சனி, 3 டிசம்பர், 2022

வேளாண் தொழில் மரபு குறித்த ஆகச்சிறந்த நூல்: அஜீத கேச கம்பளன்


வேளாண் மரபின் தமிழ் அடையாளம்  :    உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்!

இதன் ஆசிரியர் முனைவர் மகாராசன், சமூக மாற்றத்திற்கான ஏர் எனப்படும் சிற்றிதழை நடத்தி, பரவலான கவனம் பெற்றவர்.

தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள் கொள்ளப்பட்டு இருக்கிறது. அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் எனப் படர்ந்து விரிந்திருக்கிறது…. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும், அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு எனத் தொடக்கத்திலேயே அழகாகச் சொல்லிவிடும் ஆசிரியர், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசு பொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை என்பதால், தானே அதை முன் எடுத்துள்ளார், இந்த நூலின் வாயிலாக! அந்த வகையில் வேளாண் மக்களின் வேட்கையையும் கோரிக்கைகளையும் சிறப்பாகவே கவனப்படுத்தி உள்ளார்.

வேளாண்மை உழவுத் தொழில் பற்றிய முதல் வரைவியல் இலக்கியமாகக் கம்பரின் ஏர் எழுபது நூல் தான் தனித்துவம் வாய்ந்ததாகும் என அதில் உள்ள சிறப்புகளைக் குறிப்பிடுகிறார்.

நெல்லும் உயிரன்றே 

நீரும் உயிரன்றே

மன்னர் தானே மலர் தலை உலகம்

என்ற புற நானூற்றுப் பாடலையும்,

வரப்பு உயர நீர் உயரும்,

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோன் உயரும்

என்ற அவ்வையின் பாடலையும் கூறி, உழவர்க்கு உள்ள முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். 

தமிழ் நிலத்தின் வேளாண் மரபினரைக் குறித்தும், வேளாண் மரபினரின் தொழில் மரபுகள் குறித்தும், இதன் தொழில் நுட்பங்கள், பண்பாட்டு மரபியல் குறித்துப் பள்ளு இலக்கியங்கள் மிக அதிகமாகவே பதிவு செய்துள்ளதையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.

வேளாண் மரபில் ஆசீவகத் தடங்கள் என்ற தலைப்பில் சில அபூர்வச் செய்திகளையும் தருகிறார். மூவேந்தர்கள் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்ட யானை, காளை, திருமரு முதலான சின்னங்கள், அம்மன்னர்களின் ஆசீவக ஈடுபாட்டினை விளக்கும் வரலாற்றுச் சான்றுகள் என்கிறார். வேளாண்மைக்கு உகந்த கண்மாய், குளம், ஏரி போன்ற பெரும்பாலான நீர் ஆதாரப் பகுதிகளில் ஆசீவகத்தின் அய்யனார் வழிபடு தெய்வமாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதைப் போலவே வேளாண் மரபில் பவுத்த அடையாளமாக விளங்குவது பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கு என்கிறார்.

வேளாண் மரபினருக்கும், ஆரியர்களுக்குமான பகையும் முரணும் என்ற தலைப்பில் சுவையான செய்திகளைச் சொல்கிறார். முதன்முதலாக நிலவுடைமைச் சமூக அமைப்பின் தோற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்களே. கால் நடைகள் மேய்ப்பதைக் குலத் தொழிலாய்ச் கொண்டிருந்த பிராமணர்கள் புதிய சமூக அமைப்பில் தங்கள் இருப்பு கேள்விக்கு உள்ளாவதாகக் கோபம் அடைந்தனர்! தங்கள் வேள்விகள், யாகங்கள் போன்ற சடங்குகளில் பல்லாயிரக்கணக்கில் கால் நடைகளை வானோர்க்குப் பலியிட்டு, தாங்களும் உண்டு வந்த பிராமணர்களை வேளாண் குடிகள் தடுத்ததோடு, கால் நடைகளை உழவுத் தொழிலின் நண்பனாக, பங்காளனாக, தெய்வமாகத் தாங்கள் கருதி வணங்குவதால் முரண்பட்டனர். இந்தப் பகை காலப் போக்கில் பிராமணர்களைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வந்ததையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

வேளாண் மரபினரின் பண்பாட்டு அடையாளப் போராட்டங்களை சொல்லும் போது, உழவுத் தொழில் மரபினரின் தேவேந்திர குல வேளாளர் எனும் அடையாளப்படுத்தலானது, வேளாண் தொழில் அடையாளத்தையும் – வேளாண் தொழிலின் பண்பாட்டு அடையாளத்தையுமே உள்ளீடாகக் கொண்டுள்ளது. இது ஆரிய வைதீகத்தில் இருந்து உருவானதில்லை. மருத நிலத்தின் மரபில் இருந்தும், மழைத் தெய்வ வழிபாட்டில் இருந்தும் உருவானது என்கிறார்.

வேளாண்மைத் தொழில் மரபின் நீட்சியாக இருக்கும் உழவுக்குடிகள் யாவரும் வேளாளர்கள் தான்! அவ் வகையில், வரலாற்றிலும், வாழ்வியலிலும், பண்பாட்டு வழக்கங்களிலும் உழவுத் தொழில் மரபினராகப் பல குலத்தினரும் பன்னெடுங்காலமாக அடையளப்பட்டு வருகின்றனர் என்கிறார்.

வேளாண் மரபினரின் நீர் மேலாண்மை குறித்த செய்திகளும் நூலில் நிறைந்துள்ளன! மழைப் பொழிவில் வழிகின்ற வழி நீரையும், மழைப் பொழிவுக்குப் பின்பாகத் தன் போக்கில் செல்லும் ஆற்று நீரையும் பயன்பாடு கருதியும், வேளாண் தொழில் கருதியும் தேக்கி வைத்து, திசை திருப்பி, முறைப்படுத்தி, பயன்படுத்தி வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர். இந்த வகையில் உருவாக்கப்பட்டதே அகழி, இலஞ்சி, ஊருணி, ஏரி, கம்மாய், கலிங்கு, குட்டை,கேணி, தாங்கல், மடை, மறுகால்.. போன்றவை! இப்படியாகப் பலவற்றைக் குறித்தும் அவை உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் அழகாகக் குறிப்பிட்டு உள்ளார்.

நீர் மேளாண்மையின் அங்கமான குடிமராமத்து பற்றியும், அதை அன்றைய தமிழ்ச் சமூகம் எவ்வளவு சிரத்தையுடன் பேணிப் பாதுகாத்தது என்பது குறித்தும் நல்ல தகவல்களைத் தந்துள்ளார். மன்னர் காலங்களில் நீர் நிலைகளின் மேலாண்மை அனைத்தும் கிராமப் பொதுச் சொத்தாகவே இருந்தன! அதில் அக்கால மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளதையும் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் இந்த நூல் வேளாண் தொழில் மரபு குறித்த ஆகச் சிறந்த தகவல்களை தருவதோடு, இன்றைய நமது பின்னடைவுகள் குறித்த புரிதலையும், அதில் இருந்து மீள்வதற்கான உந்துதலையும் தருகிறது.

நூல் விமர்சனம்: அஜீத கேச கம்பளன்

நூல் ஆசிரியர்: ஏர்.மகாராசன்

யாப்பு வெளியீடு,

விலை;ரு250

கொரட்டூர், சென்னை.

பேச; 9080514506.

நன்றி: அறம் இணைய இதழ்.

1 கருத்து: