செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

முல்லைக்குத் தேர் ஈந்ததைத் திரும்ப எழுதுதல்: மகாராசன்

வெக்கையில் காய்ந்தும் விரிப்போடியும் கிடந்த நிலமெல்லாம், குளிரக் குளிரப் பெய்த மழையால் பசப்புமேனிப் பூப்பெய்திக் கிடந்தது. காடெல்லாம் கம்மென்று மணத்துப் பரவியது. கடுக்கை, தோன்றி, இல், எள், துவரை, அவரை, குல்லை, முல்லைச் செடிகொடிகள் சூல்பிடித்து ஈனுகையில், வனத்தில் வானம் முட்ட எழுந்திருந்த மரங்களின் நிழல், வெயில் முகத்தான் பார்த்திடாதபடி மறைத்துக்கொண்டிருந்தது.

காட்டு வனத்தாள் நாள்தோறும் வகைவகையாய் ஈன்று கொண்டிருந்தாள். பிள்ளைத் தாய்ச்சியாய்த் தனித்திருந்த காட்டுவனத்தாள் சில்லெனக் கோதி இருந்தாள். சிலிர்த்திருக்கும் புற்கள், பூத்துக் குலுங்கும் செடிகள், காய்த்துத் தொங்கும் மரங்கள் தோரணங்களாய்ச் சிரித்துக்கொண்டிருந்தன.

சலசலவெனக் கேட்கும் காட்டாறும், பூச்சிகளும் பறவைகளும் இசைக் கோலத்தை வனத்தின் பக்கமெங்கும் வரைந்து கொண்டிருந்தன.

கோல், கொடி, கோட்டை, அரண், வாயில் என நாட்டுக்குள் அரசாளும்
மன்னவனாக இருந்தாலும், சூரியன் கூட உள்புக முடியாத பச்சை மரகதக் கோட்டையாம் காட்டுக்குள் நுழைந்து விட்டால் அவனும் ஒரு பிள்ளைதான் வனத்தாளுக்கு.

வளமேறிய காட்டின் அழகையெல்லாம் அவ்வப்போது பார்த்துவிட்டுத்தான் வருவான் அவன். போரும் பகையுமாய்க் கிடந்ததால், கொஞ்ச நாளாய்க் காட்டுக்குள் போய்வர முடியாமல் போயிற்று.

போர்க் காயங்கள் ஆறிக்கொண்டிருந்த நிலையில், மனதில் உரசிய சிராய்ப்புக் காயங்கள் மட்டும் இன்னும் ஆறிய பாடில்லை. கோட்டைக்குள்ளிருக்கும் பொழுதுகள் புழுத்துப்போயின.

எங்காவது போய் வரவேண்டும் என உள்மனம் கெஞ்சிக்கொண்டே இருந்தது. பிள்ளைகள் இருவரையும் அழைத்துப்போகலாம் என நினைத்தவன், சட்டென்று கிளம்பி முற்றத்துக்கு வந்தான்.

வயதொத்த பிள்ளைகளோடு பாண்டியம் விளையாடிக் கொண்டிருந்தனர். சில்லுகளைக் கட்டங்களில் போட்டு நொண்டி அடித்துத் தாண்டி விளையாடிய மகள்களின் குதூகலத்தைக் குலைத்துப்போட மனமில்லாமல் தேர் அருகே வந்து நின்றான்.

கொள்ளு தின்று முடித்திருந்த குதிரைகளை இழுத்து வந்து தேரில் பூட்டிக்கொண்டிருந்தான். தேர்ப்பாகன் பதைபதைத்து அருகே ஓடிவந்தான். தான் மட்டுமே தேரில் போய் வருகிறேன் ஓய்வெடு என்று பாகனிடம் சொல்லிவிட்டு, எட்டியிருக்கும் காடு நோக்கிப் புறப்பட்டான்.

வெளியூர் போயிருந்த தன் மகன், வீடு நோக்கி வருகையில் மனதெல்லாம் பூரிப்பாகி உச்சி முகரும் தாய்ச்சிகள் போலவே, காட்டுக்குள் நுழைந்த அவனுக்கு வனத்தாய்ச்சியின் காட்டு மணம் நாசிக்குள் நுழைந்து மனதை முத்தமிட்டு வந்தது.

வெக்கையில் காய்ந்து காயம்பட்டுக் கிடந்த காட்டுக்கு, மழையாள் வந்து மருந்திட்டுப் போயிருக்கிறாள். காட்டின் காயங்கள் ஆறிப்போனதும், பசுந்தோல் படர்ந்து விரிந்ததும், செடிகொடிகளும் பூக்களுமாகப் பயிர்க்கால்கள் முளைத்து எழுந்ததும் பார்த்த அவனின் மனக்காயங்களும் மெல்ல ஆறத் தொடங்கின.

வெறுங்கால்களில் நடக்கையில் பாசிப்புற்களின் ஈரக் கோதல் பாதங்களைச் சிலிர்க்கச் செய்தன. வனப் பூக்களின் மணத்தையெல்லாம் மூச்சிழுத்து மனக்காயத்திற்குத் தடவிக் கொடுத்தான். ஒவ்வொரு பூஞ்செடிகளின் இலைகளையும் இதழ்களையும் தடவித் தடவி அழகையெல்லாம் கண்ணுக்குள் சொருகி மனதுக்குள் நீவிக்கொண்டிருந்தான். வெகுநாளைக்குப் பிறகு இன்று புதிதாய்ப் பிறந்தது போலவும் உணர்ந்தான். அவனது மனமும் உடலும் அறிவும் சிலிர்ப்படைந்திருந்தன.

உச்சிப்பொழுது மெல்லச் சாய்ந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் நினைப்பும் வந்துவிட்டது. வந்த தடம் பிடித்து அதன் வழியே திரும்பிக் கொண்டிருந்தான். எல்லாச் செடிகொடிகளும் துணையாகவும் இணையாவும் பிணையாகவும் இருந்து கொண்டிருந்த தோழமை அழகை மனதால் அள்ளிப் பருகியபடி காட்டிலிருந்து காலாற நடந்தபடி தேர் அருகே வந்து சேர்ந்தான்.

நிறுத்தியிருந்த தேரின் அருகே ஒரு முல்லைக் கொடியானது, பற்றிப் படர்வதற்குப் பற்றுக் கம்பு இல்லாது காற்றில் அல்லாடிக் கொண்டிந்தது.

காட்டின் அடையாளமும் காதல் இருந்தலின் அடையாளமும் இந்த முல்லைதானே.

முல்லை அல்லாடுவது இவன் மனம் அல்லாடுவது போலவே இருந்தது. அது அல்லாடாமல் தாங்கி நிற்க ஏதாவது செய்திட வேண்டும் என நினைத்தான். அது பற்றிப் படர்வதற்குக் காய்ந்து முறிந்து போன சிறு சிறு சுள்ளிகளைக் கொண்டும் குச்சிகளைக் கொண்டும் பந்தல் போன்ற படர் அமைத்தான். அந்தப் படரில் கொடியை ஏறவிட்டான். இனி முல்லை அல்லாடாது. அதுபற்றிப் படர்ந்து சிம்படித்துப் பூத்துக் குலுங்கும் என்ற குதூகலப் பூ அவன் மனதுக்குள்ளும் மணத்தது.

தேர் மேல் ஏறிப் புறப்பட நினைத்தவன், முல்லைப் படரைத் திரும்பப் பார்த்தான். முல்லைக் கொடிக்கு அவன் அமைத்திருந்த அந்தப் பந்தல் படரே தேர் போன்ற தோற்றத்தைக் கொடுத்து விட்டிருக்கிறது.

ஓட்டி வந்த அவனது தேர் உயிரில்லாமல் இருப்பதையும், அவன் அமைத்திருந்த  பந்தல் படர் உயிர் படர்ந்து சிரித்திருப்பதையும் பார்த்த அவன், ஓட்டி வந்த தேரை இழுத்து வந்து, படர் அருகே நிறுத்தியும் விட்டான்.

இந்தத் தேரும் இந்த முல்லைக்கொடியால் படர்ந்து உயிர்பெறட்டும் என உள்ளுக்குள் நினைத்தபடி, குதிரைகளை அவிழ்த்துக்கொண்டு காலாற ஊர்நோக்கி நடந்து வந்தான்.

வருகின்ற வழியிலெல்லாம் படர்வதற்கு அல்லாடும் முல்லைக்கொடிகள் கண்ணில் படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான். எது எது அப்படிக் கண்ணில் படுகிறதோ அவற்றுக்கெல்லாம் படர் அமைக்கச் சொல்லவேண்டும் என்று குறித்தபடி அரண்மனை வந்து சேர்ந்தான்.

தேரில்லாமல் வெறும் குதிரைகளுடன் மட்டுமே திரும்பிவந்த அப்பனிடம் மகள்கள் இருவரும் அக்கறையாய் ஓடிப்போய் என்ன ஏதுவென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இருவரையும் கக்கத்தில் அணைத்தபடி முல்லைக்கொடித் தேர்ப் படரைப் பற்றி கதை கதையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்பனின் தேரையும் முல்லையின் தேரையும், அப்பனின் தேரானது முல்லைக்குத் தேரானதையும் பார்க்க வேண்டும் என மகள்கள் இருவரும் அப்பனிடம் இரவு முழுக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலை விடிவதற்குள் கண்கள் விழித்துக் கிடந்தனர் மகள்கள்.
மகள்களை இன்னொரு தேரில் அழைத்துக்கொண்டு போனான்.

முல்லைப் படரையும் தேரில் படர்ந்திருந்த முல்லைக் கொடியையும் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டே  முல்லையோடு எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்தத் தேரையும் இங்கு நிறுத்திவிட்டுப் போவோமா எனப் பிள்ளைகள் கேட்க, இப்போதைக்கு இதற்கு இது போதும் மகள்களே! இன்னொரு தேரும் இதற்கு வேண்டாம் மகள்களே! இதையும் கொடுத்துவிட்டால் தேர்ப்பாகன் நமை வைதுவிடுவான் என மெல்லச் சிரித்துக்கொண்டான்.

முல்லை அல்லாடாமல் தேர் அமைத்த அப்பனின் அந்த அக்கறை உணர்வு அன்றிலிருந்து மகள்களுக்கும் வந்துவிட்டது. காட்டில் மட்டுமல்ல, அரண்மனை வீட்டு முற்றத்திலும் ஒரு முல்லைச் செடியை நட்டுவைத்து, அம்முல்லைக் கொடி சிம்படித்துப் படர முயலும்போது குச்சிகளால் படர் அமைத்தனர் பெண் பிள்ளைகள். அந்தப் படரும் பார்ப்பதற்குத் தேர் போலவே இருந்தது. முல்லைக்கு அப்பன் மட்டுமல்ல; பிள்ளைகளும் தேர் ஈந்தனர்.

அன்றிலிருந்து, முல்லைகள் படர்ந்த அந்தக்காடும், காட்டின் மகுடமான அந்தப் பறம்புமலையும் பெண்பிள்ளைகளின் தோழிகளாயிற்று. விழிகள் பார்த்த பறம்புமலை, பெண் பிள்ளைகளின் மொழியிலும் பரவிக் கிடந்தது.

முந்நூறு ஊர்கள் சூழ்ந்திருந்த பறம்புமலை நாட்டின் இயற்கை வளங்கள் மீது பேரரசுகளின் கண்கள் குறி பார்த்துக்கொண்டே இருந்தன.

தங்களுக்குள் மோதிக்கொண்ட பேரரசுகள் பறம்புமலைநாட்டின் மீது போர்தொடுக்கும்போது மட்டும் கூட்டாகச் சேர்ந்து கொண்டன. ஈழத்தில் கொத்துக்கொத்தாய்க் கொன்றழிக்கக் கூட்டுச் சேர்ந்தாற்போல், பறம்புமலை வளங்களைச் சூறையாட மூவேந்தப் படைகளும் ஒன்றாய்ச் சேர்ந்து பறம்புமலையைத் தாக்க முனைந்தன.

தன் குடிகளையும் நிலத்தையும் பறம்புமலையையும் காக்கத் தம்மால் முடிந்தளவு போராடிப் பார்த்தான் பறம்புமலைத் தலைமகன். ஆனாலும், போர்க்களத்தில் தானும் ஒரு வீரனாகவே மடிந்துபோனான் அவன். பறம்புமலையும் இப்போது பேரரசுகளின் கையில்.

அப்பனை இழந்த பெண் பிள்ளைகள் அநாதைகளாகவும் அகதிகளாகவும் தனித்து நின்று அழுது கொண்டிருந்தனர்.

பற்றுக்கோடு இல்லாது அல்லாடிய முல்லைக்குத் தேர் ஈந்த அப்பன் கொல்லப்பட்டான். அம்முல்லைக்குத் தேர் ஈந்த அந்தப் பெண் பிள்ளைகள் அரவணைப்பார் எவருமின்றி அகதிகளாக நின்று கொண்டிருந்தனர். முல்லைக்குத் துணை நின்றவர்களுக்கு இப்போது யாருமே துணையில்லை.

அப்பனை இழந்து, மக்களை இழந்து, நாடிழந்து அகதியாய் அழுது தவித்தனர் பெண் பிள்ளைகள்.

போன மாத நிறைமதி நாளில் நாங்கள் தந்தையுடன் மகிழ்ந்திருந்தோம். இந்த மாத நிறைமதி நாளில் எம் குன்றையும் பிறர் கைப்பற்றிக்கொண்டனர். எம் தந்தை எங்களுடன் இல்லை. என்ன செய்வோம்? என அழுத பெண் பிள்ளைகளின் நினைப்பில் அப்பனும் பறம்புமலையும்தான் திரும்பத் திரும்ப வருகின்றன.

*
“அற்றைத் திங்கள் அவ்வெண்நிலவில்
எந்தையும் உடையேம்;
எம்குன்றும் பிறர் கொளார்.
இற்றைத் திங்கள் இவ்வெண்நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர்
எம்குன்றும் கொண்டார்!
யாம் எந்தையும் இலமே?”

முல்லைக்குத் தேர் ஈந்த பாரி மகள்களான அங்கவையும் சங்கவையும் பாடிய இந்தப் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றிருக்கிறது.

அங்கவையும் சங்கவையும் பாடிய அந்தப் பறம்புமலை வெறும் மலையல்ல. பல்லுயிர்களின் தாய்மடி. இயற்கையின் வரம். பழந்தமிழர் வரலாற்றின் தொன்மை. பாரி, அங்கவை, சங்கவை மட்டுமல்ல; பல்லாயிரம் மக்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் ஆத்மா.

அந்தப் பறம்புமலையைத் தான், முதலாளிகளும் அரசியல்வாதிகளும் சுரண்டல்வாதிகளும் இப்போது சிதைக்கவும் அழிக்கவும் சுரண்டவும் தொடங்கி இருக்கிறார்கள்.

பறம்புமலை பாரிக்கு மட்டுமல்ல;
அங்கவை சங்கவைக்கு மட்டும் உரியதல்ல; அது நமக்கும் உரியது; தமிழர்க்கு உரியது.

*
பறம்புமலை மீட்போம்.
இயற்கை வளம் காப்போம்.
பறம்புமலைப் பாதுகாப்பு இயக்கத்தோடு துணை நிற்போம்.

*
ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
04.08.2020

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

வேளாண் மக்கள் ஆய்வுகள் (Agrarian Studies) முன்னெடுப்பு: மகாராசன்.

நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் உணவைச் சேகரிப்பது அல்லது வேட்டையாடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களால், நிலத்தையும் நீரையும் ஒருங்கே பிசைய உயிரை உருவாக்க முடியும் என்று கண்டுகொண்ட உணவு உற்பத்தி முறையே வேளாண்மை என்பதாகும்.

ஒற்றை விதைக்குள் அரூபமாய்ப் புதைந்திருக்கும் பல விதைகளை வெளிக்கொண்டு வரும் வித்தையாகவும், மானுடம் கண்டுபிடித்த முதலும் கடைசியுமான உணவு உற்பத்தித் தொழில்நுட்பமாகவும் அமைந்திருப்பது வேளாண்மையே ஆகும்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள்.  அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் என்று படர்ந்து விரிந்தது.  தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு.  எழுத்து என்ற புதிய தொழில் நுட்பத்தின் வருகைக்கும் வேளாண்மைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  சங்கக் கவிதைத் தொகுதிகளை உருவாக்கியதற்கும் நெல் வேளாண்மைக்கும் தொடர்புகள் உண்டு.  அரிசியிலிருந்து அதிகாரத்தைக் கற்பனை செய்யும் வழக்கம் தமிழில் இருந்திருக்கிறது. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும் அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய உறவுகள் இருந்திருக்கின்றன.

வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் நம்மால் நிரூபிக்க முடியும்.  சொல்லப்போனால், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில தமிழ்ச் சிந்தனையை நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது.  அதன் புற அகச் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்களை வேளாண் வாழ்க்கையில் தடம் காண முடியும். 
அவ்வகையில், வேளாண் வாழ்க்கை என்பது வேளாண் மக்கள் என்றே இங்கே பொருள்படுகிறது. 

தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திக் களமாக இருக்கும் வேளாண்மைத் தொழில் மரபுகளைக் குறித்தும், அத்தகைய வேளாண் தொழில் மரபினர்களான வேளாண் மக்களைக் குறித்துமான தனித்துவ அக்கறையும் ஆய்வுகளும் படைப்புகளும் கலைகளும் மீள் உருவாக்கங்களும் முன்னெடுக்கப்படாமலேதான் இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருட்களைப் பரந்துபட்ட பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய தேக்கநிலையே இன்றுவரை நிலவுகின்றது.

காலங்காலமாகவே, ஆளும் வர்க்கத்தாலும், அதிகார நிறுவனங்களாலும், சுரண்டல் முறைகளாலும், உலகமய நுகர்வு வெறித்தனங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களாலும் மட்டுமல்ல; இந்திய ஒன்றியம் மற்றும் தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களாலும் அவற்றின் நடைமுறைக் கொள்கைகளாலும் மட்டுமல்ல; உணவு உற்பத்தியை அனுபவிக்கும் பொதுச் சமூகத்தின் பாராமுகத்தாலும் அதிகம் வஞ்சிக்கப்படுவது வேளாண்மைத்தொழிலும் அது சார்ந்த வேளாண் மக்களுமே ஆவர்.

எல்லாக் காலத்திலும், எல்லா வகையிலும், எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகிற, சுரண்டப்படுகிற, ஒடுக்கப்படுகிற, இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மைத் தொழில் குறித்தும் வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள், கலை இலக்கியப் படைப்பு உருவாக்கங்கள், அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறையுடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், வேளாண்மையும் வேளாண் மக்களுமே இந்தச் சமூகத்தின் உணவு உற்பத்தி அரங்கமாகவும் உற்பத்தி உறவுகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் பழங்குடிகள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர், மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர், இந்திய ஒன்றிய அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் பற்றிய பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேவேளையில், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை.

இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் அக்கறையோடு கூடிய ஆய்வுகளும் படைப்புகளும் அரசியல் உரையாடல்களும் மிக அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் தத்தமது வேளாண்மை, வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருளைக் கவனப்படுத்தி வருகின்றன. இத்தகைய வேளாண்மை மற்றும் வேளாண்மை மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies)
எனும் பேரிலேயே தனித்துவமாகச் செய்து வருகின்றன. தமிழ்ச் சமூகத்தில்தான் வேளாண்மை குறித்தும் வேளாண் மக்களைக் குறித்தும் பேசுபொருட்களாக முன்வைத்து ஆய்வுகள், படைப்புகள், உரையாடல்கள் முன்னெடுப்பதற்குத் தயக்கமும் கூச்சமும் புறக்கணிப்பும் நிறைந்த ஒவ்வாமையும் ஒதுக்குதலும் நிலவிக்கொண்டிருக்கிறது.

வேளாண்மையும் வேளாண் மக்களும் இந்தச் சமூத்தின் மிக முக்கியமான உயிர்நாடி என்பதைப் பொதுச் சமூகம் இன்னும் உணரவே இல்லை. இந்தச் சூழலில்தான், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வு'களாக (Agrarian Studies)
முன்னெடுத்து, பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் உலக சமூகத்தின் பார்வைக்கும் முன்வைக்கும் செயல்பாடுகளை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பேரில் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு, வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies)
முன்னெடுக்கப்படும் உரையாடல்கள் மூலமே, உலகின் பல பகுதிகளில் உள்ள வேளாண் மக்கள் ஆய்வுப் புலங்களோடு உறவும் ஒருங்கிணைப்பும் பகிர்வும் நடைபெற இயலும். இந்த ஒருங்கிணைப்பின் வழியாகவே தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த கவனிப்பை உலக அரங்கிலும் உள்ளூர் அரங்கிலும் கவனப்படுத்த முடியும்.

பாலினம், நிறம், இனம், சாதி, மதம் போன்றவற்றால் ஒடுக்குதலுக்கும் சுரண்டுதலுக்கும் உள்ளாகும் அனைத்துத் தரப்பினரும் உள்ளூர் அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் ஒருங்கிணைப்பையும் உறவையும் வைத்திருக்கின்றன. அதனால், அதனதன் பிரச்சினைப்பாடுகள் அல்லது பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்தும் 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பேரில் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படுகிறபோதுதான் வேளாண்மையும் வேளாண் மக்களும் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பேசப்பட வைக்க முடியும். இதை வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies)
முன்னெடுத்து 'வேளாண் மக்களியம்' (Agrarianism)
எனும் கோட்பாடாகவும்கூட எதிர்காலத்தில் வடிவமைக்க இயலும்.

அந்தவகையில், வேளாண் மக்கள் ஆய்வுகளை (Agrarian Studies)
முன்னெடுக்க பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியலாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், வேளாண் மக்கள் தரப்பினர், இதரத் தொழில் பிரிவினர், அறிவுத்துறையினர் போன்றோர் முன்வரத் தொடங்கி உள்ளனர்.

'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies)
எனும் இச்செயல்பாடுகளில் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து கொள்ளலாம்.

மக்கள் தமிழ் ஆய்வரண் உள்ளிட்ட மேலும் சில அமைப்புகளின் வழியே வேளாண் மக்கள் ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. கூடுதலாக இணைவோரும் இணையலாம்.

இன்றைய கொரோனா தீநுண்மி நோய்த்தொற்றுச் சூழலில், நிலமும் நீரும் காற்றும் மட்டுமல்ல, சக மனிதருமேகூட நஞ்சு என்று கருதுகிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  முற்றிலும் புதிய வாழ்க்கையொன்றிற்கு வலுக்கட்டாயமாகப் பழக்கப்படுத்தப்படுகிறோம்.  இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே வேளாண் மக்கள் ஆய்வுகளின் இப்போதைய மய்யப்பொருள். 

இன்றைய சமூகம் கொண்டு வரும் சவாலை எவ்வாறு எதிர்கொள்வது?  நமது நிலப்பரப்பை மாற்றியமைக்கப் போகிறோமா?  சமூகக் கட்டுமானங்கள் உருக்குலையத் தொடங்குகின்றனவா?  கலை வடிவங்கள் திரியத் தொடங்குகின்றனவா?  அறம், புதிய விளக்கங்களுக்கு உட்படுகிறதா?  ஒழுக்க வரையறைகளை மறுபரிசீலனை செய்கிறோமா?  அரசு, அதிகாரம், அறிவு போன்றவை எவ்வாறு உருமாற்றம் அடைகின்றன?  இத்தனைக்கும் நடுவில் பெரும்பான்மை வேளாண் மக்களின் நிலை என்னவாகப் போகிறது? என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ‘வேளாண் மக்கள் ஆய்வுகள்’ வழியாக உரையாடலைத் தொடங்க இருக்கிறது மக்கள் தமிழ் ஆய்வரண்.

இணைவோம்.

ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
30.06.2020

நீர் அறுவடைப் பண்பாடும் பள்ளு இலக்கியச் சித்திரமும் : மகாராசன்.


தென்மேற்குப் பருவ காலத்தில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கி வந்திருக்கிறது. ஆடி மாதக் காலங்களில்  தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றன. அதனையே ஆற்றுப்பெருக்கு எனக் குறித்திருக்கின்றனர். ஆற்றுப் பெருக்கு வரும் மாதத்தையே ஆடிப்பெருக்கு என்றழைத்திருக்கின்றனர்.

மழைநீரையும் ஆற்று நீரையும் நீர் ஆதார நிலைகளுக்குக் கொண்டு சேர்த்து, முதலில் நீரை அறுவடை செய்து, அறுவடை செய்த நீரைக்கொண்டு வேளாண்மை உழவுத் தொழிலுக்குத் தயாராகி இருக்கின்றன  நீர்ச் சமூகம் உள்ளிட்ட உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும்.

குடி மராமத்துப் பணிகளில் நீர்ச் சமூகத்தின் பெருந்துணையோடு வேளாண் உற்பத்தியின் தலைக் குடியும், அதற்குத் துணையான 18 குடிகளும் கூடி உழைத்ததால் / கூடிச் செயலாற்றியதால் / உழைத்து முடித்ததால் நீரை அறுவடை செய்வதற்கும், பயிர் விளைவிப்புக்கான உற்பத்திச் செயல்பாட்டின் முன் தயாரிப்புமாக  ஆற்று நீரை வரவேற்க உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும் ஆற்றங்கரைகளில் களிப்புடன் கூடி இருக்கின்றனர்.
நீர் அறுவடைக்கான அந்தக் கூடுகையே ஆற்றுப் பெருக்கும் ஆடிப்பெருக்குமான உற்பத்திப் பண்பாடாய் நிகழ்த்து வடிவம் பெற்றிருக்கின்றது.

நிலம், நீர், உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப்பண்பு போன்றவற்றால் உடலியல் திறனாலும் உளவியல் ஈடுபாட்டாலும், உணவு உற்பத்திப் பண்பாட்டாலும் தமக்கென வாழ்வியல் பண்புகளை வகுத்துக் கொண்ட வேளாண்குடிகள், நீர்ச் சமூகத்தின் பேருதவியோடு தமது உற்பத்திச் செயல்பாடுகளுள் ஒன்றாக நீரை அறுவடை செய்வதும் நிகழ்ந்திருக்கிறது. அந்தவகையில், நீர் அறுவடைக் களிப்பின் வெளிப்பாடுதான் ஆடிப்பெருக்கின்  கூடுகை அமைந்திருக்கின்றது.

ஆடி மாதத்து ஆற்றுப் பெருக்கை வைத்தே உழவர்கள் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். ஆடிப் பட்டம் தேடி விதைக்க, ஆற்றின் புது வெள்ளத்தை வேளாண் குடிகள் மகிழ்வுடன் அறுவடை செய்து வரவேற்கும் பண்பாட்டியல் நிகழ்வுதான் ஆடிப் பெருக்கின் கூடுகை. வேளாண்மை சார்ந்த பண்பாட்டுக் கூடல் விழாவாகத்தான் ஆடிப் பெருக்கு இருந்திருக்கின்றது.

நீர் அறுவடைப் பண்பாட்டைத் தம்மகத்தே கொண்டிருக்கும் வேளாண் உழவுத்தொழில் மரபினரைக் குறித்த பள்ளு இலக்கியங்கள் நீர் அறுவடை நிகழ்வுகள் பற்றி நிறையவே பதிவு செய்திருக்கின்றன.

தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றான முக்கூடல் பள்ளு இலக்கியமானது நீர் அறுவடைச் செயல்பாட்டு நிகழ்வைக் காட்சியாக விவரிக்கும் பகுதிகள், நீர் அறுவடைப் பண்பாட்டுக்கான மிக முக்கியமான இலக்கியச் சான்றுகளாகும்.

மழைமேகம் சூழ்ந்து மழைக் குறி தென்பட்டது. எல்லாத் திசைகளில்இருந்தும் மேகங்கள் வரத் தொடங்கின. குடி மராமத்து செய்து நீர்நிலைகளைத் தயார் நிலையில் வைத்திருந்த வேளாண் உழவுக்குடிகள், மழைக்கான அறிகுறிகள் தென்பட்டதும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வரவேற்ற நிகழ்வை,
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
     மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே!
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே
     கேணி நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே!
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே
     மழை தேடி ஒருகோடி வானம் பாடி யாடுதே!
போற்றுதிரு மால்அழகர்க்கு ஏற்றமாம் பண்ணைச்
    சேரிப் புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே!
என, முக்கூடல் பள்ளு நூல் பதிவு செய்திருக்கிறது.

மழைக் குறி பற்றிய இந்தப்  பாடல், நீர் அறுவடைக்கு தயாரான நிகழ்வைச் சுட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.
தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது. கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன. மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன. இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவ்வாறு, மழைக்குறி கண்ட பள்ளர்கள் யாவரும் துள்ளி ஆடியிருக்கின்றார்கள்  என்பதனையே அப்பாடல்  விவரித்திருக்கின்றது.

மழைநீரைப் பாதுகாக்கப் புறப்படத் தயாராகும் அவர்கள், மழையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தயாரானதைப் பற்றிக் கூறும்போது,
இக்கரைக் காலிற்பொருநை அக்கரைக் காலின்
     மழைக்கு ஏமமென்றுஞ் சாமமென்றும் நாமல்லோ போவோம்!
தக்க தோணியைத்துறையிற் சிக்கெனக் கட்டும்;
     படல் தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும்.
பக்கமே யூசிக்காம்பு சுழுக்கு வாய்க்கிடும்
     சீலைப் பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும்.
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில்
     பள்ளர் முழுதுங் குரவையிட்ட எழுதின மாடீர்.
என்கிறது பள்ளுப் பாடல்.

அதாவது, மழை நீரைப் பாதுகாத்துக்கொள்ள ஆற்று வாய்க்காலுக்குச் சாமம் என்றும் ஏமம் என்றும் பார்க்காமல் நாமல்லவோ செல்கிறாம். துறையைக் கடக்க உதவும் தோணியைக் கட்டி வையுங்கள். மழையில் நனையாமல் செல்ல தாழங்குடை கொங்காணி ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.  ஊசிக் காம்பில் சீலைத்துணி சுற்றிப் பந்தம் செய்து எண்ணெய் ஊற்றி எரிய விடத் தயாராகப் பொருள்களை வைத்திக்கொள்ளுங்கள் என, மழைப் பாதுகாப்பையும் மழைக்குப் பாதுகாப்பையும் பற்றி எடுத்துரைத்துள்ளது அப்பாடல்.
கரு உண்டானால் குழந்தை பிறக்காமல் போகாது. அதுபோலத்தான், கடலில் மேய்ந்த மேகங்கள் காற்றில் உந்தப்பட்டுக் காலூன்றிப் பெய்தன.

சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறு! செங்கண்
மால்ஆசூர் நன்னாட்டில் மழையுமந்த வண்ணமன்றோ!
வேலா வலயம் முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில்
காலான தூன்றி யந்தக் காலமுறை காட்டியதே.
என, காலூன்றி மழை பெய்த நிகழ்வு விவரிக்கப்படுகிறது.

மழையை இந்திரன் என்பதாக உருவகம் செய்து, மழைத் தெய்வமாக இந்திரனையே வழிபடும் வழக்கம் தமிழ் மரபில் இருந்திருக்கின்றது. பண்டைக் காலத்தில் இந்திர விழா மழைவேண்டி நடத்தப்பட்ட வழிபாடாகச் சிலப்பதிகாரம் குறித்திருக்கின்றது. அந்தவகையில், மழைத் தெய்வமாகக் கருதப்படும் இந்திரன் ஆணையின் பேரில்தான் மழை பொழிவதாக வேளாண் மக்கள் கருதினர்.

இந்திரன் ஆணையின் பேரில் மேகங்கள் சென்றன. கடலில் படிந்து நீரை அள்ளிக்கொண்டன; வானவில் தோன்றியது; மேகம் கரிய உருவம் கொண்டது; பொன்னிறத்தில் மின்னல்கள்மின்னின; மேகம் நீரைச் சுமந்து உலாவிக் கருத்து மழையாகப் பொழிந்தன. மழையில் குளிர்ந்து, மழைக்குப் பின்பு வானம் வெளிறியது என்பதை,
காவுக் கிறைவனாகும் இந்திரன் ஏவற்பணி கொண்டெழுந்த கார்
      கடலிற் படிந்து; திருவிற் கொட்டி; அடல்முக் கூடல் அரியுமாய்
பூவுக் குயர்ந்த கலை மின்னோடு மேவிக் கமலத் தயனுமாய்ப்
      புனலைத் தரித்து; வரையிலேறிக் கனலைத் தரித்த சிவனுமாய்த்
தாவிப் பறந்து; பணிகள் பதுங்கக் கோவித்தெழுந்த கருடனும்
      தானேயாகி உலகுக் குரிமை ஊனேயாகி உயிருமாய்க்
கோவிற் பெரிய வட மலேந்திரன் மாவிற் கறுத்துப் பொழிந்தபின்
      குளிருகின்றது; கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே.
என்கிறது பள்ளுப் பாடல்.

மழையானது எல்லா நிலத்திலும் பெய்திருக்கிறது. குறிஞ்சி நிலத்திலும் ஆற்று வெள்ளம் வந்தது.  வான அரசன் வள்ளலாகிப் பொழிய, மலை மன்னன் பரிசு பெற, மழை வெள்ளம் முழங்கிக் கொண்டு பாய்ந்தது.
யானைகள் நீராடின; பன்றிகள் உருண்டன; வெள்ளம் சந்தன மரத்தை உருட்டிக்கொண்டு வந்தது; மூங்கில் மரங்கள் சாய்ந்தன; குளவிப் பூச்சிகள் அலைந்தன; தேன் கூடுகள் கலைந்தன; காட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன; குறவர் ஊரில் வெள்ளம் புகுந்தது. தினை உதிரவும் பாலை நிலத்தை மாற்றவும் குறிஞ்சி நிலத்தில் ஆற்று வெள்ளம் வந்ததாகப் பள்ளுப்பாடல் கூறும்போது,
வானக் குருசில் வள்ளலாய் வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய்
      வழங்கு மாறும் புறப்பட்டே புனல்முழங்கு மாறுந் திறப்பட்டே
தானக் களிறு படிந்திடக் கொலை ஏனக் களிறு மடிந்திடத்
      தழையின் ஆரம் உந்தியும் பசுங் கழையின் ஆரம் சிந்தியும்
கானக் குளவி அலையவே மதுபானக் குளவி கலையவே
      காட்டுச் சாதி வேரிற்போய்க் குறமோட்டுச் சாதி ஊரிற்போய்ச்
சேனைப் புரவி அழகனார் மருகோனைப் பரவி அழகுபூந்
      தினையை வனத்தில் உதிர்த்துப் பாலையனைய வனத்தை எதிர்ந்ததே.
எனப் பதிகின்றது.

குறிஞ்சியை அடுத்த முல்லை நிலத்திலும் மழைநீர் ஆற்று வெள்ளம் பாய்ந்தோடியதைப் பள்ளுப்பாடல் எடுத்துரைத்துள்ளது.
எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும்
      இருப்பை ஈந்து கள்ளியுங் கரைப் பொருப்பை ஈர்ந்து தள்ளியும்,
முதிரும் பாறு முறையிடக் கழுகுதிரும் பாறு சிறையிட
      முள்வேலெயினக் கிடைஎழப் பதி வெள்வேலெயினப் படைஎழப்
பிதிருங் காளை விழியுடன் குடல் அதிருங் காளை மொழியுடன்
      பெரு மறத்திய ரல்லவே எனுங் கருமறத்தியர் செல்லவே
கதிருங் காலும் போலவே சென்றுதிரங் காலுஞ் சூலவேற்
      கன்னி முலையிற் சுரந்தபால் எனமுன்னி முலையிற் பரந்ததே.
என்கிறது அப்பாடல்.

பாலை, மரவம், மூங்கில், குரவம், இரும்பை, ஈந்து மரங்களை ஆறு அடித்துக்கொண்டு வந்தது. பழைய பாறையிட்ட சிறைக்கு இடையில் வந்தது. எயினர் இட்ட வேல், முள், வேலிகளை அடித்துக்கொண்டு வந்தது. காளையரோடு பேசிக்கொண்டு கருமறத்தியர் சென்று அந்த முல்லை நிலத்தில் பாய்ந்தோடிய வெள்ளத்தில் நீராடினர் என்பதாக அப்பாடல் குறிப்பிடுகின்றது.
மலையில் மின்னலிட்டுக்கொண்டு வந்த ஆறு, வாய்கால் வழியே ஓடி வயலில் பாய்ந்து மருத நில வளத்தையும், நானில வளத்தையும் உண்டாக்கிற்று. குறிஞ்சியிலும் முல்லையிலும் பெருக்கெடுத்து வந்திட்ட ஆறுகள் மருத நிலத்திற்கு நீர் வளத்தை அள்ளித் தந்திருக்கின்றன. அதனை,
முந்நீ ரடுங்கணையார் முக்கூடல் மால்வரையின்
மின்னீர் வரக்கான் விளங்கிநின்ற வாறேயோ
நன்னீர் மருதமென நால்வளமுண் டாயதுவே
உன்னீர் அவைகண்டு உவந்துமெல்லச் சொல்லீரே
என்கிறது பள்ளுப்பாடல்.

முல்லை நிலத்தில் வெள்ளம் உருட்டிக்கொண்டு வந்தது. முல்லை நிலத்திலிருந்த முல்லை, கடுக்கை, தோன்றி, எண்ணெய் தரும் இல், எள், துவரை, அவரை, குல்லை ஆகிய செடியினங்களை அடித்துக்கொண்டு வெள்ளம் வந்து மருத நிலத்தின் குளத்தில் பாய்ந்திருக்கிறது. இதனை,
முல்லைக் கோடி யடுக்கையின்-மலி
கொல்லைக் கோடி கடுக்கையின் முட்டித் தோன்றி மவ்வலை-மது
      கொட்டித் தோன்றி வெவ்வலை இல்லைச் சாடி எண்ணெயும்-அயல்
எல்லைச் சாடி வெண்ணெயும் எள்ளும் அவரை துவரையும்-உறை
      கொள்ளும் அவரை எவரையும் தொல்லைப் பாடு பண்ணியும்-துறு
கல்லைப் பாடு நண்ணியும் தொடுத்துப் பூவை நெற்றியைத்-தொட
      மடுத்துப் பூவை எற்றியே குல்லைத் தானந் தேக்கி-மாலுக்
கெல்லைத் தான மாக்கிமால் கொள்ளுங் கயத்தை நிகர்த்து-மருதந்
      துள்ளுங் கயத்தில் பாய்ந்ததே.
எனப் புலப்படுத்தி இருக்கிறது பள்ளுப் பாடல்.

மருத மரம் செழிக்க, நீர் நிலையில் தாமரை மலர, எருமை குளிக்க, புழுதி குளிர, கரும்பு செழிக்க, வாழை அடுக்கடுக்காய் வளம் பெற, முதலை மேய; தவள வாரணம் (அன்னப்பறவை) நீந்த மருத நிலத்தைச் செழிப்பாக்கி இருக்கின்றன ஆறுகள். அதனை,
பாயும் மருதஞ் செழிக்கவே-பணைதோயும் மருதந் தளிர்க்கவே
      பகட்டுக் கமலை வட்டத்தில்-புனல் தகட்டுக் கமலக் குட்டத்தில்
போயும் எருமை பதறவே-உர மீயும் எருமை சிதறவே
      புழுதிச் சாலை நனைத்துமே-குளிர் கொழுதிச் சாலை யனைத்துமே
சாயும் உரலுங் கரும்புந்தான்-அதில் பாயும் முரலுஞ் சுரும்புந்தான்
      சரிய முதலை முடுக்கியும்-வாழைப் பெரியமுதலை அடுக்கியும்
காயுந் தவள வாரணம்-எதிர் ஆயுந் தவள வாரணம்
      கழனிக் குடிலைத் தொகுத்து-நெய்தலந் துழனிக் குடிலிற் புகுந்ததே.
எனச் சொல்கிறது அப்பாடல்.

முல்லை நிலத்தைச் செழிக்கச் செய்த ஆறு மருத நிலத்தில் பாய்ந்து செழிப்பாக்கிய பின்னர் நெய்தல் நிலத்தில் பாய்ந்திருக்கிறது. நெய்தல் நிலத்தில் பாய்ந்த வெள்ளம், நெய்தல் மலர்களைக் கசக்கிற்று. புள்ளினங்கள் பறந்தோடின; வெள்ளம் பட்டினத்தில் நுழைந்ததால் மக்களால் நிலைகொள்ள முடியவில்லை. வெள்ளம் சோலையை விட்டு வந்து உப்பளத்தில் ஓடிற்று. கடலில் நுழைந்து தன் கடமையை நிறைவேற்றின ஆறுகள். இதை,
புகுந்த நெய்தலை மயக்கியே-மலர் மிகுந்த நெய்தலைக் கயக்கியே
      புடையிற் புளினஞ் சரியவே-அதன் இடையிற் புளினம் இரியவே
பகுந்து நுழையப் பட்டினம்-திரைமுகந்து நுழையப் பட்டினம்
      படைத்தி டாமை நிகழவே-நிலைகிடைத்தி டாமை யிகலவே
உகுந்த தண்டலை நீக்கியே-புனல் வகுந்து தண்டலை தாக்கியே
      உப்பளத் தாரை யோட்டியும்-புனல் அப்பளத்தாரை யீட்டியும்
தகுந்த டங்கடல் இறைவனைத்-தொழ மகிழ்ந்தி டுங்கடன் முறையினிற்
      சார்ந்து சுறவு நேர்ந்து-குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே.
என்கிறது அப்பாடல்.

ஆற்று வெள்ளம் கடலில் புகுந்தது. கடல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு ஆறு உள்ளே நுழைந்தபோது மூக்கன், சாளை, எண்ணெய்மீன், பசலி, திருக்கை, கசலி, கெளுத்தி, பண்ணாங்கு, பாசிமீன், மகரம், சள்ளை, மத்தி, உல்லம், பொத்திமீன், மடந்தை, கடந்தை, செம்பொன் நொறுக்கி, மலங்கு, பஞ்சலை, கருங்கண்ணி முதலான மீன்கள் ஆற்று மணலில் புதைந்து ஒளிந்து கொண்டன என்பதை,
உதைத்து விசைகொண் டெதிர்த்துக் கடலின் உதரங் கீறி யதிரும்நீர்
     உதயவரைக்கும் பொதிய வரைக்கும் ஒத்துப் போகும்படி முற்றும்போய்
பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன்
     பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங் கும்பழம் பாசிமீன்
வதைக்கும் மகரங் குதிக்குஞ் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன்
  மடந்தைகடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும்பஞ்சலை கருங்கண்ணி
புதைத்து மணலில் ஒதுக்கிக் கடலைப் பொருநம் அழகர் கருணைபோல்
     பொருநை யாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே.
என்கிறது பாடல்.

ஆற்று மணலில் புதைந்திருந்த பரவை, குரவை, வாளை, கோளை, தேளிமீன், மயிந்தி, உழுவை, அயிந்தி, கூனி, மணலி, ஆரால், ஓராமீன், அயிரை, கெண்டை, கெளிறு, வரால் ஆகிய மீன்கள் அணையிலும், வாய்க்காலிலும், குளத்திலும், வயலிலும் வந்து பாய்ந்ததை,
வற்றா மடுவிற் பரவை குரவை வாளை கோளை தேளிமீன்
     மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன்
பற்றா அயிரை கெண்டை கெளிறு பருவ ராலும் அணையிலே
     பாயக் காலிற் பாயக் குளத்தில் பாய வயலிற் பாயவே
என்கிறது அப் பள்ளுப்பாடல்.
இவ்வாறாக, நீர் அறுவடை நிகழ்வைக் காட்சிகளாய் விவரித்த பகுதிகள், நீர் அறுவடைப் பண்பாட்டிற்கான உயிர்ப்பான சான்றுகளாகும்.

ஆக, வேளாண் குடியும் வேளாண் தொழில் சார்ந்த குடிகள் என 18 குடிகள் ஒன்றாகக் கூடிய நிகழ்வு என்பதாலே ஆற்றுப் பெருக்கை ஆடி 18ஆம் பெருக்கு என்றும் குறித்துள்ளனர்.

வேளாண்மை உழவுத் தொழிலுக்கு உயிராக இருக்கும் நீர் ஆதார நிலைகள் மீதான நீர் மேலாண்மைத் தொழிலும் அறிவும் உழைப்புமே வேளாண்மை உழவுத் தொழிலுக்கு அடிப்படையாகும்.
நீர் மேலாண்மையும் பயிர் வேளாண்மையும் ஒருங்கே பிணைந்திருக்கும் அறிவையும், உழைப்பையும், ஈகைப் பண்பையும் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், வேளாண்மை உழவுத்தொழில் மரபினரின் ஒரு பிரிவினரே நீர் மேலாண்மைச் சமூகமாகவும் இருந்திருக்கின்றனர். ஆகையினால், ஆற்றுப் பெருக்கும் ஆடிப் பெருக்கும் நீர் அறுவடைப் பண்பாட்டின் புலப்பாடே எனலாம்.

ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
02.08.2020

நீர் மேலாண்மை: நீர் அறுவடைப் பண்பாடு: ஆடிப் பெருக்கும் ஆற்றுப் பெருக்கும் :- மகாராசன்

ஆடி மாதத்தின் 18ஆம் நாளினை ஆடிப் பெருக்கு எனக் குறிக்கும் வழக்கமும், ஆடிப் பெருக்கு நாளில் ஆற்றுநிலைகளில் கூடும் பழக்கமும் தமிழர் பண்பாட்டு மரபில் இன்னும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கின்றன. ஆடி மாதத்துக்கும் ஆற்றுநிலைகளுக்கும் தமிழர் பண்பாட்டு வழக்கத்துக்குமான உறவாடல் பின்புலம் என்ன?

ஆடி 18ஆம் நாளில் ஆற்றங்கரைகளில் மக்கள் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. இது, வெறுமனே வேடிக்கை கூடிய களிப்பும் மகிழ்வுமான கூடல் நிகழ்வு மட்டும் அல்ல. நீரை மய்யப்படுத்தியும் நீரைக்கொண்டும் உணவு உற்பத்தி மேற்கொண்டவர்கள், தமது உழைப்புச் செயல்பாடுகளால் நீர் அறுவடையைத் துய்த்து, உணவு உற்பத்திச் செயல்பாடுகளைக் கூட்டுக் களிப்புடன் தொடங்கிய உற்பத்திப் பண்பாட்டின் உயிர்ப்பே ஆடிப் பெருக்கிலும் ஆற்றுப் பெருக்கிலும் கலந்திருக்கிறது. 

உணவு உற்பத்தியின் உழைப்பில் ஈடுபட்ட தலைக்குடியோடு சேர்ந்து, அதற்குத் துணையாகக் கூட்டுழைப்பிலும் துணை உற்பத்தியிலும் ஈடுபட்டிருந்த 18 குடிகளும்தான் அந்த உற்பத்திப் பண்பாட்டைப் புலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால்தான், இந்தக் கூடலும் களிப்பும் ஆடி 18ஆம் நாளில் நடந்திருக்கிறது. 

உணவு உற்பத்திப் பண்பாட்டின் அங்கமாய்த் திகழ்ந்த ஆடிப் பெருக்கிலும் ஆற்றுப் பெருக்கிலும் உழைப்பு தோய்ந்த குடிகளின் அறிவும் அறமும் கலந்தேதான் இருக்கின்றது. நீரும் நிலமும் மனித உழைப்பும் அறிவுமாய்க் கலந்திருக்கும் இந்தப் பண்பாடு, வெறும் நீர் வழிபாட்டுச் சடங்காக மட்டுமல்ல; கூட்டுழைப்பின் அறுவடைத் துய்ப்பும், உற்பத்திக்கான முன் தயாரிப்புமான உற்பத்திச் செய்கையின் நிகழ்த்து வடிவமாகவும் இருந்திருக்கிறது. இதன் வரலாறும் வழக்காறும் வேளாண்மையோடும் வேளாண் குடிகளோடும்தான் உறவுடையதாய் இருந்து வந்திருக்கிறது.

உணவைத்தேடி அலைந்து திரிந்த மனிதர்களின் அலைகுடி வாழ்க்கையிலிருந்து, நிலைகுடி வாழ்வியலுக்கு மாற்றியதில் நிலத்திற்கும் நீருக்கும் முக்கியப் பங்குண்டு. தமிழரின் வாழ்வியலைப் புதிய திசைவெளிகளில் பரிணமிக்கச் செய்ததும் நிலமும் நீரும்தான். 

நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் உணவைச் சேகரிப்பது அல்லது வேட்டையாடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களால், நிலத்தையும் நீரையும் ஒருங்கே பிசைய உயிரை உருவாக்க முடியும் என்று கண்டுகொண்ட உணவு உற்பத்தி முறையே வேளாண்மை என்பதாகும். 

ஒற்றை விதைக்குள் அரூபமாய்ப் புதைந்திருக்கும் பல விதைகளை வெளிக்கொண்டு வரும் வித்தையாகவும், மானுடம் கண்டுபிடித்த முதலும் கடைசியுமான உணவு உற்பத்தித் தொழில்நுட்பமாகவும் அமைந்திருப்பது வேளாண்மையே ஆகும்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள். அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் என்று படர்ந்து விரிந்தது. தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு. வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால், கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில தமிழ்ச் சிந்தனையை நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது. 

மனித சமூகத்தின் உயிர்வாழ்த் தேவையான உணவுப் பொருட்களை மனித சமூகமே உற்பத்தி செய்துகொள்வதான செயல்பாடுகளை வேளாண்மை எனும் சொல்லால் தமிழர் மரபில் குறிக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மை எனும் தொழிலைக் காலங்காலமாய் மேற்கொண்டுவந்த வேளாண் தொழில் மரபினரை வேளாண்மை எனும் சொல்லின் வேர்ச்சொல்லைக் கொண்டு (வேள் - நிலம். வேள்+ஆள் >நிலத்தை உழவால் ஆள்தல்) வேளாள்+அர்> வேளாளர் எனக் குறிக்கப்பட்டனர். இது, நிலத்தில் வேளாண்மை செய்யும் தொழில் பிரிவினர் அனைவரையும் குறிக்கும் தொழிற்பெயராகவே காலங்காலமாகப் பயிலப்பட்டு வந்திருக்கிறது.

வேளாளர் என்பது ஒரு சாதிப் பெயர் அல்ல; அது வேளாண்மை செய்யும் தொழிலால் குறிக்கப்படும் தொழிற்பெயர். வேளாண்மையோடு உறவும் அறிவும் உழைப்பும் கொண்டிருக்கும் யாவரையும் குறிக்கும் தொழிற்பெயர்தான் வேளாளர்.
மனிதர்கள் தங்களுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் போதுதான் மனிதர்களின் வாழ்வு உயிர்ப்படைகின்றது. அவ்வகையில், உருவாகி வந்திருக்கிற தமிழ்த் தேசிய இனமும் தமக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடுத்திக் கொண்டதனால்தான் உயிர்ப்பாய் இருந்திருக்க முடிகிறது. இத்தகைய தமிழ்த் தேசிய இனத்தின் உற்பத்தி அரங்காய்த் திகழ்ந்ததும் திகழ்வதும் வேளாண்மை தான்.

வேளாண்மைதான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது. இதன் காரணத்தால்தான்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்கிறார் வள்ளுவர். மேலும், உழவரது சிறப்பையும் உழவையும் குறித்து உழவு எனும் அதிகாரத்தில் விளக்கியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கிய நெடுமரபில் வேளாண்மையின் சிறப்புகளும் அதன் முதன்மைத்துவமும் வேளாண் குடிகளின் சிறப்புகளும் அதிகளவில் விவரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நிலத்தில் வேளாண்மையும் அதனோடு தொடர்புடைய ஏனைய தொழில்களும் வணிகமும் நடைபெற்றே வந்திருக்கின்றன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் போன்ற நிலங்களில் அதிகளவிலும், பாலையில் குறைந்தளவுமாக நடந்த வேளாண்மை உற்பத்தியும் அது சார்ந்த துணை உற்பத்தியும் தொழிலும் வணிகமும்தான் பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் பிரிவினரை உருவாக்கி இருக்கிறது. இவ்வாறு பல்வேறு தொழில் சார்ந்த மக்கள் திரள் கூட்டங்களே சாதிகளாய் வடிவம் கொண்டிருக்கின்றன.

குழுக்களாய், இனக்குழுக்களாய் இருந்த காலத்தில் அவரவர் தொழில் சார்ந்து அடையாளப்பட்டு வந்தவையும் வராதவையும் கூட, தேசிய இன உற்பத்தியில் தொழில் சார்ந்து திரண்டிருக்கிற போதும் சாதியாய் உருமாறிக் கொண்டன. ஆனாலும், தேசிய இனத்தின் அங்கமாகவே தம்மை இணைத்துக் கொண்டுள்ளன.
பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய இனம், வேளாண் தொழில் உற்பத்திச் சாதிகளையும், அதற்குத் துணையாகவும் இணையாகவும் உற்பத்தி மற்றும் வணிகச் சாதிகளையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது. அவ்வகையில்தான், வேளாண்மை மேற்கொண்ட முதன்மை மற்றும் துணைமைச் சாதிகள் இருந்துள்ளன.

வேளாண் தொழிலை முதன்மையாக மேற்கொண்டதால், உழவர் வேளாளர் என்றே அழைக்கப்பட்டனர். அவ்வேளாளரின் உழவுத் தொழிலுக்குத் துணை செய்யும் குடிகளாக வண்ணார், மயிர்வினைஞர், செம்மான், குயவர், கொத்தர், கொல்லர், கன்னார், தட்டார், தச்சர், கல்தச்சர், செக்கார், கூத்தர், கைக் கோளர், பூக்காரர், கிணைப்பறையர், பாணர், வள்ளுவர், மருத்துவர் ஆகிய பதினெண் குடிகளும் வேளாண் குடியோடு சேர்ந்து வேளாண் உற்பத்தி நடவடிக்கையை மேம்படுத்தியதாகப் பாவாணர் விளக்கப்படுத்துகிறார்.

மருதம் தவிர, மற்ற நிலங்களின் உற்பத்திப் பொருட்களும் மருதம் உட்பட அனைத்து நிலத்திற்கும் தேவைப்பட்டிருக்கும் காரணத்தால், மற்ற நிலத்தாரும் அந்நிலங்கள் சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளிலும் தொடர்ந்து உறவு மேற்கொண்டு வரவும் செய்துள்ளனர். எனினும், பெருவாரியான உணவு உற்பத்தி வேளாண் உற்பத்தியாகவே இருந்திருக்கிறது. அவ் உற்பத்தி குறிஞ்சி, முல்லை, மருதம் எனும் மூன்று நிலங்களிலேதான் சிறப்பாய் நடந்தேறியிருக்கிறது.

இயற்கையின் கடல் மற்றும் இதர நிலப் பகுதிகளைக் காட்டிலும் நிலைத்த வாழ்வுக்கான இயற்கை நில அமைப்பு, உற்பத்திக்கான பெருநிலப்பரப்பு, கூட்டு உழைப்புக்கான மனிதப் பெருந்திரள், நிலம் - உழைப்பு  போன்றவற்றின் விளை பயனாய் அமைந்த உபரிச்செல்வப் பெருக்கம் போன்றவற்றால் அமைந்துபோன வாழ்க்கைமுறை, வாழ்க்கைத் தரம், பண்பாடு, நாகரிகம், மொழி, கலை, இலக்கியம், அறிவுப் புலப்பாடு, கல்வி, அறம், சமூக உறவுகள், பண்டமாற்றுமுறை, சமூகக் கட்டமைப்பு போன்ற இன்னபிற யாவும் பெருகி வளா்ந்தமைக்கான வாய்ப்புகளும் வசதிகளும் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம்தான் அதிக அளவில் காணப்பட்டன. இவ்வாறான சமவெளிப் பகுதிகளையும், மக்களையும் செழிப்பும் வளமும் நிறைந்ததாய் உருவாக்கியதில் பெரும்பங்கு வகிப்பன நீர் ஆதாரங்கள்தான். அதிலும் குறிப்பாக, இயற்கையின் ஒப்பற்ற கொடைகளுள் ஒன்றான ஆறுகள்தான்.

மலைகளில் அரும்பி, காடுகளில் நுழைந்து  சமவெளிகளில் முகம் காட்டுகிற ஆறுகள் யாவும், விரிந்து கிடக்கும் பெரும்பகுதிச் சமவெளிகளைச் செழிப்பாக்குவதையே கடமையாகக் கொண்டிருக்கின்றன. இன்னொரு வகையில்  சொல்வதானால் சமவெளிப் பகுதிகளில் கிளைபரப்பும் ஆறுகளை அந்நிலப் பரப்பில் வாழ்ந்த மனிதக் குழுக்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டன.
பருவங்களுக்கு ஏற்றாற்போன்று பெய்திட்ட மழையும், அதை உள்வாங்கிப் பெருக்கெடுத்த ஆறுகளும் சமவெளி நிலப் பரப்பைச் செழிக்கச் செய்ததில் பெரும்பங்காற்றியுள்ளன. இதனாலேயே ஆறுகள் பரந்த சமவெளிப் பரப்பில் நிலைகொண்டிருந்த அத்தனை மனிதக் குழுக்களும் மற்ற நிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த மனிதக் குழுக்களைக் காட்டிலும் உயா்த்திக்கொண்டன அல்லது உயா்த்திக் கொண்டதாக நினைத்துக்கொண்டன.

சிறு மற்றும் குறுங்குழுக்கள் பெருங்குழுக்களாகவும், பெருங்குழுக்கள் இனக்குழுக்களாகவும், இனக்குழுக்கள் இனங்களாகவும் உருவெடுத்து, பல்வேறு சமவெளிப் பகுதிகள் சார்ந்த பெருஞ்சமூகங்களாய் வடிவமைத்துக் கொண்டன.  இதனால்தான் ஆற்றங்கரைச் சமவெளிகளை நாகரிகம் செழித்த நிலப்பகுதிகளாக வரலாற்றில் குறிக்கப்படுகின்றன.

ஒரு சமூகத்தை வளப்படுத்தியதில் வேளாண்மைத் தொழிலுக்கும் அதன் உற்பத்திக்கும் மிகப்பெரிய பங்கு இருப்பதைப்போலவே, வேளாண்மை எனும் உற்பத்தித் தொழிலுக்கும் மிக முக்கியமான ஆதாரம் நீராகும். நீர் ஆதாரங்கள் இல்லாமல் வேளாண்மைத் தொழில் நடைபெறவே முடியாது; நடைபெற்றிருக்கவும் முடியாது. அதாவது, நிலமும் நீரும்தான் வேளாண்மையின் ஆதாரங்கள் ஆகும்.
நிலம் எனும் ஆதாரத்தில் உழைப்பையும் அறிவையும் செலுத்தி வேளாண்மை எனும் உற்பத்தி செய்ததைப் போல, அதற்கும் நிகரான அல்லது அதற்கும் மேலான உழைப்பையும் அறிவையும் செலுத்தி நீர் ஆதாரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய நீர் ஆதாரங்களே வேளாண்மையின் உயிர் ஆதாரங்களாக இருந்திருக்கின்றன; இருக்கின்றன. 

 அடையாறு, அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு, அரசலாறு, அர்ச்சுணன் ஆறு, பவானி ஆறு - காவிரியின் துணையாறு, சிற்றாறு,சின்னாறு,செஞ்சி ஆறு, செய்யாறு ஆறு ,கபினி ஆறு, கடனாறு - தாமிரபரணியின் துணையாறு, கல்லாறு, காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, குண்டாறு, குந்தா ஆறு, குதிரையாறு - அமராவதியின் துணையாறு, நங்காஞ்சி ஆறு - குடகனாற்றின் துணையாறு, கெடிமலம், கோமுகி ஆறு, கோதையாறு, மலட்டாறு, மஞ்சளாறு, மணிமுத்தாறு - தாமிரபரணியின் துணையாறு, மணிமுக்தா ஆறு, மோயாறு, முல்லை ஆறு, நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு, பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு, பரளி ஆறு, பாலாறு, பரம்பிக்குளம் ஆறு, பைக்காரா ஆறு, சங்கரபரணி ஆறு, சண்முகா ஆறு, சிறுவாணி ஆறு, தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு, உப்பாறு, வைகை ஆறு, வராக ஆறு, வைப்பாறு, வெண்ணாறு, வெட்டாறு, சனத்குமார ஆறு- காவிரியின் துணையாறு, மார்கண்ட ஆறு- தென்பெண்னையாற்றின் துணையாறு, பாம்பாறு-தென்பெண்னையாற்றின் துணையாறு, வாணியாறு-தென்பெண்னையாற்றின் துணையாறு, கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்னையாற்றின் துணையாறு என்று தமிழகம் முழுவதும் நரம்பு மண்டலம்போல ஆறுகள் இருந்தன. 

எனினும், இந்த ஆறுகள் யாவும் எல்லாப் பருவங்களிலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தவையல்ல. மழைக்காலங்களில் மட்டுமே இந்த ஆறுகள் நீர்புரண்டு கிடந்தன. 

மற்ற  நிலப்பரப்பிலும் நாடுகளிலும்  வற்றாத ஆறுகள் நிறைய இருந்தன. ஆண்டின் எல்லாப் பருவங்களிலும்  நீரை வார்த்த ஆறுகள் இருந்தன. இவற்றோடு, எல்லாப் பருவத்திலும்மிதமான மழையைத் தந்து கொண்டிருந்த இயற்கை வளங்களும் இருந்தன. 
தமிழகத்தின் பருவ நிலைமையோ இயற்கைவள அமைப்போ அப்படியில்லை. எல்லாப் பருவத்திலும் பெய்கின்ற மழையோ ஆறுகளின் பெருக்கோ தமிழ் நிலத்தில் வாய்க்கவில்லை. ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே பெய்யும் மழையை வைத்துதான் வேளாண்மை செய்துகொள்ள வேண்டிய நிலை தமிழகத்தில் இருந்திருக்கிறது. 

தமிழ்ச் சமூக  வாழ்விலும் வளர்ச்சியிலும் வேளாண்மைக்கு மிக முக்கிய இடமிருந்ததைப் போலவே, வேளாண்மைத் தொழிலுக்கும் மட்டுமல்ல; மக்களின் அன்றாடப் பிற தேவைகளுக்கும் நீர் ஆதார அமைப்புகள் மிக முக்கியத் தேவையாக இருந்திருக்கின்றன. இதனால் மழைபெய்யும் காலங்களில் மழை நீரையும் ஆற்று நீரையும் பல்வேறு நீர் ஆதார அமைப்புகளின் மூலம் நீரைச் செமித்து வைத்துக்கொள்ள வேண்டி இருந்திருக்கின்றது.

மழைப் பொழிவில் வழிகின்ற வழிநீரையும், மழைப் பொழிவுக்குப் பின்பாகத் தன்போக்கில் செல்லும் ஆற்றுநீரையும் பயன்பாடு கருதியும் வேளாண்மை கருதியும்  தேக்கி வைத்து, திசை திருப்பி, முறைப்படுத்தி, பயன்படுத்தியும் வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர். 

அதாவது, இயற்கையாகத் தன்போக்கில் ஓடிய ஆறுகளின் நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்ததன் அடுத்த கட்டமாக, பல்வேறு நீர் ஆதார அமைப்புகளை உருவாக்கி அவற்றில் ஆற்று நீரையும், மழை நீரையும் தேக்கி வைத்துப் பயன்படுத்தும்  நீர்ப் பயன்பாட்டு நுட்ப முறைகளைப் பண்டைத் தமிழர்கள் கண்டடைந்திருக்கின்றனர். 

இத்தகைய நீர் ஆதார அமைப்புகளை உருவாக்கி, நீரைச் சேமித்து, முறைப்படுத்தி வழங்கி, முறையாகப் பயன்படுத்தி, முறையாகப் பராமரித்து, மனிதத் தேவைக்கும் வேளாண்மைத் தேவைக்கும் நீர் ஆதார அமைப்புகளை ஒழுங்காற்றிய அறிவும் உழைப்பும் நுட்பமும் அறமும் சேர்ந்த மனித ஆளுமைதான் நீர் மேலாண்மை எனும் அறிவாகவும் நுட்பமாகவும் உழைப்பாகவும் வெளிப்பட்டு வந்திருக்கின்றன. 

நீரைச் சேமிக்கவும், அதைப் பகிர்ந்து கொள்ளவும், அதைப் பாதுகாக்கவுமான ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. இதன்மூலம் தண்ணீரைப் பாதுகாத்தல், வறட்சியைத் தடுத்தல்,
 வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், சுற்றுச் சூழலைப்  பாதுகாத்தல் போன்றவையும் நடந்திருக்கின்றன.

தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு நீர் ஆதார அமைப்புகள் இயற்கையாகவும் இருந்திருக்கின்றன; புதியதாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை வருமாறு:

அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்; அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது; ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு; ஆறு (River) - பெருகி ஓடும் நீர்த் தடம்; இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்; உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு; ஊருணி (Drinking water tank) -மக்கள் பருகும் நீர் நிலை; ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர்த் தேக்கம்; ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்; கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்களைக் கட்டிய கிணறு; கடல் (Sea) -சமுத்திரம்; கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கிய பெயர்.

கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர்த் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாகக் கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்துத் திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

கால் (Channel) - நீரோடும் வழி; கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம், ஊருணி இவற்றுக்கு நீர் செல்லும் வழி; குட்டம் (Large Pond) - பெருங் குட்டை; குட்டை (Small Pond) - சிறிய குட்டம் - மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை; குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை; குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்; குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

குமிழி ஊற்று (Artesian fountain) - அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று; குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை; கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு; கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்; வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு; சிறை அல்லது நீர்த்தேக்கம் (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை; சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை; சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்; தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்; தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்டை மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியைக் குறிக்கும்; திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்; தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்; நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு; நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம் - ஆவி என்றும் கூறப்படும்.

பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம், ஏரி, முள்ளம்களின் நடுவே அமைந்த கிணறு; பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு; பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை; மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு; மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்; வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்; வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்; முள்ளம் - ஏரி பாசன கால்வாய்களில் மீன் பிடிக்க அமைக்கப்படும் நீர்தேங்கும் அமைப்பு. 

இவைபோன்ற நீர் ஆதார அமைப்புகளைப்போல வேறு பலவும் தமிழ்ச் சமூகத்தில் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. மேற்குறித்த நீர் ஆதார அமைப்புகள் மறைந்திருக்கவும் வாய்ப்புண்டு.

இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவான / உருவாக்கப்பட்ட நீர் ஆதார அமைப்புகளைப் பயன்படுத்தவும் பராமரிக்கவும் நீர் மேலாண்மைச் சமூகத்தால் மட்டுமே செய்திருக்க முடியும். வேளாண்மைத் தொழிலோடு பிணைந்திருந்த வேளாண் உழவுத்தொழில் மரபினரின் ஒரு பகுதியினரே நீர் மேலாண்மையை ஒரு தொழிலாகவும் செய்து வந்திருக்கின்றனர். அதாவது, வேளாண்மை உழவுத் தொழிலின் மிக முக்கியமான அங்கமாகவும் ஆதாரமாகவும்தான் நீர் மேலாண்மையும் இருந்திருக்கிறது.

வேளாண்மையோடும் அதன் வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்த நீர்ச் சமூகமும் ஒன்று இருந்திருக்கிது. இந்த நீர்ச் சமூகம்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்திருக்கிறது. மழை பொழிந்து ஓடும் நீரை நீர் ஆதார அமைப்புகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, அதைச் சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் நீர்ச் சமூகத்தின் பணியாக இருந்திருக்கிறது. இது, மிகச் சாதாரண பணியும் அல்ல. அதற்கு நிறையத் தொழில்நுட்ப அறிவும் உழைப்பும் தேவை. அவையெல்லாம் அந்த நீர்ச் சமூகத்திடம்தான் நிரம்பிக் கிடந்தன.

நீர் மேலாண்மையைத் திறம்பட மேற்கொண்டிருந்த நீர்ச் சமூகம் பல பெயர்களால் குறிக்கப்பட்டிருக்கிறது.
ஆற்று நீரை அடுத்ததடுத்த ஏரி எனும் நீர்நிலைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்து, பங்கிட்டுக்கொடுக்கும் பொறுப்பை ஆண்ட நீர் மேலாண்மைத் தொழில் பிரிவினர் ‘நீராணிக்கர்கள்’ என அழைக்கப்பட்டுள்ளனர். ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து சேர்த்து, அந்த நீரைக் கட்டிவைத்துக் காத்ததால் அவர்களுக்கு ‘நீர்க்கட்டியார்’ என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பும் கொண்டவர்கள்.

ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள கோடைக் காலங்களில் ஏரி நிலத்தில் தற்காலிகமாக பயிர் செய்வது என, ஏரி நிலைக்குள் நடந்த எந்தவொரு நிகழ்வும் நீர்க்கட்டியார் அனுமதி இருந்தாக வேண்டும்.

ஏரி நீரின் பாதுகாப்பு  அதன் கரையில்தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, ஏரிப் பாசனம் பெறும் வயல்வெளிகளையும் மக்கள் வாழிடங்களையும் அழித்துவிடும். ஆகையால்தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அத்தகைய ஏரியின் கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். நீர் ஆதார அமைப்புகளின் கரை வேலைகளைப் பார்த்ததால் ‘கரையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் ஏரிக்கரைக்கு முழுப்பொறுப்பும் ஆவர்.

ஒரு சமூகத்தின் பொருளாதார வளம் வேளாண்மையோடு தொடர்புடையது. ஏரிகள் வேளாண் பாசனத்திற்காகவே உருவாக்கப்பட்டவை. எதிரிகளால் வேளாண் பொருளாதாரச் சீர்குலைவுகள் நடந்திருக்க வாய்ப்புண்டு. எதிரிகளிடமிருந்து ஏரிகளையும் இதர நீர்நிலைகளையும் காத்த காரணத்தால் ‘குளத்துக் காப்பாளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். 
நீர் நிலைகளுக்குள் தேவையின்றி வளர்ந்த செடிகொடிகள், பாசிகள் போன்றவற்றை அழித்துத் தூய்மைப்படுத்தி, வயல் பள்ளங்களில் வேளாண்மைக்கு நீர் திறந்துவிட்டதனால் ‘குளத்துப் பள்ளர்கள்’ எனவும் குறிக்கப்பட்டுள்ளனர். 

ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் வெட்டிக் கொண்டு வந்தமையால் ‘நீர் வெட்டியார்’ எனவும், நீரை வயல்கள் வரை கொண்டு வந்து பாய்ச்சியதால் ‘நீர்ப் பாய்ச்சியார்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வயல்களுக்கான நீரைக் கண்காணித்தவர்கள்.

நீர் ஆதார அமைப்புகளிலிருந்து நீரைத் திறந்து விடுவதற்காக அவற்றில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருக்கும். வேளாண் பாசனத்திற்காக இந்த மடைகளைத் திறந்து விடுவதால் ‘மடையர்கள்’ எனவும் ‘மடைக் குடும்பர்கள்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகளிலிருந்து நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.  மதகுகள் வழியாக  வேண்டிய அளவு நீரை வெளியேற்ற முடியும்; நீரைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால், மடை என்பது அப்படியல்ல. மடையைத் திறந்து விட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்தவும் முடியாது. மடைகள் அமைக்கப்பட்ட நீர்நிலைகளில் மடைகளைக் கையாண்டதால்தான் ‘மடையர்கள்’ என்றழைக்கப்பட்டுள்ளனர்.

ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வருகின்ற மழை நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறும் சகதிகளையும் சேர்த்தே கொண்டு வரும். இவை அதிகம் சேர்ந்தால் நீர்நிலைகள் தூர்ந்து போகும் வாய்ப்புண்டு. இதனால் மடைகளும் மதகுகளும் அடைத்துக் கொள்ளும். இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ‘குமிழி’ எனும் ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள். ஏரி நீரை வெளியேற்றும் ஒரு அமைப்புதான் இது. 

குமிழியானது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து சற்றேறக் குறைய 300அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைக்கப்பட்டிருக்கும். ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போதுதான் இந்தக் குமிழியைத் திறந்து விடுவர். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும். இதனால் ஏரியின் தளத்தில் சேர்ந்த வண்டல் மண்  வெளியேற்றப்படுவதால் அதன் பாசனப் பயிர்களுக்கும் நல்ல உரம் கிடைத்து விடுகிறது. நீர்நிலைகளில் பயன்படுத்திய தூர்வாரும் தொழிநுட்பம்தான் இது. நீர் நிலைகளில் குமிழிகள் அமைத்துத் தூர்வாரி, வயல் பள்ளங்களில் நீர் பகிர்ந்ததால் ‘குமிழிப் பள்ளர்கள்’ எனவும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த நீர்ச் சமூகத்திடம் நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்யும் நுட்பமும் அறிவும் மட்டுமல்ல; அத்தகைய நீர் ஆதாரங்களைப் புதியதாக உருவாக்கும் அறிவும் நுட்பமும் உழைப்பும் கூடவே இருந்திருக்கிறது. 

மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம், பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மழைநீர் வரத்து போன்றவற்றைக் கணக்கில் கொண்டே நீர்நிலைகளின் கொள்ளளவை நிர்ணயித்திருக்கிறார்கள். விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கும், மக்களின் இதரத் தேவைகளுக்கும்   நீர் திறந்துவிட வேண்டியதின் அளவு,
அதற்கேற்ப மதகுகளையும் மடைகளையும் அமைத்தல், அவற்றிலிருந்து  நீர் வெளிவருவது எவ்வளவு? எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும்? போன்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுத்தான் நீர் நிலைகளை உருவாக்கி இருக்கிறார்கள். 

இப்படியாக, நீர் நிலைகளை உருவாக்கியதிலும், நீர் நிலைகளை மேலாண்மை செய்ததிலும் நீர்ச் சமூகத்தின் அறிவும் உழைப்பும் மாட்டும் இருந்திருக்கவில்லை. கூடவே, நீர்ச் சமூகத்தின் தியாகமும் உள்ளடங்கி இருக்கின்றது.

மழைக்காலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து வரும்போதும், நீர்நிலைகளில் நீர் நிறைந்திருக்கும் போதும், கரைகள் உடையக்கூடிய அபாயங்கள் இருக்கும்போதும், நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும்போதும், மதகுகள் / மடைகள் வழியாக நீரைத் திறந்துவிடும்போதும் உயிரைப் பணையம் வைத்து அவற்றைச் செய்திடவும் வேண்டும்.

 நீர் நிரம்பி இருக்கும் நீர்நிலைக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையைத் திறக்கும்போது உயிர்போகவும் கூடும். அந்தத் தியாகத்தையும் நீர்ச் சமூகமே செய்திருக்கின்றது. அவ்வாறு உயிர்நீத்த நீர்ச் சமூகத்தவரின் உயிர்த் தியாகத்தை நினைவுகூறும் வகையில் நீர்நிலைக் கரைகளில் நடுகல் நட்டு வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. உயிர்த் தியாகம் செய்த நீர்ச் சமூகத்தவரின் குடும்பங்களுக்கு நிலக்கொடைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

மழைக் காலங்களில் நிரம்பி இருக்கும் நீர்நிலைகள் கோடையில்   வற்றிப் போகக் கூடும். நீர் வற்றிய காலங்களில் மட்டுமே நீர் நிலைகளைத் தூர் வாரியும், ஆழப்படுத்தியும், கரைகளைப் பலப்படுத்தியும், நீர்வரத்துப் பகுதிகளைத் தூர்வாரியும் பராமரிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்ள முடியும். இதனைக் ‘குடி மராமத்து’ என்பர். 

அதாவது, நீர் ஆதார நிலைகளை வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படுத்தும் உழவுக்குடிகளும், வேளாண்மைத் தொழிலுக்குத் துணையாக இருக்கும் இதரக் குடிகளும், நீர்நிலைகளைப் பிற தேவையின்பொருட்டுப் பயன்படுத்தும் மற்ற குடிகளும் நீர்ச் சமூகத்துடன் சேர்ந்து நீர்நிலைகளை பாதுகாத்துப் பரமாரித்துக் கொள்ளும் முறையே குடி மராமத்து ஆகும். 

இப்பணிகள்  மழை இல்லாத கோடை காலத்திற்குப் பிறகே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. மழைக் காலத்தை எதிர்நோக்கியும் நீர்வரத்தை எதிபார்த்தபடியும் நீர்நிலைகள் யாவற்றையும் தயார் நிலையில் வைத்திருந்த புனரமைப்புப் பணிகளால், நீரை அறுவடை செய்யக் காத்திருப்பர் குடிகள் யாவரும்.

தென்மேற்குப் பருவ காலத்தில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கி வந்திருக்கிறது. ஆடி மாதக் காலங்களில்  தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றன. அதனையே ஆற்றுப்பெருக்கு எனக் குறித்திருக்கின்றனர். ஆற்றுப் பெருக்கு வரும் மாதத்தையே ஆடிப்பெருக்கு என்றழைத்திருக்கின்றனர். 

மழைநீரையும் ஆற்று நீரையும் நீர் ஆதார நிலைகளுக்குக் கொண்டு சேர்த்து, முதலில் நீரை அறுவடை செய்து, அறுவடை செய்த நீரைக்கொண்டு வேளாண்மை உழவுத் தொழிலுக்குத் தயாராகி இருக்கின்றன  நீர்ச் சமூகம் உள்ளிட்ட உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும்.

குடி மராமத்துப் பணிகளில் நீர்ச் சமூகத்தின் பெருந்துணையோடு வேளாண் உற்பத்தியின் தலைக் குடியும், அதற்குத் துணையான 18 குடிகளும் கூடி உழைத்ததால் / கூடிச் செயலாற்றியதால் / உழைத்து முடித்ததால் நீரை அறுவடை செய்வதற்கும், பயிர் விளைவிப்புக்கான உற்பத்திச் செயல்பாட்டின் முன் தயாரிப்புமாக  ஆற்று நீரை வரவேற்க உழவுக் குடிகளும் அதன் துணைக் குடிகளும் ஆற்றங்கரைகளில் களிப்புடன் கூடி இருக்கின்றனர். 
நீர் அறுவடைக்கான அந்தக் கூடுகையே ஆற்றுப் பெருக்கும் ஆடிப்பெருக்குமான உற்பத்திப் பண்பாடாய் நிகழ்த்து வடிவம் பெற்றிருக்கின்றது.

நிலம், நீர், உழைப்பு, உற்பத்தி சார்ந்த அறிவு, உணவளிக்கும் ஈகைப்பண்பு போன்றவற்றால் உடலியல் திறனாலும் உளவியல் ஈடுபாட்டாலும், உணவு உற்பத்திப் பண்பாட்டாலும் தமக்கென வாழ்வியல் பண்புகளை வகுத்துக் கொண்ட வேளாண்குடிகள், நீர்ச் சமூகத்தின் பேருதவியோடு தமது உற்பத்திச் செயல்பாடுகளுள் ஒன்றாக நீரை அறுவடை செய்வதும் நிகழ்ந்திருக்கிறது. அந்தவகையில், நீர் அறுவடைக் களிப்பின் வெளிப்பாடுதான் ஆடிப்பெருக்கின்  கூடுகை அமைந்திருக்கின்றது.

ஆடி மாதத்து ஆற்றுப் பெருக்கை வைத்தே உழவர்கள் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். ஆடிப் பட்டம் தேடி விதைக்க, ஆற்றின் புது வெள்ளத்தை வேளாண் குடிகள் மகிழ்வுடன் அறுவடை செய்து வரவேற்கும் பண்பாட்டியல் நிகழ்வுதான் ஆடிப் பெருக்கின் கூடுகை. வேளாண்மை சார்ந்த பண்பாட்டுக் கூடல் விழாவாகத்தான் ஆடிப் பெருக்கு இருந்திருக்கின்றது. 

வேளாண் குடியும் வேளாண் தொழில் சார்ந்த குடிகள் என 18 குடிகள் ஒன்றாகக் கூடிய நிகழ்வு என்பதாலே ஆற்றுப் பெருக்கை ஆடி 18ஆம் பெருக்கு என்றும் குறித்துள்ளனர். 

வேளாண்மை உழவுத் தொழிலுக்கு உயிராக இருக்கும் நீர் ஆதார நிலைகள் மீதான நீர் மேலாண்மைத் தொழிலும் அறிவும் உழைப்புமே வேளாண்மை உழவுத் தொழிலுக்கு அடிப்படையாகும். நீர் மேலாண்மையும் பயிர் வேளாண்மையும் ஒருங்கே பிணைந்திருக்கும் அறிவையும், உழைப்பையும், ஈகைப் பண்பையும் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், வேளாண்மை உழவுத்தொழில் மரபினரின் ஒரு பிரிவினரே நீர் மேலாண்மைச் சமூகமாகவும் இருந்திருக்கின்றனர். 

அத்தகைய நீர் மேலண்மைச் சமூகத்தைக் குறித்து ஆராய்ந்த ஆய்வறிஞரின் கருத்து குறிப்பிடத்தக்கது. அது வருமாறு:

மழைநீர் சேகரிப்பு என்பது இந்தியாவில் மிக பழமையானது.கி.மு.4500 ஆம் ஆண்டு வாக்கில் தார் மற்றும் ராஜஸ்தான் பாலைவனங்களில் உருவாக்கப்பட்ட மகத்தான நீர்தேக்க திட்டங்களே மழை நீரை தேக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பசுமை பிரதேசங்களை ஒட்டியே பல எளிய வடிவிலான நீர்தேக்க திட்டங்கள் வளர்ந்து வந்து உள்ளன.

ஓடி வரும் வெள்ளத்தைத் தேக்கி வைத்துப் பரமாரிப்பதோடு, புயல், மழை, வெள்ளம், நிலத்தடி நீரோட்டம், நிலத்துக்கு அடியில் இருக்கும் ஆறுகள் ஆகியவற்றை அறிந்து அதை வெகு சிறப்பாகப் பயன்படுத்திய 'பள்ளர்கள்' (நீர் மேலாளர்கள்) பல ஆயிரம் வருடங்களாக மிகுந்த மரியாதை செய்யப்பட்டு வந்து உள்ளனர். (ஆற்றுக் காலாட்டியார், மடை வாரியார், நீராணிக்கர், நீர்கட்டியார் என்று பல்வேறு பள்ளர் பிரிவுகள் வழக்கில் இருந்து உள்ளனர்.)

 நீர் மேலாண்மை என்பது இந்தியாவைப் பொருத்தவரை மிகப் பழமையான தொழில் நுட்பமாகும். அதுவே இந்தியாவின் முக்கிய அடையாளமும் கலாச்சார வடிவமும் ஆகும். இந்தத் தொழில் நுட்பம் இல்லை எனில், இந்தியா என்ற பிரதேசம் இருந்திருக்காது. இந்தியாவின் நீர் மேலாண்மை வேத காலத்துக்கும் முந்தியது. காரணம், தார் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நீர்த் தேக்கத் திட்டங்கள் எல்லாம் ஹரப்பா நாகரிகத்திற்கும் (கி.மு.2600) முந்தியது.
வீட்டுக் கூரை, வெட்ட வெளி, கிணற்றுப் பாசனம், ஆற்று வெள்ளம் என வியக்கத்தக்க வகையில் பாசனத்துக்கும் புழக்கத்துமான நீரைப் பரமாரித்து வந்துள்ளனர். நீர் மேலாண்மையாளர்களான பள்ளர்களே இந்தப் பெருமைக்கும் புகழுக்கும் உடையவர்கள். 

பள்ளர்கள் தாங்கள் வாழும் இடத்திற்குத் தகுந்தாற்போல தமது திறமைகளைப் பயன்படுத்துகின்றனர். பள்ளர்கள் உலகில் உள்ள எந்த ஒரு பல்கலைக் கழகத்திலும் படித்து இந்த நீர் மேலாண்மை நுட்பத்தைக் கற்கவில்லை. தலைமுறை தலைமுறையாக நீர் மேலாண்மைத் தொழில் நுட்பத்தைக் கற்றும், அதை செழுமைப்படுத்தியும், தாங்கள் கற்றதைத் தங்கள் தலைமுறைகளுக்குக் கற்றுக் கொடுத்து வந்துள்ளனர். 

வரலாற்றில் எப்போதெல்லாம் தண்ணீருக்கான தேவையும், அந்தத் தண்ணீருக்கான வாழ்வாதாரமும் இக்கட்டான சூழலில் மக்களின் வாழ்வைப் பாதித்து உள்ளதோ, அப்போதெல்லாம் பள்ளர்களின் புத்திக் கூர்மையும், அவர்களின் புதிது புதிதான நீர் மேலாண்மை உத்திகளும்தான் மக்களைக் காத்து உள்ளது என்பதை நுணுக்கி ஆராய்ந்தால் அறியலாம்.

மக்களுக்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதும், அதற்கான சிந்திக்கும் திறனும், இந்தச் சமூகத்திற்கு கொடையை அளித்த மதிப்பு மிக்க இந்தப் பள்ளர் சமூகம் போற்றுதலுக்கு உரியவர்கள்.
இன்று இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் நீர் மேலாண்மைத் தொழில் நுட்பம் என்பது வரலாற்றுக்கும் முந்திய இந்தியாவில் இருந்து வந்ததன் தொடர்ச்சி ஆகும். இந்தத் தொழில் நுட்பங்கள்தான் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவில் பல மாகாணங்கள் இருந்தாலும், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான நீர் மேலாண்மைத் தொழில் நுட்பத்தை அந்த இடத்திற்குத் தகுந்தவாறு அமைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் அறியலாம்.

ஆற்று வெள்ளம், மழை பொய்த்து போகும் காலம்,  ஆற்றில் இருந்து நீரைச் சேகரித்தல், நிலத்தடி ஊற்று நீரைச் சேகரித்தல், நீராவி ஆகாத அளவுக்குக் கிணறு வெட்டி அதை தினசரி உபயோகத்துக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்துதல். இப்படியாக மழை நீரைச் சேகரித்து அதை முறையாகப் பராமரிக்க நினைக்கும் எவரும் மதிப்புமிக்க  'பள்ளர்' சமூகத்தின் நீர் மேலாண்மைக் கலையையும் வழிமுறைகளையே மதித்தும் பின்பற்றவும் வேண்டும் என, இந்தியாவில் நீர் மேலாண்மை குறித்து ஆராய்ந்த இராகேசு செகாவத், தமிழ்ச் சமூகத்தில் இருந்த நீர் மேலாண்மைச் சமூகத்தைப் பற்றிய மதிப்பீட்டைத் தந்திருக்கிறார்.

(Rain water Harvesting India – Rakesh Shegahwath:
Why discuss Rainwater Harvesting in India?
In India, rainwater harvesting is an ancient tradition. From as far back as 4500 BC, the simplest of earthworks in Thar Desert and Rajasthan, would harvest water from the falling rain. These simplest forms of rainwater harvesting would evolve in accordance to the eco-regions within India’s borders. Using rivers, floods, monsoon, underground rivers, surface water and the earth itself, the ancient cast of pallar (water managers) have been respected for thousands of years. Rainwater harvesting in India is more than an age old tradition that varies from region to region, rainwater harvesting is an integral part of Indian identity and cultural history, that without, India would never have been.
Vedic culture did not create rainwater harvesting as it was already being done (although rudimentary still quite effective) in the Thar and Rajasthan deserts long before the Harappan civilization in 2600 BC.
Whether they are harvesting rain from their rooftops, or courtyards, open community lands from artificial wells, monsoon run-off from the water of swollen streams or stored in various bodies or even harvest water from flooded rivers. Rainwater harvesting managers, called “pallar” are an officially recognized cast in India that deserves respect and honor. Usually “pallar” inherit their skills, and perform their service usually in accordance to region. 
The pallar are not trained in great universities from around the world, much less any inside of India, the pallar learn their abilities from one generation to the next and the most important part of engineering itself, experience. Years of careful observation on a day to day basis, when water needs effect everyday life, and even survival, their creative minds invent solutions that bridge the frontier of time and technology. Ingenuity and creativity in such largely diverse scales are responsible for the plethora of innovative ideas that come from this humble Indian cast.
Prehistoric India brought rainwater harvesting solutions as modern day India also does. These solutions which are diverse and innovative bring new insight into the world of rainwater harvest the world over. Insights that should be studied, and understood, not merely as a science but as cultural identity and a way of thinking that’s roots can be traced to antiquity. As India has so many different regions, it also confronts many different solutions for such a basic and essential human need as a single drop of water. 
Flood water, post-monsoon drought, underground river collectors, surface water aqueducts, and even evaporation proof community wells for drinking as well as irrigation and other methods of rainwater harvesting; the ancient art of Indian pallar is a tradition that should be respected and understood by anyone interested in better and more ecological ways to use the sky-gift of natural rain.
Source: http://www.rain-barrel.net/rainwater-harvesting-india.html).

நிலத்தையும் நீரையும் வெகுகாலமாகத் திறம்பட மேலாண்மை செய்துவந்த வேளாந்தொழில் மரபினரான அந்தச் சமூகத்திடமிருந்துதான் நிலமும் நீரும் பறிக்கப்பட்டிருக்கின்றன. வேளாண் தொழில் மரபினராக மதிக்கப்பட்டு வந்த அந்தச் சமூகம்தான் அதிகாரத்தாலும் சூழ்ச்சியாலும் வஞ்சிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. 

அந்தச் சமூகம் ஒடுக்கப்பட்டதால்தான் நீர் ஆதார நிலைகளும் அழிவுக்கும் சிதைவுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகி வீழ்ந்து கிடக்கின்றன. அதனால்தான், ஆடிமாதத்தில் வேடிக்கை மட்டுமே பார்க்கும் கேளிக்கைக் கூடலாகவும், ஆன்மீகமயமாக்கி வெறும் சடங்காய்க் கூடுவதுமாக ஒருபுறம் ஆக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம், ஆறுகளும் விளை நிலங்களும் பாழ் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. 

ஒரு சமூகம் வஞ்சிக்கப்பட்டால், நீரும் நிலமும் சேர்ந்தே வஞ்சிக்கப்படும் என்பதையே வரலாறு உணர்த்தி நிற்கிறது.

மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலில் இருந்து...
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
இரண்டாம் பதிப்பு 2022,
விலை: உரூ 250/-
யாப்பு வெளியீடு, சென்னை.
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506
*
ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.