தின் சிந்தனை முறை. இச்சிந்தனைமுறை மார்க்சியத்தின் பேரால் இயங்கிக் கொண்டிருக்கும் சில பல அறிவுஜீவிகளிடமும் இருந்து கொண்டுதானிருக்கிறது. இத்தகைய அறிவுஜீவிகள் மார்க்சியத்தின் பக்கம் நிற்கிறோம் என்கிறபேரில் உழைக்கும் பாட்டாளி வர்க்க நலனுக்கு எதிராக இருந்துகொண்டிருக்கிறார்கள்; மார்க்சியத்தின் அடிப்படையே தெரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க நலனில் அக்கறை கொண்டு பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தோடு சோசலிசப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர்கள் லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோராவர். இவர்கள் மார்க்சியத்தின் பக்கம் நின்றார்கள்; பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் நின்றார்கள்; புரட்சியின் பக்கம் நின்றார்கள். இதன் காரணமாகவே, ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், உடைமை வர்க்க முதலாளியச் சிந்தனை முகவர்கள், மார்க்சியத் திரிபுவாதிகள், மார்க்சிய இயக்கத் துரோகிகள் போன்றோர் லெனின், ஸ்டாலின், மாவோ பற்றிய தவறான மதிப்பீடுகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக, ஸ்டாலின் மீதான அவதூறுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுப் பரப்பப் பட்டன. ஸ்டாலின் மீதான அவதூறுகள் யாவும் மார்க்சியத் திரிபுவாதிகளால்-மார்க்சிய எதிராளிகளால் உருவாக்கப்பட்டவை. உண்மையில், ஸ்டாலின் மார்க்சியத்தின் பக்கமே நின்றிருக்கிறார். அதாவது, ஸ்டாலினின் புரட்சிகர நடவடிக்கைகளும் சிந்தனைகளும் மார்க்சியத்திற்கும் சோசலிச சமூக அமைப்பிற்கும் பெரும் பங்களிப்பாக அமைந்திருந்தன என்பதைப் புரட்சிகர வரலாறு பதிவு செய்திருக்கிறது.

புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் லெனின் உருவாக்கிய சோசலிச இரசியாவைப் பேணிப் பாதுகாத்ததோடு, பாட்டாளி வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டியவர் ஸ்டாலின். மேலும், சோவியத் இரசியாவில் உலகிலேயே முதலாவதும் மிகப் பெரியதுமான விவசாயக் கூட்டுப் பண்ணைகளை உருவாக்கியவர் ஸ்டாலின்தான். 

அதாவது, விவசாயிகளுக்கு நிலங்களைப் பகிர்ந்தளித்து-அவர்களைக் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடச்செய்து-அவ்வுற்பத்திப் பொருட்களை அவ்விவசாயிகளே சந்தைப்படுத்தி விற்பனை செய்வதில் பெறக்கூடிய இலாபத்தை உழைப்புக்கேற்ற ஊதியமாகப் பங்கீடு செய்துகொள்ளச் செய்து, மீதமுள்ள இலாபத்தைச் சமூகத்தின் மற்ற பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்வதுமான வழிமுறைகளால், விவசாயிகள் தற்சார்புடன் திகழ்வதற்கான கூட்டுப் பண்ணை உற்பத்தி முறையை சோவியத் இரசிய நாடெங்கிலும் அறிமுகப்படுத்திச் செயன்மைப்படுத்தி வெற்றியும் கண்டவர் ஸ்டாலின். 

மேலும், வேலைக்கு உத்திரவாதம், அனைத்துக் குடிமக்களுக்கும் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு, எழுத்தறிவின்மை முழுநீக்கம் போன்ற பயன்களுடன் கூடிய உலகின் முதல் சோசலிச அமைப்பு சோவியத் இரசியாவில் ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உலக பாசிச பயங்கரவாதியான இட்லரை எதிர்த்த போராட்டத்தைத் தீரமுடன் வழிநடத்தி வெற்றி கண்டவர் ஸ்டாலின். இவருடைய பெருமுயற்சியாலும் வழிகாட்டுதலாலும்தான் கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் அனைத்தும் விடுதலை பெறுவதோடு சோசலிச நாடுகளாகவும் மாற்றம் பெறுகின்றன. மேலும், முதலாளித்துவச் சீர்கேடுகளால் சோசலிச நாடுகள் சீர்குலைவதைத் தவிர்க்கும் வகையில் சோசலிச நாடுகளோடு முதலாளித்துவ நாடுகள் அண்டுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஸ்டாலின்தான். 

மேலும், சீனா, கியூபா, பொலிவியா, வியட்நாம், கொரியா, கம்போடியா போன்ற நாடுகள் விடுதலை பெறுவதற்கான புரட்சிகரப் போராட்டங்கள் அனைத்திற்கும் பேருதவி புரிந்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியவாதிகள்-அனைத்துப் பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து புரட்சிகர வரலாற்றின் முன்னணியில் நின்றவர் ஸ்டாலின்தான்.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத் தன்மைகொண்ட வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு சோவியத் அரசுக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலைமை தாங்கியவர் ஸ்டாலின். உலகம் முழுவதும் மனிதர் இருக்குமிடத்திற்கெல்லாம் மார்க்சியம் போய்ச் சேரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் புரட்சிகரத் தத்துவ நூல்கள், புரட்சிகர இலக்கியங்கள், சோசலிச சமூக அமைப்பு குறித்த நூல்கள், மார்க்சிய அடிப்படையிலான வரலாற்று நூல்கள், மார்க்சியக் கல்வி தொடர்பான அனைத்தும் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாஸ்கோ முன்னேற்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது ஸ்டாலின் காலத்தில்தான்.

ஸ்டாலின் குறித்தும், அவரது புரட்சிகர நடவடிக்கைகள் குறித்தும் இன்னும் அதிகமாகப் பட்டியலிட முடியும். ஸ்டாலினைப் புனித புருசராகவோ அல்லது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவோ அல்லது உயர்வகை அவதாரமாகவோ காட்டுவதற்காக மேற்குறித்த தரவுகளை முன்வைக்கவில்லை; முன்வைக்கவும் கூடாது. எல்லா மனிதர்களும் - எல்லா வகைத் தத்துவங்களும் -எல்லா வகையான நடவடிக்கைகளும் விமர்சனத்திற்கும் சுய விமர்சனத்திற்கும் உட்பட்டவைதான். மார்க்சியத் தத்துவம் உட்பட எதையும் புனிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை; அப்படிப் புனிதப்படுத்தவும் கூடாது. அதேபோல, ஸ்டாலின் உட்பட யாராக இருப்பினும் விமர்சனத்திற்கும் சுய விமர்சனத்திற்கும் உட்பட்டுத்தான் ஆகவேண்டும். ஸ்டாலின் ஒன்றும் விதிவிலக்கானவரல்ல. 

அதேவேளையில், எதைப்பற்றிய விமர்சனமாக இருந்தாலும் - யாரைப்பற்றிய விமர்சனமாக இருந்தாலும் அது நேர்மையான-சரியான ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தாக வேண்டும். ஆனால், ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் யாவும் அவதூறு களையும் பழி சுமத்தல்களையுமே கொண்டிருந்தன. இதே வேளையில், ஸ்டாலின் குறித்து ஆக்கப்பூர்வமான முறையில் விமர்சனம் செய்தவர் மாவோதான்.

மார்க்சியம் குறித்தும் சோசலிசம் குறித்தும் எதிர்மறையான விமர்சனங்கள் உலகநாடுகளிடம் பரவிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு மாவோ கையாண்ட விமர்சனம் சரியான முறையில் அமைந்திருந்தது. ஸ்டாலின் முன்வைத்த அல்லது மேற்கொண்ட நடவடிக்கைகளில் சரியின் பக்கம் நின்றுகொண்டு அவற்றின் தவறுகளை நேர்மையோடு விமர்சித்தவர் மாவோ. அந்தவகையில், மாவோ முன்வைத்த “மாபெரும் விவாதாம்,” “இரசியப் பொருளாதாரம் பற்றிய விமர்சனம்” ஆகிய இரு விமர்சன நூல்களும் மார்க்சியத்தையும் ஸ்டாலின் முன்வைத்தவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்வதற்கு வழிகாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கவையாகும்.

இரசிய சோசலிச சமூகத்தில் ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நிறைகுறைகள் இருந்தாலும், அவரின் நடவடிக்கைகள் யாவும் பாட்டாளி வர்க்க நலனை நோக்கப் படுத்தியே அமைந்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஸ்டாலின் பங்களிப்பானது புரட்சிகர நடவடிக்கைகளோடு மட்டும் தொடர்புடையனவாக அமைந்திருக்கவில்லை. மார்க்சிய வளர்ச்சி நிலைக்கு ஸ்டாலினின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்டாலின் தொகுத்த “இரசிய போல்சுவிக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு” மற்றும் “லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள்” போன்ற நூல்கள் மாபெரும் மதிப்பு மிக்கவையாகத் திகழ்கின்றன.

மனித சமூக அமைப்பில் மொழியின் இயங்குதல் பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தை அளிக்கும் வகையில் ஸ்டாலின் எழுதிய “மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்” என்ற நூல் மிகமிகக் குறிப்பான நூலாகும். 

மொழி என்பதை வெறுமனே வரிவடிவத்தோடும் மாற்றத்தோடும் மட்டும் தொடர்புபடுத்திப் பார்ப்பதுதான் மொழியியல் ஆய்வாகவும் அணுகுமுறையாகவும் வழமைப்படுத்தி வைத்திருக்கின்றனர் பெரும்பாலோர். ஆனால். ஸ்டாலினின் மேற்குறித்த நூலானது மொழியின் உள்ளடக்கம் குறித்தும், அதன் மாறுதல்கள் குறித்தும் வரலாற்றுப் பொருள் முதல்வாத இயங்கியல் அடிப்படையில் விளக்குவதாக அமைந்திருப்பதோடு, மொழி என்பதின் இயங்கியல் தன்மையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்குப் பேருதவி புரிவதாக அமைந்திருக்கின்றது.

“மார்க்சியமும் மொழியியல் பிரச்சனைகளும்” என்ற நூலைப் போலவே, “மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற நூலானது மார்க்சியத்தைச் செழுமைப்படுத்துவதாகவும், மனித குல விடுதலைக்குரிய மாபெரும் பங்களிப்பாகவும் அமைந்திருக்கின்றது. உலகில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் பொதுப்பிரச்சினைகள் குறித்தும், அத்தேசிய இனங்களின் விடுதலை குறித்தும் மார்க்சிய அடிப்படையில் விளக்குவதாக - தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் திசை வழிகளைக் காட்டுவதாக அந்நூல் விளங்குகின்றது. 

ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்கள் உயர்த்திப் பிடிக்கவேண்டிய நூலாகவும் இந்நூல் அமைந்திருக்கின்றது. அதாவது, உலகில் உள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான விடுதலைக்கும் வழிகாட்டும் கோட்பாடாக அமைந்திருப்பதும் இந்நூல்தான். ஸ்டாலின் எழுதிய “மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்”, “மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற இரு நூல்களுமே மார்க்சியக் கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதோடு, மார்க்சியத்தை மேலும் வளர்த்தெடுத்துச் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அந்தவகையில், ஸ்டாலினின் பங்களிப்பானது மார்க்சியத் தத்துவத்திற்குக் கூடுதல் பரிமாணத்தைத் தந்திருக்கிறது எனலாம்.

பாட்டாளி வர்க்க விடுதலைக்காக மட்டுமல்ல; எல்லா மனிதரின் விடுதலைக்காக; எல்லா மனிதரின் சமத்துவத்திற்காக; எல்லா தேசிய இனங்களின் விடுதலைக்காகவே மார்க்சியம் வழிகாட்டும் தத்துவமாக இருந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேசிய இனமும் விடுதலை பெறுவதும், அவ்விடுதலைக்காகப் போராடுவதும் அந்தந்த தேசிய இனத்தின் அடிப்படை உரிமை. இதைத்தான் மார்க்சியம் முன்வைக்கின்றது. 

ஆனால், மார்க்சிய அடிப்படையிலான சோசலிசப் புரட்சி நடைபெற்ற இரசியா, சீனா போன்ற நாடுகளும், சோசலிச நாடுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிற கியூபா, பொலிவியா போன்ற நாடுகளும் மார்க்சியத்திற்கு எதிரான நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் தற்போது வெளிப்படுத்தி வருகின்றன. அந்நாடுகள் மார்க்சியத்திற்கு விரோதமான ஏகாதிபத்திய நாடுகளாகவும் முதலாளித்துவ நாடுகளாகவும் சீரழிந்துவிட்டன. அதனால்தான் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதைத்தான் அந்நாடுகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. உலகில் நடைபெறும் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை அந்நாடுகள் எடுத்திருப்பதின் மூலம் தங்களின் உண்மையான ஏகாதிபத்திய முதலாளித்துவ அடையாளத்தை வெளிப்படுத்திவிட்டன என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

மார்க்சிய வழிகாட்டுதலின்படியோ அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவதின் வழியாகவோ ஒவ்வொரு தேசிய இனமும் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதைத்தான் மார்க்சியம் முன்வைக்கின்றது. இது குறித்து லெனின் கூறும் போது “எவரொருவர் தேசிய இனங்கள், மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காகப் போராடவில்லையோ; எல்லா தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையையும் சமத்துவமின்மையும் எதிர்த்துப் போராடவில்லையோ அவர் ஒரு மார்க்சியவாதியே அல்ல; அவர் ஒரு ஜனநாயகவாதியே அல்ல; அதில் சந்தேகமில்லை” என்கிறார். ஆக, மார்க்சியமானது தேசிய இனவிடுதலையை வலியுறுத்துகிறது; ஆதரிக்கிறது; வழிகாட்டுகிறது என்பது தெளிவாகின்றது.

*

மார்க்சியமும் 
மொழியியல் - தேசிய இனப் பிரச்சினைகளும்.
ஆசிரியர்: ஜே.வி.ஸ்டாலின்
தொகுப்பாசிரியர்: மகாராசன்.
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
யாப்பு வெளியீடு, சென்னை.
பக்கங்கள்: 184
விலை: உரூ 200/-
கழிவு விலையில்: உரூ 180/-
அஞ்சல் செலவு: 
பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு,
செந்தில் வரதவேல்
90805 14506