சனி, 28 ஆகஸ்ட், 2021

பாடத்திட்டக் குழுக்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையும் - மகாராசன்

ஒரு படைப்பை, கல்வி நிறுவனங்களில் பாடமாக வைப்பதற்கும் நீக்குவதற்கும் பாடத்திட்டக் குழுவுக்கும் வழிகாட்டல் குழுவுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது எனில், அந்தக் குழுவின் அதிகாரத்தோடு சாதியமும் துணை அதிகாரமாக மறைவில் இயங்கக்கூடியது. 

பாடத்திட்டம் வைப்பதற்கும் நீக்குவதற்கும் பல்வேறு அரசியல் சமூகக் காரணங்கள் இருப்பதைப்போல, சாதிய மதவாதக் காரணங்களும் - சாதிய மதவாதக் கண்ணோட்டங்களும் மறைவில் இருக்கவே செய்கின்றன. 

பாடத்திட்டக் குழுவிலும், வழிகாட்டுக் குழுவிலும் இடம் பெற்றிருப்பவர்கள் யார் யார்? அந்தக் குழுக்களில் எல்லாப் பட்டியல்களிலிருந்தும் சமூகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? வழங்கப்படவில்லை; வழங்கப்படுவதுமில்லை. 

பாடத்திட்டக் குழுவில் அல்லது வழிகாட்டுக் குழுவில் இடம்பெறும் வல்லுநர்களைச் சமூகப் பிரிவு வாரியாகப் பங்களிப்பு செய்வதற்குச் சட்டக் குறிப்புகள் திட்டவட்டமாகச் சொல்லவில்லை என்பதால், அந்தக் குழுவில் மேட்டிமை / உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆக்கிரமிப்புதான் நிகழும்; அப்படித்தான் நிகழ்ந்தும் வருகிறது. 

பெரும்பாலான கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்கள் மற்றும் வழிகாட்டும் குழுக்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதில்லை. 

இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டக் குழுவில் அல்லது வழிகாட்டுக் குழுவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? இருப்பதில்லை. 

அந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ள வல்லுநர்களின் பட்டியலை ஆராய்ந்தால், அதில் எஸ்.சி தரப்பினர் எத்தனை பேர்? பி.சி தரப்பு எத்தனை பேர்? எம்.பி.சி தரப்பு எத்தனை பேர்? மதச்சிறுபான்மையினர் எத்தனை பேர்? பெண்கள் எத்தனை பேர்? என்பது தெரியவரும். 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது, எஸ்.சி/எஸ்.டி தரப்புக்கு மட்டுமல்ல; எல்லாத் தரப்பினரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருவதே சமூகநீதி. 

உள் ஆளாக இருந்தாலும், புறவெளி ஆளாக இருந்தாலும் வகுப்புவாரி சமூகநீதியைப் பேசுவதில் தவறேதும் இல்லை. 

வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்புக் குரல் கொடுப்பதுதான் சமூகநீதியின் குரலாகும்; அது குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான குரலாகாது. 

சமூக அடுக்கு நிலையில் பின்தங்கியவர்களின் படைப்பு மட்டுமல்ல; அவர்களைப் பாடத்திட்டக் குழுக்களிலும் பிரதிநிதித்துவ அடிப்படையில் வல்லுநர்களாக இடம்பெறச் செய்திடக் குரல் கொடுக்க வேண்டும். அதுவே நேர்மையான சமூகநீதிக் குரலாகும். 

முனைவர் ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

28.08.2021.


சனி, 21 ஆகஸ்ட், 2021

தமிழ்ப் பெரியார் வ.உ.சி: தமிழ்த்தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியல் வடிவம் :- கதிர்நம்பியின் சிதம்பர வேங்கை நூலுக்கான அணிந்துரை - மகாராசன்


பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்த உலகம் இன்னும் வாழ்கிறது எனில், தனக்கென வாழாமலும், தன் வாழ்வுக்கென முயலாமலும், பிறருக்காகவும் பிறரது வாழ்வுக்காகவும் தமது வாழ்வைக் கொடையளித்து ஈகம் செய்த மிகச்சில நல்ல மனிதர்கள்தான் காரணம் என்பதைப் புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. 

உண்டால் அம்ம, இவ்வுலகம்; 
இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர்; 
பிறர் அஞ்சுவது அஞ்சிப் 
புகழ்எனின், உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினும், கொள்ளலர், அயர்விலர்; 
அன்னமாட்சி அனையராகித் 
தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே என்கிறார் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி. 

இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும், அதனை, இனிது என்றென எண்ணிக்கொண்டு தான்மட்டும் உண்ணாதவர்களும்; உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளாதவர்களும்; பொதுத்தொண்டு செய்வதற்குப் பிறர் அஞ்சி ஒதுங்குவதுபோல ஒதுங்காமல், நற்பணிகளைச் செய்யும்போது தயங்காதவர்களும்; பொதுத் தொண்டால் புகழ் வரும் எனில், அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுத்து, பழி வருமெனில் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மறுப்பவர்களும்; அயராமல் உழைத்துக் கொண்டிருப்பவர்களும் வாழ்ந்ததாலும் வாழ்வதாலும்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

தமக்குக் கிடைத்த வாழ்வை, தமிழ்ச் சமூகத்தின் இயங்குதலுக்கு ஒப்பளித்த  வ.உ.சிதம்பரனார் அவர்களின் ஈகத்தாலும்தான் தமிழ்ச் சமூகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது எனச் சொல்வதில் பிழையேதும் இல்லை. ஆம், தமிழ்ச் சமூகத்திற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தொண்டாற்றிய தமிழ்ப் பெரியார் வ.உ.சி ஆவார். 

வாழும் காலத்தில் துரோகமும் தண்டனையும் வறுமையும் தம்மைச் சூழ்ந்து துரத்தித் துரத்திப் பின்தொடர்ந்து வந்தாலும், அறிவையும் ஆளுமையையும் தன்மானத்தையும் இழந்திடாத பெருந்தமிழ் அறிஞராகத் திகழ்ந்தவர் வ.உ.சிதம்பரனார். 

சாதியப் பெருமிதம் பேசும் பலரும், சாதிய மேட்டிமையின் அடையாளமாகத்தான் வ.உ.சிதம்பரனாரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

உண்மையில், மேட்டிமைச் சாதியத்தின் அடையாளமாக வ.உ.சிதம்பரனார் ஒருபோதும் இருந்ததில்லை; இருந்ததாகவும் சான்றுகள் இல்லை. சுயசாதியைக் கடந்தும்; சுயசாதியின் எதிர்ப்பைச் சுமந்தவராகவும்தான் இருந்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். அதனால்தான், அவரது சாதியினர் மட்டுமல்லாமல், எல்லாச் சாதியினராலும் மதிக்கப்பட்டிருக்கிறார். 

'மேம்படு  பள்ளனை ஏதமில்லாமலே எண்ணிலா வழக்கில் அமிழ்த்தினர் போலிஸார்; அனைத்தினும் திருப்பினேன்' என்றொரு குறிப்பைத் தமது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். 

1900 காலகட்டத்தில்  ஒரு ஏழை விவசாயியைக்  காரணம் ஏதுமின்றி சம்பந்தமில்லாமல் பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாக்கி, இது சம்பந்தமாக நீதிமன்ற  வாய்தா என்ற பேரில் மன உளைச்சலுக்கு உட்படுத்திப் பல தடவை அலைக்கழிக்க வைத்திருக்கின்றனர். 

பல காலமாக நீதிமன்றத்துக்கு அலைவதுடன், தாங்க முடியாத மன உளைச்சலுக்கும் ஆட்பட்டிருந்த அந்த விவசாயி, ஒரு நாள்  உலகம்மன் கோயில் அருகே மயக்கமடைந்து சரிந்து விழுந்திருக்கிறார். மிகவும் விசனமடைந்து துக்கித்த நிலையில் மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்த சமயத்தில், தற்செயலாக உதவ முன் வந்திருக்கிறார் வ.உ.சிதம்பரனார். மயக்கத்திலிருந்து தெளிந்த அந்த விவசாயி, தனது மனக் குமுறலையும்  தனக்கு நேர்ந்த பிரச்னைகளையும் விலாவாரியாக வ.உ.சிதம்பரனாரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். 

நொந்து போன அவரது மனதிற்கு நல்ல வார்த்தைகள் கூறி ஆசுவாசப்படுத்திவிட்டு, அவரது மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட நீதிமன்ற வழக்கு விவரங்களைக் கேட்டுக்கொண்ட வ.உ.சிதம்பரனார், இனி மேல் தாங்கள் நீதிமன்றப் படி ஏற வேண்டியது வராது; நல்ல செய்தி வீடு தேடி வரும். கவலைப்படாமல் வீடு போய்ச் சேருங்கள்  என்று கூறிவிட்டுப் போயிருக்கிறார்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழை விவசாயியின் வழக்கு விவகாரத்தில் நீதிமன்றத்தில் நன்றாக வாதாடியதன் விளைவாக  நீதி கிடைத்திருக்கிறது. அந்தக் செய்தி ஏழை விவசாயி வீட்டிற்கு  வந்து சேர்ந்ததும், அவரால் நம்ப முடிய வில்லை. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் திக்கு முக்காடியிருக்கிறார். 

அந்த சமயத்தில், அந்த விவசாயி தனது  குடும்பப் பரம்பரை வாரிசுகளிடம் பின் வருமாறு கூறியிருக்கிறார். அந்த உலகம்மன் தெய்வம்தான் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவுவதற்காகவே உலகநாதப் பிள்ளையின் வாரிசான அவரை அனுப்பி வைத்துள்ளார். அவர் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ஆகையால், இனி நமது கடைசி வம்சாவளி வரை ஆண்குழந்தை பிறந்தால் உலக நாதன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் உலகம்மை என்றும் பெயர் வையுங்கள் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம் எனும் வாய்மொழித் தரவை, எழுத்தாளர் சோ.தர்மன் பகிர்ந்ததாக ஆய்வாளர் இரெங்கையா முருகன் கூறுவார்.

அதேபோல, சாதிச் செருக்கு மிகுந்த அக்காலத்தில் இரண்டு கண்களை இழந்த ராமையா தேசிகன் என்ற தேவேந்திர குல வேளாளர் வகுப்பைச் சார்ந்தவரை தனது வீட்டில் வைத்துப் பாதுகாத்து உணவளித்து வந்த நிகழ்வையும் ஆய்வாளர் இரெங்கையா முருகன் பதிவு செய்திருப்பார்.   தனது தெருவாசிகளுக்கும்  தன் சாதி சார்ந்த சமூகத்தாருக்கும்  தெரியாமல் இராமையா தேசிகரைப் பாதுகாத்து வந்த இந்தச் செய்தியானது தெரியவர, அவரது சமூகத்தாரிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. வ.உ.சியை சாதி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது. 

'சிவப் பொருள் உணர்ந்த தேசிகன் ஒருவனென் தவப் பயனால் இலம் தங்கப் பெற்றேன்.

ஊனக் கண்ணினை ஒழித்தவன் நின்றதால் தானக் குறையினை தவிர்த்திட ஊட்டினள்.

குலத்தில் அன்னோன் குறைந்தவன் என்றென் தலத்தினில் உள்ளோர் சாற்றினர் குற்றம்.

கேட்டதும் அவ்வுரை கிழவோன் தன்னை ஓட்டிடக் கருதி யான் உரமில்லாமையால் ‘அவளிடத்’துரைத்திட அடுக்களை சென்றேன்.

‘எல்லாம் உணர்ந்த என்னுயிர் நாத!எல்லாம் கடவுளா யிருக்க வேண்டும் உருவம் முதலிய ஒன்றினும் பேதம் மருவுதலிலாமை மலை போல் கண்டும், கற்பனை யாகக் காணும் குலத்தின் சொற்பிழை கொளலெனச் சொல்லிய தூய! துறந்தவர் தமையும் தொடருமோ குலம் இவண் இறந்த அம் மொழியினை ஏற்றிடா தொழிப்போம் ஒன்றிடா தமர்த்தி ஊழியம் புரிந்திடின் பிழையெனார் உலக பேதமை உணர்ந்தோர் என, வ.உ.சி.யின் சுயசரிதை இதைப் பதிவு செய்திருக்கிறது.  

பார்வை இழந்த அன்னாருக்கு இதுவரை தட்டில்தான் சாப்பாடு  அருகில் வைத்து வந்தேன். இனி மேல் நானே  கண்களை இழந்த அவருக்குச் சாப்பாட்டை அவரது வாயில்  ஊட்டி விடுகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல், ஊட்டியும் விட்டிருக்கிறார் வ.உ.சி.யின்  மனைவி. இது குறித்து வ.உ.சி.யிடம் முறையிடப் பயந்திருக்கிறார்கள் அவரைச் சார்ந்த சமூகத்தார்கள். 

அதேபோல, வள்ளுவ வகுப்பினரைச் சார்ந்த சுவாமி சகஜானந்தரைத் தனது வீட்டில் ஒரு அங்கத்தினராகவே போற்றிப் பாதுகாத்திருக்கிறார் வ.உ.சி. தன்னுடைய அலுவல் பணிகளுக்கிடையே சகஜானந்தரையும் உடன் அழைத்துச் செல்வாராம். அச்சமயம் வ.உ.சியுடன் பணியாற்றுபவர்கள் வ.உ.சி.க்குப் பயந்து, அவர்  இல்லாத நேரத்தில் சகஜானந்தரிடம் சாதி குறித்து விசாரிப்பார்களாம். வ.உ.சி.யின் அறிவுறுத்தலின்படியே நானோ துறவி; துறவிக்கு ஏது சாதி என்று கூறியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. 

இவ்வாறாக, தனிமனித வாழ்விலும் பொதுவாழ்விலும் சாதி பேதங்களைக் கடந்தவராகவும், சுயசாதி எதிர்ப்பைச் சுமந்தவராகவும்தான் வ.உ.சிதம்பரனார் இருந்திருக்கிறார். அதெல்லாவற்றையும்விட, தமிழ்த்தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியலின் முன்னத்தி ஏராகவும் வ.உ.சிதம்பரனார் முன்நின்றிருக்கிறார். 

ஆங்கிலேய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வ.உ.சிதம்பரனாரின் இந்திய விடுதலைப் போராட்டப் பங்களிப்பானது, புறநிலையில் இந்திய விடுதலையையும், அகநிலையில் தமிழ்த்தேசக் கட்டுமானத்திற்கான கருத்தியல்களையுமே உள்ளீடாகக் கொண்டிருந்திருக்கிறது. அதாவது, வ.உ.சிதம்பரனாரின் போராட்ட வாழ்வும், செயல்பாடுகளும், சிந்தனைகளும், கனவுகள், வேட்கை என அனைத்துமே தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் நோக்கிலும் பாங்கிலும் அமைந்திருக்கக் கூடியவை. 

வ.உ.சிதம்பரனாரின் கடந்த காலத்திய வாழ்வைப் பேசுவதும் எழுதுவதும் அவருக்கு மதிப்பளிப்பன என்றாலும், அவரது அகநிலையில் உறைந்து கிடந்த தமிழ் அடையாளச் சிந்தனை மரபை நிகழ்காலத் தமிழ்ச் சமூக இயங்குதலுக்குப் பொருத்திக் காண்பதுதான் வ.உ.சிதம்பரனாருக்கு இன்னும் கூடுதலாக மதிப்பளிக்கும். 

தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல் முன்னோடிகளுள் வ.உ.சிதம்பரனாரும் ஒருவர். தமிழ்த்தேசிய அரசியலை, மரபும் நவீனமும் கலந்த தற்சார்பு அரசியலாக வடிவமைக்க உதவும் கருத்தியல்களை வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைகள் உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன. 

வ.உ.சிதம்பரனாரின் செயல்பாடுகளும் எழுத்துகளும் பேச்சுகளுமான சிந்தனைப் புலப்பாடுகளில் காணலாகும் தமிழ்த்தேசிய அரசியலுக்கான கருத்தியல் உள்ளீடுகளை, பேசுபொருளாக்கி முன்னெடுக்க வேண்டிய தேவை நிறையவே இருக்கின்றது. அந்தத் தேவையை உணர்ந்து உருவாக்கி இருக்கும் நூல்தான், பொறியாளர் கதிர் நம்பி எழுதியிருக்கும் 'சிதம்பர வேங்கை' எனும் இந்நூல். 

வ.உ.சிதம்பரனார் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசவில்லை. ஆனால், அவரது சிந்தனைப் புலங்கள் யாவும் தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல்களே உள்ளடங்கி இருப்பதை இந்நூல் தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கிறது. 

மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு, வேளாண்மை உற்பத்தி, இதர உற்பத்திகள், வணிகம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட யாவற்றிலும் தற்சார்புப் பொருளியல் கண்ணோட்டத்தையும் அதற்கான கட்டமைப்பையும் பெருங்கனவோடு நிகழ்த்திக் காட்டிய வ.உ.சிதம்பரனாரை, தமிழ்த் தேசிய அரசியலுக்கான அடையாளமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் பெருவேட்கையாய் இருக்கின்றது. 

வ.உ.சிதம்பரனார் வேட்கை கொண்டிருந்த ஒரு தேசிய இனத்திற்கான தற்சார்புப் பொருளியல் கட்டுமானத்தை, தமிழீழத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆவார். அதனால்தான், வ.உ.சி குறித்துத் தேவநேயப் பாவாணர் பாடிய பாடல் வரியிலிருந்து 'சிதம்பர வேங்கை' எனும் சொல்லாடலை நூல் தலைப்பாக்கி உள்ளார் நூலாசிரியர். 

புலிக்கு வேங்கை எனும் பெயரும் உண்டு. வ.உ.சிதம்பரனாரின் தற்சார்புப் பொருளியல் கட்டமைப்பை - அதன் கருத்தியலைத் தமிழீழத்தில் வடிவம் கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகள் ஆவர். தமிழீழத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்சார்புப் பொருளியல் கட்டமைப்புக்கான  நகர்வு, தமிழ் நாட்டிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில்தான் சிதம்பர வேங்கை நூலாக வெளிவருகின்றது. 

சிதம்பரம் பிள்ளை, மேன்மை தாங்கிய மன்னர் பிரானது பிரஜைகளில், இரு வர்க்கத்தாரிடையே பகைமையையும் வெறுப்பையும் ஊட்டுபவர். அவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. அவருடைய எலும்புகள் கூட, சாவிற்குப் பின் ராஜ துவேஷத்தை ஊட்டும் என்று தீர்ப்பினை எழுதியது ஆங்கிலேய வல்லாதிக்கம். 

எம் சிதம்பர வேங்கையோ, தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல் மூலவர்களுள் ஒருவர்; தமிழ்த்தேசியத் தற்சார்பைச் சிதைக்கும் உலகமயச் சுரண்டலுக்கு எதிரான கருத்தியல் ஆயுதம் என்பதைத் தமிழ்கூறும் நல் உலகத்திற்கு அடையாளப்படுத்துகிறார் பொறியாளர் கதிர்நம்பி. அவ்வகையில், சாதியவாதிகளின் கண்ணோட்டத்திலிருந்து வ.உ.சிதம்பரனாரை மீட்டெடுத்து, தமிழ்த் தேசிய அரசியலுக்கான தற்சார்புக் கருத்தியல் முன்னோடியாக முன்னிறுத்தும் பெருங்கடமையைச் செய்திருக்கும் பொறியாளர் கதிர்நம்பி  அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறது. 

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் இந்நூல், அன்னாருக்குப் புகழ் மாலை சூட்டுவதோடு, அன்னாரின் கருத்தியலைப் பரவலாக்கத் துணை புரியும் நூலாயுதமாகவும் திகழ்கிறது. 

தமிழ்த்தேசிய அரசியல் கண்ணோட்டத்திலிருந்து வ.உ.சிதம்பரனாரை அணுகுவதற்கு உதவும் மிகச்சிறந்த வழிகாட்டியாக, பொறியாளர் கதிர்நம்பி அவர்களின் இந்த நூல் பெருந்துணை புரியும். 

அறிஞர் தொ.பரமசிவன் ஆய்வு வட்டம் சார்பாக தமிழ்த்தேசிய அரசியலுக்கான அறிவுசார் உரையாடல்களைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிற பொறியாளர் கதிர்நம்பி அவர்கள், இதுபோன்ற நூல்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும்; எழுதுவார் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. 

வ.உ.சிதம்பரனாரின் மீது பெருமதிப்பையும் பேரன்பையும் எமக்குள் பாவியவர்கள் ஆய்வாளர்கள் குருசாமி மயில்வாகனன், இரெங்கையா முருகன் ஆகியோர்தான். அந்த வரிசையில், பொறியாளர் கதிர்நம்பி அவர்களும் வ.உ.சிதம்பரனாரைக் குறித்து இந்நூல் வாயிலாக எமக்குள் நிறையப் பாவியிருக்கிறார். 

தமிழரின் அறிவு மரபை வளப்படுத்திக் கொண்டிருக்கும் பொறியாளர் கதிர் நம்பி அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துகள். உள்ளன்போடு அணிந்துரை வழங்க வாய்ப்பளித்தமைக்கு அன்பு கலந்த நன்றி. யாப்பு வெளியீடாக இந்நூலைப் பதிப்பித்திருக்கும் தோழர் செந்தில் வரதவேல் அவர்களுக்கும் தோழமை நன்றி.

சிதம்பர வேங்கை சீறிப் பாயட்டும். 

தோழமையுடன் 

முனைவர் ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

21.08.2021.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீர்முலைத் தாய்ச்சிகள்: மகாராசன்

மணல் உடுத்திய பாதைகள்          வெறும் ஆறுகள் மட்டுமல்ல; கருந்தோல் மேனிகளில்உழைப்பு புடைத்துக் கிளைத்திருக்கும்          அரத்த நாளங்களைப் போல,  நிலத்தாள் மேனிகளைப் பசப்பாக்கும்நீர் நாளங்கள்.     

கடைமடை நிலத்தாளின்                  மானம் போர்த்திய                                  நீர்ச் சேலைத் துணிகள்.             

மழையாள் வகுந்தெடுத்த      உச்சந்தலை நீர்க்கோடுகள்.      

பசுந்தாள் வேர் நாவுகளை நனைக்கும்உமிழ் நீர்ச் சுரப்பிகள். 

தொடை விரித்து ஈனும்                தாயவள் போல்,                                  உழவும் குடியும்                                நெல்லும் சொல்லும் ஈன்ற      நீர்முலைத் தாய்ச்சிகள்.

ஏர் மகாராசன்.


நன்றி:

ஓவியம்: இரவி பேலட்