புதன், 23 ஏப்ரல், 2025

அன்னா: தாய்மன நினைவுகளும் ஈழ நிலமும் - மகாராசன்.

மனித வாழ்வின் கதைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் இலக்கிய மரபு, புதிய புதிய கதைகூறல் முறைகளையும் உள்வாங்கிப் புலப்படுத்தும் பாங்கைக் கொண்டிருக்கக் கூடியது.  அதற்கான அண்மைய இலக்கியச் சான்றாவணம்தான் திரு வாசு முருகவேல் எழுதிய ‘அன்னா’ எனும் குறுங்கதை நூல். 

‘இலக்கியம் என்பது கருத்துக்களைத் தெரிந்து கொள்ளுதல் இல்லை. கற்பனை செய்தல். சொற்கள் வழியாக ஒரு மெய்யுலகைக் கற்பனை செய்து, அந்த மெய்யுலகிலே சென்று வாழ்ந்து, உண்மையாகவே வாழ்ந்த வாழ்க்கைக்கு நிகரான அனுபவங்களையும் புரிதல்களையும் அடைவதற்குப் பெயர்தான் இலக்கியம்’ எனும் சொற்களைத் திடமாக நம்பியிருக்கும் வாசு முருகவேல், தமது ‘அன்னா’ படைப்பின் வாயிலாக அதனை மெய்ப்பித்தும் காட்டியிருக்கிறார்.

படைப்பென்னும் கற்பனையுலகத்திற்குள் நிஜமென்னும் மெய்யுலகைக் காண்பித்து விவரிக்கும் கதை கூறல் மொழியும் நடையும் புதியதான வாசிப்பு உணர்வைத் தந்திருக்கின்றன. கதையுலகும் கவிதையுலகும் கலந்திருக்கும் படைப்பாக்க வடிவம் மிக நேர்த்தியாய் வாசகரின் வாசிப்புலகத்தை எட்டியிருப்பதோடு, கதையுலகின் மெய்யுணர்வை மிக ஆழமாகவே புலப்படுத்தி இருக்கிறது அன்னா.

தமிழ் இலக்கிய மரபில், ஈழ நிலத்தின் வாழ்வும் வலியுமான படைப்புகள் உயிர்ப்பு மிக்கவையாகத் திகழ்வதற்கான அடிப்படைக் காரணம், அதன் படைப்புலக மெய்யுலகின் உண்மைத் தன்மைதான். அரை நூற்றாண்டு கால ஈழ நிலத்தின் மனிதப் பாடுகளை நினைவுக் குதிர்களுக்குள்ளிருந்து சொற்தானியங்களைச் சிந்தாமல் சிதறாமல் படைப்புமொழிக்குள் தூவிச் செல்லும் பெரும் பணியை ஈழத்துப் படைப்பாளிகள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். அவ்வகையில், வாசு முருகவேல் அண்மையில் எழுதியிருக்கும் ‘அன்னா’வும் ஈழ நிலத்தின் வலியைப் பெண் வலியாய்ப் பதிவு செய்திருக்கும் படைப்பாய் வெளிவந்திருக்கிறது.

‘2009ஆம் ஆண்டு ஈழப் போரின்போது, ஈழத்தின் தலைநகராக அதிகாரப்பூர்வமாக இயங்கி வந்த கிளிநொச்சி நகரைக் கைவிடவேண்டிய நெருக்கடியான சூழல் போராளிகளுக்கு ஏற்பட்டது. கிளிநொச்சியை ஒருபோதும் போராளிகள் கைவிடமாட்டார்கள் என்றே அனைவரும் நம்பினார்கள். ஆனால், நடந்தவை அதற்கு முற்றிலும் வேறாகவே இருந்தன. 

இலங்கை அரசின் படைகள் அங்கு நுழைந்தபோது கிளிநொச்சி வெறிச்சோடிக் கிடந்தது. போராளிகள், பொதுமக்கள் அனைவரும் தாங்கள் கொண்டுபோக முடிந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்த நகரை விட்டு ஏற்கனவே முற்றிலும் வெளியேறி இருந்ததால், இராணுவம் பலத்த ஏமாற்றம் அடைந்தது. பாரிய யுத்தத்தை எதிர்கொள்ளப் போகும் நகராக விளங்கிய கிளிநொச்சி அனைவருக்கும் பலத்த ஏமாற்றத்தையே தந்தது. அதற்கு இலங்கை இராணுவமும் விதிவிலக்கல்ல. 

யாருமற்ற அந்தச் சூனியமான ஓர் இரவில் தனிமைப்பட்டு நின்ற அன்னாவின் இரத்தமும் சதையுமான நினைவுகளும் குரல்களுமே இந்த நாவலின் மையமாகும். போரில் இவையெல்லாம் சாத்தியமா என்ற கேள்வியைப் போரில் வென்றவர்களும் - தோற்றவர்களும் எழுப்புவதில்லை. அசாத்தியங்களால் நிரம்பியதுதான் போர். 

இந்தக் குறுநாவலின் மையமாகப் பெண்ணே இருக்கின்றார். மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, போராட்டங்களிலும் பெண்கள்தான் மையமாக இருந்திருக்கின்றார்கள். அதனால் பேரிழப்புகளையும் அவமானங்களையும் சந்திப்பதும் பெண்கள்தான் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை’ எனக் கதைக்களத்தின் பின்புலத்தைத் தமது முன்னுரையில் பதிவு செய்து விடுகிறார் வாசு முருகவேல்.

‘போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுதுகொண்டே இருந்தது…’ எனத் தொடங்கும் தமிழினி கவிதைக்குள் உலவும் தாய் மனத்தின் நினைவுகள்தான் அன்னாவில் சொற்களாய் விரிந்து கிடக்கிறது.

அரை நூற்றாண்டுகால ஈழ விடுதலைப் போராட்டத்தில் களத்தில் நின்று சண்டை செய்த போராளிகளின் ஈகத்துக்கு நிகரானது ஈழத்துத் தாய்மார்களின் ஈகமும். விடுதலை வாழ்வுக்காக ஒரு தாயக நிலம் எவ்வளவு கனவுகளையும் துன்பங்களையும் வலிகளையும் இழப்புகளையும் பேரழிவையும் சந்தித்ததோ, அதே கனவுகளையும் துன்பங்களையும் வலிகளையும் இழப்புகளையும் தவிப்பையும் ஏமாற்றத்தையும் ஈழத்தின் தாய்மார்கள் இன்னும் நினைவுகளில் சுமந்தலைகிறார்கள்.

சொற்களில் விவரிக்க முடியாத துயர் கவ்விக் கிடக்கும் வலிகளை நினைவுகளின் கூடாரத்துக்குள் எத்தனை காலம்தான் அடைத்து வைத்திருக்க முடியும்? நினைவுத் துயரங்களை இறக்கி வைக்கவும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அத்துயரங்களைக் கைமாற்றிக் கைமாற்றிக் கடத்துவதற்குப் பின்னால் வெறும் ஆறுதல் மட்டும் அடைவது நோக்கமல்ல; தாயக நிலத்தின் தவிப்பையும் உயிர்ப்பையும் தக்க வைக்கும் வேட்கையும் கூடவே சேர்ந்திருக்கிறது. அதனால்தான், புலம்பெயர் வாழ்க்கையினூகப் புலப்படும் ஈழத் தமிழ்ப் படைப்புகள் யாவும் தாயக நிலத்தை நினைவுச் சொற்களால் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

தாயக நிலத்திற்கான விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிக்கும் போராளிகளைத் தலைமைகள் மட்டுமே உருவாக்கி விடுவதில்லை; தமிழ் இளைஞர்களும் இளைஞிகளும் தாமாகவும் மட்டும் போய் இணையவுமில்லை. தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் தேவைகளையும் உணர்ந்த ஒவ்வொரு தாய்மாரும் தம்மளவிலான பங்களிப்புக் கைமாறினை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். அதனால்தான் மிக நீண்ட நெடியதொரு போராட்டத்தை புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தாய்மார்களின் உளப்பூர்வமான ஒத்துழைப்போடும் உதவியோடும் உத்வேகத்தோடும் உறுதியோடும்தான் ஒவ்வொரு போராளியும் களம்நோக்கி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். 

இன்னும் கூடுதலாக, போராளிகளைப் போன்று தத்தமதளவிலும் தத்தமது ஊர்களிலும் களப்பணிகள் பலவும் மேற்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் படைக்கான ஆட்சேர்ப்பு, இயக்கத்தின் மறைமுகப் பணிகளுக்கான அடைக்கலம், போராளிகளைப் பராமரித்தல், இயக்கத்திற்கான வேவு பார்த்தல், படையணி ஆட்சேர்ப்புக்கான பரப்புரை எனப் பல்வேறு வேலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்துக்கொண்ட எண்ணற்ற தாய்மார்களுள் அன்னா, அன்னம்மா, அன்னத்தா என அழைக்கப்பட்டவரும் ஒருவராவார்.

இறுதிப் போர்க் காலகட்டத்தில் போராளிகள் மற்றும் பொதுமக்கள் யாவரும் கிளிநொச்சியைக் கைவிட்டு நகர்ந்துபோன பின்னாலும், கிளிநொச்சி நிலத்தை விட்டுப் போகாமல் அங்கேயே உலவித் திரிகிறார் அன்னா. 

‘காடளந்த புலியின் நிதானத்துடன் அடி எடுத்து வைத்து ஊரை வலம் வந்தாள் அன்னா. விலங்குகள் காட்டில் உலவுவது உணவுக்காக மட்டுமல்ல; அதுதான் அதன் வாழ்வின் சாரம். இருண்ட ஊரில் இவளுக்கு மட்டும் இரண்டு கண்களிலும் ஒளி இருந்தது. வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களில் கொஞ்சம் கண்களை மூடியும் நடந்து பார்த்தாள். அங்கும் ஒளி இருந்ததுதான். காலத்தின் இருள் மட்டும் மிச்சலனமாக நிறைந்திருந்தது. 

இயக்கத்தின் கணக்குப்படி இராணுவம் இப்போதே கிளிநொச்சிக்குள் அடியெடுத்து வைத்திருக்க வேண்டும். நகரத்தில் யாரும் இல்லை. அனைவரும் இயக்குத்துடன் வெளியேறி விட்டார்கள் என்ற செய்தியை யாராவது அறிவித்திருக்கலாம். ஆனாலும், இராணுவம் விடியும் வரை காத்திருக்கும் என்று அன்னா நம்பினாள். அவள் ஒருத்தி இன்னும் அந்த நிலத்தில்தான் நிற்கிறார் என்பதை இயக்கம் கூட நம்பும் என்று அவள் நம்பவில்லை’ எனத் தொடங்குகிறது அன்னாவின் நினைவு அத்தியாயங்கள்.

இருளும் வெறுமையும் தோல்வியும் இழப்பும் தழுவிய ஓர் இரவுப் பொழுதில் அன்னாவின் கால் நூற்றாண்டு கால நினைவுகள் கசிந்து கசிந்து போராட்ட காலங்களை மறு சுழலுக்குள் தளிர்க்கச் செய்துகொள்கின்றன. எந்தச் சலனமும் சஞ்சலமும் இல்லாமல் தானும் இயக்கத்தினோடு ஏதோ ஒரு தொடர்பில் இருந்துகொண்டு, போராளிகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டு, தமது கணவரையும் இரண்டு பிள்ளைகளையும் இயக்கத்திற்கு அனுப்புவித்து, அவர்களையும் வீரச்சாவுக்கு ஒப்புக்கொடுத்து, ஊரில் உள்ள மற்ற பிள்ளைகளையும் இயக்கத்தில் சேர்க்கும் பரப்புரைப் பணியையும் மேற்கொண்டிருந்த அன்னாவின் நினைவுகளில் வடிந்திருந்த மெய்யுலக வாழ்வைக் குறுங்கதை அத்தியாயங்களில் எழுதியிருக்கும் வாசு முருகவேல், கால் நூற்றாண்டு கால ஈழப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கத்தின் உயிர்ப்பை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தாயக நிலத்தின் உணர்வோட்டத்தையும், தாய்மார்களின் உளப்பூர்வ வகிபாகத்தையும் கதையுலகிற்குள் மெய்யுலகாய்க் கட்டமைத்திருக்கிறார்.

மிகக் குறைவான பக்கங்கள், குறுங்குறு அத்தியாயங்கள், கூல் கிளிண்டன், முகமூடிராசன், லீலா, கபிலன், பாலு என மிகக் கொஞ்சமான கதைப் பாத்திரங்கள் என்றாலும், சிங்கள இராணுவத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தின் போராட்டப் பங்களிப்பு, போர்கள், வீரச்சாவுகள், மாத்தையாவின் துரோகப் பின்புலம் தொடங்கி, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீதான இராணுவத் தாக்குதல், தலைவரைப் பாதுகாத்தலுக்கான சண்டைகள், இறுதிப் போர் நிலவரம் எனப் பலவும் அன்னாவின் நினைவுச் சொற்களில் விரிந்திருக்கும் கதையுலகானது, ஈழ நிலத்தின் ஆத்மாவையும், ஈழத்துத் தாய்மார்களின் ஆத்மாக்களையும் படைப்புலகில் உயிர்ப்பித்துக் காண்பித்திருக்கிறது. 

நிலத்தைத் தாயாகவும், தாயை நிலமாகவும் உருவகிக்கும் தமிழ் மரபில், ஈழ நிலத்தையும் - அந்நிலத்துத் தாய்மார்களின் தனிமையையும் வெறுமையையும் பெண் வலியோடும் மொழியோடும் நினைவுகளினூடாகச் சொல்லும் அன்னாவானது, ஈழத்தின் தவிப்பை மொழியில் சுமந்திருக்கும் இலக்கிய சாட்சியுமாகும். அன்னாவைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களின் வலியும் மொழியும் தமிழில் இன்னும் இன்னும் பதியத்தான் போகிறது. அவற்றின் வலியும் மொழியும் ஈழத் தாயகத்தின் வேட்கையை அணையாமல் பார்த்துக் கொள்ளத்தான் போகின்றன. 

வயிற்றிலும் மார்பிலும் மடியிலும் தோள்களிலும் மட்டுமல்லாது, நினைவுகளிலும் பிள்ளைகளைச் சுமக்கும் தாய்களின் கனவைப் போலவே, தாயக நிலத்தை மொழியில் சுமந்தலையும் அன்னா போன்ற படைப்புகளைத் தோளேந்தி ஆறுதல் படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் தமிழர் கைமாறாகும். அன்னம்மாக்களின் ஆத்ம நினைவுகளைப் புதியதான கதைகூறல் வடிவத்தில் தந்திருக்கும் வாசு முருகவேல் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அன்பும்.

நூல் குறிப்புகள் :
அன்னா (குறுங்கதை), 
வாசு முருகவேல், 
பக்கங்கள் 72, 
விலை:உரூ 130/- 
முதல் பதிப்பு, சனவரி 2025, 
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. 
தொடர்புக்கு: 942511302.

கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்,
தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.
maharasan1978@gmail.com

நன்றி :
வாசகசாலை இணைய இதழ்
https://vasagasalai.com/112-article-anna/

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

கல்விச் சூழலும் சாதியச் சூழலும் குறித்து விவாதிக்கும் அழுத்தமான நூல் - ம.பரிமளா தேவி


மகாராசன் எழுதிய ‘மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து’ எனும் இந்நூலில், இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

1.மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச் செயல்பாடுகள்: புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல்.

2.மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து: சமூகப் புறச் சூழலும் மாணவர்களின் பிறழ் நடத்தைகளும்.

சமகாலத்தில் அதிகமாக இருக்கும் இந்த இரண்டு பிரச்சினைகளையும் குறித்துத் தன்னுடைய ஆழமான மற்றும் விரிவான கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார் எழுத்தாளர் மகாராசன்.

மாணவர்கள் கையில் கத்தி எடுக்கின்ற கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவல நிலை இருக்கின்றது. அவற்றைத் தடுப்பதற்கான வழி என்ன? அவர்கள் கையில் கத்தி எடுப்பதற்கு என்ன காரணம்? பின்னணி என்ன? புறச்சூழலை மட்டும் வைத்துத் தீர்வு காண முடியுமா? அகச் சூழலையும் பார்க்க வேண்டாமா? என்கிறார்.

கல்விசார் கலைத்திட்டம் என்பது மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகும். அவ்வாறெனில், மீத்திறன் மாணவர்கள், சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என்று மூன்று வகைப்பட்ட மாணவர்களுக்காகவும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதா?

மெல்லக் கற்கும் மாணவர்களை உள் நுழைய விடாமலும் அச்சுறுத்தும் விதமாகவும் இப்போதைய புதிய பாடத்திட்டம் உள்ளது. 

குறிப்பிட்ட மாணவத் தரப்பினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அந்தத் தரப்பினர் மட்டுமே பங்கேற்கும்படியான வாய்ப்புகளை மட்டுமே வழங்கும் சூழலைப் புதிய பாடத்திட்ட உருவாக்கமானது உருவாக்கித் தந்திருக்கிறது என்னும் குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார்.

ஒரு காலத்தில் சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் தீண்டாமையைச் சாதியை வைத்து நடைமுறைப்படுத்தினர். இப்போதும் சக மனிதர்களைக் கல்வியில் இருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையை இன்றைய பாடத் திட்டங்களும் தேர்வு முறைகளும் கையாளப்படும் சூழலில் இருக்கின்றன. 

மீத்திறன் மாணவர்கள் மட்டுமல்லாது, மெல்லக் கற்க மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது கட்டாயம்.

மெல்லக் கற்கும் மாணவர்களை அன்னியப்படுத்துவதும், தனிமைப்படுத்துவதும், விலக்கி வைப்பதுமான கல்விச் செயல்பாடுகள் தொடருமானால், அவர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் - வேலை வாய்ப்புகளும் ஏதுமின்றிச் சமூக உதிரிகளாக மாறத் தொடங்குவர். 

இந்நிலையில், கல்விச் சூழலைச் சீரமைப்பது எப்படி?

1.எல்லா வகுப்புகளிலும் - எல்லாப் பாடங்களிலும் பாடப் பொருண்மைகளின் அளவைக் குறைத்திடல் வேண்டும்.

2.பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

3.வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print) புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின் போது நீக்கப்பட்டது. அதனை மீண்டும் இணைக்க வேண்டும். இதனால் மெல்லக் கற்கும் மாணவர்களைத் தேர்ச்சி நோக்கிப் பங்கேற்க வைக்க முடியும். 

4.ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும்.

5.மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

6.கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்.

7.கற்றல் கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் உள்ளக் குரலை மனம் திறந்து கேட்கவும், அதன் நியாயங்களை உணர்ந்து கொள்ளவும் கல்வித்துறை அதிகாரிகள் முன் வருதல் வேண்டும். 

மேற்கூறிய கருத்துக்கள் முதல் கட்டுரையின் சாரம் ஆகும். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் இதுவாகும்.  

பள்ளிக்கூடப் பணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டம் எனக்குச் சற்று அயற்சியாகவே இருந்தது. விரிவான கூடுதல் பாடத்திட்டமாகவே இருந்தது. கல்லூரியில் பணியாற்றிய அனுபவத்தைக்கொண்டு சொல்கிறேன், இளங்கலையில் மாணவர்கள் படிக்கின்ற நிறைய பாடங்களைத்தான் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.  

மீத்திறன் மாணவர்களும் பங்கேற்கும் வகையான பாடத்திட்டங்களும் வினாத்தாள் வடிவமைப்பும் பயிற்சிகளும் வேண்டும்தான். மீத்திறன் கொண்ட மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம் பயனுள்ளதாகத் தோன்றினாலும், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டத்தில் பயன் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாகப் பயம்தான் இருக்கிறது. படிக்கவில்லை என்று மாணவர்களை மட்டும் குறை கூற முடியாது. அதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்.

அனைவருக்குமான பாடத்திட்டமென்று பலர் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்ததனால்தான் புதிய பாடத்திட்டம் உருவாகியுள்ளது. அதில் மொழிப் பாடத்திற்கான கருத்துக்களை மட்டும் இங்கு பதிவிடுகின்றேன்.

மொழிப் பாடம் என்பது சுவையாகவும் பண்படுத்துபவையாகவும் இருக்க வேண்டும். சுமையாக இருக்கக் கூடாது. தேடித் தேடிப் படிக்கும் ஆர்வத்தை மாணவர்களுக்குத் தூண்டுவதாக இருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கியம் முழுவதையுமே அறிமுகப்படுத்திவிட வேண்டுமா? பரிசீலனை செய்ய வேண்டும். விழுமியங்களுக்குள் பாடங்களை வைப்பதினால் கூடுதல் சுமையாக மாறி உள்ளதோ? 

மொழிப்பாட ஆசிரியர்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், தமிழில் மாணவர்கள் அனைவரும் ஏன் தேர்ச்சி அடையவில்லை? ஆங்கிலத்தில்கூட தேர்ச்சி அடைந்து விடுகிறார்கள். தமிழில் ஏன் தோல்வியைத் தழுவுகிறார்கள்? என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப அதிகாரிகள் கேட்கின்றார்கள். ஆசிரியர்கள் சொல்கின்ற காரணங்கள் அவர்களுக்குப் போதுமானதாகவும் இருக்கவில்லை. ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தொடர்ந்து விவாதிப்போம். மாணவர்களின் நலன் மட்டுமே நமக்குப் பிரதானம்.

வருகின்ற ஆண்டில் மாற்றம் வரும் என்று நம்புவோமாக. வரும் கல்வி ஆண்டு முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மெல்லக் கற்கும் மாணவர்களும் ஈடுபடும் வகையில் பயிற்சிகளும் வினாத்தாள்களும் இருக்கின்றனவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நூலின் இன்னொரு கட்டுரை, மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து: சமூகப் புறச் சூழலும் மாணவர்களின் பிறழ் நடத்தைகளும் என்பதாகும்.

தமிழ்ச் சமூகம் ஒரு முன்னேறிய பண்பாட்டு வாழ்க்கை முறைக்குச் சொந்தமுடையது என ஒரு புறம் சொல்லிக் கொண்டிருந்தாலும், தமிழ்ச் சமூகத்தின் மீது அவ்வப்போது கறை படிந்து கொண்டுதான் இருக்கின்றது? 

ஆம், தமிழ்ச் சமூகத்தின் படிக்கட்டுகள் முழுக்க மனிதம் சிந்தி இருக்கும் அரத்தக் கறை பெரும்பாலும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் மீது அவரது வீட்டுக்குள்ளே புகுந்து கொடிய ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கிய சக மாணவர்களின் ஆணவக் கொலை வெறிச் செயல் பெரும் அதிர்வுகளையும் அச்சத்தையும் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது என்று எழுதிய இந்நூல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் கொலை வெறித் தாக்குதல் என்னும் செய்தியைப் பார்த்தபோது மனம் சமநிலை இழந்து போயிற்று .

மாணவன் சின்னத்துரையின் மீது முதல் முறையாகக் கொலைவெறித் தாக்குதல் நடந்தபோது அங்கு உண்மையிலேயே என்ன நிகழ்ந்தது என்று கண்டறிந்து எழுதப்பட்ட நூல்தான் இது. அதற்கான காரணங்களையும் பதிவு செய்துள்ளார். 

கணவனால் கைவிடப்பட்ட அம்பிகாபதியின் மூத்த மகன்தான் சின்னத்துரை. வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், படிப்பதைத் தாண்டியும் அவரது நடவடிக்கைகள் அத்தனையும் வாஞ்சையாக இருந்துள்ளன. அதனால் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் சின்னத்துரை மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாக மாணவர் சின்னத்துரை பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்திருக்கிறார். இதை அறிந்து அவரது தாயார் ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று சின்னத்துரையிடம் கேட்டிருக்கிறார். தன்னை வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறும், இல்லையென்றால் சென்னைக்கு ஏதாவது வேலைக்கு அனுப்பி வைத்து விடுமாறும் கூறி இருக்கிறார். ஆனால் அவருடைய அம்மா ஒப்புக்கொள்ளவில்லை.

தம்முடன் அதே பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் இருவர் சாதி ரீதியாகவும் ஆபாசமாகவும் இழிவுபடுத்திப் பேசி வருவதாகவும், தமது பணத்தையும் பிடுங்கிக் கொள்வதாகவும், புகையிலைப் பொருள் வாங்கி வரச்சொல்லி அடிப்பதாகவும், தம்மைப் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும், தேர்வுகளில் தாம் எழுதுகிற விடைத்தாள்களை வாங்கி அதைப் பார்த்து எழுதுவதாகவும் கூறியிருக்கிறார் சின்னத்துரை.

மாணவன் சின்னத்துரையின் மீது நடத்தப்பட்டு வந்த சீண்டல்களைக் குறித்துத் தலைமை ஆசிரியரிடம் கொடுத்த புகார் கடிதத்தின் சாரம் இதுவாகத்தான் இருந்திருக்கிறது.

இந்நிலையில், அன்று இரவு யாருமே எதிர்பார்க்காத அந்தக் கொடிய சம்பவம் நடந்தது. வீடு முழுவதும் இரத்தக் குவியலாகவும் சகதியாகவும் கிடக்கிறது. எங்களுக்கு எதிராகப் புகார் கொடுப்பியா என்று கூறி அரிவாளால் சின்னத்துரையின் கழுத்திலும் தலையிலும் வெட்ட முயற்சி செய்ய, தனது கைகளைக் கொண்டு சின்னத்துரை தடுத்து இருக்கிறான். இதனால் இரண்டு கைகளின் எலும்புகளும் அரிவாளால் வெட்டப்பட்டு நொறுக்கப்பட்டுள்ளது. தோள்பட்டையிலும் தொடையிலும் அரிவாள் வெட்டு. 

அண்ணன் வெட்டப்படுவதை அறிந்த சந்திரா செல்வி தடுக்க முயற்சி செய்ய, அந்த 13 வயது குழந்தையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். வெட்டியவர்கள் அனைவரும் மாணவர்கள். உடன் படிக்கின்ற 16 மற்றும் 17 வயதுடையவர்கள். இதை இப்போது எழுதும் பொழுதும் மனம் பதறுகிறது.

சாதி ஒருவனை மரணத்தின் விளிம்பில் தள்ளி இருக்கிறது. சிலரை அரிவாள் எடுக்க வைத்து, கொலைப் பசியை ஏற்படுத்தி இருக்கிறது .

மரணத்தில் விளிம்பில் இருந்து பிழைத்து வந்து அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அன்று பலரும் பதிவிட்டோம். 

இந்நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், முறையான விசாரணைகள் இன்றி கடுமையான நடவடிக்கைகள் இன்றி மெத்தனத்துடன் கையாளும் போக்குகள் குறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கின்றார் ஆசிரியர்.

மாணவர்களின் மணிக்கட்டில் கயிறுகளாக இருந்த சாதி அடையாளம் இன்று அரிவாளாக மாறி இருக்கிறது. தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் சாதிக் களமாகவே காட்சி அளிக்கின்றனர். அவை பள்ளிக்கூடங்களாக இல்லாமல் சாதி வன்கொடுமைக்கூடங்களாக உருவாகி வருவது கவலை அளிக்கிறது. தன் மீது நடந்த கொடுமையை ஆசிரியரிடம் கூறியதற்காக கொலை வெறியுடன் அரிவாள் தூக்குகிறார்கள் என்றால், இவர்கள் எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள் என்கிறார் கதிர்.

பள்ளி மற்றும் கல்லூரியில் சாதி வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாகப் பள்ளியில் இருந்தும் கல்லூரியில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். அவர்களுக்கு வேறு எந்தப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இடம் தரக்கூடாது என அவசரக் கல்விச் சட்டம் ஒன்றையே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்கிறார். 

சாதிய மதவாத வன்முறையாளர்கள் பொது சமூகக் கல்வி அமைப்புகளின் வழியாகக் கல்வி கற்பதிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்துவதுதான் அவர்களுக்கான தண்டனை மற்றும் பாடமாக மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கான பாடமாகவும் அமையும்.

பாதிக்கப்பட்டவர்களின் கல்விச்செலவை ஏற்பது மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வும் அல்ல. அதுவே அவர்களுக்கான பாதுகாப்பானதும் அல்ல என்பதை அரசும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும். இழப்பீடு வழங்குவதோடு அரசின் கடமை முடிந்து விட்டதாக நினைக்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், கல்வி, உடைமை, உரிமைகள் பாதுகாப்பதில் துணை நிற்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் சக மனிதர்களைப் போல அவர்கள் நிம்மதியாக வாழ வழி அமைத்துக் கொடுப்பதைத்தான் வேண்டி நிற்கிறார்கள். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதுதான் ஆட்சியாளர்களின் அரசுகளின் தலையாயக் கடமையாகும்.

இந்நூலில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்னும் சொல்லாடலையே பிழை என்கிறார் ஆசிரியர். ஒரு சாதி எப்படி தன்னையே தாழ்த்திக் கொள்ளும் என்னும் கேள்வியையும் முன் வைக்கின்றார். மற்ற சாதியினரால் தாழ்த்தி நடத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட காரணத்தினால் தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினர் எனும் சொல்லாடல்கள் புழக்கத்தில் பரவின. அதேவேளை, பிறப்பிலேயே உயர்ந்த சாதியாக யாரும் பிறப்பதும் இல்லை; தன்னை மேல் சாதியாகப் பாவித்துக் கொண்டவர்களும் - உயர் சாதியாக நினைத்துக் கொண்டவர்களும்தான் உண்டே தவிர, உயர்சாதியாகவோ - மேல் சாதியாகவோ யாரும் பிறந்ததில்லை; பிறக்கப் போவதுமில்லை என்கிறார்.

மேல் சாதியினர், உயர் சாதியினர், ஆதிக்க சாதியினர் எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தும்போது பிறப்பிலேயே ஒரு தரப்பினர் மேல் சாதியாக, உயர் சாதியாக, ஆதிக்க சாதியாகப் பிறந்து இருக்கிறார்கள் எனும் கற்பிதம் உண்மையானது என நம்ப வைக்கின்றன. அதுவே இயல்பானது என்பது போன்ற சமூகத் தோற்றத்தைக் கருத்தியல் ரீதியாக மனித சமூக மூளைக்குள்ளும் சமூகப் படிமங்களுக்குள்ளும் பதிய வைக்கின்றன.  

நூலில் சாதிய வன்கொடுமைக்கான காரணங்களையும் தீர்வுகளையும் நிறைய முன்வைத்திருக்கின்றார்.

இந்நூலில் உள்ள உரையாடல்களைக் குறித்து பொது சமூக மனிதர்களும் தம் உரையாடல்களை முன் வைக்க வேண்டும்.

திருநெல்வேலியில் சாதி இல்லை.. இப்பெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க? இட ஒதுக்கீடு தேவையா? அம்பேத்கர் யாருக்கான தலைவர்? மாணவர்களிடத்தில் மட்டுமா சாதி உள்ளது ? தொடரும் ஆணவக் கொலைகளுக்கு எது காரணம் ?

இந்தச் சமூகத்தில் இருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும்தான் சாதி மாணவர்களிடம் கடத்தப்படுகின்றதா? மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறிப் போனதற்குப் பள்ளிச் சூழல் மட்டுமே காரணமா?

சாதிகள் இல்லையடி பாப்பா; தீண்டாமை ஒரு பெரும் குற்றம், அது மனிதநேயமற்ற செயல் எனப் பள்ளிப் புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால், பள்ளி கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை எப்போது நீக்குவது? பள்ளி கல்லூரிகளில் சாதி பார்த்து வேலையைக் கொடுப்பது ஏன்?

சாதிச் சங்கங்கள், சாதி வாட்ஸ் அப் குழுக்கள், கட்சிகள் என்ன செய்கின்றன என்று கண்காணிக்கப்படுகின்றனவா?சமூகத்தில் சாதியை வேரோடு எடுத்து விட முடியுமா?

சாதிய வன்கொடுமைகளைக் குறைப்பதற்கான வழியை நோக்கித்தான் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம். சாதி இல்லை எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டும். 

இப்போதெல்லாம், பெரும்பாலானவர்களிடம் சாதிய உணர்வு மேலோங்கி இருக்கிறது. அது வெளிப்படும் விதம் மறைமுகமாக உள்ளது. எல்லோரும் கத்தி எடுக்குறது இல்ல. பெரும்பாலோர் பிறப்பு முதல் இறப்புவரை சாதி அடையாளத்தோடுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஊர் கூடி நின்றால் மட்டும்தான் தேர் இழுக்க முடியும். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் சாதிய உணர்வுகளுக்கும் - சாதிய வன்கொடுமைக்கும் எதிராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்நூல் மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

தொடர்ந்து உரையாடுவோம்.


**

நூல் குறிப்புகள் :

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு :              
ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.
அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506
**
கட்டுரையாளர்:
ம.பரிமளா தேவி,
முதுகலை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
திருப்பத்தூர் மாவட்டம்.