திங்கள், 2 செப்டம்பர், 2019

பிள்ளையார் வழிபாடு: ஆரியப் பண்பாடு வேறானது; தமிழர் பண்பாடு வேறானது :- மகாராசன்



உ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

பிள்ளையார் சுழியாகக் கருதப்படும் ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள  உயிர்க் குறில் எழுத்தாகிய ‘உ’ எனும் எழுத்துக் குறியை அடையாளப்படுத்துவதாகப் பெரும்பாலோர் கருதுவர். ஆரிய / வைதீகச் சமய மரபில்  அடையாளப்படுத்தப்படும் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எனும் எழுத்தைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், ஆரிய / வைதீகச் சமயத் தொன்மத்தில்  சுட்டப்படும் பிள்ளையாரின் எழுத்துச் செயல்பாடு வடமொழி எனும் சமக்கிருத மொழியோடு தொடர்புடையது. ஆரிய / வைதீகச் சமய மரபின் வழிபாட்டு மொழியாகக் கருதப்படுவதும் சமக்கிருத மொழிதான். சமக்கிருத மொழியிலும் ‘உ’ என்கிற ஒலி / எழுத்து உண்டு. ஆகவே,  பிள்ளையார் சுழி பற்றிய ஆரிய / வைதீகச் சமயத் தொன்மக் கதையாடலானது சமக்கிருத எழுத்துகளில் உள்ள ‘உ’ வரிவடிவம் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்.

சமக்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய எழுத்து வரிவடிவத்திற்குக் கிரந்தம் என்று பெயர். அத்தகையச் சமக்கிருதக் கிரந்த எழுத்துகளில் உள்ள ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியைப் போலவே ‘உ’ என்ற வரி வடிவத்தையே கொண்டிருக்கிறது. ஆக, பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படும் எழுத்துத் தொன்மம் சமக்கிருதக் கிரந்தத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியையே அடையாளப்படுத்துகிறது; அப் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எழுத்தைக் குறிப்பது அல்ல எனவும் கருதலாம். மேலும், சமக்கிருத மற்றும் ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டு அடையாளத்தையே கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் பிள்ளையார் சுழி கொண்டிருக்கிறது எனலாம்.

ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்தைப் பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படுவதைப் போலவே, தமிழில் உள்ள ‘உ’ எனும் எழுத்தையும் பிள்ளையார் சுழி என்றே குறிக்கும் வழக்கமும் தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் இருக்கின்றது. ஆயினும், ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு; தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு ஆகும். ஏனெனில், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் இடம்பெறுகிற பிள்ளையாரும் அதைக்குறித்த சமயக் கதையாடல்களும், தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும் அதைக்குறித்த வழக்காறுகளும் வேறு வேறான நிலம், இனம், மொழி, பண்பாட்டு மரபுப் பின்புலங்களைக் கொண்டிருக்கின்றன.

பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் வழிபடு கடவுளாகக் கருதப்படுவதைப் போலவே, தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புறங்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்குகளில் வழிபடு உருவமாகப் பிள்ளையார் இடம்பெறுவதைக் காண முடியும். பொதுவாக, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளிலிருந்து வேறுபட்டும் மாறுபட்டும் முரண்பட்டும் தனித்ததொரு பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருப்பதே தமிழர் நாட்டுப்புறச் சமய மரபாகும். அவ்வகையில், தமிழர் நாட்டுப்புறச் சமய மரபில் காணலாகும் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறுகிற பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளில் குறிக்கப்படும் பிள்ளையார் என்பதிலிருந்து வேறுபட்டதாகும்.

அதாவது, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் பிள்ளையாருக்கு மனிதரும் விலங்கும் இணைந்த பேருருவ அடையாளம் வழங்கப்பட்டிருக்கிறது. யானை உருவும் எலி உருவும் பிள்ளையார் என்பதோடு தொடர்புபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய காதுகள், மனிதப் புருவங்களும் கண்களுடன்கூடிய மிகப்பெரிய வயிறு, இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் எனப் பிள்ளையாருக்கான அடையாளமாக ஆரிய / வைதீகச் சமய மரபு முன்வைத்திருக்கிறது. ஆனால், தமிழக  நாட்டுப்புறத் தமிழர் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பிள்ளையார், மனிதர் / விலங்கு என எவ்வித உருவமும் கொண்டிருக்காமல் அங்க அவயங்கள் எதுவுமின்றிச் சிற்றுரு வடிவில் உருவமற்றுக் காணப்படுகிறது.

தமிழக  நாட்டுப்புறத் தமிழர்கள் எந்தவொரு நல்ல செயல்களையும் தொடங்கும்போது, தமது வழிபாட்டுச் சடங்கில் மஞ்சளையோ சந்தனத்தையோ அரிசி மாவையோ களிமண்ணையோ மாட்டுச் சாணியவோ உள்ளங்கையில் பிடித்து வைத்து, அதன்மேல் அருகம் புல்லைச் சொறுகி வைப்பர். இதைப் பிள்ளையார் பிடித்தல் எனக் கூறுவது தமிழர் வழக்காகும். பயிர் நடவுத் தொடக்கத்திலும், பயிர் அறுவடை நிறைவிலும் பிடிப் பிள்ளையாரை வழிபாட்டுப் பொருளாக வைப்பது உண்டு. பெரும்பாலும், தமிழர்களின் நிலம் சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளின் தொடக்கத்திலும் அவற்றின் நிறைவிலும் பிள்ளையார் பிடித்து வழிபடும் சடங்கானது, எளிய வழிபாட்டுச் சடங்காக இன்றளவிலும் பெருவழக்காய் இருந்து கொண்டிருக்கிறது.

அரிசி, மஞ்சள், மண், சந்தனம், சாணம், புல் போன்ற பொருட்கள் எளிய மக்கள் வாழ்வியலின் புழங்கு பொருட்களோடு தொடர்புடையவை. இவை வளமை சார்ந்த பொருட்களாகக் கருதப்படுகின்றவை. இந்தப் பொருட்களைக் கொண்டு பிடிக்கப்படும் பிள்ளையார், வளமை என்பதோடு மட்டுமல்லாமல் இளமை என்பதோடும் தொடர்புடையதாய் இருக்கின்றது.

மாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று

ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே

என, இளமையைக் குறிக்கும் பெயர்களை வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியம்.

தமிழில் ‘பிள்ளை’ என்ற சொல், தென்னம் பிள்ளை என  இளம் தாவரங்களையும்; அணில் பிள்ளை, கீரிப் பிள்ளை என விலங்குகளின் இளங்குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது உண்டு. அதோடு, ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என மனித இனத்தின் இளங்குழந்தைப் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகவும் வழக்கத்தில் இருக்கின்றது.  நெல் நாற்று முடியைப் பிள்ளை முடி எனவும் உழவுத்தொழில் மரபினர் குறிப்பர். நெல் நடவுத் தொடக்கத்தில் பிள்ளை முடியை வணங்கிக் குலவையொலி எழுப்பிய பிறகு, பிள்ளை முடியிலிருக்கும் நெல் நாற்றையே தலை நாற்றாக - முதல் நாற்றாக நடவுப் பெண்கள் நடுகை இடுவது உழவுத்தொழில் மரபாக இருந்து கொண்டிருக்கிறது.

சிற்றூர்ப்புறங்களில் தமிழர்களின் எளிய வழிபாட்டு மரபில் இடம்பெற்றுள்ள பிள்ளையார் என்பது, வளமையோடும் இளமையோடும் தொடர்புடைய குறியீட்டு அடையாளமாகவே காட்சி தருவது கவனிக்கத்தக்கது. ஒரு செயலின் தொடக்கம் இளமை நிலையில் இருப்பது. அச்செயலானது நல்முறையில் வளர்ந்து வளம்பெற வேண்டும் என்பதைக் குறியீட்டு நிலையில் உணர்த்துவதன் வடிவமாகப் பிள்ளையாரைக் கருத முடியும்.

மேலும், மனிதர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறக்கூடியவை உலகமெனும் நிலத்தில்தான். இந்த நிலத்தில்தான் மனித இனம், விலங்கினம், பயிரினம் ஆகியன உயிர் வாழ்கின்றன. உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாகவும் வாழ்வாதாரத் தேவையாகவும் அமைந்திருப்பது நிலம்தான். அதனால்தான், நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிற வகையில்

முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே

என்கிறது தொல்காப்பியம்.

உயிரினங்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதல் பொருளாகவும் அமைந்திருக்கிற நிலம்தான் வளமைப் பொருளாக இருக்கின்றது. இவ் வளமைப் பொருளின்மீது நிகழ்கிற செயல்பாட்டுத் தொடக்கம் யாவும் இளமைதான். அவ்வகையில், நிலத்தையும் செயலின் தொடக்கத்தையும் வணங்குதல் பொருட்டே பிடிப் பிள்ளையார் உருவகப்படுத்தப்படுகிறது. அதாவது, அங்க அவயங்கள் எதுவுமின்றி உருவமற்றுப் பிடிக்கப்படும் பிள்ளையார் என்பது நிலம் என்னும் உருவத்தையே குறிக்கிறது. அதன்மேல் சொறுகப்படும் அருகம்புல் நிலத்தின்மேல் வாழ்கிற உயிரினங்களின் வளமையைக் குறிக்கிறது.

இந்நிலையில், சிற்றூர் நாட்டுப்புறத்து உழவுப் பாடலொன்று பிள்ளையார் பிறந்த கதையைப் பற்றிக் கூறுவது நோக்கத்தக்கது.

வடக்கே தெற்கே ஒட்டி

வலதுபுறம் மூரிவச்சு

மூரி ஒழவிலே

முச்சாணி புழுதி பண்ணி

சப்பாணிப் பிள்ளையாருக்கு

என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே

முளைச்சாராம் பிள்ளையாரு.

ஒடு முத்தும் தேங்காயை

ஒடைக்கறமாம் பிள்ளையாருக்கு,

குலை நிறைஞ்ச வாழைப்பழம்

கொடுக்கறமாம் பிள்ளையாருக்கு,

இத்தனையும் ஒப்பதமாம்

எங்கள் சப்பாணிப் பிள்ளையாருக்கு!

என, உழவுத்தொழில் மரபினரிடம் வழங்கி வருகிற இந்நாட்டுப்புறப் பாடலானது, உழவர்கள் உழுத புழுதி மண்ணிலிருந்து தோன்றியதாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுகிறது. நிலத்தோடும் மண்ணோடும் புழுதியோடும்தான் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நிலமெனும் உலகமும், நிலத்துவாழ் உயிரினங்களும் வளமையோடு தழைத்திட வேண்டுகிற அல்லது வழிபடுகிற வகையில்தான் பிடிப் பிள்ளையார் ஒரு குறியீட்டு அடையாளமாக இடம்பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நிலம் எனும் உலகை வணங்குவதன் மரபு அடையாளமாகவே தமிழர் வழிபாட்டுச் சடங்கில் பிள்ளையார் இடம்பெற்றிருக்கிறது எனலாம். அவ்வகையில்தான், எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகப் பிள்ளையாரை வழிபட்டுத் தொடங்குதல் தமிழர் வழிபாட்டுச் சடங்கு மரபாகப் பின்பற்றப்படுகிறது. பிடிப்பிள்ளையார் என்பதைப் பிடி மண் எடுத்தல் என்பதோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வாய்ப்புண்டு.

தாம் வாழ்ந்த இடத்திலுள்ள தெய்வத்தின் பீடத்திலிருந்து / வாழ்ந்த நிலத்திலிருந்து / வாழ்ந்த ஊரிலிருந்து கொஞ்சம் கைப்பிடியளவு மண்ணை எடுத்துத் தாம் வாழப்போகும் இடத்திற்குக் கொண்டு செல்லுதலே பிடி மண் எடுத்தலாகும். இங்கு மண் என்பது வெறும் மண்ணை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, அந்நிலத்தில் / அம்மண்ணில் வாழ்ந்த முந்தைய தலைமுறைகளின் வாழ்வையும், இப்போதும் அதே நிலத்தில் / அதே மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைமுறையின் வாழ்வையும்,  வரும் காலங்களில் இதே நிலத்தில் / இதே மண்ணில் வாழப்போகும் தலைமுறைகளின் வாழ்வையும் வளப்படுத்திய / வளப்படுத்துகிற / வளப்படுத்தப்போகிற ஆற்றல் நிரம்பிய வளமையின் குறியீடாகவே உணரப்படுகிறது.

அவ்வகையில், வாழ்நிலத்துப் பிடி மண்ணைத் தெய்வம் உறைந்திருக்கும் பொருளாகப் பார்க்கப்படுவதில்லை. அந்த மண்ணேதான் தெய்வம் என்பதாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதத் தலைமுறையினர் மட்டுமல்லாது விலங்குகள், மரம், செடி கொடி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மண்ணை / நிலத்தை / உலகத்தை வளமையின் குறியீடாகக் குறிப்பதே பிடி மண் என்பதுமாகும். இத்தகையப் பிடி மண்ணும் பிடிப் பிள்ளையாரும் உலகத்தை / நிலத்தை / மண்ணையே குறித்து நிற்கின்றன.  ஆக, தமிழர் பண்பாட்டு மரபில் பிள்ளையார் என்பதும் உலகம் என்பதைக் குறிக்கும் குறீயீடாகவே கருதலாம்.

தமிழர்கள் தமது எழுத்துச் செயல்பாடுகளைப் பிள்ளையார் எனும் உலகத்தை வழிபட்டே தொடங்கி இருப்பதின் வெளிப்பாடாகத்தான்,  எழுதத் தொடங்குவதற்கு முன்பு ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வகையில், ‘உ’ எனும் எழுத்துக் குறியும் பிள்ளையார் சுழி என்றே தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் வழங்கி வருகின்றது.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

பிள்ளையார் சுழி எனும் எழுத்துக் குறியும் தமிழரின் உலகக் கண்ணோட்ட மரபும் : மகாராசன்


எழுத்து என்பது மனித அறிவின் புலப்பாடாகப் பரிணமித்த ஒன்றாகும். தமிழ் எழுத்தும் தமிழர் அறிவு மரபைப் புலப்படுத்தும் மொழி வெளிப்பாட்டுக் கருவியாய்ச் செயலாற்றி வந்திருக்கிறது. இத்தகையக் கலை, இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட எழுத்துச் செயல்பாடுகளை ‘உலகம்’ எனும் சொல்லால் குறித்துவிட்டுத் தொடங்குதல், தமிழரின் எழுத்துப் பண்பாட்டு மரபாகவே கருதப்பட்டிருக்கிறது.
தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால்தான், தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் ‘உலகம்’ என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.

உலகச் சொல்லுடன் நூலைத் தொடங்குதல் தமிழ் மரபாய் இருந்திருக்கிறது. இதைக் குறித்து உ.வே.சாமிநாதர் கூறுகையில், நூல்களின் முதலில் மங்கல மொழிகளுள் உலகம் என்பதைத் தனித்தேனும் அடைமொழியுடன் சேர்த்தேனும் அமைத்தலும், அதன் பரியாய மொழிகளை அவ்வாறே அமைத்தலும் மரபு என்கிறார்.

பலர் புகழும் சூரியனைக் கடலில் இருந்து எழும் போது கண்டவர்களைப் போல, உலகம் மகிழ்ச்சி அடையும்படியாக இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில்
சுடர்விடுகிறது ஒளி எனும் பொருள்தரும்படி,
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது பத்துப் பாட்டுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை.

உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது மணிமேகலைக் காப்பியம்.

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது கம்பராமாயணக் காப்பியம்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது பெரியபுராணக் காப்பியம்.
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்து மாண்
திலகம் ஆய திறல்அறிவன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது வளையாபதிக் காப்பியம்.
உலகம் மூன்று மொருங்குணர் கேவலத்து
அலகிலாத அநந்த குணக் கடல்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது யசோதர காவியம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என, உலகு எனும் சொல்லைக் கொண்டுதான் திருக்குறளின் முதல் குறளும் முடிகிறது.

உலகம், உலகு என்பதைத் தலைச்சொல்லாக - முதல் சொல்லாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களைப் போலவே, உலகம் என்பதை அடைமொழியாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களும் தமிழில் இருக்கின்றன.

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல்
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு.

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக் காஞ்சி.

மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது சீவக சிந்தாமணிக் காப்பியம்.

மலர்தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியின் ஒருதான் ஆகி
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது நன்னூல் சிறப்புப் பாயிரம்.

மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
பெருந்திணை என எழு பெற்றித்து ஆகும்
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது நம்பி அகப்பொருள் இலக்கண நூல்.

 உலகம் என்பதைக் குறிக்கும் வேறு சொற்களைக் கொண்டும் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே
என, உலகத்தைக் குறிக்கும் மாநிலம் என்கிற சொல்லில் தொடங்குகிற பாரதம் பாடிய பெருந்தேவனாரின் வாழ்த்துப் பாடலோடுதான் எட்டுத்தொகையின் நற்றிணைப் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி
புலம் பெயர் புலம்பொடு கலங்கி
என, உலகத்தைக் குறிக்கும் வையகம் என்கிற சொல்லில் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடை.

மணி மலைப் பணைத் தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று
என, உலகத்தைக் குறிக்கும் மாநிலம் என்கிற சொல்லாலும் அடைமொழியாலும் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை.

இவ்வாறாக, உலகம் அல்லது உலகைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு எழுத்துச் செயல்பாட்டை மேற்கொண்ட தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபைக் காண முடிகிறது.

இலக்கியம் உலகப் பொதுவானது; எனவே, தனிப்பட்டவற்றைக் கருத்தில் கொள்ளும் வரலாற்றைவிட இது தத்துவரீதியானது எனக் குறிக்கிறார் அரிசுடாட்டில். இலக்கியம் என்பது உலகளாவியது என்பதே தமிழ்ப் படைப்பாளிகளின் கருத்தும் நோக்கமுமாக இருந்து வந்திருக்கிறது எனத் தமிழண்ணல் கூறுகிறார். ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான இப்போலைட் தெயின் கூறும்போது, ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்ல வேண்டும் என்கிறார். அவ்வகையில், இலக்கியத்தின் உலகப் பொதுமையை நிலை நிறுத்தும் மரபு அடிப்படையிலேயே தமிழ் இலக்கியமும் கால்கொண்டிருப்பதாக அறிஞர்கள் சுட்டுவர்.

இலக்கியத்தை மனித இனப் பண்புடையதாக ஆக்க வேண்டும் அல்லது மனித இனத்திற்குப் பயன்படச் செய்ய வேண்டும். காலத்தை வென்று வாழும் இலக்கியமனைத்தும் என்றும் இன்பம் தருகின்றன. தம் இனத்தது, பிற இனத்தது என்ற வேறுபாடின்றி, இவை மக்கள் அனைவரின் இலக்கியமாய்த் திகழ்கின்றன. மனித இனத்தார் அனைவராலும் படைக்கப்பட்ட எல்லா இலக்கியமும் மனித இனம் அனைத்திற்கும் பொது உரிமையாகும். அம் மனித இனப் பொதுமையைக் கண்டறிய உதவும் முதன்மை வாய்ந்த கருவியும் இலக்கியங்களே ஆகும்.

இலக்கிய வெளிப்பாடு உலக மனித இனம் அனைத்தினது பொதுவியல்புகளின் வெளிப்பாடு. காலக்கோட்பாடும் நாட்டெல்லையும் மொழித்தடையும் கடந்து இலக்கியம் ஒருமையுடையதாய்க் காட்சி அளிப்பதற்கு, மனித இன ஒருமைப்பாடே காரணமாகும் என இலக்கிய ஒருமைப்பாடு குறித்துக் கருத்துரைக்கிறார் தமிழண்ணல். அவ்வகையில், உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் ‘உ’ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர்.

உலகைக் குறித்துப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு மட்டுமல்ல; தமிழர்களின் மக்கள் பெயர்களும், தமிழர்கள் வாழ்கிற ஊர் இடப்பெயர்களும், தமிழர்களின் வழிபடு தெய்வங்களின் பெயர்கள்கூட ‘உலகம்’ எனும் சொல்லைக்கொண்டு குறிக்கும் பண்பாட்டு வழக்காறுகள் இன்றளவிலும் நிலவி வருகின்றன.

உலகம், உலகம்மை, உலக மணி,  உலகமா தேவி, உலக மாமணி, உலக மாமதி, உலக மாமயில், உலக மாலை, உலகமுடையாள், உலக முத்து, உலக வாணி, உலகத் தாய், உலக நங்கை, உலக நதி, உலக நாயகி, உலக மங்கை, உலக மதி, உலக முதல்வி, உலகோவியம்.. முதலிய பெண்பால் தமிழ்ப் பெயர்கள் உலகு / உலகம் என்கிற சொல்லைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

உலகக்கடல், உலகக்கதிர், உலகக்கனல், உலகக்காவலன், உலகக்கிழான், உலகக் கிள்ளி, உலகக்கிளி, உலகக்கீரன், உலகக்குடிமகன், உலகக்குமரன், உலகக் குரிசில், உலகக் குளத்தன், உலகக்குன்றன், உலகக்கூத்தன், உலகக் கேள்வன், உலகக் கொடி, உலகக்கோ, உலகக் கோமான், உலகக் கோவன், உலகக்கோன், உலகச் சான்றோன், உலகச்சீரன், உலகச்சுடர், உலகச் சுடரோன், உலகச் செம்மல், உலகச் செல்வன், உலகச் செழியன், உலகச்சென்னி, உலகச் சேந்தன், உலகச்சேய், உலகச் சேரன், உலகச் சோலை, உலகச் சோழன்..

உலகண்ணல், உலகத்தம்பி, உலகத்தலைவன், உலகத் தனையன், உலகத் தானையன், உலகத்திண்ணன், உலகத்திருவன், உலகத் தோன்றல், உலக நம்பி, உலக நல்லன், உலக நல்லோன், உலக நன்னன், உலக நாகன், உலக நாடன், உலக நிலவன், உலக நிலவு, உலக நெஞ்சன், உலக நெறியன், உலக நேயன், உலக நேரியன், உலகப் பரிதி, உலகப்பன், உலகப்பாண்டியன், உலகப்பாரி, உலகப்பாவலன், உலகப்பிள்ளை, உலகப்பிறை, உலகப்புகழன், உலகப் புலவன், உலகப்பூவன், உலகப் பெரியன், உலகப்பேகன்..

உலகப்பொருநன், உலகப்பொருப்பன், உலகப்பொழில், உலகப் பொழிலன், உலகப் பொறை, உலகப் பொறையன், உலகம், உலக மகன், உலகமணி, உலகமதி, உலக மருதன், உலக மல்லன், உலகமலை, உலக மலையன், உலக மழவன், உலக மள்ளன், உலக மறவன், உலக மாண்பன், உலக மாறன், உலக முகன், உலக முகிலன், உலக முத்தன், உலக முத்து, உலக முதல்வன், உலகமுதன், உலக முரசு, உலக மெய்யன், உலக மேழி, உலக மைந்தன், உலக மௌவல், உலகரசன், உலகரசு, உலகருவி, உலக வண்ணன், உலக வரம்பன், உலக வலவன், உலக வழுதி, உலக வள்ளல், உலக முடி, உலக வளத்தன், உலக வளவன், உலக வாணன், உலக வாரி, உலக வீரன், உலக வெற்பன்,  உலகவேள், உலக வைகை, உலகழகன், உலகவெற்றி, உலகவேங்கை, உலக வேல், உலக வேலன்,  உலகவேலோன், உலகழகு, உலகறவோன், உலகறிஞன், உலகறிவன், உலகறிவு,  உலகுழவன், உலகூரன், உலகூரான், உலகெரியன், உலகெழிலன், உலகெழிலோன், உலகெழினி,   உலகேந்தல், உலகேந்தி, உலகையன், உலகொலி, உலகன், உலகொளி, உலகொளியன்,  உகோவியன்..    முதலிய ஆண்பால் தமிழ்ப் பெயர்கள் உலகு / உலகம் என்கிற சொல்லைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

இவை மட்டுமல்லாது, தமிழர்களின் வாழ்விட ஊர்ப் பெயர்களும் உலகம் எனும் சொல்லில் அமைந்திருக்கின்றன. கிருசுணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரத்தில் உலகம் எனும் பெயரிலேயே ஒரு சிற்றூர் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் உலகாணி, உலகநேரி, உலகுப்பிச்சன் பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டி எனும் ஊர் இருக்கிறது. இதே பெயரில் சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகில் ஓர் ஊர் இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உலகம் காத்தான்,  உலகிய நல்லூர் (உலகில் வலிய நல்லூர்), உலகானத்தம், உலகுடையாம்பட்டு, உலகலப்பாடி எனும் ஊர்கள் உள்ளன. அதே மாவட்டத்தில் உலகலாம் பூண்டி எனும் சிற்றூரும் உண்டு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உலகம்பட்டு எனும் ஊர் உண்டு. அதே மாவட்டத்தில் உலகமாபுரம், உலகஞ்சேரி எனும் ஊர்களும் உள்ளன.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் உலகபுரம் எனும் ஊர் இருக்கிறது. திருச்செங்கோடு அருகில் ஓர் ஊரின் பெயர் உலகப்பம்பாளையம். விருதுநகர் மாவட்டம் கமுதி அருகில் உலகநடை  எனும் ஊர் உண்டு. திருவள்ளூர் மாவட்டம் மரக்காணம் அருகே உலகாபுரம் எனும் ஊர் இருக்கிறது. பரமக்குடியில் ஒரு பெருந்தெருப் பெயரொன்று உலக நாதபுரம் எனும் பெயரில் உள்ளது. மேற்குறித்த ஊர்களைப் போன்று உலகம் என்கிற சொல்லோடு தொடர்புடைய பல ஊர்ப் பெயர்கள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடும்.

உலகம் எனும் சொல்லோடு தொடர்புடைய வாழ்விட ஊர்ப்பெயர்களைப் போலவே, தமிழர்களின் வழிபாட்டு வழக்காறுகளோடு தொடர்புடைய குலசாமிகள், வழிபடு தெய்வங்கள், கோவில்கள் போன்றவையும் உலகம் என்கிற சொல்லோடு தொடர்பு கொண்டதாயும் இருக்கின்றன.

 சான்றாக, தாமிரபரணி ஆறு தோன்றும் பாபநாசத்தில் உள்ள கோயிலில் வழிபடு தெய்வத்தின் பெயர் உலகம்மை ஆகும். திருநெல்வேலி வண்ணாரப் பேட்டைக்கு முன்பாகவும் உலகம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள உலகம்பட்டியில் உலகம்மன் கோவில் உள்ளது. அதேபோல, காரைக்குடிக்கு அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் உலகநாயகி அம்மன் கோயில் இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகம்மன் கோவில் உள்ளது. இராமனாதபுரத்தில் உள்ள ஒரு தெருவில் உலகம்மா கோவில் சிறியதளவில் இருக்கின்றது.  அதேபோல, திருவாடானை அருகாமையில் கடம்பாகுடியில் உலகம்மா கோவில் உள்ளது. தேவிபட்டினத்திலும் உலகமாதேவி கோவில் உள்ளது. மேலும், திருக்கோயிலூரில்  உலகளந்த பெருமாள் கோயில் இருக்கின்றது. மதுரை மாவட்டம் கருமாத்தூரில் ஒச்சாண்டம்மன் கோயிலில் உள்ள காவல் தெய்வத்தின் பெயர் உலகநாதன் ஆகும்.

இவ்வாறாக, தமிழரின் எழுத்துப் பண்பாட்டு மரபிலும் வாழ்வியல் வழக்காற்று மரபிலும் உலகம் என்கிற சொல் இரண்டறக் கலந்திருக்கிறது. உலகம் மதிக்கத்தக்கது; வணக்கத்திற்குரியது; போற்றுதலுக்கு உரியது. மனித வாழ்க்கை உலகு தழுவியது; மனித அறிவும் உலகத்திற்கானது என்கிற உலகப் பொதுமை அறம் தமிழர்களிடம் மேலோங்கி இருந்திருக்கிறது. இதன் வெளிப்பாடே உலகைச் சுருக்கமாகக் குறிக்கும் ‘உ’ எனும் எழுத்துக் குறியை எழுத்துச் செயல்பாடுகளின் தொடக்கத்தில் பண்பாட்டு அடையாள மரபாகக் குறித்து வந்துள்ளனர்.

இது, சமயக் குறியாகவோ அதிகாரக் குறியாகவோ பாகுபாட்டுக் குறியாகவோ அல்லாமல், உலகப் பொதுமையைக் குறிக்கும் பொதுமைப் பண்பாட்டுக் குறியாகவும் பயிலப்பட்டு வந்திருக்கிறது. அவ்வகையில், தமிழின் ‘உ’ எனும் எழுத்துக் குறிக்கு இவ்வகைப்பட்ட எழுத்துப் பண்பாட்டு விளக்கமே பொருத்தமுடையதாய் இருக்கும் எனக் கருதலாம்.

ஆக, ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் குறிக்கப்படும் பிள்ளையாரும் பிள்ளையார் சுழி என்பதான ‘உ’ எனும் கிரந்த எழுத்துக் குறியும் வேறு; தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும், தமிழ் எழுத்துச் செயல்பாட்டில் குறிக்கப்படும்  பிள்ளையார் சுழி என்பதான ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியும் வேறு ஆகும் எனலாம்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005