செவ்வாய், 20 டிசம்பர், 2016

அகக்கண் இசைஞர்கள் _ கவிதை

விரல்களால்
நாட்டியம் நிகழ்த்தித்
துளைகளை
மூடி எடுக்கையில்,
பூப்பது போல்  தவழ்ந்து
எழும்புகிற ஒலிகள்
நடை பாதை ஓரத்திலிருந்து
ஒளியைச் சுமந்து திரிகின்றன
இதயங்களைத் தேடி.

காற்றில் கரைந்து போகும்
அணுத் திரள்கள்
குழல்களில் வழிந்தோடிக்
கசிந்து கசிந்து
உயிர் மூச்சென
உள் நுழைந்து கொள்கின்றன.

விழிகளில்
ஒளி இல்லை என்றாலும்,
அகமே விழியாய்
கால் தடங்களே
ஒளியாய் வாய்த்த
அகக் கண்ணர்கள்
இசையாய்க்
காற்றில் கலந்து கிடக்கிறார்கள்.

பகலானாலும்
இரவானாலும்
விழிக் குகைக்குள்
கருமை தான் என்றாலும்,
வெள்ளை பூத்துச்
சிரித்துக் கிடக்கின்றன
மனங்கள்
எப்போதுமே.

விரித்திருக்கும் துணியில்
விழுந்த காசுகள்
சிதறிய கோலங்களாய்க் கிடந்ததில் தெரிந்தன
மனித முகங்கள்.

குழல் தடவிய விரல்கள்
காசு முகங்களைத்
தடவுகையில் தெரிந்தன
மனிதர்களின் நிறங்கள்.

இசை மீட்டலுக்கான
கூலி தரும் மனிதர்கள்
இருக்கவே செய்கிறார்கள் என
விரல்கள் சொல்லச் சொல்ல
அகக் கண்ணர்களின்
முகங்கள்
சிரித்துக் கொண்டன.

வேர் இழந்த குழல்கள்
வாழ்வைத் தந்திருக்கின்றன.

கூதிர் காலம் - கவிதை

பனி கவ்விய இரவுகளில்
வெண்நுரை பூக்கும் புல்வெளிகளில்
ஒழுகும் நீர்த்துளிகளாய்
வடிகிறது மனம்.

கூதலில் நடுங்கி
கூதற்காயத் தவிக்கிறது
மேனி.

பச்சை உடுத்தி
பனி போர்த்தி
பஞ்சு நிறம் காட்டுகின்றன
அருகும் கோரையும் நெத்தையும் .

வயல் நீர் பாய்ச்சும்
பின்னிரவுப் பொழுதில்
வரப்பில் நடக்கையில்
சில்லிடுகின்றன கால்கள்.

இப்படியான
பொழுதும் வாழ்வும்
நினைவுகளில் மட்டுமே
வாழ்கின்றன.

நனவிலும் கனவிலும்
பாடாய்ப் படுத்தும்
நினைவுகள்,
இப்படியான
கவிதைகளில் தானே
செழித்து நிற்கின்றன.

மா ஒளித் திருநாள் : சூழலியல் பண்பாட்டின் புலப்பாடு:- மகாராசன்





நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் எனும் அய்வெளி சூழ்ந்த இந்தப் பேரண்டமே நிலக்கோள். இந்நிலக்கோள் தன்னையும் சுற்றிக் கொண்டு  சூரியக் கோளையும் சுற்றி வருவதால் பல்வேறுபட்ட தன்மைகளையும் இயல்புகளையும் தோற்றத்தையும் அமைப்பையும் வாகையும் கொண்டதான பன்மைச் சூழலைக் கொண்டதாகத் திகழ்கின்றது. அதனால் தான், பன்மை உயிர்க்கோளம் நிரம்பியதாய் அது இருக்கின்றது.

உயிர் வாழ்கிற மனிதர், பயிரினங்கள், விலங்குகள் என அத்தனை வகைப்பட்ட உயிரினங்களும் நிலக்கோளின் சூழலியல் பண்பாட்டுக்கு உகந்தும் ஒத்திசைந்தும்தான் உயிர் வாழ்கின்றன. அதாவது, உயிரினங்களின் உயிர் வாழ்த் தேவைகளுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதன்மையானதாகவும் இருப்பது நிலக்கோளின் சூழலியல் பண்பாடு தான். சுழலுவதாலும் சூரியனைச் சுற்றி வருவதாலும் நிலத்தின் தோற்றப்பாடுகளும் பொழுதுகளும் மாறி மாறி வருகின்றன. இந்தச் சூழலியல் தன்மைகளே உயிரினங்களின் தோற்றம், வாழ்முறை, உணவுப் பழக்கம், உயிரினக் குணவியல்புகளை வடிவமைக்கின்றன. ஆக, ஓர் உயிரினத்தின் இருப்பைச் சூழலியல் பண்பாடே வடிவமைக்கிறது எனலாம்.

உயிரினங்களின் வாழ்வெளியாய் இருக்கிற சூழலியல் வெளியை முதல் பொருள் என்கிறது தமிழ் மரபு. இதனை,
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப
என்கிறது தொல்காப்பியம். அதாவது, நிலமும் பொழுதும் தான் உயிரின வாழ்வெளிக்கு முதன்மையானவையும் அடிப்படையானவையும் என்பதால், அவை முதல் பொருள் எனக் குறிக்கப்படுகிறது.

இந்த முதல் பொருளின் அமைவைப் பொருத்துத் தான் உயிரினங்களின் வாழ்முறை அமைவுகள் அமைந்திருக்கின்றன. நிலத்தோடும் பொழுதோடும் இசைந்து கிடக்கிற பன்மை உயிர்க்கோளச் சூழலே சூழலியல் பண்பாடு பொதிந்திருக்கும் உயிர்ப் பண்பாடாகும்.

நிலம், நிலத்தில் நிகழ்கிற பொழுதுகள் என்கிற முதல் பொருளின் அமைவுகள் தான் அந்நிலத்திற்குரிய உயிரினங்களின் வாழ்வெளியைக் கட்டமைக்கின்றன. அவைதான், அந்நிலத்திற்குரிய கருப்பொருட்கள் என்பதாகச் சுட்டப்படுகின்றது.
தெய்வம் உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப
என்கிறது தொல்காப்பியம்.  ஆக, உயிரினப் புழங்கு வெளியில் வடிவமைந்த அல்லது வடிவமைக்கப்படுகிற கருப்பொருட்கள் என்பவைகூட முதல் பொருளின் அடிப்படையிலிருந்தே அமைவாக்கம் பெறுகின்றன. இம் முதல் பொருளும் கருப்பொருட்களும் தான் வாழ்வியல் பண்பாட்டை வடிவமைக்கின்றன. இத்தகையப் பண்பாட்டு ஒழுகலாற்றையே உரிப்பொருள் எனச் சுட்டுகிறது தமிழ் மரபு.

முதல், கரு, உரி என்கிற இம் மூன்று வெளிகளையே திணை என்னும் சொல்லால் குறிக்கிறது தமிழ் மரபு. சூழலியலோடு இணைந்த வாழ்க்கை முறையைத் தான் திணை நிலை வாழ்க்கை முறை எனத் தமிழ் மரபு கொண்டாடியிருக்கிறது. சங்க காலத்திய இலக்கியங்கள் திணை மரபை வழிமொழிந்தவைதான். அதனால் தான் திணை என்னும் சொல் கூட நிலம், பண்பாட்டு ஒழுகியல் போன்ற விரிந்த அளவில் பொருண்மை தரக்கூடிய ஒன்றாகவும் அமைந்திருக்கிறது.

இத் திணை மரபு சூழலியல் மரபை உள்வாங்கித்தான் செழித்திருக்கிறது. அந்த வகையில், தமிழ்த் திணை மரபில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என அய் வகை நிலங்கள் குறிக்கப்படுகிறது. அய் வகை நிலங்களின் வாகு தான் அய் வகை நிலங்களிலும் பரவிக்கிடந்த மக்களின் வாழ்க்கை முறைகளையும் தொழில் முறைகளையும் பண்பாட்டு முறைகளையும் வடிவமைப்பதில் முதன்மைப் பங்காற்றியுள்ளன. ஒவ்வொரு நிலம் சார்ந்த மனித வெளியை மிக விரிவாகவே விளக்கப்படுத்துகின்றன தமிழ் இலக்கணங்கள்.

நிலத்தைப் பகுத்திருப்பதைப் போலே, நிலத்தில் நிகழ்கிற பொழுதையும் பகுத்திருக்கும் பாங்கு மிகச் சிறப்பானது. பொழுதைப் பெரும் பொழுது, சிறு பொழுது என இரண்டாகப் பகுத்திருப்பது சூழலியல் அறிவைப் புலப்படுத்துவதாகும்.

ஓர் ஆண்டின் ஆறு பிரிவுகள் பெரும் பொழுது என்றும், ஒரு நாளின் ஆறு பிரிவுகள் சிறு பொழுதுகள் என்றும் பகுத்துள்ளனர் தமிழ் முன்னோர் . சூழலியல் மாற்றங்களைக் கணக்கில் கொண்டே கார்காலம், கூதிர் காலம், முன் பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் எனச் சூழல் மாற்றத்திற்குத் தகுந்தாற்போலப் பெரும் பொழுது வகைப்படுத்தப் பட்டிருக்கிறது. அதே போல், ஒரு நாளில் ஒவ்வொரு நான்கு மணி நேரப் பொழுதும் ஒரு சிறு பொழுதாய்க் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என ஆறு வகைச் சிறு பொழுதுகள் சுட்டப்படுகின்றது.

நிலத்தில் நிகழ்கிற இத்தகைய சூழல் மாற்றங்களுக்கு ஏற்பத்தான்  தமிழர்களின் வாழ்க்கை முறையும் பண்பாட்டு முறையும் புலப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழர்களின் உணவு, உடை, தொழில், வழக்காறு, சடங்கு, விழா, கலை, நுகர்வு என எதுவானாலும் சூழலியலுக்குத் தக்கவாறும் அதனை ஏதோ ஒரு வகையில் மெய்ப்பிக்கும் வகையிலும் தான் அமைந்திருந்தன. குறிப்பாகச் சொல்வதானால் இயற்கையோடு இயைந்த சூழலியலைக் கொண்டாடும் வகையிலேதான் தமிழர்களின் பண்பாட்டுக் கோலங்கள் இருந்திருக்கின்றன.

பொங்கல் விழா நிலத்தையும் கதிரவனையும் காளைகளையும் பசுக்களையும் உழவர்களையும் போற்றுகிற உணவு உற்பத்தி சார்ந்த சடங்கியல் விழா தான். இந்திர விழா, மழையை வழிபட்டும் வாழ்த்துவதுமான ஒரு சடங்கு விழா தான். அதேபோல, ஆடிப்பெறுக்கு என்பதும் ஆற்றில் வருகிற புது நீரைப் பதினெண் குடிகளும் சேர்ந்து வரவேற்கிற ஒரு சடங்கு நிகழ்வுதான்.  இந்த வரிசையில், சூழலியல் பண்பாட்டைப் புலப்படுத்தக் கூடிய இன்னுமொரு விழா தான் கார்த்திகைத் தீபம் எனப் பெறும் மா ஒளித் திருவிழா ஆகும். கிருத்திகை எனும் சமக்கிருதச் சொல்லையே தமிழில் கார்த்திகை எனக் குறிக்கின்றனர். இம்மாதத்தை நளி என்பதாகத் தமிழில் குறிப்பர்.

வானியல் அறிவின் புலப்பாடே மாதங்களின் பெயர்களும், நாட்களின் பெயர்களுமாகும். ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாட் கிழமையை முதன் முதல் ஏற்படுத்தியவரும் தமிழரே என்கிறார் பாவாணர்.

பெரும் பொழுதைச் சூழல் மாற்றத்திற்குத் தகுந்தாற்போல வகுத்திருப்பதைப் போலவே, ஒவ்வொரு மாதத்தையும் ஒவ்வொரு பெயர் வைத்து அறிந்திருப்பதும் அன்றைய வானியல் அறிவைக் காட்டுகின்றது. முழு மதியானது தேய்ந்து மறுபடியும் முழுத் தோற்றம் கொள்ளும் நாட் கணக்கையே ஒரு மாதம் என்பதாகச் சுட்டுகின்றனர். நிலவுக்கருகில் விடியற்காலையில் தெரிகிற விண்மீன்கூட்டத் தொகுதியின் தோற்றப்பாட்டை வைத்தே அந்த மாதத்திற்கான பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பன்னிரு ஓரைகள் என்பர் சான்றோர் . இப்பன்னிரு ஓரைகளே தமிழ் மாதங்களின் பெயர்களாகும். தை முதலாக மார்கழி வரையிலான மாதப் பெயர்கள் தமிழே கிடையாது. சைத்ரா முதல் பல்குனா வரையிலான சமக்கிருத மாதங்களின் பெயர்களே தமிழ் மாதங்களாகச் சமக்கிருத மயமாக்கப்பட்டுள்ளன.

சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை , ஆடவை, கடகம் , மடங்கல் , கன்னி , துலை , நளி , சிலை போன்றவையே தமிழ் மாதங்களின் பெயர்கள் . பன்னிரு மாதங்களும் வானியல் தோற்றத்தைத் தெரிவிக்கும் வானியல் பெயர்கள் தான். ஆக , மாதங்கள், பெரும் பொழுதுகள் , சிறு பொழுதுகள் என எதுவாய் இருந்தாலும் இயற்கையோடும் அன்றைய அறிவியலோடும் வாழ்வியலோடும் தான் பிணைந்து கிடந்துள்ளன.

வழிபாட்டுச் சடங்குகள் கூட இயற்கை நெறிப்பட்டே வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வைதீகச் சாயல்படாமல் இயற்கையைப் போற்றியும் வணங்கியும் வாழ்த்தியும் வந்துள்ள மரபு தான் தமிழ் மரபு. பிற்காலத்திய அதிகார மாற்றங்களாலும் பண்பாட்டுத் திணிப்புகளாலும் தமிழ் மரபுகள் பெரும்பாலும் சமக்கிருதமயமாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று தான் தீபாவளி.

தமிழர்களின் விளக்கொளிப் பண்பாட்டு மரபையே வைதீக மரபானது அறிவுக்கு ஒவ்வாதக் கட்டுக்கதைகளால் தீபாவளிப் பண்டிகையாய் நம்மேல் திணித்திருக்கிறது. ஆனால், தமிழ் மரபில் தீப ஒளிப் பண்டிகை என்பது கார்த்திகை எனும் நளி மாதத்தில் கொண்டாடுகிற விளக்கொளிப் பண்பாடு தான். நளி மாதம் கூதிர் காலத்து மாதங்களுள் ஒன்று.

கொலைக் களத்து ஏதிலார்போல கூதிர் காலத்து மாலைப் பொழுதுகள் அமைந்திருக்கும் எனச் சுட்டுகின்றன இலக்கியங்கள். அதாவது, கூதக் காலமே கூதிர் காலம். கூதிர் காலத்துக் குளிரும் வாடைக்காற்றும் வாட்டி எடுக்கும் தன்மை கொண்டவை. அது மட்டுமல்லாமல் வெகு விரைவிலேயே சூரியன் மறையத் தொடங்கி இருட்டத் தொடங்கி விடும். ஆகையால்தான், குளிரைப் போக்கவும் வெளிச்சம் ஏற்றவும் தங்களின் புழங்கு வெளிகள் தோறும் விளக்குகளை ஏற்றிக் கூதிர் காலத்தை வரவேற்றனர்.

கூதிர் காலம் முழுவதும் விளக்கேற்றுதலையே பண்பாடாய்க் கொண்டிருந்தனர் தமிழ் முன்னோர் . கால மாற்றத்தில் நளி மாதத்து நிறைமதி நாளில் வீடுகள் தோறும் நிறைய விளக்குகள் ஏற்றி மகிழ்வையும் இயற்கையையும் கொண்டாடி வருகின்றனர். மா ஒளி ஏற்றும் இப் பண்பாடு சமயம் சார்ந்த அல்லது வைதீகம் சார்ந்த ஒன்றாகச் சுருக்கப்படுகிறது. மா ஒளி என்னும் விளக்கேற்றும் பண்பாடு சூழலியல் சார்ந்த பண்பாட்டின் புலப்பாடு தான். இதனை விளக்கீடு என்னும் சொல்லால் குறிக்கிறார் திருஞானசம்பந்தர். தொல்கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்கிறது சம்பந்தர் தேவாரம் . அதாவது, கார்த்திகை என்னும் நளி மாதத்து நிறைமதி நாளில் ஆறு விண்மீன்கூட்டம் நிலவுக்கருகில் கூடியிருக்கும் நாளைத் தான் விளக்கீட்டு நாளாகப் பழந்தமிழர் கருதியுள்ளனர். மேலும், முழு நிலவுக்கருகில் தெரிகிற அறு மீன்கூட்டம் நல் நிமித்தங்களுள் ஒன்றாகவும் கருதப்பட்டிருக்கிறது. அதாவது, பொருள் தேடல் காரணமாகவோ பிழைப்பு தேடியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவர், எவ்வித இடையூறும் இன்றித் திரும்புவார் என்பதற்கான நல் நிமித்தங்களுள் ஒன்றாக நளி மாதத்து நிறைமதி நாளில் தெரிகிற அறு மீன்கூட்டத்தையும் கருதியுள்ளனர்.

பிரிந்திருந்த தலைவியும் தலைவரும் ஒன்று சேர்கிறபோது, இல்லத்தையும் உள்ளத்தையும் கதகதப்பாக்கிக் கொள்ளும் குறியீட்டு நிகழ்வாகவும் இது அமைந்து போகிறது. இல்லற வாழ்வின் இன்பச் சிலிர்ப்புகள் சிம் படித்துப் பூக்கின்ற பருவமும் இதுதான்.  இந்தப் பருவத்தில் தான் கார்த்திகைப் பூ எனப்படுகிற செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கும். விளக்கு எரிவதைப் போன்ற தோற்றப் பொலிவோடு தான் காந்தள் பூக்களும் காணப்படும். இதனை,
நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலை நாள் விளக்கின் தகை வுடைய வாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி
எனக் குறிக்கிறது கார் நாற்பது எனும் நூல்.

விளக்கேற்றும் இப்பண்பாட்டியல் குறித்த பதிவுகள் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் காணப்படுகின்றன. சமயச் சார்பற்ற, வைதீகம் சாராத, மாசு இல்லாத ஒளித் திருநாள் என்பது இதுவாகத்தான் இருக்க முடியும். பிற்காலத்தில் தான் இதன் மதிப்பும் முன்னெடுப்பும் குறைந்து போனது.

சிற்றூர்ப்புறங்களில் விளக்கேற்றுதலோடு மாவுளி சுற்றுதல் என்கிற நிகழ்வும் நடைபெறுவதுண்டு. சிறுவர் களும் இளவட்டங்களும் தனித்தனியாகவே தமக்குத் தோதான வகையில் கம்பியை வளைத்துத் துணிகளைச் சுற்றித் தீப்பந்தம் செய்து வைத்துக் கொள்வர்.

ஊரில் உள்ள அனைவரும் ஒன்று கூடி ஊர் மந்தையில் சொக்கப்பனை என்கிற பொம்மை கொண்டு வந்து ஊரெல்லாம் கொண்டு ஓடிய பின்பு ஊர் எல்லையில் தீயிட்டுக் கொளுத்துவர். எரிகிற சொக்கப்பனையிலிருந்து தான் தீப்பந்தங்களுக்கான நெருப்பைப் பிடித்துக் கொண்டு மாவுளியோ மாவுளி எனச் சுற்றுவர். இந்த மாவுளி தான் மா ஒளி ஆகும்.

மா ஒளியை ஒவ்வொரு வட்டாரத்தினரும் வேறு வேறு பெயர்களாலும் குறிக்கின்றனர். இதனை மாம்ளி (சுளுந்து) சுற்றுவது எனக் குறிக்கிறார் பால்பாண்டி. இது நாணல் (சம்பை) தண்டையை அறுத்து, காய வைத்து, சிறுசிறு முடிச்சுகளாக கட்டி தீயை பற்ற வைத்து விளையாடக்கூடிய நிகழ்வு எனவும் அவர் குறிப்பிடுகிறார்.



இதைக் குறித்துப் பாலா பாரதி கூறுகையில், ‘மாவளி’ சுற்றுதல் கார்த்திகைத் தீபநாளில் நடைத்தப்படும் விளையாட்டாகும். பனம்பூவைக் கருக்கித் தூளாக்கி துணியில் பொட்டலமாகக் துணியில் கட்டி வைத்துக்கொள்வார்கள். இப்பொட்டலத்தை பனைஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதை நீண்ட கயிற்றில் கட்டிவைத்துக்கொண்டு நெருப்பை வைத்து விடுவார்கள். இப்போது கயிற்றைப் பிடித்து வேகமாக சுற்றுவார்கள். அது தீப்பொறிகளைச் சிதறவிட்டு சுற்றுவதற்குத் தகுந்தவாறு பல உருவங்களை ஏற்படுத்தும். அப்போது "மாவளியோ மாவளி" என்று சத்தமிடுவார்கள். இது பார்ப்பதற்கு ஒரு இனிய காட்சியாக இருக்கும். மா ஒளி = பெரிய ஒளி என்பது மருவி மாவளி ஆகியிருக்க வேண்டும். இவ்வழக்கம் நீண்டகாலமாக வழக்கில் இருப்பதை, இக்காட்சி பாறை ஓவியத்தில் காணப்படுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறைஓவியத்தில் மாவளி சுற்றும் காட்சியைக் காணலாம் என்கிறார்.

கார்த்திகைத் திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துவது போல் கிராமங்களில் எல்லா வீட்டிலும் செய்வார்கள். இது பெரிய கம்பி மத்தாப்பூவுக்குச் சமம்.

பனை மரத்தின் பூக்களை இதற்குப் பயன்படுத்துவர்.பொதுவாக, கார்த்திகை மாதம் மழை அதிகமாப் பெய்யும். அதனால், ஒரு வாரத்துக்கு முன்னாலேயே இத சேகரிச்சு வச்சிக்குவாங்க .

ஒரு ஒன்பது பத்து மணியளவில் அரையடி விட்டம் ,ஒன்னரையடி ஆழத்திற்கு ஒரு குழி தோண்டி அதில் இந்த பனம்பூக்களைச் செங்குத்தாக நிறுத்தித் தீயை வைக்கணும் ...அதை எரியவிடாமல் ..பூபோல பொசுங்கனும் அந்த மாதிரி பதம் வேணும் ...கொஞ்ச நேரம் முறத்தால் வீசி அதை புகைய விட்டு ,பூசணி இலைகளை மேல போட்டு மண்ணை அள்ளி மூடிடனும் . மாலை நாலைந்து மணிக்கு மண்ணை தோண்டி குழியில் உள்ள கரியை பக்குவமா எடுத்து  (இல்லனா அது அங்கேயே தூளாகிடும்) ,அம்மியில் வைத்து அரைச்சி மாவாக்கிக்கனும் (கொரகொரனு இல்லாம ,நல்லா தூளாகவும் இல்லாம பதமா அரைச்சதான் பூ நல்லா கொட்டும்)
 அரசே தூளை ஒரு நூல் துணியில் வச்சி உருளை வடிவுல உருட்டி கட்டி வச்சிடனும் .

பனை மரத்தோட மட்டையை வெட்டி (காம்பு நீளமா உள்ள விளைந்த ஓலை மட்டையை வெட்டணும் ) ஓலை மற்றும் காம்பின் மறுபகுதி இரண்டையும் வெட்டி எடுத்துவிட்டு நடுப்பகுதியை மட்டும்  எடுத்து இருபுறமும் உள்ள முள்ளை சீவி ,மட்டையை மூன்றாக  முக்கால் அளவு பிளந்து ,துணி உருளைய மட்டையின் பிளந்த பாகத்தில் வச்சி மட்டையை கட்டிடனும் , மறுமுனையில் கயிறு கட்ட ஏதுவாக மட்டையை சீவி ,தேவையான நீளமுள்ள கயிறை கட்டினால் மாவளி  தயார் . மேல்புறம் நெருப்பு வைத்து உருளையை  நெருப்பூட்டி கயிறை எடுத்து சுத்த வேண்டும் .பூ கொட்டும் போது நமது செய்திறன் அதில் வெளிப்படும்.

உருளையின் அளவை அரைக்கும் மாவு நிர்ணயிக்கும் ,மட்டையின் அளவை உருளையின் அளவு நிர்ணயிக்கும் , கயிறின் அளவு சுத்துகிற ஆளை பொறுத்து அமையும் .
மாவட்டத்திற்கு மாவட்டம் செய்யும் முறையிலும் ,உபயோகிக்கும் பொருளிலும் சிறிய மாற்றம் உண்டு .

இதையெல்லாம் நான் இழந்து பதிமூன்று வருடமாகிறது எனத் தமது கடந்தகால நினைவைப் பகிர்கிறார் பொறியாளர் ஆறுமுகம் கணேசன்.

மா ஒளிப்பந்தம் ஆண் பனைப் பூவில் செய்வதும் உண்டு. ஆண்பனைப் பெயர் அலகுப்பனை. அதன் பூவின் பெயர் அலகுப்பரல். ஓரங்குல விட்டக் குச்சி போல இருக்கும் தண்டில் வேப்பம் பூ அளவுள்ள பூக்கள் சொருகி வைத்தாற் போல் இருக்கும். காய்ந்த இந்தத் தண்டைக் கருக்கித் தூளாக்கித்தான் பூவானம் விடுவார்கள். மேலும், குமரி மாவட்டத்தில் இந்தத் தூள் பொட்டலத்தை அரளிச்செடியின் முக்கவைக் குச்சியினுள் வைத்து மூன்று முனைகளையும் இணைத்துக்கட்டி ஒரு கயிற்றின் முனையில் கட்டி நெருப்பிட்டுச் சுற்றுவர். போரிகளைப் பொழிந்துகொண்டே அது சுழலும். சொக்கப்பனைக்கு அங்கு மாரி மழைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் சிறுதும்பையின் உயரமுள்ள பொரிஞ்சை என்ற செடியை சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடின்றி பிடுங்கி காய வைத்துச் சிறுசிறு கட்டுகாளாகக் கட்டி மூங்கில் கயிற்றினுள் வைத்து மேல் நோக்கிச் சுற்றிக் கட்டி கிழ் முனையில் தீவைத்தால் சடசட என்ற ஒலியுடன் எரிவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மழைச்சீர்மை குலைந்த பின் இந்தச் செடி முற்றிலுமாக மறைந்துவிட்டது என்கிறார் குமரிமைந்தன்.

மா ஒளித் தீப்பந்தங்களைச் சுற்றிக் கொண்டே காடுகள், தோட்டங்கள், வயல்கள், கண்மாய் எனக் கூட்டம் கூட்டமாய்ச் செல்வதுண்டு. மா ஒளிப் பந்தம் சுற்றிக் கொண்டு போகையில் காடு மேடுகளில் படுகிற அத்தனை வகையான காட்டுப் பண்டங் களும் யாவருக்கும் சொந்தம் தான். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

கொளுத்திப் போட்ட சொக்கப்பனைச் சாம்பலைப் பெரியோரும் பெண்களும் அள்ளிக் கொண்டு போய்  மறுநாள் காலையில் காடுகளிலும் வயல்களிலும் போட்டிருக்கிற வெள்ளாமைகளில் தூவுவதை வழக்கமாக்கிக் கொள்வர். இது போன்றே மூன்று நாட்கள் மா ஒளித்திருநாள் கொண்டாடுதல் பண்பாட்டு வழக்கமாய்ச் சிற்றூர்ப்புற மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இதனை உரி சுற்றுதல் எனப் பதிகிறார் எழுத்தாளர் அழகிய பெரியவன். இதைக் குறித்து அவர் கூறும்போது , எங்கள் ஊர்ப்பக்கம் இது உரி சுற்றுதல்.மாவளி அமைப்பை போலவே கயிற்றில் கட்டி தொங்கவிடுவதற்குப் பெயர் உறி.அதனால் அந்தப் பெயர் வந்திருக்கும்.அப்போது பாடும் பாடல் கேலி கிண்டல் நிறைந்தது.கொச்சையானது.இப்பாடல்களில் ஒன்றை என் சிறுகதையான 'செவிப்பறை'யில் பயன் படுத்தி உள்ளேன் என்கிறார்.

இந்த ஒளிப் பண்பாடு குறித்துச் சித்த மருத்துவ ஆய்வாளர் குப்பு சித்தர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த மாவளி வெறும் கேளிக்கை அல்ல.இது ஒரு பெரிய கலை.
போர் கலை.
ஓகம் குருகுலம் இந்த பயிற்சிகளை நடத்தி வருகிறது.

இது மா ஒளி அல்ல.
மா வளி.
நம் மீது வீசுவது காற்று.
பல வகை காற்றுகளின் தொகுப்பு வளி எனப்படும்.
வளி இன்றி நெருப்போ ஒளியோ தோன்றாது.
ஒளியை வணங்குவது மறைமுகமாக வளியை போற்றுவதாகும்.
கார் - த்திகை :
இச் சொல் மேகத்தையும் வளியையும் சுட்டுவதையும் காணலாம்.
படத்தில் நீங்கள் பார்க்கும் மாவளி ஒளிர்வதற்கு முதன்மையானது வளிதான்.வளியின் கோலம்தான் ஒளிர்வு.
இக் காலத்தில் பெய்யும் மழையை கொண்டுவரும் மேகத்திற்கும் வளிக்கும் நன்றி தெரிவிக்கவே விளக்கணிவரிசை.
தீபாவளி அன்று ஒரு விளக்குகூட ஏற்றப்படுவதில்லை என்பது கவனிக்கத் தக்கது.
நமது விளக்கணிவிழாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் தீபாவளி என விவரிக்கிறார். மேலும்,
60 அல்லது 70 அகவை மூத்தர்வர்களை அனுகி அவர்களின் இளமைக்காலத்தில் ஊரில் தீபாவளி கொண்டாடி உள்ளார்களா என வினவி தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.

"சொக்கப்பானை” தோற்றமே கார்த்திகை தீபம். கார்த்திகை மாதம் எல்லா தனிய வகை தாவரங்களும் வளர்ந்து பசுமையுடன், சூழ் கொள்ளும் தருணம். இந்த தருணத்தில்தான் பயிர்களை அழிக்கும் பூச்சிகளும் தொன்றி தானியப் பயிர்கள் நாசம் செய்துவிடும். இதை அழிப்பதர்க்காகவே அக்கால விவசாயிகள் அங்காங்கே நெருப்புமூட்டி அதில் பூச்சியை விழவைத்து தானிய பயிர்களை காப்பாற்றினர். தமிழர்களின் வழிபாட்டில் ஒவ்வொன்றிற்குப் பின்னும் விஞ்ஞானம் இருக்கும் என்கிற நம்பிக்கைச் செயல்பாடு இருந்திருக்கிறது என்கிறது சொர்க்க பூமி தஞ்சாவூரு வலைத்தளப் பதிவு.

இப் பண்பாட்டுச் செய்கை குறித்து மு.மகேந்திர பாபு தமது இளமைக் காலப் பாடுகள் குறித்து விவரித்துள்ளதும் கூடுதல் சான்றாகும்.

பள்ளிக்கூடம் விட்டதும் , சேக்காளிகளோடு சேந்து , படப்புப் பக்கம் போய் , சோளத்தட்டய எடுத்து , ஒரு ஆள் உசரத்திற்கு கட்டி , முனியில காஞ்ச ஓல அல்லது சில்லாடய சொருகி , ஒட்டு மொத்த சின்னப் பசங்களும் இருட்டான ஒடனே சூந்த ( சோளத்தட்டை ) தூக்கி தோள்ள போட்டு , மந்தயம்மன் கோவில் திடல்ல கூடுவோம்.

மொதல்ல ஒருத்தன் தீயப் பிடிக்க , பிறகு அவன்ட்ட இருந்து எல்லாரும் தீயப் பிடித்து தலக்கு மேல் வைத்துச் சுத்திக்கொண்டே தெருக்களைச் சுத்தி கம்மாக் கரையில வரிசை வரிசையாய்ச் சுத்தி வருவோம் .

அலையடிக்கும் கம்மாய்த் தண்ணியில சிரட்டையிலும் , ஓலயிலும் வைத்து தீபத்தை ஏத்திவிடுவோம். அலைக்கேற்ப ஆடி ஆடி போவது அவ்வளவு அழகா இருக்கும் பாக்க.

சுத்தி முடிச்சு , சோளத்தட்டையானது குட்டையான உடன் மந்தையம்மன் கோவில் திடலில் ஒட்டு மொத்தமாகப் போட்டு தீ மதமதவென எரிய , அதைத் தாண்டும் இளைஞர் கூட்டம், என அந்நிகழ்வைக் குறித்த பதிவு நீள்கிறது.

இதே போன்ற அனுபவத்தை கலைச்செல்வம் சண்முகம் பகிர்கையில், நாங்கள் சிறு வயதில்
பனம்புடுக்கு விறகுகரி சிறிது உமி..ஆகியவற்றை கலந்து அரைத்தெடுத்து காயவைத்து சிறுபைகளை உருவாக்கி அதை காட்டாமணி கவையில் வைத்துகட்டி..கவையின் மேல் நுனியில் கையில் வைத்து சுற்றக்கூடிய அளவுக்கு இணைத்துகட்டி..
பிறகு பையின் ஒரு ஓரத்தில் உள்ள சிறு துளையில் நெருப்பைவைத்து ஊதி.. பொறிவந்தவுடன்..
தலைக்கு மேல் சுற்றி விளையாடுவோம் என்கிறார்.

நான் சிறுவனாக இருந்தபோது என் அண்ணா அரை அடி × கால் அடி சைசில் துணிப்பை அவராகவே தைத்து அதில் சாம்பலாகாமல் ஆற்றிய அடுப்புக் கரியை தூளாக்கி நிரப்பி தைப்பார். மேலே சாணிக்கரைசலை கெட்டியாக பூசி காய வைப்பார். ஒரு வாரம் முன்னதாக இதைச் செய்வார். நன்கு காய்ந்த பின் கவட்டை குச்சியில் கட்டி கார்த்திகை அன்று இரவில் பயன்படுத்துவோம் என்கிறார் நடராசன் கோவிந்தராசுலு.
எங்களூரில் கம்பந்தட்டையில் சுளுந்து செய்து கொளுத்தி ஊரைச்சுற்றி வருவோம்.இரவில் தனியாக சிறுவர்கள்மட்டும் இரவிறன் பயமின்றி தீப்பந்தம் போல சுளுந்தை சுழற்றி வருவோம் .சுற்று முடிந்தவுடன் அனைவரது சுளுநந்தையும் ஒன்றாக குவித்து தீ மூட்டி அதனை தாண்டி வருவோம் என்கிறார் சசிக்குமார்.

நான் சுற்றிருக்கிறேன்,சுயமாக செய்து,இதைச்சுற்றுவதில் கிடைக்கும் பரவசம் வேறு எதிலுமில்லை,சுயமாக செய்து சுற்றும் போது . உப்பு கரியுடன் உப்பு சேர்த்தால்தான் மத்தாப்பு போல் வெடிக்கும் .
முக்கியமாக  துணிபைக்கு பதிலாக பீர்க்கங்காய் முற்றியது எடுத்து அதில் உள்ள தோலை எடுத்துவிட்டு தோலைப்போல் மாட்டுசானத்தை தடவி காயவைத்து எல்லாம் செய்து ஒரு வாரத்திற்கு முன்பாக கார்த்திகைக்காக காத்திருக்கும் சுகமே தனிதான் . இதற்கு பெயர் மாவளி என்று சொல்லுவோம் என்கிறார் இளையாங்குடி குமார் பசுபதி.

மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் இதை மாம்பலி சுத்துவது என்பர் மேலும் ஒட்டு புல்லை முறை பெண்களின் தலையில் தேய்த்து விளையாடுவர் என்கிறார் சதீசு.
எங்கள் பக்கம் ஓர் அகத்திக்கட்டையை நெருப்பில் காட்டி அதனை  வேறொரு கட்டையால் தேய்ப்போம். அப்பொழுது நெருப்பு பொறிப் பொறியாக விழும் என்கிறார் உசா பிச்சை மணி.

நாங்கள் துணி பைகளில் சானி  பால் சேர்த்து காயவைத்து  காட்டாமணக்கு கவட்டைகுச்சியில் கட்டுவோம் பணம் பூ வோடு முல்லு முருங்கை கட்டை சேர்ப்போம் என்கிறார் அ.வி. சக்திவேல்.

இது போன்ற பண்பாட்டுச் செய்கை குறித்துக் கூறும் கோவிந்தராசன் சுப்பிரமணி இது ஒரு இயற்பியலும், வேதியியலும், பொறியிலும் கலந்த செயல் நடவடிக்கை. இதை இவ்வளவு சுத்தமாகவும் ஒழுங்காகவும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு எளிதாகச்செய்யும் திறமை இன்று இருக்கிறதென்றால், நமது அறிவியல் அறிவு எவ்வளவு தொன்மையானது என வியக்கிறார்.

இயற்கையைப் பேணுதல் மட்டுமே உயிரினங்களின் இருப்புக்கான அடித்தளம் . இயற்கையை மறந்தும் புறந்தள்ளியும் சுரண்டியும் அமைகிற வாழ்வும் சமூகமும் நிலைத்திருப்பதில்லை என்பதை இயற்கையே பல பாடங்களை உணர்த்தியிருக்கிறது. ஆகையால், இயற்கைச் சூழலியல் பண்பாட்டைப் போற்றிடுவோம், முன்னெடுப்போம்.

இந்நிலையில் தான், கூதிர் காலத்து வாழ்வெளி குறித்த நினைவுகளைப் பேசும் இரபீக் ராசாவின் கவிதை வரிகள் மா ஒளி மாதத்தின் சிறப்பைப் பதிவு செய்திருக்கிறது.

கார்த்திகை..

வெண்பனி இறங்கிடும் கூதிர்கால 'யாமம்'. நெஞ்சறைந்திடும் கோழிகளின், அரை இமை திறக்கும் 'வைகறை'. கன்னங்கருப்பட்டி சாயலின் 'விடியல்'.
பனியப்பிய சில்லென்ற கூதல் 'பகல்'.
பொன்மஞ்சள் மாலையென மயங்கி, 'எற்பாட்டில்' மலரும் தேன் சொரி அந்திப்பூக்கள். வெயிலோன் எப்போது சாய்ந்தான் என்பதைச் சொல்லாத,  'சாயுங்காலம்'.

விண்ணரசை மின்னி மிளிரச் செய்யும், வான்பூவுக்கு நேராய், மண்ணரசில் பொன்பூவாய் பூத்திடும் மாதம்.
மாரியை வழியனுப்பிடும் தீ தேவதை கசிந்து ஒசிந்து ஒளிரும் மாதம்.
ஊர்கூடி,  சொக்கப்பனை கட்டி, உப்பிட்டு எரித்து, வெள்ளாமையைக் கருதிடும் மாதம். விளைச்சலுக்காய் உழைத்திடும் காலம் கருதி, மங்கல விழவுகளைத் தவிர்த்திடும் மாதம்.

பால்ப்பிடிச்சு பதமாய் முற்றிடும் நெல்மணி, திணைவகை, சிறுகிழங்கு, சர்க்கரைக் கரும்பு, இஞ்சி, மஞ்சள், பெரும்பூசணி, பொடியவரை, பொன்பீரக்கை, பந்தல்புடலை, மாம்பிஞ்சு, தென்னம்பாளை, தெங்கங்காய்.....

சிறுவயது நினைவாய் என்றென்றுமாய்ப் போய்விடுமா?

கார்த்திகை தேவதையே..



பண்பாட்டு அழகியலும் அரசியலும் நூலில் இருந்து..

பண்பாட்டு அழகியலும் அரசியலும்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு, 2019

கள்வரும் களவாடுதலும் கன்னமிடுதலும்: நவீனப்படும் மரபு.


தமிழ் மரபில் அய்வகை நிலத்து இயல்புகளும், மக்கள் பிரிவுகளும், தொழில் முறைகளும்,வாழ்வியல் புலப்பாடுகளும்,பண்பாட்டுக் கோலங்களும் மிக விரிவாகவே விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள்,பாலை நிலத்து விவரிப்பும் உள்ளடங்கும்.

குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்கிறது சிலப்பதிகாரம் . முதுவேனில் காலத்து நிலத் திரிபை அது பேசுகிறது.

நிலத்தின் இயல்புகள்தான் அந்நிலத்து மக்களின் தொழிலையும் வாழ்வியலையும் பண்பாட்டையும் வடிவமைக்கின்றன. அவ்வகையில், பாலை நிலத்து மனிதர்கள், அந்நிலத்துக் குணவியல்புகளைக் கொண்டவராகத்தான் இருக்க முடியும்.

மற்ற நால்வகை நிலங்களும் உற்பத்தி சார்ந்த தொழில் உறவுகளை வடிவமைக்கும் தன்மைகளைக் கொண்டிருக்க, பாலை மட்டும் தான் உற்பத்திக்கும் தொழிலுக்கும் வாகாய் அமைந்திருக்கவில்லை. எனினும், அந்நிலம் சார்ந்த மக்களும் உயிர் வாழத் தானே வேண்டும். அவ்வாறு வாழ்ந்தும் இருப்பதைத் தான் பாலைத் திணை நமக்குப் புலப்படுத்தியிருக்கிறது.

முதுவேனில் எனப் பெறும் கடும் கோடைக்காலத்தில் ஓருணவுக்கும் தொழில் வழியின்றித் தவிக்கும் பாலை நிலத்து மக்கள்,களவுத் தொழில் மேற்கொள்ள நேரிடுகிறது. பின்பு, அதுவே தொழில் வழக்காறாய் ஆகிப் போய் விட்டிருக்கிறது.

வழிப்பறி, திருட்டு, கொள்ளையடித்தல் போன்ற களவுத் தொழில் என்னும் களவாடுதல் தொழிலை மேற்கொண்ட எயினர், வேட்டுவர் முதலிய வகுப்பினரே கள்வர் எனப்பட்டனர். மேலும், கள்வம் எனும் திருட்டுத் தொழில் செய்வோரையும் கள்வர் என்றே அழைக்கப்பட்டனர். இந்நிலையில், களவாடும் தொழில் மேற்கொண்ட கள்வர்களின் தொழில் நுணுக்கங்கள் குறித்தான நூல்களும் இருந்திருக்கின்றன என்பதைச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டிருக்கிறது.

மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவி என்று எட்டுடன் அன்றே இழுக்குடை மரபில் கட்டூண் மாக்கள் துணையெனத் திரிவது
(சிலப்.16:166 - 9) எனச் சிலப்பதிகாரம் குறிப்பது, களவு நூலின் கூறுகளாகும்.

இத்தகையக் களவு  நூலைக்  "கரவட" நூல் என்கிறார் பாவாணர். கரவடம் என்பதற்கு வஞ்சகம், களவு எனப் பொருள் கூறுகிறது செந்தமிழ் அகராதி. மேலும்,கரவர், கரவடர் என்போர் திருடர், கள்வர் என்றே அந்நூல் குறிப்பிடுகிறது.

களவாடும் தொழில் மேற்கொள்ளும் கள்வர்கள் திடுதிப்பென்று களவை மேற்கொள்ளுதல் கிடையாது. இடம், காலம், சூழல், நிமித்தம், வழி போன்ற களவுக்கான நிமித்தங்கள் பார்த்துத்தான் களவு மேற்கொள்வர். அவ்வாறான களவு நிமித்தங்களுள் ஒன்று தான் கன்னம் இடுதல் அல்லது கன்னம் வைத்தல் என்பதாகும்.

சுவரில் துளையிட்டுக் களவாடுதலுக்குக் கன்னமிடுதல் என்று சொல்வதுண்டு. கன்னமிடும் இத்துளைக் கருவியைக் கன்னக்கோல் எனவும் குறிப்பர். இதைக் குறித்த பழமரபுக் கதையும் ஒன்றுண்டு. அதாவது, மின்னலானது வாழை மரத்தில் இறங்கினால் அம்மரம் கருகிப் போய் கன்னக்கோல் கிடைக்கும். அதைக் கொண்டு எந்தக் கடினமான சுவரையும் துளையிட்டு விடலாம் என்கிறது அக்கதை.

அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இட்ட கதையாய்
எனும் பழமொழியும் கன்னமிடுதலைக் குறிப்பதை உணரலாம். ஆக, கள்வரின் களவாடும் திறத்தில் கன்னமிடுதல் என்பது கைதேர்ந்த ஒன்றாகவே கருதப்பட்டிருக்கிறது.

செல்வத்தையும் பொருளையும் களவாடுதலுக்காகவே முரட்டுத் தோற்றத்தையும் பேச்சு முறைகளையும் கள்வர்கள் வருவித்துக் கொண்டிருக்க வேண்டும். அதோடு, கழுத்தறுப்பென்னும் கொலையும் கூட களவாடுதலில் தவிர்க்க இயலாத செய்கையாகவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

களவாடும் இக் கள்வரை
நால் நில மக்கள் பிரிவினரும் வெறுத்தது மட்டுமில்லாமல், அவர்களைக் கண்டு அஞ்சவும் செய்தனர். இந்த அச்சமும், உடைமைகளைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வும் தான் கள்வர்களின் துணிவை அதிகப்படுத்தின.   ஆனாலும், உழைத்தும் உற்பத்தியிலும் ஈடுபட்டுப் பொருள் சேர்க்கும் ஒரு பிரிவினர், கள்வரை எதிர்த்தே வந்திருப்பதையும் வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

நால் நிலப் பொது வெளிச் சமூகம் கள்வர்களைக் கொடூரமானவர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் கொலையாளிகளாகவும் தான் புரிந்து வைத்திருக்கிறது. ஆயினும், கள்வர்களிடமும் பண்பாட்டு விழுமியங்கள் இருந்திருக்கின்றன என்பதற்குப் பாவாணர் சில சான்றுகளை முன்வைத்திருக்கிறார்.

எளியரின் பொருளைக் கவராமை, புலவரைப் போற்றுதல், விருந்தோம்பல், ஈகையரைக் காத்தல் போன்ற பண்பாட்டுக் கூறுகளைக் கைவிடாது ஒழுகியவர்கள் கள்வர்களும் தான் என்கிறார். புலவரும் பாணரும் கூத்தரும் பொருநரும் அவ்வப்போது வள்ளல்களிடத்தில் பெற்ற பரிசில் பொருளைக் காட்டு வழிகளில் பறிகொடுக்காது வீடு கொண்டு வந்து சேர்த்தது கள்வரின் பண்பாட்டுத் தன்மையே.

இந் நூற்றாண்டிலும் கள்வரும் கொள்ளைக்காரரும் பல இடங்களில் பண்பாடு காட்டியுள்ளனர். மன்னார்குடியிலிருந்த ஒரு பண்ணையார் தம் பெருங்குடும்பத்துடன் இராமேசுவரம் போய்ப் பல வண்டிகளில் திரும்பும்போது, வழிப்பறித்த கொள்ளைக் கூட்டத் தலைவன், அப் பண்ணையாரின் மனைவியார் ஈகையாட்டியராய் இருந்ததினால், அவர் இருந்த வண்டியை மட்டும் தானே காவல் செய்து கவராது விட்டு விட்டான் என்கிறார் பாவாணர். களவாடும் கள்வரின் இன்னொரு முகம்தான் இது.

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. அய் வகை நிலத்திலும் மனிதர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். அய் வகை நிலங்களும் நிறமும் குணமும் இயல்பும் வாகும் மாறிப் போய்,திரிந்து போய், சிதைந்து போய், அழிந்தும் போய்க் கிடக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன.

நால் நிலத்திலும் தொழிலும் இல்லை, வாழ்வும் இல்லை. ஆனாலும், தமிழ் நிலமெங்கும் பாலைதான். தமிழ் நிலமெங்கும் கள்வர் தான். தமிழ் நிலமெங்கும் களவாடல் தான். தமிழ் நிலமெங்கும் கன்னமிடுதல் தான்.

உள்ளூர்க் கள்வர்களோடு உலகக் கள்வர்களும் கைகோர்த்திருப்பதால், கன்னமிடுதல் என்பதையும் களவாடுதலையும் புதியதாய் ஆக்கியிருக்கலாம்.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

சம்சாரியாய் இருத்தல் கொடுங்கனவு மட்டுமல்ல, கொடிய தண்டனையும் கூட.

தேடல், வாசிப்பு, எழுத்து, நாடகம், கூட்டங்கள், கல்விப் பணி என அலைதலும் தொலைதலும் நிரம்பி வழியும் எனது வாழ்க்கைப் பயணிப்பில், நிலம் சார்ந்த வேளாண் தொழிலையும் மேற்கொண்டு வருவது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரியும். எனது எழுத்துகளில் நிலம் சார்ந்த தவிப்பு உயிர்ப்பாய் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய்க் கூட இருக்கலாம்.

பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காப் போகாம, வாத்தியாரு செத்துப் போனாருனு பல தடவப் பொய்கள் சொல்லி ஏமாத்துனதப் பாத்துப்புட்டு, படிப்புக்கே இவன் தோதுப்பட மாட்டான்னு நெனச்சி மனசுக்குள்ள அழுதுக்கிட்டாரு அப்பா.

நாம்பட்ட கருமாயத்த நீயும் படனுமாடான்னு சில நேரங்கள்ல கண்ணீர் பொங்கப் பேசுவார்.
என்னத்தச் சொல்ல,
ஓம்பொழப்பு மண்ணோட மண்ணா சீரழியப் போவுதுனு  அழுகாத கொறையாச் சொல்வாரு.

எஞ்சோட்டுப் பய புள்ளைகளெல்லாரும் பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிட்டும், மத்த நாள்ள கம்மாய்க்குள்ள நீச்சலடிச்சிக்கிட்டுமா இருந்த ஒரு மழக் காலத்துல தான் ,
எங் கையில ஒரு மம்பட்டியக் கொடுத்து, வாடா தம்பி பின்னாலன்னு பெரிய காணிக்குக் கூட்டிட்டுப் போனாரு.

உழுது தொளியாக் கெடந்த அந்த வயக்காட்டுச் சனி மூலயில எறங்கி நின்னுக்கிட்டு என்னயவும் எறங்கச் சொல்லி, புல்லும் புளிச்சியுமாக் கெடந்த வரப்புல அரிஞ்சி அரிஞ்சியே வெட்டி, மண்ண இழுத்துத் தொளிக்குள்ள போட்டுக்கிட்டே போனாரு.

நம்மள எதுக்குடா இங்க வரச் சொன்னாருனு தெகச்சி நிக்கும் போது தான் , நாஞ் சும்மா நிக்குறதப் பாத்துப் புட்டு, ங்கோத்தா மவனே வரப்ப வெட்டுடான்னு அமட்டுனாரு. இதென்ன பெருய மசுரான்னு நெனச்சி நானும் வரப்ப வெட்டலாம்னு மம்பட்டியப் புடிச்சி வெட்டுனேன். வடக்கத்தி வரப்ப முடிச்சுப்புட்டு மேக்கத்தி வரப்புல பாதி கூடத் தாண்ட முடியல. உள்ளங்கயி ரெண்டுலயும் கொப்புளம் கொப்புளமாய் நீர் கோத்துக்கிச்சு. எம் பக்கமா திரும்பிக் கூடப் பாக்காம அவரு பாட்டுக்கு வரப்ப வெட்டிக்கிட்டே போனாரு அப்பா.

இடுப்பெல்லாங் கடுக்குது , உள்ளங்கையி காந்துது.
தொட ரெண்டுமே கிடு கிடுன்னு நடுங்குது. அழுக அழுகயா முட்டிக்கிட்டு வருது. சார சாரயா வேத்து ஊத்துது. குனியவும் முடியல , நிமிரவும் முடியல. வயித்துப் பசியும் அல்லயப் புடுங்குது.
மேக்கத்தி வரப்பச் செதுக்கிட்டு தெக்கத்தி வரப்பு மூலயில நின்னுக்கிட்டு கொறய வெட்டிட்டு வரப் போறீயா என்னான்னு கோவமா கத்துனாரு அப்பா.

என்னால இதுக்கு மேல முடியலப்பான்னு அழுதே புட்டேன். இந்தக் காணிய முடிக்காம வெளியேறப்டாதுன்னு மூஞ்சில அடிச்சாப்ல சொல்லிப்புட்டாரு. வேற வழியே இல்லாம மம்பட்டியப் புடிச்சி வெட்டலாம்னு குனிஞ்சா வின்னுவின்னுன்னு இடுப்புத் தெறிக்குது. ரெண்டு எட்டு வரப்ப வெட்டிப் போக முடியல. உள்ளங்கயி கொப்பளம் ஒவ்வொன்னா ஒடஞ்சு போனதால அந்த எடமெல்லாம் காந்துது. யாராச்சும் நம்மளக் காப்பாத்த வர மாட்டாங்களான்னு தவிச்சுக்கிட்டு நிக்கும் போது தான் , நாலஞ்சு காணி தள்ளி அம்மா வாரதப் பாத்துப் புட்டேன்.

அப்புடியே மம்பட்டிய தொளிக்குள்ள போட்டுப் புட்டு அம்மாகிட்ட ஓடிப்போனேன். அம்மா என்னயக் காப்பாத்துமான்னு அம்மா காலப் புடிச்சிக்கிட்டு அழுது அழுது கெஞ்சினேன். எங் கய்யப் பாத்துப்புட்டு அம்மாவும் சன்ன அழுகயா அழுதுச்சு. பதறிப் போயி ரெண்டு பேருமா மாத்தி மாத்தி அழுததுல, கொண்டாந்த சோத்துச் சட்டியும் கொட்டிப் போச்சு.

இத எதயுமே கண்டுக்காத மாதிரியே கெழக்கத்தி வரப்புல முக்காவாசிய வெட்டிக்கிட்டு இருந்தாரு அப்பா. எங் கையப் புடிச்சிக்கிட்டு விங்கு விங்குன்னு அப்பாக்கிட்ட இழுத்து வந்துச்சு அம்மா. அப்பாவ ஏன்டான்னே அம்மா கேட்டது அன்னிக்குத்தான். ஏன்டா ஒனக்குப் புத்தி கித்திப் பேதலிச்சுப் போச்சா? பச்சப்புள்ளய இந்தப் பாடு படுத்திருக்க ? ஒத்தப் புள்ளயச் சாவடிச்சுப்புடுவ போலன்னு கோவந்தாவமா பேசுனா அம்மா.

பேசாமப் போயி கெணத்தடியல இருங்களா. இத அரிக்கிப்பிட்டு வாரேன்னு அப்பா சொன்னாலும்,அம்மா விடல. ஏளா பேசாம இருளான்னு அப்பா சொல்லவும், கெணத்தடிக் குடிசக்கிக் கூட்டிட்டுப் போனா அம்மா. அப்பா கொண்டாந்திருந்த தூக்கு வாளியில இருந்த நீச்சத் தண்ணிய எடுத்துக் குடிக்கச் சொல்லித் தவிப்பாத்தினாள்.

பெரிய காணி முழுசயும் வெட்டி முடிச்சுப்புட்டு தம்பாயமில்லாம நடந்து வந்து எங்கிட்ட வந்து ஒக்காந்தார் அப்பா.
உள்ளங்கை ரெண்டையும் விரிக்கச் சொல்லிப் பாத்தாரு. ரொம்ப வலிக்குதாப்பான்னு குரல் தழுதழுக்கக் கேட்டாரு. உள்ளங்கையெல்லாம் செவந்து போனதப் பாத்துப் புட்டு ரொம்பவே வேதனப்பட்டாரு.
பாத்துக்கோ தம்பி, நீ பள்ளிக் கோடம் போகலாட்டினா , ஒழுங்காப் படிக்காட்டினா காலம் பூராவும் இப்டித்தான் கருமாயப் படனும்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள ,
இல்லப்பா, நா பள்ளிக் கொடத்துக்குப் போறேனுப்பா, ஒழுங்காப் படிப்பேம்பான்னு சொல்லி முடிக்குங்குள்ள, என்ன அப்புடியே கட்டிப் புடிச்சி அழுதே விட்டார் அப்பா.
அப்பாவும் நானும் அழுகுறதப் பாத்துப் புட்டு அம்மாவும் சேந்தழுதுச்சு.

அன்றிலிருந்து படிப்பு வாசனை என்னைத் தொற்றிக் கொண்டாலும் , அப்பாவிடமிருந்து ஒட்டிக் கொண்ட தொளி வாசனையும் வியர்வை வாசனையும், அம்மாவிடமிருந்த உழைப்பு வாசனையும் எம்மிடமிருந்து விலகவுமில்லை. அதனால் தான் கல்விப் புலத்தோடு மாய்ந்து கொண்டிருந்தாலும், நிலத்தோடும் இன்னும் உழன்று கொண்டிருக்கிறேன்.
நிலத்தை விட்டு வெளியேற மனமுமில்லை. முடியவுமில்லை.

ஆயினும்,
கொடுங்கனவாய்
கொடிய தண்டனையாய்
ஆகிப் போய்க் கொண்டிருக்கிறது
சம்சாரிகளின் வாழ்வு.

எனது அப்பா காலத்திலிருந்தும்
எனது காலத்திலும்
கால வெள்ளாமையாக
நெல் பயிரிடுவதே
பெரு வழக்கம்
எங்களூர் வட்டாரத்தில்.

கிணற்றுப் பாசனம் இருந்தாலும் கூட, தென் மேற்குப் பருவமழையைப் பார்த்துத்தான் நாத்துப் பாவுதல் வழக்கம்.

எனக்குத் தெரிய ,
நாத்துப் பாவிய
முப்பது நாளைக்குள் நடுகையை முடித்துக் கொள்வது உண்டு.
எல்லாக் கால வெள்ளாமையும் அப்படித்தான்.

இந்த ஆண்டோ ,
தென் மேற்குப் பருவமழை முழுவதுமாக இல்லாமலே போயிற்று. வடகிழக்குப் பருவமழையும் வருமான்னே தெரியல. மடையாய்க் கிணற்றுக்குள் விழுந்த தண்ணீர் வரத்தும் காணாமல் போனது. கிணறு தோண்டிய காலத்திலிருந்து அடி மண்ணை நான் பார்த்ததே இல்லை. எமது மட்டுமல்ல, பக்கத்துல இருக்கிற எல்லாக் கிணற்றிலுமே தண்ணீர் வற்றிப் போனது. ஆறுகளும் கண்மாய் குளங்களும் என அத்தனை நீர் நிலைகளும் மணல் சுரண்டப்பட்டுக் கோரமாய்க் கிடக்கின்றன.

நாத்துப் பாவி
அய்ம்பதுக்கும் மேற்பட்ட நாட்களாகிப் போயின.

மழையுமில்லை.
உழவுமில்லை. தொளியுமில்லை. நடவுமில்லை.
நாத்தெல்லாம்
வயித்துப் புள்ளயா
பருஞ்சு நிக்குது.
அது சாவியாப் போகுதுன்னு மனசெல்லாம் சாகுது.

நிலமே பிழைப்பாய்க் கிடக்கும் சம்சாரிகள்
சாக மாட்டாமலும்
வாழமாட்டாமலும்
முகம் வாடிக் கிடக்கிறார்கள்.

முதல் முறையாய்
வரப்பு வெட்டுகையில் பொங்கிய அழுகை ,
இப்போது
சம்சாரியாய் இருக்கையில் முட்டி நிற்கிறது.

சம்சாரிகள்
தற்கொலை செய்து கொள்வது சொந்தக் காரணங்களால் மட்டுமல்ல,
நிலமும் பயிரும்
உயிரெனக் கருதிக் கொண்டிருப்பவை
கருகிக் கொண்டிருப்பதாலும் தான்.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

பிள்ளையார் சுழியும் எழுத்துப் பண்பாட்டு மரபும்.

எதையும் எழுதத் தொடங்கும் போது " உ" என இடுவது தமிழர்களின் பெரு வழக்காக இருந்து கொண்டிருக்கிறது.
தமிழில் உ என்பதைப் பிள்ளையார் சுழி எனப் பலரும் கருதுகிறார்கள். உண்மை அதுவல்ல.
தமிழ் மரபில் உ என்பது உலகம் என்பதன் சுருக்கக் குறியீடு. தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில் தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.
குறளும் கூட உலகு என்னும் சொல் முடிகிற முதல் குறளைக் கொண்டிருக்கிறது. கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களும் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என உலகம் என்னும் சொல்லை முதலாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம்.
உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் உ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர். அதாவது உலகைக் குறிக்க உ எனப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு. இதற்கும் பிள்ளையார் சுழி என்பதற்கும் தொடர்பு கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் , உ என்பது பிள்ளையார் சுழி அல்ல , உலகம் என்பதன் சுருக்கக் குறி ஆகும்.
இப்பண்பாட்டியல் செய்கையைப் பார்ப்பனியம் பிள்ளையார் சுழியாகப் பறைசாற்றியது. அதாவது , பிள்ளையாரை வணங்கிய பின்பு காரியம் செய் என்னும் பார்ப்பனிய வழிபாட்டு மரபோடு நமது தமிழர் எழுத்தியல் பண்பாட்டு மரபையும் இணைத்து விட்டார்கள்.
ஆகவே , உ என்பது சமயக் குறியோ பிள்ளையார் சுழியோ அல்ல, உலகம் என்பதன் சுருங்கிய குறி. இதுவே தமிழரின் எழுத்துப் பண்பாட்டியலின் குறி என்பதைப் பரவலாக்கம் செய்திட வேண்டும்.
( உ என்பதைக் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழக முகநூல் பக்கத்தில் பதிவான "பிள்ளையார் சுழி வந்த கதை" கட்டுரை குறித்த எமது பதிவு இது.)
பிற்சேர்க்கை .
‘பிள்ளையார் சுழி’ வந்த கதை !
பல்லவ நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவனுடைய படைத் தலைவன் (சேனாதிபதி) பரஞ்சோதி வாதாபி நகரை வென்று - அந்நாட்டரசன் புலிகேசியைக் கொன்று, நகரச்சொத்துக்களை கொள்ளையடித்து வந்தான். அவன் கொண்டு வந்த பொருள்களின்
மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது அதில் யானைத் தலையுடைய ஒரு பொம்மையும்இருந்ததைக் கண்டனர். அந்த பொம்மையை புலிகேசி அரண்மனையில் வேடிக்கைக்காக வைத்திருக்கிறான். அதைத்தான் பிள்ளையார் என்கின்றனர் - முழுமுதற் கடவுள்
என்கின்றனர். இப்போர் கி.பி.641இல் நடந்தது.
அப்பொழுது மூட்டை முடிச்சுகளில் வந்த பொருள்களில் பிள்ளையாரும் ஒன்று. அதன்படி பார்த்தால் பிள்ளைாயர் தமிய்நாட்டிற்கு வந்து 1375 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆகவே,
இடையில் வந்த பிள்ளையார் - முதல் கடவுளாக எப்படி ஆனார்? அதுதான் போகட்டும்; கல் உருவத்திற்கு சுழி ஏது? அதனால் என்ன நன்மை? ஒரு விஷயம் எழுதுகிறோம் என்றால்பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுத வேண்டுமா?
அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினார்கள். அறிவு வளராத காலம் - பேனா, பேப்பர் இல்லாத நேரம், ஆணியைக் கொண்டு ஓலையில் எழுதுவது கடினம். அதற்கு ஏற்றாற்போல் ஓலை பக்குவப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எழுத்தாணியும் கூர்மையுள்ளதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் சரியில்லை என்றால் எழுத முடியாது. பக்குவமற்ற ஓலை முறிந்துவிடும்.
கூர்மையில்லாத எழுத்தாணி ஓலையில் தகுந்தாற்போல் கீறலை விழச் செய்யாது. பொதுவாக எழுத்துக்களை எழுத வேண்டுமென்றால் நேர்க்கோடுகள் - வளைவுக் கோடுகள் சேர்ந்துதான் எழுத்து முழு வடிவம் பெறுகிறது. எனவே வளைவுக் கோடும் - நேர்க்கோடும் சரியாக எழுத ஓலையும் - எழுத்தாணியும்
தகுதியுள்ளதாக இருக்கிறதா? என்று முதலில் சோதிக்க வேண்டியது எழுத்தாளரின்கடமையன்றோ? அதன்படி ஓலையின் முகப்பில் ஓர் வளைவு கோடும் - ஓர் நேர்க்கோடும் இழுத்து, ‘உ’ என்ற வடிவத்தை உண்டாக்குகிறார். அது பிள்ளையார் சுழியும் அல்ல - பிள்ளையாரும் அல்ல. ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு எழுதிய காலத்தில் ‘உ’ என்ற தலைப்புக் குறி பயன்பட்டது. இப்பொழுதோ ஊற்றுப் பேனாவும், ‘பால் பாயின்ட்’ பேனாவும், பேப்பரும் வந்த பிறகும் ஏனோ அந்தச் சுழி!
- பெரியார் முழக்கம்.(01.09.2016.)


இதுவும் ஓர் ஆணவப் படுகொலை - கவிதை

இதுவும் ஓர்
ஆணவப் படுகொலை .

சாதியத்திற்கு
அதிகாரக் குணமும்,
அதிகாரத்திற்குச்
சாதிய முகமும்
இருப்பதென்பதும் ,
காலங்காலமாய்
இந்த இரண்டையும்
இணைத்திருப்பது
பூநூல் தானென்பதையும்
இந்தச் சாவும்
உலகுக்குக் காட்டியிருக்கிறது.

மறைந்திருந்து கொல்லும்
இராமன் காலத்து
மநு நீதியே,
கழுத்தறுத்தும்
அடைத்து வைத்தும்
கொன்று போட்டது.

மநுவின் சாயம்
பூசிக் கொண்ட நீதியால்
இன்றுமொரு படுகொலையில்
செத்துப் போனான்
ஒரு சாமானியன்.

ஒருவர்
பேசாவிட்டாலும்,
பேச விடாவிட்டாலும்,
பேசி விடுகிறது
அவரது சாவு
பல உண்மைகளை.

இதுவும் ஓர்
ஆணவப் படுகொலை தான்.
அதிகாரப் படுகொலையும் கூட.

அதிகாரத்தின் ஆணவத்தால்
கொல்லப்பட்டான் கோவலன்.
கள்வன் அவனில்லையென
வழக்குரைத்து,
அதிகாரத்தைச்
சாகடித்தாள் கண்ணகி.
கண்ணகியே கொல்லப்பட்ட
கொடு நிலத்தில் நாம்.

ஆணவப் படுகொலைகளுக்குக்
காரணங்கள் தேவையில்லை.
சாமானியராய் இருத்தலே
போதுமானது.

அந்தப் படுகளத்திற்கு
நாளை
நாமும்
அழைத்து வரப்படலாம்.

செத்ததற்குப் பிறகு
நீதி வழங்கப்படலாம்.

அது
அநீதியைக் காட்டிலும்
கோரமாய்க் கூட இருக்கலாம்.

நீரின்றி அமையாது தமிழகம் - கவிதை

நீரின்றி அமையாது தமிழகம்.

மேடாய் இருந்தாலென்ன,
குளமாய் இருந்தாலென்ன,
வேங்கடமாய் இருந்தாலென்ன,
குடகாய் இருந்தாலென்ன?

எல்லாமே இந்தியாவுக்குள்ள
இருக்குதுன்னு சொன்னதைப்
பச்சையாய் நம்பி,
விட்டுக் கொடுத்துக்
கெட்டுப் போனதற்கு
எல்லா
காலத்திற்குமான சான்று,
ஏழரைக் கோடித்
தமிழர்களைத் தவிர
யாராக இருக்க முடியும் ?

ஆற்றின் அளவறிந்து ஈக
என்பதெல்லாம் மறந்து
ஆறுகளையெல்லாம் ஈந்து
கையேந்தும் மடயர்களாய்
வாய்பொத்தி நிற்கிறோம்
இந்தியராய்.

பூநூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள் தான் அழிக்கின்றன.

நாம் எல்லோருமே
இந்தியர்கள் இல்லை
தமிழர்கள் தானென்று
கன்னடர்களும்
மலையாளிகளும்
தெலுங்கர்களும்
சொல்லிக் கொண்டேதான்
இருக்கிறார்கள்
பொட்டில் அறைந்தபடி.

முல்லைக்குத்
தேர் கொடுத்த
பாரிகள் நாம்.
மயிலுக்குப்
போர்வை கொடுத்த
பேகன்கள் நாம்.
நாமும்
கொடுத்தும் கெட்டும்
கொடை மடத்துச் சான்றாவோம்.

நரிமணம்
நெய்வேலி
கல்பாக்கம்
கூடங்குளம்
மிச்சமிருக்கும் மானம் என
அனைத்தும் கொடுத்து
அம்மணமாய்க் கத்துவோம்
நாம் இந்தியர் என்று.

நீரின்றி
அமையாது தமிழகம்.

நீரும் இல்லையென்றால்
இந்தியமும் அப்படித்தானா ?

படுகளம் - கவிதை

படுகளம்.

சாதியும் காவியும்
காக்கியும் நீதியும்
கூடவே பூநூலும் சேர்ந்து 
இன்னொரு படுகொலையை 
நிகழ்த்தியிருக்கிறது.

அதிகாரம் 
இந்த முறையும்
மனிதத்தைத்
தின்று விட்டது.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நீர்த்தீ அறம் விதைத்தவன்.


நீர்த் தடம் தேடி
நிலத்துள் பரவும்
வேர்களைச் சுமக்கும் 
பெருமரமாய்த்
தளிர்த்திருக்கலாம் நீ.
கிளைகளும் இலைகளும்
பூக்களும் பிஞ்சுமாய்
காயும் கனியுமாய்ப்
பல்கிப் பெருகி
தன்னல நிழல் போர்த்தி
வாழ்வைச்
சுவைத்திருக்கலாம் நீ.
சாதியும் உறவுகளும்
வரைந்த கோட்டுக்குள்
வசமாய் அகப்பட்டு
பெண்டு பிள்ளைகளோடு
பெருவாழ்வு
வாழ்ந்திருக்கலாம் நீ.
பொழுது சாய்ந்தால்
கொஞ்சம் அரட்டை
பொக்கைச் சவடால் எனப்
போதை கரையக் கரையக்
குடித்தும் படுத்தும்
கவலைகள் இன்றி
களித்து மகிழ்ந்திருக்கலாம் நீ.
அதிகாரக் குத்தகை
வகையறாக்களின்
உடன்பிறப்பாகவோ
இரத்தத்தின் இரத்தமாகவோ
பல்லக்குத் தூக்கியும்,
கூன் ஒடியப்
பணிந்து வணங்கியும்
பதவிகளும் பணங்காசும்
குவித்திருக்கலாம் நீ.
இந்தியம் பேச
நேர்ந்துவிட்ட இடதுகளின்
தோழனாய் இருந்தாலாவது,
பன்றிகளின்
தொழுவத்தில் நுழைந்து,
வாக்குப் பொறுக்கிப் புரட்சியில்
அலுங்காமல்
அய்க்கியமாகி இருக்கலாம் நீ.
இதுவும் இல்லையென்றால்,
உரிமைகள் இழந்து
கொடுமைகள் சகித்து
அடையாளம் மறந்து
மனிதம் பேசியே
வாழ்ந்து நொந்து
மெல்லச் செத்திருக்கலாம் நீ.
ஆனாலும்,
சிறுமை கண்டு பொங்கினாய்,
கொடுமை கண்டு கொதித்தாய்.
விடலையின் உணர்வெல்லாம்
தலைதூக்கும் வயதில்
இன மானத்தை
நீ நுகர்ந்தாய்.
சாதி சாதியாய்ச்
சகதியாய்க் கிடக்கும் நிலத்தில்
எளிதாய்ச் சாதி கடந்து
தமிழரெனும்
பேருரு காட்டினாய்.
வாழத் தெரியாத
வாழ முடியாத கோழை எனத்
தூற்றுவோர் முகத்தில்
எச்சிலுக்குப் பதிலாகச்
சாவைக் காரி உமிழ்ந்தாய்.
இனத்தின்
நீர்த் தாகம் தணியவே
நெருப்பை நீ அள்ளிக் குடித்தாய்.
நீருக்கு அழுத கண்ணீர்
நீரிலே கரையுமென்றா
நீரிலே
நெருப்பெழுதிப் போனாய் ?
உணர்வற்று
இருளில் தவிக்கும்
இனத்தின் மீது
வெளிச்சம் படரத்தானா
நெஞ்சில் மூண்ட நெருப்பை
உன்னுடலில்
ஏந்திக் கொண்டாய் ?
உசுப்பேத்தி
உணர்வேத்தி
தட்டேத்திப் பாடையிலேற்றியதாய்ச்
சொற்புணர்ச்சிப் பகர்வோரெல்லாம்
வாய்பொத்தி நிற்காமல்
பெருங்களம்
கண்டிருந்தால்,
நீ
செத்திருக்க மாட்டாய் தான்.
உனக்கென்று
உடலும் உயிரும்
உணர்வும் அறிவும்
ஆசையும் கனவும் மனமும்
இருக்கத்தானே செய்தன?
அத்தனையும்
துச்சமாய் எரித்து
நீர்த் தீ அறமாய்
தமிழ் நிலத்தில்
நீ படர்ந்தாய்.
சிறு நிலத்தில்
பெருங்கொலையே நடக்க
வேடிக்கை பார்த்த பேரினம்,
உன் உயிர்க்கொடையை
ஏந்தவா போகிறது ?
அப்துல் இரவூப்
முத்துக்குமார்
பள்ளபட்டி இரவி
செங்கொடி என
உயிர்த் தீ விதைத்து
அறம் வளர்ந்த மண்ணில்
நீயும்
நீர்த் தீ
ஆகிப் போனாய்.
தன்னை அழித்து
முளைக்கும் விதை போல்
உம்மைக் கொளுத்தி
அறத் தீ
முளைக்கச் செய்தாய்.
உனது சாவில்
இனத்தின் விழிப்பை
உயிர்ப்பித்திருக்கிறாய்.
ஆனாலும்
தம்பி விக்னேசு ,
தீ விழுங்கி
நீ செத்திருக்கக் கூடாது தான்.
உன்
தீச் சாவு தந்த
வலியைக் காட்டிலும்,
உன் சாவுமேல் எறிந்த
சொல்லடிகளே
எம்மைக்
காயப்படுத்துகின்றன.
கூடவே,
உனது சாவு மறக்கப்படவே
இராம்குமாரின் சாவையும்
தந்திருக்கிறது அதிகாரம் .
நீர் குடித்து
விதைகள் முளைக்கும்.
நெருப்பைக் குடித்து
அறமாய் நீ முளைத்தாய்.
உயிர்த் துளிக்காய்
துளி உயிரைத்
தீக்குத் தந்து
உயிர்ப்பாய் மடிந்த உமக்கு
எம் வீர வணக்கம்.

சனி, 10 செப்டம்பர், 2016

இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி .


இம்மானுவேல் சேகரனைப்
போலச் செய்திருந்த கபாலி .
திரை மொழியில் விரியும் சமூக ஆளுமை.


 அண்மையில் வெளியான கபாலி படம் குறித்து த.தருமராசு ( Dharmaraj Thamburaj )அவர்களின் முகநூல் பதிவுகள் குறித்துக் காட்டமான பதிவுகள் இரு தரப்பிலும் வெளிப்பட்டன. போதாக்குறைக்கு நானும் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.
கபாலி படம் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசவில்லை , தலித் அரசியலையும் பேசவில்லை. இரஞ்சித் இயக்கத்திலும் தாணு தயாரிப்பிலும் இரசினி நடித்த ஒரு வணிகப் படம் அவ்வளவே. ஆயினும் , தமிழ்த் திரையில் காட்டப்படாத காட்சிகளும் பேசப்படாத உரையாடல்களும் பதிவு செய்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதில் ஏன் இத்தனைத் தயக்கம் ? என்பதான பதிவை இட்டதோடு நான் நிறைவடைந்து விட்டேன்.

இப்போது தான், த.தருமராசு அவர்களின் "நான் ஏன் தலித்தும் அல்ல?" நூலைப் படித்து முடித்திருக்கிற நிலையில், கபாலி படம் குறித்து வேறு விதமான உரையாடல்கள் தோன்றுகின்றன. பொதுவெளியில் இவை விவாதிக்கப்பட வேண்டியவை என்றே கருதுகிறேன்.

கபாலி படம் வணிகப் படம் தான். ஆனால், அது கற்பனையான கதை மட்டும் அல்ல. சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதால் படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரனைக் குறித்த பதிவுதான் வேறு மாதிரியாய் வணிகப் படமாய்த் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 கபாலி படத்தின் கதைக் களம் மலேசியா என்பதற்குப் பதிலாகத் தமிழ் நாடாய் இருந்திருந்தால் கபாலி கதைப் பாத்திரம் யாராக அடையாளப்பட்டிருக்கும் ? சாதிய ஆணவத் திமிர்க் கதைப் பாத்திரங்களை எதிர்க்கும் கபாலி  பாத்திரமானது இமானுவேல் சேகரனைப் போலச் செய்தல் பாத்திரமாகத் தான் அமைந்திருக்கும்.

கல்வியின் வாசம் நுகர்ந்து, தான் சார்ந்த மக்கள் கூட்டத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதை வாழ்க்கை இலக்காக அமைத்துக் கொண்ட அல்லது அந்த நிலைக்குத் தள்ளப்பட்ட கபாலி பாத்திர உருவாக்கமும் உரையாடல்களும் இமானுவேல் சேகரனை உருவகப்படுத்தக்கூடியவை. இன்னும் சொல்லப்போனால் , நான் முன்னுக்கு வருவது தான் உனக்குப் பிரச்சினையின்னா உழைப்பேன்டா, கோட் சூட் போடுவேன்டா, கால் மேல் கால் போடுவேன்டா என்பது போன்ற உரையாடலை இந்தச் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டிய மனிதப் பனுவலாய் வரலாற்றில் பதிவாகி இருப்பது இம்மானுவேல் சேகரன் தான்.

தமிழ்நாட்டின் பதற்ற நிலமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் முகவை மாவட்டம், சாதிய மேலாதிக்கச் சீண்டல்களைத் தொடுப்பதும், அதே சாதிய மேலாதிக்கச் சீண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்து களம் காண்பதுவுமாகக் கலகம் பூசிக் கிடந்தது. இந்நிலையில், உயர்த்திக் கொண்ட சாதிய மேலாதிக்கத்தை அசைத்தும் எதிர்த்தும் பார்த்த ஒரு நிகழ்வு தமிழ் மண்ணில் நடந்திருக்கிறது.

எடுப்பு வேலைகளும் ஏவல் வேலைகளும் செய்ய வேண்டும், காடு கழனிகளில் பண்ணை வேலை செய்திட வேண்டும், அந்த வட்டாரத்தில் ஆளுமை செய்திடத் துடித்த ஒரு குறிப்பான சாதியினருக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்பவை போன்ற சாதிய ஒடுக்குமுறை நினைப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் எதிராக இம்மானுவேல் சேகரன் தொடர்ச்சியாகக் களப்பணி ஆற்றி இருக்கிறார். அதாவது, சாதிய மேலாண்மைக்கு முன்பாக இருந்த ஒரு பெரும் சவாலாகவே இருந்திருக்கிறார்.

இரு தரப்பின் முற்றிய முரண்பாடு ஒரு கட்டத்தில் வெடித்திருக்கிறது. 1957 இல் முதுகுளத்தூரில் நடைபெற்ற அமைதிக்கான பல சமூகப் பேச்சுவார்த்தை நிகழ்விற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இம்மானுவேல் சேகரன் அழைக்கப்பட்டிருக்கிறார். பேச்சுவார்த்தை அரங்கினுள் இன்னொரு தரப்பினரின் ஆளுமை உள்நுழைந்த போது, அங்கிருந்த எல்லோருமே எழுந்து நின்று மரியாதை செய்ததாகவும், இம்மானுவேல் சேகரன் மட்டும் எழுந்திருக்காமல் நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்ததோடு மட்டுமல்லாமல், இன்னொரு தரப்பினரின் ஆளுமைக்கு முன்பாகவே கால் மேல் கால் போட்டும் உட்கார்ந்திருக்கிறார். அதோடு, அங்கேயே அவர் முன்பே புகையும் பிடித்திருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின்னாலேதான் சாதிய ஆதிக்கத்தினரால் பரமக்குடியில்  படுகொலை செய்யப்படுகிறார் என்றே இம்மானுவேல் சேகரனைக் குறித்த பதிவுகள் தெரிவிக்கின்றன.
இம்மானுவேல் சேகரனின் இந்தச் செய்கையைப் போலச் செய்தலாகவும் திரும்பச் செய்தலாகவும் தான் இந்தச் சமூகம் பார்த்தது.

சாதியம் அப்பிக்கிடந்த களத்தில் நிகழ்ந்த இம்மானுவேல் சேகரன் எனும் வரலாற்றுப் பாத்திரத்தைத் தான் கபாலியாகப் போலச் செய்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.

இம்மானுவேல் சேகரன் குறித்த அண்மைக்கால நிகழ்வுகள் திருப்பிச் செய்யும் நிகழ்வாகச் சாதியச் சமூகம் புரிந்து வைத்திருப்பதனால் தான் இருதரப்பினரிடையே மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் தான், இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்த கபாலியின் களம் மலேசியாவாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவராக(கேங் லீடராக) இருந்த இம்மானுவேல் சேகரனைத் தான் மலேசியத் தோட்டத் தொழிலாளர் தலைவராக (கேங் லீடராக)ப் போலச் செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட போலச் செய்தல் தான். ஆனால், இதைக் குறித்துப் பேச மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

கபாலி படத்திற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு உரையாடல்கள் இயக்குநர் இரஞ்சித்தை மய்யமாகவே வைத்தே நகர்ந்தன. படைப்பின் வழியிலான போலச் செய்தலாய் வெளி வந்த கபாலி, இம்மானுவேல் சேகரனை நினைவுபடுத்தும் திரை மொழி என்பதான உரையாடல் வெளிப்பட்டிருந்தால் இரஞ்சித், இரசினி ஆதரவாளர்களால் மட்டுமல்ல, இன்னொரு தரப்பினராலும் கூட இன்னும் அதிகமாகவே தூக்கிக் கொண்டாடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதே வேளையில், மிகக் கடுமையான எதிர்ப்பையும் கபாலி சந்தித்திருக்கும். ஏனெனில், இம்மானுவேல் சேகரன் எனும் குறியீடு சாதியத்திற்கு எதிரான திருப்பிச் செய்தல் குறியீடாய் இன்னும் இருப்பதனால், இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலியும் திருப்பிச் செய்த கலைப் படைப்பாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். அதனால் தான், கபாலி -போலச் செய்தல் படம் தான் என்பதையே இரஞ்சித்தும் அவரது ஆதரவாளர்களும் நிறுவ முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பது அதன் வணிகத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

 பொதுவாகவே, போலச் செய்தல் நிகழ்வும் படைப்பும் சாதியச் சமூகத்தின் எதிர்ப்பைப் பெறுவதில்லை. அதேவேளையில், திருப்பிச் செய்யும் நிகழ்வும் படைப்பும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்பவை என்பதைச் சமூக ஆய்வுகள் சுட்டுகின்றன. இந்தப் பின்னணியில் கபாலி படம் குறித்து உரையாடல்கள் தொடர வேண்டும்.

போலச் செய்தல் - திரும்பச் செய்தல் குறித்து த.தருமராசு (நூலாசிரியர் தம்மை டி. தருமராஜ் என்றே பதிவு செய்கிறார்)அவர்களின் நான் ஏன் தலித்தும் அல்ல ? எனும் நூலில் மேலதிகத் தரவுகளும் உரையாடல்களும் உள்ளன.

மாறுதிணை - கவிதை



பெரு மரம்
துப்பிய எச்சிலாய்
நிழலடியில்
முளைத்துக் கிடந்தன
செடிகள்.

கிளைகளில் துளிர்த்து
மண்ணில் இறங்கிய
விழுதுகளைப்
பற்றிப் படர்ந்தன
கொடிகள்.

உதிர்ந்த சருகுகளை
உரமாக்கித் தின்று
முனை காட்டின
புற்கள்.

இதழ் விரித்த
பூக்களின்
மகரந்தத் தடம் பிடித்து
வந்து சேர்ந்தன
பூச்சிகளும் வண்டுகளும் .

முற்றிய
கிளைச் செதில்களுக்குள்
வேர் விட்டு
கீழ் மண் பார்த்துத்
தாவியாடின
தொத்துக் கொடிகள்.

கிளை விரித்த
இடுக்குகளில்
கூடுகள் வேய்ந்தன
பறவைகள்.

நம்மின்
காலடி படாத
நிலமெங்கும்
பச்சைப் பசும் பசேல்.

மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.

எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.

அறம் மறந்த கல்வி முறை

அறம் மறந்த கல்வி முறையும்
மனம் பிறழும்
இளம் தலைமுறையும்.

அண்மைக்கால  இளந்தலைமுறையினரின் வாழ்வுப் போக்குகள் கவலை அளிப்பதாக உள்ளன. மேட்டிமை மற்றும் நடுத்தர வர்க்க வாழ் நிலைப்பட்ட அனைத்துத் தரப்பினரின் நுகர்வுவெறிப் பண்பாடே இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பண்பாட்டு வெளியாகக் கட்டமைக்கப்படுகிறது. ஆங்கில மேலாதிக்க மோகமும் நுகர்வுவெறிப் பண்பாடும் எளிய மக்களிடம் கூட திணிக்கப்படுவதை அண்மைக்காலச் சமூக நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
கல்வி தான் ஒரு சமூகத்தை மாற்றியமைக்கும் சக்தியாய்ப் பார்க்கப்படுகிறது. இந்தியச் சூழலில் கல்வி வணிகமயமாகிப் போனது. உலக வல்லாதிக்க நிறுவனங்களுக்குச் சேவகம் செய்யும் அடிமை விசுவாசிகளை உற்பத்தி செய்யும் கூடாரங்களாய் இன்றைய கல்வி நிறுவனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இருப்பதை மனப்பாடம் செய், கேள்விகள் கேட்காதே, தானாய்ச் சிந்திக்காதே, மதிப்பெண் மட்டுமே இலக்கு, பணம் மட்டுமே வாழ்க்கை என்கிற குறுகிய மனவெளியை இன்றைய கல்வி முறை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
கல்வி என்பது வெறும் அறிவோடு மட்டும் தொடர்புடையது அல்ல. சமூக வெளியின் பொது அறத்தையும், வாழ்க்கையின் தனி மனிதருக்கான அறத்தையும் கல்வி தான் தந்து கொண்டிருந்தது. மனித வாழ்வின் இலக்கு இன்பம் தான். அந்த இன்பம் பொருள் சார்ந்ததுதான். ஆயின், அந்த இன்பமும் பொருளும் அறம்சார்ந்ததாய் இருத்தல் வேண்டும். அதைத்தான் தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. உலகின் பல மொழிகளிலும் காணப்படுகிற இலக்கியங்கள் அந்தந்த நிலம் சார்ந்த மக்கள் சார்ந்த அறத்தையே பேசுகின்றன.
அறிவு வளத்தையும் அறவாழ்வையும் ஒருங்கே செதுக்கும் கல்வி முறையே இந்தச் சமூகத்தை வளப்படுத்தும். ஆனால் , இங்குள்ள கல்விச் சூழலோ அறிவாளிகளைத் தான் உற்பத்தி செய்கின்றன. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம்சார் வகுப்புகளும் பாடத்திட்டங்களும் இப்போது இல்லை. அறம்சார் வாழ்வியலை எடுத்துரைக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும் முதன்மை இல்லை. அவை வெறும் மொழிப் பாடங்களாக மட்டுமே சுருக்கப்பட்டு விட்டன. பள்ளிக்கல்வியில் மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே போதுமானது , மற்ற பாடங்களில் தான் உயர் மதிப்பெண் தேவை என்ற நிலையில் , உயர் கல்வி பயில்வதற்கு மொழிப் பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலை , உயர் கல்விப் பாடத்திட்டங்களில் மொழிப் பாடங்களே இல்லாத ஒரு நிலை என அறத்தை எவ்வளவு தூரம் ஒதுக்கி வைக்க முடியுமோ அந்தளவுக்கு ஒதுக்கி வைத்த பின்னால் , அறத்தை எங்கிருந்து தான் கற்றுக் கொள்வது?
அறத்தைப் புறந்தள்ளுகிற இன்றைய கல்வி முறையில் பயில்கிற இளந்தலைமுறை சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் பிறழக் காரணமாய் இருப்பது இன்றையக் கல்வி முறை தரும் பாடம் தான் காரணம்.
நட்பையும் காதலையும் வாழ்வையும் உறவுகளையும் சமூகத்தையும் ஒழுக்கத்தையும்  தன்னம்பிக்கையையும் தருகிற அறம்சார் கல்வியைப் பெறுவதற்கான சூழல் இல்லாமையே பெருங்குற்றங்கள், சீரழிவுகள், தற்கொலைகள், பாலியல் வன்முறைகள், சாதியக் கொடுமைகள், மனிதப் படுகொலைகள் நிகழக் காரணமாய் இருக்கின்றது.
மனதைப் பக்குவப்படுத்தாத கல்வி முறைதான் இளந்தலைமுறை தடம் பிறழக் காரணம். இது மாற்றப்படாத வரை  சமூகக் குற்றவாளிகள் உருவாகிக் கொண்டே தான் வருவார்கள் .

சனி, 20 ஆகஸ்ட், 2016

முரண் தொடைச் செய்யுள் - கவிதை

முரண் தொடைச் செய்யுள்.

சில்லரைக் குவியத்தின்
உச்சியில் நின்று
எகத்தாளம் விதைக்கிறாய்
உரக்கக் கூவியபடி.

ஆற்றின் ஓட்டத்தில்
வளையும் நாணல்
வேர்களை அள்ளித்
தானம் கொடுத்து
வாழ்வதில்லை.

வளையும் குணம்
அதன் இரத்தல் என்று
ஓங்கிய பனையின்
ஓலைக் கிளையிலிருந்தபடி ஒய்யாரம் பாடுகிறாய்.

வெயிலுக்குள் வராத
உன் வெளுப்பு மேனியில் வியர்வை வழியும் துளைகளில் கொப்பளங்கள் பூத்திட்டால்
ஏது செய்வாய்?

ஓடி ஓடி
கோடிகள் சேர்த்தாலும்
காலம் எழுதிச் செல்லும் கவிதைகளில்
நான் மட்டுமல்ல
நீயும் கூட
எச்சம்தான்.

இந்நேரம்
புலம்பித் தவிப்பாய்
எனை நினைத்து.

நான் நிம்மதியாய்
உறங்குவது தெரியாமலே.

நாடு போற்றுதும்? - கவிதை

"நாடு போற்றுதும்?"

அடுப்புத் தீயை
அணைத்தன
எந்திர பூதங்கள்.

பசித் தீ மூட்டி
கிடப்பில் தறிகள்.

சோறு கொடுத்த
நிலங்களில் முளைக்கும்
கோபுரங்கள்.

விளை நிலத்து மரங்களில்
தூக்கில் தொங்கும்
சம்சாரிகள்.

காசாய்ப் போயின கல்வி
கனவாய்ப் போனது வாழ்க்கை.

அடகுக் கடைகளில்
வட்டியாய்க் கிடப்பன
பண்டங்கள் மட்டுமல்ல
மானமும் தான்.

கோவணம் அவிழ்த்து
சுதேசிக் கொடி ஏற்றி
கஞ்சித்தொட்டி திற.

எங்கள் நாடு
இனிய நாடு.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பட்ட மரம் - கவிதை

இரு மன
அழுகை ஓலங்களின் அதிர்வுகளில்
நால் விழிகள்
குளம்.
வேகம் சுருக்கி
மெல்லத் தவழும் காற்றைப்
பகையெனப் பதைபதைத்து
சுட்டியில் தவிக்கும்
சுடராய் நான்.
நீ
பிடித்துத் தந்த
நம்பிக்கை ஒளிக்கீற்றைத்
தோள் சேர்த்து,
என்னில் விரிந்த
கிளைகளை முறித்துத்
தனியே பயணம்.
தீர்ந்து போனது
வாழ்க்கை.

செவ்வாய், 19 ஜூலை, 2016

புறத்திணை - கவிதை



தூசுகள்
மண்டிய நகரங்களில்
அப்பிக் கிடக்கின்றன
வன்மங்கள்.

அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
முகமூடிகள் போர்த்திய
உடல்கள்.

உலர்ந்த எச்சிலை
உள்ளிழுத்து முழுங்கி
சூடேறிய மூச்சுக்காற்றை
வெளிவிட்டு மென்று
தொலை வானத்தை
வெறித்துப் பார்க்கின்றன
ஒளி மங்கிய கண்கள்.

தெருக்களின் மூலையில்
ஒடுங்கிக் கிடக்கின்றன
தோல் வற்றிய முகங்கள்.

கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ் வெளியாய்ச்
சுருங்கிப் போனது
உலகம்.

எல்லா நாளும்
பொழுதுகள் விடிகின்றன.
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.

மனிதர்கள் நோக
சில மனிதர்கள் வாழும்
இவ்வுலகம்
இருந்தாலென்ன
அழிந்தாலென்ன ?

செவ்வாய், 12 ஜூலை, 2016

கையறு நிலையும் கவிதை அஞ்சலியும்.

கையறு நிலையும்
கவிதை அஞ்சலியும்.
ஆனந்த ராசுக்காக....


நட்புகளின் வலிகளை
வழியவும்
வாரிக் கொண்டும்
வாஞ்சையுடனும்
சுமந்து திரிந்தாய்.

துளிர்க்க மனமில்லாது
முடங்கிக் கிடந்த
கொடிகள் எல்லாம்
சிம்புகள் வெடித்துப் படர்ந்திட
பற்றுக் கோடாய்த்
தோள் கொடுத்தாய்
பட்ட கம்பாய்
நீயிருந்தே.

உறவிலும் நட்பிலும்
முகங்கள் சிரித்திட
அகம் காயப்படக் காயப்பட
இழுத்துச் சென்றாய் வாழ்வை
யாருக்கும் தெரியாமலே.

அழுதவர்க்கெல்லாம்
அடைக்கலம் தந்து
வழிந்த கண்ணீரை
நீ துடைத்தாய்.
அரத்தம் கசிய
வலித்திட்ட கொடுவாழ்வை
உனக்குள்ளே
புதைத்துக் கொண்டாய்.

தொலைவிலிருந்த
நட்பையெல்லாம்
மனக் கூட்டில் அடை காத்தாய்.
குடும்ப வெளியில்
நீ பறக்கச்
சிறகின்றித் தவித்தாய்.

நட்பில் எல்லாம்
உயிரள்ளித் தெளித்தாய்.
இல்வாழ்விலோ
உயிர்ப்பின்றித் தவித்தாய்.

இடுக்கில் முளைத்த ஆலம்
பனையைச் சிதைத்தது போல்
புகுந்தகத்தின்
இரண்டகத்தால்
சிறுகச் சிறுகச் செத்தாய்.

உறவுகள் தந்த
ஏய்ப்புகளும் ஏமாற்றங்களும்
துரத்தத் துரத்த
ஓடியலைந்தாய்
ஒளிவிடம் தேடி.

எம்மில் எல்லாம்
நீ முளைத்திருக்க,
உன்னில் வாடிப் போனதே
வாழ்க்கை.

வாழுதல்
வாழ்க்கைதான்.
வாழ்வின்
கொடிய முகத்தோடும்
உறவாடிக் கிடந்தாய்.

வாழுதல் கொடிது.
இனி, வாழுதலும் கொடிது
என்றான பின்னே,
இனி
வாழவும் என்ன இருப்பதாய்
உன்னை நீயே கரைத்திட
எண்ணித் துணிந்தாய்.

காலம்
உன்னைத் தின்றது.
மீதியைத்
தின்னக் கொடுத்தாய்
காலனிடம்.

சிறைக்குளத்துள்
அகப்பட்ட சிறுமீனாய்ச்
சிக்கிக் கொண்டாய்
காலனிடம்.

சிக்கல் அருகிலிருக்கும்
சிறைக்குளம்
ஆனந்த ராசுவே!
பெயரளவுக்குக் கூட
ஆனந்தம்
நிலைக்காமல் போனதுவே.

வாழவும்
அதில் அழவும்
வலிகளையே சுமக்கவுமா
வாழ்க்கை?

வாழ்வைக் கசக்கி எறிந்து
காலனோடு சேர்ந்து
காலத்தில் கரைந்து விட்டாய்.

போய் வா
நட்பின் உருவே
போய் வா .
இடுகாட்டின் மண்ணுக்குள்
படுத்துறங்கு அமைதியாக.

ஆனாலும் நண்பனே ,
காலன் உன்னை
இப்படிக் கொன்றிருக்கக் கூடாது.

இந்த வாழ்வைத்
தொலைக்கத் தானா
இத்தனைத் தொலைவு
சென்றாய்.

பூ மாலை உனக்கிட்டு
காலடியில் நான் அழுது
என் கண்ணீரும்
உன்னோடு குழியில் விழ
கொடுத்து வைக்காத
இந்தக் காலமும்
கொடியது தான்.

என்னில் வழியும் தமிழை
சுவைத்து மகிழ்ந்த நட்பே!
எந் தமிழில்
ஒப்பாரி பாடுகிறேன்.
கேட்கத்தான்
நீ இல்லையே.

மண்ணில் புதைந்து
நினைவில் வாழ்வாய் நட்பே!
எம் நினைவில் வாழ்வாய்.
______
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றுப் புலத்தில் முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டவரும், இராமநாதபுரம், கீழக்கரை வழியிலிருக்கும் சிக்கல் ஊரை ஒட்டிய சிறைக்குளம் எனும் ஊரைச் சார்ந்தவருமான திருமிகு ஆனந்தராசு அவர்கள் காலமானார். எனது வாழ்க்கையில் ஆகச் சிறந்த நண்பராகத் திகழ்ந்தவர். அவரின் இறப்பு என்னை மனதளவில் பாதித்திருக்கிறது. இறந்த நாள் எதுவென்று கூடத் தெரியாமல் யாருமற்றவரைப்  போல் இறந்து போனார். அவரைப் போன்ற நட்பை எவரிடத்தும் பார்த்ததில்லை, இனி பார்க்கப் போவதுமில்லை. அண்ணனுமாய் நண்பனுமாய் எனக்குள் ஊடுறுவி நிற்கும் ஆனந்தராசுவிற்கு எனது கண்ணீரும் கவிதையும் அஞ்சலி ஆகட்டும் .

ஞாயிறு, 10 ஜூலை, 2016

கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்.




கீழடி:
மடைச்சி வாழ்ந்த
தொல் நிலத்தில்
எம் காலடித் தடங்கள்.

மதுரை என்னும் சொல் கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது.
மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கீழடி எனும்  சிற்றூரில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்ட எல்கை, மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவிலிருக்கும் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் 6 ஆம் அகழாய்வுப் பிரிவினர் முதல் கட்ட அகழாய் வைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையத் தொல் நிலத்து அடையாளப் பதிவுகளைக் கண்ணுறும் நோக்கில் மக்கள் தமிழ் ஆய்வரண் சார்பாகப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியத் திருவாளர்கள் அன்பு தவமணி, முத்துக்கிருசுணன், இரவிச்சந்திரன் ஆகியோருடன் நானும் கடந்த 25.6.2016 இல் பெருங் களம் நோக்கிப் பயணமானோம்.
மதுரையை அடுத்த சிலைமான், அதையடுத்த பசியாபுரம் சிற்றூர்களைத் தாண்டியே கீழடி எனும் சிற்றூர். இவ்வூரின் பள்ளிவாசலுக்கு எதிரே போகும் வண்டிப் பாதை பரந்திருக்கும் தென்னந்தோப்புக்குள் நுழைகிறது. வண்டிப் பாதையின் தடம் மட்டுமல்லாமல் தோப்பின் வாய்க்கால் வரப்புகள் புழுதிகள் யாவற்றிலுமே கூட பழங்காலப் பானையோடு சில்லுகள் தான் முகம் காட்டிக் கிடந்தன.
பசியாபுரம், கீழடி, கொந்தகை, பாட்டம் போன்ற சிற்றூர்களைச் சேர்ந்த 110 பேருக்குச் சொந்தமான 81 ஏக்கர் நிலப்பரப்பில் வைகையின் ஆற்றுப்படுகையில் தான் அத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது. தோப்பில் உள்ள மரங்களே நூறாண்டுக்கும் மேலான பழமையைச் சொல்லியபடி அசைந்து கொண்டிருகின்றன.
தோப்பில் உள்ள எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல் ஆங்காங்கே சதுரக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட எல்லாச் சதுரக் குழிகளிலும் பல்வேறு வகையிலான தொல்லியல் தடயங்கள் புதைந்திருப்பது வெளித் தெரிகின்றன.
சாம்பல் நிறத்திலான மண்ணுக்கடியில் பெருநகரமே புதைந்திருப்பதற்கான தடயங்கள் வெளிப்பட்டுள்ளன. சுடுமண் கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள் எனப் புதையுண்டிருந்த பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்கள் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. பண்பட்ட வாழ்வும் வரலாறும் வாழ்நிலமும் மண்ணில் புதைந்து கிடப்பதைக் காணுகையில் பெரு வியப்பும் பெருமிதமும் பெருஞ்சோகமும் ஒன்று கூடிக் கவ்விக் கொண்டன.
வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாட்டு மலையிலிருந்து முடிவுறும் இராம நாதபுரம் வரையிலும் ஆற்றின் இருபுறங்களிலும் 280க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள், பழங்கால வாழிடத் தொல்லியல் நிலப்பரப்பாகக் கீழடி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இப்போதைய நகர வளர்ச்சியின் நாகரிக அடையாளங்கள் எனச் சொல்லப்படுகின்றவை எல்லாம், கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்களில் செழித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அவற்றுள், மடைச்சி என்னும் பெயர் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட மண் கலயமும் ஒன்றாகும். இப்பெயர் வேளாண் குடிகளோடு தொடர்புடையது. பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்று வரும் நிலப்பகுதியை அவ்வட்டாரப் பெரியவர்கள் பள்ளுச் சந்தைத் திடல் என்றே அழைக்கின்றனர்.  பள்ளு என்பதும் வேளாண் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்திருக்கிறது . அகழாய்வில் புதைபொருட்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவ்வட்டாரப் பெரியவர்களிடமும் வாய்மொழி வழக்காற்றுத் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன.
பள்ளுச் சந்தைத் திடல் இருக்கும் இப்பகுதியில் மிகப் பழமையான ஊர் ஒன்று இருந்ததாகவும், பழங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்த போது பகாசுரன் என்பவரின் இடையூறுகள் இருந்ததினால் குந்திதேவியின் வழிகாட்டல் படி பக்கத்து ஊருக்குப் புலம் பெயர்ந்து குடியேறியதாகவும், குந்தவை தேவியின் நினைவாகவே அவ்வூர் அழைக்கப்பட்டு இப்போது கொந்தகை என மருவி அழைக்கப்படுவதாகவும், கொந்தகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏகத்துக்கும் தாழிப் பானைகள் புதைந்து கிடப்பதாகவும் வாய்மொழித் தரவை வழங்கினார் அப்பகுதிப் பெரியவர் திரு ஆண்டி அவர்கள்.
அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் தரவுகளின்படி, முற்காலப் பாண்டியர்களின் தலைநகரான மணலூர் எனும் நகரமே கீழடியில் புதைந்திருப்பதாகக் கருத முடிகிறது. ஊர் என்பது மருத நிலத்துப் பேரூரைக் குறிக்கும் சொல்லாகும். மணலூரும் மருத நிலத்துப் பேரூராய் இருந்திருக்க வாய்ப்புண்டு.  கீழடியைச் சுற்றியுள்ள பசியாபுரம், கொந்தகை, பாட்டம், விரகனூர், சிலைமான், அய்ராவதநல்லூர் போன்ற ஊர்களுக்கும் கீழடிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருக்க அதிகம் வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பகுதி வேளாண் குடிகளிடம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிற வாய்மொழி வழக்காறுகள், வழிபாட்டு மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான  சடங்குகள், பண்பாட்டு வெளிப்பாடுகள், தொன்ம அடையாளங்கள் போன்றவற்றையும் கீழடி அகழாய்வுகளோடு ஒப்பு நோக்கியும் இணைவித்தும் பார்க்கும் போது தான் வரலாறு முழுமை பெறுவதற்கு வாய்ப்புண்டு. இத்ததைய வரலாற்று மீட்டுருவாக்கப் பணியில் தொல்லியல் துறையினருக்கு மட்டும் பங்கில்லை. நம் அனைவரின் சமூகக் கடமையும் கூட.
கீழடி போன்றே வெகு காலத்திற்கு முன்பாக ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய தடயங்கள் நிறைந்த அந்நிலத்து அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவேயில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையும் அது போல் முடங்கிப் போகவும் கூடாது. கீழடியில் அகழாய்வு செய்து கொணரும் முதன்மையான பொருட்கள் யாவற்றையும் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் வைத்திருக்கும் போது தான் சிதையாமலும் திருடப்படாமலும் திருத்தப்படாமலும் இருப்பதற்கு ஓரளவு உறுதி சொல்ல முடியும்.
அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வரலாற்றைப் பாதுகாப்பதும், மீட்டமைப்பதும், நேர் செய்வதும் நம் எல்லோரின் கடமை.
ஒரு காலம்
ஒரு வாழ்க்கை
ஓர் இனம்
ஒரு நிலத்துக்குக்
கீழே
அடியிலே
புதைந்து இருப்பதனால் தான் கீழடி என்னும் பெயர் அந்நிலத்திற்கு வழங்கி இருக்கலாம்.
கீழடி என்னும் ஊர்ப்பெயர்ச் சொல்தான் அதன் வரலாற்றுத் தடயம் வெளித்தெரியக் காரணமாய் இருந்திருக்க வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே தான்.

கீழடி அகழாய்வுக் களத்தில் தொல்லியல் சான்றுகள் குறித்து விளக்கப்படுத்திய அகழாய்வு உதவித் தகைமையர் திரு வசந்த் அவர்களுக்கு நன்றி.

வியாழன், 19 மே, 2016

‘மொழியில் நிமிரும் வரலாறு’ நூலுக்கான அணிந்துரை

மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’ நூலுக்கான அணிந்துரை:
பா.ச. அரிபாபு

தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களும் மதிப்பீடுகளும் எக்காலத்தின் முன்னும் நிலைத்து நிற்கக் கூடியவைதான். எனினும், நவீன காலச் சமூக வெளியில் தமிழ் நிலத்தில் நடந்தேறிய பல்வேறு மாற்றங்களில் மொழி, நிலம், விவசாயம், உணவு, கல்வி, சிந்தனைப்போக்கு போன்றவை உருமாறத் தொடங்கி விட்டன.  இன்று தமிழ்ச் சமூகம் வந்தடைந்திருக்கும் காலத்தையும் போக்கையும் மதிப்பிட்டால், அதாவது தனி மனித நடத்தை தொடங்கி சமூக அரசியல் செயல்பாடுகளையும் சேர்த்துப் பார்த்தால் ஏமாற்றமும் வெறுமையும்தான் மிஞ்சக்கூடும்.
எவற்றையெல்லாம் நவீன காலத்தில் பேச எத்தனிக்கிறோமோ அவையெல்லாம் அழித்தொழிக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதும் இக்காலத்தில்தான் நடக்கின்றன.  கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் முன்வைத்து இதுவரையிலும் உருவாகியுள்ள கலை, இலக்கியம், சமூக அரசியல் சார்ந்த அத்தனை நடவடிக்கைகளையும் மாற்றுத் தளத்தில் வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.  அவ்வகையில் ‘ஏர்’ மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’ பேசுவதற்குத் தயாராகிறது.
இப்பிரதி 12 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளிப்பட்டாலும், உள்வாங்கியுள்ள பாடுபொருள்கள் மிகக் கூர்மையானவை.  மிகக் கராரான விசயங்களைக் கொண்டவர்களால்தான் இம்மாதிரியான விசயங்களை உண்மையிலேயே எழுத முடியும்.  மகாராசனின் இப்பிரதிக்குள் பொதிந்திருப்பது நிலம், மனிதர்கள், கலை, இலக்கியம், தமிழ்ச் சமூகத்தின் தற்காலப் போக்குகள் குறித்தான மதிப்பீடுகளே.  இதனை இந்நூலை வாசிக்கத் தயாராகும் அனைவரும் உணர்ந்துகொள்ள இயலும்.
பெண்ணைக் கொண்டாடுகிற தமிழ்ச் சமூகம் பெண்ணுக்கான வரையறைகளை உற்பத்தி செய்து உறுதி செய்வதிலிருந்தே தொடங்குகிறது  அதனுடைய உள் அரசியல். என்றுமே கலை இலக்கியப் பிரதிகளில் பெண்ணின் இருப்பு தடை செய்யப்பட்டே வந்துள்ளது.  ஆனால், ஆண்களின் பாடுபொருளாக அவர்கள் வெவ்வேறு விதங்களில் சமைக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆனாலும் அவர்களின் மன உலகங்களின் நுண்ணிய அடுக்குகள் பதிவு செய்யப்படாமல் தனித்தே கிடக்கின்றன.  இதனை, தொடர்ந்து எழுதப்பட்டுள்ள தமிழ் இலக்கிய வடிவப் போக்கை மதிப்பிடும் எந்தச் சாதாரண வாசகரும் மிக எளிதாக அவதானிக்க இயலும்.
நவீன காலம் பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியிருக்கிறது.  ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் இடம் நீண்டு கிடக்கிறது என்றாலும், வெவ்வேறு வடிவங்களில் பெண்களின் சுயம் அழிக்கப்படுதல் நடந்து கொண்டேயிருக்கிறது.  ஆக, பெண்கள் தங்களை உணர்ந்து கேள்வி கேட்பதிலிருந்தே துவங்குகிறது அவர்களுக்கான அரசியல், கலை, இலக்கியம் எல்லாமே. அவ்வகையில், தொண்ணூறுகளுக்குப்பின் எழுச்சியாய் எழுத வந்த பெண் படைப்பாளிகளின் பட்டியல் அதிகம். அவர்கள் எடுத்தாண்ட கருப்பொருள்களை எதிர்கொள்ளத் திராணியற்ற தமிழ்ச் சமூகம்தான் ஒழுக்கம் குறித்தான அதே பழைய பாணியிலான தடுப்பரண்களைக் கட்டி எழுப்பியது.  எனினும், அரண்கள் எல்லாம் காணாமல் போனதுதானே வரலாறு.
இங்கு, ஒரு விசயத்தைக் குறிப்பிட வேண்டும். பெண் கவிஞர்களை மதிப்பிடத் துணிகிறேன் என்று பலர் வம்புக்கிழுப்பார்கள்; துதிபாடுவார்கள். வம்புக்கிழுப்பதும் துதிபாடுவதும் எவ்வகையிலும் திறனாய்வு நேர்த்தி என்று சொல்லிவிட முடியுமா என்ன? பெண்ணைப் பற்றிய சுயமான மதிப்பும், இயங்கியல் குணமும் கொண்ட வாசகரால்தான் பெண்களையோ அவர்களின் படைப்பின் வீரியத்தையோ மதிப்பிடுவது சரியாக இருக்க முடியும்.  அவ்வகையில் மிகச் சரியானவர் இப்பிரதியாளர்.  பெண்மொழி குறித்தான காத்திரமான ஆய்வை நிகழ்த்தியவரும் இவரே.  ஆகையால் இப்பிரதிக்குள் பெண் படைப்பாளிகளைக் குறித்தும், அவர்களது படைப்புக்கள் குறித்தும் அணுகும் முறையானது மிகச் சரியானதாக வெளிப்படுகிறது.
இப்பிரதியின் பிற்பகுதி தமிழ் நிலத்தின் ஆன்மா சம்பந்தப்பட்ட விசயங்களைப் பேசுகிறது. இரண்டு கட்டுரைகள் நவீன நாடகத்தின் மிக முக்கிய முகமான ச.முருக பூபதியின் ‘குற்றம் பற்றிய உடல்’, ‘மிருக விதூசகம்’ குறித்துப் பேசுகின்றன.  பொதுவாக, தமிழ் நாடகப் பார்வையாளர்கள் முருக பூபதியின் நாடகம் புரியவில்லை என்றே வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். வசனங்களால் நிறைந்திருக்க வேண்டும் என்றே ஆசைப்படுபவர்கள்தானே இங்கு அதிகம்.  ஆனால், அவர் படைப்பாக்கத்தில் உருவாக்கியுள்ள கருப்பொருட்கள் அனைத்துமே தொல்குடிகளின் மரபுகளை, இழப்புகளைக் காத்திரமாகக் குறியீட்டு மொழியில், இசைகளோடு நடிகர்களின் உடல்மொழியின் துணையினால் படைத்தளிக்கிறார்.  தமிழ்த் திறனாய்வு உலகில் நாடகத்திற்கு விமர்சனம் எழுதுவது பெரும்பாலும் இல்லை.  ஆனால், முருக பூபதியின் நாடகங்களுக்குக் கட்டுரையாளர் தந்துள்ள வாசிப்பு கூரானது.  மகாராசனிடம் இயல்பாகத் தங்கியுள்ள நிலம், மனிதர்கள்,  பண்பாட்டு வேர்கள் பற்றியான தெளிவான பார்வையோடே இப்பிரதியை வாசித்திருக்கிறார்.  குறிப்பாக, ‘கோமாளி’ பற்றிய விளக்கத்தை இவ்வளவு நுட்பமாகவும் விரிவாகவும் எழுதியிருப்பது சிறப்பானதாகும்.
  நகத்தைக் கடித்து மிகச் சாதாரணமாகத் துப்புவது போல, எல்லாவற்றையும் மிக இயல்பாகக் கடந்து போகப் பழக்கப்பட்டு விட்டோம். அதனால்தான் சமகாலத்தில் கண்முன்னே நடந்த ஈழப்படுகொலைகளை - வன் குடியாதிக்கத்தைக் கடக்கத் துணிந்து விட்டோம்.  இதனை யார் பேசுவது? அரசியல்வாதிகளா? அவர்களின் புகைமூட்ட அரசியலைத்தான் நாம் பார்த்து விட்டோமே.  பிறகு எப்படித்தான் இந்தத் துயரத்தைக் கடத்துவது? படைப்பின் வழியாகத்தான்.
போர் என்றால் வன்முறை; உடல் அழிப்பு. எந்த உடல் ஆணுடலா? பெண்ணுடலா? அதிகம் சிதைக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் பெண்ணுடலே. அதிக விதவைகள் வாழும் நிலமாக ஈழநிலம் ஏன் மாறிப்போனது?  விதைகளை விருட்சங்களாக்க வேண்டியவர்கள் விதவைகளாகிப் போனது எவ்வளவு பெரிய சோகம். கடத்த முடியாத பெரிய வலியை முருகபூபதி தன் படைப்புவழி கடத்துகிறார் என்றால், மகாராசன் அவருக்கே உரிய அரசியல் புரிதலோடு இன்னும் வலியோடே அணுகுகிறார்.
இதனை ஒட்டியே இன்னுமொரு கட்டுரை ‘புதைகுழி மேட்டிலிருந்து வேளாண் குடிகளின் ஒப்பாரி’. தன் ஆதிமையின் வேரும், பண்பாட்டுப் புழங்கு வெளியும் அழியப்போகிறது நியாயமாரே.. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார் சொந்த மண்ணிலிருந்து. சமூக அரசியலைப் பெரும் முதலாளிகளும் வியாபாரிகளும் இயக்குகிறார்கள். அவர்களுக்கு மண்ணைப் பற்றி கவலை என்ன?  நவீன நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம், சந்தை விரிவாக்கம் போன்றவை யாரின் தலையை முதலில் கொய்கிறது? விவசாயிகளையும் விவசாயிகளின் விளை நிலங்களையும்தான்.
நமது சமூகம் அகதிகளின் வலியை ஏறா முகத்தோடு எப்படி அணுகுகிறதோ அதே போலத்தான் விவசாய மக்களின் துயரத்தையும் அணுகும்.  யோசித்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.  இன்னும் கொஞ்ச காலத்திற்குள் பெரும்பாலான விவசாய நிலப்பகுதிகள் முழுக்க பாழாகப் போகிறது. இவர்கள் எங்கோ துரத்தப்படுவார்கள்.  சிறு கோழிக் குஞ்சுகளைத் தூக்குவதற்குக் கழுகுகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. கழுகு இறங்கி கூர் நகங்களால் தூக்கும் வேளையில் குஞ்சின் கதறல் கேட்கும்; பின் அடங்கும்.
நிலத்தை இழக்கும் வலியை நிலத்தோடு பிணைந்திருப்பவரால்தான் மொழிப்படுத்த முடியும். நிலத்தை விட்டு அந்நியமாகாமல் விவசாயத்தோடு இன்னும் பிடிப்பு கொண்டிருப்பதால்தான், நிலம் பற்றிய தவிப்பை மகாராசனால் புலப்படுத்த முடிகிறது. நிலம் பற்றிய பதிவுகளைத் திரும்பவும் வாசிக்கும் போது ஒட்டுமொத்த விவசாயக் குடிகளின் துயரத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன.
இப்பிரதியில் காணலாகும் இன்னொரு பகுதி இலக்கியம் தொடர்பானது. தமிழின் மரபிலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலுமான வாசிப்பு மகாராசனின் எழுத்தை வலுப்படுத்துகிறது. பிரதியினுள்ளே இலக்கண இலக்கிய மரபுகள் குறித்த கட்டவிழ்ப்புகளும், பொருள்கோடல்களும், எடுத்துரைப்புகளும் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. குறிப்பாக, இருத்தல் உளவியல், திணைமொழி, தொல்லியல் குறித்தான கட்டுரைகள் புதிய கருத்துப் படிமங்களைத் தருகின்றன.  
பிரதியில் சில இடைவெளிகள் இல்லாமல் இல்லை.  கட்டுரைகளின் சில இடங்கள் மாற்று உரையாடலுக்குத் தயாராவதுபோலத் துவங்கி, தகவலாக நின்று விடுகின்றன. சில கட்டுரைகளின் நீட்சியைக் குறைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.  ஆயினும், அனைத்துமே காத்திரமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். குறிப்பாக, நிமிர்ந்தெழும் உணர்வுப் புலப்பாடுகளை உரக்கப் பேசும் இன்னொரு நூலாக ‘மொழியில் நிமிரும் வரலாறு’ வருவதில் மகிழ்ச்சி.
நூலாசிரியர் தொடர்ந்து இயங்குவார் என்று பொத்தாம் பொதுவாய் நம்பிக்கையளிக்கும் முகமாகச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், ‘ஏர்’ மகாராசனின் உழைப்பு, வாசிப்பு, எழுத்து, இயங்குதல் திட்டமிட்டு நகர்ந்து கொண்டே இருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.. வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
பா.ச. அரிபாபு
arivusallo@gmail.com
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அமெரிக்கன் கல்லூரி

மதுரை.