செவ்வாய், 3 ஜூன், 2025

கன்னடம் என்பது, கருநடம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு : அறிஞர் தேவநேயப் பாவாணர்.


மலையாளத்திற்கு அடுத்துத் தமிழோடு தொடர்புள்ளது கன்னடம். கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டைக் குறித்து, பின்பு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. இதன் பழைய வடிவங்கள், கருநாடு, கருநாடகம் என்பன. 

கன்னட நாட்டார், கருநாடார் என்றும் கருநடர் என்றும் அழைக்கப்பட்டனர். கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இரு பொருள்கள் கூறப்படுகின்றன. அவை 1. கரியநாடு, 2. கருங்கூத்து என்பன. கன்னட நாட்டின் பெரும்பகுதி கரிசல் நிலமாய் இருப்பதால் கரிய நாடு என்று பொருள் கொண்டனர் குண்டெட் பண்டிதரும், கால்டுவெல் கண்காணியாரும்.

மிகப்பழமையான அநாகரிக அல்லது கண்மூடிப்பழக்கத்தைப் பழைய கர்நாடகம் என்பர். இங்கு கர்நாடகம் என்பது பழமையான அநாகரிகத்தைக் குறிக்கலாம். ஆகவே, கருநடம் அல்லது கருநாடகம் என்னும் பெயர் கருங்கூத்து நிகழும் நாடு என்னும் பொருள் கொண்டதாய் இருக்கலாம். 

ஆயினும், கருநடரை கருநாடர் என்னும் வழக்கும் உண்மையானும் கூத்தாகிய காரணத்தினும், நிலவகையாகிய காரணம் பெயர்ப் பேற்றிற்குச் சிறந்தலானும், கரிசற்பாங்கான நாடு என்று பொருள் கொள்வதே பொருத்தமாம். 

சேர நாடு கடைக்கழகக் காலத்திலேயே குடமலைக்கு (மேற்குத் தொடர்ச்சி மலை) மேற்பால் வேறும், கீழ்பால் வேறுமாகப் பிரிந்து போயிற்று. கீழ்பால் நாடு, மீண்டும் தெற்கில் கொங்கு நாடும், வடக்கில் கங்க நாடும், இடையில் அதிகை நாடு, துவரை நாடு, முதலியனவுமாகப் பிரிந்துவிட்டது. அதிகை நாடு தகடூரை (இன்றைய தர்மபுரியை) தலைநகராகக் கொண்டு அதிகமான் மரபினர் ஆண்டுவந்தது. கங்க நாடு அதன் வடக்கில் கங்க மரபினர் குவலாலபுரத்தை (கோலார்) தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இது கங்கபாடி என்று கல்வெட்டுகளில் கூறப்படும்.

இக்கங்க மரபைச் சேர்ந்தவனே பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தவனும், அமராபரணன் ஸ்ரீமத் குவலாலபுர பரமேசுவரன் கங்கருலோர்பவன் என்று தன் மெய்க்கீர்த்திகளில் பாராட்டப்பெறுபவனும் பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனுமாகிய சீயகங்கன் என்பவன். இவன் ஒரு தமிழ் இலக்கணத்தை இயற்றுவித்ததினாலும், நன்னூற் சிறப்புப்பாயிரம்

‘குணகடல் குமரி குடகம் வேங்கடம்

எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்’

என்று கூறுவதாலும், மைசூர்நாட்டின் வேங்கட நேர் எல்லை வரை பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையுமாவது தமிழ் தவிர வேறு ஒரு மொழியும் வழங்கவில்லை என்பது இதனால் அறியப்படும். 

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக