புதன், 14 டிசம்பர், 2022

தமிழ் எழுத்து மரபின் பண்பாட்டுப் பின்புலத்தை விவரிக்கும் நூல்: மா.அருணாச்சலம்



அண்மையில், மகாராசன் எழுதிய "தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு'' நூலைப் படித்தேன். நல்ல ஆய்வு நூலாக இருந்தது. நூலின் முதல் பகுதி மொழி, எவ்வாறு உருவானது என்பதைக் குறித்து மிக விரிவாக விளக்குகிறது. "வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவி கொண்டு இவற்றிக்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும்தான் மொழி பிறந்தது. மொழி என்பதற்கு அடுப்படை பேச்சொலி என்றாலும்கூட, எல்லா பேச்சொலிகளும் மொழி என்றாகி வருவதில்லை. முறைப்படுத்தப்படுகிற பேச்சொலிகளே மொழி வரம்பிற்குள் வரமுடிகிறது" என்ற தெளிவான பார்வையை முன்வைகிறார் நூலாசிரியர்.

ஓவியங்கள், குறியீடுகள், ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள் என்பதன் நீட்சியாகவே எழுத்து என்கிற மரபும் ஒரு மொழியின் இயங்குதலுக்கு அடிப்படை என்பதை தொல்லெழுத்தியல், தொல்லியல், இலக்கணம், இலக்கியத் தரவுகளைக் கொண்டு மிக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார் மகாராசன்.

பிள்ளையார் சுழி என்பதைக் குறித்துப் பண்பாட்டு நோக்கிலும் புதிய கண்ணோட்டத்திலும் மிக ஆழமான விரிவான ஆய்வுத் தரவுகளை இந்நூல் தந்திருக்கிறது.

பாட்டியல் நூல்கள் தமிழ் எழுத்துகளின் மீது பாகுபாடுகளையும் மேல்கீழ் / உயர்வு தாழ்வுப் பேதங்களையும் கொண்ட கற்பிதங்களை எவ்வாறு கட்டமைத்திருக்கின்றன என்பதைக் குறித்து விவரிக்கும் நூலின் பகுதிகள், நான் அறிந்திராத புதுமையான செய்திகளாக இருக்கின்றன.

உலகில் உள்ள எல்லா மொழிகளும் அவற்றின் எழுத்துகளும் கடவுளோடும் சமயத்தோடும் அல்லது ஏதாவது ஓர் அதிகார மட்டத்தோடும் தொடர்புடையவைகளாக இருக்கின்றன. அதாவது, உலகின் மொழிகள் யாவும் ஏதாவது ஒன்றினோடு சார்புத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அதேவேளை, தமிழ் மொழிக்கும் தமிழ் எழுத்து மரபிற்கும் அரசதிகாரம்/சமயம்/சாதி/வர்க்கம்/பாலினம்/வட்டாரம் சார்ந்த எவ்வகைச் சார்புத் தன்மைகளும் கிடையாது என்பதைத் தெளிவுபட நிறுவுகிறார் மகாராசன்.

தமிழ் வரி வடிவங்களை எழுதும் வழக்கம், இடமிருந்து ஆரம்பமாகி வலப்பக்கமாக முடிகிறது.. இது மாதிரியாக எழுதும் வழக்கம் தமிழைத் தவிர வேறு மொழிகளில் உள்ளனவா? தமிழுக்கு முன்னதாக வேறு மொழிகளில் ஏதேனும் உள்ளனவா? இது தமிழ் மொழிக்கு மட்டுமே இயல்பாக அமைந்த ஒன்றா? அப்படி அமைந்திருந்தால் அதற்கான காரணங்கள் எதுவும் உண்டா? என, இந்நூலைப் படித்து முடித்தவுடன் கேள்விகள் எழுகின்றன. அதற்கான தேடலை இந்நூல் ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற தமிழ் ஆய்வு நூல்களை மகாராசன் அவர்களால் தொடர்ந்து எழுதப்படவேண்டும். 

ஆதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல், தமிழர்களின் எழுத்துகளுக்கு ஒரு பண்பாட்டு மரபு இருக்கின்றது என்பதையும், அதன் பின்புலத்தையும் ஆழமாக விவரித்திருக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக