ஞாயிறு, 26 நவம்பர், 2023

புலித்தடம் பதியக் காத்திருக்கும் நிலம் - மகாராசன்

 

கடல்சூழ் வனத்தைப் போர்த்தி
விரிந்து கிடந்த நிலப்புழுதியில்
எமையொத்தச் சாயலுடன் முகம் காட்டி
எம் கிட்டத்திலேயே சூழ்கொண்டு
முளைத்துக் கிளைத்திருந்தது
குலக்கொடியொன்று.

ஈரநெப்பு கசிந்த மண்ணை
இறுகப் பற்றிக்கொண்ட வோ்கள்
ஆழஆழப் பதிந்ததில்
நிறைந்து செழித்து வளம் கொழித்தன
மனிதப் பச்சையங்கள்.

பஃறுளியும் குமரிக்கோடுமாய்
மூதாதை நிலம் பரவிக் கிடந்தது.

காலமும் கடல்கோளுமான ஊழ்வினை
உப்புநீர் தெளித்து
அங்குமிங்குமாய் வாழத் தள்ளிவிட்டது.  
பரிணாமக் காலங்களை
உறிஞ்சியெடுத்த உயிரினச் சுழற்சியில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
விழுந்த வித்துகள்
சிம்படித்துக் கிளைத்திருந்தன.  

கிளை பரப்பிச் சிலிர்த்துச்
சிரித்திருந்த பேரினத்திற்கு
தாய் மடிகள் இரண்டிருந்தன.
இரு நிலமானாலும் ஓரினம் என்பதாக
காலம் இசைத்த நெடும்பாடல்
உலகத்தின் காதுகளில்
நிரம்பி வழிந்திருந்தது.

பெருமரத்தின் வித்துகள்
காற்றில் பரவி நிலத்தை நிறைத்தன.
விழுந்த திசையின் மண்ணின் வாகும்
பருவ நேக்கும் சுழல் காலமும்
உயிர்ப் படிமலர்ச்சியாய்
வேறு வேறு முகங்களை
தந்துவிட்டுப் போயின.

பூர்வத்தின் வேர்நுனி மணத்து
தாய்நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு
பேருரு அடையாளத்தில்
மினுத்திருந்தது இவ்வினம்.

அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து
குஞ்சுகளைக் காக்க
மூர்க்கமாய்ப் போராடின
இரு தாய்க்கோழிகள்.

அறுந்துவிட்ட தொப்பூழ்க்கொடியிலிருந்து
உயிர்க்கொடிச் சிம்புகள்
அத்துப் போகாமலும் இத்துப் போகாமலும்
உயிர்ப்பித்துக் கொண்டிருந்தன.

முந்நிறத்துக் கொடியாலும்
முப்புரி நூலாலும்
இறுகக் கட்டிய தொரட்டிகளால்
இந்நிலத்துக் கிளைகள் முறிக்கப்பட்டன.
சுணக்கம் கொண்டு
சுருண்டு போயின வேர்கள்.

ஆணியும் சல்லியுமாய் உள்ளிறங்கிய
அந்நிலத்து வேர்கள்
மூதாதைச் செந்நிலத்தின்
உயிர்ச்சத்தை உறிஞ்சி
பெருவனத்தை வரைந்திருந்தது.

மறப்பாய்ச்சலில் தேர்ந்திருந்த புலிகள்
வன்னி நிலத்தில் அறம் பாடித் திரிந்தன.

கரு நாகங்களின் துரோகத்தை
கக்கத்தில் ஒளித்துக்கொண்டு
புலிகளின் அரத்தம் தோய்ந்த
சிங்கக் கூர்வாளை
ஏந்திச் சிரித்தான் புத்தன்.

தப்பிப்போன புலிகளின்
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது
ஒரு நிலம்.

ஏர் மகாராசன்
26.11.2023

வியாழன், 16 நவம்பர், 2023

தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகச் சுட்டுவது, தமிழைச் சிறுமைப்படுத்துவதாகும் - மகாராசன்


தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்த்தல் கூடாது. 

*


இந்தக் கல்வி ஆண்டின் பொதுத்தேர்வு அட்டவணையைக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த அட்டவணையில், தமிழ்ப் பாடம் என்பதற்குப் பதிலாக மொழிப்பாடம் (Language) என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 

தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.

தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 

இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும். இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.

தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 

தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.

தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 

ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

16.11.2023

சனி, 11 நவம்பர், 2023

தீப ஒளித்திருநாள்:தமிழர் மரபு வேறு; ஆரிய மரபு வேறு - மகாராசன்



சூழ்ந்திருக்கும் இருளை விலக்கி, பொருள் இதுவென்று விளக்கிக் காட்டும் ஒளிப்பொருளை விளக்கு எனச் சுட்டுவதும், விளக்கேற்றுதலை வளமைப் பண்பாட்டு நடத்தைகளின் குறியீடாகவும் புலப்படுத்தி வந்துள்ளனர் தமிழ் முன்னோர். 

மழைக்காலக் கார்காலத்தின் மாலைப்பொழுது விரைவாகவே இருட்டத் தொடங்கிவிடும். இருளும் குளிரும் மிகுந்திருக்கும் கார்காலப் பெரும்பொழுதின் மாலைச் சிறுபொழுதை விளக்குகள் ஏற்றி, இருளையும் குளிரையும் விலக்கி வைக்கும் பண்பாட்டு நடத்தைகள் தமிழர் வழக்கில் இருந்திருக்கின்றன. அத்தகைய விளக்கேற்றும் பண்பாட்டு நடத்தையே மா ஒளித்திருநாளாக - தீப ஒளித்திருநாளாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. அதுவே கார்த்திகை மாதத்துத் தீப ஒளித் திருநாள் விழா. 

கார்த்திகை மாத ஒளித்திருநாள் வழக்கம் இன்னும்கூட இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், அத்தகையப் பண்பாட்டு நடத்தைகளுக்குச் சமூக முக்கியத்துவம் அளிக்கவில்லை. சூழலியல் அடிப்படையில் உருவான ஒளித்திருநாளுக்குப் பதிலாக, புராணக் கற்பிதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீபாவளி தமிழர் பண்பாட்டில் திணிக்கப்பட்டிருக்கிறது.

பிற்காலத்தில் விசயநகரத் தெலுங்கின ஆட்சியாளர்களின் காலகட்டத்தில்தான்,  ஆரியத்தின் புராணக் கற்பிதங்களால் உருவாக்கப்பட்ட தீபாவளி முன்னிலைப்படுத்தப்பட்டது. 

தமிழர் மரபின் ஒளித் திருநாள் விழாக்களை முன்னெடுப்பதும், ஆரியப் புராணத் தீபாவளிகளைப் புறக்கணிப்பதும்தான் தமிழர் பண்பாட்டு மீட்பாகும்.

தமிழரின் தீப ஒளித்திருநாள் குறித்து நான் எழுதிய விரிவான கட்டுரையும், அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது கட்டுரையும் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளன.

https://maharasan.blogspot.com/2016/12/blog-post_41.html

https://aerithazh.blogspot.com/2018/11/blog-post_4.html

ஏர் மகாராசன்.

வெள்ளி, 10 நவம்பர், 2023

தமிழ் நாட்டிற்குள்ளாகத் திராவிடம் பேசுவது, தமிழ்ப்பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் பாழ்படுத்துவதாகும்: கி.ஆ.பெ.விசுவநாதம்.


தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச்சொல். திராவிடம் என்ற சொல்லே திரிந்து ‘தமிழ்’ என்று ஆயிற்று என்பது தமிழ்ப் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றைக் காட்டுமேயன்றி, உண்மையைக் காட்டாது. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் ‘திராவிட’ என்ற சொல் ஒன்றுகூட இல்லை. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.


650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்றுக் காலத்தில்தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை - தமிழ் நாட்டை - தமிழ்மொழியை மட்டுமல்லாமல், தமிழ் இனத்தையும் - தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்துத் ‘திராவிடம்’ எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். 

தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு, வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே! ‘தமிழ்’ என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில் ‘ழ்’ ஐ உடையது (தம் + ழ்) என்பது பொருள். ‘திராவிடம்’ என்ற வடசொல்லிற்குக் குறுகிய விடம் என்றும், திராவிடர் என்ற சொல்லிற்குக் குறுகியவர் அல்லது குறுகிய புத்தியுள்ளவர் என்றும் பொருள் (திராவி - அற்பம், குறுகல்).

தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும். திராவிட நாடு என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக் குறிக்கும். தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும் உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி மொழியும் இல்லை. தமிழ்நாடு, தமிழ் மொழி எனக் கூறலாம். ஆனால் திராவிட நாடு, திராவிட மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக வேண்டும். 

தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்துக் கூறப்படாத ஒன்று. ஒரு நாள் இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா முழுவதுவமே ‘திராவிட நாடு’ கூறப்பட்டதும் உண்டு..

தமிழ் என்றால் திராவிடம்தான்; திராவிடம் என்றாலும் தமிழ்தான். தமிழர் என்றால் திராவிடர்தான்; திராவிடர் என்றாலும் தமிழர்தான். தமிழ்நாடு என்றால் திராவிட நாடுதான்; திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடுதான் - ‘அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது’ என்பதில் புரட்டு இருக்குமே தவிர, உண்மை இருக்காது. 

தமிழர் என்று எழுதி (திராவிடர்) என்று கூட்டுக்குள் போடுவதும், தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு) என்று கூட்டுக்குள் போடுவதும், பிறகு திராவிடர் (தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும், திராவிட நாடு (தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.

தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பைத் தாய்ப்பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், திராவிடர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள் மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர் என்றும், வேறொரு நாள் ‘ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே’ என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 

தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க, எழுதப்பேச இயங்க ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளில் எதற்கும் இன்று இல்லை. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன! தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக விலகப் பெருமையடைகிறது!

தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும் பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில் இன்று இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில் சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை. 

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது தமிழ் மக்களின் பிறப்புரிமையாக இருக்கும். ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்பது வேண்டாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும். 

திராவிட நாட்டினர்களில் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. 

திராவிட மக்களில் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள். வைகிறார்கள். மனிதனை மனிதனாகக்கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறவர், வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களை ‘அதுகள்; இதுகள்’ என அஃறிணைப்படுத்தி வைதும், செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டுத் தலைவர்களை -அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது, திராவிடம் என்பதே தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது. 

10 ஆண்டுகளாகத் திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள், உண்டியல்கள், ஆகிய 9உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால், அதைத் தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய, திராவிட நாட்டுக் கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும். 

தமிழ் நாட்டிற்குள்ளாகத் திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின் தமிழ்ப்பற்றை -தமிழ் நாட்டுப் பற்றை - வீர உணர்ச்சியை வேண்டுமென்றே வீணாக்கிப் பாழ்படுத்துவதாக இருந்து வரும். 

காலம் செல்லச் செல்ல திராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்து, அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும் கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர், தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என முடிவு கட்டிவிட வேண்டும். 

திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும் உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு ‘அடைந்தே தீருவேன் திராவிட நாடு’ என்றால், அது இல்லாத ஊருக்குப் போகாத பாதையைத் தெரியாத மனிதனிடம் புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும். அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி அரசியல் மொழியாக இருக்குமா? அதனைத் திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா? என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும். 

அப்படியே ஒப்பினாலும், கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும் வடமொழிப்பற்றும், வடசார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர் ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன் இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா? முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா? என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். 

அவ்விதமே முடிந்தாலும், அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினனாகத் தமிழ் நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா? தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா? அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்குப் போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன? என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.

தமிழ் வாழ்க என்று கூறி, தமிழ்நாடு தமிழருக்கே என அலறி, தமிழர் கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க்கொடியை உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத்தி, பண முடிப்புகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்டு திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட நாடு திராவிடருக்கே என அலறி, திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி, திராவிடர்க்குப் போராட வேண்டிய அவசியமும் அவசரமும் என்ன? என்பதற்குத் திராவிடம் இதுவரை பதில் கூறவேயில்லை. தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும் ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.

தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத் தலைவர் என்றும், தமிழ்நாட்டுத் தனிப்பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும் சொல்லியும் வரலாற்றில் எழுதியும்கூட, அவர் தன்னைக் கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும், முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்றுவரை மறுக்க முன்வராததால், அது உறுதி செய்யப்பட வேண்டியதேயாகும். 

இதுகாறும் கூறியவைகளைக் கண்டு, தமிழ் எது? திராவிடம் எது? தமிழர் யார்? திராவிடர் யார்? தமிழ்நாடு எது? திராவிட நாடு எது? தமிழ் மக்களுக்கு வேண்டுவது எது? என்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி உண்மையை விளக்க இவை போதும் என நம்பி இத்தோடு நிறுத்துகிறோம். 

மகாராசன் தொகுத்த 'திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்' நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506


திங்கள், 6 நவம்பர், 2023

சமூகத்தின் சுய பரிசோதனையை வலியுறுத்தும் நூல்: மணி மீனாட்சி சுந்தரம்


தமிழக பள்ளி மாணவர்கள் வகுப்பறையிலும் பொதுச் சமூகத்திலும் நடந்துகொள்ளும் நெறிபிறழ் நடத்தைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்தபடியே உள்ளன.இவற்றைக் கண்டும் காணாமலும் கடந்துபோகும் தமிழ்கூறும் நல்லுலகைக் கைப்பிடித்து நிறுத்தி, அவை குறித்து விவாதிக்கவும் மாற்றத்தை முன்னெடுக்கவும் வற்புறுத்துகிறது இச்சிறு நூல்.

மாணவர்களின் தம்மதிப்பற்ற செயல்களுக்கும்,நெஞ்சைப் பதற வைக்கும் வன்முறைகளுக்கும் முக்கிய காரணம், கல்வி பற்றிய அவர்களின் அக்கறையின்மையே என்றாலும்,அந்த அக்கறையற்ற மனோநிலையை வளர்த்தெடுக்கும் கூறுகளை முன்வைத்து இந்நூல் பேசுகிறது.

மேல்நிலைக் கல்வியில்,போட்டித் தேர்வுகளை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள கடினமான பாடத்திட்டமும் தேர்வுமுறையும், மெல்லக் கற்கும் மாணவர்களைக் கற்றலில் இருந்து விலக்கி சமூக உதிரிகளாக மாற்றும் ஆபத்தை விளைவிப்பதை விரிவாகப் பேசுகிறது முதல் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை,நாங்குநேரியில் சக மாணவனை வெட்டி வீழ்த்திய சாதிய மனோநிலையின் அடிப்படைக் காரணிகளை ஆராய்கிறது.

பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கும் சாதி வெறிகொண்ட சமூகம், ஆசிரியர்,பெற்றோர்,சாதிச் சங்கங்கள்,அரசியல்வாதிகள் என குற்றத்திற்குத் துணைபோகும் அனைவரையும் சுய பரிசோதனைக்கு அழைக்கிறது இந்நூல்.

மதுப்பழக்கத்தினால், வளர்ந்த பெரியவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ; அவர்களை விட வேகமாக, வளரிளம் பருவத்து மாணவர்கள் போதைப் பழக்கத்தினால் வீழ்ந்துகொண்டிருக்கும் பேராபத்தையும் பேசுகிறது இந்நூல்.

சமூகத்தின் எதிர்காலமான மாணவரைச் சிறந்தவராக,அற உணர்வு கொண்டவராக உருவாக்க வேண்டிய பள்ளிகள், அதற்குரிய போதாமைகளை வளர்த்துக்கொண்டே போவதை எச்சரிக்கின்றது இந்நூல்.

தமிழ்ச்சமூகம்,பண்பாடு, வரலாறு தொடர்பான கட்டுரை நூல்களைத் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் 'ஏர்' மகாராசனின் இந்நூல், கல்வியின் மீதும், சமூகத்தின் மீதும்,மாணவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்ட எவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.

கட்டுரையாளர்:
மணி மீனாட்சிசுந்தரம்,
ஆசிரியர் மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்,
மதுரை.

*
நூலின் பெயர் : 
மாணவர்கள் சமூக உதிரிகளாகும்
பேராபத்து.
நூல் வகை : கட்டுரை 
நூலாசிரியர் : மகாராசன்.
முதற்பதிப்பு : செப்டம்பர் '2023
பக்கங்களின் எண்ணிக்கை : 72
விலை : ரூபாய்.90/-
வெளியீடு : ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை - 606806.
பேச: 99948 80005.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506.