செவ்வாய், 31 அக்டோபர், 2023

மழைவளச் சடங்குகளும் மழைத் தெய்வ வழிபாடும்: மகாராசன்



மழை இல்லாத கோடைக் காலங்களிலும், வறட்சியான காலங்களிலும் தென்மாவட்டங்களின் சிற்றூர்ப் புறங்களில் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு பெண்கள் முன்னெடுக்கும் ஒரு சடங்கு, மழைச் சோறு சடங்கு எனவும் மழைக் கஞ்சிச் சடங்கு எனவும் நிகழ்த்தப்படுகிறது.  பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று, ஊரார் தருகின்ற அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம் என எந்தவகைத் தானியங்களாக இருந்தாலும் சேகரித்து, ஊர் மந்தையிலோ அல்லது கண்மாய்க் கரையிலோ ஒரே வட்டகையிலோ அல்லது பானையிலோ கஞ்சியாகச் சமைத்து ஆக்கப்படுகிறது. இது மழைக் கஞ்சி எனப்படுகிறது. 

அன்னந் தண்ணிக்கி வழியில்ல 

கம்மாக் கரையில தண்ணி இல்ல

ஆட்டு மாட்டுக்குத் தண்ணி இல்ல

தவிச்ச வாய்க்குத் தண்ணி இல்ல

பச்சப் பிள்ளைக்குப் பாலுமில்ல 

எனப் பெண்களும் குழந்தைகளும் ஒப்பாரியாய்ப் பாடியபடியே, மழை பெய்ய வேண்டும் என வானத்தை நோக்கி வழிபடுகின்றனர். 

ஊரார் அனைவரும் மழைக் கஞ்சியைப் பகிர்ந்து குடிக்கும் இந்தச் சடங்கானது, மழை வேண்டுதலை நோக்கமாகக் கொண்டது. ஊரார் பலரும் இதில் கலந்து கொண்டாலும், பெண்களே இத்தகையச் சடங்கை முன்னெடுக்கின்றனர். பெண்களும் நிலமும் உயிரின உற்பத்தியின் வளமை அடையாளங்களாக இருப்பதால்தான், நிலத்தின் மழை ஏக்கத்தை - நிலத்தின் மழைத் தவிப்பை - நிலத்தின் மழை வேண்டுதலைப் பெண்கள் முன்வைத்து நிகழ்த்துகிறார்கள். 

நிலம் மட்டுமல்ல, நிலம் சார்ந்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மழைநீர் அடிப்படைத் தேவை. மழை இல்லாவிட்டால், வறட்சியும் வறுமையும் பஞ்சமும் ஏற்படும். மழை இல்லாமல் போனால், உயிர் வாழ்வுக்கும் உணவுக்கும் கையேந்தும் நிலை உருவாகும் என்பதை மழைத் தெய்வத்துக்கு முன்னுணர்த்தும் போலச் செய்தல் சடங்குதான் மழைக் கஞ்சிச் சடங்காகும். மக்கள் துயர் கண்டு அல்லது மக்கள் துயர்நிலை அடையாமல் இருக்க, மழைத் தெய்வமானது மழையைப் பொழியும் என்கிற நம்பிக்கையோடும் வேட்கையோடும் வேண்டுதலோடும்தான் இத்தகையச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

மழையை எதிர்நோக்கியும் மழைத் தெய்வ வழிபாட்டையும் உள்ளீடாகக் கொண்ட மழைக் கஞ்சிச் சடங்கைப் போலவே, தமிழ்நாட்டின் தென்பகுதியில் மழைச்சோறு சடங்கு என்பதாகவும் ஒரு சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது. முகவை (இராமநாதபுரம்) மாவட்டத்தில் உள்ள சிற்றூர்ப் புறங்களில் ஆண்டுதோறும் மழை இல்லாத காலகட்டங்களில் மழைச் சோறு சடங்கானது இன்றளவிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இச்சடங்கையும் ஊரில் உள்ள பெண்களே முன்னெடுக்கிறார்கள். 

பெண்களும் சிறுமிகளும் மட்டுமே இச்சடங்கில் பங்கேற்கிறார்கள். பெண்களும் சிறுமிகளுமாகச் சேர்ந்து, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வீட்டார் தருகின்ற சமைத்த உணவு எதுவாயினும் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேகரித்துக் கலந்து, சோற்று உருண்டைகள் பிடித்து, சடங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சோற்று உருண்டைகள் சாப்பிடக் கொடுக்கின்றனர். பெண்கள் நோன்பிருந்து நிகழ்த்தப்படும் இச்சடங்கில் கும்மிப் பாடல்களும் ஒப்பாரிப் பாடல்களும் பாடப்படுகின்றன. இந்தப் பாடல்கள் யாவும் மழைநீரை மய்யமிட்டதாகவே - மழைத் தெய்வ வழிபாடாகவே அமைந்திருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இத்தகைய மழைவளச் சடங்கு பற்றி பா.அரிபாபு முன்வைத்திருக்கும் கள ஆய்வுத் தரவுகள், மழைத் தெய்வ வழிபாட்டு மரபில் உள்ள இந்திர வழிபாட்டுச் சடங்கின் நீட்சியாக இருப்பதை அடையாளப்படுத்துகின்றன. மழைச் சோறு சடங்கு பற்றி அவர் முன்வைத்திருக்கும் விவரிப்புகள் வருமாறு.

மழைச் சோற்றுச் சடங்கானது, பெரும்பாலான தென்கிராமங்களில் தனித்த குழுவினர் அல்லது ஒரு சாதியினர் மட்டுமே வாழும் ஊர்களில் முன்னெடுக்கப்படுகின்றன. மழைச் சோற்றுச் சடங்கானது மிக எளிமையாக நடத்தப்படினும், நுட்பமாக ஆராய்ந்தால் ஒரு குழுவினர் அல்லது ஒரு சாதிக் குழுவினர் மட்டுமே பங்கெடுப்பது தெரிய வருகிறது. 

ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தெ.அண்டக்குடி, சத்திரக்குடி, இலந்தைக்குளம், பனையடி ஏந்தல் ஆகிய ஊர்களில் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே வாழ்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பல சாதிகள் வாழும் கிராமங்களில் மழைச் சோற்றுச் சடங்கினைச் சேர்ந்து செய்வதில்லை. தனித்தனியாகவே செய்கிறார்கள். இங்கு ஊரின் நன்மை பொதுவாக இருப்பினும், சடங்கு நிலையில் சாதிவாரியாகச் சடங்குகளை நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்க உண்மையாகும். 

மழைச் சோறு எடுக்கும்போது எல்லா வீடுகளிலும் சோறு வாங்குகிறார்கள். கிராமங்களில் சாதாரணமாக ஒரு வீடு இன்னொரு வீட்டில் அன்னம் தண்ணீர் புழங்குவது இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லா வீட்டுச் சோறும் ஒரு ஓலைப் பெட்டியில் வாங்கப்படுகிறது. காலம் காலமாகக் கை நனையாது இருத்தல் அல்லது சோறு சாப்பிட மாட்டேன் என்று கூறுகிற பகை உணர்வில் வந்த தீட்டுப் பார்க்கும் நிலை இங்கு மங்குகிறது. 

ஏனெனில், கிராமங்களில் பகையாளி வீட்டுச் சோற்றை எக்காரணம் கொண்டும் சாப்பிடமாட்டார்கள். மழைச் சோற்றுச் சடங்கில் இயல்பாக ஒன்றாகிறது. தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் தீட்டுப் பார்ப்பது இல்லை. உருண்டையாக உருட்டிக் கொடுக்கும்போது யாரும் மறுப்பதும் இல்லை. பகை உணர்வின் உச்சத்தைப் பாதுகாக்கும் சோறானது, இங்கு தன்னிலைப்படுத்தப்படுகிறது. ஊரின் பொது நன்மைக்காக இது ஒரு சாதிக்குள் மட்டுமே தற்காலிகமாகச் சாத்தியமாகிறது. 

மழைச் சோற்றுச் சடங்கில் பெண்கள் பாடும் பாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பாடல் வழியாக மழையையும் கடவுளையும், மழை இல்லாமல் தங்களுக்கு ஏற்படும் வாழ்வியல் துன்பத்தையும் எடுத்துரைக்கின்றனர். பாடல்களைப் பாடி வரும்போது இடையிடையே அம்ம மாரி! அம்ம மாரி! என்று திரும்பத் திரும்ப அழைப்பதும், குலவையிட்டு ஒரே மாதிரியாக வணங்குவதும் மழையை வருவிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது. 

மழைச் சோற்றுச் சடங்கின் கடைசியில் ஒப்பாரி வைப்பது முக்கியமானது. போலியான ஒப்பாரிதான். ஆனால், பெண்களும் சிறுமிகளும் இயற்கையாக அழுவதுபோல நடிப்பார்கள். இது இறப்பிற்கான ஒப்பாரி இல்லை. மழையில்லாமல் வாழ்க்கை கடினமாக மாறி விட்டதே என்று புலம்பும் ஒப்பாரி. இதிலும் ஊரின் நன்மையே மையமாகிறது. எல்லா நாட்டுப்புறச் சடங்குகளும் ஊரின் பொது நன்மையை முதன்மைப்படுத்தி எதனையும் செய்யத் துணிகிறது. 

மக்களின் விருப்பம், மழை பொழிவதை மையமாகக் கொண்டிருந்தாலும், இன்னலை (வறட்சி) எதிர்கொள்ளும்போது மக்கள் அனைவரும் அந்த ஆண்டில் ஏற்பட்ட பகை உணர்வுகளை மறந்து ஒன்று சேர்கின்றனர் என்பதும், பெரும் குழுவாகச் சேர்ந்து செயல்படுவதன் மூலம் சமூக ஒருங்கிணைவையும் எதிர்பார்ப்புகளையும் எட்ட முடிகிறது என்பதும் திருவிழாவழி வெளிப்படுகிறது என்று கூறுவார் பக்தவத்சல பாரதி. 

மழை பெய்தால் பயிர்கள் விளையும்; உணவுக்குப் பஞ்சம் இருக்காது; ஆநிரைகளுக்குத் தண்ணீரும் உணவும் கிடைக்கும்; மக்களுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு; ஊரை விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதே நிலையில், மழை பெய்யாவிட்டால் மேலே சுட்டிக்காட்டிய அனைத்தும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், கிடைக்க வேண்டியே - மக்கள் எது நடக்கப் போகிறதோ அதை நிகழ்த்திக் காட்டி இயற்கையைப் பணிய வைக்க விரும்புகிறார்கள். பஞ்சம் பிழைக்க ஊரு விட்டு ஊரு போகப் போகிறோம் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். 

சோறு ஒரு ஏக்கமாக மாறுகிறது. இந்தச் சோறு இந்த வருடம் கிடைக்காமல் தவிக்கப் போகிறோம் என்றவாறு சோற்றுப் பெட்டியைத் தலையில் சுமந்து சிறுமிகளோடு ஊரை விட்டுச் செல்வதாக நிகழ்த்திக் காட்டித் திருப்தியடைகிறார்கள். இங்கு விளைச்சல் பொருளாதாரப் பலனாகும். 

இச்சடங்கில் பெண்களே மையம் கொள்கிறார்கள். ஆண்களுக்குச் சிறு பங்களிப்புகூட இல்லை. சோறு வாங்குவது, பாடல் பாடுவது, கும்மியடிப்பது, ஒப்பாரி வைப்பது, பரதேசம் போவது என அனைத்து நிகழ்வுகளிலும் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. சோறு சமைத்தல், வீட்டில் நிலவும் வறுமை, பாடல்களைப் பாடும் தொழில் மரபு, வீடு, புழங்கு வெளி, விவசாய உற்பத்தியை உருவாக்குதல் என, பெண்களின் பங்களிப்பு நிரம்பி வழிவது வரலாறாகும். 

இங்கும் மழைச்சோறு சடங்கை நிகழ்த்தி வளமையை நோக்கி அல்லது மழையை மன்றாடுகிறார்கள் என விவரிக்கும் பா.அரிபாபு,

யானையது யான, அய்யனார் தந்த யான! 

யானைகளைப் பார்த்தா, மேகங்க போல! 

யானை கண்ணுகளப் பார்த்தா, முத்துருண்ட போல! 

யானை காதுகளப் பார்த்தா, சிறு சொளகு போல! 

யான வந்து இறங்கவே, அல்லி அக்கா நாட்டவே!

சேனை வந்து இறங்கவே, 

அண்டக்குடி செல்வம் பொழியுதுன்னு 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

புத்துப் புத்து நாகரே! பூமிக்கும் உடையவரே! அம்ம மாரி!

ஒலக்கம்பு போல நாக்கை நீட்டும் நாகரே! அம்ம மாரி! 

பச்சரிசி போல பல்லிருக்கும் நாகரே! அம்ம மாரி!

சிறு சொளகு போல படமெடுக்கும் நாகரே! அம்ம மாரி! 

தேச ராசாருக! தெய்வேந்திர மன்னருக! 

மம்பட்டிய தோள்ல வச்சு மடை திறக்க வாராக!

மஞ்சள் நீராடி மடையத் தொறந்துவிடு! 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

வட்டிக்கு நெல் வாங்கி வயல வெதச்சு வச்சோம்! அம்ம மாரி! 

வட்டி வளருதையா! வஞ்சாவி ஆகுதையா! அம்ம மாரி!

மானத்து ராசாவே! மேகத்துரை மகனே! 

மேகங்கள ஓடிவந்து ஒரு மழைய எறங்கச் சொல்லுங்க! 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

என்பதான மழைச் சோறு சடங்குப் பாடலையும் பதிவு செய்கிறார். 

வேளாண்மை உழவுத் தொழில் மரபினரால் நிகழ்த்தப்படும் மழைச் சோற்றுச் சடங்கானது, மழைத் தெய்வ வழிபாட்டை உள்ளீடாகக் கொண்டிருப்பதோடு, அத்தகைய மழைத் தெய்வமாக இந்திரனையே - தேவேந்திரனையே அடையாளப்படுத்தும் வழக்காற்று வாய்மொழிப் பாடல்களைச் சடங்கியல் தன்மையோடு புலப்படுத்துகின்றன. இந்திர குலத்தார் எனும் உழவுத் தொழில் மரபினரே இத்தகையச் சடங்குகளை நிகழ்த்தி வருகின்றனர். இதுபோன்ற மழை வளச் சடங்குகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டும் வருகின்றன.

இடி இடிக்க மழை பொழிய இருகரையும் தண்ணி வர 

பாசி போல மின்னல் மின்ன பவளம் போல உதயமாகி 

ஊசி போல மின்னல் மின்ன உதயம் போல கால் இறங்கி 

சட்டம் போல வாய்க்கால் வெட்டி பாசி போல மின்னல் மின்ன 

பொன்னான மண் வெட்டிகள எடுத்து வந்தார் தேவேந்திரரு!

பொன்னால கொழுவுகள எடுத்து வந்தார் தேவேந்திரரு!

பொன்னால கலப்பைகள கொண்டு வந்தார் தேவேந்திரரு!

எனும் கும்மிப் பாட்டு, மழை வேண்டும் சடங்கில் பாடப்படும் மந்திரப் பாடலாகச் சுட்டுகிறார் தே.ஞானசேகரன். 

வடக்கே மழை கருக்கவே! வாய்மடை எல்லாம் சங்கு புரளவே!

தண்டொதுங்கி தடியொதுங்கி வருகுதாங் காவேரி!

தாழை மடலொதுங்கி வருகுதாங் காவேரி!

கெண்டை மீன் வாய்திறந்து வருகுதாங் காவேரி!

அத்துணைக் காவேரியை - நம்ம 

தேவேந்திரரு ராசதண்ட மாலையிலே தடுத்தொதுங்கி வாராங்கோ!

சேரக் குலவையிடுங்க தேவேந்திரக் கன்னியெல்லாம்! 

எனும் ஏர்வலப் பாட்டையும், மழை வேண்டும் மந்திரப் பாடலாகவே தே.ஞானசேகரன் எடுத்தாள்கிறார். 

மேற்காணும் இரு பாடல்களைக் குறித்து தே.ஞானசேகரன் கூறும்போது, இங்கே மழை வேண்டி ஒரு மாய மந்திரப் பாடல் பாடப்படுகின்றது. அதாவது, மழையின் மைந்தனான இந்திரரை அவரின் மக்கள் வேண்டி விரும்பிப் பாட, அவர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மழை பொழியச் செய்கிறார். அதன் பின்னால், மண்வெட்டி தருகிறார். கழனி உழக் கொழு தருகிறார். கலப்பை தருகிறார். விதைக்கப் பெரும்பாலான நெல்களையும் தருகிறார். உழுவதற்கு மாடு கொண்டு வருகின்றார். இதோடல்லாமல், காவேரியின் வெள்ளத்தில் மீன், சங்கு, நத்தை, தவளையெல்லாம் உண்டாக்கி மருத நிலத்தைச் செழிப்பாக்குகிறார் தேவேந்திரர் என்று இப்பாடல்கள் குறிப்பிடுகின்றன என்கிறார். 

இத்தகைய மழைத் தெய்வ வழிபாட்டை - மழை வேண்டுதலை மய்யப்படுத்திய மழைவளச் சடங்கை நிகழ்த்தும் உழவுத் தொழில் மரபினரைக் குறித்துப் பள்ளு நூல்கள் கூறும்போது,

மாரிப் பொருட்டாய் வரங்குறித்து மள்ளரெல்லாம்

சேரிக் குரவையெழத் தெய்வநிலை போற்றினரே…

காவுக்கு இறைவனாம் இந்திரன்

ஏவல் பண் கொண்டெழுந்தான்

என்கிறது முக்கூடல் பள்ளு. 

அதேபோல, மழைத் தெய்வ வழிபாட்டுச் சடங்கைப் பற்றித் திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு கூறும்போது, 

கழை வேண்டி முத்து ஒளித்த கல்லக நல்நாட்டில் எதிர்

குழை வேண்டிப் பாயும் கொழுங்கண் கடைசியர்கள்

இழை வேண்டிப் பூரித்து எழுமுலைநோய் மள்ளர் எல்லாம்

மழை வேண்டித் தெய்வம் வரம் கேட்கச் சென்றாரே

என்கிறது. 

இதேபோன்ற மழைத் தெய்வ வழிபாட்டுச் சடங்கை மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு சுட்டும்போது,

செந்நெல் செழித்தோங்கத் தென்மாரியும் பொழிய 

வண்ணமிகும் மள்ளரெல்லாம் வந்து தெய்வம் செய்தனரே

என்கிறது. அதேபோல, மழை வேண்ட தேவேந்திரன் எனும் இந்திரன் மழை பெய்வித்தான் என்பதை,  

தேவேந்திரன்கை விடைகொண்டருளி ஆகாயந்தன்னில் பரவியே 

சேந்து குரவை நீரில் படிந்து மேய்ந்து கருக்கொண்டேகியே 

எனக் கட்டிமகிபன் பள்ளுவின் பாடல் கூறுகிறது. 

இவ்வாறு, மழைத் தெய்வமாக இந்திரனையே வழிபட்டிருப்பதையும், அத்தகைய இந்திரத் தெய்வ வழிபாட்டை மள்ளர் எனும் உழவுத் தொழில் மரபினரே முன்னெடுத்திருக்கின்றனர் என்பதையும் மேற்காணும் பள்ளுப் பாடல்கள் எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக, மேற்காட்டிய தரவுகள் யாவும் மழைத் தெய்வ வழிபாட்டு நீட்சியையும், மழைத் தெய்வ அடையாளமாக இந்திரனையுமே உள்ளீடாகவும் குறியீடாகவும் விளக்கப்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக, ஆரியத்தின் வழிபாட்டுச் சடங்கியலோடும் மரபோடும் அடையாளத்தோடும் தொடர்பில்லாத வகையில், தமிழரின் தனித்த வழிபாட்டு மரபில் காணலாகும் இந்திரத் தெய்வ வழிபாட்டு மரபின் நீட்சியாகவே - மழைத் தெய்வ வழிபாட்டின் பண்பாட்டு நீட்சியாகவே இருந்து வருவது புலனாகிறது.

மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் நூலில் இருந்து…

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை-76

விலை: ரூ.250.

நூல் வேண்டுவோர்

தொடர்புக்கு: 

9080514506.

வெள்ளி, 20 அக்டோபர், 2023

பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்: பாண்டியா


ஒரு மாணவன் சமூக உதிரியாக மாறுவதற்குக்  கடினமான பாட நூல்களும் காரணம் ஆகும்.
அந்தக் கடினத் தன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்,  எவையெல்லாம் எளிதாகக் கிடைக்குமோ  அவைகளைக் கையில் எடுத்துக் கொள்கிறான்.  குறிப்பாக, பீடி, சிகரெட், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை எளிதாகப் பழக்கப்படுத்திக் கொள்கிறான். அப்பழக்கத்தைச் சினிமாத்துறையும் கற்றுத் தருகிறது.

போதைப் பழக்கத்தோடு சேர்த்து  சாதி வெறியையும் சாதி  வெறியர்களால்  ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள் மாணவர்கள். 

ஆகவே, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்  பாடத்திட்டங்களை  வகுத்துக் கொடுப்பது  அரசின் கடமையாகும் என்று இடித்துரைக்கிறார் தோழர்.


மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறிப்போவதற்கு  முக்கிய காரணியாக விளங்குவது  சாதி. சாதி என்ற பெயரில்  ஒருவன் கல்வியைப் பறிப்பதும்,  அவன் பொருளாதாரத்தை அழிப்பதும்,  அவன் உரிமைகளைத் தடுப்பதும்,    பாலியல் வன்கொடுமை செய்வதும்,  காதல் செய்தால் ஆணவக் கொலை செய்வதுமாகச் சாதிய ரீதியாகத் தொடரும் அவலங்கள் ஏராளம்.  சாதியால் ஒரு மனிதனை இழிவுபடுத்தும்  சாதி வெறியர்களைத்  தன் எழுத்துக்களால்  ஓங்கி உதைத்து இருக்கிறார் தோழர் ஏர் மகாராசன். 


அதேபோல்!  உயர்த்திக்கொண்ட சாதியில் பிறந்த ஒருவர்,  சாதி மறுத்துச் சமத்துவம் பேசுவதையும்  தோழர் ஏர் மகாராசன்  பாராட்டத் தயங்கவில்லை. 

 

அரசியல், சினிமா, கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில்  சாதிகள் அறவே துறந்து, சமத்துவத்தையும் மனித நேயத்தையும்  வளர்த்தெடுக்க நாம் அனைவரையும்  போராட வலியுறுத்துகிறார் தோழர் ஏர் மகராசன்.


அனைத்து வீடுகளிலும் பெற்றோர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. அனைத்துப் பள்ளிகளிலும்  ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆசிரியர்களும் காலத்திற்கு ஏற்ப மாணவர்களின் நலன் கருதி  தங்களை அப்டேட் செய்துகொள்வது அவசியம்.

கற்றுக் கொடுக்கும்  ஆசிரியர்களாக இல்லாமல்,  கற்றுக்கொள்ளும் மாணவராகவும் இருப்பதே சிறப்பு. 


ஒரு மனிதனுக்கு  மனசு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒரு நெடுஞ்சாலையில்  டூவீலரில் பயணம் செய்யக்கூடிய யார் எவர் என்றே தெரியாத ஒருவரை, அவர் என்ன மதம்?  அவர் என்ன சாதி? அவர் எந்த ஊர்? அவர் பெயர் என்ன!?  என்பதையெல்லாம் கேட்டறியாமல், உடுக்கை இழந்தவன் கைபோல   "சைடு ஸ்டாண்ட எடுத்துவிட்டு வண்டி ஓட்டுப்பா" என அறிவுறுத்தும் அந்த மனிதநேயக் குரலும் மனசும் அனைவரிடத்திலும்  இருக்க வேண்டும்; அனைத்துக் காரியங்களுக்காகவும் எதிரொலிக்க வேண்டும்.  

 

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல் அருமையான படைப்பு; வாசிக்க வேண்டிய புத்தகம் ஆகும்.

பாராட்டப்பட வேண்டியவர் தோழர் ஏர் மகாராசன்.


'மாணவர்கள் சமூக

உதிரிகளாகும் பேராபத்து' 

என்ற நூலை எழுதிய தோழர் ஏர் மகாராசன் அவர்களுக்குச்  சிறப்பு நன்றிகளும் வாழ்த்துகளும். ஏனெனில், இந்நூலை   எழுதுவதற்குத் தனி தைரியம் வேண்டும். 


யாரையும் அவர் விட்டு வைக்கவில்லை. இச்சமூகச் சீரழிவுக்கு  நாம் அனைவருமே காரணம் என்கிறார்.  அதைச் சரி செய்வதற்கும்  நாம்தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்கிறார்.  


நன்றியும் வாழ்த்துக்களும் தோழர்.  


கட்டுரையாளர்:

பாண்டியா,

கவிஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்.

பெரியகுளம்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


வியாழன், 12 அக்டோபர், 2023

பள்ளி வகுப்பறையில் இருந்து, பொது சமூகத்திற்கு ஒரு அவசரத் தந்தி: பரத்ராம் முத்தையா.

“ஆசிரியர்களை வெறும் பதிவேற்றம் செய்யும் இயந்திரமாக மாற்றிய போதே ஆசிரியருக்கும் - மாணவருக்குமான உறவுச் சங்கிலி உடையத் துவங்கி விட்டது.” – ஆசிரியரும் கல்விச் செயற்பட்டாளருமான தோழர் உமா மகேஸ்வரி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். 

கற்றல், கற்பித்தல் முறையில் இருந்து கல்வியானது வெறும் மதிப்பெண் எடுக்கும் போட்டியாக மாறிவிட்ட காலத்தில் நின்றுகொண்டு சீரழியும் மாணவர்களை காப்பாற்றும் பொறுப்பை அரசு செய்யாது, சமூகம் செய்யாது, வீடுகள் செய்யாது, ஆனால் வாழ்கையின் சிக்கலான பதின்மப் பருவத்தில் இருக்கும் மாணவர்களை மேற்பார்வை செய்யவும், நெறிமுறைப்படுத்தவுமான பொறுப்பை ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் தலையில் சுமத்திவிட்டு, பிரச்சனை நிகழும்போதெல்லாம் அனைத்து விரல்களும் அவர்களை நோக்கியே நீளுகிறது என்றால் கல்விமுறையில் மட்டுமல்ல, சமூக ஒழுங்கிலும் புற்றுநோயாக ஏதோ ஒன்று பீடித்துப் போய் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு, அதனைச் சரிசெய்யும் மருத்துவத்தை நாம் தொடங்க வேண்டும் என்பதைத் தோழர் ஏர் மகராசனின் "மாணவர்கள் சமுக உதிரிகளாகும் பேராபத்து" நூல் தெளிவுப்படுத்துகிறது.

நூலில் மாணவர்களைக் குறிவைத்துத் தாக்கும் அகச்சூழல் மற்றும் புறச்சூழல்களை வரிசையாகப் பட்டியலிட்டு அதற்கான தீர்வினைத் தனது அனுபவத்தில் இருந்து முடிந்தவரை கொடுத்திருக்கும் விவரிப்பில் ஆசிரியரின் சமூகப் பொறுப்பினைக் காட்டுகிறது. ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பில் பள்ளிக் கல்வியின் சீர்கேடுகள், நாங்குநேரி சாதி ஆணவ வெறித் தாக்குதல், சமூக உதிரிகளாகும் மாணவர்கள் ஆகிய கட்டுரைகள் முக்கோண வடிவில் ஒன்றை ஒன்று எவ்வாறு பிணைக்கிறது என்பதை ஒரு சாமானியனாக உணரமுடிகிறது.

பள்ளிக்கல்விப் பாடமுறையில் மேம்படுத்துதல் தேவையா? என்றால் தேவை தான் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

ஆனால், அந்த மேம்பாட்டைச் செய்யும் பள்ளிக்கல்வி அல்லது பாடத்திட்டக் குழுவில் சமூகம் சார்ந்து சிந்திக்கும் மாணவர்களைப் பள்ளிக்கூடம் நோக்கி நகர்த்தும் சிந்தனைகள், உரையாடல்கள் செய்யும் செயற்பாட்டாளர்கள் இருக்கின்றனரா? என்றால் இருக்கின்றனர். 

இவர்களின் பரிந்துரைகளை அரசு ஏற்கின்றனரா? என்றால், இதற்கான பதிலாக “எங்களால் முடிந்தது இதுதான், அரசை நிர்பந்திக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அரசு, தான் கொண்டிருக்கும் கொள்கைவழி அல்லது தேசியக்கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறே தனது முடிவுகளை எடுக்கிறது” என்கின்றனர் குழுவில் இருந்த, இருக்கும் கல்வியாளர்களும் செயற்பட்டாளர்களும். 

சமூகத்தின் மிக முக்கியமான பிரிவினருக்கான வழிக்காட்டும் கொள்கையைக்கூட சமகால சமூகத்தின் விளைவுகளில் இருந்து தீர்மானிக்கத் தயாராகாத பள்ளிக்கல்வித் துறையைத் தான் நாம் பெற்று இருக்கிறோம்.

ஒன்பதாம் வகுப்புவரை முழுமையான தேர்ச்சியைக் கொடுத்துவிட்டு, அடுத்த மூன்று ஆண்டுகளிலும் பொதுத்தேர்வினைத் தொடர்ச்சியாக வைத்து மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் முறையால் இடைநிற்றல், தேர்வுக்கு வராமை போன்றவைகள் மாணவர்களிடம் அதிகரிக்கிறது. BLUE PRINT முறையை நீக்கியிருப்பது சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்குத் தேர்வுமுறை ஒரு சுமையை உருவாக்கியுள்ளதும், இவர்களையும் உள்ளடக்கி 100 விழுக்காடு தேர்ச்சியடைய வைக்க பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும் ஒரு வகுப்பறையில் நிகழும் அகச்சூழல் சார்ந்த பிரச்சனையால், மாணவர்கள் மிக எளிதாகக் கல்வியை வெறுக்கும் அல்லது பயங்கொள்ள வைக்கும் நிலை தான் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

நவீன யுகத்தில் எதுவெல்லாம் மனிதனின் ஆற்றலை மிச்சப்படுத்தும் வண்ணம் கண்டுபிடிக்கப்பட்டதோ அவையெல்லாம் இளம்தலைமுறைக்கு எதிராக தனது பரிணாமத்தை எடுக்கிறது. அலைபேசி இன்றைய சூழலில் மாணவர்களுக்குக் கேடாய் மாறிவிட்டதை ஆசிரியர் தனது கையறுநிலையாகக் குறிப்பிடுகிறார்.

Whataspp, Facebook, Instagram போன்ற சமுக வலைதளங்கள்தான் மாணவர்கள் சீர்கெடும் ஊற்றாக உள்ளது. சாதிப் பெருமைக்காக ஒரு குழு, பக்கம், REELS போன்றவைகள் பதின்மப் பருவ மாணவர்களிடம் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களிடம் அதிகம் பகிரப்பட்டு சாதிய உணர்வையும், பகைமையும் உண்டாக்கி இளம் தலைமுறையினரிடம் சாதிக் கயிறு, சாதிச் சங்க லோகோ, சாதிச் சங்கத் தலைவர்கள் படங்கள், பொதுத் தலைவர்களைச் சாதித் தலைவராக மாற்றுவது, விளையாட்டு உடையிலும் சாதிக் குறியீடுகள், சாதி சார்ந்த சேர்க்கைகள் அதிகரிக்கக் காரணமாகி உள்ளது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, சாதி ஆணவமாக வயதானவர்கள் இருந்தனர். சமுகத்தின் TOXIC Characterகளான இவர்களிடம் இருந்து இவர்களின் சுற்றத்தாரை விலக்கிவைப்பதும், இவர்களின் பங்களிப்பைச் சிறிது சிறிதாய் ஒதுக்கித்தள்ளும் பணியைச் சமூக அறிவியலாக முன்னெடுத்துச் சென்றது படித்த இளைஞர்கள். 

ஆனால், தற்போது TOXIC Characterகளின் செயலைக் கச்சிதமாகச் செய்வது படித்த, தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களே. “நான் கடினப்பட்டுப் படுச்சுட்டேன், வேலைக்குப் போய்ட்டேன், வசதியாக மாறிவிட்டேன்” என்று இந்தச் சமூகம் தனக்குக் கொடுத்ததைச் சமூகத்திடம் திருப்பித் தராமல், தான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியலை விட்டுவிட்டு கிராமங்களைக் காலிசெய்து நகரத்தில் குடியேறிய நமக்கு முந்தைய தலைமுறை செய்த அலட்சியமே இன்றைய சமூகம் முன்பை விடக் கொடூரமாக, மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், அடுத்தவன் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையாமல், சாதியைத் தூக்கிக்கொண்டு சீர்க்கேட்டின் பாதையில் பயணிக்கிறோம் என்பதை ஆசிரியரின் வரிகளில் இருந்து உணரமுடிகிறது.

உண்மையில் ஒரு பள்ளி ஆசிரியராக, குழந்தைக்குத் தகப்பனாக, சக நண்பனாக, சமூகத்தின் உறுப்பினராக, தோழராகத் தனது கோபத்தையும் இயலாமையையும் மட்டும் சொல்லிவிட்டு நகராமல், மாணவர்களின் சீர்க்கேடான போக்கிற்கு நாம் அனைவரும் தான் காரணம் என்றும், இன்னும் நமக்கான வாய்ப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் நமது பங்களிப்பினைத் தர வேண்டும் என ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நம்பிக்கையாக விடுக்கும் பேரழைப்பாகவே இந்த நூல் உள்ளது.

 "ஏன்னா, எல்லாரும் சமம் தானே டீச்சர்!"

கட்டுரையாளர்:
பரத்ராம் முத்தையா,
வழக்குரைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்,
தமிழ்த்தேச மாணவர் இளைஞர் இயக்கம்,
ஈரோடு.
*



மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

திராவிடம், முன் திராவிடம் : ஐரோப்பியர்களின் விளக்கங்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணானவை; தெளிவற்றவை; கற்பனையானவை. ❍ அறிஞர் ம.சோ.விக்டர்.



கிரேக்கம் - இலத்தீன் - செமிட்டிக் ஆகிய மொழிகளுக்கான முன்மொழி (Proto Language) எதுவெனத் தெரியவில்லையென ஐரோப்பியர் கூறிய நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் நிகழ்கால ஆய்வுகள், அந்த முன்மொழி தமிழே என்பதை, செமிட்டிக் இலக்கியங்கள் வாயிலாகவே நிறுவ இடமளிக்கின்றன. கடந்த காலங்களில் மொழிகளைப் பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட ஐரோப்பியர்கள், தமிழ்மொழியைப் பற்றிய சிந்தனைகள் இல்லாமலிருந்தனர். 

மொழியியல் வரலாற்றின் தொடக்கத்தை அவர்கள் தொடவேயில்லை. ஒரு வரலாற்றின் இடையில் புகுந்த ஐரோப்பியர்களால் தெளிவான முடிவுகள் எடுக்கப்படாமல் போனதற்கு இதுவே காரணமாகும். 

செமிட்டிக் குடும்ப மொழிகளிலும், இந்திய - ஐரோப்பிய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் பொதிந்து கிடப்பதை தமிழரே கூட அறிந்திருக்கவில்லை. மேற்கண்ட மொழிகளிலிருந்து கண்டறியப்பட்ட இலக்கியங்களும், தமிழ்ச் சூழல்களையே கொண்டிருப்பதை ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. 

தமிழ்மொழி பற்றிய தவறான வரலாற்றைத் தந்த ஐரோப்பியர்களின் மொழிக் கொள்கையை நம்பியிருந்த தமிழறிஞர்களுக்கும், தமிழே முதன்மொழி என்ற உண்மை விளங்கவில்லை. தமிழின் தொன்மையையுணர்ந்த சில ஆய்வாளர்கள் கூறிய செய்திகளை, மொழியைப் பற்றி எதுவுமே தெரியாத சில தமிழ்ப் பகைவர்கள், தமிழை முதன்மொழி என்று சொல்வதை ஒரு வழக்காகவே கொண்டிருக்கின்றனர் எனக் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். தமிழரைத் தவிர்த்த பிற மொழிக்காரர் எவரும் தம் மொழியே உலகின் மூத்த மொழி, முதன் மொழியென்று சொல்ல முன்வருவதில்லை. அவ்வாறு சொல்வதற்கான அடிப்படையும், மொழி அடிப்படையும், மொழி அறிவும் அவர்களுக்கு இருப்பதுமில்லை.

இந்நிலையில் இந்திய மொழிகளை ஆய்வு செய்த ஐரோப்பியர், சமற்கிருதமே இந்தியாவின் மூத்த மொழியென்றும், தமிழ் உள்ளிட்ட மொழிகள் அனைத்தும் சமற்கிருதத்தின் கிளை மொழிகளே எனக் கூறி வந்தனர். அவ்வாறு கூறியவர்களும் சமற்கிருத மொழியின் தோற்ற காலம், அதன் வளர்ச்சி பற்றிய வரலாறு எதனையும் தெளிவுபடுத்தவில்லை. 

சமற்கிருத மொழியின் நிலைப்பாடு, சிந்துவெளி நாகரிகம் வெளிப்பட்டபோது தளர்ந்து போயிற்று சமற்கிருத மொழி உருவாவதற்கு முன்பே, இந்தியாவில் தொன்மையான நாகரிக மாந்தர் வாழ்ந்திருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில், தமிழைப் பற்றிய சிந்தனை மேலோங்கியது. இச்சூழலில்தான் இந்தியாவின் வடக்கே சமற்கிருதம், தெற்கே தமிழ் என்ற இரு மொழிக் குடும்பங்கள் இருந்தன என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

வட இந்தியாவில் பேசப்பட்டு வரும் இந்தி, பஞ்சாபி, காஷ்மீர், வங்காளி, உருது போன்றவை சமற்கிருதத்தினின்றும் கிளைத்தவைகளாகக் கூறினர். தென்னிந்திய மொழிகள் பற்றிய கருத்தை வெளிப்படுத்தும்போது, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு போன்ற மொழிகள் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவை என்று கருதினர். வட இந்திய மொழிகளுக்கு சமற்கிருதம் முன்மொழி என்று கூறியவர்களால், தென்னிந்திய மொழிகளுக்கு முன்மொழி எதுவென அவரால் கூற இயலவில்லை அல்லது தெரியவில்லை. 

இச்சூழலில்தான் தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்றும், இதற்கான முன் மொழி திராவிடம் என்றும் கால்டுவெல் கூறினார். திராவிட மொழிகளில் தமிழும் ஒரு மொழியாகக் கருதப்பட்டது. திராவிட மொழிகளில் முதன் மொழியை அறிய இயலாத ஐரோப்பியர், அம்மொழியை முன் திராவிடம் (Proto - Dravidian) என்றனர்.

திராவிடம் என்ற சொல்லே குழப்பான பொருளைத் தருவதாக உள்ளதை அறியாமல், திராவிடம் என்ற ஒரு மொழியிருந்ததாகக் கற்பனை செய்து கொண்டு, அதனை முன் திராவிடம் என்றனர். ஆய்வு செய்து அறியத் தெரிந்திராத மூத்த மொழியை முன்மொழி என்று சொல்லிவிடுவது ஐரோப்பியரின் உத்திகளில் ஒன்றாகும். 

திராவிடம் என்ற மொழியே இல்லாத போது முன் திராவிடம் என்ற மொழி எங்கிருந்து வந்தது? இதுவரை எவரும் இதற்கான விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை இந்த அடிப்படையில் சிந்துவெளியில் வாழ்ந்திருந்தவர்கள் திராவிடர்களே என்று கூறி, அவர்கள் பேசிய மொழியே திராவிடம் என்றும் கூறினர்.

 திராவிடம் என்ற சொல்லே, தென்னிந்தியப் பகுதிகளையே குறிப்பதாகக் கூறும் சமற்கிருத விளக்கங்களுக்கு மாறாக, சிந்துப் பகுதியில் குடியிருந்தவரை எவ்வாறு திராவிடர் என அழைத்தனர். சிந்துவெளி நாகரிகம் அறியப்பட்ட காலத்தில், தென்னிந்தியாவில் மக்கள் வாழ்ந்திருந்தனரா? அப்படி வாழ்ந்திருப்பின் அவர்களுடைய மொழிக்கு என்ன பெயர் இருந்தது? இந்தியா முழுவதுமே ஓரின மக்களே வாழ்ந்திருந்தனர் எனக் கருதினால், அவர்களை திராவிடர் என்று அழைப்பது பொருத்தமற்றதாக உள்ளது என்பது பற்றியெல்லாம் ஐரோப்பியர்கள் சிந்திக்கவில்லை. லெகோவரி போன்றவர்கள், திராவிடர்களின் தாயகம் மெசபத்தோமியாவே என்று கூறினார். மெசபத்தோமியாவில் வாழ்ந்திருந்தவர்களை திராவிடர் என்று எந்த இலக்கியமாவது சுட்டுகிறதா?

திராவிடம், முன் திராவிடம் என்றவாறு ஐரோப்பியர்கள் அளித்த விளக்கங்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணானவை, தெளிவற்றவை, கற்பனையானவை என்பதை, திராவிடம் என்ற சொல்லுக்கு சமற்கிருத மொழி இலக்கியங்கள் தரும் விளக்கங்களே சான்று அளிக்கக் கூடியவை. 

தென்னிந்திய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்ற உண்மையையாவது ஐரோப்பியர் புரிந்திருக்க வேண்டும். திராவிடம், திராவிடர், திராவிட மொழியென மேலை நாட்டார் தந்த விளக்கங்கள், தமிழை முதன்மைப்படுத்திக் கூறப்பட்டவைகளே என்பதையும், தமிழர், தமிழ்மொழி என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியிருந்தால், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ளலாம். 

இக்குழப்பமான நிலையைத் தவிர்க்கும் வகையில்தான் எல்லிஸ் துரைமகனார், தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டார். ஆனால் கால்டுவெல், திராவிட மொழிகள் எனக் குறிப்பிட்டது, தமிழின் வரலாற்றையே திசை திருப்பி விட்டதோடு, பிற்கால ஆய்வாளர்கள் அனைவரும் திராவிடம் என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டனர். பலமுறை சொல்லப்பட்டது உண்மையாகிவிடும் என்பதைப் போல, திராவிடம் என்ற இல்லாத மொழி இருந்ததாகக் காட்டப்பட்டது. 

பஞ்ச திராவிடம் என்ற அமைப்பில் தமிழ் இடம் பெறாத போது, மகாபாரதம் தமிழ்நாட்டைத் திராவிடமாகக் காட்டாத போது, திராவிடம் என்பது இடத்தைக் குறித்ததேயன்றி, மக்களையோ மொழிக் குழுவையோ குறிக்கவில்லை என்று சமற்கிருத மொழியிலேயே காணப்படும் விளக்கங்களை மீறி, திராவிடம் என்ற சொல்லுக்குப் புதிய விளக்கத்தைக் கொடுத்தவர்கள், பிற்காலத்தில் தமிழ்ப் பகைவர்கள் வாயை மெல்லுவதற்குத் தீனி போட்டுவிட்டார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

தமிழைத் தவிர்த்த தென்னிந்திய மொழிகள் கி.மு.1500 ஆண்டுகளுக்குப் பிறகே கிளைத்தன என்பதற்கான சான்றுகள்உள்ளன. கி.மு.2000 ஆண்டுகளில் எழுதப்பட்ட (இதுவும்கூட குறைக்கப்பட்ட கால அளவே) தமிழ் எழுத்துப் பதிவுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இக்கால அளவில்கூட இந்தியாவின் எந்த மொழிக்கான குறிப்புகளும் கிடைக்கவில்லை. 

கி.மு.2000 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் தமிழே பேசப்பட்டது என்ற உண்மையை ஐரோப்பியர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இக்கால அளவில் சமற்கிருதமோ, தென்னிந்தியாவின் பிற மொழிகளோ அறியப்படவில்லை என்பதையும் மொழி ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 

இந்நிலையில், இந்தியாவின் மூத்த மொழி சமற்கிருதம் என்றும், தென்னிந்தியாவின் முன்மொழி திராவிடம் என்றும் எவ்வாறு கூறத்துணிந்தனர். சிந்து வெளியில் பேசப்பட்டது திராவிடமே என்று கூறினால், அங்கு கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசும் மக்கள் இருந்தனரா? அதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வாளர்கள் சிந்திப்பதில்லை.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506


புதன், 11 அக்டோபர், 2023

பரவலாகச் சென்றடைய வேண்டிய நூல்: வெ.மு. பொதியவெற்பன்.


புது வெளிச்சமும் இருட்டடிப்பும் ஒருசேர : ஏர் மகாராசனின் நூலை முன்வைத்து…
 



"தமிழ்நாட்டில் எந்தப் புலனாய்வு ஊடகமும் காட்சி ஊடகங்களும்கூடச் செய்திராத ஆய்வை நண்பர் மகாராசன் வெகு குறுகிய காலக்கட்டத்தில் செய்ததோடு, சாதிய அணுகுமுறைகள், செயல்பாடுகள், வன்முறைகள் தமிழகக் கல்விச் சூழலில் எவ்வெவ்வாறெல்லாம் உள்ளன என்பதை விலாவாரியாக விளக்குகிறார். அவர் சொல்லும் செய்திகள் விவரிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தரத் தக்கனவாக உள்ளன.

இந்த நூல் கல்விப்புலத்தில் பரவலான வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் ஒரு பரந்துபட்ட விவாதங்கள் அரங்கேற்றப்பட வேண்டும். ஆரோக்கியமான கல்விச்சூழலுக்கான முன்னெடுப்பாகத் தான் இந்த நூலைப் பார்க்க முடிகிறது." - சாவித்திரி கண்ணன்.

'வையம் ' மாதிகை, 'அறம் ' இணையத்தில் வெளியான கட்டுரைகள். நாங்குநேரி படுகொலை எத்தனை கொடூரம்; கல்வி நிலையங்களில் ஊடே தலையெடுத்துள்ள சாதி வன்மம், அது புரையோடித் தலைவிரித்தாடும் அலங்கோலங்கள்; பிள்ளைகளைக் கண்டிக்காத பெற்றோர்களின் பொறுப்பற்ற விட்டேற்றித்தனம், தண்டிக்க இயலாத ஆசிரியர்களின் ஆற்றாமை என பல பக்கங்களையும் வாசிக்கையில் மனம் பதறத்தான் செய்கின்றது. 

பூணூலின் வாலான வண்ண வண்ணக் கைக்கயிறுகள், வலைப்பின்னலாகத் தொடரும் வன்கொடுமைகள், ஆசிரியர்களுக்கூடாகவும், பாடத்திட்டத்திலும் ஊடுருவும் நஞ்சூட்டல், அதைத் தடுக்க முறையான சட்ட யாப்பின்மை என, மெய்யாலுமே கல்வி நிறுவன அகச்சூழல் புறச்சூழல் யாவும் இந்நூலின் பேசுபொருளாகி உள்ளன. எனவே இந்நூல் பரவலாகச் சென்றடைய வேண்டிய நூலேயாகும்.

உயர்சாதி என்னாது உயர்த்தப்பட்ட சாதி எனவே கையாள வேண்டும் என்பது சரிதான். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட எனுமாப் போலவே.

பட்டியல் மாற்றக் கோரிக்கையைத் தமது தன்மான வேட்கையாக, தம் மீதான நவீன வடிவில் சுமத்தப்படும் சமூக இழிவாகப் பார்ப்பதாகக் குறிப்பிடுகின்றார். இது ஒரு பகுதி உண்மையே. காட்டாக இத்தகு குரல்கள் தேவேந்திரகுல வேளாளர் என்னும் மள்ளர்கள்; சௌராஷ்ட்ரர்கள் போலும் சாதியின மக்கள் மத்தியில் எழக்கூடியனவாக உள்ளன. இவ்விரு சாதியினர் இடையேயிருந்து தம் பணிவாய்ப்புகளால் மேம்பட்டோர் ஊடேயிருந்துதான் இவ்வாறு குரல் ஒலிக்கக் கேட்கின்றோம்.

சௌராஷ்ட்ர இன மக்களில் பட்டுப்புடைவை வணிகர்களான பெரும் பணக்காரர்களும் உண்டு. ஏழை எளிய நெசவாளிகளே மேலதிகமானோர். அவர்களூடே இருதார மணவாழ்க்கை சகஜமே. மூவர் இணைந்த குடும்பமாய் இல்லத்திலே தறியோடும் நெசவு வாழ்க்கைக் குடும்பப் பொருளாதார நிர்ப்பந்தமாக அம்மக்களிடையே காணக்கிடக்கின்றது.

மதுரையில் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இத்தகு சௌராஷ்ட்ர பணக்காரப் பிரமுகர் ஏற்பாட்டில் அவர்கள் இவ்வாறு குரலெழுப்பி ஊர்வலம் வந்தனர். என் கேள்வி இதுதான். இது எவ்வாறு சௌராஷ்ட்டிர இனத்தாரின் ஒட்டுமொத்தக் குரலாக ஆதல் கூடும் என்பதே. 

ஆண்ட பரம்பரை வாரிசுகளாகப் புதிய தொன்மங்களைப் படைத்து, அதனையே தம் வரலாறென முன்வைக்கலாகின்றனர். எனவே இது ஒருவகையில் 'சங்கதமயமாதற் (மேனிலையாக்கப்) போக்கே எனலாம். நிலைகுடிகள் தவிர்த்த அலைகுடி வாணர் இடையே இத்தகு மனோபாவங்கள் காணக்கிடையா.

இந்நூலின் சில மௌனங்கள் குறித்தும் இதே மூச்சில் பேசியாக வேண்டியுள்ளது. கல்வி நிலையங்களிடையே பேராசிரியர்கள் மத்தியிலும் நிலவும் சாதியாதிக்க மனோபாவங்கள் குறித்த சோ.தர்மன் கருத்துக்களை இந்நூலில் எடுத்தாளும் நூலாசிரியர், மோடி தாடியில் பெரியாரைக் காணவல்ல அவரின் சங்கிச்சாய்வு அரசியல் குறித்துச் சாதிப்பது மௌனமே.

"மோடி அரசின் செயல்பாடுகளைச் சிலாகிக்கும் சோ.தருமன், மாலன் நாராயணன் போன்ற எழுத்தாளர்கள் இன்றைக்கு மாநில, மைய அரசின் வணிக நோக்கினால், ஊழலினால் உயர்கல்வித்துறை எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதை முதலில் எழுத வேண்டும். தமிழக அரசும் இதில் விதி விலக்கு அல்ல."

அண்ணல் அம்பேத்கரை சாதித்தலைவராக முன்னிறுத்தும் போக்கை நூலாசிரியர் கடிந்துரைத்து, அதற்கப்பாலாக ஒட்டுமொத்த சமூக விடுதலைக்குப் பாடாற்றும் தலைவராக இனங்காணக்கூடிய நூலாசிரியரே! அவ்வாறே பிற்படுத்தப்பட்ட இடைநிலைச் சாதியினர்க்கான தலைவராகப் பெரியாரைத் திரித்துரைக்கும் போக்கைக் குறித்தும் ஏன் பேசவில்லை?

இத்தகு மௌனம் யாவும் நூலாசிரியரின் திராவிட இயக்க ஒவ்வாமை வெளிப்பாடுகளே எனலாம்.

இத்தொடர்பில், நேர்மையான ஊதியம் வேண்டாப் பணியை மேற்கொண்ட நீதியரசர் சந்துருவிடம் இத்தொடர்பிலான விசாரணைக் கமிசன் நியமனம் அரசால் நியமிக்கப்பட்டுள்ளதும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்பதற்கு நம்பகமானதே.

கட்டுரையாளர்:
வெ.மு.பொதியவெற்பன்,
ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர்.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


சம காலத்தில் வெளிவந்துள்ள மிக முக்கியமான நூல் : கண்மணி ராசா


தமிழ்நாட்டில் சமூக அக்கறையுள்ள அனைவரையும் உலுக்கிய சம்பவம், நாங்குநேரியில் நடந்த பட்டியலினச் சமூக‌‌ மாணவனின் மீது மாற்று சாதி சக மாணவர்களே நடத்திய வன்கொலைத் தாக்குதல்.

இதற்கு முன் இங்கு சாதீய மோதல்களே இல்லையா என்றால், உண்டு. ஆனால், சிறார்கள் வரை சாதீய வெறி ஊடுருவும் இந்தக் காலம் கொடுங்காலம்.

தம் பால்யத்தின் எந்தக் கணத்தில் இவர்கள் சாதிய வெறியராக மாறுகிறார்கள்....? இதற்கெல்லாம் யார்/எது காரணம்...? நம் பள்ளிகளால்/ஆசிரியர்களால் இவர்களை ஏன் மாற்றமுடிவதில்லை....?

நாங்குநேரிச் சம்பவம் உட்பட பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் அனைத்துத் தாக்குதல்களின் பின்புறமும் உயர்த்திக்கொண்ட அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்ட சாதியினரின் சாதீய மனோபாவம் மட்டுமல்ல, பொருளாதார நலன்களும் அடங்கியுள்ளதை ஏன் நாம் பேசுவதில்லை...?

படிப்பு என்பது தேவையில்லை. தொழிலைக் கற்றுக் கொள்க. பொறியியல் கல்வியெல்லாம் பயனற்றது. எல்லாரும் டாக்டராகத்தான் ஆகனுமா...?கிராமத்தில் ஆடு மாடுகளோடு இயற்கை சூழ வாழ்ந்து லாபம் கொழிக்கச் சம்பாதிக்கலாம்... என்றெல்லாம் விதவிதமான கேள்விகள் நம்மை நோக்கி, நம் குழந்தைகளை நோக்கி எழுவதன் அரசியல் என்ன...?

எனக்கு....அவனுக்கு... இவனுக்கு.... உனக்கு என எல்லோருக்கும் ஒரே மாதிரியான தேர்வுகள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்...?

தேர்வு என்பது மாணவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லவா....? கழித்துக் கட்டி விரட்டி அடிக்கவா...?

தேர்வில் தோல்வி எனப் பள்ளியிலிருந்து ஒதுக்கப்படும் மாணவன், மது/போதை இவற்றோடு சுயசாதிக் கும்பல் போதையும் சேர்ந்து கொள்ள சமூக உதிரியாகப் போவான்...என்பதை நாம் எப்போது கவனிப்போம்...?

சாதீய வெறி மாணவர்/ஆசிரியர்/பேராசிரியர்/தாளாளர்/அதிகாரிகள்...எனக் கல்வித் துறையின் சகல திக்கும் ஊடுருவியுள்ளதை உணர்கிறோமா...?

இத்தகைய கேள்விகளை முன் வைத்து மிக விரிவாக அலசியுள்ளது ஆசிரியர் ஏர் மகாராசன் அவர்கள் எழுதி, ஆதி பதிப்பகம் வெளியிட்டுள்ள "மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து" கட்டுரை நூல். சமகாலத்தில், தேவையான நேரத்தில் வந்துள்ள மிக முக்கியமான ஆய்வு நூல்.

கட்டுரையாளர்:
கவிஞர் கண்மணி ராசா,
எழுத்தாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
இராசபாளையம்.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


சனி, 7 அக்டோபர், 2023

திரைமீளா் என்ற தமிழ்ச்சொல்லின் திரிந்த கொச்சை வடிவமே திராவிடா் என்பதாகும் : ஆய்வறிஞர் ஒரிசா பாலசுப்பிரமணியம்.




நமது நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?

நாம் இந்தியா என்ற பெயரை நமது நாட்டிற்குச் சொல்கிறோம். இந்தப் பெயர் எப்படி வந்தது? எங்கோ இருந்து கிரேக்க இன வெள்ளை நிற மக்கள் நமது மக்களின் கறுப்பு நிறத்தைப் பார்த்து அதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான ‘இண்டி’ என்ற வார்த்தையால் நம்மை அழைத்தனர். அதனால்தான், கறுப்பு நிற மக்கள் வாழும் பகுதியான இந்தப் பகுதி ‘இண்டியா’ என்று குறிக்கப்பட்டது. பிறகுதான் ‘இண்டஸ் வேலி’ என்று சொல்லப்படும் சிந்துப் பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டே இந்தச் சொல் வந்தது என்று கூற ஆரம்பித்தார்கள். 

 உண்மையில், 1922இல்தான் இண்டஸ் வேலி கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னமே கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னமே ‘இண்டிகா’ என்ற சொல் கறுப்பு நிற மக்களைக் குறிக்கும் சொல் இருந்து வந்துள்ளது. கிரேக்கர்கள் அலெக்ஸாண்டருக்கு முன் கடல்வழியாகத்தான் இந்தியாவை வந்தடைந்தார்கள். 

அலெக்ஸாண்டருக்குப் பின்தான் நிலவழிப் பயணம் மேற்கொண்டார்கள். அதன் பிறகுதான் ‘பட்டு வழிப்பாதை’ மூலம் வந்தார்கள். அதனால்தான் சொல்கிறேன், அயோனியர், யவனர் என்று அழைக்கப்பட்ட மக்களாகிய கிரேக்க வெள்ளை நிற மக்கள், இந்தியாவின் கடற்கரையை வந்தடைந்தபோது அங்கு இருந்த கறுப்பு நிற மக்களைப் பார்த்துச் சொன்ன சொல்லில் இருந்துதான் ‘இந்தியா’ என்ற சொல் வந்தது.

சரி, ஏன் அவர்கள் அங்கிருந்து நடு நிலக் கடலாகிய மத்தியத் தரைக் கடலில் இருந்து இங்கு வந்தார்கள்? 

ஏனென்றால், ஏற்கனவே அவர்களோடு நமக்குத் தொடர்பு உண்டு. அங்கு நம் ஆளுமையும் இருந்திருக்கிறது. கி.மு பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னமே ‘பாண்டியா’ என்ற மன்னன் ‘க்ரீட்’ என்ற தீவை ஆண்டிருக்கிறான் என்பதும், அங்கு பேசப்பட்ட மொழி திரமிளை என்பதும், அவன் வம்சம் ‘மீனோவன்’ என்றும் பதிவாகி இருக்கிறது. 

நீங்க பார்த்திங்கன்னா க்ரீக், ரோம், எரித்ரியன் பகுதிகள் மற்றும் சிரியன் பகுதிகளில் தமிழ் வணிகர்களின் ஆளுமை இருந்தது தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. கடல்வழி வணிகத்தில் இவர்கள்தான் முன்னோடிகள். இவர்கள்தான் பட்டுவழிப் பாதையையும், நிலவழிப் பாதையையும் ஒருங்கிணைத்தார்கள். உலகில் மனிதர்கள் கடலை ஒட்டி வாழ்ந்த இடங்களில் எல்லாம் தமிழர்களுடைய பங்களிப்பு இருக்கிறது.

தமிழர்கள் இயற்கையை அணுகிய முறை? 

பொதுவாகச் சொல்லுவாங்க, முதல் புரிதல் வந்து எப்பிடி வந்ததுனா, மனிதனுக்கு விலங்குகளைப் பற்றிய புரிதல் வந்த பிறகுதான் விலங்குகள் மூலமாகத் தாவரங்களையும், இயற்கையையும், தட்பவெப்ப நிலையையும் அவன் அறிஞ்சுக்கிட்டான் என்று பொதுவான ஒரு கோட்பாடு சொல்லுவாங்க. அந்தக் கோட்பாடு மட்டுமல்லாமல் பல கோட்பாடுகளும் நடந்த இந்த இடம், கடலை வெளியாகக் கொண்ட இந்த நிலம். நீங்க வரைபடத்தைப் பார்க்கிறப்ப இந்த நிலம், குறிப்பா தென்னாட்டுப் பகுதியில் இருக்கிற நிலம் முழுக்க முழுக்கக் கடல் சூழ்ந்த நிலம். நடுவுல வந்து மிக அழகாக மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரும், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரும் சூழ்ந்து பேரழகாக இருக்கிற நிலம்.   

இந்த மலைத் தொடர்களுக்கும் கடலுக்கும் இடையில் வாழ்ந்த மக்கள், அவர்களின் புரிதல், அவர்கள் பெரும்பொழுது, சிறுபொழுதை எப்படிப் பார்த்தாங்க? ஒரு நாளை எப்படி ஆறு பகுதிகளாகப் பிரிச்சாங்க? வருடத்தை எப்படி ஆறு பகுதிகளாகப் பிரிச்சாங்க? அதே நேரத்தில் சூரியனுடைய வட செலவு, தென் செலவு எப்படிப் பார்த்தாங்க? பருவ மாற்றத்தை எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்க? அதன் மூலம் வலசைப் பயணம் எப்படிப் போனாங்க? அந்த வலசைப் பயணத்திற்குக் காரணமான நிலத்திலுள்ள யானைகள், காளை மாடுகள், அதே மாதிரி வானத்தில் வலசை போகும் கொக்கு, அன்னம் போன்ற பறவைகளையும், கடலில் உள்ள ஆமைகளின் போக்கையும் எப்படிப் புரிஞ்சுக்கிட்டாங்க? இப்படி பல கோணங்கள் இருக்குது.

குறிப்பாக, நான் சென்ற இடங்களிலெல்லாம் கிடைத்த தமிழ் தொடர்பான தரவுகள், அதனுடைய மேலாண்மை, இந்த மக்களின் திறன் என்னை மேலும் உள்ளார்ந்து போக வைத்தது. நீங்க சொல்லும் தமிழ் என்கிற சொல், அந்த மொழியைக் கொண்டு போனவங்க யார்னு பார்த்தா ‘திரை மீளர்கள்’ என்று சொல்லக்கூடிய கடலோடிகள். கடலோடிகள் என்ற வார்த்தையைவிட உலக நாடுகள் முழுக்க ஒரு பெயர் நல்லா பதிவாயிருக்கிறது.  

‘திரை மீளர்’, ‘திரமிளா’, ‘திரமிரா’ இப்படி நிறையச் சொற்கள் சொல்லலாம். உதாரணமா, இப்ப கிரிட் தீவில் ‘திரமிளை’ என்ற மொழி வழக்கில் இருந்திருக்கு. இலங்கையில் ‘திரமிரா’ என்ற சொல் பதிவாகி இருக்குது. ஒரிசாவில் ‘திரமிளா’ என்ற மன்னன் ஆட்சி நடத்தினதாகக் குறிப்பு இருக்குது. 

இந்த மாதிரி, இந்தச் சொல் - இந்தச் சொல்லுக்கு அடிப்படையான காரணம் இந்த நிலத்தில் பேசப்பட்ட மொழி. இதைக் கொண்டுசென்ற ‘திரை மேல் சென்று மீண்டவர்கள்’ என்று ஆராயும் நிலை ஏற்பட்டது. பொதுவாக, ஆரம்ப காலத்தில் மனிதன் கடல் கடந்து போகப் பயப்பட்டான். காரணம், அதன் பிரமாண்டம். அந்தக் கடல் என்ன தன்மையானது? அதில் என்னென்ன இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அப்படி மனிதர்கள் இருந்த சூழ்நிலையில்கூட, அந்தக் கடலில் மேல் நிறையப் பேர் போய் இருக்காங்க. போனவங்க இறந்தும் போய் இருக்காங்க. கடலைத் தாண்டி வேறு நிலம் சென்று அங்கே வாழ்க்கையைக் கழித்தும் இருக்காங்க. 

இந்த மாதிரியான நிலையில், இங்கிருந்து அந்தக் கடலின் மேல் சென்று மீண்டும் வந்த திரைமீளர்கள் எந்த மாதிரியான பாதிப்பை உலகம் முழுவதும் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கணும்!

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 22,000 தமிழ்ப் பெயர்கள் வழக்கில் இப்பவும் இருக்கு. இதுதான் இந்த மக்களின் திறன். இவர்கள் வெறுமனே கடலோடிகள், மீன் பிடிக்கிறவர்களாக மட்டும் இல்லாமல் ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’, ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்ற வாக்கியங்களுக்கேற்ப வாழ்ந்து இருக்காங்க. 

இவர்கள் சென்ற இடத்தில் எல்லாம் பிரிவினை பார்க்காமல் அந்த இடத்து மக்களோடு கலந்து, அந்த மக்களுக்குத் தங்கள் திறன்களைச் சொல்லிக் கொடுத்து இருக்காங்க! இவர்களைப் பற்றிய தேடலில் மிக மிக அவசியமாக நான் கருதுவது, இந்த மக்கள் யார்? இவர்களின் தனித்தன்மை என்ன? அது எப்படி உலகம் முழுவதும் இப்பவும் பயன்படுகிறது? இவர்களின் திணைக் கோட்பாடு என்ன? என்பதுதான். உங்களுக்கு ஐவகைத் திணைகள் என்று சொன்னாக்கூட புரியாது. ஆனா, திருக்குறளில் ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும்’ என்று வள்ளுவர் எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கார் பாருங்க! இதில் ‘மணிநீர்’ என்பது கடலைக் குறிக்கும். பெரும்பாலும் என்ன பண்றோம்னா, தமிழ் மொழியை இலக்கண இலக்கிய உயர்வைக் கூறி, அதைத் தெய்வ மொழி என்று சொல்லி விட்டுறோம். 

ஆனா, என்னைப் பொறுத்தவரை தமிழ் என்பது வாழ்வியல் மொழியாகப் பார்க்கிறேன். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 120 மொழிகளில் தமிழோட ஆளுமை இருக்கு! இந்தோ - அரபிய மொழிகளில்கூட தமிழோட தாக்கம் இருக்கு. 14 பிற மொழிகளின் கலப்பு தமிழில் இருக்குது! எப்படி 14 மொழிகள் இங்கு வந்தது? இங்க யார் யார் நம்மை ஆட்சி புரிய வந்தாங்களோ, அவங்களோட மொழி தமிழோடு கலந்தது. இந்தி, உருது, பாரசிகம், சமஸ்கிருதம், ஸ்பானிஷ், போர்ச்சுகீசு, பிரெஞ்ச், ஜெர்மன் என்று எல்லா மொழிகளும் கலந்து இருக்கு. அதனால், இப்போ இந்த மக்கள் பேசக்கூடிய மொழிவழக்கை வைத்துத் தமிழை எடைபோடக் கூடாது. 

தமிழுக்கு மிகப் பெரிய தன்மை இருக்குது. யோசிச்சுப் பாருங்க, ஒரு மொழியில் எப்படி 14 மொழிகள் கலக்க முடியும்? உலகம் முழுக்க தமிழின் தாக்கம் இருந்து, தமிழர்களின் இந்த மண்ணின் பெருமை அறிந்து வெவ்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இங்கே வந்து இருக்கலாம் இல்லியா! அது மட்டும் இல்ல! தமிழ்நாட்டின் தொன்மையை இப்போ குறித்துள்ளபடி குறிப்பிட்டு, ஒரு எல்லைக்குள் கூற முடியாது.

 நாம் வாழும் இந்தப் பகுதி பற்றிக் கூற வேண்டுமென்றால், 1802இல்தான் கிழக்கிந்தியக் கம்பெனி இந்த நிலத்தை ‘மதராஸ் மாகாணம்’ என்று பெயரிடுறாங்க! அப்போ இதன் எல்லை கிழக்கில் கர்நாடகாவிலிருந்து ஒரிசா வரை பரந்து இருக்குது. அதன் பிறகு 1956 நவம்பரில் ‘சென்னை மாநிலம்’ என்று மாறுது. பரப்பும் சுருங்குது. அது பிறகு 1969இல் மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு உயிரிழப்புகள் நடந்த பிறகு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாறுது. சரி, ஏன் தமிழ்நாடுன்னு பெயர் மாத்தினாங்க? தமிழ் மக்கள் வாழும் இடம் தமிழ்நாடு என்று இலக்கியங்களில் பதிவாகி இருக்குது. அந்த அடிப்படையில்தான் பெயர் மாற்றம் ஆனது. 

சரி, இந்த மக்களின் பின்புலம் என்ன? இவங்க எப்படி உலகை வென்றாங்க? நடந்தே சென்றார்களா? 

இல்லியே! கடல் வழியாப் போனாங்க. உலகம் முழுக்க இவர்களின் பதிவுகள் இருக்குதே! அது ஏன் இப்போ தெரியவில்லை! அதற்கான முக்கியக் காரணம் நமக்கு நமக்கான புவியியல் புரிதல் இல்லை. நமக்கு நம் நில அமைப்பைப் பற்றித் தெளிவான அறிதல் இல்லை. 

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நில அமைப்பைப் பற்றிப் பேசும்போது கடல் எங்கு இருந்தது? உள்ளே இருந்ததா? வெளியே இருந்ததா? நிலப் பகுதி எங்க இருந்துது? அதை ஆராய்ந்து இருக்கோமா? 

நாம பூம்புகார் கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். மாமல்லபுரத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். திருச்செந்தூரின் ஒரு பக்கம் கடலில் மூழ்கியது பற்றிப் பேசுறோம். அதே சமயத்தில, கன்னியாகுமரி கடலில் நிலப் பகுதி கடலில் மூழ்கியிருக்கிறது பற்றிப் பல வகையாகப் பேசுறோம்.

குறிப்பா, கன்னியாகுமரியிலிருந்து மடகாஸ்கர் பகுதி வரை கடலில் மூழ்கியிருக்கும் பகுதியை ‘லெமூரியா கண்டம்’ என்றும், தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் ‘குமரிக் கண்டம்’ என்றும் சொல்றோம். அதையே ‘கடல் கொண்ட தென்னாடு’ என்றும் சொல்றோம். 

இவ்வளவு ஆளுமை நிரம்பிய இந்த இடத்தின் சிறப்பு என்ன? உலக மக்களே பயணம் செய்யப் பயந்த கடலில் பயணம் செய்து, கிழக்கையும் மேற்கையும் இணைத்த இந்த மக்களின் திறன் என்ன? கடலோடிகளின் திறன் என்ன? இவங்க கடல் வழியா என்னென்ன கொண்டு போனாங்க? என்னென்ன கொண்டு வந்தாங்க? இவங்க எப்படி உலக மக்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தாங்க என்பதுதான் நமது தேடல். 

சென்னையின் பழைய பெயர் திரையர் நாடு. இளந்திரையன் என்ற அரசனே இங்கு மன்னனாக இருந்துள்ளார். திரையர்கள் கடலில் சென்று மீண்டு வந்தால் அவர்களைத் ‘திரைமீளர்கள்’ என்று சொல்வார்கள். இந்தச் சொல் உலகிலேயே தமிழர்களுக்கு மட்டும்தான் உள்ளது. 

‘திரைமீளர்’ என்ற சொல்லை உச்சரிக்கத் தெரியாத பிற இனத்தவா்களால் திரமில, திரவிட, திராவிடா் என்ற சொல்லாகத் திரிந்து போனது. இவ்வாறு, திராவிடா் என்பது இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல என்பதும், இயல்பான பொருளை உணா்த்தும் நேரடியான சொல் அல்ல என்பதும் தெளிவாகிறது.

எனவே, கடலுக்குச் சென்று மீண்டவா்களைக் குறிக்கும் 'திரைமீளா்' என்ற தமிழ்ச் சொல்லின் திரிந்த கொச்சை வடிவமே ‘திராவிடா்’ என்பதாகும்.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506