வெள்ளி, 25 ஜூன், 2021

சொல்லேர் உழவின் முன்னத்தி ஏர்



சிறு வயதுக் காலங்களில், வயக்காட்டில் அப்பா உழும்போதெல்லாம் உழவுச் சாலுக்குப் பின்னாலே ததக்குப் பொதக்கென போய்க்கொண்டே இருப்பேன். அந்த மேழியைப் பிடித்து ஒரு சாலடித்து வரவேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்போது.

மூனு நாலு சால் சுத்தி வந்ததுக்கப்புறமா, மேழி மேல கைய வைக்கச் சொல்லி அழுத்திப் பிடித்துக் கொண்டு கூடவே வருவார் அப்பா.

காலம் பூரா இப்படியே ஏரப் பிடிச்சி உழுதுக்கிட்டுத் திரியனும்னு நெனைக்காத தம்பி. நிலமே கதினு வம்படியா கெடக்கிறது எங்க காலத்தோட போகட்டும். மழ தண்ணி இல்ல; நாம வெள்ளாம செஞ்சத வரவு செலவு பாத்து விக்க முடியல; நம்மகிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப் போயி விக்கிறவன் காசு பணம்னு சம்பாதிக்கிறான். நாமதான் ஒழச்சு ஒழச்சு ஒன்னுமில்லாமக் கெடக்கொம். ஊருக்குச் சோறு போடுறம்னு நாமதான் பெருமையா நெனைக்கிறோம். ஒரு பயலும் நம்மள மதிக்கவும் மாட்டான். உழுகனும்னு ஆச இருந்தா, போயி படிச்சி ஆளாகி, நாலு பேரு படிக்கிற மாதிரி நீயும் எதாவது எழுது. ஒன்னோட எழுத்த இந்த ஒலகம் படிக்கிற மாதிரி எழுது. அதுவும் உழவுதான் தம்பி என்று அப்பா சொல்லிக்கொண்டே வந்த அந்தச் சொற்கள்தான் என் சொல்லேர் எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்.

வில்லேர் உழவு மரபின் மேழி பிடித்த கைகளால், சொல்லேர் உழவு மரபில் பயணிக்கிறேன். நிலம் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் சொல்லேர் எழுத்துழவாய் உழுது போகும் என் ஆய்வுகள், நிலம் பற்றியும் நிலத்தில் தவித்த-தவிக்கும் மக்களைப் பற்றியும் கிளரிக்கொண்டேதான் இருக்கும்.

ஏர் மகாராசன்

25.06.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக