வெள்ளி, 31 டிசம்பர், 2021

வேளாண் மரபில் பவுத்த அடையாளம் : மகாராசன்

இந்திர அடையாளத்தைப் பவுத்த சமயத்தோடு அடையாளப்படுத்துகிறார் அயோத்திதாசர். அதாவது, மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறிகளை அவித்து, காமனை வென்றார்கள் என்னும் பெண்ணிச்சையை ஒழித்தவர்களை ஐந்திரர் என்றும், இந்திரர் என்றும் அழைக்கப் பெற்றார்கள். மக்களுள் ஆதியாய் இந்திரியங்களை வென்றவரும், ஐந்தவித்த வல்லபத்தால் ஆதி இந்திரர் என்னும் பெயர் பெற்று, அவர் ஞானவருள் பெற்ற தேவர்களால் வானவர் கோமனாகக் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம் எனக்கூறும் அயோத்திதாசர், இந்திரரைப் புத்தராக அடையாளப்படுத்துகிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சூளாமணி, வீரசோழியம், பிங்கல நிகண்டு போன்றவற்றிலிருந்தும் இதற்குச்  சான்றுகள் காட்டுகிறார். 

மேலும், இந்திரம் என்னும் மொழி ஐந்திரம் என்னும் மொழியின் திரிபாம். அதாவது, மகத நாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்திச் சக்கிரவர்த்தியவர்கள் கல்லாலடியில் வீற்று, ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரர் என்று, ஐ - இ ஆகத் திரிந்து இந்திரர் என வழங்கி, அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திர வியாரமென்றும், அவரது உற்சாகம் கொண்டாடும் காலத்திற்கு இந்திர விழா நாள், இந்திர விழாக் கோல் என்றும், இந்திர விழாக் கொண்டாடும் காலங்களில் எல்லாம் மழை பெய்வதின் அனுபவம் கண்டு, மழைக்குமுன் காட்சியாகும் வான வில்லிற்கு இந்திரத் தனுசு என்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசம் செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தார்கள்… எனத் தொடங்கும் இந்திர தேச சரித்திரத்தில், இந்திரர்களின் பூர்வீக வரலாற்றையும், வேடதாரிப் பிராமணர்களால் இந்திரர்கள் வீழ்த்தப்பட்டதன் ஆதி வரலாற்றையும் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளார் அயோத்திதாசர்.

மேலும், வேளாண் வளமைச் சடங்குகளுள் ஒன்றான பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கை, பவுத்த சமய மரபைப் பின்பற்றி ஒழுகிய வேளாளர்கள் செய்த வேளாண் சடங்குகளாகக் கூறுகிறார் அயோத்திதாசர். இதுகுறித்து அவர் எடுத்துரைக்கும்போது, பௌத்தருள் வேளாளத் தொழில் செய்வோர் யாவரும், சங்கறர் அந்திய புண்ணிய காலமாகும் மார்கழி மாதக் கடையிலும் தை மாதம் முதலிலும், தங்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்களைப் பொங்கலிட்டு, இந்திரராம் புத்த பிரானைப் பூசிப்பதுடன், மாடுகளைச் சுத்தம் செய்து அவைகளையும் கொண்டாடி, மறுநாள் வேளாளத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவரைக் காணும் பொங்கல் என வழங்கி சந்தித்துக் கொள்வார்கள். 

காணும் பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் எழுந்து, பொன் தகடு வேய்ந்த ஏரினைக் கொண்டுபோய், வெண்ணெருதுகள் பூட்டி, உத்திர முகம் என்னும் வடக்குத் திக்கு நோக்கி, சரணாகதி என்னும் இரு கரத்தைச் சிரமேற் கூப்பி, உத்தரகுருவாம் புத்தபிரானைச் சிந்திப்பது இயல்பாம். 

இத்தகைய சிந்தனைக்கும் மூல காரணர் சமண முனிவர்களே ஆகும். அறப் பள்ளிகளில் உள்ள ஞான சாதனர்கள், புத்தபிரான் அரசமரத்தடியில் வீற்று, உத்திரமுகம் நோக்கி சித்த சுத்தி செய்து, இந்திரியத்தை வென்று பற்றற்ற நிருவாணம் பெற்றது போல், தாங்களும் பெற்று நித்தியானந்தம் அடைவதற்கு, உத்திர முகம் நோக்கி சாதனை புரிந்து வருவதை நாளுக்கு நாள் கண்டு வரும் வேளாளத் தொழிலாளர்களும் தங்களது வேளாண் மெய் விருத்தி பெற வேண்டி, பொன்னேர் பூட்டி போதி நாதனைச் சிந்தித்து வந்தார்கள். 

அத்தகையச் சிந்தனையாலும் நீதிநெறி ஒழுக்கத்தாலும் மாதம் மும்மாரி பெய்யவும், வரப்புயரவும், நீர் நிரம்பவும், பயிறு பெருகவும், குடிகள் சுகிக்கவும், கோன் உயரவுமாயச் செயலுற்றிருந்தது என்கிறார். 

தமிழரின் இந்திர வழிபாடு குறித்த அயோத்திதாசரின் கருத்தொற்றி விவரிக்கும் மயிலை சீனி.வேங்கடசாமி, தமிழ் மரபில் அடையாளப்படும் இந்திரனை, ஆரிய மரபிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு, வேந்தன் வழிபாட்டுத் தொடர்ச்சிதான் இந்திர வழிபாடு எனத் தெளிவுபடுத்துகிறார். 

அதாவது, தமிழர் ஏற்றுக்கொண்டு வழிபட்ட இந்திரன் பௌத்த இந்திரனாகத் தெரிகிறான். கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்ற இந்திர விழாவிலே, இந்திரன் யாகம் செய்து பூசிக்கப்படவில்லை. திருவிழா செய்து பூசிக்கப்பட்டான். அந்த இந்திர விழாவில் பெளத்தருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்திர விழாவை, ஒரு ஆண்டு சோழ அரசன் நிறுத்தினபடியினாலே, பௌத்தத தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் சினம் கொண்டு நகரத்தை அழித்தது என்று மணிமேகலை என்னும் பெளத்த நூல் கூறுகிறது. எனவே, தமிழ்நாட்டில் தமிழர் பிற்காலத்தில் வழிபட்ட இந்திரன், வைதீக மதத்து ஆரிய இந்திரன் அல்லன் என்பது தெரிகிறது. 

பௌத்த மதத்தில் இந்திரனுக்கு முக்கிய இடமுண்டு. இந்திரன் பௌத்த மதத்தையும் பௌத்த தர்மத்தையும் உலகத்தில் நிலை நிறுத்துகிறான் என்பது பௌத்த கொள்கை. மணிமேகலை முதலிய சிறுதெய்வங்களை உலகத்திலே ஒவ்வொரு இடத்தில் அமர்த்தி, பௌத்த மதத்தை அவன் காத்து வருகிறான் என்று பௌத்த மத நூல்கள் கூறுகின்றன. பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று ஆரிய மதங்களுக்கும் உடன்பாடாகிய இந்திரன், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டான் என்பதும், ஆனால் அவன் பௌத்த மத இந்திரனாகக் கருதப்பட்ட போதிலும், ஆரியக் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர், தமிழர் வணங்கிய மருதநிலக் கடவுள் வேந்தன் என்று பெயர் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்தில் இருந்து தெரிகிறது என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

அவ்வகையில், வேளாண் மரபின் பண்பாட்டு நீட்சியாக - வழிபடு தெய்வமாகக் குறிக்கப்பட்டு வருகிற இந்திர அடையாளம், பிற்காலத்தியச் சமயங்களான ஆசீவகத்தோடும் பவுத்தத்தோடும் தொடர்புடையதாய் இருந்திருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாலான கோயில்கள், குறிப்பாக, பெருஞ்சமயம் என்பதாகக் கருதப்படும் கோயில்கள் யாவும், இந்திர அடையாளத்தை உள்ளீடாகக் கொண்ட ஆசீவக அல்லது பவுத்த சமயக் கோயில்களாக இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற்காலத்திய ஆரிய வைதீகச் சமய மரபுகளின் நுழைவாலும் மேலாதிக்கத்தாலும் தமிழரின் வழிபாட்டு மரபுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வகையில், வேளாண்மைத் தொழில் மரபிலும், ஆசீவக மற்றும் பவுத்த சமய மரபிலும் அடையாளப்பட்டிருந்த இந்திர வழிபாட்டு அடையாள மரபு சிதைக்கப்பட்டிருக்கிறது; புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506

புதன், 29 டிசம்பர், 2021

வேளாண் மரபில் ஆசீவகத் தடங்கள்: மகாராசன்

வேளாண் தொழில் மரபினரிடம் நிலவி வந்த - நிலவுகிற வளமைச் சடங்குகள், வேளாண்மை உழவுத் தொழில் மரபின் இந்திர அடையாளத்தைப் புலப்படுத்தும் அதேவேளையில், யானை - வெள்ளை யானை - ஐராவத யானை அடையாளத்தையும் உள்ளீடாகச் சொல்லிக் கொண்டே வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. 

வேளாண் மரபில் நிகழ்த்தப்படும் வளமைச் சடங்குகளில் இந்திரனும், இந்திர அடையாளமான யானையும் இடம்பெறுவது, ஆசீவகச் சமய மரபின் பண்பாட்டுக் குறியீடுகளாகும். இதுகுறித்து க.நெடுஞ்செழியன் கூறும்போது, யானை ஆசீவகத்தின் குறியீடு. வெள்ளை யானை எனப் பொருள்படும் ஐராவதம்கூட ஆசீவகத்திற்கு உரியதாகும். அதிலும், வெள்ளை யானை ஆசீவகத்தின் நிறக் கோட்பாட்டின்படி மிக உயர்ந்த இடத்தை வகிப்பதாகும் என்கிறார். 

மேலும், மூவேந்தர் மரபைச் சார்ந்த புகழ்மிக்க மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசீவகச் சின்னங்கள், அச்சமயத்தின் பரவல் எத்தகையது என்பதை உய்த்துணர வைக்கின்றன. அம்மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் இடம் பெற்றுள்ள சின்னங்கள், அவை வெளியிடப்பட்ட காலம், இவை பற்றியும் அண்மைக்கால ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. 

இதனை, சங்ககாலச் சதுரக் காசுகள் சில அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. பூம்புகாரில் மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை நிகழ்த்திய அகழாய்வின்போது வெளிப்படுத்தப்பட்ட படகுத்துறையின் மீது சங்ககாலக் காசு கண்டெடுக்கப்பட்டதாக டாக்டர் கே.வி.ராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அழகன்குளத்தில் நிகழ்த்திய அகழாய்வின் போதும் சங்ககாலச் செப்புக்காசுகள் இரண்டைச் சேகரித்துள்ளது. 

பூம்புகார்க் காசின் முன்பக்கம் யானையின் உருவமும், பின்பக்கம் புலி வலது காலைத் தூக்கிய நிலையில் உள்ள உருவமும் காணப்படுகிறது. அழகன்குளக் காசுகளில் பெரிதாக உள்ள காசில் முன் பக்கம் யானை மற்றும் எண் மங்கலச் சின்னங்களும், பின்பக்கம் மீன் உருவம் ஒன்றும் உள்ளன..

மேலும், பூம்புகார்க் காசு சோழராலும், அழகன்குளக் காசுகள் பாண்டியராலும் வெளியிடப்பட்டவையாதல் வேண்டும். அழகன்குளக் காசுகள் கி.மு நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த பாள நிலைகளில் கிடைத்துள்ளன என்பது சி14 என்னும் அறிவியல் முறையால் நிரூபிக்கப்பட்டுள்ளது என விவரிப்பார் நடன காசிநாதன். அக்காசுகளில் பொறிக்கப்பட்ட யானைச் சின்னம் ஆசீவகத்தின் குறியீடு என்பதில் ஐயமில்லை என விவரிக்கும் க.நெடுஞ்செழியன், யானை, ஆறுமுகமுள்ள குன்றம், ஆமை, வேலியிட்ட மரம் ஆகியன மூவேந்தர்களுக்கும் பொதுவானவையாய் உள்ளன. காளைச் சின்னம் பாண்டியர், சோழர் வெளியிட்ட நாணயங்களில் மட்டும் காணப்படுகின்றன...

எனவே, மூவேந்தர்களும் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்ட யானை, காளை, திருமரு முதலான சின்னங்கள், அம்மன்னர்களின் ஆசீவக ஈடுபாட்டினை விளக்கும் வரலாற்றுச் சான்றுகள் எனக் கொள்வதில் தவறில்லை என, சங்ககால சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் வெளியிட்ட காசுகளில் காணலாகும் சில பொதுத் தன்மைகளைக் கொண்டு விளக்குவதும் நோக்கத்தக்கது. அதனால்தான், தமிழகத்தில் யானை வடிவில் கட்டப்பட்டுள்ள யானைக் கோயில்கள் எல்லாம் ஆசீவகரோடு தொடர்புடையன என்கிறார் குணா.

வேளாண்மைக்கு உகந்த கண்மாய், குளம், ஏரி போன்ற பெரும்பாலான நீர் ஆதாரப் பகுதிகளில் வழிபடு தெய்வமாக ஐயனார் - அய்யனார் எனவும், சாத்தன் எனவும் குறிக்கப்படுகிறது. அத்தகைய ஐயனார் - அய்யனார் - சாத்தன் கோயில்கள் தோறும்  யானைகள் நிறுவப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஐ, ஐயன் என்பதற்குத் தலைவன், அரச வேந்தன், மூத்தோன், உயர்ந்தோன், வானோன், தெய்வம் எனவும் அகராதிகள் பொருள் தருகின்றன. 

நீர் நிலைகள் சார்ந்த பகுதிகளில் வழிபடு தெய்வமாகத் தொழப்பட்டிருப்பது மழை நீராகத்தான் இருந்திருக்க வேண்டும். வேளாண் தொழிலுக்கு உதவும் மழை நீர்தான் வழிபடு தெய்வமாக - வேந்தனாக - வானோனாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான், வானோன் எனும் மழையைக் குறிக்கும் ஐ, ஐயன் எனும் வேர்ச்சொற்களால் ஐயன் + ஆர் = ஐயனார் எனக் குறிக்கப்பட்டிருக்கிறது எனவும் கருதலாம். அவ்வகையில், வேளாண்மை சார்ந்த வளமைச் சடங்கில் புலப்படும் இந்திர - மழைத் தெய்வ வழிபாட்டு மரபுதான், பிற்காலத்தில் ஆசீவகத்தின் ஐயனார் - அய்யனார் வழிபாடாக - ஆசீவகச் சமய நீட்சியின் அடையாளமாகப் பரிணமித்திருக்கிறது எனக் கருதலாம். 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 


*


வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

முதல் பதிப்பு, அக்டோபர் 2021,

பக்கங்கள் 224,

விலை: உரூ 250/-

10% கழிவு விலை: உரூ 225/-

அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு

யாப்பு வெளியீடு : 

9080514506

செவ்வாய், 28 டிசம்பர், 2021

ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - நூல் மதிப்புரை : குருசாமி மயில்வாகனன்

இந்த உலகில் அறியப்பட்டுள்ள சிந்தனைப் போக்குகளை எத்தனை பிரிவுகளாக பிரித்தாலும், அவைகளின் அடிப்படையான தத்துவக் கண்ணோட்டத்தினை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். அவை, 1. கருத்து முதல் வாதம், 2. பொருள் முதல் வாதம். வெறும் சடங்குத்தனமாகவும், ஒப்புவிக்க வேண்டிப் பயன்படுத்தப்படும் இவ்விரு சொற்களும், உண்மையில் மிக விரிந்த, பரந்த தளப்பரப்பினைக் கொண்டவை. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை; ஒன்றொடொன்று உடன்படவே முடியதாவை; சமரசமாகாதவை; எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவை. 

இன்றை உலகில் பெரும்பாலான மக்களின் அடிப்படைக் கண்ணோட்டமாக இருப்பது கருத்து முதல் வாதம் (idealism) தான். இதற்குக் காரணம் இன்றைய ஆளும் வர்க்கங்களின் தத்துவமாகக் கருத்து முதல் வாதமே இருக்கிறது என்பதுதான். 

பிற மனிதர்களுடைய உழைப்பைச் சுரண்டி, தன்னுடைய நலன்களை, வசதியை, மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டு வாழக்கூடிய  சுரண்டும் வர்க்கங்கள்தான் இன்றைய  ஆளும் வர்க்கங்களாக இருக்கின்றன. மனிதர்களுடைய உழைப்பைச் சுரண்டினால் மட்டுமே இந்த வாக்கங்கள் உயிரோடிருக்க முடியும். இதனால் இந்த சுரண்டும் முறைக்கு எதிராக உள்ள, அல்லது இந்தச் சுரண்டலைத் தடுக்கக் கூடிய  எதையும் இந்த வர்க்கங்கள் முடக்கும்; தடை செய்யும்; முற்றாக அழிக்க நினைக்கும். இந்தச் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், பின்புலமாகவும், பாதுகாப்பாகவும், அடிப்படையாகவும் இருப்பது 'கருத்து முதல் வாதம்' எனும் அதனுடைய தத்துவம்தான். 

நெருக்கடிகள் வரும்போது இது தன்னை மாற்றிக் கொள்ளும்; புதியன போலத் தோற்றம் கொள்ளும்; பல வேடங்களில் வெளிப்படுத்திக் கொள்ளும்; தேவைப்படும் சமயங்களில் தனக்கு நேரெதிரியான 'பொருள் முதல்' வாதத்தைக் கூட போர்வையாக அணிந்து கொள்ளும். 

பொருள் முதல் வாதமும், இதனை அடிப்படையாகக் கொண்ட சுரண்டலுக்கு எதிரான வர்க்கங்களும், கருத்து முதல் வாதத்தை அடியோடு நிராகரிக்கின்றது. மனிதனைச் சுரண்டுவதற்கும் எதிராகப் போரிடுகிறது. மனித சமத்துவத்தை வலியுறுத்துகிறது. அதோடு கருத்து முதல் வாதத்தின் எல்லா வேடங்களையும் அம்பலப்படுத்துகிறது. அது மூடிக் கொண்டுள்ள முகத் திரைகளைக் கிழித்தெறிகிறது. ஆயினும், கருத்து முதல் வாதமானது புதிய முக மூடிகளை அணிந்து கொள்கிறது. 'இப்படியான' புதிய கருத்துக்களை ஆராவாரத்தோடு அறிமுகம் செய்து வைக்கிறது. இந்த ஆராவாரத்தை, பொருள் முதல் வாதத்தை வீழ்த்துவதற்கான  ஆராவாரமாக அது கொண்டாடுகிறது. ஆளக்கூடிய சுரண்டும் வர்க்கங்கள் இவைகளை வரவேற்று, தலையில் தூக்கிவைத்து ஆடி, மக்களிடையே பரப்புகிறது. 

அப்படி ஒரு ஆராவாரமான, ஆர்ப்பாட்டமான சிந்தனையாக, தமிழில் அறிமுகமாகியது ‘பெண்ணியம்’. பல ஆண்டுகளுக்கு முன்னால் முதலாளித்துவ நாடுகளால் முதலில் கொண்டாடப்பட்ட பின்னர், குப்பைக்குப் போன பழைய துணிகளெல்லாம் முற்றிலும் புதிய ஆடை என்று இங்கு ஒரு கும்பல் கடை விரித்தது. அன்றே மலர்ந்த அரும்புச் சிந்தனை என்று எல்லோரையும் கடைக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தது. ஒரு துருவ நட்சத்திரமாய் விளங்கும் அறிவியக்கம் என்று குதித்துக் கும்மாளம் போட்ட அந்தக் கும்பல், தனது வர்க்கக் குணத்திற்கேற்ப, பொருள் முதல்வாதத்தைச் சாடியது. 

            மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்தியது. 'எங்கெல்ஸ்க்கு ஒண்ணுமே தெரியாது; இதைப்பற்றி மார்க்சியத்திடம் பதிலே இல்லை; இது மார்க்சியத்தின் போதாமை' என்று கதையளந்தது. 

பொருள் முதல் வாதத்தையும், மார்க்சிய ஆசான்களின் கருத்துக்களையும் உப்புக்குச் சப்பாணிகளாய் வரட்டி தட்டிக்கொண்டிருந்த இன்னொரு கூட்டமானது, இந்தக் கதையளப்பில் கவிழ்ந்தது. கவிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், கன்னா பின்னாவென உளரியது. ஏற்கனவே கல் குடித்த வியாபாரக் கும்பல், இந்தக் கட்டத்தின் உளரல்களை உத்தரவுகளாக மாற்றிக் கொண்டு, பொருள் முதல்வாதத்தின் மீதும், மார்க்சியத்தின் மீதும் மேலும் சேறடித்தது; அவதூறு செய்தது. 

இந்தச் சேற்றடிப்பிற்கும், பகடிக்கும், மறுப்பாக, எதிராக இதோ, பொருள் முதல்வாதம், மார்க்சியம் தன் வாளைச் சுழற்றுகிறது. மார்க்சியத்தின் போதாமையைக் குறித்துப் பேசிய பேமானிகளெல்லாம் மார்க்சியம் சுழற்றும் இந்த வாளுக்குப் பதில் கூறட்டும். ஆனாலும், இந்த வாளைச் சுழற்றுபவர்களாக, தோழர் கிளாரா ஜெட்கினும், தோழர் லெனினுமாக அமைந்திருப்பது, இந்தக் கத்துக்குட்டிகளின் அதிர்ஸ்டம்தான். 

இன்றைய பெண்ணிய நவீனக் கருத்துக்களுக்கும், பெண்ணிய பின் நவீனத்துவக் கருத்துகளுக்கும், (பெண்ணிய பின் பின் நவீனத்துவக் கருத்துகளுக்கும்) தோழர் லெனின் மறுப்புரைக்கிறார். மறுப்புகளோடு மற்றுமின்றி, அவர்கள் எழுப்பும் கேள்விகள் உருவாகின்ற ரிசிமூலத்தின் பிடரியையும் பிடித்து உலுப்புகிறார். 

தோழர் இனெஸ்ஸா அர்மாண்டுக்கு எழுதுகிற பதிலில் 'சுதந்திரமான காதல்' எனும் புகழ்பெற்ற பெண்ணுரிமை முழக்கத்தின் அற்பத்தனத்தைத் தோலுரிக்கிறார் லெனின். திருமண ரத்து, கர்பத்தடை, விபச்சாரம், போன்றவைகள் குறித்த லெனினது சாட்டையடியான விமர்சனங்கள், இதுவரை மேற்சொன்னவைகள் குறித்த முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவ அறிவாளிகளின் உளரல்களை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. 

பெண்களைத்  தனித்த  ஒன்றாகக்  காணுவதை  ஏற்றுக் கொள்கிற லெனின், 'தனித்த' என்பதற்கான அர்த்தத்தைத் தனக்கே உரிய முறையில் எடுத்துரைக்கும் போது, இங்கே தமிழ்ச் சூழலில் 'பெண்ணியம்' என்று பிராண்டி எடுத்தவர்களின் நிலை ஆகப் பரிதாபகரமானதாக ஆகிவிடுகிறது. 

லெனின், ‘கர்பத்தடை’ குறித்த கருத்துக்களையும், பெரியாரின் ‘கர்பப்பை’ குறித்த கருத்துக்களையும் ஒப்புநோக்குவது மார்க்சியம், பெரியாரியம் குறித்த அலசல் புரிதல்களை வாசகர்களுக்குத் தர உதவும் . 

ரசியப் புரட்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்து கிளாரா ஜெட்கின் குறிப்பிடும் விசயங்களும், பெண்களின் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது என லெனின் கூறுகிற பதிலுரைகளும் குறிப்பிடத்தக்கவை. 

சிக்மண்ட் ஃப்ராய்ட்சத்தையும், அதன் ஆதரவாளர்களைப் பற்றி லெனின் குறிப்பிட்டிருப்பதாவது, 'முதலாலித்துவ சமுதாயத்தின் குப்பை மேட்டில் முழுச் செழிப்புடன் மண்டிக் கிடக்கிற அந்த தனிமாதியான இலக்கியத்தில் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை நினைத்துத் தவம் புரியும் இந்திய ஆண்டியைப் போல, எந்நேரமும் பாலுணர்வுப் பிரச்சினையிலேயே முழு நாட்டம் கொண்டுள்ள இவர்களை நாம் நம்புவதில்லை'. 

சிந்திக்கக் கூடிய பெண்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஆணின் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. ஆடைகளிலும், வாடைகளிலும் பெண்ணியம் கண்டவர்கள் இப்புத்தகத்தின் கேள்விக்குப் பதில் சொல்லட்டும். 

'ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்' இந்நூல் தலைப்பு, வாசகர்கள் எவருக்கேனும் சலனத்தை ஏற்படுத்துமென்றால், நூலைத் தொடர்ந்து உள்ளே போவாரென்றால், அந்தச் சலனமே, அவர்களுக்கு ஒரு அறிவுப்பூர்வமான விழிப்புணர்வை நிச்சயம் கொடுக்கும். 

பெரும் பரபரப்பாக, பரவிக் கிடக்கும் மார்க்சிய சமூக, அரசியல், பொருளாதாரக் கருத்துக்களுக்கு உள்ளே பின்னிக் கிடக்கும் சிந்தனைகள் தொகுக்கப்பட்டு சொல் வடிவம் செய்யப்பட்டுள்ளன. 

பெண்ணியம் குறித்த தீவிர ஆய்வாளர் தோழர் மகாராசன்  மிகச்சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். பெண்ணியம் குறித்த மிக முக்கியமான ஆவணமாக விளக்கப் போகும் இந்நூலை மிகவும் அழகுடன் பதிப்பித்துள்ளது தோழமை பதிப்பகம். 

பெண்களில்லாமல் புரட்சி இல்லை;
புரட்சி இல்லாமல் பெண் விடுதலை இல்லை. 
*

கட்டுரையாளர்:
குருசாமி மயில்வாகனன்,
ஆய்வாளர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்,
ஒப்பனைக் கூத்து, கப்பலோட்டிய கதை உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
சிவகங்கை.

*
ஒரு கோப்பை 
தண்ணீர்த் தத்துவமும் 
காதலற்ற முத்தங்களும்: 

பெண் விடுதலை குறித்த 
மார்க்சிய உரையாடல்கள். 

லெனின் - கிளாரா ஜெட்கின். 

தொகுப்பாசிரியர்:
மகாராசன். 

யாப்பு வெளியீடு, சென்னை.
மறுபதிப்பு, சனவரி 2022.
விலை: உரூ 150/-
10% கழிவு விலையில்: 135/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 

தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
+919080514506

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

ஆழி முகம் : மகாராசன்


அன்று வரை
அழகாய்த்தான் இருந்தது 
கடல். 

உயிர்களைத் தின்று முடிக்கக் கரையேறித் துடித்தன அலைகள். 

கடல் நீர் கரிக்குமென்றே 
கரை தாண்டி ஊரைக் குடித்து 
உள்ளே போனது ஓலம். 

பிணவாடைக் காற்றில் 
நிலத்தில் பரவின 
ஒப்பாரி மகரந்தங்கள். 

கதறலாய்
எழும்பிய உயிர்கள் 
மணலுக்குள் புதைந்தே போயின. 

உயிர்களைத் தின்று முடித்த 
ஏப்பச் சிவப்பு 
விழிகளில் தெரிந்தது
நீலத்திடம். 

ஆழி சூழ் உலகு 
ஆழிகொல் உலகாய் 
ஆகிப் போனதும் அன்றுதான். 

மடி விரித்துக் கிடக்கும் 
தாய் முகத்துக் கோபமும் அதுதான்.
*
ஏர் மகாராசன்
#சொல்நிலம்

அலை நிலத்து அழுகை : மகாராசன்


கீழ்வெண்மணி
துயர் சுமந்த நாளின் 
பிற்பொழுதைத் 
தின்று முடித்த 
காலைப் பொழுது 
காரித் துப்பியது
சோசுத்தை. 

மடி விரித்த
ஆழ் கடல் ஓரத்துக் குடிசைகள் துகளோடு துகளாய்ப் போயின. 

நிலவுக் கீற்று
கிழித்த கோடுகள் பிடித்து 
தொலை கடலுக்குள் போன கட்டுமரங்கள் 
தொலைந்தே போயின. 

உயிர் போன
வெறும் கட்டைகளாய் 
மிதந்து வந்தன
உடல்கள். 

அலை ஓசைந் தாலாட்டில் 
தூங்கிய பிஞ்சுகள் 
ஒப்பாரிகள் பாடின. 

வலையில் மீன்கள் அள்ளி 
வயிறுகள் கழுவிய
கவுச்சி வாழ்க்கை
மீன்களுக்கே
இரையாகிப் போயின. 

ஒதுங்கிக் கிடந்த இடுகாட்டையும்
அகலப் பரப்பிச் 
சேரிக்குள் இழுத்து வந்தன 
அலைகள். 

சுள்ளி அடுக்குகளாய் பெருங்குழிக்குள் 
மனிதங்களை அடுக்கி 
சாவை மூட்டிச் சென்றது 
கடல். 

உரிமை பறிக்கும்
சாதித் திமிராய் 
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.
*
ஏர் மகாராசன் 
#சொல்நிலம்

வெள்ளி, 24 டிசம்பர், 2021

தமிழ் வேளாண் சமூகம் பற்றிய புதிய ஆய்வுத் தடத்திலான நூல் : இளஞ்சென்னியன்.


தமிழ் மரபின் வழித் தடத்தில் வேளாண் சமூகத்தின் பண்பாட்டு வாழ்வியல் சித்திரத்தை உருப்படுத்திக் காட்டுகிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல்.

வேளாண் சமூகம் எனும் பெருங்குழுமத்தில் முதன்மைச் சமூகமாகவும், இன்று வரை தமிழ் வேளாண் மரபின் தொழில் நுட்பங்களையும் பண்பாட்டையும் நினைவில் கொண்டுள்ள ஓர் சமூகமாக உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினை முதன்மைப்படுத்திய ஆய்வு நூல் என்ற போதும், மொத்த வேளாண் சமூக மரபு குறித்த உள்ளடக்கத்தைக் கொண்டதே. ஏனெனில், தமிழ் மரபில் தங்கள் அடையாளத்தைத் தேடும் எந்த முயற்சியும் தனித்த ஒன்றாக அமைய முடியாது.

தேவேந்திரகுல வேளாளர்கள் நடத்தும் இன்றைய அரசியல் அடையாளப் போராட்டத்தினைப் பண்பாட்டு மேலாதிக்கத்தால் அமுக்கப்பட்டே வருகிற நெடிய தமிழ்ச் சமூகத்தின் வேளாண் மரபின் மீட்சிக்கான ஒன்றாகவே காண வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

பல்வேறு சான்றுகளின்வழி இந்திர அடையாளத்தை ஆரிய இந்திரன் - தமிழ் இந்திரன் என வேறுபடுத்திக் காண வேண்டும் என்கிற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகவே எனக்குப் படுகிறது.

வேளாண் சமூகத்தின் உற்பத்திச் சடங்குகளின்வழி வேளாண் சமூகத்தைப் புரிந்து கொளளவும், பல்வேறு சமய மரபில் வேளாண் சமூகத்தின் தடத்தினைக்  கண்டடையவும் வேண்டும் என்கிற முயற்சி மேலும் மேலும் ஆய்வு செய்வதற்கு உரியது. 

மொத்தத்தில், வேளாண் சமூகம் குறித்து இதுவரை ஆய்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர் பெருமக்களின் வழித்தடத்தில் புதிய கருதுகோளை முன்வைத்து மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது.

தேவேந்திரகுல வேளாளர்கள் நடத்தும் போராட்டம் வெறும் அடையாளப் போராட்டமாக நின்று போதலில் பொருளில்லை. அது, மொத்தச் சமூகமும் அடுத்தகட்ட சமூகமாக மாறும் போராட்டத் தொடர்ச்சியைக் கொண்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தி முடிகிறது.

நூலின் இறுதிப் பகுதி தமிழர்களின் நீர்மேலாண்மை அறிவையும், இன்றைக்கு ஏற்பட்டுள்ள தமிழக நீர்மேலாண்மை அவலத்தையும் அதற்கான காரணிகளையும் பதிவு செய்கிறது.

தமிழ் இனத்தின் பல்வேறு குடிவழிச் சாதிகளின் வரலாறும் சமூக அரசியல் பொருளியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும். இனவரைவியல் ஆய்வு முறைமை, சமூகத்தின் புனைவைகளையும் மேட்டிமையையும் புறந்தள்ளிய ஓர் ஆய்வு வெளியாக உள்ளது. அது சமூகத்தின் மெய் இருப்பை வெளிப்படுத்துவதோடு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அரசியல் வெளியையும் அடையாளம் காட்டும். அது போன்றதொரு நூலே இந்த வேளாண் மரபின் தமிழ் அடையாளம் நூல்.

என்னளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய - மாறுபடக்கூடிய பல்வேறு கருத்துக்களையும் கருதுகோளையும் முன்வைத்துள்ள தோழர் ஏர் மகாராசன் அவர்களின் பேருழைப்பிலும் வேட்கையிலும் அறிவுத்தேடலிலும் உருப்பெற்றுள்ள தமிழ் வேளாண் மரபினர் குறித்த இந்நூல், தமிழர்கள் குறிப்பாக வேளாண் சமூகம் குறித்துச் சிந்திப்போர் கற்க வேண்டியதொரு நூல் ஆகும்.

*

கட்டுரையாளர்:
இளஞ்சென்னியன்
மருதுபாண்டியர்கள்:
பேரறிக்கையும் அதன் அரசியலும் எனும் நூலின் தொகுப்பாசிரியர்.

சமூகச் செயல்பாட்டாளர்,
தமிழ்த் தேசிய உணர்வாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழியச் சிந்தனைக் களத்தின் ஒருங்கிணைப்பாளர்.
சிவகங்கை.

செவ்வாய், 14 டிசம்பர், 2021

கம்பரின் ஏர் எழுபது - உழவுத்தொழில் வரைவியலின் முதல் நூல் : மகாராசன்


வேளாண்மைத் தொழிலுக்கான உடல் வலிமை, உழைப்பு, உழவு மற்றும் உரத்திற்குத் தேவையான மாடுகள் வளர்ப்பு, உரத் தயாரிப்பு, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள், பல்வேறு  வித்து வகைகள் பற்றிய தெளிவு, பயிர்ப் பராமரிப்பு, காலநிலைக் கணிப்பு, நீர் மேலாண்மை, அறுவடை என வேளாண்மை சார்ந்த அனைத்து நுட்பங்களும் அறிவும் உழைப்பும் உழுதுண்ணும் உழவர்களான காராள வேளாளர்களிடமே இருந்திருக்கின்றன. 


நிலத்தில் உழவுத்தொழிலால் பாடுபடும் காராளர்களின் பாடுகளை முதன் முதலாகத் தனி இலக்கிய நூலாகத் தமிழில் பாடியவர் கம்பரே ஆவார். உழுதுண்ணும் வேளாளர்களான காராளர் எனும் உழவுக்குடிகளின் உழவுத்தொழில் நுட்பத்தையும், உழுதொழில் கருவிகளையும், உழுதொழில் பண்பாட்டு மரபையும் ஏர் எழுபது எனும் நூலில் மிக விரிவாகவே ஆவணப்படுத்தியும் புகழ்ந்தும் பாடியுள்ளார் கம்பர். 

உழவுநாள் குறித்தல், கொழுமுனை, மேழி, ஊன்றாணி, நுகத்தடி, நுகத்துத் துளை, நுகத்தாணி, பூட்டாங்கயிறு, ஏர்க்கால் நுகத்தடி பிணைக்கும் தொடைக்கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழவு எருது, எருதின் கழுத்துக்கறை, ஏர் பூட்டல், ஏர் நடத்தல், உழவு, உழவுச் சால், மண்வெட்டி, வரப்பு வெட்டல், புழுதி, வரப்பு கட்டல், எரு, சேறு கலக்கல், பரம்படித்தல், விதை பாவுதல்,  நாற்றாங்கல் பராமரித்தல், நாற்றுப் பறித்தல்,  நாற்றுமுடி சுமத்தல், நாற்றுமுடி விளம்புதல், நடவுக் கைப்பாங்கு, நடவுமுனை, பயிர் விளைத்தல்.. 

நீர் ஏற்றம், துலைநீர் இறைத்தல், நீர் பாய்ச்சுதல், களையெடுத்தல், பயிர் கருப்பிடித்தல், பசுங்கதிர், நெல்குலை வளைதல், நாளறுப்பு குறிக்கப் பலருக்கும் சோறிடுதல், களம் அமைத்தல்,  கதிர் அரிவாள், கதிர் அறுப்போர், அறுப்பறுத்தல், நெற்கதிர் வேண்டி வரும் இரவலர்க்கு அரிகதிர் வழங்குதல்,  அரிகதிர் சூடடித்தல், நெல்தாள் படப்பு எனும் போர் அமைத்தல், நெல் குவிப்பு, நெல்பொலி, நெல்கூடை, பொலிதூற்றும் கூடை, பொலி அளத்தல், விதைக்கோட்டை செய்தல் போன்ற அனைத்தைக் குறித்தும் - உழுதுண்ணும் உழவுக்குடிகளின் வேளாண்மைச் செயல்பாடுகளைக் குறித்தும் ஏர் எழுபதில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார் கம்பர். அவ்வகையில், வேளாண்மை உழவுத்தொழில் பற்றிய முதல் வரைவியல் இலக்கியமாகக் கம்பரின் ஏர் எழுபது நூல்தான் தனித்துவம் வாய்ந்ததாகும்.  

உழுதுண்ணும் உழவுக்குடிகளான வேளாளர்களைக் காராளர், மேழித்தேவர், பெருக்காளர், உழவர், உழும் குலத்தார், வேளாளர், மள்ளர் எனும் பெயர்களால் ஏர் எழுபது பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

கார் நடக்கும்படி நடக்கும் காராளர், தம்முடைய

ஏர் நடக்கும்எனில், புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்;

சீர் நடக்கும்; திறன் நடக்கும்; திருவறத்தின் செயல் நடக்கும்;

பார் நடக்கும்; படை நடக்கும்; பசி நடக்க மாட்டாதே

என, ஏர் நடத்தல் பற்றிப் பாடும் கம்பர், ஏர் நடக்கும் எனில் பிறவெல்லாம் தாமாகவே நடக்கும்; பசிப்பிணி ஒன்று மட்டுமே நடக்க மாட்டாது. காராளர்களின் ஏர் பூட்டல் தொழிலால் - ஏர் நடத்தல் சிறப்பால் பசி எனும் பிணியானது நாட்டில் நிலவாது என்கிறார்.

பசிப்பிணி போக்கும் உணவைக் கொடுப்போரே உயிர் கொடுத்தோர் ஆவர். அவ்வகையில், உழவுத் தொழில் புரிந்து வேளாண்மை ஈட்டும் உழவர்களே பசிப்பிணி போக்கும் உணவைத் தருகிறார்கள். அதனால்தான், பசிப்பிணி போக்கும் உழவர்களை உலகமே தொழுகின்றது. இதுகுறித்து வள்ளுவர் கூறிய குறளையும் தமது கருத்தையும் ஏர் எழுபதில் எடுத்துரைக்கும் கம்பர்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாரும்

தொழுதுண்டு பின்செல்வர் என்றே, இத்தொல் உலகில்

எழுதுண்ட மறை சொன்னால், இவரேவன் மள்ளர்க்கும்

பழுதுண்டோ? பார்வேந்தர் படை மன்னர் ஒப்பாரோ?

என்கிறார். உழுதுண்ணும் வேளாளர்களைக் காராளர் எனக் குறிக்கும் கம்பர், அக்காராளர்களையே மள்ளர் எனவும் சுட்டுகிறார். வயல் உழும் மள்ளர், போர்க்கள மள்ளரினும் சிறந்தவர் என்கிறார் கம்பர். ஏனெனில், போர்க்கள மள்ளர்களுக்கும் உணவளிப்பவர் ஏர்க்கள மள்ளரே ஆவர்.

வேளாண்மைத் தொழிலின் உழைப்பில் ஈடுபட்ட உடல் வலிமையே போருக்கும் தேவைப்பட்டிருக்கிறது. ஏர்க்களத்தில் மட்டுமல்லாமல், போர்க்களத்திலும் காராள வேளாளர் எனும் உழவர்கள் பங்கேற்பும் இருந்திருக்கின்றது. அதனால்தான், உழவர் உழவுத்தொழிலாலும், அரசருக்கு அவ்வப்போது நிகழ்த்திய போர்த்தொழிலாலும் வலிமையும் வீரமும் பெற்றிருந்தமையின் மள்ளர் என்றும் கூறப்பட்டார் என்கிறார் பாவாணர். 

உழுதுண்ணும் உழுகுடிக் காராளர்களான வேளாளர்களையே மள்ளர்கள் எனத் தமிழ் இலக்கியங்கள் பெருவாரியாகச் சுட்டுகின்றன. வளமைப் பண்பையும் வலிமைப் பண்பையும் குறிப்பதற்கு, மள்ளல் எனும் சொல்லானது இடத்திற்குத் தக்கவாறு பயின்று வந்துள்ளன. இதுகுறித்துக் கூறும் அ.அறிவுநம்பி, மள்ளர் என்ற சொல் வீரர், உழவர் என இரு பொருள் சுட்டும். இடத்திற்கு ஏற்ப அதன் நுண்பொருள் காணுதல் தேவை. 

ஏர்க்களம், போர்க்களம் இரண்டில் எவ்விடம் பேசப் பெறுகின்றதோ அதற்கேற்ப மள்ளர் முதலாமிடத்தில் உழவராகவும், இரண்டாமிடத்தில் வீரர்களாகவும் உலா வருவதை உணரலாம் என்கிறார். ஆகவே, நிலம், உழவுத்தொழில், வேளாண்மை போன்றவற்றைக் குறிக்குமிடங்களில் வருகின்ற மள்ளர் எனும் சொல்லாட்சிகள், உழவர்களை - காராளர்களை - உழுதுண்ணும் வேளாளர்களையே அடையாளப்படுத்துகின்றன எனலாம்.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506

புதன், 8 டிசம்பர், 2021

செம்மூதாய் : மகாராசன்

 


ஆழிப் பெருக்கின் 
ஊழி அலைகள்
வாரிச் சுருட்டிய பின்னாலும்
மிச்சமெனப் பிழைத்த மூதாதைகளின்
விதைப் பேச்சுகள் யாவும்
கால மழையின் 
ஈரத்தில் நனைந்து
ஒலியும் வரியுமாய்
முளை விட்டிருந்தன. 

மெல்ல மெல்லப் 
பரவிய வேர்களால்
மண்ணுள் நுழைந்து இறுகப்பற்றி
திக்குகளின் முகம் பார்த்தபடி
தனித்திருந்தன 
திணை மரங்கள். 

கிளைகளெனச் சிலிர்த்திருக்கும்
வழக்குச் சொல்லிலை 
இணுகி இணுகிக்
கூடொன்றை வேய்ந்திருந்தது
இனப் பறவையொன்று. 

கூட்டடையில் பொறித்த குஞ்சுகள் யாவும்
சிறகுகளைத் தட்டிக்கொண்டு
இரை தேடிப் பறந்தன. 

ஐநிலத்தின் வனமெங்கும்
பறவையின் எச்சங்கள். 

பேரினத்தின் விழுதுகள்
எச்சங்களின் விதைகளில்
துளிர்விட்டுக் கிடந்தன. 

பச்சைய வனப்பேறி
செந்நிறத்தில் பூத்துக் காய்த்திருக்கிறது
தமிழ்.

ஏர் மகாராசன்

திங்கள், 6 டிசம்பர், 2021

உழவுக் குடிகளின் வரலாற்றை நேர் செய்திருக்கும் ஆவணம்: செங்காந்தள் வீரராகவன்

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் நிகழ்கால வாழ்வியல் முறைகளை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் பல நூறு ஆண்டுகாலப் பண்பாட்டு வரலாற்று நீட்சியை வேண்டுமென்றே மறைத்துவிட்டு - மறந்துவிட்டுக் கடந்து செல்வது என்பது ஆய்வாளர்களின் அறிவு குறையே. 

சிலர், வேளாண் குடிகளின் மீதான வன்மத்தின் காரணமாகவும், தங்களின் சுயநலத்திற்காகவும் வரலாற்றைப் போலியாகத் திரித்து எழுதி மன மகிழ்ச்சி அடைந்து  வந்துள்ளனர். இந்தப் போக்கானது  உழுகுடியின் வீழ்ச்சியிலிருந்து இன்று வரை தொடர்ந்து வருவது வேதனையின் உச்சம். இது வேளாண் சமூகத்தின் மீது நிகழ்த்தப்படும் தொடர் பண்பாட்டுத் தாக்குதல் ஆகும். 

இத்தகையப் பண்பாட்டுத் தாக்குதலுக்கான எதிர்வினையாக,  எழுத்தாளர் மகாராசன் 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்'  எனும் நூலைப் பல்வேறு ஆவணங்களால் அறச்சீற்றம் கொண்டு உழுகுடியின் வரலாற்றை  நேர் செய்திருக்கிறார். 

மானுட இனத்தின் தோற்றம் - வேட்டைச் சமூகம் - கால்நடை வளர்ப்பு - உற்பத்திப் பெருக்கம் - குடும்ப முறை - வேளாண் விரிவாக்கம் - ஆட்சி அமைப்பு - பண்பாட்டு எழுச்சி என நீள்கிறது தமிழ் நிலத்தின் வாசனை மலர்கள். 

பண்டையக் காலத்தில் மாடு என்பது செல்வமாகப் பார்க்கப்பட்ட வரலாற்றையும், அதனை ஐவகை நிலங்களிலும் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளையும் விளக்குகின்ற காட்சியானது, உழவர்களின் உறவுகளாகவே  மாடுகள் இருந்த வரலாற்றை அறிய முடிகிறது. 

மேலும், முல்லை நிலத்தில் மான்களையும் யானைகளையும் வளர்ப்பு  விலங்குகளாக மாற்றுவதற்கான முயற்சிகள் நிகழ்ந்ததாகவும், பன்றிகள் வள்ளிக்கிழங்கை   அகழ்ந்தெடுத்த நிலத்தில் பயிர்கள் விரைந்து  வளர்ந்ததே உழுது பயிரிட வேண்டும் என்ற சிந்தனைக்கான காரணம் என்ற செய்தியையும் சங்க இலக்கியப் பாடல்களின் மூலம் மேற்கோள்  காட்டப்பட்டுள்ளது. அதிலிருந்தே  வேளாண்மைக்கான முதல் விதை விதைக்கப்பட்டிருக்கிறது  என்பதைஅறிய முடிகிறது. 

வேளாண்மையானது குறிஞ்சியில்  (எள், கொள், மூங்கில் அரிசி) தோன்றி, முல்லையில் (கேழ்வரகு, சோளம்) விரிந்து, மருதத்தில் (நெல், கரும்பு) நிலைத்து, வேளாண்  மரபின் பரவலானது தொடர்ந்து வந்திருக்கிறது. 

வேள் என்பது நிலம், ஆள் என்பது ஆள்தல். வேள் + ஆள் - நிலத்தை உழவுத் தொழிலால் ஆள்தல் என்னும் பொருளில் வேளாள் ஆகி, வேளாள் + ஆர்  விகுதி பெற்று, வேளாளர் ஆனது என வேளாளர் எனும் தொழிற்பெயர் குறித்து விவரிக்கும் நூலாசிரியர், பள்ளமான நீர்நிலைகளில் உழவுத் தொழில்  செய்து வருபவர்களே வேளாளர் என்கின்ற  வரையறையையும்  தகுந்த ஆவணங்களால்  உறுதிப்படுத்தியிருக்கிறார். 

இந்த வேளாண் மக்கள் களமர்,  தொழுவர், மள்ளர், கம்பளர், வினைஞர், உழவர், கடைஞர், கிளைஞர், மேழியர், சிதலர், கடைசியர், உழத்தியர், பள்ளர் பாண்டியர், குடும்பர், காராளர், அகவர், ஏராளர்,  அரிஞர், அரிநர், அரிவணர், புனவர்  என மருதநில மக்கள் நிலப் பெயராலும் தொழிற் பெயராலும் க பல்வேறு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

உழவு முறைகள் (உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், உரமிடுதல்,  களை எடுத்தல், நீர் பாய்ச்சல், அறுவடை போன்றவை), உழு கருவிகள் (மேழி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, நுகத்தடி, நுகத்தாணி, தாற்றுக்கோல் போன்றவை) மற்றும் நீர்ப் பயன்பாட்டு நுட்பங்கள் ஆகியன வேளாண் மரபினரின் அறிவினை வியக்கவைக்கின்றன. அதுமட்டுமல்லாது, அறியப்படாத ஆறுகளின் வரலாற்றையும் (கடனாறு, அர்ச்சுணன் ஆறு, மலட்டாறு, வெட்டாறு, பரளியாறு), நச்சு  உரங்களால் அழிந்துபோன மீன்களின் வகைகள் (சாளை ,பசலி, கசலி,  மத்தி, கருங்கண்ணி, மணலி, தேளி மீன்), வரி, சொல், விரிகி, சாலி, யவம் என நெல்லுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களையும், சித்திரக் காலி, வாலான், நெடுமூக்கன்,  பூம்பாளை,  காடைக்கழுத்தன் , புனுகுச்சாம்பா, வட்டக்கண்ணி, குளவாளை, செம்பாளை போன்ற நூற்றுக்கணக்கான நெல் வகைகளையும் இந்நூலின் வழியாக அறிய முடிகின்றது. 

மாடுகளின் வகைகளாக குடைக் கொம்பன், செம்மறையன், மேழை,  கருப்பன், அணிற்காலன், விடத்தலை, பூ நிறத்தான் போன்ற  நூற்றுக்கணக்கான இனங்களை முக்கூடற்பள்ளு நூல்களின் வாயிலாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். 

மேற்கண்ட உழவு சார்ந்த வரலாற்றுத் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன் அழிவிற்கான காரணம் என்ன? அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிவகைகள் என்ன? என்பதைத் தமிழ்ச் சமூகமும், அறிஞர்களும் ஆய்வு செய்ய முன்வர வேண்டும் எனும் அக்கறையை இந்நூல் வெளிப்படுத்தி இருக்கின்றது. 

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் நெல்மணிகளுடன்கூடிய நெற்கதிர்கள்  ஒட்டுருவமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த கிடைத்த நெல் மாதிரி கி.மு 450 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் மட்டுமல்ல, தமிழகத்தில் முதுமக்கள் தாழி எங்கெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் நெற்பயிருக்கான  சான்றுகள் கிடைத்துள்ளதாகக் கூறும் டி.தருமராஜன் கருத்தினையும் பதிவு செய்திருக்கிறார். 

ஈமச்சடங்கில் நெல்மணிகள் பயன்படுத்தப்படும் முறை கி.மு 2000 முதற்கொண்டே இருந்து வந்ததாகப் பல்வேறு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். இதிலிருந்து, நெல்லின் வரலாறே தமிழர்களின் வரலாறு என்பதை அறிய முடிகிறது. 

"பாண்டியம் (உழவுத் தொழில்) செய்வான் பொருளினும் " -கலித்தொகை. 

பள் - பண்டு - பண்டி - பாண்டி- பாண்டியன் என்று பள்ள நிலத்தில் உழவு செய்தவர்களே  பாண்டிய மன்னர்களாக ஆட்சி செய்தார்கள் என்கிறார் பாவாணர். பள் செய் என்பது, நன்செய் நிலம்; பள்ளமான நிலத்தில் வேளாண்மை; பச்சை (பசேல்) எனப் பல்வேறு பொருள் தந்து உழவுத் தொழிலையே குறிப்பதாகவும், இவ் உழவுச் சமூகத்தில் இருந்து தோன்றியவர்களே பள்ளர்கள், வேளாளர்கள், பாண்டியர்கள், வேந்தர்கள் என்கிறார் மா.சோ.விக்டர். 

"புலியெனக் கொடியில் இந்திரனை வைத்த அவனும்" என்ற கலிங்கத்துப் பரணியின் வரிகளால் சோழர்கள் இந்திர விழாவினைக் கொண்டாடினார்கள் என்றும், சோழர்களின் கொடியில்  உள்ள புலிச் சின்னமானது இந்திரனின் உருவம் (ஆயிரம் கண்ணுடையான்)  என்றும் இலக்கியச் சான்றுகளால் உறுதிப்படுத்தியுள்ளார். 

குடும்பன் - கிழான் - வேளிர் - மன்னன் என்ற படிநிலைகளில்  வேளாண் மக்கள்  ஆளும் அதிகாரத்தைப்  பெற்றதாகவும், ஊர்க் குடும்பனே மன்னராட்சியின் தொடக்கம் என்ற மா.சோ. விக்டர் அவர்களின்  கூற்றினைப் பல்வேறு தரவுகளின் மூலமாக விளக்கப்படுத்தியுள்ளார். 

அதுபோக, வேளாண் மரபினர்களுக்குக் கோயில்களில் வழங்கப்படுகின்ற முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல், மண்டகப்படி ,தேர் வடம் பிடித்தல், நாள் கதிர் வழங்கல், விதைக்கோட்டை வழங்குதல் போன்ற வழிபாட்டுச் சடங்குகள்  வேளாண் சமூகத்திற்கு மட்டுமே இன்றளவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதனை ஆய்வின் மூலமாகவே  வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

உலகுக்கு அச்சாணி போல இருந்து உணவு வழங்கும் உழவர்களே  சேர சோழ பாண்டிய வேந்தர் மரபினர்கள்  என்கிறது பிரபஞ்சனின் கூற்று. 

உழவு மள்ளர் திரண்டு...உழுங் காளைகள் பிடித்து....நல்லூர்த் தருமன்.... குளப் புரவில்  வயலில் செடியும் வெட்டி....மடை உயர்த்திப் புனல் நிறுத்தி.... கூடும் கடிகையில் நாளேரைப் பூட்டினரே...என்ற திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு நூலானது,  குடும்பர்களே  மள்ளர்கள் என்ற வரலாற்றையும், நல்ல நாள் பார்த்து, சித்திரை முதல்  நாளில் பொன்னேர் பூட்டிய நிகழ்வினையும்    சான்றாகப் பகர்கின்றது. இந்நிலையில், தமிழர்களின் சிறப்பு மிகுந்த பொன்னேர் பூட்டும்  நிகழ்வினை  ஆரிய வைதீகப் பண்பாட்டு நாளாக புனையப்பட்டதை எதிர்க்கிறார் நூலாசிரியர். 

ஆடிப் பெருக்கினை ( ஆடி 18 ) உழவர்களின் நீரியல் சடங்காகவும்,  மருத நிலத்தில் கிளைத்த பதினெண் குடிகளோடு சேர்ந்து  நீரினை வரவேற்கும் நீரியல் சடங்கு எனவும் விவரிக்கிறார். 

பொங்கல்  விழாவானது (அறுவடைச் சடங்கானது) வெறும் உணவு  சமைத்தலை மட்டும் குறிக்கவில்லை. உணவுப் பொருள், செல்வம், வளமை, செழிப்பு, உற்பத்தி சார்ந்த வளமையின் குறியீடு  என்று பலவாறு பொருள் கூறுகிறார். மேலும், உயர்தல் மேல் ஏறுதல், வளர்தல், விளம்புதல், செறுக்குறுதல், மகிழ்தல் என்று பண்பாட்டு ரீதியாகப் பல்வேறு பொருண்மைகளைப்  பொங்கல் விழா குறிப்பதாகவும்  கூறியுள்ளார். 

ஏறு தழுவுதல் என்பது மாடுகளும் மனிதர்களும் தழுவிக்கொள்ளும் வேளாண் உற்பத்தியின் வளமைச் சடங்கு என்று உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மாடு தழுவுதல் சடங்கு நிகழாவிட்டால் வானம் பொய்த்து, கடும் பஞ்சம் ஏற்படும் என்ற உழு குடியினரின் நம்பிக்கையை எடுத்துரைத்திருக்கிறார்.

இதன் மூலம்  தமிழ் நிலத்தில் கொண்டாடும் விழாக்கள் எல்லாமே உழவோடும், உழவர்களோடும்  பின்னிப் பிணைந்து இருப்பதனை அறிய முடிகிறது. 

மேற்கண்டவாறு, மரபுவழி வேளாண் குடியினரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, நிலத்தோடும் நீரோடும் வாழ்ந்த உழவியல் தொழில்நுட்பம், உழு கருவிகள் பயன்பாடு போன்றவை வியக்கும் வகையில் உள்ளன. நீர்ச்சடங்கு, உழவுச் சடங்கு,  நடவுச் சடங்கு, அறுவடைக் சடங்கு போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் உழவர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டிருப்பதனை மறுக்க இயலாத வரலாற்று ஆவணங்கள் மூலம் வலுப்படுத்தியுள்ளார். 

இந்த நெல்லின் மக்கள் வழிபடக்கூடிய தெய்வமாகிய வேந்தன் (இந்திரன்) வழிபாட்டு மரபு பற்றி "வேந்தன் மேயத் தீம்புனல் உலகம் "என்று தொல்காப்பியர் அடையாளப்படுத்துகிறார். 

விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரி. மண்ணுலக வேந்தர்கள் மக்களுக்கு அதிகாரி என்று வேந்தர் வழிபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேந்தன் என்பது மருத நிலத்தையும், வேளாண் மக்களையும் ஆள்பவனே வேய்ந்தன் (வேந்தன்) என்கிறார். 

சிந்து - சிந்திரன் என்பதே இந்திரனாகத்  திரிந்து இருப்பதாகவும், சிந்துதல் என்பது மழைப் பொழிவின் சிதறலையும், தெளித்தல், ஒழுகுதல் என்ற பொருளைத் தருவதாலும்,

சிந்து என்ற சொல்லுக்கு நீர் என்று பிங்கல நிகண்டு பொருள் கூறுவதாலும், மருதநிலத்தின் வேளாண்மைக்கான நீரையே இந்திரன் என வேளாண் மக்கள் வழிபட்டிருப்பதாகவும், அவ்வகையில், மருதநிலத்தின் வழிபடு தெய்வமாக இந்திரனே இருந்திருக்கிறது எனவும், அத்தகைய இந்திர வழிபாடே வேந்தன் வழிபாடு எனவும் உறுதிப்பட நிறுவியிருக்கிறார் நூலாசிரியர். 

இந்திரனை வேந்தன் என்ற பொருளில் திருவள்ளுவரும், இந்திரன் மழைத் தெய்வமாதலாலே வேந்தன் ஆனதற்குக் காரணம் என்ற கா.சு.பிள்ளை அவர்களின் கூற்றுக்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. 

மருதநிலத் தெய்வமான வேந்தனும் இந்திரனும் ஒன்றுதான்; அது தமிழர்  தெய்வமே என்கிறார் பி.டி. சீனிவாச ஐயங்கார். 

ஆரியர் வணங்கிய இந்திரன் இடி, மழை, மின்னல் தெய்வமாகும். இது, போர்க்கள வெற்றிக்கு உதவுவதாகவும், சோம பானத்தையும், விலங்கின் இறைச்சியையும் உண்பவராகவும் ஆரிய வழிபாட்டு மரபில் குறிக்கப்படுகிறது. ஆனால்,

தமிழர்கள் வணங்கிய இந்திரனோ  மழையின் பொருட்டு மட்டுமே வணங்கப்பட்டவர் என்று வேறுபடுத்திக் காட்டுவதோடு, இந்திரன் வழிபாட்டு மரபே பிற்காலத்தில் ஆசீவகத்தின் அய்யனார் வழிபாடாகப் பரிணமித்திருக்கிறது எனவும் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். 

இருக்கு வேதத்தில், இந்திரனுக்கு அதிகமான பாடல்கள் புனையப்பட்டுள்ள நிலையில், தமிழ் இலக்கியங்களில் ஏன்  பாடப் பெறவில்லை? 

வடக்கே இந்திரனைத் தெய்வமாக வழிபடும் மரபு அனைவருக்கும் ஆனதாக இருக்கும்போது, தமிழகத்தில் மருத நில மக்கள் மட்டும் வழிபடுவதற்கான காரணம் என்ன? 

ஆரிய வைதீக  மரபில் வேளாண்மையைப் பாவமான தொழிலாகக் காட்சிப்படுத்துகின்ற போது, தமிழர்கள் மட்டும் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாகப் பார்ப்பது  ஏன்? 

தமிழரின் பண்பாட்டு நடத்தைகள் நீரோடு தொடர்புடையது. ஆரிய வைதீக மரபினரின் பண்பாட்டு நடத்தைகள் நீருக்கு எதிரான நெருப்போடு தொடர்புடையது  ஏன்? என்பன போன்ற வினாக்கள் எழுப்பி,  ஆரியர்களின் இந்திரத் தெய்வம் வேறு; தமிழர்களின் இந்திரத் தெய்வம் வேறு எனத் தெளிவுபடுத்திக் காட்டுகிறது இந்நூல். 

"மண்ணகம் அருள வானகம் வியப்ப... விண்ணவர் தலைவனை விழுநீராட்டி" என்று, மழைத் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும்  சிலப்பதிகாரம், இந்திர விழவு எனப் பதிகத்திலும், விண்ணவர் கோமான் விழவு   என இந்திர விழவூரெடுத்த காதையிலும், மழையைக் குறிக்கும் இந்திரனே வேந்தன் எனும் பொருளில் வருவதாகப் பதிவு  செய்திருப்பதன் மூலம், இந்திரனும் வேந்தனும் வேறு வேறல்ல என்ற மெய்மையையும் நூலின் வழியே அறிய முடிகிறது. 

வானவர் கோமான், கரியவன், வலாரி, மருத்துவன், அரி, ஆகண்டலன், ஆயிரங் கண்ணோன் போன்ற இந்திரனின் பல்வேறு பெயர்களும் மழையோடு தொடர்புடையதாகவே இருப்பது மேலும் சான்றாகிறது. 

மேலும், இந்திரனைப் போகி என்ற பெயரில் அழைப்பது போலவே, வேளாண் உற்பத்தியைப் போகம் என்ற சொல்லால் அழைக்கும் மரபு உண்டு என்கிறார். வேளாண் விளைச்சல் தரும் தெய்வமான போகியை (இந்திரனை)  அறுவடைக்  காலத்திலும் மறவாது வழிபடும் சடங்கியல் மரபு என்பதாலேயே  போகிக்குக் காப்பு கட்டி வருகின்றனர் உழவர்கள். இவ்வாறு, போகியன்று காப்புக்கட்டுதலில் பயன்படுத்தப்படும் கூழைப்பூ, கண்ணுப் பூளை - கண்+பூ+இலை  (கண்ணுப் பூவிலை) என்ற பூவானது, ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருப்பதாலேயே போகி ( இந்திர விழா) அன்று காப்பு  கட்டப்படும் சடங்கியல் மரபு நிகழ்கிறது என்கிறார். 

மேலும்,  மழைக்காலத்தில் மட்டுமே  பூக்கக் கூடிய  இந்தப் பூவானது, வெள்ளை நிறத்திலான மழைத்துளிகள் கோத்தது போலவும், நீர் வழிவது  போலவுமான தோற்றத்திலான கூழைப் பூவினைக் காப்பு கட்டுவதற்கு உழவர்கள் தேர்வு செய்திருப்பது  வியப்பினைத் தருவதாக  உணர்ந்திருக்கிறார். 

வேளாண் மரபினர்களுக்கும் ஆரியர்களுக்குமான  பகையும் முரணும் வேளாண் நிலத்தை மையமிட்டு  நடந்த  தொழிற்பகையே காரணம் என்று அறியலாம்.

ஆரியர்கள் வாழ்கின்ற பகுதி குளிர்ப் பகுதி என்பதால்  தீ மூட்டுதல் (யாகம் வளர்த்தல்) நிகழ்வும், தமிழர்கள் வாழ்கின்ற பகுதி வெப்ப மண்டலப் பகுதி என்பதால்  நீராடல்  நிகழ்வும் நடைபெறுவதாகத் தொ. பரமசிவம் கூறுகிறார். மேலும், தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும்   பல்வேறு நிலைகளில் பண்பாட்டியல் ரீதியாகவே முற்றிலும் முரணாக இருக்கின்றது. இந்நிலையில், தமிழர் மரபில் இந்திரன் வேளாண் தெய்வமாகவும் - மழைத் தெய்வமாகவும் - நீர்த் தெய்வமாகவும் அடையாளப்படுத்தி வருகின்றனர். இதிலிருந்து தமிழ்  இந்திரன் வேறு; ஆரிய இந்திரன் வேறு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

வேளாண் மாந்தர்களின் மழைப்பொழிவைக் கணிக்கும்  திறன், நீர் சேமிப்பு, நீர்ச் சுழற்சி, நீரியல் சொற்கள் காட்டும் நீராதார அமைப்புகளின் பல்வேறு வடிவங்கள், நீர் மேலாண்மையில் உழவர்களின் பேரறிவு, முறைப்பானை  முறையில் நீர்ப் பங்கீடு, குமிழித்தூம்பு மூலமாக நீர் நிலையைப் பாதுகாக்கும் மடைச் குடும்பர்களின் வரலாறு என, உழவர் சமூகத்தின் நீரியல் சார்ந்த  நுட்பங்களும், வேளாண் சார்ந்த அனைத்துத் தரவுகளும் நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றன. 

நீர் மேலாண்மைப் பராமரிப்பு என்பது நீராணிக்கன்,  குடும்பர்கள், ஊர்ப் பொதுமக்களின் பொறுப்பில் இருந்தவரை நீர்நிலைகள் பாதுகாப்பாக இருந்ததையும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் சென்றபிறகே நீர்நிலைகள் முற்றிலுமாக அனாதையாக்கப்பட்ட நெடிய வரலாற்றை படிக்கின்ற போது, பூவுலகின் நலனுக்கு எதிரானவர்களாக மானுட சமூகம் நகர்ந்துகொண்டிருக்கும் வேதனையையும் நூல் விளக்குகிறது. 

உழுகுடியின் வாழ்வும், தொழிலும், கொடைத் தன்மையும் நிலத்தோடும் நீரோடும்  மட்டுமே பிணைக்கப்பட்டு இருப்பதனை வரலாற்று ஆவணங்கள் புலப்படுத்துகின்றன. 

வேளாண்  மரபினரின் பெயர் அடையாளம் என்பது உயர்வு தாழ்வு  காட்டுவதற்கு இல்லை. உயர்சாதிப் பகட்டுக்கு  உரியதும் இல்லை. இதில் வேளாண் சமுகத்தின் சுயமரியாதை, சமூக நீதிக்கான வேட்கை மட்டுமே நிரம்பியது என்ற எதார்த்தத்தை இந்நூல் முன்வைத்திருக்கிறது. 

உழவர் குடியினரில் பள்ளர் என்பது பொது வழக்குச் சொல்,  மள்ளர் என்பது இலக்கிய வழக்குச் சொல், வேளாளர் என்பது தொழில் பெயர்ச்சொல், தேவேந்திரகுல வேளாளர் என்பது பண்பாட்டு அடையாள அரசியல் சொல் எனப் பலவாறும் விளக்கப்படுத்தி, அறத்தின் வழி நின்று வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். மேலும், வேளாளர் என்பதற்கான அனைத்துத் தகுதிகளும் உரிமைகளும் வேளாண்மைத் தொழில் புரியும் உழவுக்குடிகள் யாவருக்கும் பொருந்தும் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது இந்நூல். 

அதோடு, வேளாண்மை உற்பத்திச் செயல்பாடு என்பது, பதினெண் குடிகளின் ஒருங்கிணைந்த கூட்டுச் செயல்பாடுகளே என்கிறார். அந்த வகையில், இன்று வேளாண்மை செய்து கொண்டிருக்கின்ற பள்ளர் (மள்ளர்), வன்னியர், கவுண்டர், வெள்ளாளர், முத்தரையர், அகமுடையார், மறவர், கோனார், பறையர் உள்ளிட்ட  பல்வேறு தமிழ்க் குடிகள்  ஒருங்கிணைந்து வேளாண் வளத்தைப் பெருக்குவதற்கு ஒன்றுபட வேண்டும்  என்ற வேண்டுகோளையும் முன்வைத்திருக்கிறது நூல். 

தமிழ்த் தேசிய எழுத்தாளர் மகாராசன் அவர்கள், உழவர் சமூகத்தின்  பண்பாட்டு வேர்களை நுட்பமாகவும், ஆழமாகவும், தெளிவாகவும், செறிவாகவும் அறவழியில்  நின்று, வேளாண் மரபின் தமிழ் அடையாளம் என்ற நூலின் வழியே  உழு குடியின் வரலாற்றை நேர் செய்திருக்கிறார். 

மானுடத்தின் முதல் இனமான தமிழர்கள் எல்லோருமே, குறிஞ்சியில் தோன்றிய குறவருக்கும், முல்லையில் கிளைத்த இடையருக்கும், மருதத்தில் பல்கிப் பெருகிய பள்ளருக்கும் மரபு வழியில் தோன்றியவர்களே  என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின்  கூற்றினை, நூலைப் படித்து  முடிக்கின்றபோது உணர முடிகிறது. 

அந்த வகையில், தமிழர்களின் வரலாற்றைத் தமிழ்க்குடியின்  தோற்றத்திலிருந்தே தேட வேண்டும். அதைவிட்டு விட்டு, நிகழ்காலத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை மட்டுமே மனதில் வைத்து வரலாற்றை நிருணயம் செய்வது என்பது, தமிழ்த் தேசிய  இனத்தின் மீட்சிக்கு உதவாது என்ற கருத்தியலைத் தெளிவாகப் புரிந்து கொள்ள  முடிகிறது.

இன்றைய சூழலில், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வேர்களையும், வேர்களில் தழைத்த இலைகளையும், கிளைகளையும், பூக்களையும், காய்களையும், கனிகளையும் தேடித்தேடி அதன் வரலாற்றுப் பெருமிதங்களை  மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அதன் வழியாக மட்டுமே தமிழ்ப் பேரினத்தின்  விடியலுக்கான வாசல் திறக்கப்படும்.  மேலும்,  இதுபோன்ற தொல் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டு மானிடவியல் நூல்கள் பல்கிப் பெருக வேண்டும். இவை தொடர்பான ஆய்வுகள் தமிழ்ச் சமூகத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே   தமிழ்ச் சமூகத்தின் உட்சாதிப் பகை மறையும்; தமிழர் நலன் சார்ந்த வாழ்வியல் பெருகும்; நலம் பெறும்; வளம் பெறும்.! 

இவ்வாறாக, பல்வேறு வரலாற்றுத் தகவல்களின் மூலமாக வேளாண்  மரபினரின் பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல், உழவுக் குடிகளின் வரலாற்றை நேர் செய்திருக்கும் ஆவணமாகவும் அறிவாயுதமாகவும் திகழ்கிறது.

நூலாசிரியர் மகாராசன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்; பாராட்டுகள். 

*

கட்டுரையாளர்:

செங்காந்தள் வீரராகவன்,

கல்விச் செயல்பாட்டாளர், தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதாளர், 

நாமக்கல்.

*

நூல் தலைப்பு:
வேளாண் மரபின்
தமிழ் அடையாளம்:
உழவுப் பண்பாடும்
வேளாளர் சமூக வரைவியலும்.

நூல் ஆசிரியர்:
ஏர் மகாராசன்

வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.

பதிப்பு:
முதல் பதிப்பு, அக்டோபர் 2021.

பக்கங்கள்: 224
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ: 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு
9080514506.


ஞாயிறு, 5 டிசம்பர், 2021

உழவாண்மை இயங்கியலை மிகச் சிறப்பாகப் பேசும் நூல் : மா.ஜெயச்சந்திரன்


மானுட சமூகம் உணவுதேடும் நிலையிலிருந்துஉற்பத்தி நிலைக்கு மாறியது, தொல்காப்பியனார் கூறும் தீம்புனல் உலகமெனும் மருத நிலத்தில்தான். அந்த மருதநில மக்களின் உழைப்பு, உற்பத்தி என்பதெல்லாம் உழவு உற்பத்திதான்.
அந்த உற்பத்தியாளர்களான 'தேவேந்திரர்' எனும் மள்ளர்/பள்ளர்/'பள்ளி' மக்களின் வாழ்வியலை, வரலாற்றை,
அவ் உழுகுடி மக்களின் பண்பாட்டு விழுமியங்களைத் தமிழிய வேர்களின் தடம் (வடம்) பிடித்து "வேளாண் மரபின் தமிழ் அடையாளம்" எனும் நூலில், அதன் நூலாசிரியர் திரு ஏர் மகாராசன் சிந்தையில் பொதுமையுணர்வோடும்,
தக்க வரலாற்றுச் சான்றுகளோடும், இலக்கியத் தரவுகளோடும்
மிக நேர்த்தியாக  எழுதியுள்ளார்.

ஏர்க்களம் / போர்க்களமாய் வாழ்ந்த இத்தமிழ்த் தொல்குடிமக்களின் வாழ்வியலை மிக வலிமையாகவும் எளிமையாகவும் பேசுகிற இந்நூல், 
மருதநில வேளாண் குடிகளான மள்ளர் / பள்ளர் / பள்ளி எனும்
உழுகுடிகளின் வரலாற்று எழுத்தாவணம்  என்றால் அது மிகையல்ல.

'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' என்னும் இந்நூலில், பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் உழவர்கள் பெற்ற இடம், அவர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, பயிர்த் தொழிலில் உயர்வு, பண்பாட்டு மேன்மை, வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக விரிவாகப் பேசும் ஏர் மகாராசன், பசியை ஒழிக்க  உழவர்கள், உழவுப் புரட்சியை  மேற்கொண்டதால்தான் மொழி வளம் பெற்றது; முத்தமிழ் சிறந்தது; பண்பாடு தோற்றம் பெற்றது; ஏற்றம் பெற்றது. உழவு என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு பண்பாட்டின் தொடர்ச்சி, நாகரீக வளர்ச்சி என்கிறார்.

அப்படிப்பட்ட வேளாண் உற்பத்திக்கு அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது வித்து. ஒற்றை விதைக்குள் அரூபமாய் ஒளிந்திருக்கும்  பல விதைகளை வெளிக்கொணரும் வித்தையைக் கற்றவர்கள் உழவுத் தொழில் மரபை, வாழ்வியல் மரபாகக் கொண்டிருப்பவர்கள் 'பள்ளர்கள்'தான் என்றும், 12,000 சாதி நெல் வகைகளை இந்த மள்ளர் எனும்  பள்ளர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்றும், அவர்களை காராளர், கருங்களமர் என்றெல்லாம் பழனி செப்புப் பட்டயத்தின் வழியும் பள்ளு இலக்கியங்களின் வழியாகவும் சான்று பகர்கிறார்.

காராளர்களின் 'ஏர் பூட்டல்' தொழிலான 'ஏர் நடத்தல்' சிறப்பானால்  எல்லாம் தானே நடக்கும், பசிப்பிணி ஒன்று மட்டுமே நடக்க மாட்டாது! என்கிறார்.

ஆற்றுநீர், ஊற்று நீர், மறைநீர் (Virtual Water), மழைநீர், வெள்ளமெனப் பெருகி, மருதநிலத்தை வளமாக்கியது. மண்ணும் நீரும் சேர்ந்தே உணவாகியது. அதுவே உயிர்களுக்குப் பசிப்பிணியைப் போக்கும் மருந்தாகியது! 'உழவுதான்' உணவைப் படைத்தது! 'உபரிதான்' வணிகத்தைத் தோற்றுவித்தது!

வழிபாட்டுச் சடங்காகவும்,
வாழ்த்துச் சடங்காகவும் இருக்கும் வேளாண் வளமைச் சடங்குகள்தான் தமிழர் பண்பாட்டின் தோற்றுவாய் எனவும், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களின் சேர்க்கைதான் வேளாண்மை.
மண்ணும் நீரும் பிசைந்து உருவானதே  உணவு,
'உழவாண்மை' என்றெல்லாம், வான் -மண் - உழவு இயங்கியலை  மிகச்சிறப்பாக இந்நூலில் பேசியுள்ளார் திரு ஏர் மகாராசன் அவர்கள்.

"பழுதுண்டு வேறோர் தொழிலுக்கு,
பழுதில்லா ஒரே தொழில் உழவு தான்!உழவு என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது ஒரு வாழ்வியல்.

உழவுப் பண்பாட்டு மரபு என்பது, நிலத்தோடும், நெல்லோடும், உழவோடும், மாடுகளோடும் பிணைந்த பன்னெடுங்கால அறிவும், உறவும், உணர்வும், உழைப்பும்தான் என்று கூறுகிறார் ஏர் மகாராசன்!

உழவின் மேன்மையை, உழவர்களின் சிறப்பை, உழுகுடி மக்களின் வரலாற்றை, பண்பாட்டு விழுமியங்களை  இந்நூல் முழுவதிலும் மிகச்சிறப்பாகப் போற்றியுள்ளார்! வாழ்த்துக்கள்.

கட்டுரையாளர்:
மா.ஜெயச்சந்திரன்,
கவிஞர் - அரசியல் செயல்பாட்டாளர்,
நாம் தமிழர் கட்சி,
ஈரோடு.
*
நூல் தலைப்பு:
வேளாண் மரபின்
தமிழ் அடையாளம்:
உழவுப் பண்பாடும்
வேளாளர் சமூக வரைவியலும்.

நூல் ஆசிரியர்:
ஏர் மகாராசன்

வெளியீடு:
யாப்பு வெளியீடு, சென்னை.

பதிப்பு:
முதல் பதிப்பு, அக்டோபர் 2021.

பக்கங்கள்: 224
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ: 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும்.

நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு
9080514506.

சனி, 4 டிசம்பர், 2021

வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : சாதிய நூல் அல்ல; தமிழர்களின் சரித்திர நூல் - இரா.அ.கரிகால மல்லன்


சங்க இலக்கியச் சான்றுகளும், அறிஞர்களுடைய கூற்றுகளும்,  மறுக்க முடியாத தரவுகளும், தமிழர் வாழ்வியலும் பின்னிப்பிணைந்த வரலாற்று நூலாகவும் சிறந்த படைப்பாகவும் திகழ்கிறது பெருமதிப்பிற்குரிய அண்ணன்  ஏர் மகாராசன் அவர்கள் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூல். 

வேட்டைச் சமூகத்தில் தொடங்கி, குறிஞ்சி வாழ்வையும் மருதநில வரலாறும் விரிவாக எழுதப்பட்ட வரலாற்று நூல் இது.

உழவனே கிழவன்; கிழவனே அரசத் தொடக்கம்.. அவனே வேந்தன். 

தமிழுக்கே இலக்கணம் படைத்த தொல்காப்பியனைத் தொடர்ந்து, தமிழ் இலக்கிய இலக்கணங்களைச் சான்றுகளாக எடுத்துரைத்து, அறிஞர் பெருமக்களைச் சாட்சிகளாகப் பதிவுசெய்து,  கும்மிப் பாடல்கள் உட்பட பல தரவுகள் இந்நூலுக்கு மெருகூட்டுகின்றன. 

நீருக்கும் நிலத்திற்குமான தொடர்பும், பொன்னேர் பூட்டும் வாழ்வியலும், நாற்று நடவும், விழாக்களும், அறுவடைப் பெரு விழாக்களிலும் இறைவனான சிவனும் பார்வதியும் முருகனும் நெல்லின் மக்களான பள்ளர்களாக எடுத்துரைத்தது, உழவுக்கு மறுக்க முடியாத அசைக்க முடியாத சான்றுகளாகும். 

நீர் மேலாண்மையைக் கட்டியெழுப்பிய குளத்துப்பள்ளனும் குமிழிப்பள்ளனும் மடைக்குடும்பனும் மறுக்க முடியாத சான்றுகளாக உள்ளனர். இந்நூலை, சாதிய நூலாகப் பார்க்க முடியாது. தமிழர்களின் சரித்திர நூல் என்பதே உண்மை. வேளாண் மரபின் தமிழ் அடையாளம்  வெற்று நூல் அல்ல; வெற்றி நூல். 

*

கட்டுரையாளர்:
இரா.அ.கரிகாலமல்லன்
தமிழர் மீட்புக்களம்,
தமிழர் நாடு.


வெள்ளி, 3 டிசம்பர், 2021

நவீனக் கவிதை மொழி - புரிதலுக்கான சில குறிப்புகள்: மகாராசன்.

தமிழில் தற்கால இலக்கியங்கள் எனும் வகையில் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் போன்றவை பெருமளவில் வந்து கொண்டிருப்பினும், அவை மிகக் குறைவான அளவில்தான் மக்களை எட்டுகின்றன. இலக்கியம் எனும் நீரோடைக்குள் நீந்தித் திரிகின்ற மீன்களைப் போல நிறைய இலக்கிய வகைககள் வந்து கொண்டு இருப்பினும், கவிதை என்கிற ஒன்று மட்டுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.


பல்வகைச் சூழல்களின் பிரதிபலிப்பாகவும் விளைவுகளாகவும் வெளிவருகிற கவிதைப் பனுவல்கள் இளைய தலைமுறையினருக்குக் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை வாசிப்புக்கு உட்படுத்தி உள்வாங்கிக் கொள்ளும் போதிய புரிதல்நிலை அவர்கள் வசம் வாய்க்கப் பெறுவதில்லை. இதற்குக் காரணமாக, படைப்பாளியின் மனவெளியை உட்கிரகித்துக் கொள்ளுதலின் போதாமைகள், கவிதை என்றால் என்ன? என்கிற கேள்விகளுக்கான பதிலிருப்புகளின் வலைகளுமே முன் நிற்கின்றன.


வாழ்க்கையின் இயங்கு தளத்தினூடாகக் கடந்து செல்லும் போது, ஏதோ ஒன்றில் மனம் பதிந்து கொள்கிறது. அதைவிட்டு வெளியேற முடியாமல் அதுவாகவே கருத்தரித்து வெளிவந்து - மொழி அலகுகளால் இயங்கு தளத்தின் அனைத்துப் பரப்புகளையும் சுருக்குப்பை முடிச்சாகக் கட்டிக் கொண்டு, ஒரு விதையாக வேர்விட்டுக் கிளைத்துப் பரவக்கூடிய மனவெளியைக் கொண்டிருப்பது கவிதைத் தளம். இன்னும் கூடுதலாகச் சொல்வதானால், மனித அழகியலின் உள்ளுணர்வுகளைக் கிளர்த்துவது கவிதை.


தான் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள், உள்ளக் கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணை சேர்த்துக் கொண்டு புறத்தே வந்து விழுகிறபோது கவிதையாகப் பிறக்கிறது. இத்தகையக் கவிதைகள் தனக்கான ஒரு வடிவத்தை நிலையாக வைத்துக் கொண்டதில்லை.


தமிழின் சங்க காலத் திணை நிலைக் கவிதைகள்கூட ஒரே மாதிரியான வடிவத்தில் இருப்பது கிடையாது. சங்கம் மறுவிய காலத்தில் தோற்றம் கொண்ட அறநிலை பேசுகிற கவிதைகள் சுருக்கமான வடிவத்தைப் கையாண்டன. இப்படியாகத் தமிழ்க்கவிதையைக் குறிப்பிட்ட வடிவத்துக்குள் நிலை நிறுத்தம் செய்ய முடியவில்லை. அப்படி நிலைநிறுத்தம் செய்வதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. தமிழின் கவிதைப் போக்குகள் பல்வகை வடிவங்களைச் சோதித்துப் பார்த்திருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது ‘புதுக்கவிதை' தோற்றம். மரபுக்கவிதை வடிவத்திலிருந்து விலகிப் ‘புதுக்கவிதை வடிவத்தைக் கையாண்டபோது எதிர்ப்புகள் கிளம்பின. கவிதைத் தன்மையைச் சிதைவுக்கு உட்படுத்தக்கூடிய வடிவம் என்று புதுக்கவிதை வடிவத்தைச் சாடினார்கள். அம்மாதிரியான விமர்சனங்களுக்கிடையே புதுக்கவிதை தனக்கான இடத்தை நிரப்பிக் கொண்டது மட்டுமல்லாமல், மரபுக் கவிதைகளின் தன்மைகளைக் காட்டிலும் கூடுதலான செறிவைத் தர முடிந்திருக்கிறது. மரபுக் கவிதைகளில் காணலாகாத பல்வகைத் தன்மைகளை நிகழ் காலத்தியக் கவிதைகளில் பார்க்க முடிகிறது.


பழைய மரபுகளைக் கடந்து புதியன வருகிறபோது அது நவீனமாகிப் போகிறது. அந்தந்தக் காலகட்டத்தில் தோன்றக்கூடிய இலக்கியங்கள் அந்தந்தக் காலத்தின் நவீன இலக்கியமாகிக் கொள்கின்றன. இப்படி, ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளியான கவிதைகள் அதற்கான மொழி அடையாளங்களோடு அமைந்திருக்கின்றன. ஆக, கவிதைக்கான மொழி என்பது பல்வேறு தன்மைகளைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. இன்றைய சூழலில் வெளிவருகிற கவிதைகள் புதுமாதிரியான மொழியைக் கொண்டிருக்கின்றன. இதுவரையிலும் காணலாகாத மொழியின் சொல்லாடல்கள் தற்காலக் கவிதைகளில் தென்படுகின்றன. இம்மாதிரியான கவிதைகளைத்தான் நவீனக் கவிதை என்கிறார்கள். தற்காலத்தியக் கவிதைகள் யாவும் புதுக்கவிதை என்கிற வடிவத்தோற்றத்தில் இருந்தாலும், அதனுள் பொதிந்திருக்கும் மொழிப் புழங்கல் நவீனமாக அமைந்திருக்கிறது. தமிழ்க் கவிதை மரபு சொல்லாமல் விட்டுப்போன - சொல்லாத பல வெளிகளை - உணர்வுகளை - அனுபவங்களைத் தற்காலக் கவிதைகள் பதிவு செய்கின்றன. இதைத்தான் எழுத வேண்டும் என்கிற எந்த வரையறுப்புகளும் இல்லாமல், எதைப் பற்றியும் எழுத்தில் வெளிக்கொணரும் சுதந்திரப் போக்கு நவீனக் கவிதைகளில் தென்படுகின்றன. ஆக, தற்காலத்திய வாழ்க்கை நவீனமயமாகிக்கொண்டிருக்கும் சூழலில், நவீன வாழ்வின் பிரதிபலிப்பாக இன்றைய கவிதைகள் இருப்பதனால் அதை நவீனக் கவிதைகள் எனச்சுட்டலாம். 


மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப் போல இன்றைய நவீனக் கவிதைகள் பல திசைவெளிகளில் வேர்களாய்க் கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது. மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக் கொண்டிருந்தாலும், அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழுந்த கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து, அக்கூடுகளின் துளைகள் வழியே உலகத்தைப் பார்ப்பது போன்ற உணர்வுகளை இன்றைய நவீனக் கவிதைகள் தந்து கொண்டிருக்கின்றன. படைப்பாளியின் இம்மாதிரியான உணர்வுகள் வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன. அதுமட்டுமல்லாமல், புதிய உணர்வோட்டங்களையும் - நிகழ் காலத்தின் இயங்கு ஆற்றலையும் அவை தந்து கொண்டிருக்கின்றன. நவீன வாழ்க்கையின் நடப்பியல் பின் புலங்களைத் தோள் பிடித்துக் கொண்டு அகத்தில் ஏற்படுகிற உணர்வோட்டங்களைப் புனைவுகளாக்கித் தருகின்றன இன்றைய கவிதைகள்.


ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது. இத்தகைய தனித்த கவிதைப் பனுவல் எனும் வாசனையைத் தாண்டி ஒரு கவிதைப் பனுவனுக்குள் பல பனுவல்களை ஏற்றிக் கொள்வதற்குப் பல வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது இன்றைய கவிதைமொழி. அது மட்டுமல்லாமல், படைப்பாளியின் மனவெளிக்குக் கவிதையின் ஊடாக வாசகனை அவ் வெளிக்கே அழைத்துச் செல்வதற்கும் தன் பயணத்தை நீட்டித்திருக்கிறது.


ஒரு பனுவலுக்குள் இயங்கும் பல்வேறு பனுவல்களின் வெளிகளுக்குள் அரசியல், ஆன்மீகம், பொருளியல், சமூகம், உற்பத்தி உறவு, பண்பாடு, மொழி என எல்லாமும் விரவிக் கிடக்கின்றன. இவற்றின் பக்கங்களில் எல்லாம் அலுப்படையாமல் மிக இலகுவாகக் கைகோர்த்துக் கொண்டு திரிவதற்கு இன்றைய நவீனக் கவிதைமொழி இடம் கொடுத்திருக்கிறது. சொற்களைக் கொண்டு கொலுவாக்கும் படிமங்களின் சலனங்கள் சொற்களற்ற மவுனங்களிலிருந்தும் எழும்பும்படிச் செய்து, ஒவ்வொரு கவிதையின் வெளியிலிருந்தும் சட்டெனத் தரையிறங்க முடியாத நிலையினையும், நெருங்க முடியாத தளத்தின் பக்கம் ஒட்டி நின்று பார்க்கும்படியாகவும் நவீனக் கவிதைகள் தளம் அமைத்துக் கொடுக்கின்றன.


வாழ்வின் சகலத்திலும் அரும்புகளாய்ப் பழக்கிக் கொண்டு அதை அதனதன் இயல்பென்று விட்டுவிடுகிற உயிரியல்ல மனிதர். மனித வாழ்வின் மாற்றத்திலிருக்கும் பல தளங்கள் அணுகமுடியாத புகைச் சுருள்களாக மாறுகின்றன. எல்லாத் தளங்களும் மனிதமயமாகிப் பேசிக் கொண்டிருக்கின்றன; மவுனத்தோடு உணர்வுகளை எழுப்பும் உறவுகளைத் துலக்கிக் கொண்டிருக்கின்றன. நம்மோடு தொடர்புகொள்ளப்பட்டவைகளோடுதான் நாம் நமக்கான பொருள் கோடலைக் கொண்டிருக்கிறோம் என்பதும், பல தளங்களை மறுத்துவிட்டு ஒரு தளத்தோடு நின்று போவதில் செழுமையான வாழ்வின் நாலாவிதத்திலும் பாய்ந்து விடக்கூடிய கற்றைகள் இல்லை என்பதுவுமாக அவிழ்கின்றன நவீனக் கவிதைப் புலப்பாடுகள்.'


ஒவ்வொரு மனிதரையும் குறைந்த அளவு இகழ்ச்சியோடும் அதே அளவு புகழ்ச்சியோடும் சந்திக்கவோ பழக நேரவோ தயாரிக்கப்பட்டுவிடும் மன அமைப்பில் மனதை அதன் தன்மையுடன் புரிந்துகொள்வதற்கு நவீனக் கவிதைகள் உதவக் கூடும். மனித வாழ்வின் இருத்தல் குறித்த கேள்விகளையும் பதில்களையும் தருவித்துப் பார்க்கிறபோது, தொலைந்துபோகும் அடையாளத்தைத் தொன்மம் வந்து தொட்டுத் துலக்குவதைப் போல உளறிக் கொட்டுகிறது நவீனக் கவிதைகளின் மொழி.


அறிவை மறந்துவிடக் கூடிய பாவனையில் உணர்வை ஆளக்கூடிய இன்றைய நவீனக் கவிதைகளைக் குறித்துச் சொல்லிக் கொள்வதற்கு நிறைய இருந்தாலும், நவீனக் கவிதை குறித்து மவுனங்களும் புறக்கணிப்புகளும் வந்து கொண்டே இருக்கின்றன. நவீனக் கவிதை குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிற ஒன்றாகவும் ஆகிப்போயிருக்கிறது. நவீனக் கவிதைகள் குறித்த மவுனங்களுக்கான காரணம் என்ன? தனி உலகின் கண்களாக நிற்கக் கூடிய படைப்பாளியின் மனவெளியை வாசக மனதின் அறிவின் வழியாகவும் உணர்வின் வழியாகவும் அறிந்து கொள்ள முயல்கிற சூசகம் எல்லோருக்கும் ஒரே கனப் பொழுதில் வெவ்வேறு மனித மனங்களுக்குள் வேறுவேறான சிந்தனை ஓட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரே மாதிரியான அனுபவங்களோ உணர்வுகளோ எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எல்லோருமே வேறுவேறான மனநிலைகளைக் கொண்டிருக்கும் ஒரு கவிதைப் பனுவல் சட்டென எல்லோருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தைத் தருவதில்லைதான். இருப்பினும், கவிதையைப் பற்றிக்கொள்வதற்கான தும்புக் கயிற்றையாவது பிடித்துக் கொண்டால் கவிதையின் பின்னே செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு கவிதையைச் சட்டெனப் படித்துவிட்டு விலகிப்போக நினைக்கிற போதுதான் பிரச்சினைகளே ஏற்படுகின்றன. கவிதைக்குள் பயணிக்கும் போதுதான் கவிதையை உணர்ந்துகொள்ள முடியுமே தவிர, கவிதைக்கென உரைகளை வழங்க முடியாது. இங்கே, படைப்பாளியை உச்சானிக் கொம்பில் வைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. படைப்பாளியைத் தோற்கடிக்க வேண்டும் என்றோ, அல்லது வாசகர் தோற்றுப் போக வேண்டும் என்றோ கங்கனம் கட்டிக் கொள்ளாமல், தோற்பது போன்றும் மீறுவது போன்றும் காட்டக்கூடிய பாவனை மனம் வாய்க்கப் பெறும் போதுதான் கவிதையோடு நெருங்க முடியும்.


படைப்பாளியிடம் அறிவெல்லையில் தோற்கக் கூடியதான பாவனை வாசகரிடம் வினையாற்றும்போதுதான், படைப்பாளியைத் தாண்டி படைப்பாளர் வரையறுக்காத பல வெளிகளில் வாசகரால் அனுபவங்களைப் பெற்று கேள்விகளையும் கேட்க முடியும். இங்கே, வாசகரிடம் கவிதைப் பனுவல் பெண்ணும் ஆணுமான ஓர் உடல் உயிரியாய் மாறிப்போகிறது. இதனால்தான் கவிஞரின் மனவெளியை வாசகர் தன்வயப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போகிறார். இதன் விளைவாக, தன் பாதையிலான தன்வயப்படுத்துதலில் புதிய திசைகளில் பயணிக்க முடிகிறது. இச்சூழலில் வாசகர் இன்னொரு படைப்பாளியாய் ஆகிக்கொள்கிறார். கவிஞர் படைத்திருக்கக்கூடிய வெளியில் வாசகர் தனக்கான உலகத்தை அனுபவிக்கிறார். இங்கே, கவிஞர் வாசகர் என்ற உறவுநிலையில் உலகங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரியான நிகழ்வுகளை எல்லாம் கவிதைகளே சாத்தியப்படுத்துகின்றன.


சூனியத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது. அதுபோல, ஒரு கவிதை என்பதும் அந்தரத்திலிருந்து விழுவதல்ல. சமூக நிகழ்வுகளின் கற்றைகளில் இருந்துதான் தனக்கான பச்சையங்களைத் தயாரித்துக் கொள்கிறது கவிதை. எப்போதுமே கவிதை ஒரு குறிப்பிட்ட சுவையைக் கொண்டிருப்பதில்லை; கொண்டிருக்கவும் முடியாது. சட்டகப்படுத்தப்படுகிற மலட்டுக் கனிகளை இன்றைய கவிதை தர முடியாது; தரப்போவதுமில்லை. இதைத்தான் பயன்படுத்தவேண்டும் என்கிற அதிகாரத் தொனிக்கு இன்றைய கவிதை பணியப் போவதுமில்லை.


கவிதை எந்தப் புள்ளியிலிருந்தும், எங்கு வேண்டுமானாலும் தோன்ற முடியும். ஆக, உயிரை - உணர்வை - உடலைக் கொண்டிருக்கக்கூடிய வாழ்க்கைத் தளத்தில் தான் பிணமாவதைத் தவிர்த்துக்கொள்ள பரிமாணம் அடைந்து கொண்டிருக்கிறது கவிதை. ஏனெனில், கவிதை என்பது மனிதரால் உருவாக்கப்படுவது; கவிதை என்பது மனிதமொழி. மனிதரால் மொழியப்படும் இம்மாதிரியான கவிதைகள் சமூகத்திற்குத் தேவையான வகையிலோ அல்லது சமூகத்திற்குப் புறம்பான வகையிலோ கருத்தியல்களைத் திட்டமிட்டோ திட்டமிடாமலோ விதைத்துச் செல்கின்றன. இத்தகைய நவீனக் கவிதைகளினால் சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் நிரம்ப இருக்கின்றன. இருப்பினும், நவீனக் கவிதைத் தளம் கண்டுகொள்ளப்படாத / புறக்கணிக்கப்பட்ட / ஒதுக்கப்பட்ட புள்ளிகளையும் கவனப்படுத்திச் செல்கின்றது. இத்தகைய நவீனக் கவிதைகள் குறித்துப் பேசியவர்கள் -பேசிக்கொண்டிருப்பவர்கள் பல்வேறு புள்ளிகளைத் தொட்டுக் காண்பித்திருக்கிறார்கள். ஆனாலும், ஒவ்வொருவரின் கருத்தாடல்களும் வேறுவேறு திசைகளில் பயணிக்கக் கூடியவை என்றாலும், நவீனக் கவிதைகள் குறித்துப் புரிதலுக்கு வழிவகுக்கக் கூடியவை. 


நவீனக் கவிதைத் தளத்தில் பலர் இயங்கிக் கொண்டிருந்தாலும், கவிஞர் அபி மிக முக்கியமானவர். அவரின் உரையாடல் நவீனக் கவிதைமொழி குறித்து மேலும் சில புரிதல்களுக்குப் பாதை அமைக்கும்.


"நான் கவிஞனாக ஆனதற்குக் காரணம் என் வளர்ப்புச் சூழல். எனக்குச் சகோதரிகள் மட்டுமே இருந்த காரணத்தால், எனது சிறுபருவ விளையாட்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்காக வெளியில் நண்பர்களைத் தேடிச் செல்ல வேண்டியதாயிற்று. நான் பழகிய நண்பர்கள் மிகவும் முரட்டுக் குணம் வாய்ந்தவர்களாக இருந்தபடியால், தொடர்ந்து அவர்களிடம் பழகிட என் பெற்றோர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இதனால், எனக்குள்ளேயே ஒரு நண்பனை உருவாக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று. வயதில் முதிர்ச்சி அடைந்த பிறகும் எனக்குள் முதிர்ச்சி ஆகாமல் இருந்த சிறுவனின் அனுபவம்தான் என்னுடைய கவிதை.


எனது சொந்த ஊரான போடி நாயக்கனூரில் அமைந்திருந்த இயற்கைக் காட்சிகளானது என்னை அவைகளோடு பேசத் தூண்டிவிட்டன. தனிமையின் மூலமாக இயற்கையோடு கொண்டிருந்த உறவும் உரையாடலும்தான் என்னுடைய கவிதையாக இருக்கின்றது.


எனது கவிப்படைப்பின் துவக்கத்திற்கு யாரும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்றே கூறலாம். எனினும், ஒரு ஆறு ஏழு வயதுச் சிறுவன் பெரும் உதவியாக இருந்ததை நான் மறுத்துவிட முடியாது. அவன் யாரெனில், அவன் என் ஊரைச் சார்ந்தவன் - என் வீட்டைச் சார்ந்தவன் - சரியாகச் சொல்லப் போனால் அவன் நானேதான். என் கவிதைகளில் கையாளப்பெறும் மொழி நடையானது பெரிய அளவில் புரிதல்களுக்கு வழி செய்வதில்லை என்றதொரு குற்றச்சாட்டு தொடர்ந்து என்னிடம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.


நம் வாழ்வின் அன்றாடப் புழக்கத்தில் உள்ள மொழி நமது உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் உள்ளவாறே புலப்படுத்துவதற்கு இயலாத வகையில் அமைந்திருக்கிறது. மொழியானது ஏற்கனவே இருப்பதுதானே தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்படுவது இல்லை. இருக்கின்ற மொழியைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள நாம் முயலுவதில்லை. தற்காலத்தில் நடப்பில் இருக்கின்ற மொழிப் பயன்பாடானது நவீனப் பிரஞ்ஞையைப் பிரதிபலிக்கவோ, சொல்லவந்த விசயத்தை நேரடியாக மனதினுள் பாய்ச்சவோ போதுமானதாக இல்லை. பரவலாகக் கையாளப்பெறும் மொழியானது வார்த்தைகளின் வீச்சை முழுவதுமாக வெளிப்படுத்தும் தன்மை குறைந்தனவாக இருப்பதால்தான், மொழியை வளைத்து அர்த்தச் செறிவு மிக்க நவீன மொழியை நான் தேடித் தருகிறேன்.


என்னிடம் எழுப்பப்படும் மற்றொரு வகைக் கேள்வி, என் கவிதைகள் இருண்மைத் தன்மையாக இருக்கிறதே என்பது.


கவிதைகளைப் புரிந்துகொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும்; அத்துடன் அதற்கான உழைப்பும் வேண்டும். முயற்சி இன்றிக் கிடைக்கும் பொருட்களுக்குச் சமூகத்தில் மதிப்பு குறைவுதானே. இவ்விடத்தில் ஒன்றை நினைவுபடுத்தலாம். அமெரிக்கப் படைப்பாளியான வுர்ஜினியா வுல்ப் என்பவரிடம் ஒரு வாசகர், "உங்கள் படைப்புகளை மூன்றுமுறை வாசித்தும் புரியவில்லையே' என்றாராம். அதற்கு வூல்ப், நான்காவது முறை வாசியுங்கள் என்றாராம்.


புரிந்து கொள்ள முடியாதது என் கவிதைகள் மட்டும்தானா? இருண்மை என்பது கவிதையில் மட்டுமல்லாமல், இன்றைய வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய ஓர் அம்சம்தான். நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சிறுசிறு நிகழ்வுகளின் அர்த்தங்களைக்கூட நம்மால் எட்ட முடிவதில்லையே? நாம் வாழ்க்கையை எவ்வாறெல்லாம் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோமோ, அதைப் போலவே ஒரு கவிதையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


வாசகனுக்குப் பரிச்சயமில்லாத அனுபவங்கள், ஒரு பொருள் குறித்த படைப்பாளியின் முற்றிலும் வேறுபட்ட நோக்குநிலை, அதனை அவன் வெளிப்படுத்தும் விதங்கள் போன்றவை படைப்பை அணுகுபவனுக்குத் தடைகளாக அமைவதுண்டு. எனவே, புரிதல்களுக்கான முயற்சியும் முறையான பயிற்சியும் இங்கு அவசியமான ஒன்றாக அமைகின்றது.


என் கவிதைகள் சொற்பமான அளவுள்ள, கல்வி அறிவு மிக்க அறிவு ஜீவிகளை மட்டுமே சென்றடைகிறது என்ற விமர்சனமும் உண்டு. இவ்விடத்தில், கலை கலைக்காகவா? மக்களுக்காகவா? என்றதொரு கேள்வியைப் பலரும் எழுப்பிக்கொண்டிருக்கும் சூழலில், கலை மக்களுக்கானதே என்று நான் கூறுவேன். ஆனால், அது பெரும்பான்மையான அல்லது எல்லா மக்களுக்குமானது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.


தத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அறிவுத் துறைகள் பல மக்கள் வளர்ச்சிக்கு உரியவை என்றாலும், அவை எல்லா மக்களுக்கும் சென்று சேர்வதில் சாத்தியம் குறைவு. அதைப்போலவே எல்லாக் கவிதைகளும் எல்லா மக்களுக்கும் சென்று சேர்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.


நல்ல கவிதை எதுவெனில், பன்முக வாசிப்புக்கு உட்படுவதாக - காலம் கடந்து நிற்பதாக - பலவித அர்த்த நுட்பங்களைத் தம்முள் அடக்கியதாக கால ஓட்டத்தில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையதாக இருக்கும் கவிதை எதுவோ, அதுவே நல்ல கவிதை எனலாம்."


கவிஞர் அபியின் இந்த உரையாடலில், இருண்மை - புரியாத மொழிநடை குறித்த விளக்கங்கள் நவீனக் கவிதை மொழி குறித்தானவை.


கவிதையில் புதைந்திருக்கும் இருன்மைத் தன்மை - புரியாத நடை என்பவை கவிஞர் அபியின் கவிதைகளில் மட்டுமல்ல. தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கிற நவீனக் கவிதைகள் பெரும்பாலானவை இப்படியான இருன்மைத் தன்மையோடும், புரித்துகொள்ள முடியாத மொழிநடையுடனும்தான் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன.



ஒரு படைப்பாளி பிறருக்குப் புரியக்கூடாது என்பதற்காகத்தான் எழுதுகிறாரா? நிச்சயமாக அப்படி இருக்க முடியாது எனில், பிறகு ஏன் நவீனக் கவிதைகள் புரிவதில்லை? இப்படியான கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளை இது. சங்ககாலத் திணை நிலைக் கவிதைகளில் காணலாகும் 'அகக் கவிதைகள்' முழுவதுமான அகவெளியைக் கொண்டு பின்னப்பட்டவை. ஒவ்வொரு அகக் கவிதையும் படைப்பாளியின் அகவெளியைக் கொண்டிருக்கின்றன. அக்கவிதைகள் வெளிவந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகியும்கூட, அக்கவிதையின் அகவெளிக்குள் போக முடியாத நிலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆக, புரியக்கூடாது என்று யாரும் எழுதுவதில்லை. நவீன வாழ்க்கையின் எந்திர ஓட்டங்களோடு பழகிப் போனதன் விளைவாக, ஒரு கவிதை எப்போதுமே நேரிடையான பொருளைத்தான் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். யாருமே கவிதையைப் புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்யாமல் கவிதையையும் படைப்பாளியையும் குற்றம் சாட்டுகிறார்கள்.


ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள ஏன் முயற்சி செய்ய வேண்டும்? ஒரு கவிதைக்குள் இருப்பது சொற்கள் மட்டுமல்ல; சொற்கள் விவரித்துச் செல்லும் அனுபவங்களும் உள்ளே புதையுண்டு கிடக்கின்றன. ஒருவருக்கு வாய்க்காத அனுபவம் கவிதையின் வழியாகவும் பெற்றுக்கொள்ளக் கூடும்.


ஒருவருக்கு வாய்க்கிற தனிமைச் சூழல் அதனுள் முளைத்திருக்கும் மவுனத்தின் கனங்கள் - அதிலிருந்து வெளிக் கிளம்பும் ஆழமான பார்வை போன்றன எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இந்த வாய்ப்புகளைக் கவிதை வாசிப்பு தருவதற்கு முயற்சி செய்யும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான - வேறுபட்ட அனுபவங்கள் புதையுண்டு கிடக்கின்றன. கவிஞர் தனக்குள் புதைந்திருக்கும் அனுபவத்தைக் கவிதையாக்கி விடுகிறார். அக்கவிதையினுள் நுழைந்து வெளியேறும் திறனுள்ளவர்கள் கவிதையை இரசிக்கிறார்கள்; திறன் குன்றியவர்கள் அதனை மறுதலிக்கிறார்கள் - இருளுக்குள் நுழைந்ததாக உணர்கிறார்கள். உணராத அனுபவத்தை உணர முடியாத அனுபவத்தை எவ்வித முயற்சியும் இன்றிப் படிக்கிற போது புரியாத மொழியாகிப் போகிறது.


ஒரு கவிதை புரிந்தேதான் ஆக வேண்டும், அல்லது புரியும்படிதான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்க முடியாது. ஏனெனில், கவிதைப் படைப்பு என்பது படைப்பாளியின் சுதந்திரத் தன்மையோடு தொடர்புடையது. ஒரு கவிதை எப்பொழுது புரிதலை ஏற்படுத்துமோ அப்போது அதைப் புரிந்து கொள்ளலாம். அதற்காகப் புரியாத கவிதைகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.


இங்கே, இன்னொன்றைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். நவீனக் கவிதை என்பது எல்லா நுண் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. நவீனக் கவிதைமொழியைப் பொறுத்தவரையில் எப்படி எழுதுவது என்பது குறித்துப் பிரச்சினை இல்லை. எதை எழுதுவது? எதற்காக எழுதுவது? என்ன விளைவுகளை உண்டாக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில்கள் வருகிற போதுதான், நவீனக் கவிதைகளின் சமூகப் பயன்பாடு குறித்துப் பேசமுடியும்.


நவீனக் கவிதைமொழியின் சமூகத் தேவையைச் சமூகமே தீர்மானித்துக் கொள்ளும். எது சமூகத்திற்குப் பயன்படுமோ அதுவே சமூகத்தின் மதிப்பைப் பெறமுடியும். நவீனக் கவிதைகளைப் பொறுத்தவரையிலும் அவற்றின் பயன்பாடு என்பது காலத்தால் தீர்மானிக்கப்படுவதுதான். ஏனெனில் எதுவொன்றும் நிலையானதாக இருக்க முடியாது. எல்லாமே மாற்றத்திற்குட்பட்டதுதான். இது நவீனக் கவிதைகளுக்கும் பொருந்தும்.


உலகம் இயக்கத்தால் ஆனது, உலகில் உள்ள யாவையும் இயங்குகின்றன. இயற்கைக்குள் செயற்கையுமாக மனிதரின் மனமும் உடலும் இயங்கி இயங்கி வரலாற்றின் மிகச்சிறு நுகர்வுப் புள்ளிகளை உண்டாக்குகின்றன. வரலாற்றின் சந்ததிகள் அதே இயக்கத்தில் மாற்றத்தைக் கோரும்போது இயக்கம் சூடு பிடிக்கிறது. இயக்கத்திற்கு அவசியம் மாற்றம்; இயக்கத்தை விழிப்படையச் செய்வது மாற்றம் இத்தகைய மாற்றத்தைக் காலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.


இம்மாற்றத்தை உடனடியாகவும் சமூகம் ஏற்றுக் கொண்டதில்லை. புதியனவற்றின் வருகை பழையவற்றின் மீது கேள்விகளைக் கேட்கிறபோது, புதியவற்றைப் பிழையென்றே மரபுகள் முடிந்தளவு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. நவீனக் கவிதைகளுக்கும் ஏறக்குறைய இதே நிலைதான். இருப்பினும், நவீனக் கவிதைகளின் வருகையினையும், அவற்றின் நன்மைகளையும் முடக்கிப் போட முடியாது.


நவீனக் கவிதை மொழியை குறித்துப் பேசிக்கொண்டே போகலாம். இதுதான் - இப்படித்தான் நவீனக் கவிதைமொழி இருக்க வேண்டும் என்ற வரையறுப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.


நவீனக் கவிதை மொழி குறித்துச் சுருக்கமாகச் சொல்வதெனில், ஒரு படைப்பாளி தம் அனுபவத்தைப் படைப்பாக ஆக்கித் தரும்போது, அதைப் படிக்கிற வாசகர் படைப்பாளியின் அனுபவத் தளத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. அக்கவிதைப் பனுவலைத் தனக்கானதாக எடுத்துக்கொண்டு அப்பனுவல் வாசிப்பில் தானும் படைப்பாளியாய் ஆகிக் கொள்கிறார். தனிப்பட்ட அனுபவம் என்று தனித்து இல்லாமல் தன் அனுபவத்துடன் பனுவலை வாசிக்கும் வாசகரும் படைப்பாளியாய் உருமாற்றம் கொள்கிறார். இம்மாற்ற நிகழ்வைக் கவிதைகளே சாத்தியப்படுத்தும். சுருங்கச் சொன்னால், எல்லாத் திசை வெளிகளின் வலிகளையும், மகிழ்ச்சிகளையும், கனவுகளையும், : மறுக்கப்பட்டவை / ஒடுக்கப்பட்டவைகளின் உணர்வுகள் - அனுபவங்கள் - அழியாக் காலத்தின் உறவுகளும் நவீனக் கவிதைமொழியாய் வடிவம் கொண்டு தமிழைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது எனலாம்.

*

(குறிப்பு: கட்டுரையில் இடம்பெறும் கவிஞர் அபியின் உரையாடல் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புல இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலந்துரையாடியபோது பதிவு செய்யப்பட்டது. 2002 இல் முதுகலை பயில்கிற போது எடுக்கப்பட்ட குறிப்புகள்.

*

இக்கட்டுரை, கீழிருந்து எழுகின்ற வரலாறு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.


கீழிருந்து எழுகின்ற வரலாறு, மகாராசன், முதல் பதிப்பு, 2006, பரிசல் வெளியீடு, சென்னை.)