சனி, 26 மார்ச், 2022

வேளாண் மக்கள் குறித்து ஓர் உரையாடல் : பா.ச.அரிபாபு


வேளாண்மை என்பது உணவுத் தேவை சார்ந்த உற்பத்தி நடவடிக்கை மட்டுமல்ல;  சமூக இயக்கத்தின் உயிர்நாடியாகவும் எல்லாக் காலத்திலும் நிலவிவரும் அடிக்கட்டுமானமும் ஆகும். உற்பத்தி சார்ந்த இத்தகைய அடிக்கட்டுமானம்தான் சமூகம், வாழ்க்கை முறை, அரசியல், அதிகாரம், கலை, இலக்கியம், பண்பாட்டுப் பெறுமானங்கள் வரையிலுமாக அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் ஆகப் பெரும் சிந்தனைவெளியை உள்ளீடாகக் கொண்டிருக்கிறது. 


மூவேந்தர் காலம் தொடங்கி, பல அந்நியப் பேரரசுகள் தமிழகத்தில் காலூன்றியபோதும் அறுபடாத கண்ணியாக, அரசியலையும் பொருளாதாரத்தையும் முழுமையாகத் தீர்மானிக்கும் சக்தியாக வேளாண்மை உற்பத்திதான் இருந்திருக்கிறது. இங்கு நிலைகொண்டிருந்த ஆங்கிலேய காலனியத்தின் நவீன சமூதாய உருவாக்கத்திலும்கூட வேளாண்மையும் அதுசார்ந்த உற்பத்தியுமே மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, பல்வேறு ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டினாலும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான  நீர்ப்பங்கீட்டுக்  கொள்கைகள், அணைத் திட்டங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், நகர மற்றும் தொழில் துறை விரிவாக்கத் தேவைக்கென வேளாண் நிலங்கள் அழிப்பு, குறைவான மற்றும் காலம் தவறிய மழைப்பொழிவுகள், வேளாண் இடுபொருட்கள் விலையேற்றம், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்படும் குறைவான கொள்முதல் விலை, அரசு மற்றும் பொதுச் சமூகத்தின் பாராமுகம் எனப் பல்வேறு  காரணிகளால் வேளாண் தொழில் வீழ்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. இதிலுள்ள அபாயத்தைத் தமிழ்ச் சமூகம் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒட்டுமொத்தப் பொதுச் சமூகத்துக்கும் அடிப்படைத் தேவையாக அமைந்திருக்கும் வேளாண்மையும், வேளாண் மக்களும் பல்வேறு காரணிகளால் பல்வேறு காலகட்டங்களிலும்  ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. இன்றும்கூட அந்த நெருக்கடி தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும், அதுபற்றிய உரையாடல்களை, ஆய்வுகளை மையப்படுத்திய ஓர் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் இன்னும் உருவாக்கப்படவில்லை. வீழ்ச்சியில் சிக்கிக்கொண்டிருக்கும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் காத்திரமான  உரையாடல்களையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டியது சமகாலத் தேவையாகும். 

தமிழ்ச் சூழலில், வேளாண்மையையும்  அது சார்ந்த மக்களின் பண்பாட்டு வெளியையும் கோட்பாட்டு வெளிச்சத்தில் வாசிக்கும் முறையானது  கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, நா.வானமாமலை, கோ.கேசவன், ஆ.சிவசுப்பிரமணியன், பெ.மாதையன், ராஜ்கௌதமன், டி.தருமராஜ், தே.ஞானசேகரன் போன்ற ஆய்வாளர்களால்  வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது என்றாலும், வேளாண்மை சார்ந்தும், வேளாண் மக்கள் சார்ந்ததுமான கோட்பாட்டு ஆய்வுகளாக - முழுமையான ஆய்வுகளாகத் தொடர்ச்சியாக  அவை முன்னெடுக்கப்படவில்லை. 

நிலம், நீர், விதைகள், உற்பத்தி, மனிதர் உள்ளிட்ட பல்லுயிர் வாழ்வு எனப் பரந்துபட்டிருக்கும் வேளாண் தொழில் மரபுகளைக் குறித்தும், வேளாண் மக்களின் தொழில் முறைகள், தொழிலோடு இணைந்து வெளிப்படும் வழக்காறுகள், வாழ்க்கை முறையோடு பிணைந்திருக்கும் பண்பாட்டு வரலாறு என அனைத்தையும்  இணைத்து உரையாடும்போது, அதன் போக்கில் ஓர் கோட்பாடாக வடிவமையும் வாய்ப்புகள் நேரும். அவ்வகையில், ‘வேளாண் மக்களியம்’ (Agrarianism) என்ற அளவில் பரந்துபட்ட கோட்பாட்டை அது உள்ளீடாகக் கொண்டிருப்பதையும் கண்டறிய முடியும். இந்நிலையில், மகாராசன் எழுதிய ‘வேளாண் மரபின் தமிழ் அடையாளம்’ நூல் மிகுந்த கவனம்பெற வேண்டிய ஒன்றாக அமைந்திருக்கிறது.  

மனித சமூகத்தின் ஆதிகாலம் தொடங்கி, சமகாலம் வரைக்குமான காலவெளியினூடாகப் பரிணமித்திருக்கும் வேளாண் மரபுகளையும்,  அவை சந்திக்கும் பிரச்சினைகளையும் மிக விரிவாக ஆராய்ந்திருப்பதோடு, நிலத்தோடு தொடர்புடைய வேளாண் மக்களின் பண்பாட்டு மரபுகளையும் விரிவாக ஆராய்ந்து,  சமூகப் பண்பாட்டு  வரைவியலாகவும் முன்வைத்திருக்கிறது இந்நூல்.

நூலின் முதல் இயலானது, உழவுத் தொழில் மரபின் பண்பாட்டு வரைவியலையும், வேளாண் மரபினரின் சமூக வரைவியலையும் மானுடவியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, வழக்காறு, சடங்கு, வாழ்வியல், வழிபாடு, பண்பாட்டு நடத்தை எனப் பல்வேறுபட்ட பன்முகத் தரவுகளோடு மிக விரிவாகப் பேசுகிறது. இரண்டாவது இயலானது, வேளாண்மைக்கு அடிப்படை வித்துகளுள் ஒன்றான நீர் அறுவடைப் பண்பாடு பற்றியதாகும். அதாவது, நீர் மேலாண்மை குறித்து மிக நுணுக்கமான பண்பாட்டு வரைவியலை அவ்வியல் முன்வைக்கிறது. 

வேளாண்மைத் தொழில் மரபு, நீர் மேலாண்மை மரபு, அவ்விரண்டையும் மேற்கொண்டிருந்த வேளாண் மக்களின் பண்பாட்டு மரபு என, இம்மூன்றைக் குறித்தும் மிக ஆழமாக விவரித்திருக்கும் இந்நூலானது, ‘வேளாண் மக்களியம்' எனும் கோட்பாட்டு வரைவியலைப் பல்வேறுபட்ட புதிய தரவுகளோடு முன்வைக்க முனைந்திருக்கிறது.

கட்டுரையாளர்:

- பா.ச.அரிபாபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, அமெரிக்கன் கல்லூரி. தொடர்புக்கு: arivusallo@gmail.com

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்
மகாராசன்
யாப்பு வெளியீடு, சென்னை-76
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9080514506.

நன்றி:

தி இந்து தமிழ்த் திசை நாளிதழ், 19.03.2022.


திங்கள், 21 மார்ச், 2022

ஏறு தழுவுதல் பண்பாட்டு வரலாற்று ஆவணம் - செ. தமிழ்நேயன்

ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் - நூல் மதிப்புரை.

*

வரலாறு என்பது பெரும்பாலும் அரசுகள் மற்றும் அதிகாரம் சார்ந்து எழுதப்படும் சூழலில், எளிய மக்களின் நிலம், தொழில், வாழ்நிலை, பண்பாடு  பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் மகாராசன், தமிழர்  பண்பாட்டு அடையாளங்களில்   ஒன்றான ஏறு தழுவுதல் மற்றும் அதைச் சார்ந்து இயங்கிய மக்களின் பண்பாட்டுப் பங்களிப்பைத் தனக்குரிய வகையில் பண்பாட்டு வரலாற்று ஆவணமாகப் படைத்துள்ளார்.

ஏறு தழுவுதல்  என்பது மாடு பிடி விளையாட்டு என்று தான் பொதுவாக எல்லோராலும் கருதப்படுகிறது. ஆனால், அதற்குள் மறைந்திருக்கும்  உயிர், உணவு, நிலம், அரசு, வணிகம், பண்பாடு போன்ற கருப்பொருளை மிக ஆழமாக விவரிக்கிறது இந்நூல்.

தேடல், தேவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவையாகும். தேடல் என்பது தேவையின் காரணமாக ஏற்பட்ட ஒன்று. பசி தேவையின் பொருட்டு அலையோடியாகவும், நிலைக்குடியாகவும் துவக்க காலச் சமூக நிலையாக இருந்துள்ளது என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார். உணவுத்தேவையின் போட்டி காரணமாக பல்வேறு குழுக்கள் கிளைத்தன என்பதையும் நிறுவுகிறார்.

வேட்டைச் சமூகநிலையில் வேட்டையாடப்பட்ட விலங்குகள் போக, பிடிக்கப்பட்ட சில விலங்குகளைத் தம்முடைய தேவைக்காகப் பழக்கப்படுத்தினர். அப்படிப் பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்று தான் மாடு  என்கிறார்.

வேட்டைச் சமூக நிலையில்  இருந்த சமூகம், இரும்புப் பயன்பாட்டிற்குப் பிறகு உணவு உற்பத்தித் தொழிலான உழவை மேற்கொள்ள எருதுகளைப் பயன்படுத்தினர் என்றும், முல்லையில் உழவுத் தொழில் துவங்கப்பட்டாலும், மருத நிலத்தில் தான் செழுமையும் ஒழுங்கு வடிவமும் பெற்றது என்பதை விரிவாக விளக்குகிறார் மகாராசன்.

ஒழுங்கு வடிவம் பெற்ற வேளாண்மை காரணமாக, உற்பத்திச் சமூகமான உழவுச்சமூகத்திடம் இருந்து பல கிளைச் சமூக அமைப்புகள் தோன்றியுள்ளன என்பதையும், அரசு உருவாக்கம் பெற்றதன் பின்புலத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஏறு தழுவுதல் என்ற பண்பாட்டு அடையாளம்  நிலத்தோடு தொடர்புடைய ஒன்றாகும். மாடுகள் செல்வத்தின் குறியீடாகக் கருதப்பட்டது என்பதையும், உணவு, உற்பத்தி, உழைப்பு இவற்றை மாந்தர்களிடம் பகிர்ந்து கொண்டு தோழானாக இருந்திருக்கின்றன என்பதையும், மாடுகள் மீதான ஈர்ப்பு படையெடுப்புச் சூழலுக்கு நகர்த்திச் சென்றதையும் விவரிக்கிறது இந்நூல். புறத்திணைகளில் முதல் இரு திணைகளான வெட்சி, கரந்தை என்பது மாடுகளைக் கவர்ந்து செல்வதும் மீட்பதும் பற்றித் தான் கூறுகிறது என்பதையும் நினைவுப்படுத்துகிறார் நூலாசிரியர். மேலும், நிலம் சார்ந்த இயங்கு முறையில் தோற்றம் பெற்ற அரசுகளினால் நிலவுடைமைக் கிழாரியம், உற்பத்தி செய்வோர் என்ற வகையில் பல பிரிவுகள்  உருவாகியதையும் விவரித்துள்ளார். 

அதோடு, நிலங்களின் மீதான அரசியல் போர்களினால்  உழவுப்பெருங்குடிகள் எவ்வாறு வீழ்த்தப்பட்டனர் என்பதையும், குடியேற்றங்களின் பின்னணி அரசியல் பற்றி பார்வையும், வேளாண் மக்களின் ஒடுக்குமுறை பற்றியும் பேசுகின்றார் மகாராசன்.

அரசதிகாரத்தினால் நிலங்களின் பொதுவியல் வடிவமைப்பு சிதைக்கப்பட்ட பின்னணியில், நிறுவன சமயங்களின் பங்களிப்பு உள்ளது என்பதையும் விளக்குகிறார். நிறுவன சமயங்களினால் நிலம் எவ்வாறு சுரண்டலுக்கு உள்ளாகிப் போனது? சமயத் தலைமைகளினால்   வேளாண் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்ட  வலிகளுடன், சமய நிறுவனங்களின் இருப்பிடங்கள் (கோவில்) வளர்ச்சிக்காக வேளாண் மக்கள் கடும் உழைப்பை எவ்வாறு செலவழித்தனர்? என்பதையும் பதிவு செய்கிறது நூல்.

உணவு உற்பத்தியின் ஆணி வேரான வேளாண் நிலங்கள் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் பட்டியலிடுகிறார் மகாராசன்.

நிலங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக வேளாண் மக்களின் போராட்டங்கள்  தோல்வியைத் தழுவியதன் பின்புலத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார் .

நிலம் சார்ந்த மக்களின்  போராட்டங்கள் எல்லாம் வன்முறை நிகழ்வுகளாகத்தான் கருதப்படுகிறது என்ற முரண்பாடுகளையும் பதிவு செய்துள்ள இந்நூல், நில உரிமை மறுக்கப்பட்டு, சொந்த நிலங்களில் கூலிகளாக, அடிமைகளாக விற்கப்பட்ட நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார். மேலும், பண்பாட்டு அடையாள ஒடுக்குமுறையுடன், பொருளியல் ஒடுக்குமுறைக்கும் தள்ளப்பட்ட அவலங்களையும் பதிவு செய்துள்ளார்.

நிலங்களின் மீதான வரிகளில் வேறுபாடுகள், சமூகப் பாகுபாடுகள் போன்றவற்றில் நிறுவன சமயத்தலைவர்களின் பங்களிப்பு உள்ளது என்பதையும் ஆவணப்படுத்துகிறது இந்நூல்.

தன்சார்புப் பொருளியல் வாழ்நிலை ஏன் தேவை என்பதையும் விவரிக்கிறார். உலக மையமாக்கினால் ஏற்படும் விளைவுகளையும் பற்றியும் இந்நூல் வழியே பேசுகிறார் மகாராசன்.

அவ்வகையில், ஏறு தழுவுதல் என்ற சொல்லின் பின்னணியில் உள்ள பண்பாட்டு அடையாளங்களை விரிவாகவும் விறுவிறுப்பாகவும் ஆவணப்படுத்தியுள்ளது இந்நூல்.

*

ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்,
மகாராசன்,
முதல் பதிப்பு 2017,
அடவி வெளியீடு,
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.
*
கட்டுரையாளர்:
செ.தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.

திங்கள், 14 மார்ச், 2022

திராவிடக் கற்பிதங்களைக் கட்டுடைத்திருக்கும் நூல் : மா.ஜெயச்சந்திரன்


தமிழ் - தமிழர் மரபுகளை மீள்பார்வைக்கு உள்ளாக்கி, தமிழர் அடையாளத்தை மறுவரையறை செய்ய, குறுகிய மொழி, இன நோக்கங்களுக்கு அப்பால் விரிந்த ஆய்வு மனப்பான்மையோடு தமிழ்மொழியின் தோற்றத்தையும், பிராமணர்/பிராமணரல்லாதோர் அரசியலின் சூழ்ச்சியையும், பூர்வீகத் தமிழர்களின் வீழ்ச்சியையும், திராவிடக் கருத்தியலின் போதாமைகளையும் பேசுபொருளாக முன்வைத்து, மகாராசனால் எழுதப்பட்டுள்ளதே 'அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்' எனும் இந்நூலாகும்.

ஒரு ஒடுக்கப்படுகிற வர்க்கம், ஒடுக்குகிற வர்க்கத்திற்கு எதிராகத்  தன்னை அணிதிரட்டிக் கொள்ளும்போது அடையாள அரசியலே விடுதலை அரசியலாகவும் பரிணமிக்கிறது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 19ம்நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டங்களிலும் தோன்றிய அடையாள அரசியல்கள் மிக முக்கியமானவையாகும்.

அவற்றில் ஒன்று, பார்ப்பனர் /பார்ப்பனரல்லாதோர் அரசியல். மற்றொன்று, அயோத்திதாசர் முன்னெடுத்த 'தமிழர் அடையாள அரசியல்'!

இந்த இரு அடையாள அரசியலுக்கு அப்பால் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகளால் முன்னெடுக்கப்பட்ட "தமிழ்ச் சைவம்" எனும் அடையாள அரசியலும் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது.

தமிழ் - தமிழர் என்ற அடையாளங்களை மறைமலையடிகள் சைவத்துடன் இணைத்தார். 'சைவமே தமிழர்களின் சமயம்' என்பது அவரது கருத்து.

தமிழர்களை சைவ சமயத்துக்குள் அடக்கும் பொருட்டு "தமிழர் மதம் சைவம்" என்ற கருத்து முன்னெடுக்கப்பட்டு, தூயதமிழ் மொழியாக்கம் என சமஸ்கிருத நீக்கத்தின் பொருட்டு தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டமைத்தார்.

ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, வேதாந்த எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என்பவற்றை நவீன சைவ இயக்கம் முன்வைத்து, கருத்தொற்றுமையின் அடிப்படையில் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டது, பின் முரண்பட்டது.

மறைமலையடிகள் தலைமையில் இயங்கிய 'சைவ மறுமலர்ச்சி இயக்கம்தான்' பக்தி இயக்க காலத்துக்குப் பிறகு மீண்டும் மேடைக்குத் தமிழைக் கொண்டுவந்தது.

பின்பு திராவிட அரசியல் அதை கைப்பற்றிக்கொண்டு, தமிழை வெறும் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டது. என்னதான், தமிழ்மொழி / தமிழ் சைவம் என முதன்மைபடுத்திப் பேசினாலும், சாதித் தீண்டாமைக்குக் குரல் எழுப்பினாலும், இவர்களில் பெரும்பாலானோர் மேட்டிமைச் சாதியினரே ஆவர்.

மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமும் பிராமணர் அல்லாதோரில் மேட்டிமைச் சாதியினரை முதன்மைபடுத்தும் அமைப்பாகவே தொடர்ந்து செயல்பட்டது. மேலும், 'வேளாளரே (சைவ வேளாளர்) திராவிடர்' என்ற கருத்தையும் முன்வைத்தார் அடிகளார்.

பிராமணியத்திற்கு எதிராக தமிழ்ச் சைவம் முன்னெடுக்கப்பட்டபோது, அது பிராமணியத்தை எதிர்க்கிறதே ஒழிய, சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசவில்லை என்று கூறி அதை நிராகரித்தார் அயோத்திதாசர்.

அதேசமயம், அயோத்திதாசர் பெளத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். அதை ஒரு மதமாகப் பார்க்காமல் தமிழர்களின் பண்டை மரபுகளில் ஒன்றெனக் கருதித் "தமிழ் பெளத்தம்!"என்ற பெயரில் அழைத்தார்.

'தமிழ்க்கெழு கூடல்' என்று தமிழோடு இணைத்து 'மதுரையை' 'தமிழ் வையை' என்று தமிழை ஆற்றோடு, நதியோடு இணைத்தும், நகரத்தோடு இணைத்தும் தமிழ் இலக்கியங்கள் பேசுவதுபோல, அயோத்திதாசர் 'பெளத்தம்' என்கிற சமயத்தையும் தமிழோடு இணைத்து 'தமிழ்பெளத்தம்' என்றே அழைத்தர்.

தென்மொழியிலுள்ள 'அமுத எழுத்திற்கு தமிழ்' என்றும், 'நஞ்சு எழுத்தாம் விட எழுத்திற்குத் திராவிடம்' என்றும் பெயர் என்கிற அயோத்திதாசர், திராவிடம் எனும் சொல்லாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கு மொழிகளையும் ஒருங்கே குறிக்காது எனவும், மேற்குறித்த நான்கு மொழிகளையும் குறிப்பதற்கான பொதுப்பெயராகவும் 'திராவிடம்'என்பதைக் குறிக்கக்கூடாது என்பதாகவுமே அயோத்திதாசர் கருதியாகக் கூறுகிறார் மகாராசன்.

அயோத்திதாசரைப் பொருத்தவரை 'திராவிடன் என்றால் ஆதித்தமிழன்!' ஆதித்தமிழன் எனும் மொழி அடையாளமே அயோத்திதாசர் முன்னெடுத்த பிரதான அடையாளமாகும். அயோத்திதாசர், திராவிடம் என்றால் அது தமிழ்தான்; தமிழ் மட்டுமே. அது நான்கு பாஷைக்கும் பொதுவானது என்பது திரிபாகும் என்கிறார்.

அயோத்திதாசர் மொழியில் கூறுவது என்றால்,  நூதன மத வித்வானான கால்டுவெல்லின் கருத்தியல் வாரிசுகளான/பெரியாரின்/திராவிட அரசியலின் 'திராவிடம்' என்பதே திரிபாகும்!

நான்கு மொழிபேசும் மக்களை திராவிடன் என்றும் நான்கு (தமிழ்,தெலுங்கு, கன்னடம்,மலையாளம்) மொழிகளையும் 'திராவிடம்' எனும் பொதுச்சொல்லால் குறிப்பதே பெரியாரிய-திராவிட அடையாள அரசியலாகும்.

இதை, அயோத்திதாசர் வழிவந்தவரான கா.அப்பாதுரையோ, 'வடதேசம் எங்கணும் தமிழையே திராவிடம் என்றும், 'இலங்கா தீவம்' எங்கணும் தமிழையே திராவிடம் என்றும் வழங்கி வந்தனர். மேலும் நான்கு மொழிக்கே, திரவிடம், திரமிடம் என்ற பெயர் உண்டு என்று கூறுவார்களாயின்?! பூர்வ 18 மொழிக்கும் என்ன பெயர் கூறுவார்களோ?!என்று எள்ளி நகையாடுகிறார்.

அயோத்திதாசரைப் பொருத்தவரை அவருக்கு ஆதிக்கம்தான் முதன்மையான எதிரி! அத்தகைய ஆதிக்கம் யாருடையது?எனும் கேள்வி எழும்போது அவர் பார்ப்பனர் /பார்ப்பனரல்லாதோர் உள்ளிட்ட சாதி இந்துக்களையும் ஒரு சேரவே கைகாட்டுகிறார்.

சாதிபேதம் நிறைந்த இவர்களது அடையாளத்தைக் கட்டுடைக்க 'சாதிபேதமற்ற தமிழ்பெளத்தம்' எனும் விடுதலைக்கருத்தியலைக் கட்டமைத்துச் செயல்படுகிறார். 

பார்ப்பனர் மட்டுமல்ல, பார்ப்பனரல்லாதோரில் சாதி பேதமுற்றவர்கள் யாவரும் பிராமணக்கூட்டத்தைச் சேர்ந்தவர்களே!அதனால்தான், பிராமணரல்லாதார் இயக்கம் என்பது பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே எனும் வகையில் அதிலிருந்து விலகியே நிற்கிறார் அயோத்திதாசப் பண்டிதர். மேலும், சாதி ஆதாரங்களையும், சமய ஆச்சாரங்களையும் தழுவிக்கொண்டே (Non Brahmins) பிராமணரல்லாதோர் என்பது ஏமாற்றுவேலை என்கிறார்.

பிராமணர்கள் மேல்சாதி, கீழ்சாதி எனும் வரம்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் 'பிராமணக்கூட்டத்தைச் சார்ந்தவர்களே' என்றார் அயோத்திதாசர். ஆக, பிராமணரல்லாதோர் இயக்கமும் பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே என்பதே அவருடைய பார்வையாக இருந்தது.

மேலும், சைவம் / வைணவம் / வேதாந்தம் என்னும் சமயங்களையும் அப்பிராமணர்களே ஏற்படுத்தி, அச்சமயங்களை எவரெவர் தழுவி நின்றார்களோ, நிற்கிறார்களோ?!அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே என்கிறார் அவர்.

சாதிபேதமுள்ளவர் யாராயினும், தமிழர்களேயாயினும் அவர்களையும் "திராவிட பிராமணாள்தான்"என்றுதான் விளித்தார் பண்டிதர். அதற்கு மாற்றாக, பழங்குடியினரை, ஒடுக்கப்பட்ட தமிழர்களை /சாதிபேதமற்றோரை "தமிழ் பெளத்தர்கள்" என்றே அடையாளப்படுத்தினார். தமிழ் புத்திஸ்டான திராவிட பெளத்தர்களையே 'சாதிபேதமற்ற தமிழர்' என்றார். மேலும் அவர்களையே பூர்வீகக் குடிகள் என்கிறார்.

சாதிபேதமற்ற பூர்வத் தமிழர்களை 'திராவிட பெளத்தர்' என்றும், 'சாதிபேதமுள்ள தமிழர்களை' 'திராவிட பிராமணாள்' என்றுமே அவர் வரையறை செய்கிறார்.

பார்ப்பனிய சடங்குகளுக்கு எதிரானவர்கள் என்ற வகையில் இந்த ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்களைத்தான் கால்டுவெல்லும் பார்ப்பனரல்லாதோர் எனக் குறிப்பிடுகிறார் மதமாற்ற நோக்கில். அயோத்திதாசரும் அதையேதான் கூறுகிறார் சாதிபேதமற்ற ஆதித்தமிழர்களின் விடுதலைக்காக!

திராவிடன் என்பது தமிழையும் குறிப்பதாகக் கால்டுவெல் குறிப்பிடுகிறார். 'திராவிடர்'எனும் சொல்லாடல் தமிழரை மட்டுமே குறிப்பதாக கூறுகிறார் அயோத்திதாசர்!

அயோத்திதாசரின் இக்கருத்தை வழியொற்றியே, தமிழினத்தை /தமிழின மொழிகளை தமிழின நாகரிகத்தை உலகுக்கு எடுத்துரைக்கத்- 'தமிழ்'என்ற சொல்லின் போதாமையை உணர்ந்து, " தேயாத பழம் பெருந்தமிழ்"எனும் பொருளுடைய திராவிடம் என்ற சொல்லை வழங்கியுள்ளனர் என்கிறார். அயோத்திதாசரின் வழிவந்தவரான கா.அப்பாதுரையார்.

த்ரமிள(ம்)-த்ரவிட(ம்) த்ரவிட(ம்)-(த்ராவிடம்) எனும் முறையில் தமிழம் எனும் சொல்லே 'திராவிடம்' என்று திரிந்தது என்கிறார் தேவநேயப் பாவாணர்.

தமிழைத் தனியாகவும், அதன் கிளைமொழிகளான தெலுங்கு/கன்னடம்/மலையாளம்/உட்பட்ட மொழிகளை 'திராவிட மொழிகள்' என்றும் குறிக்கவேண்டும் என்று கூறும் பாவாணர், தமிழை தனியாகவும் /திராவிடம் தனியாகவும் இவ்விரண்டையும் சேர்த்து தென்மொழிகள் எனக் குறிக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.

தமிழ்/தமிழர்/தமிழம் என்பதைச் சரியாக ஒலிக்கத் தெரியாமல் அயல் இனத்தவரான ஆரியர் த்ரமிள, திரவிட, திராவிட என்று அழைத்தனர் என்கிறார் மொழியியல் அறிஞரான தேவநேயப் பாவாணர் .

ஆனால், 1856 ல் திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை (A Comparative Grammar of the Dravidian (or)South Indian Family of Language) என்ற நூலை வெளியிட்ட கால்டுவெல்லோ, "மொழிக்குடும்பத்தின் பெயரே திராவிடம்" என்கிறார்.

ஒரே இயல்புடைய வேர்ச்சொல்லையும், ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை, ஒரே இனத்தை சேர்ந்தவை. எனவே இவ்வின மொழிகளை திராவிடம் என ஒரு பொதுப்பெயர் இட்டு அழைத்துள்ளேன் என்கிறார் கால்டுவெல்.

திராவிட மொழிகளில் தமிழ் மட்டுமே சமஸ்கிருதத் துணையின்றித் தனித்து இயங்ககூடியது என்ற உண்மையை ஒத்துக்கொண்ட கால்டுவெல், அதேசமயம் தமிழை, திராவிட மொழிகளுள் ஒன்றாகச் சுருக்குகிறார். தமிழ்/தெலுங்கு /மலையாளம்/கன்னடம் இந்நான்கு மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்கிறார்.

வரலாற்றுண்மைக்குப் புறம்பாக, தமிழை வெறும் மொழியடையாளமாக மட்டுமே சுருக்கிவிட்டு, திராவிடத்தை ஒரு இன அடையாளமாகக் கட்டமைப்பது ஆங்கிலேயர்களின் மதமாற்றம் மற்றும் பிரித்தாளுதல் போன்ற சுயநல நோக்கத்துக்காகவே இருந்தாலும், அதையேதான் பிராமணரல்லாதோர் இயக்கமான ஜஸ்டிஸ்(Justice party) எனும் நீதிக்கட்சியும்/அதன் வழிவந்த திராவிட இயக்கங்களும் தொடர்ந்து செய்தன.

அதேசமயம், தமிழ்பெளத்தம் எனும் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டே 1898 ல் சென்னையில் சாக்கிய பெளத்த சங்கத்தையும்,1907 ம் ஆண்டில் "ஒரு பைசா தமிழன்" இதழையும் அயோத்திதாசர் தொடங்கியிருந்தார்.

அயோத்திதாசர் நடத்திய இதழின் பெயர் "தமிழன்!" ஆனால், 1916ம் ஆண்டு ஜஸ்டிஸ் கட்சி எனும் நீதிக்கட்சி தமிழ்/தெலுங்கு /ஆங்கிலம் மூன்று மொழிகளில் தனித்தனியே மூன்று நாளிதழ்களைத் தொடங்கி நடத்தின.

அவற்றின் பெயராக! "தமிழ் நாளிதழுக்குத் திராவிடன்" என்றும், தெலுங்கு நாளிதழுக்கு "ஆந்திர பிரகாசிகா" என்று தெலுங்கு இனத்தின் பெயரிலும், ஆங்கில நாளிதழின் பெயராக ஜஸ்டிஸ்(Justice) என்பதுமாக அமைந்தது. தமிழ்நாட்டுப் பகுதியில் வெளிவந்த தமிழ் ஏடு மட்டும் தமிழ்/தமிழன் எனும் பெயர்களை மறைக்கும் விதமாக 'திராவிடன்' என்ற பெயரைப் பெற்றன.

ஆந்திரரிடையே ஆந்திர மகாசபையும்,கேரளரிடையே 'கேரள சமாஜமும்' இருந்ததைப்போல? தமிழரிடையே இனவழியில் அமைப்பில்லை?! இருந்த ஒரே ஒரு அமைப்பான ஆதிதிராவிட மகாஜன சபையையும், அதன் வழிவந்த பெளத்த சங்கங்களையும், அயோத்திதாசரின் மறைவிற்குப்பிறகு உள்வாங்கிச் செரித்துக்கொண்ட திராவிட இயக்கம், தமிழரல்லாதோர் நலனையே முதன்மையாகக்கொண்டு, தமிழர் நலனை இரண்டாம் பட்சமாகவும் கருதி செயல்படத் தொடங்கியது மட்டுமின்றி, புதிதாக மேலெழுந்துவந்த "தமிழர் அடையாள அரசியலை" இருட்டடிப்பு செய்தது! உள்வாங்கிச் செரித்துக்கொண்டது.

கேரளரிடையே கேரள சமாஜமும்/ஆந்திரரின் ஆந்திர மகாசபையும் தெலுங்கர்/மலையாளிகளின் இனவுணர்வு அரசியலுக்கான களமாக அமைந்தது. ஆனால், ஜஸ்டிஸ் கட்சி மற்றும் திராவிட இயக்கங்களின் வரவால் தமிழர் நிலைதான் மிகவும் பரிதாபகரமானதாக மாறியது.

எழுந்து வந்த தமிழர் அடையாள அரசியலை மடைமாற்றி, நீர்த்துப்போகச்செய்த திராவிட இயக்கங்கள் அவ்வியக்கங்களை தன்வயப்படுத்திக் கொண்டன.

அதனால்தான் தமிழர் எனும் இனஉணர்வு மறையவும், ஆந்திர, கேரள, கன்னட இனத்தார் தமிழகத்திலே வேலைவாய்ப்பிலும், அரசியல் உள்ளிட்ட பிறதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்தவும் காரணாமாய் அமைந்தது. அதற்கு முழுக்காரணமாக இருந்தது இந்த பிராமணர் அல்லாதோர் இயக்கமும், அவற்றின் வழிவந்த திராவிட இயக்கங்களுமே என்பதே எவராலும் மறுக்கமுடியாத உண்மை வரலாறாகும்.

"தமிழர் என்றால் பார்ப்பான்" உள்ளே வந்துவிடுவான். 'திராவிடன்' என்றால் உள்ளே வரமாட்டான். அப்படியே வந்தாலும் அவர்களுடைய ஆச்சாரங்களையும், அனுஷ்டானங்களையும் விட்டுவிட்டு வந்தால் சேர்த்துக்கொள்வது பற்றி யோசிக்கலாம் என்கிறார் பெரியார். மேலும், தமிழர் என்றால் நான் சேர்க்கநினைத்த அத்தனைபேரையும் சேர்க்கவும், விலக்க நினைக்கும் கூட்டத்தை விலக்கவும் வசதியுண்டா ?என்கிறார் பெரியார்.

ஆக, திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த திராவிட அரசியலானது, "தமிழர் எனும் அடையாள நீக்கம்!" செய்யப்பட்டதாகவும்,"தமிழர் அல்லாதவர்களை"(தெலுங்கர்/கன்னடர்/மலையாளி) உள்ளடக்கியதாகவுமே இருந்திருக்கிறது; இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால், அதற்கு முந்தைய காலத்திலேயே திராவிடம்-திராவிடர் என்ற சொல்லாடல் கொண்டே அடையாள அரசியலை முன்னெடுத்த அயோத்திதாசர் 'தமிழர் 'எனும் அடையாளத்தையே முன்வைக்கிறார். 

அயோத்திதாசர் முன்னெடுக்கும் திராவிட அடையாளம் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களை, குறிப்பாக சாதிபேதமற்ற தமிழர்களையே குறிப்பதாயிருக்கிறது.

பிறமொழி பேசுவோரையும், வந்துகுடியேறிய பிற தேசத்தவர்களையும் தமிழராக அடையாளப்படுத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கும் அயோத்திதாசர், சாதிபேதத்தை கடைபிடிக்கும் பூர்வ தமிழ்க்குடிகளையும் தமிழராக அடையாளப்படுத்த முடியாது; கூடாது என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறார்.

 இதையே, வந்துகுடியேறிய பிராமணர்களிடமோ அல்லது வந்துகுடியேறிய தமிழரல்லாத பிறஇனத்தவரிடமோ?!ஆட்சி அதிகாரம் போய்ச்சேர்ந்தால் பூர்வக்குடித் தமிழர்களின் அடையாளமும் இருப்பும், வாழ்வும் பாழ்பட்டுப்போகும் என்பதில் தெளிவாய் இருந்து எதிர்த்திருக்கிறார் என்கிறார் மகாராசன்.

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் என்பது, திராவிட இனம்/திராவிடத் தமிழர் / '1956'க்கு முன்வந்தோரெல்லாம் தமிழராய் ஏற்கிறோம்/தமிழ்மொழி பேசுபவரெல்லாம் தமிழரே! என்று திராவிடன்/தமிழ்/தமிழர் என முன்வைக்கப்படுகிற எல்லாவகை அரசியலிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாகும்.

அவரைப்பொருத்தவரை, திராவிடமே தமிழ்! தமிழே திராவிடம்! ஆதித்தமிழர் என்பதும்/தமிழ் பெளத்தம் !என்பதுமே தமிழர்களை விடுதலைப்படுத்தும் கருத்தியலாகும். சாதிபேதமற்ற திராவிடர்களே(தமிழர்)! ஆதித்தமிழர்கள் அவர்களே இந்த மண்ணின் பூர்வகுடிகள். சாதிபேதமுள்ளோர் யாவரும் (தமிழராக இருப்பினும்) பிராமணக் கூட்டத்தைச் சேர்ந்தோரே!பிராமணரல்லாதார் இயக்கமும் பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கமே!

தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஆதித்தமிழர்களே இந்தமண்ணின் மைந்தர்கள்! அவர்களே பூர்வ பெளத்தர்கள் !

சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும்/திராவிட பாஷையாம் தமிழினையும் வரிவடிவில் போதித்தவர் புத்தரே! "நஞ்செழுத்து திராவிடம்! அமுத எழுத்து தமிழ்!"

அதாவது,தென்மொழியிலுள்ள அமுத எழுத்திற்குத் தமிழ் என்றும், நஞ்சு எழுத்தாம் விட எழுத்திற்குத் திராவிடம் என்றும் பெயர் என்றார் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் முன்வைத்த இத்தகைய கருத்தியல் அடிப்படைகள்தான் திராவிட இயக்கங்களுக்கும், அயோத்திதாசரின் கருத்தியலுக்கும் இடைவெளியை அதிகப்படுத்தியது என்கிறார் மகாராசன்.

1919ல் வழங்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்,1935 ல் அரசியல் சட்டத்தின் மூலம் நாடு விடுதலை பெறுமுன்பே உயர் உத்தியோகங்களை இந்தியமயமாக்கின. அவை பிராமண மயமாகிவிடாமல் தடுக்கவே நீதிக்கட்சி என்று கூறி தொடங்கியவர்கள், தமிழரல்லாதோரின் வேட்டைக்காடாக மாற்றிக்கொண்டார்கள்.

நீதிக் கட்சி (Justice Party, ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட "தென்னிந்திய நல உரிமைச் சங்கம்" (South Indian Liberal Federation, சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) பிராமணரல்லாதோர் கட்சியாக தோன்றினாலும், உண்மையில் அது 'பிராமணரல்லாத சாதி இந்துக்களின் கட்சி'யாகத்தான் செயல்பட்டது.

இதைத்தான் அயோத்திதாசர், சாதி ஆதாரங்களையும்,சமய ஆச்சாரங்களையும் வைத்துக்கொண்டு நான் பிராமின்ஸ்(No Brahmins) என்பது வீணாகும் என்றார்.

நூதன மதவித்வானான கால்டுவெல்போப்பின் கருத்தியல் வாரிசுகளான பிராமணரல்லாதோர் இயக்கம்(Justice party)/திராவிட இயக்கம் மற்றும் திராவிட கழகங்களால், 'திராவிடன்' என்பது தென்னிந்தியர்! அவர்களிலும் "பிராமணரல்லாதோருக்கான பொதுப்பெயர்" என்றே கூறப்பட்டது. உண்மையில், தமிழ்நாட்டில் தமிழரல்லாத பிறமொழியினரின் ஆதிக்க அரசியலுக்கே இக்கருத்தியல் பயன்பட்டது.

பல நூற்றாண்டு காலம் தங்களின் அடையாளத்தைத் தொலைத்த மக்களின் அடையாள மீட்டெடுப்புக்கு அம்பேத்கருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் அயோத்திதாசர் பண்டிதர் ஆவார்.

உண்மையில், ஆரிய பார்ப்பனீய வைதீக தீய வேதமதத்தின் அனைத்துப் பொய் பரப்புரைகளையும் புரட்டுகளையும் கட்டுடைத்து, தென்னிந்தியாவில் முதன்முதலில் பகுத்தறிவையும் சமதர்மம், சமூக நீதிக் கோட்பாட்டையும் நிறுவியவர். திராவிட சித்தாந்தக் கருத்தியலின் முன்னோடி !அயோத்திதாசரே!!

என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் அயோத்திதாசரும், தங்கவயல் அப்பாதுரையாருமே ஆவார்கள் என்று பெரியாரே அயோத்திதாசரது பங்களிப்பைப் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். (பெரியார் 68 வது பிறந்தநாள் விழா பேச்சு பெங்களூர்). பெரியாரே!அயோத்திதாசரை எனது முன்னோடி எனச் சொன்னபிறகும், அயோதிதாசரை திராவிட இயக்கங்கள் இன்றுவரை, தொடர்ந்து புறகணிப்பது ஏன்?!

அப்படிப்பட்டவரை முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் பேசுபொருளாக்கி இருக்கவேண்டிய, திராவிட இயக்கம், அவ்வாறு செய்யாமல் மறைத்ததன் பின்புலத்தில் உள்ள நுண்ணரசியல் என்ன?!என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது இந்நூல்.

திராவிடம் என்ற சொல்லுக்கும்/அரசியலுக்கும் ஒட்டுமொத்த அடையாளம் பெரியார்தான், Non-Brahmins politics, சமூகநீதி, பகுத்தறிவு என்பதே பெரியாரின் கண்டுபிடிப்புகள்தான் போன்ற திராவிட இயக்கங்களின்/திராவிட கழகங்களின் கற்பிதங்களையெல்லாம் கட்டுடைத்துப்போடுகிறது.

சாதி எதிர்ப்பு/பிராமணிய வைதீக எதிர்ப்பு/ஆரிய எதிர்ப்பு என்பதான ஓர் எதிர்மரபு தமிழரின் அறிவு மரபில் அறிவுச்செயல்பாடுகளாகத் தொடர்ந்து வெளிப்பட்டே வந்திருக்கிறது என்பதற்கு ஏர்.மகாராசனின் எழுத்தில் வெளிவந்துள்ள "அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்" எனும் இந்நூல் மற்றுமொரு சான்றாகும் என்றால் அது மிகையல்ல..

கட்டுரையாளர் :
கவிஞர்.மா.ஜெயச்சந்திரன்,        
எழுத்தாளர் - சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.
மாவட்ட பொறுப்பாளர்.
நாம் தமிழர் கட்சி,
ஈரோடு.

சனி, 12 மார்ச், 2022

வேளாண் மக்கள் ஆய்வுகளும் சமூகத் தேவையும் : மகாராசன்




நிலத்திலிருந்தும் நீரிலிருந்தும் உணவைச் சேகரிப்பது அல்லது வேட்டையாடுவதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களால், நிலத்தையும் நீரையும் ஒருங்கே பிசைந்து உயிரை உருவாக்க முடியும் எனக் கண்டுகொண்ட உணவு உற்பத்தி முறையே வேளாண்மை என்பதாகும். ஒற்றை விதைக்குள் அரூபமாய்ப் புதைந்திருக்கும் பல விதைகளை வெளிக்கொண்டு வரும் வித்தையாகவும், மானுடம் கண்டுபிடித்த முதலும் கடைசியுமான உணவு உற்பத்தித் தொழில்நுட்பமாகவும் அமைந்திருப்பது வேளாண்மையே ஆகும்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அது, உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் எனப் படர்ந்து விரிந்திருக்கிறது. தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு. எழுத்து என்ற புதிய தொழில் நுட்பத்தின் வருகைக்கும் வேளாண்மைக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு. சங்கக் கவிதைத் தொகுதிகளை உருவாக்கியதற்கும் நெல் வேளாண்மைக்கும்கூடத் தொடர்புகள் உண்டு. அரிசியிலிருந்து அதிகாரத்தைக் கற்பனை செய்யும் வழக்கம் தமிழில் இருந்திருக்கிறது. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும் அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய உறவுகள் இருந்திருக்கின்றன. 

வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் நம்மால் நிரூபிக்க முடியும். சொல்லப்போனால், கடந்த அய்யாயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சிந்தனையை வேளாண்மையே - நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது. அதன் புற அகச் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்களை வேளாண் வாழ்க்கையில் தடம் காண முடியும். அவ்வகையில், வேளாண் வாழ்க்கை என்பது வேளாண் மக்கள் என்றே இங்கே பொருள்படுகிறது. 

தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திக் களமாக இருக்கும் வேளாண்மைத் தொழில் மரபுகளைக் குறித்தும், அத்தகைய வேளாண் தொழில் மரபினர்களான வேளாண் மக்களைக் குறித்துமான தனித்துவ அக்கறையும், ஆய்வுகளும், படைப்புகளும், கலைகளும், மீள் உருவாக்கங்களும் முன்னெடுக்கப்படாமலேதான் இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருட்களைப் பரந்துபட்ட பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய தேக்கநிலையே இன்றுவரை நிலவுகின்றது. 

காலங்காலமாகவே ஆளும் வர்க்கத்தாலும், அதிகார நிறுவனங்களாலும், சுரண்டல் முறைகளாலும், உலகமய நுகர்வு வெறித்தனங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களாலும் மட்டுமல்ல; இந்திய ஒன்றியம் மற்றும் தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களாலும் அவற்றின் நடைமுறைக் கொள்கைகளாலும் மட்டுமல்ல; உணவு உற்பத்தியை அனுபவிக்கும் பொதுச் சமூகத்தின் பாராமுகத்தாலும் அதிகம் வஞ்சிக்கப்படுவது வேளாண்மைத் தொழிலும், அது சார்ந்த வேளாண் மக்களுமே ஆவர். 

எல்லாக் காலத்திலும், எல்லா வகையிலும், எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகிற - சுரண்டப்படுகிற - ஒடுக்கப்படுகிற - இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மைத் தொழில் குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள் - கலை இலக்கியப் படைப்பு உருவாக்கங்கள் - அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறையுடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், வேளாண்மையும் வேளாண் மக்களுமே இந்தச் சமூகத்தின் உணவு உற்பத்தி அரங்கமாகவும் உற்பத்தி உறவுகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. 

தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் பழங்குடிகள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர், மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர், இந்திய ஒன்றிய அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் பற்றிய பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேவேளையில், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை. 

இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் அக்கறையோடு கூடிய ஆய்வுகளும் படைப்புகளும் அரசியல் உரையாடல்களும் மிக அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு, உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் தத்தமது வேளாண்மை - வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருளைக் கவனப்படுத்தி வருகின்றன. இத்தகைய வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரிலேயே தனித்துவமாகச் செய்து வருகின்றனர். தமிழ்ச் சமூகத்தில்தான், வேளாண்மை குறித்தும் - வேளாண் மக்களைக் குறித்தும் பேசுபொருட்களாக முன்வைத்து ஆய்வுகள், படைப்புகள், உரையாடல்கள் முன்னெடுப்பதற்குத் தயக்கமும் கூச்சமும் புறக்கணிப்பும் நிறைந்த ஒவ்வாமையும் ஒதுக்குதலும் நிலவிக்கொண்டிருக்கின்றன. 

வேளாண்மையும் வேளாண் மக்களும் இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உயிர்நாடி என்பதைப் பொதுச் சமூகம் இன்னும் உணரவே இல்லை. இந்தச் சூழலில்தான், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வு'களாக (Agrarian Studies) முன்னெடுத்து, பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் உலக சமூகத்தின் பார்வைக்கும் முன்வைக்கும் செயல்பாடுகளை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரில் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டிய சமூகத் தேவைகளும் உள்ளன. 

இவ்வாறு, வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies) முன்னெடுக்கப்படும் உரையாடல்கள் மூலமே, உலகின் பல பகுதிகளில் உள்ள வேளாண் மக்கள் ஆய்வுப் புலங்களோடு உறவும் ஒருங்கிணைப்பும் பகிர்வும் நடைபெற இயலும். இந்த ஒருங்கிணைப்பின் வழியாகவே தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த கவனிப்பை உலக அரங்கிலும் உள்ளூர் அரங்கிலும் கவனப்படுத்த முடியும். 

பாலினம், நிறம், இனம், சாதி, மதம் போன்றவற்றால் ஒடுக்குதலுக்கும் சுரண்டுதலுக்கும் உள்ளாகும் அனைத்துத் தரப்பினரும் உள்ளூர் அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் ஒருங்கிணைப்பையும் உறவையும் வைத்திருக்கின்றன. அதனால், அதனதன் பிரச்சினைப்பாடுகள் அல்லது பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்தும் 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரில், ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படுகிறபோதுதான், வேளாண்மையும் வேளாண் மக்களும் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பேசப்பட வைக்க முடியும். இதை வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies) முன்னெடுத்து 'வேளாண் மக்களியம்' (Agrarianism) எனும் கோட்பாடாகவும்கூட எதிர்காலத்தில் வடிவமைக்க இயலும். 

அந்தவகையில், வேளாண் மக்கள் ஆய்வுகளை (Agrarian Studies) முன்னெடுக்க பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியலாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், வேளாண் மக்கள் தரப்பினர், இதரத் தொழில் பிரிவினர், அறிவுத்துறையினர் போன்றோர் முன்வரத் தொடங்கி உள்ளனர். வேளாண் மக்களின் வாழ்வியலையும், வேளாண் மக்களின் பிரச்சனைப்பாடுகளையும், அவர்களது கோரிக்கைகளையும் பொதுச் சமூக வெளியில் பேசுபொருளாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. 

இது ஒருபுறமிருக்க, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு தொழில் பிரிவினருக்கும் - சாதியினருக்கும் - வட்டாரத்தினருக்கும் - சமயத்தினருக்கும் என ஒவ்வொரு வகையிலும் தனித்த பண்பாட்டு அடையாளக் கோலங்களும், வரலாற்றுப் பின்புலமும், உற்பத்திப் பங்கேற்பும் நிரம்ப உண்டு. இங்குள்ள சமூகக் குடிகள் குறித்தச் சமூக மற்றும் பண்பாட்டு வரையறுப்புகள் வெளிநாட்டவர் அடையாளப்படுத்திய அளவுக்கு, இங்குள்ளவர்களால் விரிவான வரைவுகளை உருவாக்கவோ தொகுக்கவோ மீளாய்வு செய்யவோ முன் வருவதில்லை; அவ்வாறு முன்வைத்திருக்கவுமில்லை. 

இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களைப் புரிந்து வைத்திருப்பதிலும், புரிந்து கொள்ள முயற்சிப்பதிலும் நிறையப் போதாமைகள் இருக்கின்றன. அதிலும்கூட, தவறாகவும் உள்நோக்கத்தோடும்தான் புரிந்து கொள்கின்றன அல்லது புரிந்து வைத்திருக்கின்றன. 

ஒவ்வொரு சமூகத்திடமும் குவிந்து கிடக்கிற பண்பாட்டுக் கோலங்களை - வகிபாகத்தை - சமூகப் பங்கேற்பை - பொருளாதாரப் பின்புலத்தை - சமூக உளவியலை - கல்வி வேலை வாய்ப்புகளை - சமூக வளர்ச்சிக் கட்டங்களை - உடலியல் மற்றும் அறிவு தொடர்பான மனித வளம் உள்ளிட்ட தரவுகளை உள்ளடக்கிய சமூக வரைவியல் - இன வரைவியல் ஆய்வுகள் சார்ந்து எழுதுவதும் பேசுவதும் விவாதிப்பதும்கூட, பிற்போக்கானதாகவும் சமூக விரோதமானதாகவும் பொதுப்புத்தி நோக்கிலேயே கருதப்படுகின்றன. 

ஒரு சமூகத்தின் அசைவியக்கங்களையும், அவற்றின் வேர்களையும் பின்னணிகளையும், அவை கொண்டிருக்கும் கருத்தாக்கங்களையும், அவை நிகழ்காலச் சமூக அமைப்பில் உலவக்கூடிய வகிபாகத்தையும், அதன் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அது பிற சமூகத்தவருடன் கொண்டிருக்கும் உறவையும் இணக்கத்தையும் - நட்பையும் முரணையும், அச்சமூகம் கட்டமைக்கும் அதிகார வெளிகளையும், அதில் நிலவக்கூடிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள் போன்ற சமூக உறவு நிலைகளையும், அதன் வார்ப்புக்குப் பின்னாலிருக்கும் மானுடவியல் வரலாற்றுக் குறிப்புகள்.. என நீளுகிற ஒரு சமூகம் சார்ந்த அத்தனை விவரிப்புகளையும், வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கப்படுத்தும் எடுத்துரைப்புகள் மிக மிகக் குறைவு.

சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் மக்கள் திரள் இயக்கங்கள்கூட சமூக வரைவியல் - இன வரைவியல் தளங்களைக் குறித்த புரிதலிலும் எடுத்துரைப்பிலும் பின்தங்கியேதான் இருக்கின்றன. ஒவ்வொரு மக்கள் திரள் சமூகங்களைக் கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும்கூட இன்னொரு வகையில் சமூகக் கல்விதான். நிலவுகிற சமூக அமைப்பில் சமூக, அரசியல், பொருளியல், அதிகாரக் கட்டமைப்பு அல்லது மறு கட்டமைப்பு சார்ந்த சமூக மாற்றப் பணிகளை - சீர்திருத்தத்தை - போராட்டத்தை - புரட்சியை உருவாக்குவற்கு முன்பாகவோ அல்லது உருவாக்கும்போதோ, ஒவ்வொரு சமூகக் குழுவைப் பற்றியுமான புரிதல்கள் அடிப்படைத் தேவையாகும். இத்தகையப் புரிதலுக்குச் சமூக வரைவியல் - இன வரைவியல் சார்ந்த ஆய்வுகள் பேருதவி புரியக் கூடியவையாகும்.

எத்தகையச் சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கு முன்பாகவும், ஒவ்வொரு சமூகப் பிரிவினரிடமும் நிலவுகிற சமூகக் கோலங்கள் என்ன? அவற்றின் சமூகப் பண்பாட்டுத் தகவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் சமூக மாற்ற இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள்கூட, அவற்றின் அரசியல் வரைவுகள் உருவாக்கப்பட்டிருக்கும் அளவுக்கு, பல்வேறு சமூகப் பிரிவினரைக் குறித்த வரைவியலையும் வரைவுகளையும் இதுவரை முன்வைக்கவில்லை. 

சாதிய மேலாதிக்கமும் - அதன்வழிப்பட்ட பண்பாட்டு மேலாதிக்கமும் நிலவுகிற தமிழ்ச் சமூகச் சூழலில், சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் - பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராகவும் போராடுகிற பண்பாட்டு அடையாள அரசியலும் இருந்துகொண்டேதான் வருகின்றது. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்தியச் சமூக அமைப்பில் பாரம்பரியமாக மூன்று வகையான ஆதிக்கங்கள் நிலை பெற்றுள்ளன. அவை, அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம். இந்த மூன்று வகை ஆதிக்கங்களுள் மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ஆதிக்கம், சாதி வேறுபாடுகளை ஆழமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது. 

இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்கும்போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் குறித்தும் - அவர்கள் வருவாய் ஈட்டிய முறை குறித்தும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அவற்றை மிக எளிதாக ஒதுக்கி விடுகிறோம். 

ஆனால், உண்மையான சமூக வரலாறு என்பது, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் - அவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இத்தகைய போராட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பார். அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் வேளாண் தொழில் மரபினர் நிகழ்த்திய பண்பாட்டு அடையாளப் போராட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம். 

வேளாண் மக்களைப் பற்றிய சமூக வரைவியலை - தொழில் மரபுகளை - பண்பாட்டுக் கோலங்களை - வரலாற்று வகிபாகத்தைச் சமூகத்தின் பொதுப் பார்வைக்கும் புரிதலுக்கும் விவாதத்திற்கும் உதவும் வகையில்தான், வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டத்தின் சமூக ஆய்வுகள் அமையவிருக்கின்றன. அதன் சிறுமுயற்சிதான், ‘வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்’ எனும் நூலாக வெளி வருகின்றது. நேர்மையோடும் சமூக அறத்தோடும் பயணிக்கும் யாவருக்கும் இந்நூல் உதவும். 

வேளாண் மக்களின் சுய மரியாதை மற்றும் சமூக நீதிக்கான உரையாடல்கள் பொதுச் சமூகத்தாலும், சமூக மாற்ற இயக்கங்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டும்; வேளாண் மக்களின் வேட்கையும் கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். நூலாக்கத்திலும் - நூல் சார்ந்த உரையாடல்களிலும் துணை நின்ற அனைவருக்கும் மிகுந்த நன்றி. 

வரலாற்றை நேர் செய்வோம்.

தோழமையுடன்
மகாராசன்
maharasan1978@gmail.com
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்  
(Agrarian Studies Conclave).
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை.
விலை: உரூ 250/-
கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506.

வெள்ளி, 11 மார்ச், 2022

நீர் மேலாண்மைப் பண்பாட்டு ஆவணம் : செ.தமிழ்நேயன்


ஆறுகளைப் பாதுகாக்க ஆற்றுத் திருவிழா கொண்டாடுங்கள் என்று,  இந்தியத் தலைமை அமைச்சர்  அண்மையில் பதிவு செய்திருந்தார்.

எனினும், ஆற்றுத் திருவிழா தமிழகத்தில் ஆடிப்பெருக்கு என்ற பெயரில் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்பட்டு வருவதையும், ஆடிப்பெருக்குத் திருவிழா நீர் மேலாண்மைப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டிருக்கக்கூடிய ஒன்றாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பல தரப்பினரும் கவனிக்கத் தவறியுள்ளனர்.

நீர் மேலாண்மையில் தமிழ் மரபினர் சிறந்து விளங்கினர். அதன் குறியீடாகத் தான் ஆற்றங்கரையில்  நாட்டார் வழிபாட்டுச் சின்னங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

நீரின் பயன்பாட்டை அலகீடு செய்வதற்காகப் பண்டைய நீர் மேலாண்மை மரபினர் நீர்த் தடங்களுக்குப் பெயரிடும் முறையைச் செயல்படுத்தினர்.ஆறு, ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை என்று பலவாறாக வகைப்படுத்தி இருந்தனர்.

இன்றைய தமிழகத்தில் பல்வேறு இடங்களின் பெயர்களில் பின்னெட்டடாக ஏரி, கரணை, தாங்கல், குளம், ஏந்தல் போன்ற சொற்கள் காணப்படுவதன் பின்னணியில் நீர் மேலாண்மையின் குறியீடுகள் மறைந்துள்ளன. ஆயினும், அத்தகைய இடங்களின் பெயர்களில் மட்டுமே அத்தகையக் குறியீட்டுச் சொற்கள் உள்ளன. நீீர் மேலாண்மைச் சமூகத்தின் பங்கேற்புகள் அறுத்தெறியப்பட்டிருக்கின்றன. நீர் மேலாண்மைச் சமூகம் பல்வேறு வகையில் ஒடுக்கப்பட்டதால், அந்த இடங்களில் இருந்த நீரின் இருப்பும் நீர் மேலாண்மையும் ஒடுங்கி உள்ளன. சில இடங்களில் நீரிடங்களும் நீர் மேலாண்மையும் ஒழிக்கப்பட்டும் உள்ளன. 

நீர் மேலாண்மை என்பது காலத்தின் தேவை என்பதை ஒவ்வொரு இயற்கைச் சீற்றங்களும் நினைவுபடுத்தித்தான் செல்கின்றன.

ஆனால், ஆட்சியாளர்கள்  நீர் மேலாண்மை பற்றிய தெளிவு இல்லாமல், தற்செயல் நடவடிக்கை என்ற பெயரில் தடுப்பு முயற்சிகள் தான் செய்கின்றனர். சிக்கலின் வேர்களைத் தேடமால் விழுதுகளைத் தேடுவதால் தான் நீர் மேலாண்மை பற்றி யாரும் பேசுவதில்லை. நீர் மேலாண்மையைப் பேசுபவர்கள் நீர் மேலாண்மையில் ஈடுபட்ட மரபினரை அடையாளம் செய்வதில்லை; அங்கீகரிப்பதுமில்லை.

திருவிழாவின் நாயகன் இல்லாமல் திருவிழா கொண்டாட முடியாது. அதேபோல நீர் மேலாண்மை மரபை அடையாளம் காணாமல் ஆறுகளைப் பாதுகாக்கவும் முடியாது என்பதை உணரும் வேளை இது.

நீரைத் தேக்குவது மட்டுமே நீர் மேலாண்மை என்று கருதப்படுகிறது. நீர்த் தடங்களைச் சரியாக வடிவமைத்து நீர் சூழற்சியை நிலை நிறுத்துவது தான் நீர் மேலாண்மை.

நீர் மேலாண்மை மரபை அடையாளம் காண வேண்டும். நீர் மேலாண்மைச் சமூகம்  மீண்டும் நீர் மேலாண்மையில் ஈடுபட்டாலே நீர் வளம் காக்கப்படும். 

இந்நிலையில், நீர் மேலாண்மை மரபினரின்  அடையாளங்களையும், நீர் மேலாண்மைத் தொழில் மரபுகளையும், நீர் மேலாண்மைப் பண்பாட்டையும், நீர் மேலாண்மைச் சமூகம் வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் நீர் மேலாண்மையும் வீழ்த்தப்பட்டிருப்பதையும், நீர் மேலாண்மையின் வீழ்ச்சியில் வேளாண் தொழிலும் வீழ்த்தப்பட்டு வருவதையும் மிக விரிவாகவும் ஆழமாகவும் அக்கறையோடு ஆவணப்படுத்தி விவரித்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல்.  இந்நூலின் இரண்டாவது இயல் நீர் அறுவடைப் பண்பாடு என்பதாகும். நீர் மேலாண்மையைத்தான் நீர் அறுவடைப் பண்பாடு என்கிறார் மகாராசன்.

நீர் மேலாண்மை குறித்துப் பேசுவதற்கு முன்பாக, நீர் மேலாண்மைப் பண்பாட்டுப் பின்புலத்தைத் தெரிந்துகொள்வது மிகமிக அடிப்படையானது ஆகும். நீர் மேலாண்மைப் பண்பாட்டை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல், ஒருவகையில் நீர்ப் பண்பாட்டு ஆவணமாகவும் திகழ்கிறது எனலாம்.

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை.
விலை: உரூ 250/-
கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506

ஏறு தழுவுதல் - பண்பாட்டு வரலாறு பேசும் தனித்துவமான நூல் : செ. தமிழ்நேயன்


மகாராசன் எழுதிய 'ஏறு தழுவுதல்:  வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' நூல் பற்றிய மதிப்புரை.

: செ. தமிழ்நேயன்.

*

நூலின் தலைப்பே வாசகனை ஈர்க்கும் வகையில் உள்ளது. பண்டையத் தமிழரின் வாழ்வியல் முறையில் விலங்குகளின் பங்களிப்பு எவ்வாறு இருந்திருகின்றன என்பதை இலக்கியச் சான்றுகளோடு நிறுவுகிறார். 

உயிர்நேயத்தைக் காப்பதில் பண்டையத் தமிழ் முன்னோர்கள் சிறந்து விளங்கினர் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு பக்கங்களையும் வாசிக்கும் போது பண்டைய நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் வகையில் நூலாசிரியரின் மொழியாளுமை புலப்படுகின்றது.

ஏறு தழுவுதல் என்பது ஒரு விளையாட்டு நிகழ்வு என்ற வகையில்தான் பொதுவாக எல்லோராலும் கருதப்படுகிறது. விளையாட்டு என்பதைக் கடந்து, அதனுள் மறைந்திருக்கும் பண்பாட்டு விழுமியங்கள் புதைந்திருப்பதைப் பட்டியலிட்டிருக்கிறது இந்நூல்.

பண்டையத் தமிழர், விலங்குகளை எவ்வாறு பழக்கினர்; பழகினர் என்பதை மிக விரிவாகவே விவரித்திருக்கிறார் ஆசிரியர். மாடு என்பது செல்வத்தின் குறியீடாகத் தான் கருதப்பட்டது. பண்டமாற்று வணிக நடைமுறையில் மாடுகளின் மீதான ஈர்ப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது.

மாந்தரின் மொழி மற்றும் நாகரிகத் தேடலில் மாடுகள் வழித்துணையாகப் பயணித்து இருக்கின்றன. உணவு உற்பத்தியிலும், உடல் உழைப்பிலும் மாடுகள் மாந்தருக்குத் தோழனாகத் தோள் கொடுத்திருக்கின்றன.

மாடுகளின் பண்புக்கூறுகள், உடல் மொழிகள் பற்றி இதுவரை யாரும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், மாடுகளின் உலகத்தை மாந்தருக்கு நுழைமுகம் செய்துள்ளார் மகாராசன்.

திணை வாழ்வியல் கோட்பாட்டில் மாடுகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. பண்டையத் தமிழர்கள் வாழ்வியல் நெறிகளை அகம், புறம் வகைப்படுத்தி இருந்தனர். புறம் என்பது பெரும்பாலும் போர்த்திறம், விளையாட்டு, பண்டிகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளடக்கியதாகும். அவற்றில் மாடுகளின் பங்களிப்பு இருப்பதையும் இந்நூல் வழியாக நிறுவுகிறார்.

தமிழர் பண்பாட்டுப் பண்டிகையான பொங்கல் திருநாள் சிறப்புகளில் ஒன்றான மாடுகளுக்கு நன்றி கூறல் நிகழ்வின் வெளிப்பாடு தான் மாட்டுப்பொங்கல்.

தமிழர் மரபில் ஒவ்வொரு உயிரின் நிலைக்கும் பெயரிடும் வழக்கம் உள்ளது. ஆணின் பருவப் பெயர்களில் ஒன்றான காளை என்பது வலிமையைக் குறிக்கும் நோக்கில் உள்ளது. திணை வழி வாழ்நிலையில் பாலைத் திணை மக்கட்பெயர்களில் ஒன்றான காளை என்பதும் வலிமையைக் குறிக்கிறது. இரண்டு குறியீடுகளும் மாடுகளுக்கும் மாந்தருக்கமான தொடர்பைத் தான் வெளிப்படுத்துகிறது.

மாடுகளுக்கும் மாந்தருக்கமான தொடர்பு பற்றிய குறிப்புகளைப் பள்ளு இலக்கியத்தின் வழியே மெய்ப்பிக்கிறார். பள்ளு இலக்கியங்களில் வேளாண்மை பற்றிய குறிப்புகளோடு எருதுகளின் வகைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏறு தழுவல் நிகழ்வு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் இன்றும் நடைபெறுகிறது. அந்நாட்டின் தேசிய அடையாளங்களில் மாடு ஒன்றாகும். தமிழர் வாழ்வியலிலும் பண்பாட்டு நடத்தைகளிலும் மாடுகள் மிக முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றன. மாடு தொடர்பான தமிழர் பண்பாட்டு வடிவங்களில் ஏறு தழுவலும் ஒன்றாகும். ஆனால், அந்தப் பண்பாட்டு நடத்தைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஏறு தழுவல் தடை என்பது ஒரு பண்பாட்டு ஒடுக்குமுறையாகும். அந்த ஒடுக்கு முறைக்கு எதிராகத் தமிழக இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். போராட்டம் காரணமாக ஏறு தழுவுதல் தடை நீக்கப்பட்டது. 

ஏறு தழுவுதல் பண்பாட்டு மரபைத் தமிழர்கள் மீட்டெடுத்திருந்தாலும், ஏறு தழுவல் பற்றிய பண்பாட்டு எடுத்துரைப்புகள் தனித்துவமாக இதுவரையிலும் வெளிவரவில்லை. மகாராசனின் ஏறு தழுவல் நூல்தான், ஏறு தழுவுதல் பற்றிய பண்பாட்டு வரலாற்று நோக்கில் எடுத்துரைக்கின்றது. ஏறு தழுவல் பற்றிய பண்பாட்டு வரலாற்றுச் சித்திரத்தை மிக அழகாகவும் நுணுக்கமாகவும் இந்நூல் விவரித்திருக்கிறது. நூலாசிரியருக்கும் அடவி பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

*

ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்,
மகாராசன்,
முதல் பதிப்பு: 2017,
வெளியீடு: அடவி - ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
விலை: உரூ 60/-
தொடர்புக்கு: 
தில்லை முரளி 
99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


செவ்வாய், 8 மார்ச், 2022

தமிழ்த் தேசியர்களின் வரலாற்றுக் கருத்தாயுதம்: செம்பரிதி


தன் அடையாளத்தையும் வேர்களையும் அறிந்து கொள்ளும் வேட்கை உடையோருக்குக் கிடைத்த நல்வரவாக இருக்கிறது முனைவர் ஏர் மகாராசன் அவர்களின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல்

கடகடவென இழுத்துச் செல்லும் மொழி அடுக்குகளும், அவ்வாறு சென்று விடாமல் பக்கத்திற்குப் பக்கம் நிறுத்தி, சிந்திக்கச் செய்யும் தரவுகளாகப் படிப்பின்பத்தையும் அறிதலின்பத்தையும் தருகிறது இந்நூல்.


உழவு வாழ்வில் ஈடுபடாமல், அதை பார்வையால் மட்டும் பார்ப்பவர்கள், உழவு நிலத்தையும் வாழ்வையும் திரைகளிலும் - பயணங்களிலும் மட்டுமே பார்க்கும் உழவு நிலம் நீங்கிய நகர்புறங்களில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் தலைமுறையினர் அனைவருக்கும், உழவையும் அவர்தம் பண்பாட்டு வாழ்வையும் அறிந்து கொள்ளும் வகையில் மனத்திரையில் திரைக்காட்சிகளாக விரித்துக் கொண்டே செல்கிறது இந்நூல்.

எல்லா பக்கங்களுமே நினைவுக்காக அடிக்கோடிட்ட வரிகளால் நிரம்பி விட்ட அளவிற்கு, வியத்தகு செய்திகளின் அணிவகுப்பாக இந்நூல் இருக்கிறது.

அறியாத செய்திகள் மட்டுமன்றி, அறிந்த செய்திகளும் எப்படிப் பிழையாக அறியத் தரப்பட்டிருக்கின்றன என்ற விளக்கப்படுத்தலை விளங்கிக்கொள்ளும் போது வியப்போடு வேதனையும் பொங்குகிறது.

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை ஆரியம் தன்வயப்படுத்திக் கொண்டதால், தமது பண்பாட்டு அடையாளங்களையே ஆரிய அடையாளம் எனத் தமிழர்கள் ஒதுக்கவும் ஒதுங்கவும் நேர்ந்த துயர வரலாற்றைப் பேசுகிறது இந்நூல்.

இந்திர வழிபாடென்பது, தமிழர்களால் வணங்கப்பட்ட மழை வழிபாடே. ஆரிய இந்திரன் வேறு; தமிழர் இந்திரன் வேறு என்றும், சோழர் கொடியில் பறக்கும் புலிச் சின்னமானது ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவம்தான் என்றும் தரவுகளோடு நிறுவுவதைப் படிக்கும் போது அதிர்ச்சியாகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறது.

தமிழர் மரபில் பன்னெடும் காலமாக இந்திர அடையாளம் இருந்து வந்திருக்கும் நிலையில், இந்திரன் அடையாளம் என்றாலே அது ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் இந்திரனாகவே கருதும் பொதுப்போக்கைத் தகர்க்க அடுக்கடுக்கான இலக்கியச் சான்றுகளை முனைவர் அடுக்குகிறார்.

தமிழ் இந்திரன் வேறு; ஆரிய இந்திரன் வேறு என ஆய்வு முடிவுகளோடு நிறுவுகிறார்.

வேளாண் மரபில் இருக்கும் பண்பாட்டு வடிவங்களான சடங்குகள் - வழிபாடுகள், உழவு நிலத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் வேளாண் பணிகள், யார் யாரெல்லாம் வேளாளர்?யாரெல்லாம் வெள்ளாளர்? வேளாளர் என்பது குலத்தின் அடிப்படையிலான பிறப்பைக் குறிக்கிறதா? என்பதையெல்லாம் விளக்கியும் விவரித்தும், தன் விருப்பமாக இல்லாமல், இலக்கிய வரலாற்றுத் தரவுகளோடு தமிழர் வேளாண் வரலாறாக இழுத்துச் செல்கிறது இந்நூல்.


வேளாண் குடிகளும், வேளாண்மை அல்லாத குடிகளும் விழாக்களில் பின்பற்றும் சடங்குகளில் இருக்கும் அசல் கூறுகளை அறியும் போது, பகுத்தறிவின் பெயரால் ஏற்பட்ட அறச்சிதைவும் பண்பாட்டு வீழ்ச்சியும் கனமாகக் கனக்கிறது.

இந்நூல் படைப்பதற்காகப் படித்த நூற்றுக்கணக்கான நூல் பட்டியலே, நூலாசிரியரின் உழைப்பையும் செம்மையையும் காட்டுகிறது.

இந்நூலை நேர்மையோடும் சமூக அறத்தோடும் பயணிக்கும் யாவருக்குமான நூல் என்கிறார் நூலாசிரியர். இது சரியானது.

அது மட்டுமல்ல, தமிழ்த் தேசியர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்றுக் கருத்தாயுதம் தான் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்'.

*

கட்டுரையாளர்:
தோழர் செம்பரிதி,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்,
ஓசூர்.

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு,
செந்தில் வரதவேல்
9080514506

இன்னும் எம்முடனே இருக்கிறீர்கள் அப்பா : மகாராசன்

 


நிலம்தான் தற்சார்பான வாழ்வையும், தன்மான மதிப்பையும் தரக்கூடியது என்பதை அப்பாவிடமிருந்தே உள்வாங்கியிருக்கிறேன். 

வாழ்வின் இறுதிவரையிலும் தன்மான உணர்வையும் தற்சார்பான வாழ்வையும் இழந்துவிடாமல் பார்த்துக்கொண்டவர். ஆனாலும், நிலத்தில் கிடந்து தவிக்கும் வாழ்க்கைக்குள் நான் வந்துவிடக் கூடாது என்று மிகமிகக் கவனமாக இருந்தார் அப்பா.

படிச்சு ஆளாகுறதப் பாரு தம்பி. இந்தப் பொழப்பு ஒனக்கு வேணாந் தம்பி. எங்க காலத்துல எல்லாருமா சேந்து ஒழச்சோம். எங்க ஒழப்புக்கு

 நாலுகாசு மிச்சமா சேந்துச்சு. இப்பெல்லாம் சம்சாரி வேல பாக்குறதுக்கு ஆள் கெடைக்க மாட்டேங்குது. வெத, மருந்து, உரம், வேலக்கூலினு எக்குத் தப்பா எகிறிப்போச்சு. மிச்சப்படுத்துறதுக்கு ஒன்னுமில்ல. படிப்புல கோட்ட விடாம ஒழுங்கா படிச்சு ஆளாகுறதப் பாரு. எங்க காலத்துல நாங்களா ஒழச்சோம்; யாரு தயவும் இல்லாம மதிப்பு மருவாதியா வாழ்ந்தோம். இப்ப நெலம மாறிப்போச்சு. வெள்ளாமத் தொழிலப் பாக்கனும்னா மத்தவங்கள எதிர்பாக்க வேண்டி இருக்கு. சம்சாரிக மேல இருக்குற மதிப்பும் மருவாதியும் கொறஞ்சு போச்சு. மதிப்பும் மருவாதியவும் தொலச்சுப்புட்டு நெலத்துல கெடந்து எதுக்குச் சாகணும். மதிப்பும் மருவாதியும் எங்க இருக்குதோ அங்க போ. அங்க போயி நீ யாருன்றதக் காட்டு. அதுக்கு நீ நல்லா படிச்சாகணும் தம்பி. எதுவரைக்கும் படிக்க முடியுமோ அதுவரைக்கும் படி. கடேசிப் படிப்புனு எதுவரைக்கும் இருக்குதோ அதுவரைக்கும் படி என, படிப்பைப் பற்றியே எப்போதும் போதித்துக்கொண்டே இருப்பார் அப்பா. அப்பாவுடைய ஆசைப்படி படிப்பதிலேதான் குறியாய் இருந்தேன். படிப்பதும் கூட மிகப் பிடித்துப்போயிற்று. 

ஒவ்வொரு முறையும் படிப்புச் செலவுக்காகக் காசு தரும்போதெல்லாம், இது வெறும் காசில்ல தம்பி. நெலத்துல வெளைஞ்ச என்னோடதும் ஒங்க ஆத்தாவோடதும் ஒழப்பு; வெயர்வ; ரத்தம்னு நெனச்சிக்கோ. பாத்துச் செலவழி. இது பூராம் எங்க சம்பாத்தியம். நீ என்னைக்கு நாலு காசு சம்பாரிக்கிறயோ, அன்னிக்கி ஓம்பாட்டுக்குச் செலவழிச்சுக்கோ. ஓங்காசு எங்களுக்கு வேணாம் என்று மட்டும் சொல்லிவிட்டு, கேட்டதைவிடக் கொஞ்சம் கூடுதலாகவே காசு கொடுப்பார். இளவட்டப் பய கையில காசு பணத்த கூடக்கொறையா கொடுத்தா கெட்டுப்போக மாட்டானா என்று கோபப்படுவார் அம்மா. தோழர்கள்னு சில ஆளுகளோட சேர்ந்து பழகுறான். அவங்க நல்லவங்களாத் தெரியுறாங்க. அதனால நம்ம புள்ள கெட்டுப்போக மாட்டான் எனும் பெரும் நம்பிக்கையை வைத்திருந்தார்.

படிச்சு வேலைக்குப் போயி, முதல் மாத ஊதியத்தை அம்மா அப்பாவிடம் கொடுத்த போது, அப்பா அதை வாங்க மறுத்துவிட்டார். இது நீ ஒழச்சது. எனக்கு வேணாம்பா. ஒங்க ஆத்தாகிட்டயே கொடுத்துக்கோ வாங்கிக்கோன்னு சொல்லிவிட்டார். அம்மாவும் அதை வாங்கி கண்ணில் ஒற்றி வைத்துவிட்டுத் திருப்பித் தந்துவிட்டார். 

என்னுடைய எந்த முடிவிலும் அப்பா தலையிட்டதே இல்லை. நான் எடுக்கும் எந்த முடிவையும் அவர் ஒத்துக்கொண்டேதான் இருந்தார். இந்தப் பொண்ணத்தான் கட்டிக்கலாம்னு இருக்கேன் எனச் சொன்னபோது, அம்மா மட்டும் அழுது புலம்புனாங்க. அப்பா மட்டும்தான் மறுப்பு ஏதும் சொல்லாமல், அம்மாவையே ஒத்துக்கொள்ள வைத்தார்.

அப்பாவும் அம்மாவும் எதிர்பாத்த மாதிரியே அவங்களப் புரிஞ்சுக்கிட்ட மருமக அமைஞ்சது அவங்களுக்கு ஆகப் பெரும் நிம்மதி. 

ஒருநாள் திடுதிப்பென்று அம்மாவுக்கு முடியாமல் போனது. வெளியூரிலிருந்து நான் வருகிறவரைக்கும் உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்து, நான் வந்ததும் என் கையைப் பிடித்துக்கொண்டே கண்ணீரைப் பொலபொலவென்று வடித்தார். அருகிலிருந்த அப்பாவைக் காட்டி, பாத்துக்கோ என்று சொல்வதுபோல சைகை காட்டினார். பாத்துக்கிறேன். அழாதம்மான்னு சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் கை விரலைப் பிடித்தபடி உயிர் நின்றுபோனது.

அம்மாவின் இழப்பிலிருந்து நானும் அப்பாவும் மீண்டு வருவது எப்படி என்று தெரியவில்லை. பணி நிமித்தமாய் வெளியூரில் இருந்த நான், அப்பாவைப் பார்த்துக்கொள்வது எப்படி என்பதுதான் பெரும் கவலையாக இருந்தது. தம்முடைய மிச்ச வாழ்வ ஒத்தையா இருந்து எப்படிக் கடத்திக் காலம் தள்ளுவது என்பதுதான் அப்பாவைக் குடைந்து கொண்டிருந்த பெருங்கவலை. 

என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தவர் அப்பா. அவரது மீத வாழ்க்கையில நாம தான் உடனிருக்க வேண்டும் என்று கருதி, கிட்டத்தட்ட அய்ந்தாண்டுகள் அப்பா கூடவே இருந்து, நாங்களா சமைச்சு, அவருக்கான நல்லது கெட்டது எல்லாத்தையும் பாத்துக்கிட்டேன்.

நாஞ் செத்துப்போன பெறகுதான், நீ சீப்பட்டுச் சாகப்போற என, வாழ்வின் இறுதிக் காலங்களில் அப்பாவிடம் அம்மா கோபத்தில் சொல்லிக்கொள்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் சொல்லிக்கொள்வது 'எம் மகென் பாத்துக்குவான்' என்பதுதான். அந்தளவுக்கு முழுதார எம்மை நம்பினார்.

அப்பாவுக்கு கிட்டத்தட்ட எண்பது வயதுக்கும் மேலிருக்கும். வயது ஆக ஆக குழந்தையாய் மாறிவிடுவதை அப்பாவிடம் பலமுறை கண்டிருக்கிறேன். இதை இரண்டாவது குழந்தைப் பருவம் என்பார்கள்.

ஒரு நாள் மாலையில், நான் வீடு வருவதற்குத் தாமதமாயிற்று. இரவில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறது. ஊருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் ஒரு கிலோமீட்டர் தொலைவிருக்கும். அந்தக் கும்மிருட்டில் மெழுகுவர்த்தியைப் பொருத்திக்கொண்டு சூடான மெழுகு நீர் கையில் ஒழுக ஒழுக கையில் ஏந்தியபடியே என்னை அழைத்துப்போக வந்திருக்கிறார். மகராசன் வந்துறுவான்னு மத்தவங்க சொன்னப்பகூட அத அவர் கேட்கல. பேருந்தவிட்டு எறங்குனதும் அப்பா நிக்குறதப் பாத்துட்டேன். என்னப்பா இங்க நிக்குறன்னு கேட்டேன். ஒரே இருட்டா இருந்துச்சு. அதான் ஒன்னய கூட்டிப்போக வந்தேன்னு மெழுகுவத்திய கையில வச்சுக்கிட்டு பேசினாரு. எனக்குக் கடுமையான கோபம். நான் இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்னு நெனப்பா. ஏம்பா இப்படில்லாம் அசிங்கப்படுத்துறன்னு கோபப்பட்டேன். 

ஆமப்பா. நீ எனக்குப் பிள்ளதாம்பா. சின்னப் பிள்ளதாம்பான்னு சொன்னப்போ, அப்பா குழந்தையாகி நின்றதை அப்போதும் உணர்ந்தேன்.

அம்மாவைத்தான் கூட இருந்து கவனிக்க முடியவில்லை; அப்பாவைக் கூட இருந்து கவனித்துக்கொண்டது அவருக்குப் பெரும் ஆறுதலாய் இருந்தது. 

என்னைக்கு விழுகிறனோ, அத்தோட உசுர விட்றனும் தம்பின்னு சொல்லுவார். நான் விழுந்து ஆசுபத்திரி அது இதுன்னு நீயும் குடும்பமும் அலைஞ்சி திரிஞ்சி அல்லாடக்கூடாது. எல்லாத்தையும் பாத்துட்டேன். இனி வாழ்க்கைய முடிச்சுக்க வேண்டியதான் என்பார். 

ஒருநாள் விழுந்து விட்டார். அன்றிலிருந்து எதுவுமே சாப்பிட மறுத்து விட்டார். பச்சத் தண்ணீர்கூட அருந்தவில்லை. கண்கள் திறந்திருக்கின்றன. கிட்டத்தட்ட எட்டு நாட்கள். கண்களைத் திறந்தபடியே படுத்திருந்தார். வடக்கிருத்தல் பாணியில் தம் உயிரை மெல்லமெல்ல நிறுத்திக்கொண்டு விட்டார். அப்பா உயிருடன் இல்லை. ஆனாலும், எனது அத்தனைச் செயல்பாடுகளிலும் அப்பாதான் நிறைந்திருக்கிறார். 

எனது குடும்பம், பணி, எழுத்து, ஆய்வு, சமூகப் பணி, நடத்தை, சமூக உறவுகள் என எதிலும் வெளிப்படுகிற எனது புலப்பாடுகள் யாவும் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டவை; பெற்றுக்கொண்டவை.

எதிலும் ஒரு செய்நேர்த்தியும் ஒழுங்கும் இருக்க வேண்டிய பண்பு அப்பாவிடமிருந்தே வந்துசேர்திருக்கிறது.

எந்தவொரு வேலயச் செஞ்சாலும் அதுல கெட்டிக்காரப் பயலா வரணும்டா தம்பி என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் அப்பா.

சால்பிடித்து உழும்போதும், அரி வரப்பு - அப்பு வரப்பு வெட்டும்போதும், தொளி புரட்டும்போதும், பரம்படிக்கும்போதும், விதை நெல் பாவும் போதும், நாற்று முடிக் குப்பங்களைக் கட்டும்போதும், உரம்போடும்போதும், கதிர் அறுப்புக்கட்டு கட்டும்போதும், கை கதிர் வாங்கி நெற்கதிர் அடிக்கும்போதும், நெல்பொலி தூற்றும் போதும், நெல்மூட்டைகளைத் தைக்கும்போதும், பாத்தி கட்டும்போதும், ஆடு மாடுகளைப் பராமரிக்கும்போதும், இப்படி வெள்ளாமை சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளிலும் அப்பா வெளிப்படுத்துகிற அத்தனையும் செய்நேர்த்தியோடு தனித்துவமாக இருக்கும்; அவ்வளவு அழகாகவும் இருக்கும்.

சிறு வயதுக் காலங்களில், வயக்காட்டில் அப்பா உழும்போதெல்லாம் உழவுச் சாலுக்குப் பின்னாலே ததக்குப் பொதக்கென போய்க்கொண்டே இருப்பேன். அந்த மேழியைப் பிடித்து ஒரு சாலடித்து வரவேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்போது.

மூனு நாலு சால் சுத்தி வந்ததுக்கப்புறமா, மேழி மேல கைய வைக்கச் சொல்லி அழுத்திப் பிடித்துக் கொண்டு கூடவே வருவார் அப்பா.

காலம் பூரா இப்படியே ஏரப் பிடிச்சி உழுதுக்கிட்டுத் திரியனும்னு நெனைக்காத தம்பி. நிலமே கதினு வம்படியா கெடக்கிறது எங்க காலத்தோட போகட்டும். மழ தண்ணி இல்ல; நாம வெள்ளாம செஞ்சத வரவு செலவு பாத்து விக்க முடியல; நம்மகிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப் போயி விக்கிறவன் காசு பணம்னு சம்பாதிக்கிறான். நாமதான் ஒழச்சு ஒழச்சு ஒன்னுமில்லாமக் கெடக்கொம். ஊருக்குச் சோறு போடுறம்னு நாமதான் பெருமையா நெனைக்கிறோம். ஒரு பயலும் நம்மள மதிக்கவும் மாட்டான். உழுகனும்னு ஆச இருந்தா, போயி படிச்சி ஆளாகி, நாலு பேரு படிக்கிற மாதிரி நீயும் எதாவது எழுது. ஒன்னோட எழுத்த இந்த ஒலகம் படிக்கிற மாதிரி எழுது. அதுவும் உழவுதான் தம்பி என்று அப்பா சொல்லிக்கொண்டே வந்த அந்தச் சொற்கள்தான் என் சொல்லேர் எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்.

வில்லேர் உழவு மரபின் மேழி பிடித்த கைகளால், சொல்லேர் உழவு மரபில் பயணிக்கிறேன். நிலம் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் சொல்லேர் எழுத்துழவாய் உழுது போகும் என் ஆய்வுகள், நிலம் பற்றியும் நிலத்தில் தவித்த-தவிக்கும் மக்களைப் பற்றியும் கிளரிக்கொண்டேதான் இருக்கும்.

நிலத்தில் உழுத அப்பாவின் வாழ்வைப் போல, எழுத்தில் நான் உழுதுகொண்டுதான் இருக்கிறேன்.


இன்னும் 

எம்முடனே இருக்கிறீர்கள் அப்பா.

ஏர் மகாராசன் 

08.03.2022

*

நன்றி:

ஓவியம் Raju

ஞாயிறு, 6 மார்ச், 2022

வேளாண் சமூகத்தின் மீது பின்னப்பட்டிருக்கும் மாயவலைகளை அறுத்தெறியும் நூல் : கல்பனா



மகாராசனின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' நூல் குறித்த மதிப்புரை.

*

பண்பாடு என்பது பண்படுத்துதல் என்பதன் திரிபு. பண்படுத்துதல் என்பது பயனுடையதாய் மாற்றி அமைத்தல் என்று பொருள்படும். தமிழரின் பண்பாட்டு மரபுகளை தொல்காப்பியம் மற்றும் செவ்விலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். அதில் வேளாண் பண்பாடு குறிப்பிட இடத்தை வகிக்கிறது. தமிழர்களின் வாழ்க்கையில் முதல் பகுதியாக விளங்கியது வேளாண் தொழிலும் அதனைச் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளுமேயாகும் எனலாம்.  அத்தகைய தமிழர்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் விதமாக ஆசிரியர் ஏர் மகாராசன் அவர்கள் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலினைப் பண்படுத்தியுள்ளார்.


பண்டைய தமிழ் மக்கள் வேளாண் தொழிலை வாழ்வின் அங்கமாகச் செய்து வந்தனர் என்பதற்கு இலக்கியங்கள் நமக்குப் பலவகைகளில் சான்றளிக்கின்றன. அத்தகையச் சான்றுகளையெல்லாம் தரவுகளாகத் திரட்டி வேளாண் பண்பாட்டிற்கு எனத தனி அழகியலையும், வரையறைகளையும், அறிவுரைகளையும், அதிசயங்களையும், நுட்பங்களையும், வரலாறுகளையும், அனைவரும் அறியப்படவும் ஆராயப்படவும் வேண்டிய ஒன்றாகும் என்ற உயர்ந்த நோக்குடன் படைத்துள்ளார்.


எந்தவொரு இனம் தனது வரலாறுகளையும் பண்பாட்டு கூறுகளையும் இலக்கியங்களையும் போற்றிப் பின்பற்றி வருகிறதோ அதுவே உயிருள்ள சமுதாயமாக இனம் காணமுடியும். அவ்வகையில், பழந்தமிழரின் மரபுகளைப் பின்பற்றிச் செய்யப்படும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதும் உறுதுணையாக நிற்பதும் தமிழனாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது என்பதனை, "வேளாண்மைதான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்திருக்கிறது"  எனத் தெளிவுப்படுத்திக் காட்டியுள்ளார் ஆசிரியர்.


சுழன்றும் ஏர்ப்பின்னது என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க, இப்பூவுலகிற்கு உணவளித்து வரும் வேளாண்மக்கள் தலைச்சிறந்தவர் ஆவர். அத்தகைய வேளாண் மக்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா? அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா? அவர்களுக்கான குறைந்தபட்ச மனிதநேயமாவது காட்டப்படுகின்றனவா? என்பதே ஆசிரியரின் ஆதங்கமாக இருக்கிறது. 


வேளாண் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மாயவலைகளை அறுத்தெரிவதே ஆசிரியரின் தலையாய நோக்கமாக இருக்கிறது என்பதை இந்நூலை வாசிக்கும் நமக்கு புலனாகிறது.


சங்க இலக்கியத்தில் இடம்பெறும் குறிஞ்சி முல்லை நெய்தல் இனமக்களுக்கு இல்லாத பெருமை மருத நிலத்திற்கு இருந்தது. மருதநில மக்கள் மள்ளர் என்னும் பொதுப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பதை நிகண்டுகளின் வாயிலாகவும், ஏர் மாடுகள் பூட்டி உழவில் ஈடுபடும் மள்ளர்களைப் பற்றி கம்பராமாயணத்தில் காட்சி படுத்தியதையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். 


வேளாண் தொழில் விரிவடைந்தபோது பெருநிலக்கிழார்களும், குறுநிலக் கிழார்களுமாக மாற்றம் பெற்ற நிலையினையும், இதன் மூலம் வணிகர்களாகவும், பொதுவுடைமைத் தொழிலாகவும், தனியுடைமைத் தொழிலாகவும், உழுதுண்ணும் சமுதாயம் - உழுவித்துண்ணும் சமுதாயம் எனப் பிளவுற்றதையும் ஆசிரியர் சுட்டியுள்ளார்.


வேளாண் தொழிலுக்கு இன்றியமையாத கருவியாக இருப்பது உழவு மாடுகள் ஆகும். அத்தகைய மாடுகளின் பங்களிப்பினைப் பற்றி முக்கூடற்பள்ளு இலக்கியம் வாயிலாக மாடுகளின் வகைகள், உழைப்பின் பன்முகத் தன்மைகள், 'ஏறுதழுவல்' போன்ற தமிழினப் பண்பாட்டு அடையாளங்களை அறிமுகப்படுத்தியிருப்பது அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று.


'நிலத்தோடும் உழவுத்தொழிலோடும் வேளாண்மையோடும் நெல்லோடும் மாடுகளோடும் பின்னிப்  பிணைந்திருக்கின்ற பன்னெடுங்கால அறிவும், உழவும், உழைப்பும் உணர்வும் தான் வேளாண் பண்பாட்டு மரபுகளாக இன்னும் சமூக வழக்கில் இருந்து கொண்டிருப்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.


வேளாண்மை சார்ந்து நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளுள் மழைவளச் சடங்குகள், உழவுச்சடங்குகள், விதைப்பு மற்றும் நடவுச் சடங்குகள், அறுவடைச் சடங்குகள் போன்றன நுண்ணிய பண்பாட்டின் வரலாற்று மரபினை

கொண்டுள்ளதையும், வேளாண்மையின் உயிர் நாடியாக விளங்குவதையும், உழவுத்தொழிலுக்கு அவை எவ்வாறு துணைபுரிகின்றன என்ற பதிவையும் ஆசிரியர்

நம் முன்வைக்கிறார்.


தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும், தமிழரின் பண்பாட்டு நடத்தைகளின் காரண காரிய இயல்பைக் கொண்டிருப்பதையும் பண்பாட்டு அடையாளங்களாக ஆசிரியர் பதிவிட்டுள்ளார்.


எடுத்துக்காட்டாக சித்திரை முதல் நாள் கோடை உழவின் பொன்னேர் 

திருநாளாகவும், ஏர்ப்பூட்டுத் திருநாளாகவும், உழவுப்

பண்பாட்டு சடங்கை ஆரியத்தின் சாயல்படாமல் உழவுப் பண்பாடாக முன்னெடுத்து வந்துள்ளனர் வேளாண் மரபினர் என்பதை இங்கு எடுத்தியம்புகின்றார்.


வேளாண்மைக்குத் தேவையான

நீர்மேலாண்மை பற்றிய பயன்பாடுகளும்,வரலாறுகளும், ஏராளம் உத்திகளும், எடுத்துரைக்கப்பட்டிருப்பது நீரின் இன்றியமையாத அறிவைப்பற்றிய முழுமைத்தன்மையை நமக்கு விளங்கச்செய்கிறது என்பதை நம்மால் மறுக்க இயலாததாகும்.


வேளாண்மையைத் தொழிலாக மட்டுமல்லாமல், அதனை தமிழினப் பண்பாட்டின் அடையாளமாக ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். 


மண்ணும் நீரும் எவ்வாறு உணவாகிறது? அவ்வுணவினைக் கொடுக்க வேளாண் மரபினர் எத்தகைய உழைப்பையும் தியாகத்தையும் செய்தனர் என்பதனை ஆசிரியர் இந்நூலின் மூலம் விளக்குகையில், ஒவ்வொருவருடைய வீட்டிலும் வணங்கப்பட வேண்டிய தெய்வங்களாக வேளாண் மக்களே இருப்பர் என்பது மிகையாகாது.


வேளாண் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் ஐயா. மகாராசன் அவர்களின் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்.

*

கட்டுரையாளர்:

திருமதி கல்பனா,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த் துறை,

பெரியார் பல்கலைக் கழகம்,

சேலம்.

வெள்ளி, 4 மார்ச், 2022

மொழிவழிப்பட்ட சிந்தனைவெளிக்குள் அயோத்திதாசரை அணுகிப் பார்க்கும் நூல்: பா.ச.அரிபாபு




அயோத்திதாசரின் சிந்தனைகளை முற்றாக மறுதலிக்கும் போக்கானது அன்று முதல் இன்றுவரை நிலவி வருவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அண்மைக் காலமாக.. அயோத்திதாசரின் சிந்தனைகள் இன்றைய சமூக, பொருளாதார இயங்கியலுக்குப் பயன் அளிக்காது என்று உரக்கக் கூவுகின்றனர். சில தோழர்கள் / நண்பர்கள் அயோத்திதாசர் வெற்று ஆணி என்கின்றனர். இது வெறுப்பு; அயோத்திதாசரை ஏற்றுக்கொள்ள மறுத்தல்; ஒவ்வாமை. இருக்கட்டும்; இது அவர்களது புரிதல். வரவேற்போம். 

நமக்கோ ... ஒரு சமூகத்தைப் புரிந்து கொள்ள அகநிலைக் கருத்தியல்களான மொழி - பண்பாட்டு நடவடிக்கைகள்- வழிபாட்டு மரபுகள்- அதனூடாக உருவாகியுள்ள வழக்காறுகள் என அனைத்தையும் குறித்த இவர்கள் புரிதல் என்ன ? என்று கேட்கத் தோன்றுகிறது... 

அயோத்திதாசர் பன்முகத் தளத்தில் வாசிக்கப்பட வேண்டியவர் என்பதற்குச் சிறந்த சான்றாக, ஆய்வாளர் ஏர் மகாராசன் 'அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்' என்னும் நூலை எழுதியுள்ளார். 

தாசரை மாற்றுக் கோணத்தில் அணுகிப் பார்க்கும் பெரும் முயற்சி. இங்கு கால்கொண்டுள்ள மொழி - தமிழ் - திராவிடம் - திராவிடக் கருத்தியல் குறித்த பார்வையில் அயோத்திதாசரின் பார்வை என்னவாக இருக்கிறது என்று ஆராய்ந்துள்ளார்.

ஏர் மகாராசனுக்கென்று ஓர் அரசியல் இருக்கிறது. அது தமிழ் மொழி - தமிழர் நிலம் - தமிழர் ஆட்சி. இந்த வகையான மொழிவழிப்பட்ட சிந்தனை வெளிக்குள் அயோத்திதாசரின் செயல்பாடுகள் என்ன ? அவரது யோசனைகள் என்ன என்று ஆராய்கிறார். 

அயோத்திதாசர் எப்படி மொழியைப் பார்க்கிறார் என்று விரிவாக ஆராயும் அவர்.. இன்றைய திராவிட கருத்தியலுக்கும் / அரசியலுக்கும் முன்னோடி மட்டும் அல்ல; மாற்றுச் சிந்தனையாக்கம் கொண்டவர் என்று விளக்குகிறார். 

"திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் வாதிகளும், திராவிடக் கருத்தியல் செயல்பாட்டாளர்களும் அயோத்திதாசரை முன்னெடுக்காமல் போனதற்கும், முன்னெடுக்காமல் இருப்பதற்குமான வலுவான அரசியல் காரணம் ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். அது, அயோத்திதாசரின் 'தமிழர்' அடையாள அரசியலே ஆகும்.

தமிழ் அடையாள அரசியலை உள்ளீடாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளும் அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்காமைக்கான பின்புலமும்கூட, அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலே காரணமாகும். 

திராவிட அரசியலிலிருந்தும் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்தும் வேறுபட்டதான தன்மைகளைக் கொண்டிருப்பதே அயோத்திதாசர் முன்வைத்த தமிழர் அடையாள அரசியல் ஆகும் " (ப.19)

தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ஏர் மகாராசன். அவரது 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலை அடுத்து, இந்நூலை எழுதியுள்ளார். 

வாழ்த்துகள் ஆய்வாளர் ஏர் மகாராசனுக்கு... 

நண்பர்கள் வாசிக்க இந்நூலைப் பரிந்துரைக்கிறேன்.

*

கட்டுரையாளர்:

முனைவர் பா.ச.அரிபாபு,

உதவிப் பேராசிரியர்,

அமெரிக்கன் கல்லூரி,

மதுரை.

யார் தமிழர்? - அயோத்திதாசரின் அடையாள அரசியல் : மகாராசன்

திராவிடர் - திராவிடம் போன்ற அரசியல் சொல்லாடல்களை அயோத்திதாசர் தமது அறிவுச் செயல்பாடுகளில் முன்வைத்திருந்தாலும், திராவிட இயக்கத்தினர் முன்னெடுத்திருக்கும் அடையாள அரசியலில் இருந்து முற்றிலும் வேறான அடையாள அரசியலையே கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. அயோத்திதாசரின் அத்தகைய அடையாள அரசியல் குறித்து டி.தருமராஜ் எடுத்துரைக்கும் பகுதிகள் முக்கியமானவை. 


‘திராவிடர்’ என்ற சொற்பிரயோகம் அயோத்திதாசரின் காலத்தில் இருந்ததா என்று பலரும் ஆச்சரியப்படலாம். ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1881இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியின் போது ‘ஆதித்தமிழன்’ என்ற சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்தினாரோ அதே பொருளிலேயே ‘திராவிடன்’ என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார். 

‘திராவிட மகாஜன சபை’ என்பது சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டோருக்கான சபையாகவே தோற்றம் பெற்றது. இந்நாட்டில் பூர்வீகக் குடிகளாகவும், மண்ணின் மைந்தர்களாகவும், ஆதித் தமிழர்களாகவும் விளங்கிய பழங்குடிகளும், தாழ்த்தப்பட்ட மக்களுமே ‘திராவிடன்’ என்ற சொல்லால் அடையாளப்படுத்தப்பட்டனர். பின்னாட்களில், தமிழன் என்பதற்கும் திராவிடன் என்பதற்கும் பல்வேறு திரித்தல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன என்றாலும், அத்தகையத் திரிபடைந்த அர்த்தங்களே இன்றைக்கும் வழக்கில் உள்ளன என்றாலும், அயோத்திதாசர் அவற்றை முற்றிலும் மாறான பொருளிலேயே பயன்படுத்தினார் என்பது முக்கியம்... 

1880களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் புதிய தளமொன்றில் அவர் இயங்கத் தலைப்பட்டதை நமக்குச் சுட்டுகின்றன. வர்ணாசிரம அடக்குமுறையையும், சாதியக் காழ்ப்புணர்வையும் மறுக்கும் வழிமுறையென அத்வைதக் கோட்பாடுகளை முன்மொழிந்த அவர் அதனிலிருந்து முற்றிலும்  மாறுபட்டு, தம்மையும் தமது சமூகத்தையும் ‘இந்துக்கள் அல்ல’ என்று அறிவித்ததுடன் ‘ஆதித்தமிழர்’ என்ற மொழி அடையாளமே பிரதான அடையாளம் என்று அறைகூவியது தலைகீழான மாற்றம் என்றுகூடச் சொல்லமுடியும்.

‘ஆதித்தமிழர்’ என்ற அடையாளத்தை எந்தவொரு அரசியல் லாபத்துக்காகவும் அவர் முன்மொழியவில்லை. அதே நேரம், அதிர்ச்சியை உண்டாக்குவது மட்டுமே அவரது நோக்கமாகவும் இருக்கவில்லை. ‘ஆதித்தமிழர்’ என்ற அடையாளம் அவருக்குள் ஆழமாகவே செயல்பட்டு வந்தது. இதனாலேயே இந்த நாட்டின் பழங்குடியின மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் தமிழ் பேசும் மக்களின் மூதாதையர்கள் என்ற சிந்தனையை அவர் தொடர்ந்து வளர்த்து வந்தார். அக்கோட்பாட்டை வலுப்படுத்தும் பல்வேறு சான்றுகளையும் அவர் தேடத் தொடங்கினார்.

தொல்தமிழர் அல்லது தமிழ் மூதாதையர் அல்லது ஆதித் தமிழர் என்ற சிந்தனையின் அடுத்த நிலையாக, 1886இல் அயோத்திதாசர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை இரண்டு செய்திகளை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. 

ஒன்று, பழங்குடியின மக்களும் தாழ்த்தப்பட்டவர்களுமான ஆதித் தமிழர்களே இந்நாட்டின் முதல் குடிமக்கள், அதாவது பூர்வக்குடிகள் அல்லது மண்ணின் மைந்தர்கள்; இரண்டு, இம்மண்ணின் மைந்தர்களான அவர்கள் இந்துக்கள் அல்லர்’ என டி.தருமராஜ் விவரித்த மேற்குறித்த பகுதிகள், அயோத்திதாசரின் அடையாள அரசியலைத் தெளிவுபடுத்தி விடுகின்றன. 

அயோத்திதாசர் காலத்தில் நிலவிய பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்துப் பிராமணர் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த பிராமணர் அல்லாதார் இயக்கமானது, பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தும், அதிகாரத்தில் பங்கு கோருவதாகவும் மட்டுமே இருந்ததே தவிர, பிராமணர் அல்லாதவர்களால்  பிராமணர் அல்லாதவர்களிடம் கடைபிடிக்கப்பட்டு வந்த  சாதி ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவது குறித்தோ, சாதி ரீதியாக வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மீது செலுத்தப்பட்ட பிராமணர் அல்லாதவர்களின் மேலாதிக்கத்தைக் களைவது குறித்தோ வேறெதுவும் வலியுறுத்தவில்லை. 

ஆகையால்தான், ‘பிராமணர் அல்லாதார் இயக்கம்’ என்பது பிராமணியத்தை உள்வாங்கிக்கொண்ட இயக்கம் என்கிற வகையில் அதிலிருந்து விலகியே நின்றிருக்கிறார் அயோத்திதாசர். 

பிராமணர் அல்லாதார் இயக்கம் குறித்த அயோத்திதாசரது நிலைப்பாடு பின்வருமாறு:

‘பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதி என்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்கள் ஆகும். 

சைவம், வைணவம், வேதாந்தம் என்னும் சமயங்களையும், அப் பிராமணர் என்போர்களே ஏற்படுத்தி, அச்சமயத்தை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களே ஆவர். 

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் தழுவிக்கொண்டே (நன் பிராமன்ஸ்) என்று சங்கம் கூடி இருக்கின்றனரா அன்றேல், சாதி ஆசாரங்களையும் சமய ஆச்சாரங்களையும் ஒழித்து (நன் பிராமன்ஸ்) Non - Brahmin என்ற சங்கம் கூடி இருக்கின்றனரா விளங்கவில்லை. 

அங்கனம் சாதி ஆசாரங்களையும் சமய ஆச்சாரங்களையும் ஒழித்துள்ள கூட்டமாய் இருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்து உழைப்பதற்கு அனந்தம் பேர் காத்திருக்கின்றார்கள். 

பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு நன் பிராமன்ஸ் எனக்கூறுவது வீணேயாகும்’ என்கிறார் அயோத்திதாசர். 

அதாவது, சாதி சமய ஏற்றத்தாழ்வுகளை ஏதோ ஒருவகையில் கடைபிடித்துக்கொண்டு, இன்னொரு சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத் திரள்வதென்பது உண்மையான பிராமணிய எதிர்ப்பு அல்ல; அது பிராமணியச் சார்பு நிலையே. 

பிராமணர் அல்லாதவர்கள் அனைவரும் சாதி பேதமற்று அணிதிரள்வதே உண்மையான பிராமணிய எதிர்ப்பு என்பதுதான் அயோத்திதாசர் முன்வைத்திருந்த அரசியல் நிலைப்பாடாகும்.

தமிழ்ச் சூழலில் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாகி வந்த பிராமணர் அல்லாதார் இயக்கமானது, தமிழர்களின் அரசியல் சமூக நலனைக் குவிமயப்படுத்துவதற்குப் பதிலாக, தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் உள்ளடக்கிய மக்களின் அரசியல் சமூக நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே திராவிடர் - திராவிடம் எனும் அடையாள அரசியலாகத் திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.  

சேலம் செவ்வாப்பேட்டையில் பெரியார் பேசியதாகக் குடியரசு (29.01.1944) இதழில்  பதிவாகியிருக்கும் செய்தி, திராவிடம் என்பதை வலியுறுத்தியதின் தேவையைத் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது வருமாறு: 

‘திராவிடச் சமுதாயம் என்று நம்மைக் கூறிக்கொள்ளவே கஷ்டமாயிருக்கும்போது ‘தமிழர்’ என்று எல்லாரையும் ஒற்றுமையாக்க முயற்சி எடுத்தால் கஷ்டங்கள் அதிகமாகும். இங்கே பாருங்கள்! கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், தோழர் அண்ணாதுரை தமிழர்.

இனி, எங்களுக்குள் ஆயிரம் சாதிப்பிரிவுகள். என்னைப் பொறுத்தவரையில் நான் தமிழனெனச் சொல்லிக் கொள்ள ஒப்புக் கொள்கிறேன். ஆனால், எல்லாக் கன்னடியரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தெலுங்கர்களும் அப்படியே. 

திராவிடச் சமுதாயத்தின் அங்கத்தினர்கள் நாம்; நம் நாடு திராவிட நாடு என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு ஆட்சேபணை இருக்காது. அது நன்மை பயக்கும். எனவே, இத்தகைய கேவல நிலையொழிய, ஜஸ்ட்டிஸ் கட்சி திராவிடக் கட்சியாக மாற வேண்டும். சேலத்தில் நடைபெற இருக்கும் மாகாண மாநாட்டில் இதையே முதல் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டும்’ என்பதாகத்தான் திராவிட இயக்கத்தின் திராவிடம் - திராவிடர் என்பதான அடையாள அரசியல் மடைமாற்றங்கள் நடந்தேறியுள்ளன.

திராவிட இயக்கம் முன்னெடுத்திருந்த திராவிட அரசியலானது, ‘தமிழர்’ எனும் அடையாளம் நீக்கம் செய்யப்பட்ட ஒன்றாகவும், தமிழர் அல்லாதவர்களை உள்ளடக்கியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால், அதற்கும் முந்திய காலத்திலேயே திராவிடம் - திராவிடர் எனும் சொல்லாடல் கொண்டே அடையாள அரசியலை முன்னெடுத்திருந்த அயோத்திதாசர், தமிழர் எனும் அடையாளத்தையே முன்வைத்திருக்கிறார். 

‘சாதி பேதமற்ற திராவிடர்களே இத்தேசத்தின் பூர்வக்குடிகள் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தமிழ் பாஷா விருத்தியைக் கோரி நின்றவர்கள் ஆதலின் தென்னாட்டுள் தமிழர் என்றும், வடநாட்டார் திராவிடர் என்றும், திராவிட பெளத்தாள் என்றும் வழங்கி வந்ததுமன்றி, இலங்கா தீவத்திலுள்ளோர் சாஸ்திரங்களிலும் சரித்திரங்களிலும் இப் பூர்வக்குடிகளைத் திராவிட பெளத்தர்கள் என்று வரைந்திருப்பதுமன்றி வழங்கிக் கொண்டும் வருகின்றார்கள்’ என அயோத்திதாசர் தரும் திராவிட அடையாளம் என்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களை - அதிலும் குறிப்பாகச் சாதிபேதமற்ற தமிழர்களையே அடையாளப்படுத்தியிருப்பது முக்கியமான ஒன்றாகும்.

பூர்வத் தமிழர் - பூர்வக் குடிகள் -  சுதேசியர்கள் என்போரின் அடையாளங்கள் பற்றிய அடையாள அரசியல், அயோத்திதாசரின் கருத்தாடல்கள் பலவற்றிலும் வெளிப்பட்டிருக்கிறது. 

‘சுதேசிகள் என்பது தேசத்திற்கு சுதந்திரம் உள்ளவர்கள், தேசப் பூர்வக்குடிகள், தேசத்திலேயே பிறந்து வளர்ந்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்கள், இவர்களையே சுய தேச வாசர்கள் என்றும் கூறப்படும். மற்ற காலத்திற்குக் காலம் இவ்விடம் வந்து குடியேறியவர்கள் பரதேசிகளே. அதாவது, அவர்கள் அந்நிய தேச வாசிகளே ஆவர். 

குடியேறி நெடுங்காலம் ஆகிவிட்டபடியால் அவர்களையும் சுதேசிகள் என்று அழைக்கலாம் என்றாலோ, அவர்களுக்குப் பின் காலத்திற்குக் காலம் இவ்விடம் வந்து குடியேறி நூறு வருடத்திற்கு மேலாகக் காலங்கழிப்பவர்களையும் சுதேசிகள் என்றே கூறத் தகும். அங்கனம் அவர்களை நீக்கி ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இருப்பவர்களாகிய எங்களை மட்டிலும் சுதேசிகள் என்று எண்ண வேண்டும், மற்றவர்களைச் சுதேசிகள் என்று அழைக்கலாகாது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. ஆதலின், இத்தேசப் பூர்வக் குடிகளும், இத்தேசத்தைச் சீர்பெறச்செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர்களும் யாரோ அவர்களையே பூர்வக் குடிகள் என்றும், சுய தேசவாசிகள் என்றும் சுதேசிகள் என்றும் கூறத் தகும். 

அவர்கள் யாரென்னில், தமிழ் பாஷையில் பிறந்து - தமிழ் பாஷையில் வளர்ந்து - தமிழ் பாஷைக்கு உரியோர்களாக விளங்கும் பூர்வத் திராவிடக் குடிகளே ஆகும். 

மற்றுமிருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டகரும் பூர்வக்குடிகளேயாயினும், திராவிடர்களைப் போல் தேச விருத்தியை நாடியவர்களும், பல தேசங்களுக்கும் சென்று பொருளைச் சம்பாதித்து சுய தேசத்தைச் சீர்பெறச் செய்தவர்களும், பூர்வ சரித்திரங்களையும் ஞான நீதிகளையும் பல்லோருக்கு உணர்த்தி, சுய பாஷையில் எழுதி வைத்துள்ளவர்களும், சாதிபேதம் என்னும் கொடிய செயலைப் பூர்வத்தில் இல்லாமல் எவ்வகையாக வாழ்ந்து வந்தனரோ; நாளது வரையில் வாழ்ந்தும் வருகின்றனரோ அவர்களே யதார்த்த சுதேசிகளும் பூர்வக்குடிகளுமாவர். 

திராவிடராம் தமிழ் பாஷைக்குரியவர்களுக்குள் சாதிபேதமென்னும் நூதனக் கட்டுப்பாட்டில் அமைந்திருப்போர்களைப் பூர்வக் குடிகள் என்றாயினும், சுதேசிகள் என்றாயினும் அழைப்பதற்கோ ஏது கிடையாது. எவ்வகையில் என்பரேல், அன்னிய தேசத்திலிருந்து இத்தேசத்தில் வந்து குடியேறிய நூதன சாதிகளையும், நூதன மதங்களையும் உண்டு செய்து கொண்டு சீவிப்போர்களுடன் உடைந்தையாகச் சேர்ந்துகொண்டு தேசத்தைப் பாழ்படுத்த ஆரம்பித்து விட்ட படியினாலேயாம். 

இத்தேசத் திராவிடர்கள் அன்னிய தேசத்தோர் சாதிக் கட்டுக்குள் அடங்கினபடியால் ஒற்றுமெய்க் கேடும், அவர்கள் மதத்தைச் சார்ந்து விட்டபடியால் அவர்களால் ஏற்படுத்தியுள்ள சாமிகள் கொடுப்பார் என்னும் சோம்பலால் முயற்சி என்பதற்று வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தி, வியாபார விருத்திகள் யாவையும் பாழ்படுத்தி தேசத்தையும் சீர்கெடுத்து விட்டார்கள். இன்னும் சீர் கெடுத்தே வருகின்றார்கள். தேசத்தையும் தேச மக்களையும் எப்போது சீர்கெடுக்க ஆரம்பித்துக் கொண்டார்களோ அச்செயல் கொண்டு அவர்களையும் சுதேசிகள் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. 

இத்தேசத்தின் பூர்வ சாதி பேதமற்ற நிலையைக் கருதி மக்களை மக்களாகப் பாவித்து வித்தியா விருத்தியையும், விவசாய விருத்தியையும், வியாபார விருத்தியையும் சிந்தையில் ஊன்றி, சோம்பலின்றி உழைத்து, தேசத்தைச் சீர்செய்ய முயல்பவர்கள் யாரோ, அவர்களே சுதேசிகள் என்றும் சுய தேசத்தவர்கள் என்றும் பூர்வக் குடிகள் என்றும் கூறத் தகும். 

மற்றைய சாதிபேதச் செயலால் ஒற்றுமெயைக் கெடுப்போரும், சமய பேதச் செயலால் சோம்பலைப் பெருக்கித் தேசத்தைக் கெடுப்போரும் சுதேசிகள் ஆக மாட்டார்கள். அவர்கள் தங்கள் சுய நலத்தையே கருதும் அன்னிய தேசத்தோர்களே ஆவர். அவர்களுக்குச் சுதேசிகள் என்னும் பெயர் பொருந்தவே பொருந்தாவாம்’ என, அயோத்திதாசர் விவரிக்கும் பகுதிகள் யாவும், தமிழர் அடையாள அரசியலையே உள்ளீடாகவும் வெளிப்படையாகவும் கொண்டிருக்கின்றன. 

தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு காலங்காலமாக இந்த மண்ணிலேயே உழன்று வாழ்ந்துவரும் மண்ணின் மைந்தர்களே இந்நிலத்தின் பூர்வத் தமிழ்க் குடிகள். வெகுகாலத்திற்கு முன்பாகவே வந்து குடியேறிய பிறமொழி பேசுவோர் இந்நிலத்தில் வாழ்பவர் ஆயினும், அவரெல்லாம் பூர்வத் தமிழ்க்குடிகள் அல்லர். தமிழரைப் போலவே தெலுங்கரும் கன்னடரும் மலையாளியும் மராட்டியர் உள்ளிட்ட யாவரும் அவரவர் நிலத்தின் பூர்வீகக் குடிகளே ஆவர். 

பூர்வீகத் தமிழர் - பூர்வீகத் தமிழ்க் குடிகள் என்றாலும், சாதி மத பேதமற்றவர்களாக இருப்பவர்களே உண்மையான பூர்வத் தமிழ்க் குடிகள் என்கிறார் அயோத்திதாசர். பிறமொழி பேசுவோரையும், வந்து குடியேறிய பிற தேசத்தவர்களையும் தமிழராக அடையாளப்படுத்தி  ஏற்றுக்கொள்ள மறுக்கும் அயோத்திதாசர், சாதி மத பேதத்தைக் கடைபிடிக்கும் பூர்வத் தமிழ்க் குடிகளையும் தமிழராக அடையாளப்படுத்திட முடியாது; கூடாது என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறார்.

அயோத்திதாசரைப் பொறுத்தளவில், பிராமணர் அல்லாதவர் - திராவிடர் - தமிழர் என்போர் யாரெனில், சாதி மத பேதமற்ற தமிழர்களையே குறித்திருக்கிறது.

ஆங்கிலேய வல்லாதிக்க ஆட்சி நிலவிக்கொண்டிருந்த காலகட்டத்தில், இந்நாட்டின் ஆட்சியை இந்நாட்டவரிடம் ஒப்படைக்கும் தருவாயில், அதன் பொறுப்பைப் பிராமணர் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பிராமணர் அல்லாதவர் - திராவிட இயக்கங்கள்  கோரிக்கை வைத்தன. பிராமணர்களிடமிருந்த ஆட்சி அதிகாரமானது, பிராமணர் அல்லாத - தமிழர் அல்லாதவர்களுக்குக் கைமாற்றுவதில்தான்  அவ்வியக்கங்கள் முனைப்புடன் செயலாற்றி இருக்கின்றன. 

அதேவேளை, இந்நாட்டின் ஆட்சி அதிகாரப் பொறுப்பைப் பிராமணர் அல்லாதவர் எனும் வகையில் தமிழர் அல்லாதவர்களிடம் வழங்கிடக் கூடாது எனத் திடமாய் எதிர்த்திருக்கிறார் அயோத்திதாசர். 

‘பிரிட்டிஷ் துரைத்தனத்தார் தங்கள் ஆளுகையைச் சுதேசிகளின் மீது கிருபை பாவித்து சுய ராட்சியத்தை அளிப்பது ஆயினும், இத்தேசப் பூர்வக் குடிகள் யார்? யதார்த்த சுதேசிகள் யார்? எனக் கண்டு தெளிந்து, அவர்களைச் சீர்திருத்தி, அவர்கள்பால் அளிப்பதே கிருபையாகும். அங்கனம் இராது, நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னானாள் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் என்று கருதி, அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையை ஒப்படைத்துவிடுவார்களாயின் யதார்த்த சுதேசிகள் யாவரும் பாழடைந்து போவதுடன், சுதேசமும் கெட்டு சீரழிந்து போமென்பது சத்தியம்’ எனக் குறிப்பிடுகிறார் அயோத்திதாசர். 

வந்து குடியேறிய பிராமணர்களிடமோ அல்லது வந்து குடியேறிய தமிழர் அல்லாத பிற இனத்தாரிடமோ ஆட்சி அதிகாரம் போய்ச் சேர்ந்தால், பூர்வக்குடித் தமிழர்களின் அடையாளமும் இருப்பும் வாழ்வும் பாழ்பட்டுப்போகும் என அயோத்திதாசர் அன்றைய காலகட்டத்திலேயே தீர்க்கமாய் உணர்ந்து எதிர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

புதன், 2 மார்ச், 2022

திராவிடம் எனும் சொல்லாடலும் அயோத்திதாசர் கருத்தாடலும் - மகாராசன்



தமிழ் மொழியைத் ‘திராவிடம்’ என்றும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்போரைத் ‘திராவிடர்’ என்றும் மாற்றுச் சொல்லால் குறிக்கும் வழக்கம் அயோத்திதாசர் காலத்திலும் இருந்திருக்கிறது. அதேபோல, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் நான்கையும் ‘திராவிடம்’ எனும் பொதுச்சொல்லால் அடையாளப்படுத்தியும், தமிழர் உள்ளிட்ட தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைக் குறிக்கும் பொதுச்சொல்லாகத் ‘திராவிடர்’ என  அடையாளப்படுத்தியதுமான போக்குகளும் அயோத்திதாசர் காலத்திலேயே அடையாள அரசியலாய்க் காலூன்றத் தொடங்கியிருக்கின்றன. 


அயோத்திதாசரும் திராவிடம் எனும் சொல்லாடலைக் கையாள்கிறார். ஆயினும், திராவிடம் எனும் சொல்லாடல் பற்றிய அயோத்திதாசரின் எடுத்துரைப்புகள், மற்றவர்களின் விவரிப்புகளைப்போல அல்லாமல், வேறு ஒரு கண்ணோட்டத்தையும் கருத்தாடலையும் முன்வைத்திருக்கிறது.

தமது பத்திரிகையில் திராவிடம் என்பது தமிழுக்குரிய பெயரென்று வரைந்து வருகின்றீர். மற்றும் சிலர், திராவிடம் என்பது திரமிடம் என்றும், நான்கு பாஷைகளை சேர்ந்த பொதுப் பெயர் என்றும் கூறுகின்றார்கள் எனும் கருத்தை அயோத்திதாசரிடம் முன்வைத்தபோது, ‘திராவிடம் என்னும் மொழியின் பொருள் என்ன? திராவிடம் என்னும் மொழி திரமிடம் என எவ்வாறு மருவியது? அதற்கு விதியும் பூர்வ அனுபவச் செய்யுளும் உண்டா? என உசாவி இருப்பீரேல், அவர்கள் கூறும் மொழி தங்களுக்குத் தெள்ளறத் தெளிந்துவிடும். அங்கனம் அவர்களைத் தாம் வினவாது, எம்மெய் வினவியுள்ளபடியால், அதன் அந்தரார்த்தத்தை உணர்ந்தவளவில் உணர்த்துவதாக’க் கூறும் கருத்துகள் கவனிக்கத்தக்கவை ஆகும்.

அதாவது, ‘தென் மொழியிலுள்ள அமுத எழுத்திற்குத் தமிழ் என்றும், நஞ்சு எழுத்தாம் விட எழுத்திற்குத் திராவிடம் என்றும் வகுத்துள்ள அனுபவத்தைக் கொண்டும், சிங்கள நாட்டாரும் தெலுங்கு நாட்டாரும் தமிழர்களைத் திராவிடர்கள் என்று கூறும் வாய்மொழியாலும், அடியில் குறித்துள்ள தாயுமானவர் பாடலின் உட்கருத்தாலும் தமிழ் பாஷைக்கே  திராவிடம் என்னும் மறுபெயர் உண்டு என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். 

     கல்லாத பேர்களே நல்லவர்கள்; 

          நல்லவர்கள் கற்றும் அறிவில்லாதவென் 

     கன்மத்தை என் சொல்வேன்? மதியை 

          என் சொல்வேன் கைவல்லிய;

     நல்லோருரைக்கிலோ கன்மமுக்கியமென்று 

          நாட்டுவேன், கன்மமொருவர்                             

     நாட்டினாலோ பழய ஞான முக்கியமென்று 

          நவிலுவேன் வடமொழியிலே 

     வல்லானொருத்தன் வரவும் திராவிடத்திலே 

          வந்ததா விவகரிப்பேன் 

     வல்ல தமிழறிஞர் வரின், அங்கனே 

          வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்

எனும் பாடலால் திராவிடத்தையே தமிழ் என்றும், தமிழையே திராவிடம் என்றும் மடக்கிக் கூறியுள்ளதைக் காண்க’ என, தாயுமானவர் பாடலைச் சான்று காட்டுகிறார் அயோத்திதாசர். 

தமிழ் எழுத்துகளின் வகைப்பாட்டுப் பெயரைக்கொண்டும், தமிழ் அல்லாத பிற தேசத்தாரும் - தமிழர் அல்லாத பிறரும் தமிழைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய சொல்லைக்கொண்டும் ‘திராவிடம்’ எனும் சொல்லாடலைப் புழங்கும் அயோத்திதாசர், தமிழை மட்டுமே குறிப்பதற்குப் பயன்படுத்துகிறார். அதோடு, தமிழை மட்டுமே அது குறிப்பதாகவும் அவர் கருதுகிறார். 

மேலும், திராவிடம் எனும் சொல்லாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கு மொழிகளையும் ஒருங்கே குறிக்காது எனவும், மேற்குறித்த நான்கு மொழிகளையும் குறிப்பதற்கான பொதுப்பெயராகவும் ‘திராவிடம்’ என்பதைக் குறிக்கக்கூடாது என்பதாகவுமே அயோத்திதாசர் தமது கருத்தாடலை முன்வைத்திருக்கிறார். 

இதைக்குறித்து அயோத்திதாசர் கூறும்போது, ‘திராவிடம் என்றால் நான்கு பாஷைக்குரிய பொதுப்பெயர் என மாறுபடுத்தி விட்டார்கள். காரணம், அதன் அந்தரார்த்தம் அறியாமலேயாம். மகட பாஷையாம் பாலி பாஷையை மூலமாகக் கொண்டு புத்தபிரானால் சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் அக்கை தங்கையர் போல் ஏற்படுத்தி, இந்திய தேயமெங்கும் பரவச்செய்து வந்ததினால், வட தேசம் எங்கணும் தமிழையே திராவிடம் என்றும், இலங்கா தீவம் எங்கணும் தமிழையே திராவிடம் என்றும் வழங்கி வருவது அனுபவக் காட்சியாய் இருக்க, நாலு பாஷைக்குமே திரமிடம், திரமிடம் என்னும் பெயர் உண்டு எனக் கூறுவார் ஆயின், பூர்வ பதிநெட்டுப் பாஷைக்கு எப்பெயர் கூறுவதோ? அறியேம். 

மகட பாஷையை ஆதாரமாகக் கொண்டு தோன்றியது ஒன்று சகடப் பாஷையும், ஒன்று திராவிட பாஷையுமேயாம். புத்த சங்கங்கள் தோறும் வட்டமிட்டிருந்தபடியால் சகட பாஷையென்றும், நஞ்சு எழுத்து அமைந்துள்ளபடியால் தீரா விட பாஷை - திராவிட பாஷை என்றும் வழங்கி வந்தார்கள். 

இதன்றி, செய்யுட்களில் அரம் வைத்துப் பாடி விட்டான்; நஞ்சு வைத்துப் பாடிவிட்டான் என்னும் மொழிகளுக்கியல் அட்சரங்களிலும் நஞ்செழுத்துகள் சிலதும், அமுத எழுத்துக்கள் சிலதும் உண்டு என்பதை நாளது வரையில் காணலாம். 

நஞ்சு எழுத்தின் செயலைக் கொண்டு திராவிடம் என்றும், அமுத எழுத்தின் செயலைக் கொண்டு தமிழ் என்றும் வழங்கி வந்தார்கள். இவ்விரு பெயருக்கும் காரணம் உண்டு. இதன் அந்தரார்த்தம் அறியா பராயர்கள் அதனையும் வீணே மாறுபடுத்தித் தமிழினது இனிதையும் திராவிடத்தினது வலிதையும் கெடுத்தே வைத்திருக்கின்றார்கள்’ என்கிறார்.

மேலும், ‘வடமொழி தென்மொழி என்னும் இரு வகுப்பில் தென்மொழியாம் திராவிடம், தமிழ் என்னும் இரு மொழிகளும் ஒரு பாஷைக்குரிய பெயர்களேயாம். அம்மொழிகள் தோன்றியவற்றிற்கு மூல காரணங்கள் யாதெனில், அவ்வட்சரங்களுள் நஞ்செழுத்தாம் விட அட்சரங்களும், அமுத எழுத்தாம் இனிய அட்சரங்கள் உள்ளது கண்டு, நஞ்சு எழுத்தால்  தீரா விடம் என்றும், அமுத எழுத்தால் தமிழ் என்றும் இரு பெயர்கள் உண்டாயிற்று. 

இஃது யாப்பிலக்கணம் கற்ற பெரியோர்களுக்கே நன்கு விளங்குமன்றி, ஏனையோர்க்கெவணும் விளங்காவாம். திராவிடம் என்னும் தமிழை எடுத்தாளும்போதே வாசக நடை மிகவின்றி செய்யுள் நடையே பெருகியபடியால், எடுக்கும் செய்யுள் இனிது முடியுமாறு மொழி முதலாய் அந்தெழுத்துள் அமுது பொருந்தி மங்கலமிசையும் உளவறிந்து தாங்களும் பாடியுள்ளதன்றி, ஏனையோரும் அப்பத்துப் பொருத்தங்களை இசைந்து பாடும் வழிகளையும் வரைந்துள்ளார்கள். அவைகளை அமைக்க வேண்டிய விதி: 

     மங்கலப் பொருத்தமே கங்கை மலரிலங்

     கார்புயல் பொன்மணி கடல் சொல் கரிபரி

     சீர் புகழ எழுத்தலர் திங்கடினகரன்

     தேர் வயல் அமுதம் திருவுலகாரண

     நீர் பிறவரும் முதனிலைச் சொல்லியல்பே 

என்னும் மொழிமுதற் கொண்டு அவற்றுள் பத்துப் பொருத்தங்கள் அமையப் பாடவேண்டும் என்பது விதி. 

     மங்கலம் சொல் எழுத்து எண்ணிய தானம் வரும் இருபால் 

     பொங்கிய உண்டி வருணம் பகுத்திடின் நாள் பொருத்தம் 

     தங்கிய நாள் கதி எண் கணம் என்று தமிழ் தெரிந்தோர் 

     இங்கிவை பத்து முதல் மொழியாம் என்று இயம்புவரே

இவ்வகைப் பாடுவதில் அமுதெழுத்து அமைத்துப் பாடவேண்டியதே சிறப்பு என்பது விதி. 


     மதித்த கா ச த ந ப மவ்வொடு வவ்வும் 

     உதித்தமைந்த நாற் குற்றியிருந்துதித்த அமுதென்று 

     ஆதிமொழிக்குந் தசாங்கத் தயலுக்குந் தீதிலவே என்றார் தெரிந்து

என்னும் தசாங்கத்துள், உண்டிப் பொருத்தமே அமுத எழுத்துக்களையும் நஞ்சு எழுத்துக்களையும் விளக்குகின்றபடியால், யாப்பிலக்கணம் கற்ற பெரியோருக்கே நஞ்சு எழுத்து என்னும் தீராவிட அட்சரங்களும், அமுத எழுத்து என்னும் தமிழ் அட்சரங்களும் கண்டு, அப்பாஷைக்குத் திராவிடம் என்றும், தமிழ் என்றும் வழங்கலாயினர். 

‘தீராவிடம்’ என்னும் மொழியே குறுக்கல் விகாரத்தால் திரா விடம் - திராவிடம் என வழங்கலாயிற்று. திராவிடம் என்பதே தமிழ் என்பதற்குச் சூத்திர ஆதாரங்கள் இருப்பதுடன், வட நாட்டோரும் சிங்கள தேசத்தோரும் தமிழைத் திராவிட பாஷை என்றும், தமிழ் பாஷைக்குரியோரை திராவிடர்கள் என்றும் வழங்கி வருவதை நாளது வரையில் காணலாம். 

இத்தேசப் பெயரையும் வேதாகமப் புராணங்களையும் கடவுளர்களையும் புறட்ட ஆரம்பித்துக் கொண்டவர்கள், திராவிடம் என்னும் பாஷையையும் புறட்டப் பார்க்கின்றார்கள். அப்புறட்டு தமிழினுக்கு உரியோர் முன் பிறழாவாம்’ என்கிறார் அயோத்திதாசர்.

தமிழை ‘முத்தமிழ்’ எனச் சுட்டும் மரபு இன்றளவிலும் வழக்கில் உள்ளது. முத்தமிழ் என்பதை இயல், இசை, நாடகம் என வகைப்படுத்திக் கூறும் நிலையில், முத்தமிழ் என்பதற்கு அயோத்திதாசர் தருகின்ற விளக்கமும் கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது. ‘கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழ்’ என, மூன்று வகையான தமிழ் வகைப்பாட்டை வட்டார அடிப்படையிலும் - பேச்சு வழக்கு அடிப்படையிலும் வகைப்படுத்திக் காண்கிறார். 

இதைக்குறித்து அயோத்திதாசர் கூறுகையில், ‘வழங்கும் தமிழை முத்தமிழ் என்பது, மூவகையாகப் பேசும் தமிழ் என்றும் கூறப்படும். அவைகள் யாதென்னிலோ, மலையாள வாசிகள் வழங்கும் தமிழை கொடுந்தமிழ் என்றும், திருநெல்வேலி புரவாசிகள் வழங்கும் தமிழை கருந்தமிழ் என்றும், சென்னை முதலிய புரவாசிகள் வழங்கும் தமிழை செந்தமிழ் என்றும் கூறப்படும். 

அவைகள் வழங்கும் வகைகளோ: ‘நாயிண்ட மகனே’ என்பது கொடுந்தமிழ். ‘நாய் ஈன்ற மகனே’ என்பது கருந்தமிழ். ‘நாய் பெற்ற பிள்ளையே’ என்பது செந்தமிழ். கருந்தமிழில் வரைந்துள்ள புகார்க் காண்டம் முதலிய நூல்களில் வரைந்துள்ளவற்றைச் செந்தமிழ் வாணர் வாசிப்பதற்கே இயலாது இன்னும் திகைக்கின்றார்கள். 

இக்கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழினையே நமது முன்னோர்கள் நன்கு வரைந்திருக்கின்றார்கள். இப்பாஷையினது வரிவடிவாம் அட்சரங்களில் நஞ்செழுத்தென்றும் அமுத எழுத்தென்றும் இரு வகை உண்டு. அவற்றுள் அமுதெழுத்தைக் கொண்டு தமிழ் என்றும், நஞ்செழுத்தைக் கொண்டு தீராவிடம் என்றும் வழங்கி வந்தார்கள். தீராவிடம் என்னும் மொழியே குறுக்கல் விகாரப்பட்டு திராவிடம் என வழங்கலாயிற்று. 

கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழ் இம்மூன்றினுள்ளும் நஞ்செழுத்து உள்ளதால் முத்தமிழுக்கும் திராவிடம் என்னும் பொதுப் பெயர் வழங்கலாயிற்றே அன்றி வேறன்றாம்.  இவற்றை நூதன மத வித்வான்கள் எவரேனும் மறுப்பரேல், பூர்வ நூல் ஆதாரத்துடன் விளக்கக் கார்த்துள்ளோமாக’ என்கிறார். 

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலங்களில் தமிழகம் வந்திருந்து, திராவிட மொழிகள் என்பதாக ஆய்வுகளை முன்வைத்துக் கொண்டிருந்த மேற்கத்திய ஆய்வாளர்களைத்தான் ‘நூதன மத வித்வான்கள்’ என அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.  தமிழைக் குறித்தும், தென்னிந்திய நிலப்பரப்பில் வழங்கும் மொழிகளைக் குறித்தும் ‘திராவிடம்’ எனும் சொல்லாடல்கள் வழியாகக் கட்டமைக்கப்பட்ட கருத்தாடல்களுக்கான மறுப்புரைகளாகத்தான் மேற்காணும் கருத்துகள் அமைந்திருக்கின்றன. 

அவ்வகையில், திராவிடம் எனும் சொல்லாடல், தமிழில் நஞ்சு எழுத்தாக வகைப்படுத்தியிருக்கும் பாகுபாட்டின் அடிப்படையில், ‘தீரா விடம் - திரா விடம் -திராவிடம்’ எனத் தமிழை மட்டுமே குறிக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனும் நான்கு மொழிகளையோ - நான்கு இனத்தாரையோ - நான்கு நிலப்பரப்பையோ ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் பொதுப்பெயராகத் திராவிடம் எனும் சொல்லாடல் குறிக்காது; அவ்வாறு குறிக்கவும் கூடாது. 

நஞ்சு எழுத்து எனும் வகைப்பாட்டினால் திராவிடம் என்பதைப்போல, அமுத எழுத்து எனும் வகைப்பாட்டினால் தமிழ் எனவும் வழங்கப்பெறுகின்றது. அவ்வகையில், ‘திராவிடம்’ என்பதும் ‘தமிழ்’ என்பதும் தமிழ் ஒன்றை மட்டுமே குறிக்கும் என்பதாகவே அயோத்திதாசரின் கருத்தாடல்கள் வலியுறுத்துகின்றன. 

அதனால்தான், தமிழ் மொழியையும் - தமிழர்களையுமே குறிப்பதற்குத் திராவிடம் என்பதையும், தமிழ் என்பதையும் ஒன்றாகவே பாவித்திருக்கிறார் அயோத்திதாசர். ஆதித் தமிழர்கள் - ஆதி திராவிடர்கள்; சாதி பேதமற்ற தமிழர்கள் - சாதி பேதமற்ற திராவிடர்கள்; பூர்வக்குடித் தமிழர்கள் - பூர்வக்குடித் திராவிடர்கள் என, தமிழர்களை மட்டுமே அடையாளப்படுத்துவதற்கு இரு சொல்லாடல்களையும் பயன்படுத்தியிருப்பது நோக்கத்தக்கது. திராவிட எனும் பெயரிலான சங்கப் பெயர், இதழ்ப்பெயர் போன்றவற்றைத் தமிழர் - தமிழ் என்பதை மட்டுமே குறிப்பதற்கு அயோத்திதாசர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும். 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506