ஞாயிறு, 23 அக்டோபர், 2022

சூரியதீபனின் தமிழ்த்தேசியப் பங்களிப்பு - மகாராசன்




தமிழ்த் தேசியக் கருத்தியலின் உரத்த குரலை முன்னெடுத்த தோழர் சூரியதீபன் எனும் பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவுற்றார். 

*

புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியலையும், பண்பாட்டுப் படைப்புச் செயல்பாட்டையும் தம் எழுத்துகளின் வழியாகவும் பேச்சுகளின் வழியாகவும் தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வழிநடத்தியும் வந்தவர் தோழர் சூரியதீபன்.

2008-09 காலகட்டங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இக்கட்டான சூழலையும், பேரிழப்புகளையும், இனப்படுகொலை நிகழ்வுகளையும் தாயக மண்ணில் எதிர்கொண்டிருந்தபோது, அவ்விடுதலைப் போராட்டம் குறித்தும், போராளிகள் குறித்தும் பல்வேறு வகையில் அவதூறுகளையும் வன்மங்களையும் இங்குள்ளோர் அறிவுசீவிகள் பலரும் - சில இயக்கங்கள் பலவும் மிகத் தீவிரமாகப் பரப்பிக்கொண்டிருந்தனர். தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் மவுனித்திருந்த காலகட்டங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவுக் குரலை வலுவாக முன்னெடுத்துச் செயலாற்றியவர் தோழர் பா.செ. அதோடு மட்டுமல்லாமல், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அவதூறுகளையும் வன்மங்களையும் மறுத்தும் எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளையும் நூல் வெளியீடுகளையும் கொண்டுவந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அவதூறுகளுக்கான மறுப்புகளும் என்கிற நூல் தொகுப்பு முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தபோது பல்வேறு வகையில் துணை நின்று வழிகாட்டியதோடு, அத்தொகுப்பிற்காகத் தாம் எழுதிய கட்டுரைகள் சிலவற்றையும் வழங்கினார்.

என் மீதும், என் எழுத்துகளின் மீதும், எனது அரசியல் செயல்பாடுகளின் மீதும் அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்திருந்தார். நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் கொண்டிருந்த அந்தத் தோழமைமிக்க உறவாடல் எம் எழுத்துச் செயல்பாட்டை வளப்படுத்தி வந்திருக்கிறது.

தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களது மறைவு, தமிழ்த் தேசியச் சக்திகளுக்கும் - ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.

தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவுக்கு வீரவணக்கம்.

ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்

23.10.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக