வியாழன், 17 டிசம்பர், 2020

வேளாண் மரபினரின் பெயர் மாற்றம் & பட்டியல் மாற்றம்: பொது சமூக மனசாட்சியின் கேள்விகளுக்கான பதில்கள். :- மகாராசன்.

 


அண்மையில் உழவர் போராட்ட ஆதரவும் இரட்டைவேட நிலைப்பாடும் எனும் கட்டுரையை எழுதி இருந்தேன்.

பார்க்க: 

https://maharasan.blogspot.com/2020/12/blog-post.html

வேளாண் தொழில் மரபினர், தங்களை வேளாளர் என்று அரசாணையால் அங்கீகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை சமூக சனநாயக சக்திகள் எவ்வாறு அணுக வேண்டும்; பார்க்க வேண்டும் என்ற புரிதலையும் கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அந்தக் கட்டுரை இந்தது. 

ஆயினும், அந்தக் கட்டுரை பேசுயிருக்கும் பேசு பொருளுக்குள்ளேயே வராமல், பொத்தாம் பொதுவாக எதிர்ப்பதும் சாடுவதுமாகத் தோழர் அரங்க குணசேகரன் மற்றும் அவரது தோழமை வட்டத்தினர் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். 

இன்னொரு தோழர் திருநாவுக்கரசு நாடிமுத்து என்பார், இதைக் குறித்து விளங்கிக்கொள்வதற்காக எம்மிடம் 18 கேள்விகளை முகநூலில் முன்வைத்துப் பகிர்ந்திருந்தார். 

அவரது கேள்விகளும் எமது பதில்களும் வருமாறு:

கேள்வி 1.

நீங்கள் இந்து சமூக அமைப்பை ஒப்புக் கொள்கிறீர்கள், இல்லையா?

பதில்:

வைதீக பிராமணிய இந்துமதம் வேறு; தமிழர் சமய மரபு வேறு. சைவ, வைணவ, நாட்டுப்புற வழிபாட்டு முறைகள் என இந்துமதத்திற்கு அப்பாற்பட்ட சமய வழிபாட்டு மரபு ஒன்று இருக்கிறது. எனினும், அவை இந்து சமய மரபாக அரசியல் சட்ட வடிவம் பெற்றதாக ஆக்கப்பட்டு விட்டது. இதை ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இந்து என்கிற சமூகமாகத்தான் சட்டப்படியாகவும் சமூகப்படியாகவும் பார்க்கப்படுகிறது.

கேள்வி 2.

அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இப்போது உள்ள பள்ளர் முதலான ஏழு சாதிகளின் சாதிப் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டன? யார் சூட்டியது?'

பதில்:

பள்ளர் முதலான ஏழு சாதிகளும் பண்டைக் காலத்தில் இருந்து வழங்கிவரும் காரணப்பெயர்கள். சமூக வாழ்வியல் போக்கில் சமூகம் வழங்கிய பெயர்கள்.

1. குடும்பர்- குடும்பம்-குடும்பு நிர்வாகத்தைத் தோற்றுவித்தமையால் அமைந்த பெயர்.

2. பள்ளர்- பள்ளமான வயல் பகுதி உழவு செய்தமையால் அமைந்த பெயர்.

3. காலாடி- காலாட்படைப் போர்ப் பிரிவால் அமைந்த பெயர்.

4. வாரியான்- நீர் வாரியான்/ஏரி வாரியான் என நீர் வாரியம் மேலாண்மையால் அமைந்த பெயர்.

5. மூப்பர்- குடிகளில் மூப்பானது என்பதால் அமைந்த பெயர்.

6. தேவேந்திரகுலத்தான்- வேளாண்மைக்கு உகந்த மழைக் கடவுளான இந்திரரை வழிபடும் குலத்தைச் சார்ந்ததால் அமைந்த பெயர்.

7. பண்ணாடி- பண்ணையம் உருவாக்கி வேளாண்மை செய்தமையால் அமைந்த பெயர்.

மேற்குறித்த பெயர்கள் யாவும் சமூகப் பங்கேற்பு, தொழில், குலம் தொடர்பான காரணப்பெயர்கள். 

(இவை தொடர்பான வரலாற்றுச் செய்திகளும் பண்பாட்டுத் தரவுகளும் நிறைய நூல்களில் பரவிக் கிடக்கின்றன).

கேள்வி 3. 

இப்போதுள்ள சாதிப் பெயர்கள், அந்த 7 சாதிகளுக்கும் உள்ளவை எவ்வகையில் இழிவான பெயர்கள் என்று கருதுகிறீர்கள்?

பதில்:

அந்த ஏழு சாதிப் பெயர்களும் இழிவான பெயர்கள் கிடையாது. மிகச்சிறப்பான காரணப்பெயர்கள்.

கேள்வி 4. 

பெருந்திரள் மக்கள் இழி சாதியாகவும் கீழ்ச் சாதியாகவும் சித்தரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளீர்கள். அப்படியெனில், நீங்கள் உயர்ந்த சாதி! அதில் ஒன்றும் உங்களுக்கு அய்யப்பாடு இல்லையே?அப்படியெனில் தம்மை மஹர் என்றும், தீண்டப்படாதன் என்றும் அறிவித்துக் கொண்ட அம்பேட்கரின் இயக்கங்கள் உங்களை ஆதரிக்க வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:

ஒருவரைப் பலரும் நாயே என்று அழைக்கிறார்கள்; அவ்வாறே பாவிக்கிறார்கள் எனும் சூழலில், தான் நாய் இல்லை; நான் மனிதர் என்று அவர் அறிவித்துக்கொள்வதும், அதன்படியாக அவர் மனிதராகப் பாவித்துக் கொள்வதும் எப்படிச் சரியானதோ, அதே போல, ஒரு மக்கள் திரளை இழி சாதி; கீழ்ச்சாதி என மற்றவர் பாவிக்கிறபோது, தான் கீழ்ச்சாதி-இழிசாதி இல்லை என்று சொல்வது எப்படிப் பிழையாகும்? 

கீழ்ச்சாதி இல்லை என்று சொல்வது மேல்சாதி எனும் உணர்வால் அல்ல; தம்மை எந்தவொரு தரப்பும் சாதியால் கீழ்மைப்படுத்தக்கூடாது எனும் எதிர்ப்புணர்வில் இருந்து வருவதுதான். கீழ்ச் சாதி என ஒத்துக்கொண்டால், கீழ்ச்சாதியாகவே இருக்க வேண்டும் எனும் சமூக உளவியலை இன்னும் வலுப்படுத்தவே செய்யும்.

சாதியக் கட்டுமானத்தைத் தகர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை எல்லா இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள சாதிகளின் பட்டியல் மாற்றம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறி உள்ளார். அம்பேத்கரை முழுமையாகப் புரிந்துகொண்ட இயக்கங்கள் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் இதை ஆதரிப்பதுதான் நியாயமும் கூட.

கேள்வி 5. 

சாதியின் பெயரை மாற்றிவிட்டால், சாதி இழிவு நீங்கிவிடும் என்பதற்கு அடிப்படை ஏதேனும் உள்ளதா?

பதில்:

மதம் மாறிவிட்டால் சமூக இழிவு நீங்கும் என்று அம்பேத்கரே கூறி இருக்கிறார்.

குருடர், செவிடர், முடவர், ஊமை என்றெல்லாம் ஒருகாலத்தில் அழைக்கப்பட்டவர்கள் உடல் ஊனமுற்றோர் எனப்பட்டனர், அதுவும்கூட சரியில்லை என்று மாற்றுத் திறனாளி என்று அழைக்கப்பட்டனர்.

அலி, ஒம்போது, அரவாணி என்றெல்லாம் அழைக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்கள் திருநங்கை என்று மதிப்புமிக்க மனிதர்களாக அடையாளப்பட்டுள்ளனர்.

சூத்திரர், நீசர் என்ற பெயரில் குறிக்கப்பட்டதற்கு எதிராகத்தானே சுயமரியாதை இயக்கம் திராவிட அரசியலை முன்னெடுத்தது.

அரிசன், பஞ்சமன் என்று குறிக்கப்பட்டவர்கள் ஆதி திராவிடர்கள், தலித்துகள் என்று குறிக்கவும் அடையாளப்படுத்தப்படுகிறார்களே. 

மாதாரி சக்கிலி, பகடை என்று குறிக்கப்பட்டவர்கள் அருந்ததியர் என்று குறிக்கப்படுகிறார்கள்.

சின்னமேளம், பெரியமேளம் என இருந்த சாதிகள் இசை வேளாளர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெயர் மாற்றம் செய்த உடனே திடீர்மாற்றங்கள் எதிலும் ஏற்படப்போவதில்லை. ஆனால், மாற்றங்களுக்கு அதுவும் ஒரு அடிப்படை.

கேள்வி 6.

ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் உள்ள உட்சாதிப் பிரிவுகளில், ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருடன் உறவுமுறைக் கொள்வதில்லை. நீங்கள் எப்படி?அந்த ஏழு சாதிகளுக்குள்ளுமாவது உறவு கலப்பு ஏற்பட்டு ஒரே சாதியாகிவிடுமா?

பதில்:

அந்த ஏழு சாதிகளுக்குள் திருமண உறவு உண்டு. அகமணமுறையும் உண்டு. புறமண முறையும் உண்டு. அந்த ஏழு சாதிகளும் ஒரே சாதியாகத்தான் அவர்களுக்குள் பாவித்துக்கொள்கிறார்கள். அந்த ஏழு சாதிகளும் கலப்பு ஏற்பட்டு ஒரே சாதியாகக் காலப்போக்கில் மாறும்.

கேள்வி 7.

நீங்கள் உயர்ந்த சாதியாகி விட்டால், உங்களுக்கு கீழ்ச்சாதிகள் யார் யார்? உங்களுக்கும் உயர்வான சாதிகள் எவை?

பதில்:

கீழ்ச்சாதி இல்லை எனும் எதிர்ப்பும் குரலும் நகர்வுமானது உயர்சாதி எனும் இலக்கைக் கொண்டதல்ல; சாதி சமத்துவத்துக்கான - சமூக சமத்துவத்துக்கான நகர்வே அது. தமக்கு மேல் என்று எந்தச் சாதியுமில்லை; தமக்குக் கீழ் என்று எந்தச் சாதியுமில்லை.

கேள்வி 8.

சரி, அட்டவணைச் சாதியிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா இல்லையா?

பதில்:

எஸ்.சி எனும் அட்டவணைப் பிரிவிலிருந்து விடுவித்து/ வேறு அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என்பதே கோரிக்கை. 

கேள்வி 9.

அவ்வாறு விரும்பினால், எந்த இனப் பட்டியலில் சேரப் போகிறீர்கள்? அல்லது என்ன இனப் பெயரில் உங்களை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளீர்கள்?

பதில்:

இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் (OBC). அது பிசியாகவோ எம்பிசியாகவோ இருக்கலாம்.

கேள்வி 10.

சலுகைகள், குறிப்பாக இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று சொல்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இட ஒதுக்கீடு கேட்டால் எந்த இனத்தின் இட ஒதுக்கீட்டில் பங்கு கேட்பீர்கள்?

பதில்:

எஸ்.சி எனும் பட்டியலில் இருந்துதான் விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். எஸ்.சி பட்டியலில் இருந்து வேறு பட்டியலுக்கு மாற்றம் கோருவது இடஒதுக்கீடு வேண்டும் எனும் பொருள் கொண்டது. எஸ்.சி பட்டியலை விட்டு வெளியேறுவதால் இடஒதுக்கீடே வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. எஸ்.சி பிரிவில் இடஒதுக்கீடு வேண்டாம்; ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.

கேள்வி 11. 

அட்டவணைச் சாதியில் இடம் பெற்று இவ்வளவு நாள் சலுகைகளைப் பெற்றுள்ளதால், அந்த இனத்திற்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டின் விழுக்காட்டில் பெறுவதுதான் நியாயம். அவ்வாறு பெற்றால் அது உள் ஒதுக்கீடு ஆகும்.உங்கள் மாணவர்களை அதன் பின் ஆதிக்க சாதி மாணவர்கள் 'சுக்கு'என்று அழைக்கமாட்டார்களா?

பதில்:

எஸ்.சி பிரிவில் இதுவரைகாலம் வைத்திருந்தமையால் எஸ்.சி பிரிவில் இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர். ஒருவேளை, ஓபிசியில் வைத்திருந்தால் அந்தப் பிரிவில் இடஒதுக்கீடு பெற்று இருப்பர். இடஒதுக்கீட்டுச் சலுகைகள் எல்லாப் பிரிவினருக்கும் இருக்கிறது. எஸ்.சி பிரிவினர் மட்டும் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறுவது இல்லை. ஓபிசியினரும் இடஒதுக்கீட்டுச் சலுகை பெறவே செய்கின்றனர்.

சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி சாதிவாரி இட ஒதுக்கீடு கொடுக்கும்போது யாரும் எவரும் சுக்கு என்று கூறிட முடியாது. எல்லோருமே சுக்குதான்.

கேள்வி 12. 

இட ஒதுக்கீடே தேவையில்லை என்றால், கால் சட்டை இல்லாமல் அம்மணமாக நிற்கும் பள்ளர் சாதிக் குழந்தைகளை நீங்கள் பார்த்ததுண்டா?அவர்கள் எவ்வாறு கல்வி பெறுவது?

பதில்:

இடஒதுக்கீடு தேவை இல்லை என்று யாரும் கூறவில்லை.

கால்சட்டை இல்லாத பள்ளர் குழந்தைகள் மட்டுமல்ல, ஓபிசி பிரிவில் இருக்கும் அத்தனை சாதியிலும் உள்ள வறுமையில் உள்ள குழந்தைகளும் அம்மணமாக இருப்பதை நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ நான் நாள்தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

எல்லாச் சாதியினருக்கும்தான் இடஒதுக்கீடு இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும்போது, எல்லாச் சாதியிலும் அம்மணமாகக் குழந்தைகள் திரிவது ஏன்? இடஒதுக்கீடு என்பது கல்வி, வேலைவாய்ப்புக்கான பிரதிநிதித்துவமே தவிர, அது வறுமையை ஏழ்மையை பொருளாதார மாற்றத்தை உண்டுபண்ணும் ஒரே தீர்வாகக் கருத இயலாது.

எந்தச் சாதிக் குழந்தையானாலும் கல்விக்கு இடஒதுக்கீடு உண்டு.

கேள்வி 13. 

சாதிப் பெயர் மாறியதும் அதே கிராமங்களில் வசிக்கப் போகிறீர்களா? அல்லது வேறு பகுதிக்குக் குடிபெயரப் போகிறீர்களா? அதே பகுதியில் வசித்தால் உங்கள் மீதான இழிசாதிப் பார்வையை எவ்வாறு ஆதிக்கச் சாதியினர் மாற்றிக் கொள்வர்?

பதில்:

அரிசனர், பஞ்சமர் என்போர் ஆதிதிராவிடர் என்று பெயர் மாற்றிக்கொண்டு வேறுவேறு ஊர்களுக்குக் குடிபெயரவில்லையே. சூத்திரர் என்று குறிக்கப்பட்டவர்கள் திராவிடர் என்று கூறிக்கொண்டு அயலகம் போய்விடவில்லை. நாடார் சமூகத்தினரும் வேறு புலம் நோக்கிப்போய்விடவில்லை.

பெயர் மாற்றம்/ பட்டியல் மாற்றும் கிடைக்கும் தருவாயில் அதே பூர்வீக ஊரில்தான் வாழ முடியும். கல்வி வேலை தொழில் சார்ந்து இடம்பெயரவோ குடிபெயரவோ என்பது தேவையின் பொருட்டு அமைவது. பெயர் மற்றும் பட்டியல் மாற்றத்திற்காக ஊர் விட்டுப் புலம்பெயவர்வது தேவையில்லாத ஒன்று. அப்படிப் புலம்பெயர மாட்டார்கள். உயர்த்திக்கொண்ட சாதியினர் உடனடியாக இல்லாவிட்டாலும், படிப்படியாக மெல்லமெல்ல தங்களது பார்வையை அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நடக்கும். அதற்கு நிறைய சமூக உதாரணங்கள் இருக்கின்றன.

கேள்வி 13.

டாக்டர் கிருஷ்ணசாமி தான் பட்டியல் சாதி வெளியேற்றத்தை முன் வைக்கிறார்! நீங்கள் குறிப்பிட்ட இயக்கங்களுக்கு அவர் ஆதரவானவரில்லை. அவர் பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் ஆதரவானவர். அவர்களிடம் தானே நீங்கள் ஆதரவு கோர முடியும்? மற்ற இயக்கங்கள் ஆதரவளிக்கவில்லை என்றால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! அதற்கு காரணம் கிருஷ்ணசாமியா இல்லையா?

பதில்:

1923லிருந்து பெயர் மாற்றம்/ பட்டியல் மாற்றக் கோரிக்கை அந்தச் சமூகத்தால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேக்கம்பட்டி பாலசுந்தராசு, தேவ ஆசீர்வாதம், குருசாமி சித்தர் உள்ளிட்டவர்களின் இது சார்ந்த கருத்தாடல்கள் அந்தச் சமூகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே நிலவி வருகின்றன. அந்தச் சமூகத்தின் பெரும்பான்மைக் கோரிக்கையாக அந்தச் சமூகத்திடம் நிலவுகிறபோது, அந்தக் கோரிக்கையை மரு.கிருசுணசாமியும் இதரத் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அவ்வளவே.

இந்தக் கோரிக்கையை அரசியல் ஆதாயத்துக்காகவே பாசகவும் அதிமுகவும் இதரக் கட்சிகளும் அணுகுகின்றன. இந்தக் கோரிக்கையின் நியாயத்தை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

மற்ற இயக்கங்கள் அந்த மக்களின் இந்தக் கோரிக்கையை ஆதரித்து இருந்தால், மதவாத சக்திகள் அந்த மக்களின் பக்கம் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே ஆதரிக்காத பட்சத்தில் இதைப் பயன்படுத்தி மதவாத சக்திகள் அந்த மக்களிடம் ஊடுறுவி உள்ளனர். அதன் வெளிப்பாடே அந்தச் சமூகத்தின் ஒரு சில தலைமைகள் மதவாத சக்திகளுடன் கூட்டு வைத்திருப்பதாகும்.

அந்த மக்களின் கோரிக்கையை மதவாத சக்திகள் ஆதரிப்பதைக் காட்டிலும், சமூக சனநாயக சக்திகள் ஆதரிப்பதே அந்த மக்களுக்கும் சமூகத்திற்கும் நல்லது.

கேள்வி 14. 

இப்படித் தெருவில் வந்து எங்கள் சாதிப் பெயரை வைத்துக் கொண்டுள்ள நாய்கள் குரைக்கின்றன.இது நியாயமா என்று ஆளும் பாஜக,அதிமுக விடம்,"ஏன் அந்த பொது சமூக மனசாட்சியைக் கொன்று போட்டு விட்டீர்கள்?" என்று நீங்கள் கேள்வி கேட்கவில்லை?

பதில்:

அவர்கள் மட்டுமல்ல, நீங்களும்கூட கேட்கலாம்; கேட்க வேண்டும். சமூக பொது மனசாட்சியைக் கொல்வதும் தூண்டுவதும்கூட நீங்கள் குறிப்பிட்ட அவர்களாகக் கூட இருக்கலாம்தானே. நான் கேட்பது, பொதுமனசாட்சியான நீங்கள் கேட்டீர்களா? ஏன் ஒரு சமூகத்திற்கு வேளாளர் என்று பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? அவர்களது கோரிக்கை நியாயம்தானே என்று சாதியவாதிகளைப் பார்த்து அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் சேர்ந்து கேளுங்கள்.

கேள்வி 15.

கடந்தப் பாராளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி என்னடா ஆயிற்று? என்று மோடியின் சட்டை முன் பகுதியை இழுத்து ஏன் கேள்வி கேட்கவில்லை?

பதில்:

அப்படிக் கேட்க வேண்டும் என்றுதான் சமூக சனநாயக சக்திகளையும் துணைக்கு அழைக்கிறார்கள்.

கேள்வி16.

நீங்களும் இந்துக்கள் என்பதாலா அவ்வாறு கேள்வி கேட்க முடியவில்லை?

பதில் :

அப்படிக் கேள்வி கேட்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவன்.

கேள்வி 17.

மதத்தையும், சாதியையும் உதறித் தள்ளவில்லை என்றாலும், மதம் மற்றும் சாதியை ஏற்கவில்லை என்று கொள்கையளவில் உள்ள கட்சிகள் ஒரு சாதியை உருவாக்கத் துணைபுரியும் என்று எதிர்பார்பது வேடிக்கை இல்லையா?

பதில்:

தலித் அரசியல் என்பது குறிப்பிட்ட சாதிகளை மய்யப்படுத்திய சாதி அரசியல் உருவாக்கம்தானே. அண்மையில் அருந்ததியர் பெயர் மாற்றம் என்பது சாதியை உருவாக்கும் ஒன்றாக யாரும் பார்க்கவில்லை. இதை மட்டும் சாதியை உருவாக்கத் துணைபுரிவதாகக் கருதுவதுதான் வேடிக்கை.

கேள்வி 18.

அட்டவணை சாதியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் இனி கிருஷ்ணசாமியோ அல்லது அந்த ஏழு சாதியினரோ தேர்தலில் நிற்கப் போவதில்லை என முடிவு செய்துவிட்டீர்களா?

பதில்:

ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும்போது, அந்த வீடு பிடிக்காமலோ அல்லது வீட்டு உரிமையாளர் வெளியேறச் சொன்னாலோ உடனே நடுத்தெருவுக்கு வந்துவிட முடியாது. வேறு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கும்போதுதான் அந்தப் பழைய வீட்டிலிருந்து காலி செய்ய முடியும். 

எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேற்றிவிட்டால், விரும்பினால்கூட தனித் தொகுதியில் நிற்க முடியாதுதானே. அதுவரை, தனித் தொகுதியிலோ பொதுத் தொகுதியிலோ நிற்பதுதானே சரியானது. 

ஒரு வேலை பிடிக்கவில்லை என்றால், வேறு வேலை கிடைக்கின்ற வரையில் ஏற்கனவே இருக்கும் அந்த வேலையில் நீடிப்பதுதான் புத்திசாலித்தனமானது மட்டுமல்ல; சரியான முறையும் கூட. புதிய வேலை கிடைத்த பிறகு பழைய வேலையை உதறிப்போவதில் இழப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.


ஏர் மகாராசன்

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

17.12.2020

5 கருத்துகள்:

  1. அருமையான நெத்தியடி பதிவு அண்ணா

    பதிலளிநீக்கு
  2. இதற்கு மேல் மூடர்களுக்கு விளக்க முடியாது அண்ணே சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. அருமையான வாதம் இங்கு புரியாமல் யாரும் எதிர்ப்பதில்லை புரிய யாரும் விரும்புவதில்லை

    பதிலளிநீக்கு