திங்கள், 6 நவம்பர், 2023

சமூகத்தின் சுய பரிசோதனையை வலியுறுத்தும் நூல்: மணி மீனாட்சி சுந்தரம்


தமிழக பள்ளி மாணவர்கள் வகுப்பறையிலும் பொதுச் சமூகத்திலும் நடந்துகொள்ளும் நெறிபிறழ் நடத்தைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்தபடியே உள்ளன.இவற்றைக் கண்டும் காணாமலும் கடந்துபோகும் தமிழ்கூறும் நல்லுலகைக் கைப்பிடித்து நிறுத்தி, அவை குறித்து விவாதிக்கவும் மாற்றத்தை முன்னெடுக்கவும் வற்புறுத்துகிறது இச்சிறு நூல்.

மாணவர்களின் தம்மதிப்பற்ற செயல்களுக்கும்,நெஞ்சைப் பதற வைக்கும் வன்முறைகளுக்கும் முக்கிய காரணம், கல்வி பற்றிய அவர்களின் அக்கறையின்மையே என்றாலும்,அந்த அக்கறையற்ற மனோநிலையை வளர்த்தெடுக்கும் கூறுகளை முன்வைத்து இந்நூல் பேசுகிறது.

மேல்நிலைக் கல்வியில்,போட்டித் தேர்வுகளை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள கடினமான பாடத்திட்டமும் தேர்வுமுறையும், மெல்லக் கற்கும் மாணவர்களைக் கற்றலில் இருந்து விலக்கி சமூக உதிரிகளாக மாற்றும் ஆபத்தை விளைவிப்பதை விரிவாகப் பேசுகிறது முதல் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை,நாங்குநேரியில் சக மாணவனை வெட்டி வீழ்த்திய சாதிய மனோநிலையின் அடிப்படைக் காரணிகளை ஆராய்கிறது.

பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கும் சாதி வெறிகொண்ட சமூகம், ஆசிரியர்,பெற்றோர்,சாதிச் சங்கங்கள்,அரசியல்வாதிகள் என குற்றத்திற்குத் துணைபோகும் அனைவரையும் சுய பரிசோதனைக்கு அழைக்கிறது இந்நூல்.

மதுப்பழக்கத்தினால், வளர்ந்த பெரியவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ; அவர்களை விட வேகமாக, வளரிளம் பருவத்து மாணவர்கள் போதைப் பழக்கத்தினால் வீழ்ந்துகொண்டிருக்கும் பேராபத்தையும் பேசுகிறது இந்நூல்.

சமூகத்தின் எதிர்காலமான மாணவரைச் சிறந்தவராக,அற உணர்வு கொண்டவராக உருவாக்க வேண்டிய பள்ளிகள், அதற்குரிய போதாமைகளை வளர்த்துக்கொண்டே போவதை எச்சரிக்கின்றது இந்நூல்.

தமிழ்ச்சமூகம்,பண்பாடு, வரலாறு தொடர்பான கட்டுரை நூல்களைத் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் 'ஏர்' மகாராசனின் இந்நூல், கல்வியின் மீதும், சமூகத்தின் மீதும்,மாணவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்ட எவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.

கட்டுரையாளர்:
மணி மீனாட்சிசுந்தரம்,
ஆசிரியர் மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்,
மதுரை.

*
நூலின் பெயர் : 
மாணவர்கள் சமூக உதிரிகளாகும்
பேராபத்து.
நூல் வகை : கட்டுரை 
நூலாசிரியர் : மகாராசன்.
முதற்பதிப்பு : செப்டம்பர் '2023
பக்கங்களின் எண்ணிக்கை : 72
விலை : ரூபாய்.90/-
வெளியீடு : ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை - 606806.
பேச: 99948 80005.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக