வெள்ளி, 24 ஜூன், 2022

நினைவுப்பூ : மகாராசன்

 

கோடையில் வெடிக்கும்
இலவம் பஞ்சாய்
வெயிலில் குளித்து
இளங்காற்றில் மிதந்தலைகிறது
வெண்ணிற நினைவுகள்.

மேய்ச்சலுக்குப் போன
தாயாட்டின் பால் கவுச்சி ஈரத்தில் 
குடாப்பு இருளுக்குள் 
அடைந்து கிடக்கும் இளங்குட்டிகளாய் 
தாய்மடிக் காம்புகளை நினைத்தபடி 
தவித்துக் கிடக்கின்றன 
விதைச் சொற்கள்.

திடுதிப்பென்ற இடிமின்னலில் 
கொட்டித் தீர்த்த பெருமழை
செவல் ஓடைகளைக் 
குளிப்பாட்டி வடிந்த
செந்தண்ணீர்க் குளமாய் 
நிரம்பித் ததும்புகின்றன 
வெட்கமூறிய பொழுதுகள்.

தொளியிலும் புழுதியிலும் 
இலாடங்கள் தேய உழுததில் 
நேர்க்கால் அழுந்திய 
உழு மாடுகள் திமிலோரத்தில்
காய்ப்புக் கரையாய்
வலியறியாமல் 
தடித்துக் கிடக்கிறது
பசப்பூறிய சிமிட்டல்.

ஒற்றைச் செம்போத்தின் 
நெடுங்கூவல் தனியொலியை
தவிப்போடு
கேட்டுக்கொண்டிருக்கிறது
தனித்துக் கிடக்கும்
நிகழ் வாழ்க்கை.

இன்னும் இன்னும் பூக்கவே
அசைபோடும் நினைவுகள்
மழையெனப் பெய்கிறது
மனதுக்குள்.

ஏர் மகாராசன் 
10.04.2022

வியாழன், 23 ஜூன், 2022

தமிழர் பண்பாட்டு அரசியலை உரக்கப் பேசும் நூல்: செ. தமிழ்நேயன்


தமிழ்ச்சமூகச் சூழலில் கவனிக்கத் தவறிய பகுதிகளைக் கோர்வையாகக் கோர்த்து, "பண்பாட்டு அழகியலும் அரசியலும்" என்ற பெயரில் ஆவணமாகப் பதிவு செய்துள்ளார் மகாராசன்.

தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் மறைந்திருக்கும் வழக்காறுகள் மற்றும் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். தமிழ்ச் சமூகத்தில் மறுக்கப்படும் சமூகங்களின் பண்பாடு, வாழ்வியல், அரசியல் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்நூல். 

பண்பாடு என்பது ஒழுங்கு வடிவம் பெற்ற நிலையைக் குறிக்கும். பண்பாடுகள் பெரும்பாலும் வழமையான நிகழ்வுகளை உள்ளடக்கித் தோன்றியிருக்க வேண்டும், தமிழ்ச் சமூகத்தில் உழவு, ஏறு தழுவல் போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நிலம் சாந்து தான் இயங்குகின்றன.

பண்பாட்டு அழகியல் என்ற சொல்லின் கருப்பொருள் நிலம், நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியலைப் பேசுகின்ற அதே வேளையில், அப்பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட நிகழ்வுகளையும் பேசுகிறது. பண்பாடு என்ற சொல், பொருள் ஒழுங்கு வடிவம் பெற்ற நிலையைத்தான் குறிக்கிறது. அந்த ஒழுங்கு நிலை இயல்பாகவே அமையபெற்றது.

தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் மறைந்திருக்கும் வழக்காறுகள் மற்றும் வாழ்வியல், கலை, இலக்கியம், அரசியல் பற்றிப் பேசுகிறது. சடங்குகள் என்பவை பெரும்பாலும் வைதீக மரபைச் சார்நதவை என்று பொதுவெளியில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை மறுக்கும் வகையில் சடங்குகள் தமிழ் மரபைச் சார்ந்த ஒரு ஒழுங்கு வடிவம் பெற்ற பழக்க முறை என்று வரலாற்று அடிப்படையில் நிறுவுகிறது இந்நூல்.

ஏறு தழுவல் என்பது பெரும்பாலும் மாடு பிடி விளையாட்டு என்று கருதப்பட்டாலும், அதன் கருப்பொருள் மாடுகள், மாந்தர்கள் இடையே உள்ள

அன்புபிணைப்பைக் காட்டுகிறது. முல்லை நிலத்தில் உழவும், ஏறு தழுவல் தோன்றி இருந்தாலும், முழுமையும் ஒழுங்கு வடிவம் பெற்றது மருத நிலத்தில் என்கிறது தமிழ். 

எருதுகளின் வகைப்பாட்டுப் பட்டியல், பண்பு இயல்புகளைப் பள்ளு இலக்கியங்கள் வழியே நிறுவுகிறார் மகாராசன். மேலும், பள்ளு இலக்கியங்கள் பேசும் அரசியலையும் பதிவு செய்துள்ளார்.

தமிழர்களின் அறம் சார்ந்த பண்டிகைக் குறியீடாக உள்ள அறுவடைத் திருநாள் எனப்படும் பொங்கல் திருநாள் உணர்த்தும் சடங்குகளின் மெய்பாடுகளைப் பேசுகிறது. நிலம், உழவு, எருது, சூழலியல் பற்றி அரசியல் பார்வைகள் பற்றிய பதிவுகளை ஆவணப்படுத்தியுள்ளது இந்நூல்.

கலை மற்றும் இலக்கியத் தளங்கள் ஒற்றைச் சார்பு நிலை கொண்டிருந்த சூழலில், எளிய மக்களின் கலை மற்றும் இலக்கியக் குறிப்புகள் பொதுவெளியில் பேசும் பொருளாக மாற வேண்டும் என்று கூறுகிறது இந்நூல்.

ஐவகை நிலங்களின் இயல்புநிலை வளர்ச்சி என்ற பெயரில் ஆள்வினைஞர்களின் பொறுப்பற்ற தன்மை, சுரண்டல்களையும், சூழலியல் சீர்கேட்டை எதிர்க்க மனமில்லாமல் வாழும் அடிமை நிலைக் கூட்டத்தையும் பற்றியும் விவரிக்கிறது. 

கடல் சார்ந்தது வாழும் தமிழர்கள் நேர்கொள்ளும் இயற்கைப் பேரிடர் நிகழ்வின் போது சமய நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் பாராமுகத்தையும் வலியோடு பதிவு செய்கிறது.

பெண்மொழி மதிப்பீடு மற்றும் ஆண் ஆதிக்கப் போக்குகளையும்,.பெண்ணியம் சார்ந்த இயங்கும் அமைப்புகளின் பொறுப்பற்ற தன்மையும் பட்டியலிடுகிறது. பெண்களின் அரசியல் எழுச்சி மாற்றத்தில் ஆண்கள் பங்களிப்பு உள்ளது என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்நூல்.

கற்பித்தல் செயல்பாட்டில் அதிகார அரசியல் நுழைவு காரணமாக மாணவச் சமூகம் நேர்கொள்ளும் சிக்கல்களையும், பிற்போக்கு எண்ணங்களை விதைக்கும் கல்விமுறைகளையும் கடிந்துரைக்கும் இந்நூல், தமிழர்களின் பண்பாட்டு அரசியலை உரக்கப் பேசியிருக்கிறது.

பண்பாட்டு அழகியலும் அரசியலும்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
9994880005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
9080514506.

கட்டுரையாளர்:
செ. தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.

வெள்ளி, 17 ஜூன், 2022

சமத்துவக் குரலெடுக்கும் முனீசுவரன்களைக் கொண்டாடுவோம் : மகாராசன்

மானுட சமத்துவத்தையும் தன்மான உணர்வையும் மாணவர்களிடம் வளர்த்தெடுப்பதும் கல்விச் செயல்பாட்டின் ஓர் அங்கம்தான்.  

சாதியக் காழ்ப்பும், சாதிய வன்மமும், சாதிய ஏற்றத்தாழ்வும், சாதிய வக்கிரங்களும், சாதிய வன்முறையும் ஒடுக்குமுறையும் நிரம்பி வழியும் ஓர் சமூக அமைப்பிலிருந்தேதான் ஆசிரியர்களும் உருவாகி வந்திருக்கிறார்கள். ஆயினும், சாதிய அழுக்குகள் நிறைந்த மனிதர்களிடமிருந்தும் பணியாளர்களிடமிருந்தும் வேறுபட்ட ஒரு பணியும் பொறுப்பும் கடமையும் தமக்கு இருக்கின்றன என்பதைப் பெரும்பாலான ஆசிரியர்கள் உணரவும் இல்லை; அவ்வாறு உணர்வதற்கான அல்லது உணர்த்துவதற்கான அகப்புறச் சூழல்களும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

அவர்கள் பயின்ற கல்வியும், இப்போது அவர்கள் பயிற்றுவிக்கிற கல்வியும் சமூக சமத்துவத்திற்கான உணர்வுகளையும் எண்ணங்களையும் அறிவையும் வழங்கத் தவறியிருக்கின்றன எனில், கல்வியமைப்பிலும் சாதிய அழுக்குகள் படிந்திருக்கின்ற என்றே பொருள்.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என, கல்வி அமைப்பில் இருக்கும் பெரும்பாலோரிடத்தில் சாதிய அழுக்கு இன்னும் ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது. சாதியப் பாகுபாட்டையும் சாதியக் கண்ணோட்டத்தையும் சிலர் வெளிப்படுத்துவார்கள்; சிலர் உள்ளுக்குள் வைத்திருப்பார்கள்; சிலர் ஒத்துப்போவார்கள்; சிலர் ஒதுங்கிப் போவார்கள்; சிலர் மவுனமாக இருப்பார்கள். சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக இருந்த - இருக்கும் மிகச்சில ஆசிரியர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதேவேளையில், சாதியப் பாகுபாட்டுக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்த/கொண்டிருக்கும் ஆசிரியர்களையும், சாதிய வன்மத்தை மாணவர்களிடம் விதைத்த/விதைக்கும் ஆசிரியர்களையும், அதையெல்லாம் கண்டும் காணாமலும் போன/போகும் ஆசிரியர்களையும் எனது கால் நூற்றாண்டுகால கல்வி அனுபவங்களில் பார்த்துக்கொண்டும் எதிர்கொண்டும்தான் வருகிறேன். 

அதேவேளையில், நேர்மையும், அறிவும், கற்பித்தல் திறனும், மாணவர்கள் மீதான அக்கறையும் கொண்டிருக்கும் ஓர் ஆசிரியரைக் குறித்து என்னதான் அவர் சாதியைக் குறித்து மாணவர்களிடம் சொன்னாலும் விதைத்தாலும், அதையெல்லாம் காதில் வாங்காமல் அந்த ஆசிரியரிடம் நெருக்கமும் பெருமதிப்பும் கொண்டிருந்த/கொண்டிருக்கும் மாணவர்களையும் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

சாதியப் பாகுபாடும், சாதியக் கண்ணோட்டங்களும் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல; ஆசிரியர் சங்கங்களிலும்- சங்கவாதிகளிடமும் பரவிக் கிடக்கிறது என்பதும் மிகக் கசப்பான அனுபவங்கள் நிரம்ப உண்டு.

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆசிரியர்களிடமும் பாடப்புத்தக அறிவு மட்டும்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது. சமூக சமத்துவத்திற்கான சமூக அறிவும் சமூகக் கல்வியும் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. சமத்துவத்திற்கான சமூகக் கல்வியை ஆசிரியர்கள் பெறுவதற்கான கல்வியமைப்பும் அதற்கான வாய்ப்புகளும் இன்னும் உருவாக்கப்படவில்லை; அதற்கான உரையாடல்களை வளர்த்தெடுப்பதற்கான களங்களும் சனநாயகத் தன்மையோடு இயங்கவுமில்லை.

இன்னும் கூட, இட ஒதுக்கீடு என்பதைப் பெரும்பாலான ஆசிரியர்கள் தப்பும் தவறுமாகவும் அரைகுறையாகவுமே புரிந்துவைத்திருக்கின்றனர். அதாவது, பி.சி; எம்.பி.சி; எஸ்.சி; எஸ்.டி எனும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் உள்ள பெரும்பாலோர், எஸ்.சி தரப்பினருக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருப்பதுபோல நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும், எஸ்.சி எனில் இழிவானது; தாழ்வானது என்கிற தப்பெண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், எஸ்.சி என்பதைத் தாழ்வாகவும் இழிவாகவும் கருதுகிற சமூகத் தப்பெண்ணங்களுக்கு எதிராகத் தம்மை எஸ்.சி இல்லை; எஸ்.சி பட்டியலில் இருந்து மாற்றி வேறு பட்டியலில் சேர்த்திடுங்கள் என்கிற குரல்கள் வெளிவருவதன் பின்புலமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

சாதியத்தைக் கரைக்கும் சமூகக் கல்வியும், தமிழர்கள் ஓர்மை எண்ணங்களும், சாதியவாதிகளைத் தனிமைப்படுத்தும் போக்குகளும் இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

ஆயினும், அவர்களும் சமம்தானே டீச்சர் எனும் முனீசுவரன் குரல்களும், நாங்களும் சமம்தானே டீச்சர் எனும் முனீசுவரன்கள் குரல்களும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

நாம், சமத்துவக் குரலெடுக்கும் இருதரப்பு முனீசுவரன்களையும் கொண்டாடுவோம்; அவர்கள் பக்கமே நிற்போம்.

ஏர் மகாராசன் 

17.06.2022

செவ்வாய், 7 ஜூன், 2022

வேளாண் மக்களைக் குறித்த தனித்துவ நூல் - ப.இளங்கோ


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரையுடன் அண்மையில் வெளிவந்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல். 

”வேளாண் மக்கள் ஆய்வுகள்”, ”வேளாண் மக்களியம்” என்னும் கருத்தியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் மகாராசன் எழுதிய இந்நூல், இன்றைய சமூகச் சூழலில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது என நான் நம்புகிறேன். 

இன்றைய நகரமயச் சூழலில் வேளாண் தொழில் மற்றும் வேளாண்தொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், வேளாண் தொழிலில் நீர் ஆதாரங்களாக விளங்கும் கண்மாய், ஏரிகள் போன்றவை சாக்கடைகளாக மாற்றப்படும் அவலம், கண்மாய், ஏரிகளைப் பராமரித்த வேளாண் மக்களை, வேளாண் நிலங்களிருந்தும், நீர்நிலைப் பராமரிப்பிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்ட வரலாற்றுச் செயல்பாடுகளையும் பொருத்திப் பார்க்கும் சமூகக் கண்ணோட்டத்தை இந்நூல் தந்திருக்கிறது.

     வேளாண்மையின் தோற்றத்தையும் தனிச் சிறப்பையும் முதல் கட்டுரையில் விளக்கியுள்ள நூலாசிரியர், காட்டாண்டியாக வாழ்ந்த மனிதன், நாடோடிச் சமூகத்திலிருந்து வேட்டை என்கிற செயலில் இருந்து விவசாயம் மூலம் எவ்வாறு தன்னுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான் என்பதையும், வேளாண்மை ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சியையும் மேம்பட்ட நாகரிகத்தையும் உருவாக்கியது என்பதையும் விளக்கியுள்ளார். 

    தமிழ் இலக்கியம் கூறும் ஐந்திணைகளில் வாழ்ந்த மக்களும் அவரவர் வாழ்வியலோடு வாழ்ந்து வந்தாலும், உணவு உற்பத்தி முறையைக் கையாண்டு வந்தாலும், மருதநிலத்தில் வாழ்ந்த மக்கள்தான் திருந்திய வேளாண்மையை மேற்கொண்டதன் மூலமாக நாகரீக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, அரசு உருவாக்கம் எனப் படிப்படியாகச் சமூகம் மாறி வந்ததை இந்நூலில் விளக்குவது மிகச்சிறப்பாக இருக்கிறது. மேலும், வேளாண் தொழில் செய்த மக்கள்தான் குடும்ப உருவாக்கம், நகர உருவாக்கம் மற்றும் பிற சமூக மக்களின் தொழில் உருவாக்கத்திற்கும் கூட்டு வாழ்க்கை முறைக்கும் ஆணிவேராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்றுப்பூர்வமாக விளக்கியுள்ளார். 

ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் வாழ்வியலையும், அதாவது, ஒவ்வொரு நிலத்தின் வாழ்வியலிலும் உணவு உற்பத்தி முறையையும், அதனோடு அமைந்த வாழ்க்கை நடத்தை முறைகளையும் தெளிவாக இலக்கியச் சான்றுகளின் துணையுடன் சிறப்பாக எடுத்துரைக்கிறார் மகாராசன். அதுமட்டுமின்றி, மருதம் - வேளாண் பெருக்கத்தின் நிலவளம் எனும் தலைப்பில் அமைந்த கட்டுரையில், ஒவ்வொரு நிலத்தின் விவசாயத்திற்கு ஏற்ற தன்மையையும், அதன் பெயர்களின் காரண காரியங்களையும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது. 

வேளாண்மை தான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது என, உலகப் பொதுமறையான திருக்குறளில் வழியாகச் சான்று காட்டுவது கூடுதல் சிறப்பாக உள்ளது. 

வேளாண் மரபும் அறிவும் எனும் தலைப்பிலான கட்டுரையில், தமிழ் நிலத்தின் வேளாண் மக்களின் வாழ்வியல், வேளாண்மை, வேளாண் தொழில்நுட்பம், வேளாண்மை சார்ந்த வாழ்வியல் மற்றும் பண்பாட்டு மரபு, அம்மக்களின் குடிப்பெயர் போன்ற அனைத்து செயல்பாடுகளையும், அவற்றை உயிரோட்டமாகப் பொதிந்து வைத்துள்ள பள்ளு இலக்கியத் தவுகள், நாட்டுப்புறவியல் வழக்காறுகள், பண்டைக்கால இலக்கண இலக்கியங்கள் உள்ளிட்ட ஏராளமான தரவுகளோடு ஆய்வுப்பூர்வமாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். 

நெல் வகைகள் எனும் தலைப்பில் அமைந்த சான்றாதாரங்கள், நெல்விடு தூது, பள்ளு இலக்கியம், பழனி செப்புப்பட்டயம் போன்ற சான்றுகளின் துணையுடன் வருங்கால சந்ததிகள் அறியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளது இந்நூல். நெல் வகைகளின் பெயர்களும், அவர்களின் பருவநிலைகளும், காலத்திற்கேற்றவாறு பயிரிடப்படும் சூழல் போன்றவற்றை நமக்கு அறியக் கிடைக்கும் புதுமையான தகவல்களாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். மேலும், வேளாண் தொழில் செய்யும் ஆண்கள், பெண்கள் மற்றும் வேளாண் குலத்தாரின் சிறப்புப் பெயருடன் அழைக்கப்பெறும் பெயர்கள், மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து அமைந்தவையே என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 

வேளாண்மை, உற்பத்திச் சடங்குகள், தெய்வ வழிபாடு இம்மூன்றும் பண்பாட்டு நாகரிக வாழ்வின் அங்கமாக அமைந்திருக்கின்றன. 

சடங்கியல் வழிபாடுகள், கொடை விழா போன்ற நிகழ்வுகளின் மூலம் காணக் கிடைக்கும் - காணக் கிடைக்கின்ற தரவுகள் எவ்வாறு வேளாண்மையோடு தொடர்புடையதாக அமைந்திருக்கின்றன என்பதை ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். 

நீரின் அவசியம், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம், விவசாயத்திற்கு நீரின் இன்றியமையாமை, மழை நீரை எவ்வாறு தேக்கிவைத்து வேளாண்மை செய்தனர் என்பதைக் குறித்த செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

மழைநீர் தற்செயலாகக் கடலை அடைவது ஒருபுறமிருந்தாலும், மழைநீரைச் செயற்கையாக ஒரு இடத்தில் தேக்கி வைத்து வேளாண்மை செய்வது ஒரு வேளாண் தொழில் நுட்பத்தின் முக்கியக் கூறாகும். இதனை மிக நுட்பமாக விவரித்திருக்கிறது இந்நூல்.

தெய்வ வடிவ உருவாக்கம் மக்களிடையே எவ்வாறு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற கருத்தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகின்றது. அதாவது, மனிதன் தான் வாழும் நிலம், தட்பவெட்ப நிலையில் குளங்கள் அமைவதைப் போல, தெய்வங்கள் என்பவையும் நிலம் சார்ந்த மக்களின் தொழில் நுட்பத்துடன் தோன்றியிருக்கும். மருத நிலத் தெய்வமாக - வேளாண் மக்களின் வழிபடு தெய்வமாக மழையைக் குறித்திருப்பதைத் தக்க சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைத்துள்ளது. 

அதாவது, மழைத் தெய்வமே வேந்தன் என்றும், விண்ணுலக வேந்தனே இந்திரன் என்றும், அத்தகைய மழைத் தெய்வமே இந்திரன் என்றும் இந்நூல் விரிவான ஆய்வை முன்வைத்து விவரித்திருக்கிறது. மேலும், தமிழர்களின் இந்திர வழிபாடு என்பது, ஆரியர்களிடம் இருக்கும் வழிபாட்டு மரபிலிருந்து வேறுபட்டிருப்பது என்பதையும், தமிழரான வேளாண் குடிகளின் இந்திர வழிபாடு குறித்தும் மிக விரிவாக இந்நூல் விளக்கியுள்ளது. 

வேளாண் மக்களின் வாழ்வியலோடு இயைந்தும் இணைந்தும் உழவுத் தொழிலுக்குத் துணை நின்ற அனைத்து உயிரினங்களுக்கும் நன்றி பாராட்டி மகிழும் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும், மழைச்சோறு எடுத்தல், போகிப்பண்டிகை போன்றவை நீர் ஆதாரங்களுடனும் விளைநிலங்களுடனும் தொடர்புடைய பாவனைச் சடங்குகள் என்பதைத் தக்க தரவுகளுடன் விளக்கியுள்ளார் மகாராசன். 

மழைவளம், நிலவளம் கருதிய உழவுச் சடங்கு, பயிர் வளம் கருதிய நடவுச் சடங்கு போலவே, உற்பத்தி மூலம் உணவு வழங்கிய அறுவடைச் சடங்கு மற்றும் சூரியன், மழை கால்நடைகள் போன்றவற்றுக்கும், வேளாண் உற்பத்தியில் ஈடுபட்ட - ஈடுபடுகின்ற உழவர்களுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றி உணர்வையும் வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் எனும் பண்பாடாக விளங்குவதைக் காணலாம்.

உழவுத் தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியை அறுவடை விழாவாகக் கொண்டாடும் வேளாண் உற்பத்திச் சமூகத்தின் நிகழ்த்து வடிவமாய் - பண்பாட்டு வழக்கமாய் தமிழ் சமூகத்தில் பன்னெடுங்காலமாய் நிகழ்ந்து வருவதைப் பல தரவுகளுடன் விவரிக்கிறது இந்நூல்.

வேளாண்மை தொடர்புடைய சடங்கியல் கூறுகள், வேளாண் மக்களோடு இன்றும் உயிரோட்டமாகத் திகழ்வதை வரலாற்று நோக்குடனும் சமகால நாட்டுப்புற மக்களின் வாழ்வியலோடும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.

வேளாண் மரபினரின் உற்பத்திச் செயல்பாடுகளும், சடங்கியல் வழிபாட்டு முறைகளும், வாழ்க்கை முறைகளும் தனித்துவமான பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளன என்பதை விளக்கப்படுத்தும் இந்நூல், வேளாண் மக்களைக் குறித்து வெளிவந்திருக்கும் நூல்களில் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது என்பதற்கு இந்த நூலின் சான்றாதாரங்களே நிதர்சனம் ஆகிறது. 

*

கட்டுரையாளர்:
ப.இளங்கோ,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நாட்டுப்புறவியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை-76
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9080514506.