புதன், 29 மார்ச், 2023

வாழ்தல் நிமித்தங்கள் - மகாராசன்


வெயிலில் தோய்த்த 
மஞ்சளைப் பூசிக்கொண்ட பழுப்பெய்திய இலைகள்
காற்றில் நீந்தியபடி
சறுகென முத்தமிடுகின்றன
தூர் மண்ணில்.

அறுப்புக் கழனியில் 
சிந்தித் தப்பிய நெல்மணிகள் 
கோடை மழையொன்றில் 
ஊறிக்கிடந்து 
வெள்முளை காட்டிச் 
சிரித்துக் கிடக்கின்றன.

அலகு நோகக் கொத்தித் தின்று இரைப்பை நெப்பிய 
கவுதாரிப் பறவைகள்
பனந்தூர்க் குதுவல் மறைவில் 
சிறகை நீவிக்கொண்டிருக்கின்றன.

திக்குகளில் அலைந்து திரிந்து 
இறக்கை வலிக்கப் பறந்து வந்த 
சுள்ளான் குருவியொன்று
வெறுங்கிளையின் அம்மணத்தில் கால்விரல் கவ்வி அமர்ந்திருக்கிறது.

இளைப்பாற இடமிருந்தும்
களைப்பாற மனமில்லாமல்
இறகுகள் துவள 
சிறகை அடித்துப்
பறந்து கொண்டே இருக்கிறது 
வல்லூறு ஒன்று.

வெறுமை ததும்பிய வானத்தை
வெறித்துப் பார்த்தபடி
ஆறுதலாய்க் கிடக்கிறது 
தனிமைப் பொழுது.

கால்த்தடம் மறைந்த பாதையொன்று
மூதாதைகளின் பாடுகளைச் சுமந்து
நீண்டு கிடக்கிறது.

கண்ணீர் கசிய வட்டமிடும்
மனப் பறவையொன்று
தன்னைத் தொலைத்துக்கொண்டே
ஒவ்வொரு இறகாய் உதிர்த்துக்கொண்டிருக்கிறது.

வாழ்தல் நிமித்தங்களை
மென் சிரிப்புடன்
எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறது
ஊழிப் பெருங்காலம்.

ஏர் மகாராசன் 
29.03.2023.

வெள்ளி, 24 மார்ச், 2023

ஆரிய மரபின் நால் வருணப் பகுப்பு வேறு; தமிழ் மரபின் தொழில்குலப் பகுப்பு வேறு - மகாராசன்


ஆரிய வைதீக மரபினரின் நால் வருணக் கருத்தாக்கம் குறித்து விவரிக்கும் பாவாணர், ‘மக்களை நால் வகுப்பாக வகுத்து, பிராமணனுக்கு வெண்ணிறமும், சத்திரியனுக்குச் செந்நிறமும், வைசியனுக்குப் பொன் நிறமும், சூத்திரனுக்குக் கருநிறமும் சார்த்திக் கூறி, நால் வரணப் பாகுபாட்டை ஏற்படுத்தி, பிராமணர் கல்வித் தொழிலையும், பிற வகுப்பார் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழில்களையும் வழிவழி செய்து வர வேண்டுமென்றும், சத்திரியன் முதலிய மூவரும் பிராமணனுக்கு இறங்கு வரிசையில் தாழ்ந்தவர் என்றும், சூத்திரன் மேல் மூவர்க்கும், வைசியன் மேல் இருவர்க்கும், சத்திரியன் பிராமணருக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்றும், இது இறைவன் ஏற்பாடு என்றும், மேல் வகுப்பார் மூவரும் பூணூல் அணியும் இருபிறப்பாளர் என்றும், வேதத்தைச் சூத்திரன் காதாலும் கேட்கக் கூடாது என்றும், பிராமணனைக் காணின் மற்ற மூவரும் தத்தம் தாழ்வு நிலைக்குத் தக்கவாறு ஒதுங்கி நிற்க வேண்டுமென்றும் இறைவன் கட்டளை இட்டது போல் கற்பித்து விட்டனர். 

இச்சட்ட திட்டம் வடநாட்டில் விரைந்து முழுவதும், தென்னாட்டில் படிப்படியாகப் பேரளவும் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது. இங்ஙனம், இயற்கையாகத் தொழில் பற்றியிருந்த குலப் பாகுபாடு, நிறம் பற்றி மாற்றியமைக்கப்பட்டது’ என்கிறார்.

மேலும், ‘நால்வகை வரணப் பகுப்பின் பின்னரே, பேருலக வடிவான 'விராட்' என்னும் பரம்பொருளின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்னும் 'புருட சூத்தம்' இருக்கு வேதம் பத்தாம் மண்டலத்தில் செருகப்பட்டது. பேருலக வடிவான பரம்பொருள் கருத்தும் பிராமணர்க்குத் தமிழரொடு தொடர்பு கொண்டபின் தோன்றியதே. 

முகம் முதலிய நான்கனுள்ளும், முகமே உச்சியிலும், ஏனை மூன்றும் ஒன்றினொன்று தாழ்ந்தும், முறையே மேலிருக்கும் ஒன்றையும் இரண்டையும் மூன்றையும் தாங்கியும் இருப்பதுபோல், நால்வரணத்துள்ளும் பிராமணனே தலைமையானவன் என்பதும், ஏனை மூவரும் முறையே ஒருவரின் ஒருவர் தாழ்ந்தவரும், மேலுள்ள ஒருவனையும் இருவரையும் மூவரையும் தாங்க வேண்டியவருமாவர் என்பதும், நால் உறுப்பும் ஒரே ஆள் வடிவான பேருலக மகன் (விராட் புருஷ) கூறுகளாதலால், நால் வரணமும் இறைவன் படைப்பு என்பதும் கருத்தாம். 

இனி, கல்வித் தொழிலுக்கு வாயும் (நாவும்) மூளையும், போர்த் தொழிலுக்குத் தோளும், இருந்து துலை நிறுத்தற்குத் தொடையும், நடந்து பாடுபடுதற்குப் பாதமும் வேண்டும் என்பது உட்கருத்தாம். 

இனி, போருக்கு வேண்டும் தோள் வலிமை மறக் குடியினர்க்கும், வணிகத்திற்கு வேண்டும் பண்டமாற்றுத் திறமை வாணிகக் குடியினர்க்கும், உழைப்பிற்கு வேண்டும் உடல் வலிமை பாட்டாளி மக்கட்கும் இருப்பதுபோல், கல்விக்கு வேண்டும் நாவன்மையும் மதிநுட்பமும் பிராமணனுக்கே உண்டென்பதும், ஆதலால் நால் வரணத்தாரும் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழிலையே செய்துவர வேண்டும் என்பதும், நச்சுத் தன்மையான சூழ்ச்சிக் கருத்தாம்’ என்கிறார் பாவாணர். 

பிறப்பின் அடிப்படையிலான குலப் பாகுபாடுகளைத் தமிழர் மரபு ஏற்றதில்லை; ஏற்பதில்லை என்பதை,

     பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

     செய்தொழில் வேற்றுமை யான்

என, திருக்குறள் தெளிவுபடச் சுட்டியிருப்பதும் நோக்கத்தக்கது ஆகும். 

செய்த தொழிலாலும், செய்கின்ற தொழிலாலும்தான் தமிழர் மரபில் தொழில் குலங்கள் உருவாகி இருக்கின்றன. இந்நிலையில், வேளாளன், வணிகன், அரசன், அந்தணன் என்பதே இயற்கையான வரலாற்று முறைப்பட்ட நால் வகுப்பு வரிசை எனும் வகையில் பாவாணர் விளக்கப்படுத்தும் கீழ்வரும் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

‘எல்லார் உயிர் வாழ்க்கைக்கும் இன்றியமையாத உணவை விளைவிப்பதனாலும், நிலையாகக் குடியிருந்து விளைவில் ஆறில் ஒரு பங்கைக் கடமையாக விறுத்து அரசை நிலை நிறுத்துவதனாலும், போர்க்காலத்தில் படைஞனாகிப் பொருது வெற்றி உண்டாக்குவதனாலும், இரப்போர்க்கு ஈந்து துறப்போர்க்குத் துணையாய் இருப்பதனாலும், எல்லாத் தொழிலாளருள்ளும், உழவனே உயர்ந்த குடிவாணனாகவும் தலைசிறந்த இல்வாழ்வானாகவும் கொள்ளப்பட்டான். கைத்தொழிலாளர் எல்லாம் உழவனுக்குப் பக்கத்துணைவராகவே கருதப்பட்டனர். 

வெளிநாட்டு அரும்பொருள்களை எல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையை வளம்படுத்தியும், அரசனுக்கு அவ்வப்போது பண உதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன், உழவனுக்கு அடுத்தபடியாகப் போற்றப்பட்டான்.

கள்வராலும் கொள்ளைக்காரர்களாலும் பகைவராலும் அதிகாரிகளாலும் கடு விலங்குகளாலும் உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமல் காக்கும் அரசன், பணி வகையில் வணிகனுக்கு அடுத்தபடியாகவும், அதிகார வகையில் கண்கண்ட கடவுளாகவும் கருதப்பட்டான்.

ஆசிரியனாகவும் அமைச்சனாகவும் தூதனாகவும் பணிபுரிபவனும், ஆக்க வழிப்பாற்றல் உள்ளவனுமான அந்தணன், இறைவனுக்கு அடுத்தபடி தெய்வத்தன்மை உள்ளவனாகக் கருதப்பட்டான்.

இங்ஙனம், உழவு, வாணிகம், காவல், கல்வி என்னும் நால்தொழிலே தலைமையாகக் கொள்ளப்பட்டு எல்லாக் கைத்தொழில்களும் உழவுள் அடக்கப்பட்டன’ எனக்கூறும் பாவாணர், ‘நாகரிகம் முதிர்ந்து அறிவு வளர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில் தமிழ்ப் பொருள் இலக்கண நூலார் கிளவித் தலைவரைத் தொழில் அடிப்படையில் நாற்பாலாக வகுக்கும்போது அறிவாற்றல், அதிகாரம், செல்வம் ஆகிய மூன்றுக்கும் சிறப்பு கொடுத்து அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தலைகீழாக மாற்றி விட்டனர்’ என்கிறார். 

ஆயினும், ஆரிய வைதீகத்தின் நால் வருணப் பகுப்பிற்கும், தமிழரின் நால்வகைத் தொழில் பகுப்பிற்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. தமிழரின் நால்வகைத் தொழில் பாகுபாடும், தொழில் குலங்களும் கற்பிதங்களாக உருவாக்கப்படவில்லை. சமூக வளர்ச்சிக் கட்டங்களில் நிலவிவந்த - சமூகத் தொழில் உற்பத்திக் கட்டங்களில் உருவான தொழில் அமைவுகளின் அடிப்படையில்தான் தொழில் குலங்களும் - தொழில் பாகுபாடும் உருவாகி இருக்கின்றன. 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

ஞாயிறு, 19 மார்ச், 2023

புதிய பாடத்திட்டம்: மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடுகிறதா? : மகாராசன்.


அண்மையில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான +2 மற்றும் +1 அரசுப் பொதுத் தேர்வுகளில் 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை; தேர்வெழுத வரவில்லை என்கிற தகவல் தற்போது சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாகி இருக்கின்றது. 

மிகப்பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுதாமல் போனதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. மாணவர்களின் சமூகப் பொருளாதார மற்றும் குடும்ப நிலைமைகள், குடும்ப வருவாய்க்காகப் பொருளாதார உழைப்பில் ஈடுபடுதல், குடும்ப உறுப்பினர்களின் அறியாமைச் சூழல், பெற்றோர்களை இழந்திருத்தல், மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கம், சமூகக் குற்றவாளிகளுடன் சேர்க்கை, செல்பேசிப் பயன்பாடுகள், சமூக ஊடகங்களில் அதிகப்படியான புழக்கம், நுகர்வு வெறிக் கலாச்சாரம், லும்பன்கள் எனப்படும் உதிரிக் கலாச்சார மனப்போக்கு, அளவுக்கு மீறிய சுதந்திரப் போக்கு என, பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இவையெல்லாம் மாணவர்களின் குடும்பம் மற்றும் சமூகம் மையமிட்டவை.   

இவை போன்றோ அல்லது இன்னும் பிறவோ நிறைய இருப்பினும், எல்லாத் தரப்பினராலும் கவனிக்கத் தவறுகிற அல்லது கவனிக்க வேண்டிய கல்விசார்ந்த காரணிகளும் இருக்கின்றன.

பெருவாரியான மாணவர்களைக் கல்விச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தி வைத்திருக்கும் கல்விசார் அகக் காரணிதான் என்ன?

பொதுவாக, கல்விசார் கலைத்திட்டம் என்பது மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகும். மாணவர்களின் வயது, உடல், உளவியல், சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப அறிவுசார் அடைவுகளைப் பெற வைப்பதற்கான கற்பித்தல்- கற்றல் செயல்பாடுகள்தான் கல்வி எனப்படுகிறது. அதற்கேற்பத் தான் கல்விசார் கலைத்திட்டமானது / கல்வித் திட்டமானது காலந்தோறும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு உகந்த, பெருவாரி மாணவர்களைப் பங்கேற்கிற வகையில்தான் கடந்த காலத்தியக் கல்வித்திட்டங்கள் அமைந்திருந்தன.

ஒவ்வொரு கல்வித்திட்டமும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பொதுவானதாக, அனைத்துத் தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் விதமாக அமைந்திருந்தன. குறிப்பாக, கல்வி கற்கும் மாணவர்களை மூன்று வகைப்பட்ட தன்மையில் வகைப்படுத்துவர் கல்வி உளவியலாளர்கள். அதாவது, மீத்திறன் மாணவர்கள், சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என மூன்று வகைப்பட்ட மாணவர் தரப்பினர் கல்விச் சூழலுக்குள் இருப்பர். 

மேற்குறித்த மூன்று தரப்பினரையும் மனதில் வைத்துக்கொண்டு தான் - அவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறுதான் கல்வித்திட்டப் பாடப்பொருண்மைகள், கற்பித்தல் பயிற்சிகள், வினாத்தாள்கள், தேர்வுகள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு பாடத்திலும் குறைவான அளவுக்கே பாடப்பொருண்மைகள் வைக்கப்பட்டு, கற்றல் பயிற்சிகள் நிறைய அளிக்கப்பட்டன. இதனால், மீத்திறன் மாணவர்களும், சராசரி மாணவர்களும், மெல்லக் கற்போரும் கற்றல் அடைவுகளின் குறைந்தபட்ச எல்லைகளைக் கடந்து உயர்கல்விக்கான வாய்ப்புகளை எட்டிப் பிடித்து வந்துள்ளனர்.

ஆனால், அண்மையில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது, மூவகைப்பட்ட மாணவத் தரப்பினரையும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டதுதானா? எனச் சந்தேகிக்கப்பட வைத்திருக்கிறது. புதிய பாடத்திட்டம் எனும் பெயரில் மிக அதிகப்படியான பாடப் பொருண்மைகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருப்பதாகவே மாணவர்களும் ஆசிரியர்களும் கருதும்படி ஆகியிருக்கிறது. சின்னஞ்சிறு குருவி தலையில் பூசணிக்காயைச் சுமக்க வைத்திருப்பதைப் போலத்தான் மாணவர்கள் உணர்கிறார்கள். அதேபோல, பத்து வண்டிகளில் ஏற்றும் பாரத்தை, ஒரே வண்டியில் ஏற்றி வைத்து, அந்த வண்டியை இழுத்துச் செல்லமுடியாமல் முக்கித் தவிக்கும் வண்டி மாட்டின் பரிதாப நிலையில்தான் ஒவ்வொரு ஆசிரியரும் இருப்பதாகக் கருதுகிறார்கள்.

பாடத்திட்டத்தை நவீனப்படுத்துவதையும் தரவேற்றம் செய்வதையும் குறையாகவோ அல்லது குற்றமாகவோ கருத வேண்டியதில்லை. அதேவேளை, அது யாருக்கானது? என்ன தரமுடையது? என்ன பலமுடையது? என்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது? எல்லோருக்குமான வாய்ப்புகள் இருக்கின்றனவா? என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதானே ஒரு தலைமுறைக்கான பாடத்திட்டம்/கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.

ஆனால், புதிய பாடத்திட்ட உருவாக்கமானது, எல்லோருக்குமான வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அந்தத் தரப்பினர் மட்டுமே பங்கேற்கும்படியான வாய்ப்புகளை மட்டுமே வழங்கும் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது.

அதாவது, இப்போதைய புதிய பாடத்திட்டப் பொருண்மைகளும், அதையொட்டிய தேர்வு முறைகளும் மீத்திறன் மிக்க மாணவர்கள் மட்டுமே அதிகப்படியாகப் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியிருக்கின்றன. சராசரி மாணவர்கள்கூட திக்கித் திணறிக் கற்கும் சூழலில்தான் இருக்கின்றனர். மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் பாடத்திட்டப் பொருண்மைக்குள்ளும் தேர்வு முறைகளுக்குள்ளும் நுழைந்து நுழைந்து பார்த்தாலும் நுழையவே முடியாமல் அல்லல்படுகின்றனர். எதைப் எதைப் படித்தால் குறைந்தளவுத் தேர்ச்சி மதிப்பெண்ணாவது பெறலாம் என்கிற நிலைமைகள் இப்போது இல்லை. 

கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் வைத்திருக்க வேண்டிய பாடப் பொருண்மைகளை, பள்ளி மாணவர்களின் பாடப் பொருண்மைகளாக அதிகளவில் வைத்திருப்பதைப் பார்க்கும் மெல்லக் கற்கும் மாணவர்கள் ஒருவிதத் தயக்கத்தோடுதான் பள்ளி வகுப்புகளில் சேர்கின்றனர்.

மெல்லக் கற்கும் மாணவர்கள் எதை எதைப் படிக்க வேண்டும்? புத்தகம் முழுவதையும் படித்தால் மட்டுமே அவர்களால் தேர்ச்சி பெறமுடியும்; இல்லையெனில் தோல்விதான் என்கிற நிலைமையை அவர்கள் அறிகிறபோது, மெல்ல மெல்ல அதிலிருந்து அந்நியப்படத் தொடங்குகிறார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களை, குறைந்தளவு மதிப்பெண் எடுத்தாவது தேர்ச்சி பெற வைக்க முடியாத நிலைதான் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. பாடங்கள் முழுவதையும் படிக்க வைத்தால்தான் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களைப் பாடங்கள் முழுவதையும் படிக்க வைக்க முடியாத சூழல்தான் ஆசிரியர்கள் முன்னிருக்கும் சவால்.

மெல்லக் கற்கும் மாணவர்கள், தம்மால் பாடங்கள் முழுமையையும் முற்றும் முழுதாகப் படிக்க முடியாது; இயலாது எனத் தெரிந்த பின்னரும், அடுத்தடுத்த இரண்டு பொதுத் தேர்வுகளிலும் பல்வேறு பாடங்களில் நேரப் போகும் தோல்விகளை எதிர்கொள்வதற்கு அம்மாணவர்கள் விரும்புவதில்லை. அதனால், பள்ளிக்கும் வருவதில்லை; வகுப்புக்கும் வருவதில்லை; தேர்வுக்கும் வருவதில்லை எனத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டனர் அல்லது அந்நியப்படுத்திக்கொள்ள முனைந்து விட்டனர்.

பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 9ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, 10 ஆம் வகுப்பில் தட்டுத் தடுமாறித் தேறிய மாணவர்கள், 11ஆம் வகுப்பிலும் 12ஆம் வகுப்பிலும் இருக்கின்ற பாடநூல்களின் கனம், பாடப்பொருண்மை, கற்றல் கற்பித்தல் நெருக்கடிகள், குறைந்தளவுத் தேர்ச்சிகூடப் பெறுவதற்கு வழியின்மை போன்றவற்றையெல்லாம் தெரிந்துகொண்ட மெல்லக் கற்கும் மாணவர்களுக்குக் கல்வியிலும் கற்றலிலும் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது.

புதிய கல்விச் சூழலில், மெல்லக் கற்கும் மாணவர்களின் இத்தகையத் தனிமைப்படுத்தலுக்கும் அந்நியப்படுத்தலுக்கும் மாணவர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது; கூடாது. மாறாக, புதிய பாடத்திட்டக் கூறுகள் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் நோக்கிலேயே அமைந்திருப்பதனால்தான், மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றல் பங்கேற்புகள் குறைவாகவும் தனிமைப்பட்டும் அந்நியப்பட்டும் விலக்கி வைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால்தான், அதிகளவிலான மாணவர்களின் இடை நிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. ஒருகாலத்தில், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் தீண்டாமையைச் சாதியை வைத்து நடைமுறைப்படுத்தினர். இப்போதும், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையைப் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் கையாளப்படும் சூழலில் இருக்கின்றன.

பெருவாரியான மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும் சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்பும் ஈடுபாடும் வருகையும் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டியது கட்டாயமாகும்.

அதாவது, மீத்திறன் மாணவர்களுக்கு மட்டுமே உரியதாகப் பாடத்திட்டங்களும் தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்படாமல், மெல்லக் கற்கும் மாணவர்களையும் உள்ளடக்கியப் பாடத்திட்டப் பொருண்மைகளும் தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் கல்வித்துறை உடனடியாகச் செய்திடல் வேண்டும். இத்தகையச் சீரமைப்பில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்திரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும்.

கல்வித்திட்டச் சீரமைப்பின் முதற்கட்டமாக, எல்லா வகுப்புகளிலும் எல்லாப் பாடங்களிலும் பாடப்பொருண்மைகளின் அளவைக் குறைத்திடல் வேண்டும். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய பிறகு, மறுபடியும் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதில் நிறைய உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆகையால், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறையை இரத்து செய்து, 12ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வாக நடத்திட கல்வித்துறை நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். தேர்வு முறைகளில் வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print) என்கிற ஒரு நடைமுறை இருந்து வந்தது. அந்த நடைமுறை புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின்போது நீக்கப்பட்டது. இதனால், ஒரு பாடத்தில் எங்கிருந்து கேள்வி கேட்பார்கள்? எத்தனை மதிப்பெண்கள் எந்தெந்தப் பாடங்களில் கேட்பார்கள்? எதைப் படிக்க வேண்டும்? புத்தகப் பயிற்சி வினாக்களில் (Book back Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? புத்தக உள்நிலையிலிருந்து (Interior Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? என்கிற வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) ஆசிரியருக்கும் மாணவருக்கும் தெரிந்தால் மட்டுமே அதற்கேற்றவாறு மூவகைப்பட்ட மாணவர்களையும் பயிற்சி பெற வைக்க முடியும். 

குறிப்பாக, மெல்லக் கற்கும் மாணவரையும் தேர்ச்சி நோக்கிப் பங்கேற்க வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏனெனில், தேர்ச்சி பெற இயலாத அல்லது தேர்ச்சி பெற வைக்க முடியாத சூழல் இருப்பதால் தான், அதிகளவு இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆகையால், புதிய பாடத்திட்டத் தேர்வுமுறைகளில் உடனடியாக வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இம்முறை நடைமுறைக்கு வரும்போது மெல்லக் கற்கும் மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதற்கான வாய்ப்புகளும், அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும் ஏற்படும். 

இவற்றோடு, ஆசிரியர்களைச் சமூகமும் கல்வித்துறையும் மாணவர்களும் அவமதிப்புக்கும் பாதிப்புக்கும் உள்ளாக்காத வகையில் அவர்களுக்கு முழுமையான பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். 

அலுவல் காரணங்களுக்காகவும் தரவுகள் பதிவேற்றங்களுக்காகவும் வெகு தீவிரமாகப் புழக்கத்திலிருக்கும் செல்பேசிப் பயன்பாடுகளை பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்களுக்கு அனுமதிப்பதை உடனடியாகத் தடைசெய்திடல் வேண்டும். கற்றல் கற்பித்தல் சார்ந்த கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களின் உள்ளக் குரலை மனம்திறந்து கேட்கவும், அதன் நியாயங்களை உணர்ந்து கொள்ளவுமான கல்வித்துறை அதிகாரிகள் முன் வருதல் வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஓரளவுக்கேனும் கல்வித்துறை சீரமைய வாய்ப்பிருக்கிறது.

(கல்விச் சூழல் குறித்து இன்னும் நிறைய நிறையப் பேசவும் எழுதவும் உரையாடவும் செய்திட வேண்டும். கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மனம் திறந்து பேசவும் எழுதவும் உரையாடவும் வேண்டிய நேரமிது. செய்திடுவோம். 

இக்கட்டுரைகூட, மெல்லக் கற்கும் மாணவர்களின் அந்நியப்படுதலை மட்டுமே முதன்மைப்படுத்தி உள்ளது. இன்னமும் இதைப்போன்ற கல்விசார் பிரச்சினைகள் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்தாடல்களை முன்வைத்தல் நன்றாம்.)

கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்,
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.
மக்கள் தமிழ் ஆய்வரண்,
தமிழ்நாடு.




புதன், 15 மார்ச், 2023

அறிஞர் அண்ணாவின் கபோதிபுரக் காதல் : அம்சம் மகாராசன்

புதுப்பொலிவுடன் உலகம் ஒவ்வொரு நாளும் விழித்தெழுகிறது. விழித்துக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிழைத்துக்கொள்வதற்காகத் தந்திர வித்தைகளை நடத்துகின்றன. 

சுதந்திரப்போக்கு எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதார்த்தம். இதில் மனிதர்கள் மட்டும் தன் இனத்தைச் சீரழிக்கும் இழி செயல்களைச் செய்து, அதற்குப் பெயர் பெண்மை, தாய்மை என்று மேலோட்டமான புனிதத்தன்மையைக்  கற்பித்துள்ளனர். 

மனம் பொருந்தாத துணைவனுடன் வாழவும் முடியாமல், நெஞ்சமெல்லாம் நிறைந்த காதலனை மறக்கவும் முடியாமல் தவித்துக்கொண்டு, ரசமற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் மீது இயல்பாக இரக்கம்தானே வரவேண்டும். இல்லையென்றால், பெண் பெருமை கொள்ளும்படியான வேறு வாழ்க்கையைக் காண்பிக்க வேண்டும். 

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காமவெறி பிடித்த சில மனித ஜென்மங்களால் பெண் சீரழிக்கப்படுகிறாள். வெளியில் தெரிந்தால் உலகம் பாதிப்புக்குள்ளான பெண்ணைத்தானே தூற்றும் என்னும் சமூக பழக்க வழக்கத்தால், அதை மறைத்து வாழ முற்படும் பெண்ணின் நிலை அடுத்தடுத்து சறுக்கு மரமாகிறது என்பதையே இக்குறுநாவல் எடுத்துரைக்கின்றது.

பிறர்மனை நோக்கும் காமக் கூட்டம் தன் குடும்பத்தையும் அழித்து, பாழாய்ப் போன ஊருக்குப் பயந்து பயந்து வாழும் பெண்களின் குடும்பத்தையும் கெடுப்பதில்  படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண், பெண் என்ற வேறுபாடில்லாமல் வாழும் ஈனப் பிறவிகளைச் சாடுவதற்காகவும், அத்தகையவர்கள் திருந்துவதற்காகவும், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட குறுநாவல்தான் கபோதிபுரக் காதல். 1968 இல் திராவிடப் பண்ணை வெளியிட்ட இந்நூலை, தற்போது ஆதி பதிப்பகம் மீள்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

இக்குறுநாவல் வெறும் 64 பக்கங்கள்தான். ஆனால், பல கோடி செலவில் வெளியாகும் திரைப்படங்கள் ஊட்டமுடியாத - உணர்த்த முடியாததை எழுத்தில் அறிய வைத்திருக்கிறது. 

கணவன் வீராச்சாமிக்குப் பயந்து பயந்து குடும்பக் கடமையாற்றுபவர் வேதவல்லி. தான் பெற்ற பெண் பிள்ளையின் உணர்வைப்  புரிந்துகொண்டாலும், கணவனிடமும் சொல்லாது, பிள்ளையிடமும் எதுவும் காட்டிக்கொள்ளாத அடக்கக் குணம் கொண்டவள். இருப்பினும், பல்வேறு தொழில்கள் செய்து, எல்லாவற்றிலும் நட்டமும் கடனும் பட்டதால் ஏழ்மை நிலைக்கு வந்துவிடுகிறது அவர்களது குடும்பம். இதனால், 16 வயது மகள் சாரதா என்ற ராதாவை ஜமீன்தார் போன்ற பணக்காரத் தோரணையிலிருக்கும் மாரியப்பப் பிள்ளைக்கு 3 ஆவது மனைவியாகத் திருமணம் செய்துகொடுக்க முற்படுகிறது. இதற்கு  முன்பே  ராதா, ஜமீன்தார் பேரன் பரந்தாமன் மீது காதல் வயப்பட்டிருந்தவள். பரந்தாமனும் அவளை மனதுக்குள் நினைத்திருந்தவன். தற்போது 60 வயது நிரம்பிய ஜமீன்தார் மாரியப்பப் பிள்ளைக்கு 16 வயது மட்டுமே எட்டிய மிக அழகு வாய்ந்த பதுமைப் போன்ற பெண்ணான ராதா மனைவியாகிறாள். 

ராதாவின் மனமோ கிழவனோடு மணவாழ்வில் ஒட்டவில்லை. அழுகையை மட்டுமே வெளிப்படுத்த முடிந்த உலகில், பரந்தாமனின் சந்திப்பில் தன்னை மறந்த ஒரு நொடியில் ஏதேதோ மாற்றங்கள் தம் வாழ்வில் ஏற்பட்டு விடுகின்றன.  சமயம் பார்த்த கணக்குப் பிள்ளை கருப்பையா, ராதா வாழ்க்கையில் காம வேட்டையாடிச் சீரழிகிறான். வெளியில் தெரிந்தால் ஊர் என்ன பேசும் என்று பயந்து பயந்து ராதா வாழ்ந்து கொண்டிருக்கையில், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், நகரத்திலிருந்து வருகிறவர்கள், சாமியார்கள் என்று பலரையும் நம்பினாள். நாளும் நல்ல காரியங்களைக் கற்றுத்தருவார்கள் என்று நினைத்திருந்தவளுக்கு அதிர்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன. நன்றாகப் பேசிச் சிரித்துக்கொண்டே தன் இனத்தை வேட்டையாடும்  இழிசெயலைச் செய்யும் மனிதர்களிடம் அவள் அகப்பட்டுக்கொண்டாள். 

அடுத்தவர்களின் அந்தரங்க வாழ்வைப்  பதிவு செய்து மிரட்டி சுகபோக வாழ்வு வாழும் மனிதர்களால் நிம்மதியை இழக்கிறாள். பணம், பொருள், உறவு எல்லாம் இழக்கிறாள். இறுதியில் தாலி கட்டியவனையும் இழக்கிறாள். 

நல்லவர்களால் உலகம் இன்று நிலைத்திருக்கிறது என்பது போல, ராதா மீதான காதலைச் சுமந்தலைந்த பரந்தாமன் அம்மை நோயால் கண்பார்வையை இழக்கிறான். கண்ணில்லா கபோதியான பின்பு, ராதாவைச் சந்திக்கிறான். 

சமூகம், திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக்கொள்ளும். தாங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும். ராதா போன்ற பெண்கள், கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும். முன்சென்றால் ஓடிவிடும். சமூகப் பழக்கவழக்கம் என்னும் கொடுமையை எதிர்த்தால்தான் கண்ணுள்ள  கபோதிகள் முன் வாழ முடியும் என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் அறிஞர் அண்ணா.

பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால், காதல் நோயில் சிக்கிக்கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான்; எதுவுஞ்செய்வான்; எவர்க்கும் அஞ்சான்; எதையும் கருதான். 

ஆம்! இன்னமும்,மாடமாளிகை, கூடகோபுரங்களை விட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். எதையும் இழப்பான். காதலை இழக்கத்துணியான். இப்படியாக, ராதாவுக்கு மறுவாழ்வைக் கொடுத்து காதலையும் வாழ்விக்கச் செய்கிறான் பரந்தாமன். இவ்வாறு, கபோதிபுரக் காதலை நிலைநாட்டுகிறார் அறிஞர் அண்ணா.

அறியாத வயதுகளில் புரியாத மனதுடன் அல்லல்படும் பெண்ணின் வேதனையைச் சமூக சீர்த்திருத்தவாதியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும்  நின்று எழுதிய பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கக் கடமைப்பட்டுள்ளோம். இக் குறுநாவலை அழகுடன் வடிவமைத்துப் பதிப்பித்திருக்கும் ஆதி பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.

*

கபோதிபுரக் காதல் (குறுநாவல்),

அறிஞர் அண்ணா, 

முதல் பதிப்பு : டிசம்பர் 2022, 

பக்கங்கள்: 64,

விலை: ரூ 80/-

வெளியீடு: ஆதி பதிப்பகம், சென்னை.

பேச: 99948 80005