புதன், 15 ஏப்ரல், 2020

சித்திரையும் ஆடியும் தையும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே! : மகாராசன்




தமிழ்ப் புத்தாண்டு
சித்திரை முதல் நாள் எனவும்,
தை முதல்நாள் எனவும்
இருவகைக் கதையாடல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில்,
சித்திரை முதல் நாளையும், தை முதல் நாளையும் கொண்டாடும் சடங்கு மரபு தமிழர் வழக்காற்றில் இன்றும் நிலவிக்கொண்டிருக்கிறது.

தமிழர் நாட்டுப்புற வழக்காற்றில் சித்திரை முதல் நாளையும் தை முதல் நாளையும் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடுவதைக் காட்டிலும், மாதப் பிறப்பு என்பதாகவே கொண்டாடும் மரபு இன்றளவிலும் இருக்கின்றது. இந்த இரண்டு மாதங்களின் முதல் நாள்களைக் கொண்டாடுகிற அல்லது உவப்பாய் வரவேற்கிற நாள்களாகக் கருதப்பட்டதற்கான காரணங்களும் இருக்கவே செய்கின்றன.

தமிழர்களின் பெரும்பாலான பண்பாட்டுப் புலப்பாடுகளும் சடங்கு மரபுகளும் வேளாண்மை உற்பத்திச் செயல்பாட்டின் வளமைக் குறியீடுகளாகவே பயிலப்பட்டு வந்துள்ளன. உழவுத்தொழில் மரபின் அங்கமாய் எவையெல்லாம் இருந்ததோ, அவையெல்லாம் குறியீடுகளாகவும், போலச் செய்தலாகவும், வழிபடு வாழ்த்துச் சடங்குகளாகவும் பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

'உழந்தும் உழவே தலை'யாக இருந்த அல்லது தலையாக இருக்கிற ஒரு சமூக அமைப்பில், உழவுத்தொழில் உற்பத்திச் செயல்பாடுகளின் பண்பாட்டுப் புலப்பாடுகளும் தலையாய இடத்தைப் பெற்றிருப்பதும் அல்லது பெறுவதும், பெருவாரி மக்களின் பண்பாட்டு நடத்தைகளில் அது செல்வாக்கு செலுத்துவதும் இயல்பு. தமிழர்களின் பெரும்பாலான பண்பாட்டுப் புலப்பாடுகளும் உழவுத்தொழில் மரபினர் மற்றும் உழவுத்தொழில் துணை மரபினர் பின்பற்றி வந்த புலப்பாடுகளே ஆகும். உழவுக்குடிகள் உள்ளிட்ட பதினெட்டு குடிகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுதான் வேளாண்மை உற்பத்திச் செயல்பாடு என்பதும்.

அந்தவகையில், சித்திரை, ஆடி, தை போன்ற மாதங்கள் தமிழர்களின் பண்பாட்டுப் புழங்கலில் முக்கியத்துவம் பெற்றிருப்பதும் உழவுத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சடங்கு வடிவங்கள்தான்.

ஆடி மாதப் பெருக்கு என்பது, ஆற்றுநீர்ப் பெருக்கை பதினெண் குடிகளும் ஒன்றாகச் சேர்ந்து வரவேற்கும் நீரியல் சடங்கு ஆகும். உழவுக்கும் வேளாண்மைக்கும் பெரும்பங்காற்றும் நீர்த் தடங்களைத் தூர்வாரி ஆற்றுநீரை மேலாண்மை செய்யும் இன்னொரு சடங்கு வடிவம்தான் அது. அதனால்தான், ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் நிகழ்வு அந்த மாதத்தில் நடந்திருக்கிறது. ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் சொல்லாடல், உழவுக்கு அடிப்படையான நீரை அடிப்படையாகக் கொண்டது.

இதேபோல, தை மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாக்கள் தமிழர் பண்பாட்டின் மகிழ்வான சடங்கியலாகத் தொன்றுதொட்டு நிலவி வருகின்றன. உழவர்களுக்கும் கால்நடைகள், சூரியன் போன்றவற்றுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றியுணர்வை வெளிப்படுத்தும் தைப்பொங்கல் பண்பாடானது, உழவுத்தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியாய் அமைந்த அறுவடைச் செயல்பாட்டின் நிறைவைக் கொண்டாடும் ஓர் அங்கமாகும். இந்தத் தை மாதத்தில்தான் அறுவடைப் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும். உணவு உற்பத்தியின் மிக முக்கியமான அங்கம் இந்த அறுவடை தான். இந்த அறுவடையால்தான் உழவர் மட்டுமல்ல; அனைவருக்குமான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆகையால்தான், தை மாதத்து அறுவடைக்காலம் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்பாடாகப் பரிணமித்திருக்கிறது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது, உழவரின் அறுவடையைக் குறிக்கும் உற்பத்திப் பண்பாட்டுச் சொல்லாடல்தான்.

சித்திரை எனும் மேழம் மாதம் என்பது, கோடை காலத்தின் தொடக்க காலம். தை மாதத்து அறுவடைக் காலம் முடிந்தபிறகு, வெள்ளாமை விளைந்த வயல்களிலும் காடுகளிலும் அறுவடையில் எஞ்சியிருக்கும் அடித்தட்டைகள் அல்லது அடித்தாள்கள் எனப்படும் அடித்தூர்கள் முனை மழுங்கி காய்ந்தும், இலை தழைகள் காய்ந்து சருகாகிக்கொண்டும் இருக்கும். வெள்ளாமை பார்த்த வயல்களும் காடுகளும் அறுவடை முடிந்த காலத்திற்குப் பிறகு கொஞ்சம் காய்ந்தும் கொஞ்சம் பொதுபொதுவென்றும் இருக்கும். கோடை வெயில் தொடங்கியதற்குப் பிறகு அடுத்தடுத்து வெயிலில் கிடக்கும் வயலும் காடும் கெட்டி தட்டி இறுகிப்போகும். மழை பெய்த பிறகு இலகுவாக உழுகவும் முடியாது. ஆகையினாலேதான், கோடை காலத்தில் நிலத்தைச் சும்மா போட்டுவிடக் கூடாது என்பதற்காக, எந்த விதைப்பும் நடவும் இல்லாமல் நிலத்தை உழுது போடுவார்கள் உழவர்கள். உழுது போட்ட இந்த நிலத்தில் குப்பை மற்றும் கரம்பையைச் சிதறுவார்கள். உழுது கிளர்ந்த நிலத்தில் கோடை வெயில் படுவது அடுத்த வெள்ளாமைக்கு உகந்தது என்பார்கள். கோடை முடியும் தருவாயில் அல்லது முடிந்தபிறகு பெய்கின்ற மழைநீரின் பெரும்பகுதியை உழுத நிலங்களின் புழுதிகள் அதிகப்படியாகக் கீழே உறிஞ்சிக்கொள்ளும். நிலத்தடியில் மழைநீரைச் சேமித்துக்கொள்ளும். பிறகுதான், மழை நின்றபிறகு பதம் பார்த்து மறுபடியும் உழவைத் தொடங்கி விதைப்பு நடக்கும். ஆக, அறுவடைக் காலம் முடிந்து, கோடைகாலம் தொடங்கும்போது வெள்ளாமை நிலத்தைப் புழுதி உழவாக உழுது போடும் உழவுத்தொழில் நுட்ப மரபாக இருந்து வருவது சித்திரை மாதத்துக் கோடை உழவாகும். அதனால்தான், சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று புகழப்பட்டிருக்கிறது.

இந்தக் கோடை உழவு சித்திரை மாதத்தின் முதல்நாளில் தொடங்குவதை, சிற்றூர்ப்புறங்களில் உழவுச் சடங்காகவே நிகழ்த்தி வருகின்றனர் உழவுத்தொழில் மரபினர்.
கோடை உழவு நடைபெறுகின்ற நாளில், உழவு மாடுகள் வைத்திருக்கும் உழவர் யாவரும் ஏர்க்கலப்பைகளோடு மாடுகளையும் கலப்பைகளையும் அலங்கரித்து ஊர் மந்தை வந்துசேர்வர். மந்தையம்மனை வணங்கிவிட்டு அங்கிருந்து வரிசையாகக் கிளம்பி வந்து கண்மாய் ஓரமிருக்கும் காடுகளில் ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பர். வானத்தையும் நிலத்தையும் மாடுகளையும் கலப்பைகளையும் வணங்கிவிட்டு முன்னத்தி ஏராக ஒன்று செல்ல, அதைத்தொடர்ந்து பின்னத்தி ஏர்களும் உழுது வட்டமடித்து வரும். ஊர்மக்கள் யாவரும் உழவர்களை ஆரத்தி எடுத்து கண்ணேறு கழித்து வரவேற்பர். பச்சரிசி,வெல்லம், பொரிகடலை, வேப்பிலை கலந்த காப்பரிசி எல்லோருக்கும் வழங்கி மகிழ்வர். அன்றைய நாளில் முறைப்பெண்கள் முறைப் பையன்கள் மற்றும் முறைமாமன்கள் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆடிப்பாடி மகிழ்வர். ஊர் முழுக்க அன்றைய நாளில் மஞ்சள் தெளிப்பு விளையாட்டு நடக்கும். இத்தகைய கோடை உழவுச் சடங்கைத்தான் ஏர் பூட்டுத் திருவிழா, நாளேர் பூட்டுதல், பொன்னேர் பூட்டுதல் என்ற பெயர்களில் உழவர்கள் நடத்தி வருகின்றனர். இத்தகையக் கோடை உழவுச் சடங்கை சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பலவும் பொன்னேர் பூட்டுதல், ஏர் மங்கலம் எனும் பெயர்களால் குறிக்கின்றன. ஆக, கோடை உழவுச் செயல்பாட்டையும் சடங்கியலாக நிகழ்த்தும் பண்பாட்டு மரபு தமிழர்களிடம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில்தான், கோடை உழவுச் செயல்பாடு தொடங்கும் சித்திரை முதல்நாள் தமிழர்களின் பண்பாட்டுக்கூறாய் வழக்காற்றில் இருந்து வருகிறது.

தமிழர்களின் பண்பாட்டு நடத்தைகள் பெரும்பாலும் வேளாண் உற்பத்தியின் சடங்கியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பவை. தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் யாவும் காரண காரிய இயல்பைக் கொண்டிருக்கக் கூடியவை. தமிழர்களின் இதுபோன்ற பண்பாட்டு அடையாளங்களை, ஆரிய வைதீகமானது தன்வயப்படுத்திக்கொண்டு, ஆரிய வைதீக அடையாளத்தைக் கொடுக்கும் முயற்சியில் பலகாலமாக ஈடுபட்டு வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதிதான், சித்திரை ஆண்டுப் பிறப்பாக முன்வைத்திருக்கும் கதைகளும் புராணங்களும். சித்திரை முதல்நாள் கோடை உழவின் முதல் நாளாகவும் நாளேர் பூட்டும் உழவுத் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஆரிய வைதீக மரபின் பண்பாட்டுப் புனைவுகளைக் கொடுத்து ஆரிய வைதீக பண்பாட்டு நாளாகக் கட்டமைத்து விட்டனர் ஆரிய வைதீக மரபினர். ஆரிய வைதீக மரபு தன்வயப்படுத்திக் கொண்ட சித்திரை முதல்நாள் விழாவை அதனிடமிருந்து மீட்டெடுத்து கோடை உழவுத் திருநாளாக / நாளேர் பூட்டுத் திருநாளாக/பொன்னேர் பூட்டுத் திருநாளாக/ ஏர்பூட்டுத் திருநாளாக முன்னெடுத்து உழவுப்பண்பாட்டை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது தமிழரின் கடமையாக இருந்து கொண்டிருக்கிறது.

சித்திரையும் தையும் ஆடியும் உழவுப் பண்பாட்டின் திருநாட்களே.
இதற்கும் ஆரிய வைதீக மரபுகளுக்கும் துளியும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.

ஏர் மகாராசன்
14.04.2020.

திங்கள், 6 ஏப்ரல், 2020

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: முக்கியமானதோர் ஆய்வு நூல் :- அறிவியலாளர் பிரபாகரன்.




முனைவர் மகாராசன் அவர்களுடைய தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு என்ற முக்கியமானதொரு ஆய்வு நூலை நேற்று தான் முழுவதுமாக வாசிக்க நேர்ந்தது. இதை முக்கியமான புத்தகம் என்று சொல்வதற்கு என்னிடம் நான்கு காரணங்கள் உள்ளன. 1) பேச்சும் எழுத்தும் சேர்ந்த மொழியின் அடிப்படைக் கூறான பேச்சு தோன்றிய விதத்தை, அதன் தேவையை டார்வினின் பரிணாமக் கொள்கையின் வழி நின்று விளக்கிய விதம். “முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தியதாலும், குரல் வளையை பேசுவதற்கு உபயோகப்படுத்தியதாலுமே” குரங்கிலிருந்து மனிதன் வேறுபடுகிறான் எனவும் இந்த இரண்டிற்கும் அடிப்படை, உழைப்பு மட்டுமே என்ற அறிவியலை மிகத் தெளிவாக, பேச்சின் தோற்றம் குறித்த விளக்கத்திற்கு பயன்படுத்தியதற்கு. 2) “தமிழி” எழுத்துகளின் காலம் (தோராயமாக கி.மு 5-6 ஆம் நூற்றாண்டு) பிராமி எழுத்துகளுக்கும் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) முந்தியது என்பதை “கொற்கை, ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகங்குளம்” போன்ற இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளின் முடிவுகளுடன் ஒப்பிட்டு வாதிட்டிருப்பது. மேலும் “தமிழி” எழுத்து அரசதிகார எழுத்தாகவோ, கடவுளின் எழுத்தாகவோ இல்லாமல் அது மக்களின் எழுத்தாக இருந்ததை ஆதாரத்துடன் குறிப்பிட்டதற்கு. 3) ‘பாட்டியல்’ உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்கள் “தமிழ்” எழுத்துக்களின் மீது சாதிய- மத- வர்க்க- பாலின பாகுபாட்டை ஏற்றிருந்ததையும் அப்படி அத்தகைய அடையாளங்கள் இருந்தாலும் அதனால் “தமிழ்” எழுத்துகள் பெரிதும் பாதிக்கப்படவில்லை என்பதையும் பல இலக்கண நூல்களின் வழி கொடுத்த விரிவான விளக்கத்திற்கு. 4) இதுதான் மிக மிக முக்கியமானது. நீண்ட நெடும் வருடங்களாக தமிழ் எழுத்து முறையில் இருந்து வரும் “உ” என்ற எழுத்துக் குறியீட்டுடன் பிள்ளையார் சுழி போடும் பழக்கத்தை மறு ஆய்வுக்குட்படுத்தி, அதன் உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சித்ததற்கும், அதற்கு அவர் எடுத்துக் கொண்ட பரந்த ஆய்வும். தமிழ் எழுத்து மரபில் “உ” என்ற எழுத்தைக் கொண்டு ஒரு விஷயத்தை எழுத ஆரம்பிக்கும் பழக்கத்திற்கு உண்மையான காரணம் பிள்ளையார் சுழிக்காக அல்ல. மாறாக “உலகம்” என்ற ஒரு பொதுமைப்படுத்தலைக் குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது என்பதை இலக்கியம், மக்கள் பெயர்கள், ஊர் பெயர்கள் மற்றும் குல தெய்வ பெயர்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டிருப்பது. இந்த நான்கு முக்கிய விளக்கத்திற்கும் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பரந்துபட்ட ஆய்விற்கும் வாழ்த்துகள். தமிழின் மீதான உங்களின் ஆய்வு மேலும் தொடரட்டும்.

பகடி மனப்போக்கும் மடைமாற்ற நுண் அரசியலும்: மகாராசன்.




பெரும்பாலான பெருந்திரள் மக்கள் கூட்டம், அதிகாரத்தின் கோரப்பசிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது. மக்களாட்சி அரசு எனப் படர்ந்திருக்கும் அதிகாரத்தின் துணையோடு மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், இன்னும் பலவற்றின் பெயராலும் நடக்கிற அத்தனை நடவடிக்கையாலும் உடலும் உள்ளமும் நொந்துபோய் வெந்து சாகிறார்கள்.

புரட்சியும் போராட்டமும் கசிந்து பெருகாதா? என ஏங்கிக் கிடக்கிறார்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கூட்டத்தினர். புரட்சிகர உணர்வும், அதிகாரத்திற்கு எதிரான கோபமும், போராட்டங்களோடு பங்கேற்பும் என்பதெல்லாம் அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டியிருக்கும் இயல்பு.

அவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான் தேவை. புரட்சிக்கும் போராட்டத்திற்குமான அரசியல் சூழலை மட்டுமே அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். இதைச் செய்யவேண்டிய மக்கள் திரள் இயக்கங்களின் வாக்கு அரசியல் பங்கேற்பாலும், அதைச் சார்ந்த தொழிற்சங்கங்களின் பலவீனங்களாலும் புரட்சிகர அரசியல் சூழல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. புரட்சிகர இயக்கங்களின் போதாமைகளும் பலவீனங்களும் கூட இதற்குக் காரணம்.

தமிழகச் சூழலில், ஆரியத்துக்கும் தமிழுக்குமான நெடும்பகையும் முரணும் எல்லாத் தளங்களிலும் பரவிக் கிடக்கின்றன. மொழி, இலக்கியம், இலக்கணம், தொல்லியல், பண்பாட்டியல், அறிவியல், கலைகள், அறிவு, நடத்தை, வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், வாழ்வியல், தொழில், சமூக உறவுகள், கல்வி என அனைத்திலும் ஆரியத்திற்கு எதிரான அடையாளமும் மரபும் ஏகத்துக்கும் இருக்கின்றன.

இவற்றின் ஒவ்வொரு இண்டு இனுக்கிலும் காணப்படுகிற ஆரியத்திற்கு எதிரான அடையாளங்களை இனம் காண்பதை விட்டுவிட்டு, அதன் வேர்களையும் வரலாற்றையும் மீட்டெடுப்பதை விட்டுவிட்டு, ஆரியத்திற்கு எதிரான தமிழர் மரபுகளை முன்னெடுப்பதை விட்டுவிட்டு, வெறுமனே ஆரியத்தைப் பகடி செய்யும் கேளிக்கை மனிதர்களாக மட்டுமே இருக்கும் சூழலைப் புறந்தள்ள வேண்டியதைக் குறித்துத் தமிழர்கள் பரிசீலிக்கவேண்டியது அவசியம் ஆகும்.

அரசதிகாரத்தின் அறிவிப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், அட்டூழியங்கள், அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள், பயங்கரவாதப் போக்குகள், மத அடையாளங்கள், சாதியக்கூறுகள், அரசதிகாரத்தின் முகங்கள், அதன் அடிவருடிகள் பற்றியெல்லாம் வெறுமனே கேலியும் கிண்டலுமான பகடி செய்வதால் மட்டுமே அவற்றை வீழ்த்திவிட முடியும்; அவை வீழ்ந்திடும் என நினைப்பதும், அத்தகைய பகடிகளே அரசதிகாரத்தை எதிர்க்கும் ஆயுதமாகப் பாவிப்பதும் இன்னொரு வகையில் மூடநம்பிக்கைதான்.

அண்டா திருடர்கள், பிரியாணித் திருடர்கள், டவுசர் சங்கிகள் எனப் பகடி செய்துகொண்டிருந்த காலத்தில்தான், யாரைப் பகடி செய்தார்களோ, அவர்களேதான் அரசதிகாரத்தை இன்னொருமுறையும் புதுப்பித்துக் கொண்டார்கள்.

கொரானா தீநுண்மி நோய்த்தொற்று பரவலாகப் பரவி வரும் சூழலில், அரசதிகாரம் முன்மொழிந்த ஊரடங்கு, தனித்திருத்தல், கைதட்டுதல், விளக்கேற்றுதல் போன்றவற்றையெல்லாம் பகடி செய்யும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் பரவி வருகின்றன.

வெறுமனே பகடி செய்துவிட்டுக் கடந்துபோய் விடுவதே அரசதிகாரத்தினை எதிர்ப்பதாகக் கொள்ள முடியாது. அரசதிகாரத்தின் மக்கள் விரோதப் போக்குகளுக்கு எதிரான கோப உணர்வுகளுக்குப் பதிலாக, பகடி செய்து மகிழும் இந்த மனப்போக்கையே அரசதிகாரமும் விரும்புகின்றது.

கோப உணர்வும் புரட்சிகர உணர்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவேதான் பகடியான-கேளிக்கையான பதிவுகளை அரசதிகாரத்தின் ஊடக நிறுவனங்களே உருவாக்கிக் கொடுக்கின்றன. இந்தப் பகடிச் செய்திகளை, காட்சிகளை, பதிவுகளைப் பகிர்ந்து கொள்வதின் மூலமே அரசதிகாரத்தை எதிர்த்து நின்றவர்கள் என்கிற தகுதிப்பாட்டை அடைந்துவிடச் செய்து விடுகிறார்கள்.

அதிகாரத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்தி, அதன் அட்டூழியங்களுக்கு எதிரான மக்களின் எழுச்சியை உருவாக்கும் கலைப் படைப்புகளையும், காட்சிப் படங்களையும், கட்டுரைகளையும் அதிகமாக உருவாக்கிக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உழைக்கும் மக்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் இருக்கிறது. அந்த வேலைகளையெல்லாம் நாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மறந்துவிட்டு, அரசதிகாரத்தைப் பகடி செய்வதில் மட்டுமே நிறைவடையும் மனப்போக்கானது, அரசதிகாரத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, நம்மை மடைமாற்றம் செய்து, அரசதிகாரத்திற்குத் துணையாகவே இருக்கும் என்பதை உணரும் காலமும் இதுதான்.

ஆயினும், மிகச் சில ஓவியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், தோழர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் தங்களது படைப்புகள், பதிவுகளின் வாயிலாக அரசதிகாரத்தின் மீதான எதிர்ப்பைப் புலப்படுத்தியும் வருகின்றனர். இதுவே இன்னும் பரவலாக்கப்பட வேண்டும்.

இறுதியாக ஒன்று,
அதிகாரத்தின் நிழலில் அண்டி வாழப் பழகிவிட்ட ஒரு சமூகம்தான், பகடியால் மட்டுமே தமது எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருக்கும்.

ஏர் மகாராசன்
06.04.2020

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தமிழின் தொன்மையான வரலாற்றுக்காலம் பற்றி அறிய உதவும் நூல்: செல்வா தமிழ், சமூகச் செயல்பாட்டாளர்.






முனைவர் மகாராசன் எழுதி, ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' என்னும் ஆய்வு நூலானது, ஒரு மொழி என்பது எவ்வாறு தோன்றியது? எப்போது எழுத்து வடிவம் எடுத்தது? மொழியைச் செழுமைப்படுத்த இலக்கண நூல்கள் எதன் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன? அது எவ்வாறு ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாய் உள்ளது? என்பன பற்றி விரிவாக ஆய்வு செய்து தரவுகளுடன் தரப்பட்டுள்ளது.

மொழியைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நூலை நான் படிப்பது இதுதான் முதல் முறை. தோழர் மகாராசனின் எழுத்துநடை ஒரு ஆய்வு நூலைப் படிப்பதற்குச் சிரமமின்றி எளிமையாக இருந்தது.

இந்நூலில் உள்ள சில கருத்துக்கள்...

மனித சமூகத்தின் உழைப்பில் விளைந்ததே மொழி. எனவே, சமூகம் இல்லாமல் மொழி இல்லை; மொழி இல்லாமல் சமூகத்தின் வளர்ச்சி இல்லை. எனவே, இரண்டும் இணைந்தே இயங்குகிறது.

மொழிக்கு நிலைபேறு என்கிற தகுதிநிலை அளிப்பது எழுத்தாகும். மொழியின் ஒலி வடிவத்திற்கு வரி வடிவம் கொடுப்பதே எழுத்துதான். எழுத்து என்னும் சொல்லை நோக்கும் போது உண்மையில் எழு என்னும் சொல்லே வேர்ச் சொல்லாக இருப்பது புலனாகும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவமான பிராமி என்னும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும் தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகும் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகள் இதனை மறுத்து, கி.மு .15 ஆம் நூற்றாண்டு வரை வழமையான எழுத்து வடிவத்தைக் கொண்டதாகத் தமிழ்மொழி உள்ளதாக நிறுவுகின்றன. தமிழில் உள்ள எழுத்து வடிவத்திற்குத் தமிழி எனக் குறிக்கலாம் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

எ.கா. 1970ம் ஆண்டு கொற்கைத் துறைமுகக் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிடைத்த பானை ஓடு ஒன்றில் தமிழ் எழுத்து எழுதப்பட்டிருந்தது. அதனைக் கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தியதில் அதன் காலம் கி.மு. 550 முதல் கி.மு. 660 இருக்கலாம் என்பதை நிறுவுகிறது.

அதேமாதிரி, தற்போது கீழடியில் கிடைக்கப்பெற்ற பொருட்களில் உள்ள எழுத்துக்கள் தமிழ் எழுத்து வடிவத்தின் பழமையை நிறுவுகிறது. எனவே, பிராமி எழுத்து வடிவத்தில் இருந்து தமிழ் எழுத்து உருவாகவில்லை. மாறாக, அதற்கு முன்பே தமிழ் எழுத்து வடிவம் இருந்திருக்கின்றது; அது தமிழி எழுத்து வடிவம் ஆகும். அதற்கென தனி வரலாறும் உண்டு.

தமிழி எழுத்து வடிவம் கிடைக்கப்பெற்ற பொருட்களில் எல்லாம் சாதாரண மக்கள் பயன்படுத்தியவை ஆகும். மற்றும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்திய பொருள்களில் எழுதப்பட்டுள்ளது. இது சமூகத்தில் அடித்தட்டு மக்கள் வரை கல்வி அறிவு பெற்ற சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துள்ளதை நிறுவியுள்ளது.
ஏனென்றால், பெரும்பாலும் வட இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் செப்பேடுகள் போன்றவற்றில்தான் முதன்முதலாகப் பிராமி எழுத்து வடிவத்தில் பிராகிருதம் மொழியில் எழுதப்பட்டுள்ளது . ஆனால், அதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு சாதாரண மக்கள் பயன்படுத்திய பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே ஒரு மொழியின் வளர்ச்சியின் வரலாற்றைப் பார்த்தால் மொழி எழுத்து வடிவம் தோன்றுவதற்கு முன்பாகப் பல நூறு வருடங்கள் பேச்சு மொழியாக இருக்கும். எனவே, தமிழ்மொழியின் வரலாறு என்பது கிடைக்கப்பட்ட தரவுகள் ஆதாரங்கள் அடிப்படையில் தோராயமாக கி.மு. 2000ஆம் ஆண்டுகள் என மதிப்பிடலாம்.
இது போன்ற பல தகவல்கள் இந்நூலில் உள்ளன.

தமிழ்மொழியின் தொன்மையான வரலாற்றுக் காலம் பற்றியும், சிறப்பைப் பற்றியும் அதை பயன்படுத்திய மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு இவ்வாய்வு நூலைத் தோழர்கள் அவசியம் வாசிக்கவும்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

சித்த மருத்துவம்: திராவிடமயமாக்கலின் தோல்வியும் வெற்றியும்:- மகாராசன்.



தமிழ்மொழியைத்
'திராவிட மொழி'என்றும்,
தமிழ் இனத்தைத்
'திராவிடர்' என்றும்,
தமிழ்நாட்டைத்
'திராவிட நாடு' என்றும்,
தமிழ்ப் பண்பாட்டு நாகரிகத்தைத்
'திராவிடப்
பண்பாட்டு நாகரிகம்' என்றும்,
தமிழர் திருநாளைத்
'திராவிடத் திருநாள்' என்றும்
தெரிந்தோ தெரியாமலோ 'திராவிடமயமாக்கம்' நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன.

இச்சூழலில், தமிழர் மரபு அறிவின் நீட்சியாக - அனுபவ அறிவின் பயனாக - இயற்கை உறவின் கொடையாக - தமிழர் நிலத்திற்கே உரித்தான இயற்கை மருத்துவமாக- பயில்முறைக் கல்வியாகப் பரிணமித்த மருத்துவ முறையாகச் 'சித்த மருத்துவம்' தோன்றி வளர்ந்திருக்கிறது. தமிழ்மொழிக்கும் சித்த மருத்துவத்திற்குமான பிணைப்பு இணைபிரியாதது. சித்த மருத்துவம் என்பது, 'தமிழ் மருத்துவம்' என்று சொல்லுமளவிற்குத் தமிழின் மருத்துவ அடையாளமாகத் திகழக்கூடிய ஒன்று.

தமிழின் அடையாளங்கள் அனைத்தையும் திராவிடமயமாக்கி வந்த சூழலில், தமிழ் அடையாளங்களுள் ஒன்றான சித்த மருத்துவத்தை - தமிழ் மருத்துவத்தை மட்டும் திராவிடமயமாக ஆக்கப்படவில்லை. சித்த மருத்துவத்தைத் 'திராவிட மருத்துவம்' என்பதாகத் திராவிட மயமாக்கவில்லை. திராவிட மருத்துவம் என்பதாகக்கூட, சித்த மருத்துவத்தை முன்னிறுத்தவோ அல்லது முன்மொழியவோ செய்திடவில்லை.

தமிழ் மருத்துவமாகவோ அல்லது திராவிட மருத்துவமாகவோ சித்த மருத்துவம் எந்த வகையிலும் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடாது என்கிற சதியும், ஏமாற்றும், மாயத்தோற்றமும், அச்சுறுத்தலும், கட்டுப்பாடும், சுவடிகள் உள்ளிட்ட ஆவணங்கள் அழிப்பும், குல நீக்கமும், அதிகாரத் துணைகொண்ட ஒடுக்குமுறையும், படுகொலையும் 16ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து இன்றுவரையிலும் நீடிக்கின்றன. ஏனெனில், அறிவியல் தொழில்நுட்பத் தோற்றத்தில் - வணிகமயக் கண்ணோட்டத்தில் உள்நுழைக்கப் பார்த்த அலோபதி மருத்துவ நுழைவுக்குப் பெருந்தடையாக இருந்தது சித்த மருத்துவ முறைதான்.

இன்றும் கூட அலோபதியின் வணிக நோக்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் அதுதான். அதனால்தான், சித்த மருத்துவத்தைத் திராவிட மருத்துவமாகவோ அல்லது தமிழ் மருத்துவமாகவோ பரவலாக்கம் செய்திடவில்லை அதிகாரத் தரப்பினர்.

அலோபதி மருத்துவக் கட்டமைப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் கொடுக்கின்ற முக்கியத்துவங்கள், உள்கட்டமைப்புகள், நிதி ஒதுக்கீடுகள் போன்றவை போல, சித்த மருத்துவத்தையும் நவீனப்படுத்தவும் பரவலாக்கவும் செய்கின்ற முயற்சிகள் ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவுதான். இந்த மண்ணில்-இந்த மக்களால்-இந்த மரபில் தோன்றி பன்னெடுங்காலமாக மக்கள் மருத்துவமாகத் திகழ்ந்துவந்த சித்த மருத்துவமானது, அலோபதி மருத்துவ நுழைவுக்காகவே இரண்டாம்தர மருத்துவமாகத் திட்டமிட்டுத் தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இது அறிவியல் அற்றது; நவீனப்படாதது; நிரூபிக்கப்படாதது; அனைத்து நோய்க்கும் மருந்தில்லாதது என்கிற புனைவுகள் அக்காலத்திலிருந்து இன்றுவரைக்கும் முன்வைக்கப்படுகிற கொச்சை வாதங்கள்தான்.

இவர்களது நோக்கமெல்லாம், சித்த மருத்துவமானது தமிழ் மருத்துவமாகவோ அல்லது திராவிட மருத்துவமாகவோ நவீனமாக மாறிவிடக்கூடாது என்கிற எண்ணம்தான். கூடவே, அலோபதியின் வணிக நோக்கில் கைகோர்ப்பதும்தான்.

சித்த மருத்துவம் என்பதைப் பொருத்தளவில், அதனைத் திராவிட மருத்துவம் என்று சொல்லும்படியாகவும் அதை ஆக்க முடியவில்லை; அப்படியாக அதை ஆக்கவும் விரும்பவில்லை. இதில்தான் திராவிடமயமாக்கலின் தோல்வி அடங்கி இருக்கிறது; கூடவே வெற்றியும் மிதமிஞ்சி இருக்கின்றது.

பிற்குறிப்புகள்:

1. சித்த மருத்துவத்திற்கும் தமிழகத்தில் இருந்த மடங்களுக்கும் நிறையத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. குறிப்பாக, தமிழக மடங்கள் சமயக் கல்வியை வலுப்படுத்தும் விதமாக கட்டடக் கலை, ஓவியம், இசை, நாட்டியம், மருத்துவம், மெய்ப்பொருள் அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், அடிப்படையான மொழி, மொழியைச் செம்மைப்படுத்தும் இலக்கணம், கோவில் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தோத்திர நூல்கள் போன்றவற்றைப் பேணிப் பாதுகாத்து வந்தன.

தமிழர்களின் பொது அறமாக வழிவகுக்கப்பட்ட 32 பொது அறங்களில் பசிக்கு உணவளித்தல், ஆதுலர்க்குச் சாலை அமைத்தல், கல்விச் சாலை அமைத்தல் மூன்றும் தலையாயன. ஆன்மா எனும் மனதைச் சுத்தப்படுத்த யோக ஞானப் பயிற்சியும், உடம்பை வலுவாக்க அன்னம் அளித்தும், உடம்பை நோயில் இருந்து பாதுகாக்க மருத்துவப் பயிற்சியும் மடங்கள் மூலமாக அளிக்கப்பட்டு வந்தன.

அனைத்துத் தமிழக மடங்களும் சமய நூல்களுக்கு அடுத்தபடியாக ஏராளமான தமிழ் அனுபவச் சித்த மருத்துவச் சுவடிகளைப் பாதுகாத்தும் வந்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொதிகைச் சித்தர் மரபு, திருமூலர் மரபு, வள்ளலார் மரபு போன்ற பல்வேறு அமைப்புகள் மடங்கள் மூலமாக வந்த வழித் தோன்றல்கள்தான். இவர்கள் தொண்டை மண்டலம் முழுமையும் ஞானக்கல்வியும், சித்த மருத்துவப் பயிற்சியும் அளித்து வந்தனர். மேலும், இலவச அன்னம் அளித்து, சித்த மருத்துவப் பயிற்சியும் அளித்து, இலவச தர்ம வைத்திய சாலைகளை நடத்தி வந்துள்ளனர். இதில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் அன்றைய காலத்தில் கைவிடப்பட்ட ஏழைப் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மடங்கள் யாவும் கோயிலின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தன. இந்த மடங்களுக்குக் கோயில்கள் மூலமாகவே மானியம் அளிக்கப்பட்டு வந்தன. இந்த மானியங்களைக் கொண்டுதான் பல்வேறு வகையில் அறப்பணிகளைச் செய்துவந்தன. பொதுவாக, கோயில்கள் அனைத்தும் அதிகார அமைப்புகளின் மிக முக்கியமான நிறுவனமாகச் செயலாற்றி வந்த நிலையில், பிற்காலத்தில் நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டன் அரசாங்கம்கூட கோயில்களுக்குள்ளும் மடங்களுக்குள்ளும் அதிகப்படியாகத் தலையிட்டுக்கொள்ளவில்லை.

பிரிட்டன் அரசுக்கு முன்பான காலங்களில் அரசுகளின் நிர்வாகத் தளங்களாக இருந்தவை
கோயில்களும்அதன் துணை அமைப்பான மடங்களுமே ஆகும். இங்குதான் வானியல், சிற்பம், ஓவியம், கட்டிடம், பண்டுவம், கூவகம், நாடகம், பாடல், நடனம், இசை, கல்வி போன்ற சாத்திரத் துறைகளும் அதன் கலைஞர்களும் இயங்கினார்கள்.
இவர்களின் செயல்பாடுகள் அரசு சார்ந்து மட்டும் இருந்தன. இதனால் மக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளி அதிகமாக இருந்தது. இந்தக் காலத்தில் ஆட்சிக்கு வந்த பிரிட்டன் அரசு 'கோயிலில் ஊழல்; எளிய சூத்திர மக்கள் நுழையத் தடை' இருப்பதாக் கணக்கில் கொண்டு முடக்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து, கோயில் மற்றும் மடங்களின் மானியத்தால் மட்டும் பிழைத்துக்கொண்டிருந்த இக்கலைஞர்கள் தெருக்கூத்தாடிகளாக மாறினர் என்பதே வரலாறு.

பண்டுவர்கள் கிராமங்களை நோக்கி வேளாண்குடிகளைச் சார்ந்து தனித்தனியாகப் பிரிந்து போயினர். இதனால், அவர்களிடையே பண்டுவம் தொடர்பாக இருந்து வந்த விவாதக் கருத்துப் பரிமாற்றங்களும் செத்துப்போயின. இதையும் தாண்டி "இவர்களால் நமக்குப் பெரும் தொல்லை இல்லை" என சில வேதாந்த மடங்களைப் பிரிட்டன் அரசாங்கம் கண்டும் காணாமலும் விட்டதால், தொண்டை மண்டலத்திலும் தென்தமிழகத்திலும் சித்தமருத்துவப் பண்டுவம் சாமனிய மக்களைக் காக்கவும் செய்தது.

கோவில் நிறுவனங்கள் அனைத்தும் நீதிக்கட்சி ஆட்சியில் (Endowment Bord) அறநிலையத்துறை என்ற துறையின்கீழ் கொண்டுவரப்பட்டன அல்லது மாற்றப்பட்டன.
இது ஒருபுறமிருக்க, 1947 காலத்திற்குப் பிந்தைய எல்லா வகைப்பட்ட ஆட்சிக் காலங்களிலும் கோயில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதோடு, கோயில்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்பட்டன. மானியங்களை நம்பியே செயல்பட்டு வந்த மடங்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. மடங்களில் செயலாற்றி வந்த சித்த மருத்துவப் பண்டுவமும் பண்டுவர்களும் அரசின் ஆதரவின்றிப் போனதாலும், அரசின் நெருக்கடி மிகுதியாலும் மடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், மடங்களில் இருந்த பல லட்சக்கணக்கான மருத்துவச் சுவடிகள்/ ஆவணங்கள் மறைந்தும் அழிந்தும் போயின.

இத்தகைய அறமடங்களை வெறும் ஆன்மீக மடங்களாகவே பார்த்துக் கருதியதும், அதைச் சமய அடையாளங்களாக ஒதுக்கியதும் நீதிக்கட்சி தொடங்கி திராவிட ஆட்சிக்காலங்கள் வரையிலும் அதிகம் நடந்தேறியுள்ளன.

2. ஆந்திரம் கர்நாடகம் கேரளத்தில் ஆயுர்வேதமே அம்மக்களின் மருத்துவமாக உள்ளதற்குக் காரணம், அங்கு சமற்கிருதக் கலப்பு என்பதைவிடவும் சமற்கிருதத்தில் அது அரசு மாயமானதே. இங்கு சமற்கிருதத்திற்குள் போகாதது திராவிடக் கட்டமைப்பு என்பதும் பொய். திராவிடக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பிருந்தே சித்த மருத்துவப் பண்டுவமானது கொரோனா தனிமைப்படுதல் போல் தன்னைச் சுற்றித் தானே வளப்படுத்தி வந்திருக்கிறது. இதை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் என்பதே ஆய்வுப்பூர்வமானது.

3. பிரிட்டன் அரசு இந்திய ஒன்றியப் பகுதிகளில் மருத்துவங்களுக்காகப் பள்ளி / கல்லூரி தொடங்கியபோது சித்த மருத்துவப் பண்டுவத்தைப் பொருட்படுத்தவில்லை. இதைப் பிரிட்டன் அரசுக்கு எடுத்து வைக்க வேண்டிய நீதிக்கட்சியும் முனைப்பு காட்டவில்லை. அதேவேளை, மக்களிடம் சித்த மருத்துவப் பண்படுவம் பரவலாக இருந்தது. இதை நிராகரித்தால் இவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள். இதே சூழலில், தமிழகத்தில் ஆயுர்வேதப் பள்ளியைத் தெலுங்கு பிராமணர்கள் துவக்கியபோதும், நீதிக்கட்சிக்காரர்கள் சித்த மருத்துவப் பண்டுவப் பள்ளி தொடங்க உதவவில்லை என்பதே வரலாறு.

4. உடல் உள்ளுறுப்பு அறுவை சிகிச்சை தொடங்கிய காலத்தில், ஆங்கில மற்றும் உலகளவில் உள்ள மருத்துவக் கூட்டுக் குழுவே செய்திடத் தொடங்கியது என்பதைப் பிரிட்டன் குறிப்புகளே சொல்கின்றன (குரோத் ஆப் மெடிக்கல் இன் இராஜ் நூலில்).

இதைத்தொடர்ந்தே, ஆட்சி அதிகாரத்திலிருந்த கிழக்கு இந்தியப் பிரிட்டன் கம்பெனியானது, அரசைத் தனக்குரியதாக்கியதுடன் தான் ஆண்ட நாடுகளில் எல்லாம் அதைப் பரப்பிப் பணம் ஈட்டியது.


5. சித்த மருத்துவப் பண்டுவத்தில் 4446 நோய்கள் மட்டுமே உள்ளது. புதிய நோய்களுக்கு மருந்தில்லை என்பதே குற்றச்சாட்டு. இந்தப் பூமிப்பந்தில் மரபணு திடீர்மாற்றம் (Genetical change and mutation) அடைவது பல கோடி ஆண்டுகள் என ஆய்வு அறிக்கையாக மட்டுமே ஏற்றுக்கொண்டது விஞ்ஞானம். இதன்படி எந்த உருமாற்றமும் மனித குலத்தில் நிகழாதபோது, எப்படி புதிய கண்டுபிடிப்பு மருந்துகள் உருவாகி இருக்கும்?

உடற் கூறுகளில் உள்ள (body mechanism and metabolism) உட்கூறுகளில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதேபோல் நுண் கிருமிகள் மூட்டேசன் நடக்கவில்லை. நடந்தது என நாம் நம்புவது கலப்பு; ஒட்டு. இதனாலும் பெரும் மாற்றம் நிகழவில்லை.

எச்அய்வி, காலரா, பிளேக் போன்ற நோய்களுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதே தவிர, அவை புதிய நோய்கள் இல்லை. எச்அய்வி தீநுண்மி கண்டறியப்பட்டதால் அன்று முதலே அந்நோய் உருவானதல்ல. அதற்கு முன்பே மேக வெட்டை என்ற பெயரில் முன்பே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

6. உள் உறுப்புகள் தொடர்பான கணிப்புக் கருவிகள் எக்ஸ்ரேயில் தொடங்கி இன்றுவரையிலும் பலவகையான நுண் நுட்பமான கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. இதற்கு ஏற்றால்போல் சித்த மருத்துவப் பண்டுவத்தில் இல்லையென்பதால் சமற்கிருதம் போல் அழிந்து விடும் என எழுதுவது, சித்த மருத்துவப் பண்டுவ அறிவை நாம் இழக்க வைத்தன் விளைவாகும்.

நாடி பார்ப்பதற்கு இன்று அரசுக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியப் பெருமக்களே குறைவு என்பதைவிட, அதன் அடி நாளத்தைத் தொடவில்லை. காரணம், அரசு நிறுவனமாக்கிய கல்வியைக் கொடுத்தவுடன் இவர்கள் சித்த மருத்துவப் பண்டுவர்களைப் போலியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதேநேரத்தில், சித்த மருத்துவப் பண்டுவர்களிடமிருந்த அறிவைப் பெற மறுத்ததுடன், அந்தப் பட்டறிவைத் தள்ளுபடியும் செய்தனர்.

நாடி பார்ப்பது நூலில் இருந்தாலும், நாடி பார்ப்பது என்பது அனுபவத்தின் நுட்பமான அறிவாகும். இதைப் படிப்பதால் மட்டுமே பயன்படுத்திட இயலாது என்பதை அவர்கள் அறிந்ததால்தான், டெத்தஸ்கோப் வேண்டும் எனப் போராடிப் பெற்று ஆங்கில மருத்துவர்களைப்போல் கல்வி நிறுவனங்களில் பட்டம் பயின்ற சித்த மருத்துவர்கள் வலம் வருகிறார்கள். அதேபோல், சித்த மருத்துவப் பண்டுவத்தில் உள்ள செந்தூரம், அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பாடமாகவே உள்ளது. இதில் அனுபவ அறிவைப் (practical) பெற்றவர்கள் மிகக்குறைவு என்பதே உண்மை.

7. பிரிட்டன் அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரியாவே எடுத்தது. இதை இன்று வரை சாதிவாரிக் கணக்கெடுப்பு எனச் சொல்லுவதற்குப் பதிலாக, மக்கள் தொகைக் கணக்கு எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறோம். இதைப்போலவே, அன்றைய காலத்தில் இறப்பு விகிதம் அதிகம் என்றும், குறைந்த வயதில் மட்டுமே இறந்தார்கள் என்றும் சொல்வது, தமிழ் மொழியின் சித்த மருத்துவப் பண்டுவ அறிவை எதிர்க்கும் இலக்கை நோக்கியதாகும்.

'ஆங்கில மருத்துவக் கண்டுபிடிப்பால் மட்டுமே ஆயுள் கூடியது' என்ற பரப்புரையும் முன்வைக்கப்படுகிறது. அதேவேளையில்,
இன்றும் எவ்விதமான மருந்து மாத்திரை மட்டுமல்ல; மருத்துவப் பண்டுவமே பார்க்காத கிழடு கட்டைகளை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் மறுக்கப்படுகிறது.

1730 முதல் கிழக்கு இந்தியன் கம்பெனியான இங்கிலாந்தோடு மன்னர் ஆட்சியில் ஒருங்கிணைந்த ஒப்பந்தம் போட்ட காலமான 1857 வரை எத்தனையோ போர்கள்; எத்தனையோ கலவரங்கள். இந்தக் காலகட்டத்தில் அரசு என்பது எங்கு இருந்தது?. இக்காலகட்டத்தில் என்ன விதமான மருத்துவம் இருந்திருக்கும்?. மக்கள் பட்டினியால் செத்ததைவிட, பண்டுவம் இல்லாமலே செத்தார்கள்.

நோயால் சாகக்கிடந்த மக்களுக்குப் பிரிட்டன் அரசு என்ன செய்தது? உள்ளூரில் சித்த மருத்துவப் பண்டுவம் பார்த்தவர்களைப் போலி மருத்துவர்கள் என்றும், புட்லெக் கன்ரி மெடிசனிஸ்ட் என்றும் சொல்லி, கைது செய்து உள்ளே தள்ளியது. இதனால், போர்க் கலவரங்களில் செத்தவர்களைவிட, பண்டுவம் இல்லாமல் செத்தவர்களே அதிகம் என்ற வரலாற்றை மறைப்பது உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல; நேர்மையற்றதுமாகும்.

8. பிரிட்டன் அரசு ஆங்கில மருத்துவத்தை மக்களுக்குக் கொண்டுவரவில்லை. அவர்களது மிலிட்டரி கண்டோமெண்ட்டில் மட்டுமே மருத்துவம் செய்தனர் என்ற வரலாற்றை மறைப்பதன் நோக்கம் என்ன?

பேராயக் கட்சியில் ( Indian National Congress party) தீவிரவாதப் பிரிவு தொடங்கிய பின்னர், இந்திய ஒன்றிய மொழிகளில் அவர்களின் மருத்துவத்தைக் கற்றுக்கொடுக்க முன்வந்தனர். அதன் பின்னரே இந்த மருத்துவம் மக்களுக்கு லேசுவாசாக, அதுவும் 36 நகராட்சிகளில் பெயரளவிற்குக் கொண்டு வந்தனர். இந்தக் காலகட்டத்தில் சித்த மருத்துவப் பண்டுவர்கள் கொத்துக்கொத்தாகக் கைது செய்த வரலாறு உள்ளதையும் பார்க்க மறுப்பதேன்?

இதே காலகட்டத்தில், ஆங்கில மருத்துவம் பார்க்க மக்கள் வர மறுத்தனர். இதற்குக் காரணம், உயிர் பயம் மட்டுமல்ல; அந்த மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த நம்பிக்கையின்மையைப் பிரிட்டன் பரப்பிய ''இந்திய ஒன்றிய மக்கள் கடவுள் சொல்படி நடப்பவர்கள்' என்ற பிரச்சாரத்தை இன்றும் இங்குள்ளவர்கள் பரப்பி வருகிறார்கள்.

சித்த மருத்துவப் பண்டுவத்தைப் பிரிட்டன் அரசு 1921 படிப்பாகத் தொடங்கினாலும், 1932 வரை பதிவு செய்திடாமல் வைத்து, போலி மருத்துவர் என அறிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. ஆனால், அன்றும் சரி இன்றும் சரி, சித்த மருத்துவப் பண்டுவம் பார்க்கும் மருத்துவர்களிடம் மக்கள் நம்பிக்கையோடு செல்லக் காரணம், சித்த மருத்துவப் பண்டுவ அறிவு மக்களுக்கு இருப்பதாலும், ஏற்கனவே நம் மக்களிடம் சித்த மருத்துவப் பண்டுவர்கள் இருப்பதாலும்தான்.

மருத்துவர்கள் மீதும், சித்த மருத்துவப் பண்டுவத்தின் மீதும் உள்ள நம்பிக்கை இன்னும் சாகாமல் இருக்கிறது என்பது படித்துப் பட்டம் பெற்ற பெரும்பாலான சித்த மருத்துவப் பண்டுவ மருத்துவர்கள் உணர மறுக்கிறார்கள்.

இந்த சித்த மருத்துவப் பண்டுவர்களிடம் இருக்கும் அறிவைப் பெற மறுப்பதும், மருத்துவ செடி கொடிகளை அடையாளப்படுத்தவும் அவர்களைப் பயன்படுத்தவும் மறுப்பதும் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்களின் பெரும் போக்காக மாறி இருப்பதற்குக் காரணம், ஆங்கில மருத்துவர்களைப்போல் இவர்களும் உந்தப்பட்டிருப்பதே ஆகும்.

9. பிரிட்டன் அரசுக் காலத்தில் அமைக்கப்பட்ட கோமான் மற்றும் உஸ்மான் விசாரணைக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் ஆங்கில மருத்துவத்துடனே சித்த மருத்துவமும் பிற இந்திய ஒன்றிய மருத்துவமும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதனால் இவர்கள் ஆங்கில மருத்துவர்களாகவே மேல்நிலையாக்க உணர்வை அடைந்து, மரபு அறிவுக்கான சித்த மருத்துவப் பண்டுவப் பாட நூல்களைத் தயாரிக்கவும் முன்வரவில்லை. இதன் நீட்சியாகவே பெரும்பாலான பட்டம் பயின்ற சித்த மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

10. மருந்து மட்டுமே உள்ள சித்த மருத்துவப் பண்டுவத்தில், மய்ய மருந்தான செந்தூரம், கந்தகம் பூதம் (பாதரசம்), வெடிப்புத் துத்தம், துருசு போன்றவை இன்றும் சீனத்தில் கிடப்பவை. சீனர்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பில்லாமல் அவை இங்கு வந்திருக்காது.

ஆயுர்வேதத்தில் இந்த மருந்துகள் சுத்தி செய்திடும் முறை வேறு. அதேவேளை, சித்த மருத்துவப் பண்டுவத்தில் இங்கு உள்ள மூலிகைகளில் மட்டுமே சுத்தி செய்தனர். பாதரசம் போன்ற திரவ உலோகத்தைத் திடமாக்கி குண்டுமணியாகவும் செந்தூரமாகவும் செய்த அறிவியல் முறை, சித்த மருத்துவப் பண்டுவத்திற்குரியது.

சித்த மருத்துவத்தில் குல்லைப் பூ, அபினி பாசனங்கள், வெடிமருந்தாகப் பயன்படும் இதர மருத்துவப் பொருள்கள் பிரிட்டன் காலம் முதல் இன்று வரையிலும் தடை செய்யப்பட்டிருப்பதும், சித்த மருத்துவத்தில் உள்ள பெரும்பகுதி மருந்துகள், ஆங்கில மருந்துக் கலவையாக எப்படி மாறியது? என்ற வரலாற்றைத் தேடினால், ஆதிக்க அதிகார இருப்பால் அதனைத் தன்வயப்படுத்தியிருப்பதும் புலப்படும்.

ஏர் மகாராசன்
02. 04. 2020.

பிற்குறிப்புத் தரவுகள்:
சுளுந்தீ நூலாசிரியர்
இரா. முத்துநாகு,
ஆய்வறிஞர்
இரெங்கையா முருகன்.

நூல் சான்றுகள்:
1. Evolution of medical education in India.
2. Physicians of colonial India (1757–1900).
3. நவீன சித்த மருத்துவச் சிற்பிகள்.
4. காலனி ஆட்சியில் நம் வாழ்வும் நலவாழ்வும்.
5. Understanding of Human Genetic study and Variation.
6. Human Evolution.
7. வியக்க வைக்கும் தமிழர் அறிவு.
8. காலனி ஆட்சியில் வேளாண்குடிகள்.
9. Growth of medical in Raj.
10. Social economic history (1500 to 1960).
11. சுளுந்தீ - தமிழ்ப்புதினம்.

எழுத்தோவியம்
ஓவியர் நித்யன்.