வெள்ளி, 11 ஜூன், 2021

சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியல் - அம்பலமாகும் உள்ளடி வேலைகள் : மகாராசன்.




இந்த நிலத்தில் வந்து குடியேறிய வேற்றினத்தவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற பூர்வக்குடித் தமிழர்களை, அதிகாரத்தின் பலத்தால் குல நீக்கம் - குல விலக்கம் செய்து, கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்து, அவர்களிடமிருந்த பெருவாரியான உழவு நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்ட வரலாற்று நிகழ்வுப் போக்கும்கூட பாசிசம்தான்; காலனியம்தான்; நவ பிரம்மதேயம்தான். இந்தப் பின்புலத்தைக் குறித்து யாரேனும் பேச முனைந்தால், அது இனவாதம்; பாசிசம் என்று முத்திரை குத்தி ஒதுக்குவதும் தனிமைப்படுத்துவதும் காயடிப்பதுமாக இருந்து வந்த நுண் அரசியல், இப்போது வெளிப்படையான பகிரங்க அரசியலாகவும் மிகத் தீவிரமாக முன்னெழுந்து வருகின்றது. இந்தச் சூழ்நிலையில், இந்த மண்ணின் பூர்வக்குடித் தமிழர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டார்கள்; நிலங்களை எவ்வாறு இழந்தார்கள்; அதிகாரத்தை எப்படி இழந்தார்கள்; தற்சார்பான வாழ்வை எவ்வாறு கட்டமைத்திருந்தார்கள்; பூர்வ அடையாள மரபுகளையும் அறிவையும் எப்படி இழந்தார்கள்; வந்து குடியேறியவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எப்படிப் போராடினார்கள்; வந்து குடியேறியவர்கள் யார் யார்; அவர்களின் ஆக்கிரமிப்பும் அதிகாரமும் என்ன சாதக பாதகங்களை உருவாக்கின. அவர்களின் நவ பிரம்மதேயங்களின் கட்டமைப்பு என்ன என்பதைக் குறித்தெல்லாம் புனைவின் வழியான வரலாற்றை மிக விரிவாக ஆழமாக நேர்மையாகப் பேசிய ஒரே நூல் இரா.முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் மட்டுமே. 

ஒரு பெரிய நூல் மக்கள் இலக்கியமாக வாசிக்கப்பட்டும் அறிமுகப்படுத்தப்பட்டும் கொண்டாடப்பட்ட நூல் சுளுந்தீயாக மட்டுமே இருக்க முடியும். மிகக் குறுகிய காலத்திற்குள் 5 பதிப்புகளைக் கண்டிருக்கும் இந்த நூல், பெருவாரி வாசகர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் பாராட்டையும் பெற்றிருக்கிறது. பெருவாரி மக்கள் வாசிப்புக்கு உள்ளான பேரிலக்கியமாகக் கொண்டாடப்பட்டிருப்பதே சுளுந்தீ நூலுக்கான மிகப்பெரிய அங்கீகாரம்; விருதும்கூட.

சுளுந்தீ நூலின் முக்கியத்துவத்தைப் படித்தறிந்த பலரும் உயரிய விருதுக்குரிய நூலாகப் பரிந்துரைக்கவும் செய்திருக்கின்றனர். அண்மையில், இலக்கியத்திற்கான இந்திய அரசின் உயரிய விருதுக்கான தெரிவுக் குழுவில் இருந்த பலரும், அவர்கள் பரிந்துரைத்த இறுதிப்பட்டியலில் சுளுந்தீ நூலையும் தெரிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில், சுளுந்தீ நூலானது பூர்வக் குடித் தமிழர்களின் அரசியலைப் பேசுகிறது என்றும், வந்து குடியேறிய வேற்றினத்தவர்களின் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது எனவும், பிராமணர்களைக் கொச்சைப்படுத்துகிறது எனவும் கூறி, வேற்றினத்தவர்களும் பிராமணர்களும் ஒன்றுகூடி சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியலை மிகக் கமுக்கமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். சுளுந்தீ நூலை விருதுக்கான இறுதிப் பட்டியலுக்குப் பரிந்துரைத்திருந்த சூழலில், ஒரு வேளை, சுளுந்தீ நூல் விருதுக்குரிய நூலாகத் தெரிவு செய்து அறிவிக்கப்பட்டுவிட்டால், சுளுந்தீ முன்வைத்திருக்கும் அரசியல் இன்னும் அதிகமாகப் பேசவும் விவாதிக்கப்படவும் கூடும்; அது, வந்து குடியேறியவர்களின் அதிகாரச் சூழ்ச்சி அம்பலப்பட்டுப்போகும் என்பதறிந்து பதைபதைத்துப்போன வேற்றின- பிராமணக் கூட்டத்தின் அறிவுசீவிகள் பலரும் சுளுந்தீக்கான நுண் எதிர்ப்பை அரங்கேற்றி இருக்கிறார்கள். தெரிவுக் குழுவினரால் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட பின்னரும்கூட, சுளுந்தீ நூலை விருதுக்கு மட்டுமல்ல; இறுதிப்பட்டியலில்கூட இடம்பெறாத வகையில் மறு பட்டியல் தயாரிக்க வைத்திருக்கிறார்கள். பூர்வக்குடித் தமிழர்கள் மீது மட்டுமல்ல; பூர்வக்குடித் தமிழர்களின் வரலாற்றின் மீதும் வெறுப்பையும் காழ்ப்பையும் பகையும் கொண்ட வேற்றின பிராமண அறிவுசீவிகளால் உள்ளடி வேலைகள் பார்க்கப்பட்டு சுளுந்தீ நூலை ஒதுக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். சுளுந்தீ நூலுக்கு விருது கொடுக்காததைப் பற்றியோ அல்லது வேறு வேறு நூல்களுக்கு விருதுகள் கொடுப்பதை/கொடுத்ததைப் பற்றியோ எவ்வித வருத்தமும் காழ்ப்பும் இல்லை. ஏதாவது ஒரு நூலுக்கே விருதும் வழங்கப்பட முடியும். விருதுக்குரிய தகுதியான நூலுக்குத்தான் வழங்கி இருக்க முடியும் அல்லது ஒரு நூலின் பேரைச்சொல்லி அந்தப் படைப்பாளியைக் கவுரவிக்க விருது அளித்திருக்க முடியும். பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்றெல்லாம் கவிதைத்திறனுக்காகப் பாராட்டப் பெற்ற பாரதிதாசனுக்கு, கவிதை நூலுக்காக சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்படவில்லை. அவர் எழுதிய பிசிராந்தையார் எனும் நாடக நூலுக்கே விருது கொடுத்தார்கள். இப்படி நிறைய சான்றுகள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஒரு படைப்பாளிக்கே விருதளிக்க இயலும் என்பதால், யாராவது ஒருவர் அந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சிதான். அதேவேளையில், சுளுந்தீ நூலை விருதுக்கான இறுதிச்சுற்றுக்குப் பரிந்துரைத்து அனுப்பப்பட்ட பட்டியலை நிராகரிக்கச் செய்து, வேறு ஒரு பட்டியலை தெரிவுக் குழுவினருக்கு அப்பாற்பட்ட இன்னொரு குழுவினர் தயாரிக்கச் செய்து, அதில் சுளுந்தீ இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள் எனில், அவர்களது தமிழர் விரோத அரசியலின் வன்மம் மிகக்கொடூரமாகவேதான் இருக்கும். தமிழர் விரோத அரசியலை உள்ளீடாகக் கொண்டிருக்கும் வேற்றின-பிராமணக் கூட்டின் சதிவேலைகள் சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியலைச் செய்திருக்கிறது. தமிழர் விரோத சக்திகள் சுளுந்தீ நூலை எதிர்க்கிறது எனில், சுளுந்தீ நூல் தமிழர் அரசியலையே உள்ளீடாகக் கொண்டிருக்கிறது என்றே பொருள். அந்தவகையில், சுளுந்தீ நூலை தமிழர் விரோத சக்திகள் எதிர்த்தாலும், தமிழர்கள் ஆதரிக்கவே செய்வார்கள்; கொண்டாடவே செய்வார்கள். இதை காலமும் களமும் வரலாற்றில் நிகழ்த்திக் காட்டும். 

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக