திங்கள், 14 டிசம்பர், 2020

உழவர் போராட்ட ஆதரவும் இரட்டை வேட நிலைப்பாடும்: மகாராசன்

அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், உழவர்களின் வேளாண் உற்பத்தி வாழ்வியலைப் பாதுகாக்கும் நோக்கிலும், சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வேளாண் துறையைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்தியாவின் வடபகுதி உழவர்கள் பெருந்திரளாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டு வருகிறது. போராடிக் கொண்டிருக்கும் உழவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் தமது தார்மீக ஆதரவைத் தந்து கொண்டிருக்கின்றனர்.

வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை ஆதரித்தும், உழவர்களின் வாழ்வியலுக்கு எதிராகச் சட்டங்களை இயற்றிக் கொண்டும், உழவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமலும் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் பல்வேறு தரப்பினர் தமது உழவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பெரும்பகுதித் தரப்பினரின் ஆதரவைப் பெற்றதாக வடக்கத்தி உழவர்களின் போராட்டம் வீறுகொண்டு எழுந்திருக்கிறது.

வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தமது தார்மீக ஆதரவைத் தெரியப்படுத்தி வருகின்றனர். வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்ச் சமூகத்தின் பொது மனசாட்சி தமது ஆதரவைத் தார்மீகமாகத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. உழவர் இயக்கங்கள், சமூக சனநாயக சக்திகள், பல்வேறு அரசியல் கட்சிகள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள், தமிழ்தேசிய இயக்கங்கள் போன்றவை வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை தார்மீகமாக ஆதரித்தும், பல்வேறு ஆதரவுப் போராட்டங்களை நடத்தியும் வருகின்றன.

சுவரொட்டி, துண்டறிக்கை, தெருமுனைக்கூட்டம், ஆர்ப்பாட்டம், மறியல், பரப்புரை போன்ற பல்வேறு வகையில் வடக்கத்தி உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தத்தமது அரசியல் களங்களில் செயலாற்றி வருவதோடு, சமூக ஊடகங்கள் பலவற்றிலும் தீவிரப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
உழவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகக் களத்திலும் பரப்புரையிலும் செயலாற்றும் தமிழகத்தின் அனைத்துச் சனநாயக சக்திகள், உழவர் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் வரவேற்கத்தக்கவை; பாராட்டத்தக்கவை. போராடுகிற உழவர்களின் பக்கம் அனைவரும் நிற்பதே நியாயமும் கூட.

உழவர்களின் பக்கம் நிற்பதாகக் கருதும் அல்லது சொல்லிக்கொள்ளும் அல்லது களம் காணும் அனைத்துத் தரப்பினரும் வடக்கத்தி உழவர்களின் நியாயத்தைத்தான் உணர்ந்திருக்கிறார்களே ஒழிய, தெக்கத்தி உழவர்களின், குறிப்பாகத் தமிழகத்துப் பெருந்திரள் உழவர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து கொள்ளவுமில்லை; புரிந்துகொள்ளவுமில்லை. 

பெருந்திரள் உழவர்களின் அடையாளப் போராட்டங்களையும் தன்மானப் போராட்டங்களையும் கண்டும் காணாமல் இருப்பதும், அவர்களது கோரிக்கையில் இருக்கும் உண்மைத் தன்மைகளையோ அல்லது நியாயத்தையோகூட காதுகொடுத்துக் கேட்கவும் பொது சமூக மனசாட்சி மறுத்துக்கொண்டேதான் இருக்கிறது. வடக்கத்தி உழவர்களின் நியாயத்தை உணர்ந்த பொது சமூக மனசாட்சியானது, தமிழக உழவர்களின் பெருந்திரள் கோரிக்கையின் நியாயத்தை உணர மறுக்கிறது; கள்ள மவுனம் காக்கிறது. கூடவே, உள்ளுக்குள் இருக்கும் சாதியாதிக்க உணர்வுக்கும், சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதியாதிக்கக் கருத்தியலுக்கும் அதன் பிழைப்புவாத சக்திகளுக்கும் ஏதோ ஒருவகையில் பலியாகிக் கிடக்கிறது; அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது; ஒத்தூதிக் கிடக்கிறது.
ஆனால், வடக்கில் போராடும் உழவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக வேடம் கட்டிக்கொள்கிறது.

வடக்கில் போராடும் உழவர்கள் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரையிலும் தங்களை உழவர்களாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளனர். பல்வேறு மொழி பேசக்கூடியவர்களாக இருந்தாலும், பல்வேறு தேசிய இனங்களாக இருந்தாலும், பல்வேறு வட்டாரத்தினராக இருந்தாலும், பல்வேறு சாதி மதத்தினராக இருந்தாலும், வேளாண்மை செய்கிற அவர்கள் தங்களை உழவர்கள் என்றும், வேளாண்மை செய்கின்ற அவர்களை உழவர்கள் என்றே இந்தியாவின் வடபகுதி உழவர்கள் அடையாளப்படுகின்றனர். 

புரிதலுக்காகச் சொல்வதெனில், இந்தியாவின் வட பகுதியில் வேளாண்மை செய்கிற அவர்கள் வடக்கத்தி வேளாளர்கள்/ உழவர்கள். தாங்கள் செய்து வருகிற வேளாண் தொழில்சார்ந்த அடையாளப் பெயரோடுதான் அவர்கள் அடையாளப்படுகின்றனர். வேளாண் தொழில்சார்ந்த அடையாளத்தைப் பெற்றிருப்பதிலோ அல்லது பெறுவதிலோ வடக்கத்தி உழவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அப்படியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதனால்தான், அவர்கள் நேரிடையாகவே வேளாண் சட்டங்களை எதிர்த்துக் குறிப்பான பிரச்சினைகளை முன்வைத்துப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தமிழகத்து உழவர்களின் பிரச்சினைப்பாடுகள் வேறு மாதிரியானவை. ஆதி காலத்திலிருந்து இன்றுவரையிலும் வேளாண் தொழிலைச் செய்து வருகிற பல்வேறு வேளாண் தொழில் மரபினர் தமிழகத்துப் பூர்வக்குடிகளாக இருக்கின்றனர். வேளாண்மை செய்கிற தொழில் மரபினரைத் தொழிற்பெயரால் பல்வேறு வகையில் அடையாளப்படுத்துகிற வழக்கம் தமிழகத்தில் இன்றுவரையிலும் இருக்கின்றது. உழவுத்தொழில் செய்வதால் உழவர் என்றும், வேளாண்மை செய்வதால் வேளாளர் என்றும் குறிப்பதே தமிழரின் பெருவழக்காக இருந்திருக்கிறது. இத்தகைய வேளாண் தொழிலைப் பல்வேறு குலங்களும் குடிகளும் குழுக்களும் செய்து வந்திருக்கின்றன. இதில் பல்வேறு மறைந்துபோயின; வேறு தொழிலுக்கு மாறிக்கொண்டன; புதியதாகவும் வந்துசேர்ந்தன. ஆனாலும், ஆதிகாலத்திலிருந்து இன்றுவரையிலும் வேளாண்மையோடும் வேளாண் தொழில் மரபோடும் பிண்ணிப் பிணைந்து வருகின்றவை மிகச்சில குலங்களும் குடிகளும் மட்டுமே.

அதிலும் குறிப்பாக, இன்றளவிலும் வேளாண் தொழில் மரபினராக இருப்பதோடு மட்டுமல்லாமல், தொல்லியல் அகழாய்வு, கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, பிற நாட்டார் குறிப்புகள் போன்ற வரலாற்று ஆவணங்களிலும், இலக்கணம், இலக்கியம் போன்ற தமிழ்மொழிசார் பதிவுகளிலும், நாட்டுப்புற வழக்காறுகள், வழிபாடு, சடங்கு உள்ளிட்ட பண்பாட்டு நடத்தைகளிலும் வேளாண் மரபினராகவே அடையாளப் படுத்தப்பட்டிருப்பவர்கள் மிகச்சில குலங்கள் மட்டுமே. குலத்தாலும் குடியாலும் வட்டாரத்தாலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் வேளாண் தொழில் செய்துவந்த தொழில் மரபினரை வேளாளர் என்ற தொழிற்பெயர் அடையாளத்தால்தான் குறிக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.

15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நுழைந்துவிட்ட ஆட்சி அதிகார மாற்றங்கள்/படையெடுப்புகள்/வன் குடியேற்றங்கள் போன்றவற்றால், தமிழகப் பூர்வீக வேளாண்மைக் குடிகளின் பெரும்பகுதி வேளாண் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன; பூர்வீக நிலங்களிலிருந்து பெரும்பகுதி வேளாண் குலங்கள் துரத்தப்பட்டுள்ளன. பூர்வீக வேளாண் தொழில் மரபினரோடு இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. பூர்வீக வேளாண் குலங்களிடம் இருந்து வந்த குடும்பு ஆட்சிமுறை எனும் நிர்வாக முறைகள்கூட மாற்றியமைக்கப்பட்டன. பூர்வீகக் குடிகளின் ஆட்சி, அதிகார, உற்பத்தி முறையோடு அவர்களுக்கிருந்த உறவு முற்றாக அழித்தொழிக்கப்பட்டன. கூடவே, பன்னெடும் காலமாக வேளாளராகவும், வேளாண் குலங்களாகவும் திகழ்ந்துவந்த பெருந்திரள் சமூகத்தை இழி சாதியாகவும் கீழ்ச் சாதியாகவும் சித்தரிப்பு செய்து, வேளாளர் எனும் அவர்களது தொழிற்பெயர் அடையாளங்களை வேளாண்மையோடு துளியும் தொடர்பில்லாத பிற குலங்களுக்கும் குடிகளுக்கும் வழங்பட்டுவிட்டன அல்லது அபகரித்துக்கொண்டன. 

பெயரளவில் வேளாளர் என்பதை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டிருக்கும் எந்தவொரு குலமும் குடியும்கூட வேளாண் தொழில் மரபினருக்கான வரலாற்றுத் தொடர்ச்சியும் பண்பாட்டுத் தொடர்ச்சியும் கொண்டவை கிடையாது.

அதேவேளையில், வேளாண்மையோடும் வேளாண் தொழில் மரபோடும் தம்மை அடையாளப்படுத்தி வருகின்ற பெருந்திரள் சமூகமானது, வரலாற்றுத் தொடர்ச்சியையும் பண்பாட்டுத் தொடர்பையும் முன்வைத்து, வேளாளர் எனும் தொழிற்பெயருக்கும் தங்களுக்கும் இருக்கிற தொன்மைச் சான்றாதாரங்களை அகச்சான்றுகளாகவும் புறச்சான்றுகளாகவும் முன்வைத்துத் தம்மை வேளாளர் எனும் பின்னொட்டுத் தொழில் பெயரால் அடையாளப்படுத்த வேண்டும் எனவும், வேளாண்மை செய்கிற தொழில் மரபினரான தங்களை வேளாளர் எனும் பின்னொட்டுத் தொழிற்பெயரால் அரசும் பொது சமூகமும் அங்கீகரிக்க வேண்டும் எனவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் போராடி வருகிறது உழவர் சமூகத்தின் ஒரு பகுதி.

ஆனால், வேளாண் தொழில் மரபினரின் தொழிற்பெயர் அடையாளக் கோரிக்கையான வேளாளர் எனும் பின்னொட்டுப் பெயர் அடையாளத்தை, குறிப்பிட்ட சில பல சாதியினருக்கான அடையாளம் போலவும், சாதிப் பட்டம் போலவும் கருதிக் கொண்டு, வேளாளர் எனும் தொழிற்பெயர் அடையாளத்தை வேளாண் தொழில் மரபினராகத் தொடரும் பெருந்திரள் சமூகத்திற்கு வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வேளாளர் என்பது சாதிப்பெயரோ குலப்பட்டமோ அல்ல. வேளாளர் என்னும் சொல்லானது, வேளாண்மைத் தொழில் செய்வதால் உருவான தொழிற்பெயர்ச் சொல். வேளாண்மை செய்கிற தொழில் மரபினர் யாவருக்கும் பொதுவான தொழிற்பெயர் அடையாளச் சொல். வேளாண்மை செய்கிற எந்தக் குலமும் குடியும் அடையாளப்படுத்திக் கொள்கிற தொழிற்பெயர் அடையாளமே வேளாளர் எனும் சொல்லாகும். இந்தத் தொழிற்பெயர் அடையாளச் சொல்லைப் பல குலங்களும் குடிகளும் தங்களது அடையாளப் பெயர்களோடு முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் இணைத்துக் கொண்டுள்ளன.

முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் வேளாளர் எனும் சொல்லைக் கொண்டிருக்கிற பல குலங்களும் உண்மையில் வேளாண்மையோடு தொடர்பு கொண்டவை கிடையாது. அவ்வாறு, வேளாளர் எனும் பெயரை ஒட்டாகக் கொண்ட பல குலங்களும் ஒரே சாதியினரும் கிடையாது. பல சாதியினரும் வேளாளர் எனும் ஒட்டுச் சொல்லால் குறிக்கப்படுகின்றனர். வேளாண்மையோடு துளியும் தொடர்பில்லாதவர்களே தங்களை ஏதோ ஒருவகையில் வேளாளர் என அழைத்துக்கொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிற வேளாளச் சாதியினர், உண்மையாகவே காலங்காலமாக வேளாண்மையோடு தொடர்பு கொண்டிருக்கிற வேளாண் தொழில் மரபினர் தங்களையும் வேளாளர் என்று அடையாளப்படுத்தவும் அங்கீகரிக்கவும் வேண்டும் என்று கேட்கும்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

வேளாண்மையோடு தொடர்பில்லாத போலி வேளாளர்கள்தான், வேளாண்மையோடு உண்மையாகவே தொடர்பு கொண்ட பெருந்திரள் சமூகத்தை வேளாளர் என அடையாளப்படுத்துவதை மறுக்கிறது; எதிர்க்கிறது; போராடுகிறது.

உண்மையாகவே வேளாளர் என்ற தகுதிக்கும் அடையாளத்திற்கும் உரியவர்களான பெருந்திரள் வேளாண் சமூத்தினரின் பெயர் மாற்றக் கோரிக்கையானது பண்பாட்டு அடையாள மீட்பும் தன்மதிப்புக்கான போராட்டமும் நிறைந்த ஒன்றாகும்.

வேளாண் தொழில் பெயர் அடையாளத்திற்காகப் போராடும் வேளாண் தொழில் மரபினரின் கோரிக்கையையும் பொது சமூக மனசாட்சி தார்மீகமாக ஆதரிப்பதுதானே நியாயம். இதை ஆதரிப்பதும் ஆதரிக்காமல் இருப்பதும்கூட ஒரு பக்கம் இருக்கட்டும்.

வேளாண்மையே செய்யத் தெரியாத, ஆணும் பெண்ணுமாய்ச் சேறு சகதியில் இறங்காத, வேளாண் தொழில்திறமும் நுட்பமும் இல்லாத, வேளாண்மையோடு பண்பாட்டு ஒட்டுறவு இல்லாத பல சாதியினர் தங்களை வேளாளர் எனச் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி அவர்கள் சொல்லிக்கொண்டாலும், அவர்கள் யாவரும் போலியான வேளாளர்கள்தான்.

வேளாண் தொழில் மரபோடு தொடர்பில்லாத பல சாதியினரும் தங்களை வேளாளர் என அழைத்துக்கொண்டும் அடையாளப்படுத்திக் கொண்டும் இருப்பதோடு மட்டுமல்லாமல், வேளாண் தொழிலை உண்மையாகச் செய்து வருகிற தொழில் மரபினரை வேளாளர் என அடையாளப்படுத்தக் கூடாது எனப் போலி வேளாளர்கள் எதிர்ப்புக் காட்டுவதும், மறுப்புக் காட்டுவதும், போராட்டம் செய்வதுமாகத் தீவிரம் காட்டுகின்றனர்.

யார் யாருக்கோ, எந்தெந்தக் குலங்களுக்கோ சாதியினருக்கோ வேளாளர் எனும் அடையாளப் பெயர் இருக்கும்போதும் வழங்கும்போதும் எதிர்ப்பும் மறுப்பும் போராட்டமும் செய்திடாத போலி வேளாளர்கள், உண்மையான வேளாண் தொழில் மரபினருக்கு வேளாளர் எனும் அடையாளப் பெயரை வழங்குவதற்கு எதிர்ப்பும் மறுப்பும் காட்டுகிறார்கள். அண்மைக்காலமாகப் பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். போலி வேளாளர்களின் இத்தகையப் போராட்டங்களுக்குப் பின்னால் இருப்பது அப்பட்டமான சாதியாதிக்க வெறியும் காழ்ப்பும் வன்மமும் அன்றி வேறில்லைதான்.

உண்மையான வேளாண் மரபினரின் அடையாளமான வேளாளர் என்னும் தொழிற்பெயரை அவர்களுக்கானதாக ஏற்கவும் அல்லது அவர்களுக்கு வழங்கவும் அங்கீகரிக்கவும் செய்வதுதான் நியாயம்.

அதேபோல, வேளாண் தொழில் மரபினருக்கு வேளாளர் எனும் பெயர் கொண்டு அடையாளப்படுத்துவதற்கு எதிர்ப்புக் காட்டுகிற
போலி வேளாளர்களின் சாதிய வெறியை, சாதியக் காழ்ப்பை, சாதிய வன்மத்தை எதிர்ப்பதும்தானே நியாயமானது.

ஆனால், போலி வேளாளர்களின் சாதியாதிக்க வெறியை, சாதிய வன்மத்தை, சாதியக் காழ்ப்பைப் பொது சமூக மனசாட்சி மட்டுமல்ல, சாதியொழிப்பு பேசுகிற - தீண்டாமை ஒழிப்பு பேசுகிற - பாட்டாளி வர்க்க விடுதலை பேசுகிற - ஒடுக்கப்பட்டோர் விடுதலை பேசுகிற - தமிழ்த் தேச விடுதலை பேசுகிற - சமூக சனநாயகம் பேசுகிற - சமூகநீதி பேசுகிற எந்தவோர் சமூக இயக்கங்களும் எதிர்க்கவோ கண்டிக்கவோகூட முன்வரவில்லை.

போலி வேளாளர்களின் சாதியாதிக்க வெறியோடும், சாதியக் காழ்ப்போடும், சாதிய வன்மத்தோடும் நடைபெற்று வருகிற சிற்சில போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களைக்கூட ஊதிப் பெரிதாக்கிக் காட்டும் வேலைகளைத்தான் அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் செய்து வருகின்றன.

வடக்கத்தி வேளாளர்கள் தங்கள் வேளாண் தொழிலைப் பாதுகாக்கப் பெரிதும் போராடி வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தெக்கத்தி வேளாளர்களோ தங்களை வேளாளர் என்று அடையாளப்படுத்துங்கள்; அங்கீகரியுங்கள் என்று பெயர் அடையாளத்திற்கே போராடும் சூழலில்தான் இருந்து கொண்டிருக்கின்றனர். இன்னொருபக்கம், வேளாளர் என்று போலியாகச் சொல்லிக்கொள்ளும் போலி வேளாளர்களோ, உண்மையான வேளாளர்களுக்கு வேளாளர் என்று அடையாளம் வந்துவிடக்கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தில்லியிலும் வடக்கிலும் நடக்கின்ற உழவர்களின் போராட்டத்தின் பக்கம் நிற்பது உண்மையென்றால், வடக்கத்தி வேளாளர்களின் போராட்டத்தை ஆதரிப்பது உண்மையென்றால், தமிழ்நாட்டின் தெக்கத்தி உழவர்களின் பெயர் அடையாளப் போராட்டத்தின் பக்கமும் நில்லுங்கள்; தெக்கத்தி வேளாளர்களின் பக்கமும் நில்லுங்கள். தெக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையின் நியாயத்தை ஆதரியுங்கள். போலி வேளாளர்களின் சாதியவெறி, சாதியக்காழ்ப்பு, சாதிய வன்மத்தைக் கண்டியுங்கள்.

உழவர்களின் பக்கம் நிற்பது உண்மையானால், வடக்கத்தி வேளாளர்களின் பக்கம் நிற்பதைப்போல, தெக்கத்தி வேளாளர்களின் பக்கமும் நில்லுங்கள். வடக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையை ஆதரிப்பதுபோல, தெக்கத்தி வேளாளர்களின் கோரிக்கையையும் ஆதரியுங்கள்.

உழவர்களின் பக்கம் நின்று, வடக்கத்தி உழவர்களுக்கு/வேளாளருக்கு எதிராக இருக்கும் போலி சனநாயக அரசை அம்பலப்படுத்துவதுபோல, தெக்கத்தி உழவர்களுக்கு / வேளாளருக்கு எதிராக இருக்கும் போலி வேளாளர்களின் சாதி விரோதத்தையும் அம்பலப்படுத்துங்கள். இதுவும்தான் உழவர் பக்கம் நிற்பதன் உண்மையான நிலைப்பாடு.

மாறாக, வடக்கத்தி வேளாளர்களை மட்டுமே ஆதரிப்பதும்; வடக்கத்தி உழவர்களின் போராட்டத்தை மட்டுமே ஆதரிப்பது என்பதும், தெக்கத்தி வேளாளர்களின் அடையாளப் போராட்டத்தை ஆதரிக்காமலும், போலி வேளாளர்களின் சாதியாதிக்கத் திமிர்த்தனத்தை எதிர்க்காமல் இருப்பதும் நேர்மையான நிலைப்பாடாகக் கருதமுடியாது. இரட்டை வேடம் போடும் இத்தகைய நிலைப்பாடு என்பது சாதி ஆதிக்கத்தின் பக்கமே நிற்பதாகும்.

இதைக் குறித்து, திராவிட இயக்கங்கள், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் மட்டுமல்ல, புரட்சிகர மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கூட இன்னும் விளங்கிக்கொள்ளவும் இல்லை; அறிந்து கொள்ளக்கூட முன்வரவுமில்லை. அதனால்தான், அந்த மக்களிடமிருந்து மெல்லமெல்ல அவை அந்நியப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு மத பயங்கரவாத சக்திகள் ஊடுறுவிக் கொண்டிருக்கின்றன.

பாவம் அவர்கள். எவரது துணையுமின்றி ஒண்டியாய் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். உழவர்களின் பக்கம் நிற்பது உண்மை எனில், பெயர் அடையாளத்துக்காகவும் வேளாண்மைத் தொழிலுக்காகவும் போராடுகிற உண்மையான வேளாளர் பக்கம் நில்லுங்கள்; அவர்களுக்காகவும் சேர்த்துக் குரல் கொடுங்கள். இதுவே சமூக நீதியும் சமத்துவ நீதியும்கூட.

ஏர் மகாராசன்
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
14.12.2020.
*
ஒளிப்படம் உதவி:
ஊடகவியலாளர் 
இரா.சிவக்குமார், மதுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக