வெள்ளி, 24 ஜூன், 2022

நினைவுப்பூ : மகாராசன்

 

கோடையில் வெடிக்கும்
இலவம் பஞ்சாய்
வெயிலில் குளித்து
இளங்காற்றில் மிதந்தலைகிறது
வெண்ணிற நினைவுகள்.

மேய்ச்சலுக்குப் போன
தாயாட்டின் பால் கவுச்சி ஈரத்தில் 
குடாப்பு இருளுக்குள் 
அடைந்து கிடக்கும் இளங்குட்டிகளாய் 
தாய்மடிக் காம்புகளை நினைத்தபடி 
தவித்துக் கிடக்கின்றன 
விதைச் சொற்கள்.

திடுதிப்பென்ற இடிமின்னலில் 
கொட்டித் தீர்த்த பெருமழை
செவல் ஓடைகளைக் 
குளிப்பாட்டி வடிந்த
செந்தண்ணீர்க் குளமாய் 
நிரம்பித் ததும்புகின்றன 
வெட்கமூறிய பொழுதுகள்.

தொளியிலும் புழுதியிலும் 
இலாடங்கள் தேய உழுததில் 
நேர்க்கால் அழுந்திய 
உழு மாடுகள் திமிலோரத்தில்
காய்ப்புக் கரையாய்
வலியறியாமல் 
தடித்துக் கிடக்கிறது
பசப்பூறிய சிமிட்டல்.

ஒற்றைச் செம்போத்தின் 
நெடுங்கூவல் தனியொலியை
தவிப்போடு
கேட்டுக்கொண்டிருக்கிறது
தனித்துக் கிடக்கும்
நிகழ் வாழ்க்கை.

இன்னும் இன்னும் பூக்கவே
அசைபோடும் நினைவுகள்
மழையெனப் பெய்கிறது
மனதுக்குள்.

ஏர் மகாராசன் 
10.04.2022

1 கருத்து: