வியாழன், 20 டிசம்பர், 2018

எழுத்தின் தோற்றநிலையும் வரலாறும்: மகாராசன்

எழுத்துகளின் தோற்றத்திற்கு முதல் அடிப்படையாக அமைந்திருப்பன ஓவியங்களே ஆகும் எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். தொல் பழங்காலத்தில் வேட்டையாடித் திரிந்த மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த சில பல கிறுக்கல்களைக் கீறி, நாளடைவில் ஓவியங்களாகவும் வரைந்துள்ளதைத் தொல்லியல் சான்றுகளின்வழி அறிய முடிகிறது.

இத்தகைய ஓவிய நிலை குறித்துக் கூறும்போது, தொல் பழங்கால வேட்டைச் சமூகத்தில் மொழி மற்றும் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் தகவல் பரிமாற்றத்தில் ஓவியங்களே காட்சி மொழியாக உலகெங்கும் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. பின்னர் அது அலங்காரமாகவும் இருந்துள்ளது. இவ்வகை தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறைகளில் கண்டறியப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் வெறும் வெளிப்பாடு மட்டுமல்ல, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த சமூகத்தின் வியக்கத்தக்க வாழ்வியல் சூழலைப் பதிவு செய்துள்ள தொல் காட்சி ஆவணம் என்கிறார் காந்திராஜன். 

அதாவது, பாறை ஓவியங்கள்தான் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் மற்றும் அழகியல் வெளிப்பாடுகளைப் புலப்படுத்தக்கூடிய வடிவமாகத் திகழ்ந்திருக்கின்றன. ஓவியம் வரைதலையே சித்திரம் வரைதல் என்பர். சித்திரமும் கைப்பழக்கம் என்கிற சொல்வழக்கும் ஓவியம் வரைதலைத்தான் குறிக்கிறது.

சித்திரம் வரைதலே எழுத்துக்களின் தோற்றத்திற்கு அடிப்படையான காரணம் எனக் கூறும் இரா.நாகசாமி, குழந்தைகள் தாங்கள் கண்ணுறும் விலங்குகளையும் பறவைகளையும் படமாக வரைகின்றனர். அவற்றிற்கு உயிர் இருப்பதாகவே அவர்கள் கருதுவர். காடுகளிலும் மலைகளிலும் வேட்டையாடித் திரிந்த காலத்தில் இவ்வாறுதான் ஓவியங்களை வரைந்துள்ளனர். விலங்குகளின் உருவம் வரைந்து அவற்றை ஈட்டியால் குத்தியதுபோல் வரைந்தால் அது அவனுக்கு மாந்திரீக சக்தியைக் கொடுக்கும் என்றும், அதனால் ஏராளமான விலங்குகளை வேட்டையாட முடியும் என்றும் கருதி இருக்க வேண்டும் என்கிறார்.

மேலும், பல குடிமக்கள் சேர்ந்து ஓர் ஊரிலோ நகரிலோ வாழத் தலைப்பட்டபோது அவர்களுடைய பொருள்களைக் குறிக்கக் குறியீடுகள் இட்டுத் தெரிந்து கொண்டனர். ஊர்த் தெய்வத்திற்கு மக்கள் பல பொருள்களை வழிபாடாகக் கொடுப்பது வழக்கம். ஆதலின், ஊர்க் கோயில்களிலும் நகரக் கோயில்களிலும் ஏராளமாகப் பொருள்கள் சேர்ந்தன. இவற்றைக் கணக்கு வைத்துக் கொள்ள பல குறியீடுகள் தேவைப்பட்டன. உதாரணமாக, இவ்வளவு மாடுகள் எனக் குறிக்க மாட்டின் தலை போட்டு அருகில் வேண்டிய புள்ளிகள் இட்டு வைத்தால் அது அவ்வளவு மாடுகள் எனக் குறிக்கும். கலன்களையும் தானியங்களையும் போட்டு அருகில் இட்ட புள்ளி இவ்வளவு கலம் அல்லது தானியம் எனக் குறிக்கும். இவ்வாறு தனிப்பட்ட மனிதர்களிடத்தைக் காட்டிலும் கோயில்களில் கவனத்துடன் கணக்கு வைத்துக் கொள்ளும் தேவை இருந்தது. அதற்குக் குறியீடுகள் தோன்றின. இவற்றைச் சித்திர எழுத்துக்கள் என்பார் இரா. நாகசாமி. 

எகிப்து தேசத்தில் காணப்படும் ஓர் ஓவியத்தில் முட்டை வடிவமான ஓர் அடி நிலத்தில் சில செடிகள் காணப்படுகின்றன. அந்த அடி நிலத்திலிருந்து கிளம்புவது போல் ஒரு மனிதன் தலை இருக்கிறது. அவனுடைய தலையை ஒரு கயிற்றினால் பருந்து ஒன்று பற்றிக் கொண்டிருக்கிறது. இத்திரண்ட ஓவியம் பாப்பைரஸ் எனும் கோரைப் புல்லுக்குப் பெயர் போன நைல் ஆற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்த புராதன மக்களை எவனோ ஒருவன் வென்று அரசனானான் என்னும் கதையைக் கூறுகிறது. இவ்விதம் படத்தில் உள்ள வடிவங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நிகழ்வைக் குறிக்கும். இது பாங்குஸ்கேண்டி நேவியா மக்களிடத்திலும் அமெரிக்க ஆதிக்குடிகளிடத்திலும் உண்டு  என்கிற குறிப்பைத் தருகிறார் மணி.மாறன். 

மேலும், சிந்து, பாஞ்சால தேசங்களில் உள்ள ஹரப்பா,மொஹஞ்சதரோ என்ற ஊர்களிலே சமீபத்தில் கண்டறியப்பட்ட சுமேரியர் எழுத்துக்களாகக் கூறப்படுபவை, இச்சித்திர சங்கேதக் குறிகளாகும். 5000,6000 ஆண்டுகட்கு முற்பட்டவைகளாகவும் இவை உள்ளன என்பர். இதனால், அக்குறி எழுத்துக்கள் நம் தேசத்துக்கும் புறம்பானவை அல்ல என்பது தெளிவாகின்றது. அம்முறையில், மேலே கூறிய எழுத்து வகைகளை நோக்குமிடத்து அப்புராதன மக்களில் தமிழரும் விலக்கப்பட்டவர் அல்லர் என்று கொள்ளக்கூடியதாம் என்ற மு.இராகவையங்கார் கூற்றும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொல் பழங்காலத்தியத் தமிழ் மக்கள் ஓவியங்கள் மூலமாகத் தம்முடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதைத் தமிழகப் பாறை ஓவியங்கள்வழி அறிய முடிகிறது. இதைக்குறித்து விவரிக்கும் காந்திராஜன், தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்களில் வரையப்பட்ட கருப்பொருள்கள் இந்தியாவில் பிற பகுதிகளில் காணப்படும் ஓவியங்கள் போல பல்வேறு காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. பெரும்பாலான ஓவியங்களில் விலங்குகளை வேட்டையாடுதல், மான்கள், மாடுகள், குதிரைகள், யானை, நாய், ஆடு, பன்றி, புலி, சிறுத்தை, நரி, கழுதை, பாம்பு, மீன், பறவைகள், சண்டைக்காட்சிகள், மரம், சடங்கு மற்றும் சமூக நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. அதுபோல கணிசமான அளவில் அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன. அதேபோல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உருவங்களும் எண்ணற்ற அளவில் உள்ளன.

தமிழகத்தில் இதுவரை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் குறியீடுகளும் சில அடையாளங்களும் காணப்படுகின்றன. மேலும் வடிவியல் சார்ந்த மற்றும் சாராத உருப் படிவங்கள் பெருமளவில் பெருங்கற்காலச் சின்னங்களில் கிடைக்கின்றன. குறிப்பாக கீழ்வாலை, செத்தவரை, மல்லசத்திரம், திருமலை, புறாக்கல் மற்றும் சென்னராயன்பள்ளி  பாறை ஓவியங்களில் இவை தென்படுகின்றன.  பாறை ஓவியங்களில் காணப்படும் சில குறியீடுகள் பெருங்கற்காலப் பானை ஓடுகளில் காணப்படும் கீறல்கள் போல உள்ளன. செத்தவரையில் காணப்படும் ஒரு ஓவியம், விலங்கு ஒன்றினைத் தீயில் வாட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது. இக்காட்சியின் மூலம் அக்காலத்தில் எவ்வாறு நம் முன்னோர்கள் உணவினைத் தயார் செய்தார்கள் எனத் தெரியவருகிறது. மீன் மற்றும் கடல் வாழ்வியலை கீழ்வாலை மற்றும் காமயகவுண்டன்பட்டி ஓவியங்கள் மூலம் அறிய முடியும் என்கிறார்.

தமிழகத்தின்  கீழ்வாலை என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பண்டைய ஓவியத்தில் உருவ எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன. முதல் எழுத்து தென்னங்கீற்று போலவும், இரண்டாம் எழுத்து மத்தளம் போன்றும், மூன்றாம் எழுத்து சீப்பு போன்றும், நான்காம் எழுத்து மத்தளம் போன்றும், ஐந்தாம் எழுத்து நான்கு குறுக்குக் கால்களையுடைய சக்கரம் போன்றும் எழுதப்பட்டுள்ளதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ் ஓவிய எழுத்துகள், சிந்துவெளி எழுத்து வகையைச் சார்ந்திருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவ்வகையில், கீழ்வாலை ஓவிய எழுத்துகள் ‘நாவாய்த் தேவன்’ என ஓவிய எழுத்தில் குறிக்கப்பட்டிருப்பதாகச் சிந்துவெளி எழுத்துகளோடு தொடர்புபடுத்துகிறார் இரா.மதிவாணன். மேலும், தமிழகத்தின் பழங்காலத்தியப் பாறை ஓவியங்கள் பலவற்றிலும் சிந்துவெளி எழுத்தமைந்த சொற்களை அவர் எடுத்துக்காட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குகைகளின் சுவர்களில் ஓர் ஓவியத்தின் மீது மற்றொரு ஓவியம் வரையப்பட்டிருப்பது ஆய்விற்கு உரிய ஒன்றாகும். இது தொடர்ந்து இந்தக் குகைகளில் மனிதர்கள் புழங்கியதைக் காட்டுகிறது. மேலும், இந்தக் குகைப் பகுதிகளில் தேவையான விலங்குகள் அதிக அளவில் கிடைத்திருக்க வேண்டும். இந்தக் குகைகளில் வேட்டையாட விரும்பும் விலங்கின் உருவத்தை வரைந்து சென்றால் அந்த மிருகம் வேட்டையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவும் இங்கு ஒன்றின் மீது ஒன்றாக ஓவியங்களை வரைந்திருக்கலாம். இதுதவிர, இந்தக்குகை ஓவியங்கள் வரையும் பயிற்சித் தளமாகவும் இருந்திருக்கலாம் என்கிற ஆய்வாளர்களின் கருத்து, ஓவிய உருக்களின்வழி எழுத்துக் குறிக்கான பயில்களம் இருந்திருப்பதையும் சுட்டி நிற்கிறது.

மேற்காணும் சான்றுகளின்வழி, ஒவ்வோர் ஓவியமும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும் குறிகளாக, அக்குறிகளே அப்பொருட்களைக் குறிக்கும் சொற்களின் அறிகுறிகளாக வளர்ச்சி அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. அதாவது, ஒரு பொருளின் உருவத்தை வரைந்தெழுதி, அது அப்பொருள் என்பதன் அறிகுறி என்று கருதப்பட்டிருக்கிறது. இவ்வாறாக,  ஒரு சொல்லுக்கு ஒரு ஓவியம் என்று எழுதப்பட்ட காலகட்டத்தில், கருத்துப் புலப்பாடுகளுக்கு  ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய ஓவியக் கருத்துப் புலப்பாட்டு வடிவத்தையே ஓவிய எழுத்து (Pictography) என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். இவ் ஓவிய எழுத்தையே சித்திர எழுத்து, படவெழுத்து, உருவெழுத்து, வடிவெழுத்து எனப் பல பெயர்கள் குறிப்பதாகக் கருதலாம்.

ஓவியங்களையே எழுத்தாகக் கொள்ள முடியாது. வரைந்த உருவை மட்டும் ஓவியம் குறிக்குமே ஒழிய, வேறு எக்கருத்தையும் குறிக்காது. இவை வரையப்பட்ட பொருளையே குறிக்கும் எனக் கூறுகிறார் இரா.நாகசாமி. மேலும், சித்திர எழுத்துகளையும் உண்மையான எழுத்துகள் என்று கூறமுடியாது. அவை வளர்ச்சி பெற்று கருத்து எழுத்துக்களாக பரிணமித்தன. உதாரணமாக சூரியனின் உரு வரைகிறோம். இது சூரியனை மட்டும் குறிப்பது சித்திர எழுத்து நிலை. இதற்கு அடுத்த நிலை சூரியனுடன் தொடர்பு கொண்ட பகல், வெப்பம் என்ற பொருள்களையும் குறிப்பதாம். இப்போது உருவை மட்டுமின்றி ஒரு கருத்தையும் குறிப்பதால் இதைக் கருத்து எழுத்து என்பர். இதுமட்டுமின்றி முழு உருவும் போடாமல் இரு கொம்புகளும் தலை மட்டும் வரைந்தால் மாடு என்று அறியலாம். இதுவும் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது என அவர் விவரிக்கிறார்.

ஓவிய எழுத்துக்கள் நாளடைவில் கருத்தெழுத்தாக வளர்ச்சியுற்றன. சூரியனின் ஓவியத்தை எழுதி இது சூரியன் என்று சொல்லப்பட்டால் அது ஓவிய எழுத்து எனப்படும். அந்தச் சூரியனின் ஓவியம் சூரியனோடு தொடர்புடைய பகற்காலத்தையோ சூரிய வெப்பத்தையோ குறிக்கிறதாகக் கொள்ளப்பட்டால் அது கருத்து எழுத்து (Ideogram / Ideography) எனப்படும் என்பர். அதாவது, தமது மனக்கருத்தைப் புலப்படுத்தும் வண்ணம் வரைந்தெழுதியதே கருத்தெழுத்து எனலாம். இதுவே உணர்வெழுத்து எனவும் சுட்டலாம். 

கருத்தெழுத்து பற்றி எடுத்துரைக்கும் மணி.மாறன், எழுத்து வளர்ச்சியின் அடுத்த நிலையில் ஒவ்வொரு உருவமும் தனித் தனிப் பொருள்களை நேரிடையாகக் குறிக்க முற்பட்டது எனவும்,  எடுத்துக்காட்டாக, எகிப்து தேசத்தில் அமைந்த ஒருவகை எழுத்தில் கண்ணின் உருவம் கண்ணையும், வட்ட வடிவம் திங்களையும் குறிப்பதாகக் கொள்ளப்பட்டன. இவ்வடிவங்களைக் கண்டவுடன் பொருள் இன்னது என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பொருளின் நிலையை அல்லது செயலைக் காட்டக் கூடுமேயல்லாமல் எண்ணினையோ வேற்றுமையையோ காலத்தையோ காட்டாது. எனவே, பல்வேறு வகையான கருத்துகளைத் தெரிவித்தல் இவ்வகை எழுத்துகளால் இயலாது எனவும் கூறுகிறார். 

கருத்தெழுத்துகள் பல காலம் வழக்கில் இருந்ததால் வரைந்துள்ள பொருளைக் குறிக்காமல் சில இடங்களில் கருத்தை மட்டும் குறிக்கவும் உபயோகப்பட்டன. மேலும், சூரியனைக் குறிக்க அதன் உருவம்  வரைகிறோம். அதை சூரியன் என்ற பெயரால் அழைக்கிறோம். பலநாள் வழக்கில் இருந்ததால் அவ்வுருவம் வரைந்தபோது சூரியனைக் குறிப்பதோடு அல்லாமல் சூ என்ற குறுகிய ஒலியையும் குறித்தது. இதேபோன்று முன்னர் பல பொருள்களைக் குறிக்க அவற்றின் உருவங்களை வரைந்தனர். அவை நாளடைவில் சொற்களின் முதல் ஒலியை மட்டும் குறிக்கவும் தலைப்பட்டன. இதுபோன்ற வளர்ச்சிகளால் ஒலி எழுத்துக்கள் தோன்றின.

சித்திர எழுத்துக்களிலும் கருத்து எழுத்துகளிலும் இட்டுள்ள குறிக்கும், அது குறிக்கும் பெயருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஆனால், ஒலி எழுத்துகள் பொருளையோ கருத்தையோ குறிக்காமல் குறிப்பிட்ட ஒலியைக் குறித்தன. இந்நிலையில்தான் குறிக்கும் ஒலிக்கும் நேர்முகத் தொடர்பு ஏற்படுகிறது. இப்பொழுதுதான் மொழிவதைக் குறிக்க எழுத்து ஏற்பட்டது என்று கூறமுடியும். இம்முறையில் உருவத்துக்கும் ஒலிக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லாவிட்டாலும் அவ்வுரு அவ்ஒலியை மட்டும் குறிக்க நிலைத்துவிட்டது என, ஒலி எழுத்துகளின் தோற்றப் பின்புலம் குறித்து விவரிக்கும் இரா.நாகசாமி, ஓவிய எழுத்து, கருத்து எழுத்து போன்றவற்றில் இருந்து தோன்றிய புரட்சிகரமான மாற்றமே ஒலி எழுத்தாகப் பரிணமித்தது என்கிறார்.

ஒரு சொல்லுக்கு ஒரு அடையாளமாக எழுதிய ஓவியம், நாளடைவில் அச்சொல்லின் முதல் ஒலிக்கு உரிய அடையாளமாக ஏற்பட்டது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கருத்தினைக் குறித்து நிற்காமல், அந்தந்த வடிவத்திற்கேற்ப ஒலியைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அதாவது, முற்காலத்தில் மக்கள் ஓவியத்தின் வழியாகக் கதை சொல்லக் கற்றுப் பிறகு, ஒவ்வொரு வடிவத்தையும் ஒவ்வொரு தனித்தனிப் பொருளைக் குறிக்கப் பயன்படுத்தினர். நாளடைவில், அவ்வடிவானது பொருளைக் குறிக்காமல் ஒலியைக் குறிக்கத் தலைப்பட்டது. இத்தகைய எழுத்து நிலையினையே ஒலி எழுத்து (Acrophony / Phonography) என்கின்றனர் தொல்லியலார்.

அவ்வடிவு அல்லது அவ்வடிவின் திரிபு முழு ஒலியையும் குறிப்பிடாமல் முதல் அசை ஒலியை மட்டுமே குறிப்பிடுவதாகிப் பின்னர் முதல் எழுத்தளவிலேயே நின்று விட்டது. இக்காலத்தில் உள்ள எழுத்துகளெல்லாம் இம்முறைப்படி ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபு வேறுபாடுகளாகக் கருதப்படுகின்றன. இங்ஙனம், ஒரு ஒலிக்கு ஒரு அடையாளம் என்று ஏற்பட்ட நிலையே ஒலி எழுத்தாகும். இவ்வாறாக,  ஓவிய மற்றும் கருத்து எழுத்திலிருந்து ஒலி எழுத்துத் தோன்றிய மாற்றம் என்பது மொழி வளர்ச்சியின் இன்னொரு பரிணாமக் கட்டமாகும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

வதை நிலம் : மகாராசன்


விதை நிலமெல்லாம்
வதை நிலமாகிக் கிடக்கிறது.

சோறுடைத்த மண்ணெல்லாம்
வயிறு காஞ்சு கிடக்கிறது;
வியர்வை மணக்கும் நெல்லை
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம்
பருக்கைகளுக்காகக்
கையேந்தி நிற்கிறது.

முறிந்து விழுந்த தென்னைகளைப் போல
முதுகொடிந்து கிடக்கிறது;
குலையோடு சரிந்த வாழைகளைப் போல
குலம் நொடிந்து கிடக்கிறது.

கூடிழந்த பறவைகள் போல
வீடிழந்து நிற்கிறது;
கருப்பம் கலைந்த நெல் பயிர்போல
உருக்குலைந்து சரிந்திருக்கிறது.

நெல்மணி விதைப்பு நிலமெங்கும்
கண்ணீர் தேங்கிக் கிடக்கும்
வதை நிலமாகிப் போச்சே மக்கா
வதை நிலமாகிப் போச்சே.

நிலத்தை விட்டு விடுவோமா?

நிலம் தான்
நம்மை விட்டுவிடப் போகிறதா?

ஆத்தாளோட தொப்பூள்க்கொடி
அறுத்தெறிஞ்ச நமக்கு,
நிலத்தாளோட தொப்பூள்க் கொடிய
அறுத்தெறிய மனசில்லயே மக்கா
அறுத்தெறியவும் முடியலயே மக்கா.

ஏர் மகாராசன்

எழுத்தோவியம்
தோழர் Palani Nithiyan

வெள்ளி, 23 நவம்பர், 2018

வலியெழுத்து : மகாராசன்

நாடிழந்த ஈழத் தமிழர்
அகதி வாழ்வின் வலியை,
இப்போது தான்
கூடும் வீடுமிழந்த சனமெல்லாம்
உணரத் தொடங்கியிருக்கிறது.

வெட்டியான் நிழலில் வெள்ளாளனும்
வெள்ளாளன் நிழலில் வெட்டியானுமாக
நிழல்களை  ஒன்றாக்கியது
அந்நிலத்துப்
போர்.

ஊருக்குள்ளிருந்த மச்சு வீட்டையும்
சேரிக்குள்ளிருந்த குச்சுக் குடிசையவும்
வாரிச் சுருட்டி
ஊரையும் சேரியவும்
ஒன்றாக்கி விட்டுப் போயிருக்கிறது
இந்நிலத்துப்
புயல்.

அவர்களுக்கொரு நாடிருந்தது;
நமக்கொரு வீடிருந்தது.

இரு நிலத்துத் தமிழரும்
வாழ்விழந்து அகதியானோம்;
வலி சுமக்கும் பிறவியானோம்.

ஏர் மகாராசன்.

சம்சாரிப் பிஞ்சுகள் : மகாராசன்

ஊருக்குச் சோறு போட
ஒழச்ச சனமெல்லாம்
ஒரு வாய்ச் சோத்துக்கு
ஊரிடம் கையேந்தி நின்றபோது
உக்கிப் போனது
நிலமும்.

புயலடித்துக் கூடிழந்த பிஞ்சுகளின்
கண்களில் கசிந்தது
பசியின் வலி மட்டுமல்ல;
சம்சாரி வீட்டுப் புள்ளைகளாய்ப்
பிறந்ததன் வலியும் தான்.

ஏர் மகாராசன்.

மிச்ச உசுரு :- மகாராசன்

அம்மா அப்பா செத்துப்போனா
சுடுகாட்டுக்குப் போய்ட்டு திரும்பும்போது,
நாமும் செத்துப்போயிருக்கலாம்னு தோனுமே,
அதுமாதிரி அனாதையாகிப் போன மனநிலையில இருக்காக
சனமெல்லாம்.

வயல், தோப்பு, தோட்டம், ஆடு, மாடு, வீடு என அத்தனையவும் வாரிச் சுருட்டி நாசமாக்கிவிட்டுப் போன இந்தப் புயலும் மழையும்,  உசுர மட்டும் விட்டு வச்சிட்டுப் போயிருக்கு.

உசுரக் கொடுத்த அத்தனையும்
போன பின்னால,
இந்த உசுரும் போயிருக்கலாம்.

நெலம் நெலம்னு கிடந்த
சாதி சனமெல்லாம்
நெலத்துல அழுது மடியுது.

இது தான் இந்தச் சனம்
வாங்கியாந்த தலையெழுத்து.

நெலத்த விட்டுப் போட்டு
நாங்க வெளியேறும் போது,
வேடிக்க பாக்குற சனத்தோடு
தலையெழுத்து மாறத்தான் போகுது
கல்லு மண்ணு திங்குற சனமாக.

ஏர் மகாராசன்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

தமிழ் அடையாள அரசியல் - திசை நோக்கிய நகர்வு: மகாராசன்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கொள்கை மற்றும் பண்பாட்டு அறிக்கையை அவ்வமைப்பின் மாநிலச் செயலர்களுள் ஒருவரான தோழர் கண்மணிராசா அனுப்பி வைத்திருந்தார்.

கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, ஆய்வு, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த படைப்பாளிகளுக்கான இடதுசாரிக் கண்ணோட்டத்தையும் நிலைப்பாட்டையும் தெளிவுபட வரையறுத்துக் கொள்வதற்கான கருத்தியல் ஆவணமாகவும், வழிகாட்டுக் கையேடாகவும் பல்வேறு பொருண்மைகள் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, 2009 இல் ஈழத்தில் நடந்தேறிய ஈழத்தமிழர் இனப்படுகொலைக்குப் பின்பாகத் தமது அரசியல் நிலைப்பாட்டை மீளாய்வு செய்திருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

"ஈழப் போரின் அழிவுகள் மிக முக்கியமாகத் திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த தமிழ் அடையாளத்தின் மேட்டுக்குடி நலன் சார்ந்த பண்பை வெளிப்படுத்துகின்றன. தமிழ் மேட்டுக்குடிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தமிழ் அடையாள அரசியலைப் பயன்படுத்திக் கொண்டார்களே அன்றி, உழைக்கும் தமிழ் மக்களை அவர்களது உரிமைகளுக்காக ஒன்றிணைக்கவில்லை என்பது இன்று அப்பட்டமாகத் தெளிவாகியுள்ளது. இன்னொருபுறம், தமிழ் அடையாளத்தை வெகுமக்கள் சார்ந்த ஒன்றாக இடதுசாரி சனநாயக சக்திகள் வளர்த்தெடுக்க இயலாமல் போன குறைபாட்டையும் இச்சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தமிழ் அடையாளம் என்பது எதிர்காலங்களிலும் புறக்கணிக்கப்பட முடியாத ஒரு பண்பாட்டு அரசியல் பிரச்சினை என்பதையும் இச்சூழல் உறுதிப்படுத்துகின்றது " என, தமிழ் அடையாள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் குறித்து முனைப்புடனும் அக்கறையுடனும் கூடிய செயல்பாடுகளை வகுக்க வேண்டும் எனத் தமது நிலைப்பாட்டை மறுவரையறை செய்திருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

அவ்வகையில், தமிழ் அடையாள அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலே ஆகும். உழைக்கும் தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியலே இடதுசாரித் தமிழ் அடையாள அரசியல் ஆகும். ஆக, தமிழ்த் தேசியம் குறித்த அரசியல், பொருளியல், சமூகவியல், பண்பாட்டியல் சார்ந்த கருத்தியல் உரையாடல்களுக்கும் அவை சார்ந்த முன்னெடுப்புகளுக்கும் மிக முக்கியமான களத்தை ஏற்படுத்தி இருக்கிறது கலை இலக்கியப் பெருமன்றம்.

தமிழ்த் தேசிய அடையாள அரசியலைக் குறித்த இந்நகர்வுக்கு முன் வந்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

கலை இலக்கியப் பெருமன்றத்தினர் இந்நிலைப்பாடு சார்ந்த செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவதே அவர்கள் முன் இருக்கும் பெருங்கடமை என்பதை உணர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவ்வாறு செயல்படும் தளங்களில் எமது தோழமைப் பங்கேற்பும் கண்டிப்பாய் இருக்கும்.

அவ்வறிக்கையின் ஓரிடத்தில், பெருமன்றம் 'இந்திய மற்றும் தமிழ் மரபுகளைச் சுவீகரித்துக் கொண்ட '
ஒரு அமைப்பாகச் செழுமைப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திய மரபு என்பது ஆரிய வைதீக மரபாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தமிழ் மரபுகளுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்திய மரபு என்பதற்குப் பதிலாக, தமிழ் மரபுகளைப் போல ஆரியத்திற்கும் வைதீகத்திற்கும் எதிரான இந்திய மரபுகள் என்பதாகத் திருத்தம் செய்தலே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். இது குறித்துக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொறுப்பாளர்கள் மீளாய்வு செய்வார்கள் என நம்புகிறேன்.

கலை இலக்கியப் பெருமன்றத்திற்குப் புரட்சிகர வாழ்த்துகள்.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
01.11.2018

சனி, 10 நவம்பர், 2018

இலக்கணம் கற்றல்: வேர் அறியும் தடம்.

எழுதப் படிக்கத் தெரியாத எளிய பாமரத் தமிழர்கள் பேசுகிற தமிழில் அச்சு அசலான இலக்கணம் இருக்கிறது. இலக்கணப்படி தான் பேசுகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் பேசுவதில் இலக்கணம் இருக்கிறது என்பதே சரியானது.

நாம் பேசுகிற மொழியில் என்னென்ன மாதிரியெல்லாம் இலக்கணம் இருக்கிறது என்பதைத் தான் இலக்கண நூலார் வரையறை செய்தார்கள். மொழியை ஆளாளுக்கு ஒரு மாதிரியாகவும் வேறாகவும் கையாளாமல், மொழியைத் தரப்படுத்தவும் நிலைப்படுத்தவும் உகந்த இலக்கணம் பேருதவி புரிகிறது. சமூகமாகக் கூடி வாழும் மனிதர்களுக்குப் பொதுவான மொழி வரம்பு தேவை.

மொழி ஒழுங்கு, சமூக ஒழுங்கையும் மனித நடத்தை ஒழுங்கையும் வடிவமைக்கக் கூடியது. அவ்வொழுங்கு முறையைப் பள்ளிக் குழந்தைகள் கற்பது வெறும் எழுத்து, சொல், யாப்பு என்ற நிலையினதாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது கூடாது.

வேறெந்த மொழியினரும் அந்த மொழியின் இலக்கணத்தை ஏன் பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பவே மாட்டார்கள். நாம் தான் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மொழி வெறும் மொழி என்பதாக மட்டும் பார்த்தல் கூடாது.

மொழியானது வெறும் பேச்சுக் கருவி மட்டுமல்ல; அம்மொழி பேசுவோரின் அடையாளம், வரலாறு, பண்பாடு, அறிவு, அறம், அரசியல், அழகியல், படைப்பாக்கம் எனப் பன்முக வேர்களையும் கொண்டிருப்பது. மொழியே ஓர் இனத்தின் வேர். வேரை மறுக்கிற, மறந்த, இழக்கிற, இழந்த எந்தவொரு மரமும் செடியும் கொடியும் நிலைத்திருப்பதில்லை என்பதே இயற்கை விதி.

ஆக, ஒரு குழந்தை அல்லது மாணவர் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் வேரை உணர வேண்டும் என்பதே.

இந்நிலையில், ஒரு சாபக்கேடு என்னவெனில், இலக்கணத்தைப் பயமுறுத்தும் பூச்சாண்டி போல கற்றுக் கொடுக்கும் முறையினால்தான், இலக்கணம் என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது.

ஆக, கோளாறு என்பது இலக்கணத்தில் அல்ல; இலக்கணம் பயிற்றுவிக்கும் முறையில் தான் இருக்கிறது.

ஒளிப்படம்:
Palani Nithiyan

சனி, 15 செப்டம்பர், 2018

விடுதலைக் கருத்தியலும் எதிர் மரபும்:- கார்த்திகேயன்

"தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" என்ற மகாராசனின் கட்டுரைத் தொகுப்பு நூலை (தோழமை வெளியீடு) வாசித்தேன். நூல் பல்வேறு தருணங்களில் எழுதப்பட்ட 10 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

விளிம்புநிலை மக்களின் கலகக் குரல் தாங்கிய விடுதலைக் கருத்தியலை எதிர்மரபாகக் கொண்டு வாசிப்பை நிகழ்த்துகிறது. வன்குடியாதிக்க முதலாளித்துவமும் இந்தியத் தரகு முதலாளித்துவமும் இந்திய தமிழக மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பது கட்டுரைகளின் உட்கிடக்கை.

இந்திய தேசியம் என்பது ஒரு பெருங்கதையாடல் என்பதனையும் அது எப்படி மொழிவாரித் தேசியங்களை தேக்கநிலைக்கு உட்படுத்தி மீளவிடாதபடி முடக்குகிறது  என்பதையும் தமிழகச் சூழலில் போதிய சன்றாதாரங்களுடன் விவரிக்கிறது.

இந்திய தேசம் என்ற கருத்தியல் இந்து தேசமாகவும் பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற கோணத்தில் அன்றைய அறிவுஜீவிகளால் முன்வைக்கப்பட்டு தொடர்ந்து பரப்பப்பட்டு அவை புனிதப் படுத்தப்பட்டதையும் தெளிவான சான்றாதாரங்களோடு விளக்க முயல்கிறது. 

பின்னைக் காலனித்துவம் மார்க்சியப் பின்புலத்தில் எளிமையாக விளக்கம் பெற்றுள்ளது. பின்காலனியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாக புது வன்குடியாதிக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

முல்லைப் பெரியாரணையின் மீதான நூலாசிரியரின் வரலாற்றியல் பார்வையிலான வாசிப்பில் பொதுவுடைமைக் கட்சிகளில் தரகுமுதலாளித்தனப் பாங்கு உள்ளார்ந்து இயக்கம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

கட்டுரைகளில் பேசுபொருளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பெளத்த - இந்திய நாட்டின் கூட்டு வல்லாதிக்க நடத்தைகள்மீது வெளிச்சம் பாய்ச்சுகிற எழுத்துகள் ஊன்றி கவனங்கொள்ளப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.

ஆசிரியரின் எளிமையனான மொழிநடை வாசிப்பை இலகுவாக்குகிறது. இந்தியச் சூழலில் பின் காலனியத்தை உள்காலனியம் வெளிக்காலனியம் என ந.முத்துமோகனும் ஹெச்.ஜி. ரசூலும்  வகைப்படுத்துவர். இந்தியச் சமூகத்தின் மீதான இந்த இரட்டைக் காலனிய ஒடுக்குமுறைகளையும் பிரதி பேசுபொருளாக்கியிருந்தாலும்  பின்னைக் காலனியக் கோட்பாட்டின் விரிவான பார்வையில் கட்டுரைகளில் வாசிக்கப்பட்ட பொருண்மைகள் நோக்கப்படவில்லை.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஏறு தழுவுதல்: பார்ப்பனியத்தை எதிர்க்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது :- ஆசைத்தம்பி

மதுரையில் புத்தகக் கண்காட்சியில் நுழைந்த பொழுது இராமனாய் எனது சீதையைத் தேடித் போனேன். ஆனால், திரும்பி வரும்பொழுது ஏகப்பட்ட காதலிகளோடு கோபியர் கண்ணனாய்த் திரும்ப வர வேண்டியதாயிற்று. மனதின் சஞ்சலத்தை வெற்றி கொள்ள இயலவில்லை. கருத்துப் பட்டறை பரமன் என்னைக் கண்டவுடன் ," உங்கள் ஏர் மகராசன் புத்தகம் ஏறு தழுவுதல் புத்தகம் இருக்கிறது என்று கையில் கொடுத்தார்.

புத்தகத்தின் அட்டைப் படமே திமிறி வரும் காளையாகத் தமிழ்ப் பண்பாடும், அதை ஏறு தழுவும் தமிழ் குடியும், ஏர் மகாராசனும்தான் தெரிந்தார்கள். அணிந்துரையில் நுழைந்த பொழுது முனைவர் முரளி ," ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப்  பாதிக்காதபோது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும் " என, இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை ஒரு வரியில் கூறி ஏர் மகாராசனிடம் நம்மை ஒப்படைத்தார் .

மனிதனின் முதல் உணர்வு பசி. முதல் தேடல் உணவுக்கானது . முதல் உற்பத்தி விவசாயம் . முதல் செல்வம் மாடு . முதல் பண்பாடு உழவர் பண்பாடு  எனப் பெருமை பொங்க உழவர் மகன் ஏர் மகாராசன் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும்போது பிரமிப்புடன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு நூலினுள் நுழைந்தேன் .

வரலாறு ஓரளவு அறிந்தவன் நான் . நான் அறியாதது இன்னும் நிறைய உள்ளது என்பதை எடுத்துரைத்தது இந்தப் புத்தகம் .

வேட்டையாடுதலால் கிடைத்த அதிகளவிலான விலங்குகள் உபரியாய் இருந்த சூழ்நிலையில், விலங்குகளைப் பழக்கி அவன் எடுத்த முயற்சிகள்தான் கால்நடை வளர்ப்பு . முதலில் அவன் யானை, மான்களை வளர்ப்பு விலங்குகளாக எடுத்த முயற்சிகளைச் சங்க காலப் பாடல்களில் இருந்து எடுத்துக் காட்டினார் .

இனக் குழுக்களின் அடையாளமாகக் குறிஞ்சி, முல்லை , நெய்தல் , பாலை மக்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட போது , மருத நிலத்தின் வேளாண் மக்கள் மட்டும்தான் உழவர், உழத்தி என்னும் பொதுப் பெயர்களில் அழைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார் .

ஏர் பூட்டி உழுவதே பாவம் என்றார்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்தல் பாவம் என்றது மனு சாஸ்திரம் . பசுவை அடையாளமாகக் காண்பார்கள் அவர்கள் . ஆனால் நாமோ காளை மாடுகளைத்தான் பண்பாட்டு அடையாளமாகக் காண்கிறோம் என்கிறார் அவர் . தமிழ் நாட்டு மரபும்  பார்ப்பனியத்தை எதிர்க்கும் , மறுக்கும் பண்பைத்தான்  உள்ளும் புறமும்  கொண்டிருந்தது என்பதை  அழுத்தந் திருத்தமாகப்  பதிவு  செய்திருக்கிறார்.

அறுவடைக் காலம் வரையில் ஓய்விலிருக்கும் காளைகள் தினவுடன் துள்ளலுடன் மிடுக்குடன்தான் இருக்கும் . அந்தத் தினவு வெளிப்பாடுகளை மிக அழகாக விவரித்துள்ள இந்த உழவுப் பேராசிரியர்  அந்தத் தினவையும் துள்ளல்களையும் மனிதர்களின் ஏறு தழுவல்கள் நிறைவு செய்கின்றன என்கிறார் . இதை அவர் மொழியிலேயே கேளுங்களேன்.

" மனிதர்களும் மாடுகளும் மாறி மாறி உழைக்கிறார்கள் .உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன . சோர்ந்து போகின்றன . இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக் கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வு தேவைப்பட்டது . அந்த ஓய்வு என்பது உணவோ உறக்கமோ அல்ல" . உள்ளம் மகிழும்படி , உற்சாகம் ஏற்படும்படியான பொழுது போக்குகள் . அந்தப் பொழுது போக்குகள்தான் மனிதக் காளைகளுக்கும் மிருகக் காளைகளுக்குமான ஏறு தழுவுதல் .

இந்த ஏறு தழுவுதல் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்திருக்கிறது என்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள கல் முத்திரையிலிருந்து தெரிகிறது . கி.மு. 1500 ஆம் காலத்தைச் சேர்ந்த பல்வேறு தடயங்கள் மூலம் ஏறு தழுவுதல்  3000-3500  ஆண்டுக்கான பண்பாடு என்கிறார்.

மாடுகளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் அன்பை ,பரிவை,  பாசத்தை மாட்டுப்பொங்கலில் காணலாம் என்று அதை விவரிக்கும் நிகழ்ச்சிகள் மனம் நெகிழ வைப்பன.

இறுதியாக நிலவுடைமைச் சமூகத்தில் உழவர் மக்களின் நிலங்கள் பார்ப்பனர்களால் பறிக்கப்பட்ட அவலத்தையும், அவர்களையும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் இழிவு செய்யும் போக்கையும் சுட்டிக் காட்டுகிறார் .

இப்போதெல்லாம் கோயிலைப் பார்க்கும்போது அதன் அஸ்திவாரத்தில் புதையுண்ட உழவர் மக்களின் நிலங்களும் பண்பாடும்தான் தெரிகிறது.

மொத்தத்தில் வரலாற்றின் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் பார்ப்பனியத்தின் வஞ்சகமும் துரோகமும் தன்வசம் ஆதிக்கப்படுத்துதலுமே முன் நிற்கின்றன . அவற்றை எதிர்த்து நிற்கும் வீரனாகத் தமிழர் பண்பாடு மட்டும்தான் நிற்கிறது .

இறுதியாக, முரளியின் அணிந்துரையே இந்தப் புத்தகத்துக்கு முடிவுரையாக ஆகிறது . "ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப் பாதிக்காத போது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும்” . இதை எல்லோரும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது நலம்.

 உழவருக்காகவும் விவசாயத்திற்காகவும் குரல்கள் அதிகம் ஒலிக்கின்ற இந்த சமயத்தில், தமிழ்ப் பண்பாட்டுக்காகக் குரல் கொடுப்போர் அதை முற்றிலும் அறிந்து குரல் கொடுக்க இந்தப் புத்தகம் உதவும் . ஏனெனில், ஏதும் அறியாமல் ஒன்றுக்குக் குரல் கொடுத்தால்  அது நிலைக்காது என்பதை வரலாறு காட்டி இருக்கிறது .

வாழ்த்துக்கள் மகாராசன்.

திரு ஆசைத்தம்பி அய்யாவின் மதிப்புரை.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

நிலத்தில் வாழ்வைத் தொலைத்தவர்களின் கதையைத் தாங்கி நிற்கிறது மகாராசனின் 'சொல் நிலம்' :- மூ.செல்வம்

பாடுபொருள் முழுவதும் தலைப்பில் மூட்டப்பட்டு கிடக்கிறது. அழகிய மருதநிலத்துப் பறவையுடன் எளிமையான புத்தக முகத்தோற்றம். எண்பத்தேழு பக்கங்களில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் விரிந்து கிடக்கின்றன.

கவிதைக்கேற்ற எடுப்பான பக்கங்களோ, மிடுக்கான காட்சிகளோ ஏதும் இல்லாமல், வெள்ளைக் காகிதத்தைக் கருப்பு எழுத்துகளால் அலங்கரித்து நிற்கிறது ஒவ்வொரு பக்கங்களும்.

நூலில் உள்ள எல்லா கவிதைகளும் சமகாலத்து உண்மையைச் சிறந்த சொற்களால் கவிதையாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொய் புனைவு சிறிதுமில்லை.

தாகம் இல்லாதோரும், தெளிந்த நீரைக் கண்டால் பருக நினைப்பது போல, பாமரனும் பருகும் வண்ணம் சொல் நிலத்துக் கவிதை தெளிந்து கிடக்கிறது.

பல முறை படித்தாலும் விளங்காத கவிதை நூல் பலவிருக்க, ஒரு முறை படித்தாலே இதயத்தில் குடி கொண்டு விடுகிறது சொல் நிலத்து வார்த்தைகள்.

நூலை அறிமுகம் செய்யும் விதமே படிப்பவர் மனதைக் கிறங்கச் செய்துவிடுகிறது.
                 தளுகை!
         நிலத்தால் மேனியில்
               உழவெழுதிய
         முன்னோர்களுக்கும்
      முன்னத்தி ஏர்களுக்கும்....
மேற்கண்ட அறிமுக வரியே என் அப்பன்,  அம்மா, தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டி அனைவரையும் என் கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.

ஒவ்வொரு கவிதையும் படிக்கும் போது பலவித உணர்வுகள் எனக்குள் எழுவதை உணர முடிந்தது.

'வாசிப்பு அளவு படிப்பு உள்ளவனும்' சொல் நிலத்தைப் புகழ்வதால்,
"கவிதை எழுதவும்,வாசிக்கவும் கவிதை மனம் வேண்டும் என்ற கருத்து, சொல் நிலத்தால் உடைபட்டது."
"கவிதை சாதாரண அறிவுக்குப் புலப்படாத அற்புதச் சக்தியால் விழைவது என்ற கருத்தும் பொய்யாய்ப் போனது."

பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமரர் ஏதறி வார்
என்னும் பாரதியின் வாக்கிற்கேற்ப எளிமையாக, பேச்சு வழக்கிலேயே கவிதைகள் நடைபோடுகின்றன.

சமுதாயச் சீர்கேடுகளையும்,
அவலங்களையும், கீழ்மைகளையும் சாடுகிற விதமாகக் கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

வளர்ந்த கவிஞர்களும் ,வளரும் கவிஞர்களும், கவிஞராக வேண்டும் என்னும் துடிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டிய நூல்.

தன் கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டு பொங்கும் ஒவ்வொருவரும் படித்துப் பெருமை கொள்ள வேண்டிய நூல் "சொல் நிலம்"

 உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்... (சொல் நிலம் )


மூ.செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

மகாராசனின் மொழியில் நிமிரும் வரலாறு: மொழியால் நிமிர்ந்தது உணர்வு :- திரு ஆசைத்தம்பி

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை என
ச. முருகபூபதியின் கவிதையோடு ஆரம்பித்து
பொறுமைக்கு அர்த்தப்படுத்தப்பட்ட  பெண்ணும் நிலமும் பருந்துகளால் சூறையாடப் படும் பொழுது தாய்க் கோழியின் தவிப்பாக மகராசனின் மனநிலையை இந்நூல் பேசுகிறது என்று கவிதை பட்டறை பதிப்பகம் எழுதியதை பார்க்கும் பொது மனசுக்குள் சோகம் இழையோடுகிறது.

அடுத்து " அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருக்கனும்டா "  என அப்பாவும் " "ஒழைக்காம உட்க்கார்ந்து சாப்புட்டா ஒடம்புல ஒட்டாது " என அம்மா சொன்னதையும் ஆசிரியர் நினைவு கூறும் போது யாரவது ஒரு பையன் வீட்டில் இருக்கலாம்ல ஏன் கஷ்டப்படுறீங்க என்று கேட்ட என்னிடம் என் ஐயாம்மா சொன்னது என் காதுகளில் ஒலித்தது ," "உண்ணப் பார்த்துக்கிட்டு இருந்தாலும் உழைக்க பார்த்துகிட்டு இருக்க கூடாது "

தனது எழுத்துக்களைப்  பற்றி  ஏர் மகராசன் ( ஏர் என்பது எங்கும் இல்லாத நிலையிலும் தனது பெயரில் அதை சேர்த்து நமக்கெல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ) கூறுகிறார் இப்படி .  "பகட்டும் பூடகங்களும் புனைவுகளும் இல்லாத எளிய மக்களின் வாழ்வியல் கோலங்கள் போலத்தான் எமது எழுத்துக்களும் அழகியல் , கோபம் , திடம் , மானுட வாசிப்பு போன்றே எனது எழுத்துக்களும் எளிமையானவை . எளிய மக்களுக்கானவை " . ஆனால் கருத்துப் பட்டறையோ ," நிலத்தை விட்டு அந்நியமாகாமல் விவசாயத்தோடு இன்னும் பிடிப்பு கொண்டிருப்பதால்தான் , நிலம் பற்றிய தவிப்பை ஏர் மகராசனால் புலப்படுத்த முடிகிறது அவருடைய பதிவுகளை வாசிக்கும்போது ஒட்டு மொத்த விவசாயக் குடிகளின் துயரத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன " என்று கூறும் போது இந்நூல் வாசிப்பின் அவசியத்தை உணர்த்திக் செல்கிறது

தனது முதல் கட்டுரையில் ( பெண் ஆண் உடல்கள் சொல்லாடல்களும் பொருள் கோடல்களும் ) பெண்ணைக் குறித்த அறங்கள்  ஆண்களால் உருவாக்கப்பட்டவை ஆண் நோக்கிலானவை ஆண்களின் நலனுக்கானவை என்பதை அழகாக கூறுகிறார் . இறுதியில் ஆணுடன் வேறு பெண்ணுடல் வேறு . இந்த வேறுபாட்டை இயல்பாய் இயற்கையாய் அமைந்த ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் உண்மையை இருக்க முடியும் . இந்த வேறுபாடுகளின் மீது ஏற்றது தாழ்வு காண்பிக்கும் போதுதான் செயற்கையாகவும் பொய்யாகவும் மாறி போகின்றன . பொய்யானவை நிலைப்பதுமில்லை வென்றதும் இல்லை என்கிறார்

பண்டைத் தமிழர்களுக்கான பண்பாடுகளை , இலக்கண மரபுகளை அறிய முடியாமல் நாம் தவிக்கும்போது தொல்காப்பியம் தான் தன்னை தாய் தந்தையாய் நம்மை தோளில் ஏற்றி வேடிக்கை பார்க்க வைக்கிறது என்று கூறும் ஆசிரியர் ஆனால் தொல்காப்பியர் பார்த்தது வேறு ( நம் மரபு ) . அவர்களின் மீதேறி  நாம் பார்ப்பது வேறு ( எதையும் மீளாய்வு செய்து பார்க்கிற புதுப் பார்வைகள் ) என்கிறார் . தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றைய வரையில் பெண்ணாடக்கல் என்பது தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது .  எல்லா மதங்களும் பெண்ணுக்கு எதிராக பெண்ணுடலைப் சிறுமைப்படுத்துவதிலும் அடிமைப்படுத்துவதிலும் ஒரே புள்ளியில் இணைந்திருக்கின்றன  என்று ஆதங்கப்படும் ஆசிரியர்  ,   தொல்காப்பியம் , மனு சாஸ்திரம் , பைபிள் , திருக்குரான் , பௌத்தம் , சமணம் , டார்வின் ,புருத்தோன், சிக்மண்ட் பிராய்டு  ஆகியோர் அமைத்த கட்டுமானங்கள் உண்மையானதுமில்லை : உறுதியானதுமில்லை என்பதை சமூக மாற்றங்கள் மெய்ப்பித்து வருகின்றன . வலுவானவை வாழும் .வலுவற்றவை வீழும் என்பதை மேற்குறித்த கட்டுமானத்திற்கு பொருத்திப் பார்க்கலாம் என்கிறார்

இரண்டாவது கட்டுரை பெண் கவிஞர் கனிமொழியின் கவிதை பற்றியது
" என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதை தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு "

தேநீர்க்கடை மேசையில்
ஒடுங்கியபடிக் கிடந்த
உன் கைகளை பற்றி
உன்னிடம் ஏதாவது பேசி இருக்கலாம்
ஒரு பிறழ்ந்த தருணத்தின்
தவறிய கணங்களில்
சிதறுண்டு போனது நம் உலகம்
தொலைந்து போன சில கணங்களைத்
தேடிக் கொண்டு இருக்கிறேன்
கறந்து போன நம் காதலை நியாயப்படுத்த "

இருவர் தலைகளும் சிதைக்கப்பட்டன
தலைகள் இருந்த இடத்தில்
கிரீடங்கள் வைக்கப்பட்டன
பீடத்தில் இருந்தவன் அட்சதை தூவினான்

இது போன்ற கவிதைகள்  இன்னும் சில

மூன்றாவது கட்டுரை சல்மாவின் கவிதைகளைப் பற்றி

"என்னை மீறித்
தீர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை
தீரவே தீராத
தனிமையுடன் நான்
இங்கேதான் இருந்து வருகிறேன்"

" என்றாவது வரும்
மழை அறியும்
எனக்குள் இருக்கும் கவிதை

பனி படர்ந்த
புற்கள் அறியும்
எனது காதல்

என்னை எப்போதும்
அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த எதையுமே "

குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்று தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் அருவருப்பூட்டுவதாய்
சொல்கிறாய்
இன்றும் இனியும் எப்போதும்
மாறுவதில்லை

இது போன்ற கவிதைகள்  இன்னும் சில

அடுத்தது நான்காவது கட்டுரை லதாவின் கவிதைகளைப் பற்றி

"வலி ருசிக்கும் அற்புதத்தை
அறிவாயோ என் பூவே
அணுவைத் துளைக்க
தாங்குமா என் சிறு பூ"

"தீயில் விறைத்து
நின்ற காலம்
நீர் தூவலில் வெடித்துச் சிதற
விழிகள் உயிர்பெற்று
விடை பெற்றன"

அடுத்து ஐந்தாவது கட்டுரை உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி கதைகளை முன் வைத்து

" நான் யார் ? பெரியவளா , சிறியவளா நீயே சொல்
அனு கேட்கையில் மரப்பாச்சி விழிக்கும்
எனக்குன்னு யார் இருக்கா ? நான் தனிதான ?
அனுவின் முறையாடல்களை
அது அக்கறையோடு கேட்கும் "

ஒரேயொரு முறை புரண்டு
விழித்துக் கொள்ளுங்களேன்
உடம்புக்கென்ன என்று
ஒரு வார்த்தை கேளுங்களேன்

ஏகப்பட்ட கவிதைகள் ஆசிரியரின் உரையாடல்களோடு

ஆறாவது பண்பாட்டு மார்க்சிய உரையாடல்

மார்க்சியத்தைப் பற்றி நடந்த ஒரு உரையாடலைப் பற்றி ஒரு உரையாடல்

அடுத்து ஏழாவது தினை மொழி எடுத்துரைப்புகள்

குறுந்தொகை கவிதையுடன் காதலர்களின் சங்கமங்கள் பற்றியது

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை  கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

நிகழ் காலத்திய வாழ்க்கையின் வூடே நகர்ந்து செல்வதை பற்றிய ஒரு உரையாடல்

எட்டாவது முல்லைப் பாட்டு பற்றியது

உரையாடல் முல்லைப்பாட்டு  கவிதைகளைப் பற்றி

ஒன்பது தற்கொலை செய்து கொண்ட உழவுக்குடிகள்

ஈராக் நாட்டின் பாக்தாத் அருங்காட்சியகம் அமெரிக்க படைகளால் அழிக்கப் பட்டபொழுது
மனிதத்தை நேசிக்கக் கூடிய கலைஞர்களிடையே  பெரும் கொதிப்பு இருந்தது . அந்த நாளின் இரவு முழுவதும் தனது அம்மா அக்கா தங்கை  உடுத்திய பழைய சேலை தாவணி பாவாடைத் துணிகளைக் கொண்டு நிறைய பொம்மைகளைச் செய்தவர் முருகபூபதி என்னும் கலைஞர் .அவரின் பெரும்பாலான நாடகங்கள் மக்களையும் மண்ணையும் கலைகளையும் நேசித்ததால் வந்ததாகும் .

பச்சை கிளி போல பறக்கிறோம்
தாலி பறி கொடுத்தேன்
கூரை பறி கொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத்
தனிவழி நின்றலஞ்சோம்
அழுகையொலி நிற்கவில்லை
யார் மனசும் சுகமாயில்லை
எனப் பாடியபடி  ஒருவர்
 முன்  செல்ல  மற்றவர்கள்  அவரைப்  பின்தொடர்கிறார்கள் . வேளாண்மைத்தொழிலால் மோசமாக்கப்பட்ட உழவர்களின் அழுகையும் ஒப்பாரியும் தான் நாடகத்தின் உயிர் என்பதை அந்த ஒப்பாரி பாடல் உணர்த்தியது

நிலத்தை நினைத்தும் மனைவி மக்களை நினைத்தும் செத்துப் போன சம்சாரிகளின் ஆன்மாக்கள்  அழுது புலம்புகின்றன . உள்ளத்தை உருக்கும் உரையாடல்கள்

பத்தாவது கோமாளிக்கூத்து

ஈழம் பற்றிய உணர்வுபூர்வமான உரையாடல்

போர் என்றால் வன்முறை . அழிக்கப்படுவது அநேகமாக பெண் உடல்களாக தான் இருக்கும். அதிக விதவைகள் வாழும் இடமாக ஈழம் போனது ஏன் ? விதைகளை விருட்சங்கள்  ஆக்க வேண்டியவர்கள் விதவைகளாகிப் போனது மிகப் பெரிய சோகம் . எம் தொப்பூள்க் கொடி உறவுகள் எம்மைக் காப்பாற்றுவார்கள் என மரண விளிம்பிலும் நம்பிக்கை வைத்திருந்த அவர்களின் நம்பிக்கையை மண்ணோடு மண்ணாய் ஆக்கியது நாமல்லவா ? நம்மை ஆண்ட அரசுகள் அல்லவா?  ஈழத் தமிழினத்தின் துயர் நிறைந்த கதையாடல்களை மிருக விதூஷகம் நடக்கமாய் ஆக்கியிருக்கிறார் முருக பூபதி .

எங்கள் வூரில் மலர்கள் இல்லை . பறவைகள் இல்லை வண்ணத்துப் பூச்சிகள் இல்லை . வண்டினங்களின் பாடல்கள் இல்லை பாதைகள் குழம்பிய பிரதேசத்திலிருந்து அவை திரும்பவே இல்லை . வூர் வூராய் தேடி வருகிறோம் . என அழுகிறார்கள் . மரணித்தவர்களுக்காகவும் மரணித்தவைகளுக்காகவும் அழுகிறார்கள் .

நாடற்ற மனித வாழ்வை நிலமிழந்த உயினங்களின் வாழ்வை, காடிழந்த மரங்களின் வாழ்வை ,வீடிழந்த மக்கள் வாழ்வை, கூடிழந்த பறவைகள் வாழ்வை, புதர் இழந்த பூச்சிகள் வாழ்வை ,கடல் இழந்த நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வை ஆமை உருக்கோலம் பூண்ட கோமாளிகள்  அரங்கேற்றுகின்றார்கள்

11 ஆவது கட்டுரை புதைகுழி மேட்டிலிருந்து வேளாண்குடிகளின் ஒப்பாரி

அறமும் அதிகாரமும் ஆதிக்க சக்திகளின் உடைமை  அன்றும் .இன்றும் என்றும் . தலைப்புக்கேற்ப வேளாண்குடிகளின் பாதிப்புகளை விரிவாக பேசுகிறார் ஆசிரியர் . சிந்திக்க வேண்டியவை . வேளாண்குடிகளுக்கான கோரிக்கையையும் வைக்கிறார் . எல்லோரும் இணைந்து போராட வேண்டிய விஷயம்
உரைக்க வேண்டிய விஷயம் , உறைக்கும்மா நமக்கு ?
இறுதிக்கு கட்டுரை 12 ஆவது

புதைக்காட்டில் மறைந்திருக்கும் தொல்லியல் தடயங்கள்

பழங்கால பண்பாட்டு அடையாளப் பதிவுகளை மக்கள் தமிழ் ஆய்வரண் நிறுவனர் முனைவர் மகராசன் கண்டறிந்து விளக்கி இருக்கிறார் . எல்லோரும் அறிய வேண்டிய விஷயங்கள் இவை

"மொழியில் நிமிரும் வரலாறு" படித்தேன். இவர் மொழியால் நிமிர்ந்தது
 என் உணர்வு . வாழ்த்துக்கள்..... மகாராசனுக்கு..  இல்லை இல்லை ஏர் மகாராசனுக்கு .

வியாழன், 6 செப்டம்பர், 2018

சொல் நிலம் : மண்வாசனை நிறைந்த எழுத்துகள்:- பிரபு தனராஜ்.

மகாராசனின் சொல்நிலம் முழுதும் மண்வாசனை நிறைந்த எழுத்துக்கள். அனைத்து விசயங்களையும் விவசாயியாக / உழவனாக இருந்தே எழுதியுள்ளார்.

ஒரு விவசாயியாகவே கோபப்பட்டிருக்கார்.
ஒரு விவசாயியாகவே ரசிக்கிறார்
ஒரு விவசாயியாகவே காதலித்திருக்கார்.
ஒரு விவசாயியாகவே நொறுங்குகிறார்.
அத்தனை பக்கங்களும் நித்திலங்கள்.

சில முத்துக்கள்……

நகரம் பற்றி…
"கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ்வெளியாய்ச்
சுருங்கிப் போனது" என
ரத்தினச் சுருக்கமாய்ச் சொல்கிறார்.

மர நிழல் பற்றி…
மரநிழலில் இருக்கும்
செடிகளை வனமாக பாவிக்கிறார்.

"மனித நிழல்
போர்த்திய நாடு தான்
வெயிலில் வெந்து சாகிறது" என சபிக்கிறார்.

கள்ளிச்செடியைக் கூட
வேறு ஒரு கோணத்தில்
ரசனையாய் பார்க்க முடிகிறது இவரால்.

"வெம்பாலைச் சுமந்து
பசுந்தோல் மேனியில்
பச்சை உடுத்திச்
சிரிக்கிறாள், கள்ளி"
என்கிறார்.

வாழ்த்துக்கள் ஆசிரியரே…!

நண்பர் யாழ் தண்விகா கொடுத்த புத்தகம் ஒரு வழியாக வாசித்தாயிற்று.


திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெருங்கடல் வேட்டத்து: கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்:- மகாராசன்

தமிழ் மரபில் அய்ந்து நிலங்களைப் பற்றிய விவரிப்புகள் அய்ந்திணை என்பதாக விரியும். அவ்வாறான அய்ந்திணையுள் கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்புமாய் விரிந்திருக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வியலே நெய்தல் திணை. இது, மலை, காடு, வயல் போன்ற மற்ற நிலப்பரப்புகளிலிருந்து வேறுபட்டது.

இத்தகையக் கடல்புறத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலை ஓரளவு பழந்தமிழ் இலக்கியங்கள் பேசியிருப்பினும், அப்பேச்சின் நீட்சி தொடரவில்லை. இப்போதுதான் கடல் நிலத்துக் கவுச்சி மணக்கும் வாழ்க்கை எழுத்துகளில் பரவத் தொடங்கியிருக்கிறது.

கடல் நிலத்துத் தமிழர்களின் தற்சார்பு, கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய அறிவு, மீன்பிடித் தொழில் முறை, கடல் பயணங்கள், வானியல் அறிவு, கூட்டுழைப்பு, மாந்தநேயம், குடும்ப உறவுகள், மீன்பிடிப் படகுகள், கடல் சீற்றங்கள், தற்காலிகப் பிரிவுகள், இதற்கிடையிலான மகிழ்ச்சியும் துன்பமுமான பாடுகள் எனப் பேச வேண்டியவை ஏராளம்.

ஆனாலும், கடல்சார் தமிழர்களின் வலி தோய்ந்த வாழ்வியல் பாடுகள் சமவெளித் தமிழர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டுவதில்லை. குறிப்பாகச் சொல்வதானால், கடல்புறத்து மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய புரிதல், சமவெளி மனிதர்களுக்குக் குறைவாகத்தான் இருக்கின்றது. இந்நிலையில்தான், கடல் நிலத்துத் தமிழர்களின் இரங்கல் நிறைந்த வாழ்வியலைச் சமவெளி மற்றும் மலைவெளித் தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தோழர் டி.அருள் எழிலன் அவர்களின் எழுத்திலும் இயக்கத்திலும்  வெளிவந்திருக்கிறது 'பெருங்கடல் வேட்டத்து' எனும் ஆவணப்படம்.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு, ஒக்கிப் புயலால் 194 மீனவர்கள் (இதில் பெரும்பாலானவர்கள் குமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரத்தை அண்டி ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மேற்குக் கடலோரத் தமிழர்கள்)  இறந்து போனதாக அரசு அறிவித்தது. பல நூறு மீனவர்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இன்னும் கிடைக்கவில்லை. கொஞ்சம் பேர் மீட்கப்பட்டார்கள்.

கடலே வாழ்வெனக் கிடக்கும் மீனவத் தமிழர்களின் வாழ்வில் இழப்பும் அழுகையும் தவிப்பும் வலியும் பிரிவும் மாறி மாறி வந்தாலும், அதையெல்லாம் தாங்கிக் கொண்டும் கடந்தும்தான் அவர்கள் இன்னும் அந்தக் கடல் மண்ணோடும் கடல் நீரோடும் ஒட்டி உறவாடிக் கிடக்கிறார்கள். இயற்கை தரும் காயங்கள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பியிருக்கும் இந்த அரசு நிர்வாகங்கள் செய்த துரோகத்தின் காயங்களைத்தான் அவர்களால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தவகையில்தான், மீனவத் தமிழர்களுக்கு ஒக்கிப் புயலும் அரசு நிர்வாகங்களின் அலட்சியமும் தந்திருக்கிற காயங்களின் வலியை ஆவணப்படுத்தி இருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

இந்தப் படம், ஒக்கிப் புயலுக்குப் பின்பான மீனவத் தமிழர்களின் மிக முக்கியமான வாழ்வியல் களங்களைப் பதிவு செய்திருக்கிறது.

கடலுக்குள் சென்ற ஆண்களை இழந்து தனிமைப்பட்டிருக்கும் பெண்களைக் குறித்துப் பேசுகிறது. தமது பிள்ளைகளை, கணவன்மார்களை, உறவுகளை இழந்து தவிக்கும் பெண்கள் அனாதைகளாக்கப்பட்டிருப்பதும், அவர்களது எதிர்காலம் நிச்சயமற்றதாக்கப்பட்டிருப்பதுமான அவலங்கள் அவர்களது வாக்குமூலங்கள் வாயிலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்குள் போய் வருகிற ஓர் ஆணை இழந்து, ஒரு பெண் அல்லல் படுகிற வலியே இந்தப் படத்தின் உயிர்.

மீனவக் கிராமங்கள் பெரும்பாலும் கிறித்துவ ஆலயங்களின் ஆன்மீகக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும், அருட்தந்தைகளும் ஆலயங்களும் விதிக்கிற கட்டுப்பாட்டு அறங்களை மீற முடியாதவர்களாய் மீனவர்கள் இருப்பதையும், பங்குத்தந்தைகளும் ஆன்மீகத் தலைவர்களும் அரசு நிர்வாகங்களை மீறியும் எதிர்த்தும் மீனவ மக்களுக்காகச் செயல்பட முடியாத கையறு நிலையில் இருப்பதால், அதனை அரசு நிர்வாகங்கள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்கின்றன என்பதையும் ஒளிச் சாட்சியம் செய்திக்கிறது இப்படம். அருட்தந்தை சர்ச்சில் அவர்களது பேச்சில் உண்மையும் அக்கறையும் கோபமும் நிறைந்திருப்பது படத்தின் இன்னொரு பலம்.

கடலுக்குள் சென்ற மீனவர்கள் ஒக்கிப் புயலில் சிக்கிக் கொண்டதற்கு, இங்குள்ள மத்திய மாநில அரசு நிர்வாகங்களே காரணம். முறையான தெளிவான வானிலை அறிக்கை மீனவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் அரசு நிர்வாகங்களால் எடுக்கப்படவில்லை. கடல் புயலில் சிக்கியவர்களை மீட்பதற்கான எவ்வித முயற்சிகளும் நடைபெறவில்லை. அரசு நிர்வாகங்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்தும் கண்துடைப்பு நாடகங்களே. அரசு நிர்வாகங்களால் புயலில் சிக்கியவர்களை மீட்க முழு மனதுடன் இறங்கவில்லை. மாறாக, அவர்களை மீட்பதில் அலட்சியப் போக்கையே கடைபிடித்தது என்பன போன்றவற்றை மீனவர்களின் வாக்குமூலங்கள் அம்பலப்படுத்துவதை ஆவணப்படுத்தியிருப்பது இப்படத்தின் அரசியல் பலம்.

கடல்சார் மனிதர்களின் கடலியல் மற்றும் வானியல் அறிவை அரசு நிர்வாகங்கள் எவ்வாறெல்லாம் அலட்சியப்படுத்துகின்றன என்கிற மீனவர்களின் வேதனையையும் ஆற்றாமையோடு படம் பதிவு செய்திருக்கிறது.

இந்த அரசு நிர்வாகங்கள் தம்மை முழுவதுமாகக் கைவிட்டு விட்டதாகவே மீனவர்கள் உணர்வதைக் காட்சி மொழிக்குள் கொண்டு வந்திருக்கிறது பெருங்கடல் வேட்டத்து.

ஒக்கிப் புயலில் சிக்குண்டவர்களை மீட்பதில் அரசு நிர்வாகங்கள் அலட்சியத்தைக் காட்டியதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது படம்.

இன்றைய உலகமயச் சூழலில் காடுகள், வயல்கள், மலைகள், கடல் என அத்தனை நிலப்பரப்பும் வளங்களும் பெரு வணிக நிறுவனங்களாலும் நாடுகளாலும் சுரண்டலுக்கு உள்ளாக்கும் வகையில் இங்குள்ள அரசுகளால் தாரை வார்க்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சிதான் சாகர் மாலா என்கிற திட்டம்.

அதாவது, கடல்சார் தொல்குடி மீனவத் தமிழர்களைக் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றவும் அந்நியப்படுத்தவுமான முயற்சிகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மீனவ மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒக்கிப் புயல் போன்ற கடல் சீற்றப் பாதிப்புகளுக்கு மீனவர்கள் உள்ளாகும் போது, அவர்களைக் காப்பாற்றுவதில் அலட்சியமும் பாராமுகமும் காட்டப்படும் போது, அவர்களாகவே கடல் புறத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.   மீனவர்கள் மீதான இந்த அலட்சியம் என்பது, அவர்களுக்கான அச்சுறுத்தல்தான். மீனவத் தமிழர்களைப் பாரா முகத்தாலும் அலட்சியத்தாலும் அரசு நிர்வாகங்கள் வஞ்சித்து வருகின்றன; இரண்டாம் தரக் குடிமக்களைப் போல அவர்கள் நடத்தப்படுகிறார்கள்; அரசுகள் அவர்களை முழுமையாகக் கை கழுவி விட்டன என்பதைக் காட்சி மொழியால் விவரித்துச் சொல்வதே இப்படத்தின் உள்ளீடான அரசியல்.

இழப்பும் இரங்கலும் நிறைந்திருக்கும் மீனவ வாழ்க்கைப்பாடுகள் பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தே தான் இருக்கின்றன.

ஒக்கிப் புயலில் தனது கணவரை இழந்த இராசி அவர்களைக் குறித்த ஆவணப் பகுதிகள் வேறொன்றைப் பதிவு செய்கிறது. ஆண்களை இழந்த பெண்களின் கண்ணீரும் கவலைகளுமே நிரம்பி இருந்தாலும், ஆண்களை இழந்து அனாதை ஆகி இருப்பதைப் பேசினாலும், இராசியின் பேச்சும் கவலை மறைத்த வெள்ளந்தியான முகமும் பெண்ணின் நம்பிக்கைப் பாடுகளைப் பேசுகின்றன. கணவரை இழந்து, இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு, வாழுதலின் நம்பிக்கையைப் பெண் பிள்ளைகள் தருவதாகப் பெண் பகிர்ந்திருப்பது வாழ்க்கையின் மீதான மீனவத் தமிழர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்படி, மீனவத் தமிழர்களின் வாழ்வியலைப் பேச நிறைய இருக்கிறது. உங்களது காதுகளையும் கண்களையும் கொஞ்சம் திறவுங்கள் என்பதான வேண்டுகோளோடு மீனவத் தமிழர்களின் வலியைப் பேசி படம் நிறைவடைகிறது.

மீனவர்களின் துயரப் பாடுகள் நிறைந்த வாழ்வியலை, ஒக்கிப் புயல் பாதிப்புகளை அரசு நிர்வாகங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மறைத்த மறந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்

மீனவத் தமிழர்களின் வலி மொழியைக் காட்சி மொழியாக்கியுள்ள தோழர்கள்  அருள் எழிலன், ஜெயக்கொடி மற்றும் குழுவினருக்குப் பாராட்டும் அன்பும் வாழ்த்தும். இது போன்று நிறைய படைப்புகள் வெளிவரட்டும்.

பெருங்கடல் வேட்டத்து:
கடல் நிலத்துத் தமிழர்களின் வலியை ஒளிமொழியால் ஆவணப்படுத்தியுள்ள மிக முக்கியமான படம்.

தேனியில் திரையிடல் நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை அமைப்புக்கும் தோழர் விசாகன் அவர்களுக்கும் நன்றி.

ஏர் மகாராசன்

புதன், 22 ஆகஸ்ட், 2018

எம்மூர் நிலத்தாள்

மழை நீர்
கோதிக் கசிந்திருந்த
ஈரப்பால் சப்பி,
வேர்க்கால் ஊன்றி
முளைகட்டித் தவழ்ந்து
முகம் காட்டிய
பசுந்தளிர்களுக்கெல்லாம்
தாயாய் இருந்தவள்,
கருப்பம்
கலைந்து கிடக்கிறாள்
வெஞ்சூட்டில்.

தூமையாய்க் கசிந்த
அரத்தப் பிசுபிசுப்பை
முகத்தில் பூசியபடி
மழைக் கஞ்சி
ஏங்கித் தவிக்கிறாள்
நிலத்தாள்.

ஆத்தாளின் வலியை
இப்போது
நிலத்தாளும்
சுமந்து கிடக்கிறாள்.


வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

வெள்ளச் சேதம்: மழையினால் வந்ததல்ல; மனிதத் தவறுகளால் வந்தது. கேரளா நமக்குத் தரும் பாடங்கள் :- சுந்தரராசன், பூவுலகின் நண்பர்கள்.

கடந்த பலநூற்றாண்டுகளில் இல்லாத வெள்ளத்தை கேரளம் சந்தித்து கொண்டிருக்கிறது. இந்திய வானியல் துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையின் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உள்ள காலத்தில், கேரளாவில் சராசரியாக பெய்யும் மழையை விட 8 மடங்கு அதிகமாக பெய்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களும் சராசரியை விட குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிக மழையை பெற்றுள்ளன. அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 35 மடங்கும், கொல்லத்தில் 15 மடங்கும் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது. இடுக்கியில் 206.4 மி.மீ மழையும் காசர்கோட்டில் 67 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த அளவிற்கு கடும்மழை பொழிவு இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை கருத்தில் கொண்டு கேரளாவிலுள்ள 39அணைகளில் 35அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. கொச்சின் விமான நிலையம் இன்னும் ஒருவார காலத்திற்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உரியிழந்தவர்களின் எண்ணிக்கை நூறை தாண்டுகிறது, முகாம்களில் சில லட்சக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமை சரியாக எவ்வளவு மாதங்கள் என்பதை கணக்கிடமுடியாது என்றும் ஏற்பட்டுள்ள பொருட்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதைம்  புரிந்துகொள்ள முடிகிறது.

கேரளா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையின் தீவிரம் முதல்முறையாக அந்த மாநிலம் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கலாம், ஆனால் இதற்கான எச்சரிக்கைகளை உலகம் வழங்கிக் கொண்டே வந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் புவனேஸ்வர் நகரும், கடந்த வாரத்தில் யமுனையில் ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி நகரமும் பாதிக்கப்பட்டன. மும்பை நகரம் அடிக்கடி "திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நகரமாகிவிட்டது, 2017ஆம் ஆண்டு பெங்களூரு நகரமும், சென்னை 2015லும், ஸ்ரீநகர் 2014 ஆம் ஆண்டும் "திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

வரக்கூடிய காலங்களில் "தீவிர காலநிலை நிகழ்வுகள்" (extreme climate events) இன்னும் அதிகமாகும் என்றும் 3 மணி நேரத்தில் அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்து திடீர் வெள்ளம் ஏற்படும் என்றும் சர்வதேச காலநிலை விஞ்ஞானிகளும், பல்வேறு ஆய்வு அமைப்புகளும் தெரிவித்துவந்தன. மத்திய அரசின் சமீபத்திய எச்சரிக்கையும் இதனை உறுதிப்படுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Gandhinagar) முக்கியமான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. புவியின் வெப்ப அளவு 1.5 முதல் 2 டிகிரி அளவிற்கு உயரும் போது இதைப்போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகமாகும் என்றும் அதுவும் குறிப்பாக "குறுகிய நேரத்தில் அதிகம் மழை பெய்யும்" (Short duration rainfall extremes) தீவிர நிகழ்வுகள் இந்தியாவில் அதிகரிக்கும் என்றும்  அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாதிரிகளை (Climate models) கொண்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர், மூன்று மணி நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் 25% அதிகரிக்கும் என்றும் இவற்றை தாங்கக்கூடிய வகையில் நம்முடைய நகர வடிவைமைப்புகள் இருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகிறது ஆய்வு.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றம் எதிர்பார்த்ததுதான் என்கிறார் புகழ்பெற்ற சூழலியல் விஞ்ஞானி மாதவ் காட்கில். இவர்தான் மேற்குத்தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்கான அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர். காட்கில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்காது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

இப்போது கேரளாவிலுள்ள நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், இது முழுமையாக மழையினால் ஏற்பட்டது அல்ல என்றும் அதிகமானது மனித தவறுகளால்தான் என்கிறார் காட்கில். அறிவியல்பூர்வமற்ற முறையில் நிலமும் மண்வளமும் பயனப்டுத்தப்பட்டதும், நீர்நிலைகளையும் சதுப்புநிலங்களையும் ஆக்கிரமித்து அந் நிலங்களின் பயன்பாட்டை மாற்றியதுதான் முக்கிய காரணம் என்கிறார். 

தமிழகத்திற்கு என்ன பாடம்?

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு சென்னை சந்தித்த வெள்ளத்திற்கு பிறகும் நாம் பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை, இப்போது கேரளாவும் நமக்கு பாடங்கள் சொல்லித்தருகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழகத்திற்க்கென "காலநிலை குறித்த" கொள்கைகளை வகுத்து தீவிரமாக நடைமுறைப்படுத்தவேண்டும். 1076கி.மீ நீள கடற்கரை கொண்ட தமிழகம் காலநிலை மாற்றத்தால், அதிக தீவிரமான காலநிலை நிகழ்வுகளை சந்திக்கும்/சந்தித்துக்கொண்டுமிருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன்னால் நடக்கும் நிகழ்வு, அதன் தாக்கத்தை எப்படி நாம் குறைக்கமுடியும்(mitigation), மற்றும் காலநிலை மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள முடியும் (adaptability) என்பதை கணக்கில் கொண்டு நம்முடைய அனைத்து திட்டங்களும் தீட்டப்பட்ட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது நகரங்கள்தான், ஏனென்றால் குறைந்தநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நம் நகரங்கள் கட்டமைக்கப்படவில்லை, குறிப்பாக நகரத்திலுள்ள வடிகால்கள் தினம் பெய்யக்கூடிய மழையின் அளவைக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இனிமேல் குறைந்த நேரத்தில், குறிப்பாக மூன்று மணிநேரத்தில் அதிக மழை பொழிவை தாங்கக்கூடிய வகையில் நாம் தயாராக வேண்டும். மாதாந்திர அல்லது தினசரி சராசரிஅளவுகள் எல்லாம் பழங்கதை, இனிமேல் மூன்று மணி நேரத்தில் தீவிர மழைப்பொழிவு சராசரிகள்தான் நம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கும். "நகர்ப்புற வெப்ப தீவு விளைவுகளும்" (urban heat island effect) நகரங்களில் பெய்யும் மழையின் தன்மையை மாற்றக்கூடியது, தமிழகம் அதிகமாக நகர்மயமான மாநிலம் என்பதை இங்கே நாம் நினைவில்கொள்ளவேண்டும். காலநிலை நிகழ்வுகள் கொண்டுவரப்போகும் பொருளாதார இழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும், சில செ.மீ. கடல்மட்டம் உயர்வு நாட்டின் பொருளாதாரத்தை புரட்டிபோட்டுவிடும் என்கிறார் ஸ்டெபானி ஹல்லேகட்டே, இவர் உலகவங்கியின் "பேரழிவு குறைப்பு மற்றும் மீட்பு" அமைப்பின் பொருளாதார நிபுணர். சென்னை தமிழகத்தின் தலைநகரம் மட்டுமல்ல, தமிழக பொருளாதாரத்தின் அச்சாணி, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் முகம் (face of employment).  சென்னை கடற்கரை நகரம் என்பதை நாம் குறித்துக்கொண்டு அதற்கென தனிப்பட்ட முறையில் "காலநிலை மாற்றத்தை "எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப உதவிகளின் மூலம் இன்னும் துல்லியமாக கணிக்கக்கூடிய காலநிலை மாதிரிகளை உருவாக்கவேண்டும். பொதுவாக விஞ்ஞானிகள் "பொது சுழற்சி மாதிரிகளை" வைத்துதான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவை தோராயமான தரவுகளை மட்டுமே தரக்கூடியவை, வெப்பசலனங்களால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுப்பது கிடையாது. இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் புவியின் வெப்பம் உயர உயர இந்த வெப்பசலனங்கள் மேல் எழுந்து, குளிர்ந்து, மழைப்பொழிவு அதிக அளவில் நடைபெறும். இவற்றை கணக்கிலெடுக்கும் வகையில் நம்முடைய ஆய்வு மாதிரிகள் உருவாக்கப்படவேண்டும், மற்றொரு ஆய்வு "இரு தீவிர காலநிலை நிகழ்வுகளுக்கு" இடையே உள்ள இடைவெளியை பற்றியதாக இருக்கவேண்டும்.

சமீபத்தில் அமெரிக்காவின் "நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்" "காலநிலை மாற்றம்" குறித்து  வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மேலும் கவலைகொள்ளக்கூடிய விஷயங்களை கொண்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட காலநிலை மாற்றத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. தற்சமயம் ஐரோப்பிய நாடுகள் மிகக்கடுமையான வெப்பநிலையை சந்தித்துக்கொண்டிருப்பது இந்த ஆய்வுகளின் கூற்றுக்களை உண்மையாக்கிக்கொண்டிருக்கிறது.

"காலநிலை மாற்றம்" மிக முக்கியமான பிரச்சனையாகும், மானுடத்தின் இருத்தியல் (existence) குறித்ததாகும். அதன் தாக்கத்தை குறைப்பதும் எதிர்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளவது மட்டுமே நம்முடைய இருப்பை உறுதிப்படுத்தும். மேலும் இது நாளைய பிரச்சனை அல்ல இன்றைய பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு:




புதைவிடத்தில் பால் தெளிக்கும் சடங்கைக் குறித்துப் பலதரப்பட்ட எடுத்துரைப்புகள் இருக்கின்றன. சமூகத்தில் உற்பத்தி - மறு உற்பத்தி சார்ந்த சடங்கியல் கூறுகள் எல்லாக் காலத்திய சமூக அமைப்பிலும் நிலவியவைதான். அவை பெரும்பாலும் நம்பிக்கை சார்ந்த அல்லது புரிதல் சார்ந்த அல்லது படிப்பினை சார்ந்த போலச் செய்தல் நிகழ்வுகள்.

அவை அறிவியலாகவோ அல்லது பகுத்தறிவாகவோ கூட இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அத்தகைய சடங்குகள் எத்தகைய உற்பத்தி முறையை - உற்பத்தி உறவுகளைக் கொண்டிருக்கிறதோ அல்லது கொண்டிருந்ததோ அதற்கு ஏற்றார் போலவும் அதனைப் போலச் செய்வதாகவும்தான் அமைந்திருக்கும். இத்தகைய உற்பத்தி சார்ந்த சடங்குகள் வைதீகச் சடங்குகளிலிருந்து மாறுபட்டவை; வேறுபட்டவை; எதிர்த்தன்மை கொண்டவை.

வைதீகத்திலிருந்து வேறுபட்டதான இம்மாதிரியான சடங்குகள்தான் நாட்டுப்புறச் சடங்குகள் எனப்படுகின்றன. நாட்டுப்புறச் சடங்குகளைக் கொச்சைப்பொருள் முதல்வாதம் பேசியே அவற்றை வைதீகத்தின் பக்கம் தள்ளுவதும், அவற்றுக்கு வைதீகச் சாயம் பூசுவதும் வைதீகத்தை இன்னும் பலமுள்ளதாகவே மாற்றும். 

வைதீகத்திற்கு எதிர்மரபாக இருந்து கொண்டிருக்கும் நாட்டுப்புற மரபுகளைக் கை கழுவுதல் என்பதும் வைதீகத்திற்கான சேவையே தவிர வேறல்ல. நாட்டுப்புற மரபுகளே வைதீகத்திற்கான எதிர்ப்பு மரபு என்பது இறுதி வாதமல்ல. வைதீகத்தை எதிர்ப்பதற்கு நாட்டுப்புற மரபுகளைத் துணை சக்திகளாகக் கொள்ள வேண்டியதும் பரிசீலிக்க வேண்டிய ஒன்று என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் புரிந்து கொள்வதில் இன்னும் போதாமைகள் இருப்பதாலேயே நாட்டுப்புற மரபுகளையும் கொச்சையாகவே கருதும் போக்கு இருந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புற மரபுகள் பகுத்தறிவு என்றோ அறிவியல் என்றோ முழுமையாக ஏற்க முடியாது. அதே வேளையில், அவை வைதீகத்திற்கான எதிர்மரபாக இருப்பவை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இறந்து போன ஒருவருக்கு மாலையிடுவதும், நினைவிடம் இருப்பதும், நினைவஞ்சலி செலுத்துவதும் கூட ஒரு சடங்கு தான். அதேபோல, புதைவிடத்தில் பால் தெளிப்பதும் கூட ஒரு சடங்குதான்.

நாட்டுப்புறங்களில் நிகழ்த்தப்படுகிற இறப்புச் சடங்கு வைதீகத்திற்கு எதிராகவும் வேறாகவும் இருக்கிறது. இதைக் குறித்த பெருங்கட்டுரை நிறைவு பெறாமல் இருக்கிறது. கூடிய விரைவில் எழுதி முடிக்கிறேன்.

இறுதியாக ஒன்று, வைதீகத்தையும் நாட்டுப்புற மரபுகளையும் வேறு வேறாகப் பாருங்கள். அறிஞர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், இ.முத்தையா ஆகியோரது பண்பாட்டியல் நூல்களைப் படியுங்கள்.

பால் தெளிப்புச் சடங்கியலைக் குறித்துப் பேராசிரியர் சே.கோச்சடை அவர்கள் பின் வரும் குறிப்பைத் தருவது கவனிக்கத்தக்கது.

நாடோடிகளாக இருந்த ஆரியர்க்குச் சொந்தமாக நிலமில்லை.எனவே அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதில்லை .புதைத்துவிட்டு இடம்பெயர்ந்து சென்றால் நாய் நரி பிணத்தைத் தோண்டித் தின்றுவிடும்.எனவே அவர்கள் பிணத்தை  எரித்துச் சாம்பலை ஓடும் நீரில் கரைத்தனர் .

ஆனால்,திராவிடர்க்கும்,  பழங்குடியினத்துக்கும் சொந்தமாக நிலம் இருந்தது. அதில் தங்கி உழவுத்தொழிலைச் செய்தனர்.எனவே தம் முன்னோர் இறந்தால் அதில் புதைத்து நடுகல் நட்டனர். . அந்த நிலத்தில் தொடர்ந்து வேளாண்மை செய்வது வழக்கம்.  அவ்வப்போது அங்கே சென்று வந்தனர்.

முதல் நாள் புதைத்த இடத்தை நாய் நரி தோண்டியுள்ளதா என்று பார்க்கவே மறுநாள் காடாத்தப் (காடு ஆற்றுதல்) போவது வழக்கம்.அப்போது புதைகுழியை மெழுகி,மேலே நடுவில் பள்ளம் பறித்து, அதில் நவதானியங்களை விதைத்து எண்ணெய், இளநீர்,மஞ்சள் ,பால் தண்ணீர் விட்டு பொறிகடலை,    இளநீர் தேங்காய் வாழைப்பழம்  வைத்துப் படைப்பார்கள். அவ்விதைகள் பழுதின்றி முளைத்தால் நல்லது நடக்கும் என்று நம்பினார்கள்.இரண்டாம் நாள் , தென்காசிப் பக்கம் கோழி அறுத்துச்சமைத்து அங்கேயே சாப்பிடுவார்கள். வீட்டுக்கு வந்ததும் கொள்ளும், கருப்பட்டி  அல்லது வெல்லமும்  சேர்த்துக் காய்ச்சிய கொள்ளுக்கஞ்சியும் பச்சரிசிப் பிட்டும் சாப்பிடுவார்கள். இந்தப் பழக்கம் ஊர்,சாதியைப் பொருத்து அங்கங்கே சிறிது வேறுபட்டாலும்,பொதுவாக உள்ளது நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பதாகும். இந்தப் பழக்கம் பார்ப்பனர் இப்போது நமக்குச்  செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும்.இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது.

முளைப்பாரித் திருவிழா ஆடிமாதம் விதைக்கவுள்ள விதைகளின் முளைப்புத் திறனைச் சோதித்தறிய நடத்தப்படும் சடங்கு. அப்படித்தான் புதைகுழியில் விதை தூவி பால் நீர் ஊற்றுவதும் என்று கருதுகிறேன். மற்றபடி தமிழகச் சிற்றூரில்  நடக்கும்  இறப்புச் சடங்கு ஆன்மா,  சொர்க்கம் தொடர்புடையதில்லை.  இதிலும் மூடநம்பிக்கை இருந்தால் மாற்றவேண்டும். இறப்பு நிகழ்ச்சியில் வெறும் அறிவுத் தளத்தில் நின்று பேசமுடியாது.மூளையும்  மனமும் இணனந்ததே வாழ்க்கை. இறப்பு வீட்டில் மனமே/உணர்வே ஆதிக்கம் செலுத்தும். 

கவிஞர் வைரமுத்து ஓர் உழவர் குடி மனநிலையில் இருந்துதான் கலைஞர் கல்லறையில் பாலூற்றி இருப்பார் என்று நம்பலாம்.

ஏர் மகாராசன்

செவ்வாய், 31 ஜூலை, 2018

மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலைக் குறித்து :- அரங்க மல்லிகா


மேலை இலக்கியத்திறனாய்வு இந்திய இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. நவீனக்கோட்பாடுகளின் அறிமுகத்தால் பிரதிகளின் அர்த்தக் களம் விசாலமாகியுள்ளது. அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என்ற கோட்பாடுகளை, இலக்கியத்திறனாய்வை இந்தியச் சூழலில் பல்வேறு மொழிசார்ந்த பண்பாட்டுத் தகவமைப்புகளினூடே பொருத்திப்பார்க்கும் சூழலால் பண்பாட்டுத் தகர்ப்பு நிகழ்ந்திருக்கிறது. இலக்கியக்களத்தில் நடைபெற்றிருக்கிற நவீனப்புரட்சி யுகங்கள்தோறும் புனிதங்களின் மீது கட்டப்பட்டுள்ள கருவிகளற்ற வன்முறையை விசாரணைக்குட்படுத்தியிருக்கின்றது. இதனால் இதுவரையில் எழுதப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட யாவும் கலை இலக்கிய ஊடகத்தைப் புரட்டிப் போட்டுள்ளன. குறிப்பாக, பின்காலனித்துவ இலக்கியங்கள் விடுதலை சார்ந்த சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தும் களமாகியுள்ளன. படைப்புகள், அடிமைப்பட்ட சமுதாயத்தை, அடிமையானதன் வரலாற்றை மீளாய்வு செய்வதற்கான தேடல்களை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்த ஆய்வு வளர்ந்து வருகிறது. விடுதலை அரசியல், ஆணின் இயங்குதளத்தைக் கட்டுடைக்கின்றது. இது இயக்கமாக வேண்டிய ஒரு நெருக்கடியை இலக்கியங்கள் புனருற்பத்திச் செற்கின்றன.  எழுதப்பட்டவை விவாதக்களமாகின்றன. மொழி அதன் உந்துசக்தி. ஒருவரோடு ஒருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகமாகி, மொழி தனது இருப்பை அர்த்தப்படுத்துகின்றது.  மனிதப் பரிணாமம் மொழியின் மூலமாகப் பெரிய வீச்சை அடைந்துள்ளது. ஓர் ஆணிண் பார்வையில் அடைபடும் எதார்த்தங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் வேறான அடையாளத்தை அர்த்தப்படுத்துகிறது. ஆணின் அன்பு என்பது அதிகாரம், பரிவு, கொடுத்தல் தன்மையுடையதாகவும், பெண்ணின் அன்பு தாய்மை, அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் பண்புசார்ந்ததாகவும் தீர்மானிக்கப்பட்டு மொழி அதற்குரிய ஓடுகளமாக அமைந்திருக்கிறது.
மொழி, மனிதனின் இருப்பையும் அடையாளத்தையும் உற்பத்தி செய்கிறது. மனித இயக்கம் உடலியங்கியலை உள்ளீடாகக் கொண்டது. இது பொருள்சார்புடையது. குடும்பம் இதன் மையம். இது ஆணின் எல்லைக்குரியதாக இருக்கிறது. இதில் பெண்ணின் சுவாசம் கட்டுக்குரியதாகிறது. தொல் சமூகத்தில் பெண்ணின் வாழ்வு உழைப்போடு தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. பின்னர் வீடும், உழைப்பும் பிரிக்கப்பட்டு எவ்வித அறிவிப்புமின்றி அவர்களின் உழைப்பை ஆண்கள் நிர்வகிக்கத் தொடங்கினர். தொழில்மயம், நவீனகால விஞ்ஞானம் ஆகிய யாவும் பெண்ணின் பங்கு நிலைப் பரிணாமத்தைக் குறைத்தே மதிப்பிட்டன.
ஆண்வழிச் சமூக முறைமையில் காணலாகும் பெண்மீதான அதிகாரத்திற்கும் பிற செயல்களுக்கும் ஆண்களே காரணம் எனப் பெண்மையச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். பெண்ணுக்கும் ஆணுக்குமான பால் வேறு பிரிவினையே உண்மையான வர்க்கப் பிரிவினை; இதன் காரணமாகத்தான் பெண்ணின் அந்தரங்கம் பகிரங்கமானது. பெண்ணின் உடல் பாலியல் இருப்பு ஆணதிகாரத்திற்கு எதிரானதாக நிறுத்தப்பட்டது. ஒருபால் சேர்க்கை ஆதரிக்கப்பட்டது. பெண் உடல் கவர்ச்சிக்குரியதான சந்தைக் கலாச்சாரம் எதிர்க்கப்பட்டது. இலக்கியத்தில் மொழி பாகுபடுத்தப்பட்டு ஆண்மொழி, பெண்மொழி என அறியும் முயற்சி வளர்ந்தது. எனினும் பெண்மொழியை அறிமுகப்படுத்துவதில் ஆண் படைப்பாளர்களின் எதிர்க்குரலைத் தவிர்க்க முடியவில்லை.
பெண்ணியம், பெண்ணை மையமிட்ட ஆய்வு பெண்மைநிலை ஆய்வாகவும், பெண் உடலரசியல் ஆய்வாகவும் (பெண் மையம்), அந்தரங்கத்தை அரசியல்படுத்தும் பெண்நிலை ஆய்வாகவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவ்வாறல்லாமல், பெண் பற்றி எழுதியிருக்கக் கூடிய எல்லாவற்றையும் பெண்ணியமாகப் பார்க்கும் பார்வை வளர்ந்து வருகிறது. ஏனென்றால் காலந்தோறும் பெண்மைநிலை சார்ந்த புனைவுகள், ஆண்களுக்குக் கிளர்ச்சியூட்டுவன. பெரும்பாலான ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் காமத்தின் உச்சம் தொடுவன. காமத் தனிவிற்குப்பிறகு பெண்உடல் தீட்டு எனக் குப்பைத் தொட்டியாய் ஒதுக்கப்படுவது உண்டு. இந்தப் போக்கு மகாராசனின் “பெண்மொழி இயங்கியல்” என்ற நூலில் இல்லை. பெண்ணை, பெண்ணின் வலியை வரலாற்று நோக்கோடும், பெண் நோக்கோடும் ஆராய்ந்து, மூன்றாம் நபராக, நடுநிலை ஆய்வாளராக, பெண்ணியத்தை உட்செரித்துக் கொண்டிருப்பதை நூல் முழுக்க உணரமுடிகிறது. 
இந்நூல் பெண் உடலரசியலை மையமிட்டது. சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை மிக நேர்த்தியாகப் பெண் உடலரசியல் / பெண்மொழி ஆய்வுக்குட்பட்டிருக்கிறது. பெண் உடல் தீட்டானது, பெண் தீட்டானவள் என்ற இந்து மதக் கற்பிதத்தை இரண்டு பெண் கவிஞர்கள் மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளனர். பெண்ணின் உடலனுபவத்தைக் கலைத்துப்போடுவது பெண்மொழி என்ற புரிதல் தொடர்கிறது. உடலனுபவக் கலைப்போடு மனதைப் பகுத்தறிவோடு கலைக்க வேண்டிய தேவையையும் பெண்மொழி முன்வைக்க வேண்டும். இதை ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கைக் கவிதைகளில் காணமுடிகின்றது.  ஆவுடையக்காள், பெண்ணும் ஆணும் கடவுளாய் வாழ்வதை அறியாதவரே தீட்டை நடைமுறைப்படுத்துவார்கள் எனச் சாடுகிறார்.
தீட்டென்று மூன்று நாள் வீட்டை விட்டு  விலக்கி 
திரிந்து விட்டு சித்கனத்தை மறந்து மதியிழந்து
நாலாநாள் உதயத்தில் நன்றாயுடல் முழுகி 
நடுவீட்டில் வந்திருப்பாய் நான்சுகி என்றுரைத்து 
தீட்டென்றும் பெண்ணினுடைய தேகத்துக்குள்ளிருக்க
தேகமேல் முழுகிவிட்டால் தீட்டோடிப் போமோ
ஆசாரமாச்சுதென்று ஐந்தாநாள் முழுகி
அகத்திலுள்ள பொருள்தொடுவாய் அகத்தீட்டு போச்சோ?
என்ற பாடல்,  பெண், ஆண் ஆகிய இருவரும் மனத்தில் அழுக்கில்லாத மனிதத்தை முன்னிறுத்துகிற கலகக் கலாச்சார உணர்ச்சி உள்ளடக்கிய உயிரினமாகப் பார்க்கப்பட வேண்டிய தேவையை முன்மொழிகிறது.
இப்படிப்பட்ட புரிதலை உள்ளடக்கிய பெண்ணிய ஆய்வுகள் வரவேண்டிய தேவையை மகாராசனின் ‘பெண்மொழி இயங்கியல்’ நூல் பிரகடனப்படுத்துகிறது. பாலியல் என்பது இயக்கம். சுலாமித் ஃபயர்ஸ்டோன் தனது பாலியல் இயங்கியல் என்ற நூலில் பெண் பாலியக்கம் அரசியலானது எனத் தெளிவுபடுத்துகிறார். மனித இயக்கம் உயிரியல் பாங்கில் அமைந்த உள்ளுணர்வின் வெளிப்பாடான பாலியலை மையமாகக் கொண்டது. சமூக-பண்பாட்டு ஒழுக்கவியலைத் தீர்மானித்த ஆணின் ஒழுக்க வரையறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் ஆண் பெண் வேறுபாடு ஓர்மை மன நிலையோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தன்னிலை கட்டமைக்கப்படுகிறது.  இது ஆணுக்கும் பெண்ணுக்குமான விருப்பம், இலட்சியம் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுகிறது. பெண்கள் பாலியல் உந்துதலாகப் பார்க்கப்படுவது ஊடகவெளியில் உச்சம் பெற்றுள்ளது. ஆண்கள் இந்த உச்சத்தை மடைமாற்றுச் செய்துகொள்ள முனைகிறார்கள். ழாக் லக்கான் , மார்க்யூஸ்  மற்றும் வில்ஹெம் ரீச்  போன்ற உள, பின் நவீனத்துவப் பெண்ணியலாளர்கள் பாலியல் இயக்கம் எவ்வித அமுக்கத்திற்குள்ளாகாமல் இயல்பாக நடைபெறும்போது, பெண் ஒடுக்குமுறை நிகழாது எனக் கூறுகின்றனர்.
பெண் ஒடுக்குமுறை நிகழும் இடம் குடும்பம். இதை, அரசின் அமைப்பும் கருத்தியலும் வார்க்கப்படுகின்ற ஓர் ஆலைதான் குடும்பம் என ரெய்ச் கூறுகிறார். இதை, குழந்தைப் பருவத்திலே தொடங்கிவிடுவதாகக் குற்றம் சாட்டுகிறார். எனவே, பெண் சுதந்திரமானவளாக இயங்க, பாலியல் உந்துதல்கள் சுதந்திரமாக வெளிப்படவேண்டும் என்றும் கூறுகிறார். இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள்  உத்தரநல்லூர் நங்கைக் கவிதையில் வெளிப்பட்டுள்ளன.
ஓரினம் இயற்கையானதாகவும் நிரந்தரமானதாகவும் சார்பானதாகவும் இருப்பது இயல்பானதல்ல என்ற விளக்கத்தை உள்ளடக்கிய ‘பாலினம்’ என்ற கருத்தியல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசப்படுகின்றது; எழுதப்படுகின்றது. இச்சூழலில் பெண்ணும் ஆணும் சமம் என்ற புரிதலை உலகளாவியதாக்க வேண்டிய தேவையை விசாலப்படுத்தியுள்ளது மகாராசனின் இந்நூல்.
பாலியம், சமத்துவமின்மை, பால்வேறுபாடு, அதிகார வேறுபாடு, சார்புநிலை சார்ந்த அரசியல் மற்றும் வரலாற்றுப் பார்வையோடு விளிம்பு நிலையிலுள்ள தலித்துகள், திருநங்கைகள் ஆகியோரின் பாலிய இயக்கம் பேசப்பட வேண்டியதன் அவசியத்தை நவீனத் தமிழ்க் கவிதைகள் கவனப்படுத்துகின்றன. ஆண் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்களைக் கேள்விக்குட்படுத்தி ஆண் சமூகத்தையும் குறிப்பாக, பேதமையோடு வாழும் பெண் சமூகத்தையும் வெள்ளிவீதியார், ஔவையார், காரைக்காலம்மையார், ஆண்டாள் பிற்காலத்தில் ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கை ஆகியோர் பெண்நிலைக் கலக அரசியலை, பெண்ணிய அரசியலைக் கவனப்படுத்தியுள்ளது அவதானிக்கத்தக்கது.
20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகம் ஆகும் பெண் கவிஞர்கள் ஔவையாரை, வெள்ளிவீதியாரைத் தங்கள் கவிதைக்குள் சுவாசித்துள்ளனர். சங்க இலககியத்தை நவீனக் கவிதைக் களத்திற்கு நகர்த்தியுள்ளனர்; அழகியலை நவீனப்படுத்தியுள்ளனர். தூய்மை இல்லாத துணி தூமை என அழைக்கப்படுவது கிராமியச் சொலவடை என்றாலும்,  தூய்மை என்ற கருத்தாக்கத்தின் மீதான இந்துத்துவ எதிர் மனோபாவம் கலகமாகியிருப்பதை  வெள்ளிவீதியார், ஔவை, உத்தரநல்லூர் நங்கை, ஆவுடையக்காள், ஆகியோரின் கவிதைகளிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.
தமிழில் நவீன இலக்கிய உலகில் குறிப்பிட்ட நான்கு பெண் கவிஞர்களின் கவிதைகள் மட்டும்தான் பெண் வெளியை, பெண்மொழியைப் பேசுவன என்ற புரிதலில் அறிவு ஜீவிகள்(?) கிடைக்கின்ற கருத்தரங்க மேடைகளிளெல்லாம் அவர்களின் விளம்பரதாரர்களாகின்றனர். மாறாக, உத்தரநல்லூர் நங்கை, ஆவுடையக்காள் கவிதைகள் முந்தைய காலகட்ட பெண் கலகக் காரர்களாகிறார்கள் என்பதை இந்நூல் எடுத்துக் கூறுவதன் மூலம் மகாராசனின் நூலகத் தேடலை உணரமுடிகிறது, தேடல் தொலைந்து போனதில் இல்லை; தொலைவில் என்பதை அவரின் முயற்சி அறிவிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதிய எதிர்ப்புச் சிந்தனையோடு பகுத்தறிவை எடுத்து இயம்பிய உத்தரநல்லூர் நங்கை மறைக்கப்பட்டிருக்கிறார் என்ற புதுத்தகவலை மகாராசன் முதன் முதலாகப் பதிவு செய்கிறார்.  “பாய்ச்சலூர் பதிகம்” என்ற பதிகத்தில் ஆற்றங்கரையில் மாடுமேய்க்கும் உத்திரநல்லூர் நங்கைக்கும் வேதம் ஓதிச் செல்லும் பார்ப்பன இளைஞனுக்கும் உறவு ஏற்படுகின்றது. சாதிக்கலப்பு நிகழஇருப்பதைச் சமூகத்தார் எதிர்க்கின்றனர். அவர்களின் உறவு குறித்து
மகங்கொண்ட தேகந்தன்னில் மற்றொரு சுத்தம் காணீர்
அகங்கொண்டு புறமும்கண்டு அவனுக்கே தாரமானேன்
சுகங்கண்டு துக்கங்கண்டு சுக்கில வழியே சென்று
பகங்கொண்ட தேனோ என்னில் பாய்ச்சலூர் கிராமத்தாரே
என்று வினவுகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மொத்த அனுபவத்தையும் இணைத்த நிலையில் அவரின் எதிர்ப்புக் குரல் இருப்பதாக மகாராசன் சுட்டிக்காட்டுகிறார்.
குலங்குலம் என்பதெல்லாம் குடுமியும் பூணுநூலும்
சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்பதுண்டோ?
நலந்தரு நான்கு வேதம் நான் முகம் படைத்ததுண்டோ?
பலந்தரு பொருளுமுண்டோ பாய்ச்சலூர் பதிகத்தாரே.
என்றும், சாதியத்தை வேதங்கள் காப்பாற்றுவதைச் சாடுகிறார்.
ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில் அறிந்தவர்க்கு அதுவுங்கள் இதுவுங்கள்ளே
ஒருகுழை உயர்ந்த தேனோ ஒரு குழை தாழ்ந்த தேனோ
பறையனைப் பழிப்பதேனோ?
என்ற பகுத்தறிவுக் கேள்வி உத்தரநல்லூர் நங்கையின் அறிவின் முதிர்ச்சி என உணர்வதைக் காட்டிலும் பெண் ஒடுக்குமுறை என்பது தலித் பெண் ஒடுக்குமுறையோடு கண்டிப்பாக எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியத்தை 16-ஆம் நூற்றாண்டிலே ஏற்படுத்தியிருக்கிறார். மனித உரிமை என்பது தலித்துகளின் உரிமை  என வலியுறுத்தும் காலம் இது. இதற்கான விவாதங்கள் அரசியலாகி வருகின்றன. பெண்ணியம் பேசுபவர்கள் அம்பேத்கரின் தீண்டாமை பற்றிய கட்டுரை, சாதிகளின் தோற்றம் பற்றிய கட்டுரைகளை எல்லாம் வாசிக்க வேண்டிய தேவையை நங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். 
வேதாந்தங்கள் குறித்த ஆவுடையக்காள் கவிதைகள் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன எனக் கூறுகிறார்.
  ஜாதிவர்ண குலகோத்திர ஆசிர மாதிகள் பொய்யடா
ஜாதிவர்ணாசிரமம் போச்சே ; வேதசாஸ்திரம் வெறும் பேச்சே.
சாதிய வர்க்கப் பிரிவினைக்கு வேதங்கள் சாத்திரங்கள்தான் ஆதாரம். அவை களையப்படவேண்டும் எனத் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளார். பெண்ணின் முலை, தூய்மைத் துணி, பட்டாம்பூச்சியாய்ப் பறக்கும் யோனி, அலாதி உடல், அடர்மயிர்க்காட்டில் வழியும் காமம் என்பனவாக, பெண் மொழிப் பதிவை உணர்த்தியுள்ள பெண்கவிஞர்கள், பெண் சார்பு எழுத்தாளர்கள் உடலின் வினைகளை உடல்சார்ந்த சமூக மூடக்கட்டுகளைக் கட்டவிழ்க்கும் ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கை ஆகியோரையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இவர்கள் கவிதையிலிருந்து அறியலாம் எனப் பெண் பார்வையில் ஆணாக இருந்து அலசியிருக்கிறார் மகாராசன். காமம் பெண்ணுக்கு நிறைவேறப்படாதபோது அது கடவுள்பால் மடைமாற்றுச் செய்யப்பட்டிருப்பதை ஆண்டாள், காரைக்கால் அம்மையார் கவிதைகள் இயம்புகின்றன. சாதி எதிர்ப்பும், பெண் அடிமை ஒழிப்பும் பெண்மொழிக் களத்தை விரிவுபடுத்தியிருப்பதை ஓர் ஆண், படைப்பாளனாகவும், விமரிசனனாகவும் நின்று பெண்மொழியை உட்செரித்துக் கொண்டிருப்பது பெண்ணிய ஆய்வுலகில் ஒரு மைல் கல்லாகும்.
ஆண் ஆய்வாளர்கள் பெண்ணியத்தை ஆய்வாகத் தந்துள்ளனர்; கட்டுரைகள் எழுதியுள்ளனர். பெண்ணியத்தை, தலித்தியத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். ஆனால், பெண்மீதான இவர்களின் பார்வை கேள்விக்குட்படுகிறது. பெண்ணியத்தைப் பலவிருதுகளுக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் ஜெயகாந்தன் பெண்ணீயம் எனச் சாடுவதை மறந்துவிட முடியாது. இத்தகையச் சூழலில் பெண்ணியம் பெண்ணீயமாக அறிவுக்கிறுக்கர்களால் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ச் சூழலில், பெண் மொழியின் மையச்சரடைப் பிடித்திருக்கிறார் மகாராசன்.
பெண்ணிய ஆய்வுகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆய்வாக இது இருக்கிறது. இவர், சங்க இலக்கியப் பெண்கவிஞர்களின் கவிதையோடு நவீனப்பெண் கவிஞர்களின் கவிதைகளையும் ஒப்பிட்டு, ஆண் அதிகாரப் பாலியல் செயல்பாடுகளில் பெண் உடல் நுகர்பொருளாகியிருக்கும் உலகமயச் சூழலை மொழி நேர்த்தியோடும், கருத்துத் தெளிவோடும் அறிவியல் பார்வை, சமூக அக்கறை யாவும் மகாராசனின் வாசிப்பு அரசியலை முன்மொழிகின்றன. பெண் விடுதலையை ஆண் நல்கிடஇயலாது. உணர்ந்து கொள்ள இயலும், ஆனால் உணர்த்துவது கடினம். அப்படியே பெண் விடுதலையை ஆண் பேசுவது என்பதும் உண்மையாக இருக்காது என்ற விவாதம் பொய்யாகிறது மகாராசனின் பெண்ணிய வாசிப்பில். இதுவரையில் எழுந்துள்ள ஆய்வுகள் யாவும் மேல்கட்டுமானத்திலிருந்து எழுதப்பட்டிருக்க, மகாராசனின் ‘பெண்மொழி இயங்கியல்’ என்னும் இந்நூல் மற்றும் ‘கீழிருந்து எழுகின்ற வரலாறு’ ஆகிய நூல்கள் கீழ்க்கட்டுமானத்திலிருந்துதான் விடுதலை பிறக்க வேண்டும் என்ற தத்துவத்தைச் சொல்கின்றன. ‘அரவாணிகள்: உடலியல் உளவியல் வாழ்வியல்’ என்ற இவரது தொகுப்பு நூல் விளிம்புநிலையில் வாழும் திருநங்கைகளின் வாழ்வியற் பதிவாகும்.மேலும் இவரது தொகுப்பில் வெளிவந்துள்ள ‘ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும்’ என்ற நூல், ‘ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்’ என்ற நூலும்  ‘மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்’ என்ற நூலும் விடுதலை வேட்கையையும் சமூகம் பற்றிய தெளிவான பார்வையையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. இவர் மாணவப் பருவத்திலேயே ‘ஏர்’ என்ற பத்திரிகை நடத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
மகாராசனின் முகவரியைத் தமிழ்த் தேசியவாதியாகவும் பெண்ணியவாதியாகவும் தமிழ்மொழிப் புலமையாளராகவும் அடையாளப்படுத்தலாம். இன்றைய ஆய்வாளர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தனது எல்லையைச் சுருக்கிக் கொண்டு அதற்கான தேடல் முயற்சியில் சுருங்கிப்போன காய்களைப்போல இருக்கும் சூழலில், தமிழில் அதிகமான நூல்களைக் கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டு கிடக்கும் மனித மீட்பாளரைப்போல, பழைய கட்டிட நூலகங்களில் செல்லரித்துப் போயிருக்கும் நூல்களைத் தூசுடன் சுவாசித்துக் கொண்டு வாசித்து வாசித்து, தெளிந்த மொழிநடைக்கு உரிமையாளராக மிடுக்குடன் நடக்கிறார் மகாராசன். ஆய்வுக் களத்தில் நிமிர்ந்த ஞானச் செருக்குடன் நடைபோட என் மூலாதாரத்திலிருந்து வார்த்தைகளைக் குவித்து வாழ்த்துகின்றேன். என் சிந்தனையை உரசிப்பார்க்க இந்நூல் சவாலாக அமைந்திருந்தது என்று கூறுவதைவிட அவரது மொழியாளுகையில் தெளித்த சிந்தனைகளோடு பயணிக்கிறேன் என்ற பெருமிதத்துடன் அவரது தமிழ்ப்பணி, பெண் விடுதலைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்களுடன்
முனைவர் அரங்க மல்லிகா
பேராசிரியர், தமிழ்த்துறை,
எத்திராஜ் கல்லூரி, சென்னை

தீரும் பக்கங்கள்; தீராத காயங்கள்: மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலை முன்வைத்து :- கவிதாசரண்


மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூல் என் கைக்கு வந்தபோது இவ்வளவு கனக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வியப்போடும் களிப்போடும் அடுத்த இரண்டு நாட்களில் எனக்குக் கிடைத்த நேரத்தில் படித்து முடித்தேன். கடந்த பதினெட்டு மாதங்களில் நான் சுவைத்துப் படித்த நெடிய நூல் இது ஒன்றுதான். மகாராசனுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டின் அச்சாக்கம் இது.  பட்டத்தை விடவும் நூலின் பரிமாணம் அளப்பரியது.
மகாராசன் இதற்கு முன்பே எழுத்தோடு இரண்டறக் கலந்தவர். அவர் பெயரில் ஐந்து நூல்கள் வந்துள்ளன. அரியதொரு சிற்றிதழுக்கு ஆசிரியராகவும் அறியப்பட்டவர். இது அவரது ஆறாவது நூல் என்றாலும் ஒருவகையில் எனக்கு இதுவே முதன்மையானதாகவும் முழுமை பெறுவதாகவும் படுகிறது. ஒரு ஆய்வேட்டை என்ன மாதிரியில் உருவாக்க வேண்டுமோ அதற்கேற்பவும் மேலதிகமாகவும் தன் உழைப்பைச் சிந்தி வளர்த்தெடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். நூலின் பல தலைப்புகளும் உள் தலைப்புகளும் அவரது தீவிர ஆளுமைகளையும் மீட்சியற்ற ஈடுபாடுகளையும் தாங்கி நிற்பவை.  அவரின் இரண்டொரு நூல்களை நான் ஏற்கனவே படித்திருந்தாலும் இதில்தான் அவர் உழைப்பும் திளைப்பும் முழுமையடைகின்றன.  அண்மைக்காலங்களில் ஆய்வேடுகள் பல இத்தனை கரிசனத்தோடு உருவாக்கப்படுவதில்லை. மகாராசன் அந்தவகையிலும் தன் அர்ப்பணிப்பை இதில் நிறுவியிருக்கிறார்.
நூலின் ஒரு பக்கத்தில் ‘பெண்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதிலும் சகல ஆண்களும் தங்களுக்குள் அய்க்கியத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர் ’ என்றொரு வாக்கியம் வருகிறது. இதனைக் கேள்விக்குட்படுத்தும் கலகக் குரலாகத்தான் இந்தப் ‘பெண்மொழி ’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் - இந்தியாவில் மட்டுமே இன்னொரு அய்க்கியமும் தொடர்ந்து கோலோச்சி வருகிறது. சொல்லப்போனால் இது ஒன்றும் ஒரு சொல்லில் முடிந்துவிடும் அய்க்கியமல்ல. யுகம் யுகமாய் மரபு ரீதியான சட்டகத்தில் இந்திய மனம் ஒவ்வொன்றிலும் வலிந்து பொருத்தப்பட்ட அய்க்கியம். அதாவது, ‘தாழ்த்தப்பட்டவர்கள் என்று முத்திரைகுத்தி அவர்களை ஒடுக்குவதில் பிற மக்கள் அனைவரும் தங்களுக்குள் கேள்விக்கப்பாற்பட்ட அய்க்கியத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.’ இந்த இரண்டு அய்க்கியங்களையும் உடைத்தெறியும் போராளியாகத் திகழ வேண்டியவர் மகாராசன். அவர்தான் இந்த முதல் ஆவணக் குரலை வலிய மொழியில் எழுப்பியிருக்கிறார். இது எனக்குப் பெருமைக்குரிய அம்சமாகப்படுகிறது. இனி தொடர்ந்து வரும் அவரது அடுத்தடுத்த எழுத்தூற்றங்களில் தலித் மக்களுக்கெதிரான அய்க்கியத்தையும் அவர் கடும் பகடிக்குள்ளாக்கி உடைத்தெறியத் துணை புரிவார் என்று நம்பலாம்.  இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல; தீராத என் ஆசையும் கூட.
இவ்வளவு நீண்ட பக்கங்களை மகாராசன் ஒரே மூச்சில் எழுதினாற்போல அத்தனை சீராகவும் கூராகவும் உருவாக்கியிருப்பதை மொழியருமை தெரிந்த ஒவ்வொரு வாசகரும் உய்த்துணரலாம். வழுக்கும் கண்ணாடித் தளத்தில் தங்குதடையில்லாமல் நழுவிப்போகும் புதிய நெய்யூற்றைப் போல இந்நூலின் மொழிக்கட்டுமானம் நம்மை மெய் மறக்கச் செய்கிறது.
நூல் உருவாக்கத்தில் மகாராசனின் பங்களிப்பு ஒன்றும் அற்ப சொற்பமானதல்ல. அவர் ஒரு வாக்கியத்தை எழுதுகிறார். தொடர்ந்து ஒரு மேற்கோள் வருகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் அவர் கருத்தோட்டம் தொடர்கிறது. இந்த மூன்று பகுதிகளும் கொஞ்சம்கூட அந்நியம் கலவாமல் ஒரே அலைவரிசையாக, ஒரே எண்ணப் பிரவாகமாக இழைந்திருப்பதைச் சொல்லாய்வில் அக்கறை கொண்டவர்கள் உணராமல் தப்ப முடியாது.  உண்மையில் அவர் எந்தக் கருத்தைத் திரட்டித் தரவும் சொற்களுக்காக ஒரு நொடி கூடத் தயங்கி நின்றதாக நமக்கெந்த சாட்சியமும் இல்லை.  மொழி மீது அவருக்குள்ள அண்மையும் இழைவும் அப்படிப்பட்டதாய் இருக்கிறது. நம்மில் சிலருக்கு எதிர் பாராதவோர் அதிர்வோட்டத்தைச் சுட்ட சொல்லற்றுப் போகலாம். பீறிடும் ஒலிக்குறியோடு நாம் இதைக் கடந்து சென்று விடலாம். ஆனால் மகாராசனுக்கு இது போன்றதொரு சிக்கல் எழவே இல்லை. எத்தனை உள்முகமான கருத்துருவையும் தெள்ளத்தெளிந்த சொற்கோலத்தில் அதிர்ச்சி மதிப்பீடுகளைத் தள்ளி வைத்து விளக்கிச் சொல்லிவிடும் மொழிப்புலமை அவரை சிம்மாசனப்படுத்திக் கொண்டிருக்கிறது.  இவர் மொழியை ஆள்கிறாரா அல்லது மொழியாகவே மாறிவிடுகிறாரா என்றொரு
ஐயம் தன்னிச்சையாகச் சுரக்கிறது. நாம் சர்க்கரையின் இனிப்பில் மயங்கி இடைவிடாமல் புகழ்ந்து கொண்டே வரும்போது சட்டென்று நாமே சர்க்கரையாகி விட்டால் எப்படியிருக்கும்!  மகாராசன் அப்படி நெகிழக்கூடியவர்தான் என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் என்னால் அறிய முடிந்தது. மொழிமீது மோகம் கொண்டு ஒரு மனிதன் மொழியாகவே மாறிவிடும்போது அவன் மொழியின் நிகழ்மரபின் நீட்சியாகவும் மாறிவிடும் சந்தர்ப்பங்கள் நேரும். ஒரு வகையில் கலாச்சார ரீதியாக அவன் எந்தப்பிறவியிலிருந்து துண்டித்தெழ முயல்கிறானோ அந்தப் பிறவியாகவே மூழ்கிப் போய்விடுகிற சோகம் அது. மகாராசனின் பன்முக வாசிப்புவெளியும் மேற்கோள் தொகுப்பும் இவ்விதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்குமோ என்று படுகிறது.
தமிழின் ஆகப் பெரும் அறிவுச் செல்வங்கள் அனைத்தும் ஜைனர்களும் பௌத்தர்களும் வழங்கிய கொடை என்பதை நாம் அறிவோம்.  அவ்விருமதங்களையும் வெற்றிகொண்டு மேலேறி வந்த சைவ - வைணவ மதங்கள் நமக்குப் புதிதாக வழங்கிய கலாச்சாரப் பெருமிதங்கள்தாம் நம்மை இன்று சிக்கெனப் பற்றிக் கொண்ட சமூக மனிதர்களாக அமுக்கி வைத்திருக்கிறது.  மனித சமத்துவத்தைச் சாதியச் சழக்குகளால் வேரறுத்துக் கலைத்துக் குலைப்பதை ஏதோ தெய்வசங்கல்பமாகவும் மூத்தோர் வேதவாக்காகவும் ஏற்றுச் செயல்படும் கலாச்சாரச் சீரழிவின் முடிவற்ற மீட்டுருவாக்கம் அது.  உலக மக்களில் 99.9 சதவீதம் பேர் கேள்விகளற்ற வெள்ளெழுத்துப் பாமரர்களாகவே வாழ்ந்து நிறைவதில் அமைதியடைகிறார்கள்.  அவர்களையும் அவர்களது துயரங்களையும் முதலீடுகளாக்கிக் கொண்டு நிச்சயமற்ற நம்பிக்கைகளுக்கான பொய்ப்புனைவுகளையும் மூடத்தனங்களையும் யுகங்களுக்கு அப்பாலும் வெற்றிகொள்ளும்படியான நிர்கலாச்சாரக் கட்டமைப்பு கொண்ட வாழ்க்கை அது.  இன்றைக்கு நாமே அதன் சாட்சியாகவும் இருக்கிறோம். வாழ்க்கை என்பது கடின உழைப்பைக் கோருவது என பொய்க்கலப்பற்றுப் போதித்தவை ஜைனமும் பௌத்தமும். அவற்றுக்கு மாறாக ‘கடவுள் பெயரைச் சொல், கைலாசத்திற்கே செல் ’  என்று புரட்டு பேசியவை சைவ - வைணவ மதங்கள்.  இவ்வுண்மைகளை யார் மறந்தாலும் சமத்துவம் கோரும் கலகச்சிந்தனையாளர்கள் புறக்கணிக்கக்கூடாத ஒன்று. மகாராசன் அப்படிப்பட்ட ஒரு கலகக்காரராகப் புத்துயிர்க்க வேண்டும் என்பதே நம் பேரவா.
இந்நிலையில் மகாராசனின் ஆழ்ந்த மொழிப்புலமைக்கும் சமூக அக்கறைக்கும் ஒட்டுமொத்த நூலும் சாட்சியமாகியிருக்கும் அதே வேளையில், நூலின் அங்கொன்றும் இங்கொன்றுமான இரண்டொரு பக்கங்களில் ஒற்றைவரிக் குறிப்புகளாக சில சொல்லி மேற்செல்கிறார். அதாவது பௌத்தமும் ஜைனமும் சமூகத்தில் சில தோல்விகளைச் சந்தித்ததாகவும் சைவமும் வைணவமும் அத்தோல்விகளை ஈடுசெய்ததாகவும் சொல்லிச் செல்கிறார்.  மகாராசன் என்ன சொல்கிறார் என்பதை நான் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.  அவருக்கு இது அர்த்தமுள்ள விளக்கமாக இருக்கலாம். உண்மைகளைப் பொருத்திப்பார்த்துப் புரிந்து கொள்வதில் எனக்குச் சில போதாமைகள் இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம்.  ஆனால் எதிர்ச்சிந்தனை அல்லது மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு ஓர் அடிப்படை அலகு வேண்டுமானால் அதனை ஒரு குறியீடாகவேனும் வழங்கும் தகுதி அவைதிக  மதங்களுக்கே உண்டு என்பதை நாம் அடி நாதமாகக் கொள்ள வேண்டும்.  இதை மீறி நாம் சமத்துவத்துக்கான புதிய மரபுகளை ஈன்றெடுக்க முடிந்தால் மிகவும் நல்லது.  ஆனால் சைவமும் வைணவமும் ஒரு நாளும் நமக்கு உதவியாய் இருக்கப் போவதில்லை. அவைதிக மதங்களிலும் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றே கொள்வோம். ‘ நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் ’ என்று கூக்குரல் இடவேனும் அங்கே தங்களுக்கு உரிமை உண்டு. வைதீக மதங்கள் அதற்கு வாய்ப்பு வழங்குவதே இல்லை. ஆகவே நாம் எதனைக் கழித்துக்கட்ட வேண்டும் என்பதிலும் எதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதிலும் கவனம் கொள்வது நம்மைவிடவும் நம் உயிரைவிடவும் கூட இன்றியமையா அம்சங்கள்.
இந்த ஆய்வேட்டில் நாம் சொல்லிக் கொள்ள வேறெந்தக் குறிப்புகளும் இல்லை.  வேண்டுமானால் நம் ஆசைக்காக இரண்டொரு எதிர்பார்ப்புகளை முன்வைக்கலாம்.
குறிப்பாக, இங்கு எடுத்தாளப்பட்ட பெண்கவிஞர்களின் குறிப்பிட்ட கவிதையொன்றையேனும் எடுத்துக் கொண்டு அதை அலசி ஆய்வதன் மூலம் அவர்களது மொழிதலின் எதிர் மரபை இன்னும் கூர்மைப்படுத்திக்காட்டலாம். இதன் மூலம் அவரவர் மொழியாளுமையையும் ஒப்பு நோக்கலையும் வாசகர்களுக்கான அதிர்வலைகளாகப் பெருக்கிக் காட்டியிருக்கலாம். உதாரணமாக ஆண்டாள், ஆவுடையக்காள் போன்றவர்களின் ஒப்புமையும் வேற்றுமையும் பெண்மொழியின் கூறுகளைத் துல்லியப்படுத்த உதவலாம்.  இந்த முறைமையை மேற்கொள்வதில் சில பக்கங்கள் கூடலாம். ஆயினும் ஆய்வாளரின் சமூகச் சிந்தனை ஒருபடி மேலேறி நிற்கும்.
இது நம் ஆசைதான். மற்றபடி இந்த நூல் ஓர் அரியமுயற்சி. முனைவர் பட்டம் மகாராசனுக்கு அளித்த மேலான வெற்றி.

அன்புடன்
கவிதாசரண்
ஆசிரியர், கவிதாசரண் இதழ்.