ஞாயிறு, 22 நவம்பர், 2020

தமிழீழ மாவீரர் நாள்: உணர்வும் வரலாறும்.

 


தமிழீழ மாவீரர் நாள் வாரம்.

அதிகாரப்பூர்வ பெயர்: 

மாவீரர் நாள்.

மாவீரர் நாள் அடையாளம்: காந்தள்.

கடைபிடிப்போர்: தமிழர்.

நாள்: நவம்பர் 27.

காலம்: 1 நாள் நிகழ்வு.

மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, 

தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் 

அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.

வரலாறு:

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.

கடைப்பிடிப்பு:

போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27ஆம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.

கொடியேற்றுதல்:

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற 

ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உறுதிமொழி:

உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.

"மொழியாகி,

எங்கள் மூச்சாகி - நாளை

முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை

உருவாக்கும் தலைவன்

வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடு இங்கு

துயில்கின்ற வேங்கை

வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்

தமிழீழப் போரில்

இனிமேலும் ஓயோம் உறுதி!"

ஈகைச்சுடரேற்றுதல்:

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

ஈசைக்சுடரேற்றும் போது மாவீரர்நாள் பாடல் பாடப்படும்.

மாவீரர் நாள் பாடல்:

மாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்தப் பாடல் புதுவை இரத்தினதுரை இயற்றியதாகும். வர்ணராமேஸ்வரன் பாடியது. ஈகச்சுடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது.

 இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

மாவீரர் குடும்ப கௌரவிப்பு:

மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர்.

அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.

மாவீரர் நாள் உரை:

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது.

கார்த்திகைப் பூ:

தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

மேற்கோள்கள்:

மயானங்கள் புனிதமாகும் மாவீரர்நாள்.தமிழீழ மாவீரர் நாள் அனுபவம் ஒன்று - த. அகிலன்.

நன்றி:

தமிழ் விக்கிப்பீடியா.

தமிழீழ மாவீரர்களுக்கு

வீரவணக்கம்.

ஏர் மகாராசன்

20.11.2020

செவ்வாய், 10 நவம்பர், 2020

தமிழ் கற்றல் - வேர் அறியும் தடம்:- மகாராசன்

எழுதப் படிக்கத் தெரியாத எளிய பாமரத் தமிழர்கள் பேசுகிற தமிழில் அச்சு அசலான மொழியின் இலக்கணம் இருக்கிறது. இலக்கணப்படி தான் பேசுகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் பேசுவதில்தான் மொழியின் இலக்கணம் இருக்கிறது என்பதே சரியானது. 

நாம் பேசுகிற மொழியில் என்னென்ன மாதிரியெல்லாம் இலக்கணம் இருக்கிறது என்பதைத் தான் இலக்கண நூலார் வரையறை செய்தார்கள். மொழியை ஆளாளுக்கு ஒரு மாதிரியாகவும் வேறாகவும் கையாளாமல், மொழியைத் தரப்படுத்தவும் நிலைப்படுத்தவும் உகந்த இலக்கணம் பேருதவி புரிகிறது. சமூகமாகக் கூடி வாழும் மனிதர்களுக்குப் பொதுவான மொழி வரம்பு தேவை. 

மொழி ஒழுங்கு, சமூக ஒழுங்கையும் மனித நடத்தை ஒழுங்கையும் வடிவமைக்கக் கூடியது. அவ்வொழுங்கு முறையைப் பள்ளிக் குழந்தைகள் கற்பது வெறும் எழுத்து, சொல், யாப்பு என்ற நிலையினதாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது கூடாது. 

வேறெந்த மொழியினரும் அந்த மொழியின் இலக்கணத்தை ஏன் பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பவே மாட்டார்கள். நாம் தான் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மொழி வெறும் மொழி என்பதாக மட்டும் பார்த்தல் கூடாது.

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடியது - எனும் குறிப்பில் உள்ள 'தமிழ்' எனும் சொல்லானது, வெறும் மொழியை மட்டுமே குறிக்கவில்லை. 

தமிழ் எனும் சொல்லானது, மொழி எனும் அடையாளத்தோடு களவு, கற்பு எனும் வாழ்நெறியைக் குறிக்கும் அறத்தையும், அதன் மறத்தையும், அறத்தோடும் மறத்தோடும் கூடிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இனத்தையும், தமிழ் மொழியும் தமிழ் இனமும் வாழ்கிற தமிழர் நிலத்தையும் குறிக்கிறது. 

மேலும், இவற்றையெல்லாம் எண்ணத்திலும் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்துகிற அறிவு மரபையும் கலை மரபையும் தொழில் மரபையும் குறிக்கிற ஒரு குறியீட்டுச் சொல்லாகத்தான் பன்மைப் பொருண்மையை அடைகாத்து வைத்திருக்கிறது தமிழ் எனும் சொல்.

மொழியானது வெறும் பேச்சுக் கருவி மட்டுமல்ல; அம்மொழி பேசுவோரின் அடையாளம், வரலாறு, பண்பாடு, அறிவு, அறம், அரசியல், அழகியல், படைப்பாக்கம் எனப் பன்முக வேர்களையும் கொண்டிருப்பது. மொழியே ஓர் இனத்தின் வேர். வேரை மறுக்கிற, மறந்த, இழக்கிற, இழந்த எந்தவொரு மரமும் செடியும் கொடியும் நிலைத்திருப்பதில்லை என்பதே இயற்கை விதி.

ஆக, ஒரு குழந்தை அல்லது மாணவர் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் வேரை உணர வேண்டும் என்பதே.

இந்நிலையில், ஒரு சாபக்கேடு என்னவெனில், இலக்கணத்தைப் பயமுறுத்தும் பூச்சாண்டி போல கற்றுக் கொடுக்கும் முறையினால்தான், இலக்கணம் என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது. 

ஆக, கோளாறு என்பது இலக்கணத்தில் அல்ல; இலக்கணம் பயிற்றுவிக்கும் முறையில் தான் இருக்கிறது.

*

ஏர் மகாராசன்

10.11.2020

செவ்வாய், 3 நவம்பர், 2020

பெண்ணைக் குறித்த கற்பிதங்களும் மதங்களின் ஐக்கியப்பாடும் : மகாராசன்


பெரும்பாலான மதங்களும் சாதியமும் ஆண் வழிச் சமூக மதிப்பீடுகளையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியச் சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் மதங்களும் சாதியமும் ஒன்றுக்கொன்று பிணைப்பு கொண்டிருப்பவை. சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளை வழிமொழிவதாகவே இந்தியச் சூழலில் நிலவுகிற பெரும்பாலான மதவாதச் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. 


இவ்வாறான சாதிய மதவாத அடிப்படைக் கருத்தாக்கங்கள் யாவும் பெண்ணைப் பற்றிய நிலைப்பாடுகளில் மிகக் குறுகலானதும் குறிப்பானதுமான நெறிமுறைகளை முன்வைத்தும், கட்டுப்பாடுகளை இயற்றியும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கொண்டிருக்கின்றன. இத்தகைய சாதிய மதவாதப் படைப்புகளை வெளிப்படுத்துவதாகவே ஆண் வழிச் சமூக அதிகார மையங்களும் அவை வழிப்பட்ட மரபுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எல்லா மதங்களுமே பெண்ணை அடிமைப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கின்றன. இந்தியச் சமூகச் சூழலில் நிலவுகிற வைதீக, கிறித்துவ, இசுலாமிய, பௌத்த, சமண மதங்களும் தத்தமது வழிகளில் பெண்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்தி இருக்கின்றன.

ஆரிய வைதீக மதத்தின் அடிப்படை ஆதார நூலாகக் கருதப்படும் மனுதர்ம சாத்திரம், பெண்களுக்கு உரிய கடமைகளாகப் பின்வருவனவற்றைச் குறிப்பிட்டிருக்கிறது.

"எந்தப் பருவத்தினள் ஆயினும், தனது இல்லத்திலேகூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றல் ஆகாது (அத். 5:147); இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள், இவர்கள் காவல் அன்றிப் பெண்கள் தம்மிச்சையாக இயங்கல் ஆகாது(அத்.5:148); தகப்பன், கணவன், மக்கள் இவர்களைத் தவிர்த்துத் தனித்து இருக்க விரும்புதல் கூடாது. அப்படித் தனித்து இருப்பின் பிறந்தகம் புக்ககம் ஆகிய இரு குலங்களுக்கும் நிந்தை உண்டாக்குவாள்(அத்.5:149); இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணம் இன்மை இவற்றை உடையனவன்ஆயினும், கற்பினால் ஆன பெண், தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக(அத்.5:149); கைம்மையில் காய், கனி, கிழங்கு இவற்றால் சிற்றுணவு கொண்டு காலம் தள்ளலும், மற்றொருவன் பெயரை நாவால் கூற விரும்பாமையும் வேண்டும்(அத்.5:157); கைம்மையினள் தன் காலம் உள்ளளவும் பொறுமை, தூய்மை, உடல் கலப்பின்மை, கள் புலால் கொள்ளாமை, மேன்மையான கற்பிலக்கணம் இவை பொருந்தக் கடவள்(அத்.5:158); மனம், சொல், புலன் இவற்றை அடக்கி நெறி தவறாமல் இருப்பவள், கணவன் இருக்கும் லோகத்தை அடைவதுடன், கற்பரசி என்றும் கொண்டாடப்படுவாள்(அத்.5:165)." மேற்கண்டவாறு மனுதர்ம சாத்திரம் பெண்ணின் கடமைகளாக வரையறுத்துள்ளது.

கிறித்துவத்தின் பழைய மற்றும் புதிய பைபிளில் எபெ.5.22இல், "மனைவிகளே! கர்த்தருக்குள் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்த புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்". எபெ.5.23இல், "கிறிஸ்து தலையாய் இருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்". எபெ.5.24இல், "சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறது போல, மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்". எபெ.5.23இல், "மனைவியும் புருஷன் இடத்தில் பயபக்தியாக இருக்கக் கடவது" என்ற கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாக, பெண் ஆணுக்குக் கீழ்ப்படிந்து, ஆணைச் சார்ந்து வாழ வேண்டும் என்கிறது கிறித்துவ மதம்.

இசுலாமிய மத நூலான திருக்குர்ஆனும், பெண்ணை ஆணின் உடமையாகப் பார்க்கிறது. திருக்குர்ஆன் அத்.2 .222.223இல், "மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள். தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளைநிலங்கள் ஆவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளை நிலங்களுக்குச் செல்லுங்கள். மேலும், உங்களுடைய வருங்காலத்திற்காக முன்கூட்டியே ஏதாவது செய்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்".
அத் 4.34.35இல், "ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம், அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதும் ஆகும். எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப் பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தன் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று அஞ்சுகின்றீர்களோ, அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள். மேலும், அவர்களை அடியுங்கள்" என்கிறது திருக்குர்ஆன். பெண் மீதான வன்முறையை ஆண் நிகழ்த்திக் கொள்வதற்கான அங்கீகாரத்தைத்தான் இசுலாமிய மதம் வழங்கியிருக்கிறது.

அவைதீக மதங்களான பௌத்தம், சமணமும் துறவறத்தை வலியுறுத்துவதன் மூலம், பெண்கள் மீதான வெறுப்புணர்வையே வெளிப்படுத்தியுள்ளன. "ஆண் மெய் என்பது சகலரையும் ஆண்டு இரட்சிக்கப்படும் புருஷர் எனப்படுவான். பெண் மெய் என்பது சகலரையும் இச்சிக்கக்கூடிய ஸ்திரீ எனப்படுவாள்" என்கிறது அதிவேத சங்கங்களின் ஸ்தாபன உரை. பௌத்த, சமண மதங்கள்கூட பெண்ணை வெறுக்கத்தக்க ஒன்றாகவே பார்க்கின்றன.

இவ்வாறாக, எல்லா மதங்களுமே பெண்ணுக்கு எதிரான கருத்துக்களையே முன் வைத்திருக்கின்றன. இத்தகைய மதவழிபட்ட கருத்துகளே ஆண் வழிச் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆண் வழிச் சமூகக் கலாச்சாரமும், அதனை ஒட்டிய அதிகாரமும் நிலைநிறுத்துவதற்கு இவ்வகைப்பட்ட மதக் கருத்துக்களே முக்கியக் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எனவே, இன்றைய சமூகத்தின் எல்லாத் துறையிலும் தங்கள் கால் பதிக்கவும் சாதிக்கவும் வந்துவிட்ட பெண்களுக்கு எதிராகவும், சாமானியப் பெண்ணுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கருத்து ரீதியான - கலாசார ரீதியான - உடல் ரீதியான வன்முறை, நாம் பார்த்த வகையில் வரலாற்றுவழி வந்ததால், இந்த மதத்தை - அதன் ஆணிவேரை அசைக்காமல், இதற்கு எதிரான வலுவான மாற்றுக் கலாச்சாரக் கருத்துத் தளத்தை - சனநாயகப் பண்பாட்டை வளர்க்காமல், தனித் தனி நபர்களைச் சாடுவதும் சாத்தியமற்ற ஒன்று.

எல்லா மதங்களுமே தம்மளவில் மாறுபட்டுக் கொண்டாலும், பெண்களை ஒடுக்குவதில் மட்டும் ஐக்கியப்பட்டுக் கொண்டுள்ளன. இவற்றுள் சில மதங்கள் சில சீர்திருத்தங்களைக் குறைந்த அளவேனும் தம்முள் கொண்டுள்ளன. அதே வேளையில், வேறு சில மதங்கள் மிகக் கடுமையான ஒழுக்க விதிகளைப் பெண் மேல் திணித்து வருகின்றன. ஒடுக்கப்பட்டுக் கிடப்பவர்களுக்குக் குறைந்த அளவிலேனும் இளைப்பாறுதல் தருகிற வகையில் சில சீர்திருத்தங்களைச் சில மதங்கள் நடைமுறைப்படுத்துகையில், அவற்றை அடிப்படை மதவாதிகள் தமக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதுகின்றனர். இதனால் அவர்களுக்குள்ளும் மதங்களின் மோதலாக வலுக்கத் தொடங்குகின்றன.

ஒட்டுமொத்த சமூகத்தையே பழமை வாதத்துக்குள் தள்ளுவதைத்தான் எல்லா மதங்களும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. 

நவீன சமூகமானது மதங்களைக் குறித்த புரிதலை உள்வாங்கிக்கொள்ளவும் வேண்டும். மதங்களோ, வழிபாட்டு முறைகளோ, வழிபடு தெய்வங்களோ, மத வழிப்பட்ட நூல்களோ யாதாயினும், அவை ஒரு காலத்திய சமூக மனிதர்களின் நம்பிக்கை அல்லது கற்பிதம் அல்லது வாழ்முறை அவ்வளவே. ஆயினும், அவற்றை முற்றாகவே நிராகரிப்பதோ அல்லது அப்படியே கொண்டாடுவதோ அவரவர் தனிப்பட்ட உரிமைதான் என்றாலும், சக மனிதரை, சக மனிதருள் பாதியான பெண்ணை ஒடுக்கவோ, இழிவுபடுத்தவோ, அடிமைப்படுத்தவோ, இரண்டாம்தர உயிரியாகப் பாவிப்பதற்கோ எந்த மதத்திற்கும் அல்லது மதவாதிகளுக்கும் அல்லது மத நூல்களுக்கும் உரிமை இல்லைதான் என்பதை நவீன சமூகம் உணரத் தொடங்கி இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, நாட்டுப்புற வழிபாட்டு மரபில் பெண்களின் புழங்கு வெளி பற்றியும் மீளாய்வு செய்யவும் வேண்டி இருக்கிறது. 

எதுவாயினும், ஏற்பனவற்றை ஏற்றும், எதிர்ப்பனவற்றை எதிர்த்தும் பயணிப்பதே நவீன சமூகத்தின் படிப்பினையாகும்.

மகாராசன் எழுதிய 'தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்' எனும் நூலில் இருந்து...


ஏர் மகாராசன்
03.11.2020.