திங்கள், 31 அக்டோபர், 2022

மீனாட்சி: சொல்லாடலும் பொருள்கோடலும் - மகாராசன்






மீனாட்சி அம்மனைக் குறிக்கும் சொல் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படவில்லை என்கிற குறிப்புரை பற்றிய உரையாடல்கள் அண்மையில், வெளிக் கிளம்பியிருக்கின்றன.

மீனாட்சி எனும் சொல்லாடல் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படாமல் இருக்கலாம். ஆனால், மீனாட்சி எனும் சொல்லாடலும் அதற்கான பொருள்கோடலும் தமிழ் மரபில் பொருள் பொதிந்தே காணப்படுகின்றன.

மீனாட்சி என்பதை மீன் + அட்சி = மீன் போன்ற கண்களை உடையவர் என்பதாகப் பொருள் கொள்வர். இதனையே அம்+கயல்+கண்ணி= அங்கையர்க்கண்ணி என மீன் போன்ற கண்களை உடையவள் எனத் தமிழில் பொருள் கொள்வர். மீன் போன்ற கண்களைக் கொண்ட பெண்ணைக் குறிக்க மீனாட்சி, அங்கையர்க்கண்ணி எனும் சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

அதேவேளை, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் தெய்வப் பெயரையும் மீனாட்சி எனக் குறிக்கும் வழக்கமும் இருக்கிறது. மதுரைத் தெய்வப் பெயராகக் குறிக்கப்படும் மீனாட்சி என்பது மீன் போன்ற கண்களை உடையவள் என்பதாக மட்டும் சுட்டி நிற்கவில்லை. கூடவே, வேறு ஒருவகையிலும் பொருள் கொள்ள வேண்டிய சொல்லாடலாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, மீன் ஆட்சி என்பதன் மரூஉச் சொல்தான் மீனாட்சி. மீன்+ஆட்சி = மீனாட்சி. தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதியின்படி மிகச் சரியான சொல். மீன் ஆட்சி எனில், மீன் கொடி ஆட்சி எனப் பொருள். அரச மரபில் கொடி, குடை, கோல், முரசம் என்பவை ஆட்சி அதிகாரக் குறியீடுகள். 

மீன்கொடி பாண்டியர்களுடையது எனில், பாண்டியரின் மீன் கொடிதான் ஆட்சி செய்திருக்கிறது. கோ எனில் மன்னன், அரசன் எனப்பொருள். மீன் கொடி ஆட்சி செய்த கோ இருந்த இல் மீனாட்சி கோயில் என்றாகி இருக்கிறது. 

ஆகவே, மீனாட்சி என்பதை மீன் அக்சி என்றோ அல்லது வேறு புறம்பான சொல் அல்லது பொருள் என்றோ கருத வேண்டியதில்லை. மீன் கொடி ஆட்சியை இழந்தது போல, மீனாட்சி எனும் பெயர் அடையாளத்தையும் இழந்துவிட வேண்டியதில்லை. 

ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருப்பது போல, ஒரு பொருளுக்குப் பல சொற்களும் தமிழ் மரபில் உண்டு. அதேபோல, மதுரைக் கோயிலில் தெய்வமென உறைந்திருக்கும் மீனாட்சிக்கும் பல பெயர்கள் இருந்திருக்கும். மேலும், ஒன்றைக் குறித்துக் கல்வெட்டுகளில் ஒருவிதமாகவும், இலக்கியங்களில் வேறுவிதமாகவும், மக்களின் அன்றாடப் புழங்கல் மொழியில் வேறுவிதமாகவும் குறிக்கப்படுவதுண்டு. வேறு வேறு காலங்களிலும் வேறுவேறு பெயர்களில் வழங்கப்படுவதுமுண்டு. 

ஆகவே, மீனாட்சி எனும் சொல்லாடலைப் புறக்கணிக்கவோ மறுக்கவோ வேண்டியதில்லை. மீன்கொடி ஆட்சியள் தான் மீனாட்சி எனப் பொருள்கோடல் கொள்வதே நன்றாம்.

*

ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

31.10.202

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக