வெள்ளி, 29 மார்ச், 2024

எழுத்தில் நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம் - கவிஞர் யாழ் தண்விகா


ஊற்று நீர், மணல் நனைத்து நனைத்து நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம்... எவ்வளவு அற்புதமானது..! போலான ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அங்கவை யாழிசை. கொடியசைத்துத் தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் ஏர் மகாராசன். தோழர், ஏற்கனவே எழுதி இணைய இதழ்களில் வெளிவந்துள்ள வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கி உள்ளார். அச்சு உலகில் முதல் பயணம். பேரன்பு வாழ்த்துகள். 

6 நூல் குறித்த 6 கட்டுரைகள். வறீதையா, தமிழ்மகன், தீபச்செல்வன், ஜெயமோகன், சோ.தர்மன் மற்றும் முத்துநாகு ஆகியோரின் நூல்கள் குறித்தவை. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கையறு நதி நூல் மனப்பிறழ்வு அடைந்த மகளுக்கும் தந்தைக்குமிடையே உள்ள அரவணைப்பு குறித்துப் பேசுகிறது. மனப்பிறழ்வு அடைந்த பெண்ணாக தன்னை நினைத்துக்கொள்ளும் அளவுக்கு நூல் தனக்குள் உண்டாக்கிய பாதிப்புகள் குறித்து வாசிப்பு அனுபவத்தை முன்வைத்துள்ளார். நிறைவைத் தரும் எழுத்து. இன்னும் கொஞ்சம் நூல் குறித்து எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கிறது. “மனம் மாயம் செய்யும் கருவி. நம்மால் செய்ய முடிந்தவையும் செய்ய முடியாதவையும் நம் மனம் நிர்ணயிப்பது தான். மனதை ஆளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உளவியலாளர் போல எழுத்தைப் பேச வைத்திருக்கிறார் நூலாசிரியர். 

தமிழ்மகன் எழுதிய படைவீடு நூல் ஆட்சி அதிகாரத்தை இழந்த கடைசி தமிழ்ப் பேரரசன் சம்புவராயன், மகன் ஏகாம்பரநாதன், அவரது மகன் மல்லிநாதர் ராசா நாராயணர் ஆட்சிக் காலம் பற்றிப் பேசுகிறது. விஜயநகரப் பேரரசு தமிழ் மண்ணில் காலூன்ற காஞ்சி பிராமணர்களின் போதிப்பான சாதிக்கொரு புராணம் எந்தளவுக்கு எடுபட்டு தமிழ்ப் பேரரசைத் தூக்கி எறிய உதவியது என்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போதுதான் பிறந்த சிக்கல் என்று எண்ணிக்கொண்டிருந்ததாக தோழர் குறிப்பிட்டுள்ளார். வர்ணாசிரமம் இங்கு எப்போது வந்தது என்பதைக் கணக்கிட்டாலே அதற்கு விடை கிடைத்துவிடும். நூலாசிரியரின் தந்தையும் தோழருமான ஏர் மகாராசன் மாணவர்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை நூலில் சொன்னவாறு தாழ்த்தப்பட்ட சாதி, உயர்த்தப்பட்ட சாதி என்ற சொல்லை தாழ்ந்த சாதி, உயர்த்த சாதி என்று சொல்ல வைத்ததன் பின்னணியில் இருந்தும் சாதியின் ஆதியைத் தேடிக் கண்டடையலாம்.

தீபச்செல்வன் எழுதிய நடுகல் குறித்த வாசிப்பனுபவம் ஈழத்தை, அதன் வலிகளை, கண்ணீர்க் கதையை, வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளை, விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, பல்வேறு நாடுகளின் துரோகங்களை கண்முன் கொண்டு வந்துவிட்டது. ஒரு துயர் கனவு போல நினைவைவிட்டு அகற்றிவிட்டு இன்று அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மீளாய்வு செய்வதற்குக் கூட அவசியமற்ற ஒரு நிகழ்வாக ஈழப்போர் பெரும்பான்மையோருக்கு அமைந்துவிட்டது ஒருபுறம். அதை மறக்கடிக்கும் ஊடகம் ஒருபுறம். மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க நிகழ்ந்த போரை அசாதாரணமாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பணியை, நடுகல் செய்கிறது. வீர மரணம் அடைந்துவிட்ட மகனின் புகைப்படம் கூட கையில் இல்லாமல் அவனின் நினைவுகளை மட்டுமே நடுகல்லாகச் சுமக்கும் தாய் பற்றிய நூல் என்கிறார் நூலாசிரியர். நூலை வாசிக்கத் தூண்டும் கட்டுரை.

ஜெயமோகனின் புறப்பாடு குறித்த கட்டுரை. அவருடைய எழுத்தைச் சிலாகித்துப் பேசுகிறார் நூலாசிரியர். அவர் குறிப்பிடும் ஒப்புமைகள் சிலவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். ஓரிடத்தில், “இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில் கூட, ஒரு பொருளின்மீது கூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக்கொண்டார் போலும்” என்பது உட்பட. சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும்போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன என்று கூறியுள்ள நூலாசிரியர், இதை இப்படியே வைத்திருக்கும் அதிகார மையம் குறித்து ஜெயமோகன் போன்றவர்கள் பேசாமலிருப்பதையும் சக மனிதன் குறித்து, எழுத்தாளர்கள் குறித்து, சமூகம் குறித்து இவ்வுலகின் அனைவருக்கும் மேலான ஓரிடத்தில் நின்று பேசும் அவருடைய வார்த்தைகளை கூர்ந்து நோக்கத் தொடங்கினால் அவர் யாரெனப் புரியும். புறப்பாடு வாசிக்கும்போது ஜெயமோகனின் பிம்பம் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறது. இதற்கு நூலாசிரியர் என்ன செய்ய முடியும்...

சோ.தர்மனின் சூல், விவசாயம், அது சார்ந்த மக்கள், யாரிடம் அது இருந்தது, அது எப்படியெல்லாம் அதிகாரத்தின் கைகளில் சென்று சேர்ந்தது என்பது போன்ற பல்வேறு புதிய தகவல்களைத் தருகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும், ஊர்க் கண்மாயை விரோதம் காரணமாக உடைப்பவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும் இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். நல்ல விசயத்தைப் பாதுகாக்க, எதையாவது சொல்லிப் பயம்காட்டி வைத்திருப்பது என்பது நடந்திருக்கும். அதற்காக எல்லாவற்றையும் நல்லது என்பதை நம்புவதும் தவறு. பயம் காட்டுவதும் தவறு. மாட்டுக்கறி தின்ன இறந்த மாடுகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பது போல உள்ளது நூலாசிரியர் கருத்து. மாடுகளைக் கொன்று சாப்பிடுபவன் ஒரு கால்நடையைப் போலவே நடப்பான் என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. கண்மாய் வைத்து அரசியலாடும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாருமிங்கே ஊமையாகப் பிறக்கவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும். இதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகாரம் அற்றவர்கள் மட்டுமே. இது சமகாலத்தில் அரசியல்வாதியைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்திய உத்திபோல இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம் உரியவர்களிடம் போய் சேராததால் இங்கு உழைப்பவனிடம் ஒன்றுமில்லாமலும், பண்ணையிடம் எல்லாம் கூடுதலாக நிறைந்திருப்பதையும் இன்றும் காண்கிறோம். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இங்கு விவசாயத்தினை துச்சமாக நினைத்துத்தான் தொடங்குகிறது. அதன்பலனை வருங்காலம் எப்படித் தாங்குமோ தெரியவில்லை. சூல் வாசிக்க வேண்டிய நூல்.

 முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் குறித்த வாசிப்பனுபவம், தனது துறை சார்ந்திருப்பதால் நூலாசிரியர் பேரார்வத்துடன் எழுதியது போலிருக்கிறது. கதைச் சுருக்கத்தையும் அருமையாகக் கூறித் தொடங்குகிறார். எவ்விதம் தனது துறையில் இந்நூல் உதவுகிறது என்பதையும் கூறுகிறார். தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதை என்ற தலைப்பு பொருத்தமே. சித்த மருத்துவத் துறையில் பயின்று வரும் நூலாசிரியருக்கு தகுந்த சமயத்தில் இந்நூல் கிடைத்ததை சித்தர்கள் அருளால் தான் கிடைத்தது என்று நூலாசிரியர் கூறுவதை எப்படி ஏற்பது எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுளுந்தீ என்பது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

நூலின் பக்கங்கள் மற்றும் விலையையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொழிநடை அருமையாகக் கூடி வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அரசியல், முற்போக்கு இரண்டின் போதாமை பல இடங்களில் தெரிகிறது. இதைக் குற்றமாகக் கருதாமல் ஆலோசனை என்ற அளவில் எடுத்துக்கொள்ள தோழரிடம் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தோடு எந்நேரமும் உறவாடிக் களித்திருக்கும் தந்தையின் கரம் பற்றுங்கள். அதேசமயம் உங்கள் வழியில் பயணம் செய்யுங்கள். சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் தோழர்.

கட்டுரையாளர்:
கவிஞர் யாழ் தண்விகா,
கல்வி மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், பெரியகுளம்.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,

முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


பகையும் துரோகமும் - மகாராசன்


பகையெல்லாம்
நமைக் கொல்லக் காத்திருக்கிறது.
துரோகமெல்லாம் 
கூட்டுச் சேர்ந்து
பகை முடிப்போம் என்கிறது.

பகையின் காவியுருவங்களும்
துரோகத்தின் முகமூடிகளும்
மடிப்பிச்சை கேட்டு 
கையேந்தி அலைகின்றன.

கத்திய கதறலும் 
பீறிட்ட அழுகையும்
சிந்திய கண்ணீரும் 
வீண் போவதில்லை.

தாயகக் கனவு சுமந்த இனத்தை 
கொத்துக் கொத்தாய்ப் பறிகொடுத்த
நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

பகையின் பக்கமும் நாமில்லை;
துரோகத்தின் நிழலையும் நம்புவதாயில்லை. 

ஏர் மகாராசன்

வெள்ளி, 22 மார்ச், 2024

நீர்ப்பால் தாய்ச்சிகள் - மகாராசன்



மேகங்கள் முட்டிக்கொண்டு
சோவெனப் பெய்த
பெருமழையின் ஈரப்புள்ளிகள்
சிற்றோடை நீர்க்கோடுகளால்
ஆறுகளை வரைந்துகொண்டிருந்தன.

கார்காலத்தின் பசுங்கனவு
ஆறுகளில் மிதந்து வழிந்தோடின.

நுரைகள் மிதக்க 
நாணலைக் கோதி
கரைகளை இறுகத் தழுவி
கழனிகளில் பாய்ந்து
பயிர்த் தாலாட்டை இசைத்த
ஆறுகளின் நாவுகள்
ஈரம் பாடுதலை நிறுத்திக்கொண்டன.

நீர் முகந்த ஊருணிகள்
பள்ளமடை பாய்ந்த கண்மாய்கள்
வெக்கை குளிர்வித்த குளங்கள்
காடுகளில் கசிந்த 
ஓடைகள் யாவும்
நீர் அத்துக் கிடக்கின்றன.

நிலத்தின் சாவையும்
நீர்த்தடக் கொலைகளையும்
ஒப்பாரியாய்ச் சொல்லி அழ
கரைகளும் இல்லை; 
ஆறுகளும் இல்லை.

நீர்ப்பால் தாய்ச்சிகள்
சீரழிந்த வதைகளை
ஆறுகள் யாரிடம் சொல்லி அழும்?
கரைகளிடம்தான் சொல்லி அழும்.

கரைகள் காணாத ஆறுகள்
ஊர்களை மூழ்கடிக்கும் கனவுகள்
வந்து வந்து போகின்றன.

ஏர் மகாராசன் 

மார்ச்சு 22 - உலகத் தண்ணீர் நாள்.

பூங்குருவி வாழ்க்கை - மகாராசன்


பூஞ்செடிகளின் 
இலைகளைத் தைத்து 
கூடுகள் சமைத்து
சிறகடித்து நீந்தும்
தேன் சிட்டுகள்
வாழ்தலின் பக்குவத்தை
சொல்லிவிட்டுப் பறக்கின்றன.

மண்ணுக்குள் புதைந்திருக்கும் 
பெருமரத்து வேர்களின் 
நுனி முடிச்சுகளோடு 
கிளையில் துளிர்க்கும் இலைகளின் 
காதல் தொடுப்பை
அலர் பரப்பிச் சொல்கின்றன பூக்கள்.

இறகின் கனமும்
பூவின் மணமும் 
அரும்பிடும் வாழ்க்கை 
இனிதுதான்.

ஏர் மகாராசன் 

மார்ச்சு 20 - உலகச் சிட்டுக் குருவிகள் நாள்.

ஞாயிறு, 17 மார்ச், 2024

ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்: மகாராசன் - அம்சம்


பெருங்கனவோடும் பேரன்போடும் செந்தமிழ் உணர்வோடும் வளர்ந்துவரும் அன்பு மகள் அங்கவை யாழிசை அவர்கள், சிறு வயதிலிருந்தே எழுத்து, பேச்சு, கலை எனப் பன்முகத் திறன்களோடு உறவாடி வருபவர். எமது கல்வி, சமூகம் மற்றும் எழுத்துச் செயல்பாடுகள் யாவற்றுக்கும் மகளாகவும் தோழியாகவும் இருந்து அருந்துணை புரிந்துகொண்டிருப்பவர். 

குழந்தையாக இருக்கும்போதுகூட புத்தகங்கள்தான் அவரின் விளையாட்டுப் பொருட்களாக இருந்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் செம்பச்சை நூலகப் புத்தகங்கள் யாவற்றிலும் அவரின் கண்களும் கைகளும் பட்டிருக்கும் என்றே கருதுகிறோம். பள்ளிக்கூடப் புத்தகங்கள் என்பதையெல்லாம் தாண்டி வேறுவேறு புத்தகங்களைப் படிப்பதில் எப்போதுமே நாட்டம் கொண்டிருந்தார். அவர் வாசித்த புத்தகங்கள் குறித்து எம்மிடம் மிக விரிவாகவே பேசிடுவார். 

தொடர்ச்சியான புத்தக வாசிப்புதான் அவரது பன்முகத்திறனுக்கும் பெருந்துணை புரிந்திருக்கிறது. பேச்சு, கட்டுரை, ஓவியம், நாட்டியம், கைவினை எனப் பலவகைப்பட்ட திறன்வெளிப்பாட்டிற்காகப் பரிசுகள் பலவற்றையும் பெற்றிருக்கிறார். 

புத்தக வாசிப்பில் பெருவிருப்பத்தோடும் உள்ளார்ந்தும் அவர் பயணப்படுவதை அருகிலிருந்து பார்த்துப் பெருமைப்பட்டிருக்கிறோம்; வியந்திருக்கிறோம். ஒரு புத்தகத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும்கூட ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவார்.

இப்படியே மற்ற மற்ற புத்தகங்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தால், அவரது பள்ளிப் படிப்பில் தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்றுகூட நாங்கள் நினைத்தது உண்டு. இதைக் குறித்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தியபோது, இந்தப் புத்தகங்கள் படிக்கும்போது பள்ளிப் புத்தகங்கள் எல்லாம் மிக எளிது என்றே கூறினார். அவர் சொன்னவாறே பள்ளிப் படிப்புகளிலும் தேர்வுகளிலும் உயர்மதிப்பெண்களைத்தான் பெற்று வந்தார்.

தமிழின் மீதும் புத்தகங்கள் மீதும் தமது ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொண்டிருந்ததோடு, வாசிப்புச் செயல்பாட்டையும் தீவிரப்படுத்தியிருந்தார். ஒரு கட்டத்தில், கல்லூரியில் நான் தமிழ்ப் பாடம் எடுத்துப் படிக்கட்டுமா என்றார். ஏன் இந்த முடிவு? எனக் கேட்டபோது, தமிழ் மீது அவ்வளவு பற்றும் உணர்வும் இருப்பதாகவும், தமிழுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் எனவும் கூறினார். அம்மாவும் அப்பாவும் தமிழ் படித்திருக்கிறோம். தமிழ் ஆசிரியராய் இருக்கிறோம். நாங்கள் தமிழ் குறித்துப் பேசுவதைக் காட்டிலும், அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் பயணிப்பவர்கள் தமிழ் குறித்துப் பேசினால் அதற்குச் சமூக முக்கியத்துவம் இருக்கும். தமிழுக்கு ஏதாவது செய்திட வேண்டுமானால், பிற துறைகளில் பயணித்துத் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும்; அங்கிருப்பதைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தமிழை நவீன உலகுக்குக் கடத்த முடியும் என்றோம். 

அப்படியானால், நான் என்ன படிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்று எம்மிடமே கேட்டார். குடும்ப உறவுகள் பலரும் மருத்துவர்கள் என்பதால், மருத்துவம் படிக்கலாம் என்றபோது, அலோபதி மருத்துவமெல்லாம் படிக்க விருப்பமில்லை. சித்த மருத்துவம் படிக்கவே விரும்புகிறேன் என்றார். மருத்துவப் படிப்புகூட தமிழோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றே கருதினார். அந்தளவுக்கு அவரது தமிழ் ஈடுபாடு தீவிரப்பட்டிருந்தது.

புத்தகங்கள் அவரது அறிவுலகத்தை மேலும் மேலும் வளப்படுத்தின. புத்தகங்களை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தைக் குறித்தும் பேசுவதோடு மட்டும் நிறைவடைந்துவிடாமல், வாசிக்கிற புத்தகங்களைக் குறித்து எழுதவும் முயற்சிக்க வேண்டும் என அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தோம். அவ்வப்போது அவர் வாசித்த புத்தகம் குறித்து அவரது உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதிக் காண்பிப்பார். அவர் எழுதிய கட்டுரைகளில், எழுத்துலகம் குறித்த அகத்தையும் புறத்தையும் மட்டுமல்ல, எழுத்துலகம் குறித்த அவரது அகத்தையும் புறத்தையும் காண முடிந்தது. 

பல்வேறு புத்தகங்களை அவர் வாசித்திருந்தாலும், கையறு நதி, சூல், படைவீடு, நடுகல், புறப்பாடு, சுளுந்தீ ஆகிய பெருங்கதை நூல்களைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பல்வேறு இணைய இதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளிவந்தன. 

தமிழ்கூறும் நல்உலகம், எம் மகள் அங்கவை யாழிசை அவர்களின் எழுத்துகளை வரவேற்றும் பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்ந்தன. அக்கட்டுரைகள் யாவும் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளன. அங்கவை யாழிசை அவர்களின் முதல் நூல் இது. 

தமிழ் சார்ந்தும், சித்த மருத்துவம் சார்ந்தும் இன்னும் நிறைய எழுதுவார் எனும் நம்பிக்கை எமக்கிருக்கிறது. தமிழ் உம்மை வாழ வைக்கும்; மிளிரச் செய்யும். 

தமிழ் உறவுகள் வாழ்த்தி வரவேற்பதோடு வழிகாட்டுங்கள்; வழி நடத்துங்கள். இன்னும் வளம் பெறுவார்.

எழுத்துலகில் பயணப்படும் அன்பு மகளுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
அப்பாவும் அம்மாவுமான
மகாராசன் - அம்சம்.

*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


புதன், 13 மார்ச், 2024

அங்கவை யாழிசையின் வாசிப்பு உணர்வு - விஜயபானு


அன்பிற்கினிய அங்கவை யாழிசை அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தங்கள் முதல் படைப்புக்குக் கூறுகிறேன். இவ்வாறு சிறுவயதில் தங்களின் பரந்த வாசிப்பு என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது.

தாங்கள் நூல்களை உள்வாங்கிய விதமும் அதை கட்டுரைகளாக எழுதிய விதமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. தாங்கள் எழுதிய ஆறு கட்டுரைகளும் ஆறு விதமான கதைக்களத்தைக் கொண்டுள்ளன. இதிலிருந்து தங்களின் பரந்த வாசிப்பு உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தங்கள் வீட்டில் உள்ள செம்பச்சை நூலகம் போல் அனைவர் வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது அமைத்தால் இன்னும் பல யாழிசைகளைக் கேட்க முடியும் என்று தோன்றுகிறது. 

தாங்கள் எழுதிய கட்டுரையைப் போல் தங்கள் நூலுக்கும் வேறொருவர் கட்டுரை எழுதும் அளவிற்குத் தாங்கள் எழுத்து உலகில் பயணிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். 

எழுத்து உலகில் மட்டுமல்லாது, சித்த மருத்துவத் துறையிலும் சாதனை படைக்க என்னுடைய வாழ்த்துகள். தங்களை இவ்வாறு உருவாக்கிய தங்கள் பெற்றோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

அன்புடன்
திருமதி விஜயபானு,
ஆசிரியர்,
ஈரோடு.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.

ஞாயிறு, 10 மார்ச், 2024

திராவிடம் என்பது கற்பனைப் பெயர் :பாவலரேறு பெருஞ்சித்திரனார்.


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். அது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. 

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் (தமிழ்மொழி) அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது. 

பின்னர் அது, தமிழ் தவிர்த்த - தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதிய அத்திராவிட மொழியாசிரியர்களும் புலவர்களும், திராவிட மொழிகளுக்கும் மூலமொழியாக இருந்த ஒரு பழம்பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக்கொண்டனர். 

ஆனால், உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல. இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று. தமிழே ஆரிய வழக்கில் திராவிடம் ஆயிற்று. எனவே, தமிழரே திராவிடர் என்று அவர்களால் குறிக்கப்பட வேண்டியவராகவும் ஆயினர்…

தமிழ் என்னும் மொழியை இன்றைய மலையாளிகளும் கன்னடியரும் தெலுங்கரும் தங்கள் மொழிகளுக்கு மூலமொழி என்று ஏற்றுக்கொள்ள விரும்பாதது போலவே, தாங்கள் திராவிட இனத்தவர் என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்பாததையும் கவனிக்கவும்.

*

மகாராசன் தொகுத்த திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து..

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

ஞாயிறு, 3 மார்ச், 2024

அங்கவை யாழிசை: நம்பிக்கை ஒளிக்கீற்று - லட்சுமி.ஆர்.எஸ்


தோழர்கள் அம்சம் - ஏர் மகாராசன் தம்பதிகளின் புதல்விதான் அங்கவை யாழிசை. சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித்த மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். (19 வயதிருக்கலாம்). முதலில் அந்தச் சின்னஞ்சிறு குருத்திற்கு அன்பும் வாழ்த்தும் பாராட்டும்..

சிறு பிள்ளைகள் இலக்கிய உலகிலே சிறகடித்துப் பறப்பது எத்தனை ஆனந்தத்தையும் நெகிழ்வையும் தருகிறது தெரியுமா...? மகிழ்வோடு கண்ணில் நீர் பெருகுகிறது மகளே அங்கவை… தமிழ்த்தாயும் இந்நூலைக் கரங்களில் ஏந்தி மகள் அங்கவையை வாரியணைத்து ஆசிர்வதிப்பாள்.

அலைபேசியில் முடங்கி இருக்கும் இளைய தலைமுறையினரை, சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறையினரை, அழகு நிலையங்களில் திரண்டு நிற்கும் இளையதலைமுறையினரை, திரையரங்குகளில் முதற்காட்சியில் கதாநாயகனுக்கு பல அடி கட்அவுட் வைத்து பாலபிஷேகம் செய்யும் தலைமுறையினரைப் பார்த்த கண்களுக்கு… அங்கவை போன்ற தங்கங்கள் தென்படுகையில், நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது, எம் தமிழ் இனி மெல்லச்சாகாது, தழைத்தோங்கி வளருமென…

கண்மணி அங்கவை, உன் வாசிப்பு உன் பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் என்ற மாயவலையில் உன்னைச் சிக்கவைத்துப் பணம் குவிக்கும் இயந்திரமாக உன்னை மாற்றாது போனதற்காக என் பேரன்பு அவர்களுக்கு…

நீ தேர்ந்தெடுத்த 6 நூல்களுமே உன் ரசிப்புத் தன்மையை, உன் இலக்கியத் தேடலை, உன் மனது நகரும் திசையை, உன் அறிவு நீட்சியை அடிக்கோடிட்டுக் காட்டி நிற்கின்றன எனச் சொன்னால் மிகையாகாது…

வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் “கையறு நதி “ பற்றி எழுதுகையில் நீ இப்படி எழுதுகிறாய் …

//வாழ்க்கை எனும் தண்டவாளம் எவ்வளவு மோசமாகப் பிறழ்வுண்டாலும், அதன்மீது பயணித்தாக வேண்டும். எங்கு அழைத்துச் செல்கிறதோ, எதைக் காண்பிக்கிறதோ, அதை எப்படி நாம் காண்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ, பார்த்துக் களித்துச் செல்ல வேண்டியதுதான். எப்படியானாலும் பயணித்தே ஆக வேண்டும் என்பதைத்தான் இந்தப் புத்தகம் உணர்த்துகின்றது//

எவ்வளவு கனமான வார்த்தைப் பிரயோகங்கள்! உளவியற் சிந்தனை நிறைந்த ஓர் ஞானியின் அடியொற்றிய காலடித் தடங்களின் அச்சுப் பிரதிகள்!

பிராய்டு கூறிய "முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும், உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது" என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.

தமிழ் மகன் அவர்களின் படைவீடு நூல் உன்னை ஈர்த்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமுமில்லை.. நாட்டின் மீதும் மொழியின் மீதும் தீராக் காதல் கொண்ட உன்னால் இந்த நூலை நேசிக்க இயலவில்லை என்றால் அதுதான் வியக்க வைக்கும். 

இந்தப் பற்றை நான் எப்படி அறிந்து கொண்டேன் தெரியுமா? இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயம் படிக்கின்றபோது நீ இப்படி எழுதுகிறாய், 

//இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தைப் படிக்க மட்டும் எனக்கு ஒரு நாள் தேவைப்பட்டது. அந்தளவிற்குப் பதைபதைப்பை அது தந்தது. அவர்கள் வெல்லவில்லை, தமிழர்கள் தோற்றுப் போவார்கள் என்று தெரிந்தும் மனம் அதை ஏற்கவில்லை. தமிழர்கள் வீழ்ந்தார்கள், வீரம் குறைந்ததால் அல்ல; துரோகம் நிறைந்ததால்//

உலக சரித்திரத்தில் துரோகம் என்பது புதிதில்லையே கண்மணி?? இப்போதுதானே எழுத வந்திருக்கிறாய். இன்னும் நிறைய வாசிக்கையில், இன்னும் நிறைய எழுதுகையில் அதிகமாக அறிவாய், துரோகங்கள் குறித்து..

தென் அமெரிக்காவின் செவ்விந்திய “இன்கா“ பெரும் பழங்குடியினர் எப்படி ஸ்பானிஷ்காரர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை நேரம் கிடைக்கையில் படித்துப் பார்… 

யூதர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்திய ஹிட்லர் ஆடிய கொலை வெறி ஆட்டத்தைப் பற்றிய புத்தகங்கள் படித்துப் பார்….

இயேசுகள் இல்லாவிட்டாலும், அற்ப காசுகளுக்குக் காட்டிக்கொடுக்கும் யூதாசுகள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கும் புத்தகங்களிலிருந்து உணர்வாய்..

இறுதியாக, 

சித்த மருத்துவத்தை ஆராயும் உனக்கு முத்து நாகு அண்ணனின் சுளுந்தீ நாவல் பிடித்துப் போகத்தான் போகும். பெரிய புதினத்தை உன்னளவிற்குச் சுருக்கி அதன் தன்மை மாறாமல், கதாப்பாத்திரங்களை விளக்கியது மிக அழகு..

ஒரு பத்தி எழுதுவதற்கு நான்கு ஐந்து மாதங்கள் யோசித்தேன் என அண்ணன் சொன்னது நினைவிற்கு வருகிறது. அத்தனை பென்னம் பெரிய உழைப்பே சுளுந்தீ. சித்த மருத்துவராக இந்த நூல் உன் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தையும் இடத்தையும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை..

மருத்துவனின் குணத்தை மட்டுமல்ல, மருந்து அரைப்பவனின் குணத்தைக்கூட பேசியது திருக்குறள். 

தமிழர்களின் மரபுச்செல்வங்கள் மறைக்கப்படும்போது அல்லது அவர்களிடமிருந்து பிடுங்கப்படும் போது எழுந்த வரலாற்று வேதனையே சுளுந்தீ..

உலகெலாம் வெடி மருந்தை மூங்கிலிலும் காகிதத்திலும் சேர்த்து வான வேடிக்கைக்கோ போருக்கோ பயன்படுத்தும்போது அதை உலோகக் குப்பியில் அடைத்து, வெள்ளையருக்கு எதிரான போரில் உலகின் முதல் ஏவுகணையாய்ப் பயன்படுத்தியவன் திப்பு சுல்தான். அந்தப் போரின் ஓவியத்தை வைத்து அழகு பார்க்கிறது நாசா. அதை வெளிக் கொணர்ந்தவர் அப்துல் கலாம். அந்த வெடி மருந்தை ஆக்கித் தந்தவன் நம் தமிழ்ப்பாட்டன். நாம் மறந்ததை நாசா நினைவில் வைத்துள்ளது.

எங்கே தமிழினம் தன் மரபுகளை மறந்து விடுமோ என ஐயுறுகையில் அங்கவை போன்ற தளிர் வளைக்கரங்கள், இரும்புக் கரங்களாய் அதை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை இந்தப் புத்தகத்தின் வாயிலாய்த் தோன்றுகிறது..

தமிழ் கூறும் நல்லுலகே, இலக்கியப் பிதாமகர்களே, ஆன்றோர்களே, எங்கள் வீட்டுப் பெண்ணொருத்தி அங்கவை யாழிசை, "எழுத்துலகம்: அகமும் புறமும்" என்ற நூலை, தன் முதல் நூலாக இந்தத் தமிழ் உலகிற்குப் படைக்கிறாள். 

அவள் எழுத்து ஒவ்வொன்றும் அறிவின் கணைகள்; தமிழ் காக்கும் போர் முரசு. நாளைய உலகின் வழிகாட்டி..

கட்டியம் கூறி வரவேற்போம்.

வா மகளே வா!
தரணி போற்ற தமிழ் காப்பாய்!
தமிழர் நோய் தீர்ப்பாய்!
பரவட்டும் உன் புகழ் .

கட்டுரையாளர்:
லட்சுமி ஆர்.எஸ்,
எழுத்தாளர்&ஆசிரியர்,
மதுரை.

*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.