கண்ணகி கோயில் வழிபாட்டுத் தளம் முழுவதுமாகக் கேரள அரசு எந்திரங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பெற்ற தாயை சொந்த நாட்டிற்குள் பார்ப்பதற்குக்கூட ஓர் அகதி அல்லல்படும் உணர்வுகளே இன்று எமக்கும் இருந்தது.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாறும், வழிபாட்டு உரிமையும் முழுவதுமாகக் காவு கொடுத்திருக்கிறோம் என்பதாகவே உணர்கிறேன். தமிழர் நிலமும், வழிபாட்டு அடையாளமும், சடங்குகளும் கேரளமயமாகி இருப்பதோடு, அவை தமிழர்களிடமிருந்து முழுவதுமாகப் பறிபோயிருக்கிறது என்றே தெரிகிறது.
கேரள அரசு எந்திரங்களின் அதிகாரத்திற்குள் தமிழ்நாட்டு அரசு எந்திரங்கள் மவுனித்துக் கிடக்கின்றன. தமிழ்நாட்டு அரசு எந்திரங்கள் எதுவும் செய்திட முடியாத அளவுக்குக் கேரள அரசு எந்திரங்களின் அதிகாரப் பலமும் வாய்ப்பும் உரிமையும் மேலோங்கியேதான் இருக்கின்றன.
வரும் காலங்களில், கண்ணகிக் கோட்டத்தைத் தமிழர்க்குச் சொந்தமாக்குவதே தமிழர் அடையாள மீட்பின் முதல் வேலையாகும். இந்தக் குரலையும் உணர்வையும் கண்ணகிக் கோட்டத்திற்குப் பயணப்பட்டு வழிபடும் தமிழர்கள் உணர்ந்ததும் உரைத்ததும் ஆகும்.
கண்ணகி கோயிலுக்குச் சென்று வந்தவர்கள் அத்தனை பேரும் சமூக ஊடகங்களில் இதனைப் பேசுபொருளாக ஆக்கிட வேண்டும். அப்போதுதான், அந்த நிலத்தையும், கோயில் தளத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க முடியும். இல்லையெனில், கொஞ்சமேனும் இருக்கிற வாய்ப்புகளும் உரிமையும் விரைவில் பறிபோகும்.
ஏர் மகாராசன்
மக்கள் தமிழ் ஆய்வரண்,
12.05 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக