செவ்வாய், 12 ஜூலை, 2016

கையறு நிலையும் கவிதை அஞ்சலியும்.

கையறு நிலையும்
கவிதை அஞ்சலியும்.
ஆனந்த ராசுக்காக....


நட்புகளின் வலிகளை
வழியவும்
வாரிக் கொண்டும்
வாஞ்சையுடனும்
சுமந்து திரிந்தாய்.

துளிர்க்க மனமில்லாது
முடங்கிக் கிடந்த
கொடிகள் எல்லாம்
சிம்புகள் வெடித்துப் படர்ந்திட
பற்றுக் கோடாய்த்
தோள் கொடுத்தாய்
பட்ட கம்பாய்
நீயிருந்தே.

உறவிலும் நட்பிலும்
முகங்கள் சிரித்திட
அகம் காயப்படக் காயப்பட
இழுத்துச் சென்றாய் வாழ்வை
யாருக்கும் தெரியாமலே.

அழுதவர்க்கெல்லாம்
அடைக்கலம் தந்து
வழிந்த கண்ணீரை
நீ துடைத்தாய்.
அரத்தம் கசிய
வலித்திட்ட கொடுவாழ்வை
உனக்குள்ளே
புதைத்துக் கொண்டாய்.

தொலைவிலிருந்த
நட்பையெல்லாம்
மனக் கூட்டில் அடை காத்தாய்.
குடும்ப வெளியில்
நீ பறக்கச்
சிறகின்றித் தவித்தாய்.

நட்பில் எல்லாம்
உயிரள்ளித் தெளித்தாய்.
இல்வாழ்விலோ
உயிர்ப்பின்றித் தவித்தாய்.

இடுக்கில் முளைத்த ஆலம்
பனையைச் சிதைத்தது போல்
புகுந்தகத்தின்
இரண்டகத்தால்
சிறுகச் சிறுகச் செத்தாய்.

உறவுகள் தந்த
ஏய்ப்புகளும் ஏமாற்றங்களும்
துரத்தத் துரத்த
ஓடியலைந்தாய்
ஒளிவிடம் தேடி.

எம்மில் எல்லாம்
நீ முளைத்திருக்க,
உன்னில் வாடிப் போனதே
வாழ்க்கை.

வாழுதல்
வாழ்க்கைதான்.
வாழ்வின்
கொடிய முகத்தோடும்
உறவாடிக் கிடந்தாய்.

வாழுதல் கொடிது.
இனி, வாழுதலும் கொடிது
என்றான பின்னே,
இனி
வாழவும் என்ன இருப்பதாய்
உன்னை நீயே கரைத்திட
எண்ணித் துணிந்தாய்.

காலம்
உன்னைத் தின்றது.
மீதியைத்
தின்னக் கொடுத்தாய்
காலனிடம்.

சிறைக்குளத்துள்
அகப்பட்ட சிறுமீனாய்ச்
சிக்கிக் கொண்டாய்
காலனிடம்.

சிக்கல் அருகிலிருக்கும்
சிறைக்குளம்
ஆனந்த ராசுவே!
பெயரளவுக்குக் கூட
ஆனந்தம்
நிலைக்காமல் போனதுவே.

வாழவும்
அதில் அழவும்
வலிகளையே சுமக்கவுமா
வாழ்க்கை?

வாழ்வைக் கசக்கி எறிந்து
காலனோடு சேர்ந்து
காலத்தில் கரைந்து விட்டாய்.

போய் வா
நட்பின் உருவே
போய் வா .
இடுகாட்டின் மண்ணுக்குள்
படுத்துறங்கு அமைதியாக.

ஆனாலும் நண்பனே ,
காலன் உன்னை
இப்படிக் கொன்றிருக்கக் கூடாது.

இந்த வாழ்வைத்
தொலைக்கத் தானா
இத்தனைத் தொலைவு
சென்றாய்.

பூ மாலை உனக்கிட்டு
காலடியில் நான் அழுது
என் கண்ணீரும்
உன்னோடு குழியில் விழ
கொடுத்து வைக்காத
இந்தக் காலமும்
கொடியது தான்.

என்னில் வழியும் தமிழை
சுவைத்து மகிழ்ந்த நட்பே!
எந் தமிழில்
ஒப்பாரி பாடுகிறேன்.
கேட்கத்தான்
நீ இல்லையே.

மண்ணில் புதைந்து
நினைவில் வாழ்வாய் நட்பே!
எம் நினைவில் வாழ்வாய்.
______
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றுப் புலத்தில் முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டவரும், இராமநாதபுரம், கீழக்கரை வழியிலிருக்கும் சிக்கல் ஊரை ஒட்டிய சிறைக்குளம் எனும் ஊரைச் சார்ந்தவருமான திருமிகு ஆனந்தராசு அவர்கள் காலமானார். எனது வாழ்க்கையில் ஆகச் சிறந்த நண்பராகத் திகழ்ந்தவர். அவரின் இறப்பு என்னை மனதளவில் பாதித்திருக்கிறது. இறந்த நாள் எதுவென்று கூடத் தெரியாமல் யாருமற்றவரைப்  போல் இறந்து போனார். அவரைப் போன்ற நட்பை எவரிடத்தும் பார்த்ததில்லை, இனி பார்க்கப் போவதுமில்லை. அண்ணனுமாய் நண்பனுமாய் எனக்குள் ஊடுறுவி நிற்கும் ஆனந்தராசுவிற்கு எனது கண்ணீரும் கவிதையும் அஞ்சலி ஆகட்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக