செவ்வாய், 17 ஜனவரி, 2023

திரைமொழியில் நவீன ஏகலைவன்: மகாராசன்


அன்பு நண்பர் அருண் பகத் அவர்களின் உருவாக்கத்தில் மலர்ந்த ஏகலைவன் எனும் குறும்படத்தை அண்மையில் பார்த்தேன். 

இந்தியச் சமூக அமைப்பில் பல்வேறு சாதிகள் குலங்களாகவும் குடிகளாகவும் தொழில் அடிப்படையிலும் வட்டார அடிப்படையிலும் பரவிக் கிடக்கிறார்கள். இந்த வேறுபாடுகளின் மீது பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளைக் கற்பிதங்களை உருவாக்கி சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், அதற்கேற்ப வாழ்வியல் படிநிலைகளையும் உருவாக்கி வந்திருப்பதைச் சமூக வரலாறு எடுத்துரைக்கின்றது. இத்தகையச் சாதியப் பாகுபாட்டுக் கற்பிதங்கள் இன்றைய சமூக வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் அனைத்து மனித மனங்கள் வரையிலும் ஊடுருவிக் கிடக்கின்றன.

சாதியக் கற்பிதங்களின் பாகுபாட்டு நுண் உணர்வுகள் நவீன சமூக வாழ்வின் அடியாழத்தில் இன்னமும் படிந்திருப்பதைக் கலைப்படைப்புகளின் ஊடே வெளிப்படுத்தும் பெருமுயற்சியாகவும், அதேசமயத்தில், சாதியப் பாகுபாட்டு நுண் உணர்வுக்கு எதிரான சமத்துவ உணர்வைப் புலப்படுத்தவும் வளப்படுத்தவுமான உணர்வெழுச்சியைத் தரக்கூடியதாகவும் ஏகலைவன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திறமைகள் பல இருப்பினும், பிறப்பின் அடிப்படையில் அதற்கான தகுதிகள் இருப்பதாகத்தான் உயர்த்திக்கொண்ட சாதிய மனங்கள் நம்பிக்கிடக்கின்றன. ஒருவேளை, அந்தத் தகுதியை மீறி திறமைகள் வெளிப்படும்போது, அதைத் தம்மால் மூலம்தான் பெற்றுக்கொண்டதாகவும், அதற்குரிய குருதட்சணையை ஏதோ ஒருவகையில் கேட்கும் நோக்கில் பலி வாங்குவதையும், குரு தட்சணையாகத் தம் திறமையின் அங்கத்தைப் பலிகொடுப்பதையும்தான் ஏகலைவன் தொன்மம் படிந்திருக்கிறது. 

ஏகலைவன் குறும்படமோ, பழைய காலத்து ஏகலைவனைப்போல குருதட்சணையாகப் பலியாகாமல், திரும்பியெழும் திருப்பிச் செய்யும் சமத்துவத்தோழமை விதைக்கும் ஏகலைவனை முன்னிறுத்துகிறது. 

இருவேறு வர்க்க சமூக வாழ்வியல் பின்புலங்களைச் சார்ந்த இளைஞர்கள் இன்றைய மட்டைப் பந்தாட்ட விளையாட்டில் போட்டிபோடுவதையும், அதற்குள் இருக்கும் திறமை, நிராகரிப்பு, பலிவாங்கல் போன்றவற்றையும் பின்புலமாகக் கொண்டு ஏகலைவன் படம் ஒரு சேதியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. அது, பிறப்பின் அடிப்படையில் தகுதிகள் தீர்மானிக்கப்படுவதில்லை; ஏகலைவன் வாரிசுகள் ஏகலைவனைப்போலவே பலியாக வேண்டியதில்லை என்பதுதான்.

மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது படம். ஒரு தொன்மத்தை நவீனப் படைப்பாக்கும்போது அதன் சம காலத்தியக் குரலைப் பேசவேண்டும். அதை நவீனப் பூர்வமாகவும் கலைப்பூர்வமாகவும் மிக அழகியலோடு நவீன ஏகலைவனைத் தந்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

இதில் வருகிற அன்பின் அனுபவங்கள் பல வடிவங்களில் எமக்கும் நேர்ந்ததுண்டு. மிகச்சிறப்பான கலை முயற்சி. வாழ்த்துகள். பாராட்டுகள். நன்றி.

குறும்பட இணைப்பு:

https://m.youtube.com/watch?v=yZR_UlYxGeY&si=EnSIkaIECMiOmarE

தோழமையுடன்

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக