திங்கள், 29 ஏப்ரல், 2024

பாரதிதாசனின் திராவிட நிலைப்பாடும் தமிழ்த் தேசிய நிலைப்பாடும் : அறிஞர் குணா


திராவிடக் கருத்தியலும் அடையாள இழப்பும்.

திராவிட இனவழி மரபினில் ஊன்றி நில்!", "வாழ்க திராவிடத் தமிழ்த் திருநாடு!" என்றெல்லாம் பாவேந்தர் ஒருகால் பாடியதைக் கோடிட்டுக் காட்டி, இன்று அடிக்காலிலேயே ஆட்டம் கண்டுவரும் 'திராவிடக்' கருத்தியலுக்கு உரம் சேர்க்க முயல்வாருமுண்டு.

தொடக்கத்தில் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று எழுதியவர்தாம் அப் பாவேந்தர். சங்கதமொழி இலக்கியங்களைத் தழுவிக் கதைப்பாட்டுகளைப் புனைந்தவர்தாம் அவர். பின்னர் பெரியாரோடு இணைந்து அவர்தம் 'திராவிடக்' கொள்கைக்காக நின்றவரும், "திராவிடத் தமிழன்" போன்ற பொருந்தாக் கலப்புருவைக் கருவாக வைத்தும் அவர் பாடினார்.

ஆனால், தேவநேயப் பாவாணரோடும், அவருடைய தனித் தமிழ் இயக்கத்தோடும் தொடர்பேற்பட்ட பின்னர், அவர் அத் திராவிடத்தை மெல்ல விட்டுத்தொலைத்தார். தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகளேயெனச் சொன்ன பெரியாரின் தமிழெதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு நேரெதிராக,

'நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப் படி! - முறைப்படி
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி!
காலையில் படி, கடும்பகலில் படி, 
மாலை இரவு, பொருள்படும்படி'

என்று சொல்லி, பெரியாரின் திராவிட மெய்யினக் கொள்கைக்கு நேரெதிரான மொழிவழித் தமிழ்த் தேசிய இனக் கொள்கைக்காக அவர் பாடலானார். 

தமிழுணர்வை மிகவும் பழித்து வந்த கன்னடராம் பெரியாருக்கு மாறாக,

"பிள்ளை பிறந்தேன், யாருக்காக?
பெற்ற தமிழ்மொழிப் போருக்காக.
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர்நிகர் தமிழ்ச் சீருக்காக''

என்று பாடினார். 

தாம் பிறந்த புதுவை மண்ணில், மிகச் சிறுபான்மையராம் தெலுங்கர்கள் போடும் கொற்றங்களை எல்லாம் கண்டு வெம்பியவராயிற்றே. அதனால்தான் பாவேந்தர்,

தமிழ்நாட்டில் அயலார்க்கினி என்ன வேலை? 
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை?”
என்றும்,
"அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க; மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் 
அடியோடு வீழ்க"
என்றும்,
"பழந்தமிழ்க் குடிகள் வழிவந்த நாமே
பச்சைத் தமிழர்கள் நமதிந்த நாடு! - நல்
உழுந்தன வேனும் நமைப் பிறர் ஆள 
உரிமையே இல்லை என்றுநீ பாடு"

என்றும் தமிழ்த் தேசியப் போர்ப்பரணி பாடினார்.

"எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே! 
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்! 
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்"

என்று பாடிய பாட்டில், "திராவிடத் தமிழன்" என்னும் மாயை செத்துவிட்டது. 

தமிழைத் தாழ்த்தித் "தாய்ப்பால் பைத்தியம்" என்றெழுதிய பெரியாருக்கு நேர்மாறாக,

"தாய்மடியில் குந்தித் தமிழ்முலைப்பால் உண்ணுகின்ற 

சேய்தனக்கும் தாய்பேர் தெரிகிலையோ என்தாயே" 

என்று பாடினார். 

திராவிட மெய்யினக் கொள்கையை அப்பால் எறிந்துவிட்டு.

"தூங்கும் புலியைப் பறைகொண்டெழுப்பினோம்; 
தூய தமிழரைத் தமிழ்கொண்டெழுப்பினோம்’’

என்று பாடியவரும் பாவேந்தரே. 

"தமிழனுக்கென்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது” என்று எழுதிய பெரியாருக்கு மாறாக,

தமிழ்மொழி யெல்லாம் வடமொழி என்று 
சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று; 
தமிழ்மொழி யெல்லாம் தமிழ்மொழி என்று 
சாற்றுவர் தமிழர்கள் மெய்யிலே நின்று"

என்று பாடி, பாவாணர் மொழிந்த முதன்மொழிக் கொள்கைக்கு ஒப்புதல் தந்தவர் பாவேந்தர். பாவேந்தரின் இறுதிநிலை தமிழ்த் தேசியத்தோடு ஒன்றி, தமிழ்த் தேசியப் பாவலராக முதிர்ந்துவிட்ட செம்மையான கோலம்.

தமிழரின் இன்றைய இழிகேடுகளுக்கு, 'திராவிடம்' என்னும் நச்சுப்பூண்டு தமிழகத்தில் பற்றிப் படர்ந்ததும் ஒரு பெரிய காரணம். திராவிடக் கருத்தியலால் தமிழன் தன் அடையாளத்தை இழந்தான்; இன ஓர்மையை இழந்தான்.

கன்னடனுக்கு ஒரு கன்னடநாடும், தெலுங்கனுக்கு ஒரு தெலுங்குநாடும், மலையாளிக்கு ஒரு மலையாளநாடும் இருக்கையில், தமிழகம் மட்டும் தமிழ்நாடாக இல்லை. அது திராவிட நாடாகக் கெட்டு, தெலுங்கரும் கன்னடரும் மலையாளிகளும் அடுத்தடுத்து வந்து ஆளவும் சுரண்டவும் வழிவகுத்துள்ளது.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

கண்ணகித் தவிப்பு - மகாராசன்


காலத் தடங்களின் கங்குகளை
சுமந்திருந்த பெருங்காட்டில்
பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுக்க நடந்த 
கண்ணகியின் கண்களில் 
நீர்முட்டக் கசிந்த
காத்திருந்த வாழ்வின் தனிப் பொழுதுகள்
மலைமேட்டில் அலைகின்றன.

பிஞ்சுக் காலடி படாத வீடும்
தாலாட்டு கேட்காத மனத்தொட்டிலும்
நினைப்பில் வந்து வந்து போயிருக்கும்.

கண்களில் வழிந்த சுடு நீரும் 
அவள் ஆழ்மனத் தீயைக்
அணைத்திருக்கவில்லை.

ஏர் மகாராசன்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

தேர்தல் பணி அனுபவங்கள்: மகாராசன்


இந்திய ஒன்றியத்துக்கான நாடாளுமன்றத் தேர்தல் பணியில், வாக்குச் சாவடித் தலைமை தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்று, மிக நேர்மையாகவும் நேர்த்தியாகவும் பணி செய்து முடித்திருக்கிறேன். கடந்த காலத் தேர்தல் ஏற்பாடுகளைப்போல, தேர்தலுக்குரிய பொருட்களையும் படிவங்களையும் சாக்கு மூட்டைகளில் கொண்டுவந்து குப்பைகளைப் போலக் கொட்டிவிட்டுப் போகாமல், தேர்தல் பொருட்களை அதற்கென்ற பெட்டிகளிலும், படிவங்களைக் கற்றைகளாகவும் (Booklets), தனித்தனியாக அச்சிட்ட உறைகளாகவும் ஒப்படைத்திருந்தமை புதுமையான நல்ல வழிமுறை. இந்தமுறை பாதியளவு பணிப் பளுவையும் பரபரப்பையும் குறைத்திருந்தது.

பெரும்பாலான அரசுப் பணியாளர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பணி என்றாலே மிகுந்த மன நெருக்கடியோடுதான் ஏற்றுக் கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தேர்தல் முறை குறித்து எமக்கு மாற்றுக் கருத்துகள் நிறைய இருப்பினும், மக்களின் மனநிலை, தேர்தல் கள நிலவரம், தேர்தல் நடக்கும் முறை போன்றவற்றை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டுமென, அரசுப் பணிக்கென்று வந்த காலத்திலிருந்து பல தேர்தல் பணிகளை மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வந்திருக்கிறேன். இந்தத் தேர்தல் களமும் பணியும் பல்வேறு படிப்பினைகளைத் தந்திருக்கின்றன.
இளைய தலைமுறையினர் உட்பட பல தரப்பினரும் மாற்றத்தை உள்ளூர விரும்புவது தெரிந்தது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் எப்படி இயக்கப்படுகின்றன? வாக்குப் பதிவுச் சின்னங்களின் எல்லாப் பொத்தான்களும் சரியாக வேலை செய்கின்றனவா? வாக்களித்த சின்னங்கள் ஒளிர்திரையில் அச்சாகி விழுகின்றனவா? வாக்குப் பதிவு எவ்வாறு நடைபெறும் என்பதற்கான மாதிரி வாக்குப் பதிவு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு நடத்திக் காட்டுவது? வாக்குச் சாவடித் தேர்தல் நடைமுறைகள் என்னென்ன? வாக்குச் சாவடித் தேர்தல் அதிகாரிகளின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன? வாக்களிக்கும் வாக்காளர்களின் உரிமைகளும் நடைமுறைகளும் என்ன? இப்படிப் பலவகையான தேர்தல் நடைமுறைகள் குறித்த அறிதலும் புரிதலும் இளைய தலைமுறையும், தேர்தல் அரசியல் களத்தில் பணியாற்றும் புதியவர்களும் தெரிந்து கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய பல செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவ்வாறு தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புவோருக்கு வழிகாட்டவும் விளக்கப்படுத்தவும் தயாராகவே இருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் தென்படுகிற அரசியல் விழிப்புணர்வு, ஒவ்வொரு வாக்குச் சாவடி வரையிலும் வந்து சேர வேண்டும். குறிப்பாக, வாக்குச் சாவடி முகவர்களை ஒவ்வொரு கட்சியும் நியமித்து, அதற்கான களப்பணிகளை முன்கூட்டியே பல கட்சிகளும் செய்து முடித்து விடுகின்றன. அதன் அறுவடையை வாக்குச் சாவடிக்குள் நியமிக்கப்படும் முகவர்கள் மூலமாகவே செய்து கொள்கின்றன.

புதியதாகக் களம் காணும் கட்சிகள் பலவற்றுக்கும் பல்வேறு வாக்குச் சாவடிகளில் முகவர்களே நியமிக்கப்படவில்லை. நியமிக்கப்பட்டிருக்கும் சுயேட்சை வேட்பாளர்களின் முகவர்கள்கூட ஏதாவது ஒரு பெரிய கட்சிக்கான வேலைகளைச் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஓர் அரசியல் கட்சி வெல்ல வேண்டுமானால், ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவிலும் அரசியலைக் கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல; அந்தந்த வாக்குச் சாவடி அளவில் தேர்தல் பணியாற்றும் முகவர்களை நியமிக்கும் கட்டமைப்பை விரிவுபடுத்தியாக வேண்டும். இந்தக் கட்டமைப்பை வலுப்படுத்தினால் மட்டுமே தேர்தல் முறையில் நடைபெறும் வெற்றியை எதிர்கொள்ள முடியும்.

வாக்குச் சாவடி அளவில் நடைபெறும் தேர்தல் குறித்து இன்னும் நிறையப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. வாய்ப்புகள் கிடைக்கும் போது பகிர்கிறேன்.

தேர்தல் பணிச் சான்று மூலமாக, தேர்தல் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்கும் முறை இருந்தமையால், அஞ்சல் வாக்கு செலுத்த வேண்டியதில்லை. பெரும்பாலும் நான் வாக்களிப்பதில்லை. இந்தமுறைதான் வாக்களித்திட வேண்டுமென முன்வந்தேன். ஆகையால், தமிழர் நிலத்துக்கும் இனத்துக்குமான குரலை ஓங்கி ஒலித்தவர்களுக்கு எமது வாக்கைப் பதிவு செய்தாயிற்று. எம் குடும்பத்தார்கள் அனைவரது வாக்கும் அவர்களுக்கே இந்தமுறை விழுந்திருக்கிறது. முதல்முறையாக வாக்களித்த எம் மகளின் வாக்கும், அவரது தோழிகள் பலரது வாக்கும் அவர்களுக்கே கிடைத்திருக்கின்றன.

காலம் களத்தைத் தீர்மானிக்கட்டும்.

ஏர் மகாராசன்
21.04.2024.

புதன், 17 ஏப்ரல், 2024

நானும் என் எழுத்துலகமும்: அங்கவை யாழிசை


புத்தகங்கள், புத்தக வாசிப்பு போன்றவை எனக்கு என்றும் புதிதல்ல. அவையெல்லாம் நான் பிறந்ததில் இருந்தே பார்த்தவைதான். இன்னும் சொல்லப்போனால் என் அப்பா அம்மாவுடன் சேர்ந்து என்னை இன்னும் வளர்ப்பவைதான்.

என் அப்பா பேசுவைதையும், எழுதுவதையும் எப்பொழுதுமே பார்த்து வளர்ந்த எனக்கு, அதையெல்லாம் உள்வாங்கி என்னுடைய நடையில் பிரதிபலிப்பது வழக்கம். என் அப்பா மகாராசன் அவர்களைப் போலவே நான் இருப்பதாகப் பலர் கூறக்கேட்கும்போது மிகப் பெருமிதமாக இருக்கும். உருவத்தோற்றத்தில் மட்டும் அல்லாமல், அவரைப் போன்று எழுத்தாளுமையும் பேச்சாற்றலும் எனக்கும் உண்டு என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அதை அவ்வப்போது உறுதிப்படுத்திக் கொள்ளவும் செய்வேன்.

என் சிறுவயது முதலே எனது அப்பாவைப் பார்த்தே நான் வளர்ந்து வந்திருக்கிறேன். எந்தவொரு பயமோ தயக்கமோ இன்றி, எதுவொன்றைக் குறித்தும் என்னால் பேசவோ எழுதவோ முடியும் எனும் நிலைக்கு எனது அம்மாவும் அப்பாவும்தான் வளர்த்து ஆளாக்கியுள்ளனர். எனது குடும்பச் சூழலும், வீட்டில் இருக்கும் செம்பச்சை நூலகமும் எனது எழுத்துலகப் பயணத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன. நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் பலவற்றைப் பரிசாகக் கொடுத்து அறிமுகப்படுத்துவார் என் அப்பா.

எழுத்துலகுக்கான கதவு எனக்குப் புதிதல்ல என்றாலும், அதனூடான பயணம் புதிதானது. வாசிப்புலகு எனக்கு மிக வசீகரமானது. சிறு சிறு புத்தகங்களையும் படைப்புகளையும் சிறு வயது முதலே நான் படித்ததுண்டு. ஆனால், வாசிப்பின் மீதான ஓர் நாட்டத்தை எனக்களித்த புத்தகம், நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வாசித்த 'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு' என்ற புத்தகம்தான். அந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் வந்தது. அந்த வயதில் நான் படித்த புத்தகங்கள் மற்றும் படைப்புகள் அனைத்தும் சிறு படைப்புகளே என்றாலும் பல வழிகளில் என்னை ஊக்கப்படுத்தியவையாகும்.

எந்தச் சூழலாக இருந்தாலும் தன் சுயத்தையும், தன்னுள் இருக்கும் குழந்தையையும் இழக்கக் கூடாது. தன் வீட்டின் மீது குண்டுமழை பொழிந்தபோது நாட்குறிப்பு எழுதுவாள் ஸ்லெட்டா. வாழ்வைப் பதிவு செய்வதில் அவளுக்கு இருந்த திடம், என்னையும் அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள் என்றது ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு.

யார் நம்மைத் தூற்றினாலும் ஏசினாலும் அவர்களுக்கான சிறந்த பதிலடியாக அமைவது, நாம் படித்து நம் தரத்தை உயர்த்திக் கொள்வதே; நம் படிப்பும் பட்டறிவும்தான் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்திய மற்றொரு புத்தகம் 'உனக்குப் படிக்கத் தெரியாது' எனும் உன்னதமான புத்தகம் ஆகும்.

வாழ்வில் நீ எதை இழந்தாலும் பெறுவதற்கு உலகம் உண்டு என்பதை உணர்த்திய இன்னொரு புத்தகம் 'ஹெலன் கெல்லர்' புத்தகமாகும்.

பின்நாட்களில், பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில் படிப்பின் மீதான - வாசிப்பின் மீதான ஓர் மோகத்தை எனக்களித்தது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ஆகும். அதன் மூலம் வரலாற்றுப் புனைவுகளின் மீது மிகுந்த வாசிப்பு ஈடுபாடு உண்டானது. அதைத் தொடர்ந்து 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு', 'வேள்பாரி' என்று விரிவடைந்தது. 

எந்தப் புத்தகமானாலும், எப்படிப்பட்ட புத்தகமானாலும், புத்தக வாசிப்பின் முதன்மை நோக்கமாக நான் கருதுவது, அந்த வாசிப்பின் மூலமாக நாம் என்ன பெறுகிறோம் என்பதுதான். 

வரலாற்றுப் புனைவுகளில் இருந்து நம்மால் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மட்டுமே பெற முடியும் என்று புரிந்து கொண்டேன். பிறகு என் வாசிப்பின் பயணத்தில் ஓர் மாற்றம் அடைந்தது. வரலாற்றுப் புனைவுகளில் இருந்து வெளிவந்து மற்ற புத்தகங்களையும் வாசிக்கச் சொன்னார் அப்பா. வாசித்த புத்தகங்களைக் குறித்துக் கட்டுரையாக எழுதித் தரவும் சொல்வார். அப்பா கூறிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவை எனக்கு ஒரு புதிய அனுபவத்தோடு அறிவையும் புகட்டுவதாகத் தோன்றியது. வாசிப்பானது பொழுது போக்கு என்பதையும் தாண்டி, தேடல் என்று ஆனது. அந்தத் தேடலின் வாயிலாக நான் அறிந்து தெரிந்து புரிந்தவையே இந்த விமர்சனக் கட்டுரைகள் ஆகும்.

விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதற்கெல்லாம் எனக்கு வயது கிடையாது. அதற்கான அறிவையும் நான் இன்னும் பெறவில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால், இன்று எழுத்துலகில் உயரப் பறக்கும் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் தத்தித் தத்தி தவழ்ந்தவர்கள்தான்; நான் உட்பட அப்படித் தவழ்ந்து வந்தவன்தான் என்பார் என் அப்பா. நான் எழுதுவதற்கு என் அப்பாவும் அம்மாவும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள்.

இந்த நூல் மிகச் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. உன் எழுத்துப் பயணத்திற்கு இது ஒரு முதற்படியாக அமையட்டும் என்று சொல்லித்தான், நான் எழுதிய ஆறு கட்டுரைகளையும் புத்தகமாக உருவாக்கத் தொடங்கினார் அப்பா.

தமிழோடு வளர்ந்ததாலோ, தமிழ் என்னை வளர்த்ததாலோ என்னவோ, என்னைச் சித்த மருத்துவத்தின் கையில் ஒப்படைத்திருக்கிறது காலம். தமிழ் என்னை வளர்த்ததுபோல் சித்த மருத்துவமும் என்னை வளர்த்தெடுக்கும் இந்தக் கல்விச் சூழலும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், சித்த மருத்துவமும் தமிழும் இரண்டரக் கலந்தவை. இரண்டும் எழுத்துலகத்தோடு தொடர்பு உடையவை. ஆகையால், எனது வாசிப்புலகம் இன்னும் பலவாறாக விரிவடைந்திருக்கிறது. 

முதன் முதலில் நான் எழுதத் தொடங்கியபோது, என் எழுத்துகளைச் சமூக ஊடகங்களில் அப்பா பகிரும்போதெல்லாம் அப்பா அம்மாவின் நண்பர்கள் மற்றும் தமிழ் உறவுகள் பலரும் எம்மை ஊக்கப்படுத்தி வாழ்த்துவதைக் காண்பிப்பார் அப்பா. அந்தப் பாராட்டும் வாழ்த்தும் நான் அடுத்தடுத்து எழுதுவதற்கு உருதுணையாக இருந்தன. நான் எழுதிய கட்டுரைகள் தாய்வீடு, புக்டே, அறம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது, குறுநூலாக வெளிவருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்நூலை யாப்பு வெளியீடு மூலமாகப் பதிப்பித்து வெளிக்கொண்டுவரும் திரு செந்தில் வரதவேல் மாமா அவர்களுக்கும், என்னை எல்லா வகையிலும் வழிநடத்தி வளர்த்தெடுக்கும் அம்மா அம்சம், அப்பா மகாராசன், தம்பி அகரன் தமிழீழன் ஆகியோருக்கும் எம் நன்றியும் அன்பும்.

மருத்துவக் கல்விப் புலத்தில் வழிநடத்தும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மீனாகுமாரி அவர்களுக்கும், முதல்வர் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எம் நன்றியை உரித்தாக்கி மகிழ்கிறேன். 

வாழ்த்திலும் அன்பிலும் நெகிழச் செய்யும் குடும்ப மற்றும் நட்பு உறவுகள் அனைவருக்கும் என் நன்றி.

இது, எனது முதல்நூல். தங்கள் அனைவரின் வாழ்த்திலும் வழிகாட்டலிலும் நான் இன்னும் வளர்வேன். வளப்படுத்துவீர்கள் எனும் பெருநம்பிக்கை எமக்குண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

மிக்க அன்புடன்
அ.ம.அங்கவை யாழிசை.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.