சனி, 28 ஆகஸ்ட், 2021

பாடத்திட்டக் குழுக்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையும் - மகாராசன்

ஒரு படைப்பை, கல்வி நிறுவனங்களில் பாடமாக வைப்பதற்கும் நீக்குவதற்கும் பாடத்திட்டக் குழுவுக்கும் வழிகாட்டல் குழுவுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது எனில், அந்தக் குழுவின் அதிகாரத்தோடு சாதியமும் துணை அதிகாரமாக மறைவில் இயங்கக்கூடியது. 

பாடத்திட்டம் வைப்பதற்கும் நீக்குவதற்கும் பல்வேறு அரசியல் சமூகக் காரணங்கள் இருப்பதைப்போல, சாதிய மதவாதக் காரணங்களும் - சாதிய மதவாதக் கண்ணோட்டங்களும் மறைவில் இருக்கவே செய்கின்றன. 

பாடத்திட்டக் குழுவிலும், வழிகாட்டுக் குழுவிலும் இடம் பெற்றிருப்பவர்கள் யார் யார்? அந்தக் குழுக்களில் எல்லாப் பட்டியல்களிலிருந்தும் சமூகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? வழங்கப்படவில்லை; வழங்கப்படுவதுமில்லை. 

பாடத்திட்டக் குழுவில் அல்லது வழிகாட்டுக் குழுவில் இடம்பெறும் வல்லுநர்களைச் சமூகப் பிரிவு வாரியாகப் பங்களிப்பு செய்வதற்குச் சட்டக் குறிப்புகள் திட்டவட்டமாகச் சொல்லவில்லை என்பதால், அந்தக் குழுவில் மேட்டிமை / உயர்த்திக்கொண்ட சாதியினரின் ஆக்கிரமிப்புதான் நிகழும்; அப்படித்தான் நிகழ்ந்தும் வருகிறது. 

பெரும்பாலான கல்லூரி, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுக்கள் மற்றும் வழிகாட்டும் குழுக்கள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வதில்லை. 

இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டக் குழுவில் அல்லது வழிகாட்டுக் குழுவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? இருப்பதில்லை. 

அந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ள வல்லுநர்களின் பட்டியலை ஆராய்ந்தால், அதில் எஸ்.சி தரப்பினர் எத்தனை பேர்? பி.சி தரப்பு எத்தனை பேர்? எம்.பி.சி தரப்பு எத்தனை பேர்? மதச்சிறுபான்மையினர் எத்தனை பேர்? பெண்கள் எத்தனை பேர்? என்பது தெரியவரும். 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது, எஸ்.சி/எஸ்.டி தரப்புக்கு மட்டுமல்ல; எல்லாத் தரப்பினரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருவதே சமூகநீதி. 

உள் ஆளாக இருந்தாலும், புறவெளி ஆளாக இருந்தாலும் வகுப்புவாரி சமூகநீதியைப் பேசுவதில் தவறேதும் இல்லை. 

வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்புக் குரல் கொடுப்பதுதான் சமூகநீதியின் குரலாகும்; அது குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான குரலாகாது. 

சமூக அடுக்கு நிலையில் பின்தங்கியவர்களின் படைப்பு மட்டுமல்ல; அவர்களைப் பாடத்திட்டக் குழுக்களிலும் பிரதிநிதித்துவ அடிப்படையில் வல்லுநர்களாக இடம்பெறச் செய்திடக் குரல் கொடுக்க வேண்டும். அதுவே நேர்மையான சமூகநீதிக் குரலாகும். 

முனைவர் ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

28.08.2021.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக