அதிகாரத்தின் வேர்களால்
நிலத்தின் வளத்தையும்
இனத்தின் வாழ்வையும்
உறிஞ்சிக் குடித்து மிதந்து
பணக் குலைகளைத் தள்ளின
அரசியல் கட்சி மரங்கள்.
காற்றில் அல்லாடாமலும்,
தார்க் கனம் தாங்காமல்
முறிந்து விடாமலும் இருக்க,
வாழையடி வாழையாய்
தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன
சில முட்டு மரங்கள்.
பழுத்து உதிர்ந்த
எச்சில் பழங்களின் சுவைக்காக
முட்டுக் கொடுப்பதில்
மாற்றி மாற்றிப்
பீத்திக் கொண்டன
முரட்டு மரங்கள்.
சனநாயகத்தைப் போர்த்திக்கொண்டு
கடைக்கோடிக் கிராமங்களின்
கடைசி மனிதரின் கைகளுக்கும்
ஆயிரம் ரூபாய்களை
அள்ளிக் கொடுத்து,
ஒற்றை விரல்களில்
மை தடவிப் பூசிக்கொண்டு
தேர்தல் பெருங்கூத்தை
நடித்து முடித்திருக்கிறது
பண நாயகம்.
கடைசி மனிதரின் கைகளுக்கும்
ஆயிரம் ரூபாய்களை
அள்ளிக் கொடுத்து,
ஒற்றை விரல்களில்
மை தடவிப் பூசிக்கொண்டு
தேர்தல் பெருங்கூத்தை
நடித்து முடித்திருக்கிறது
பண நாயகம்.
எங்கேயோ யாரிடமோ
கட்டுக் கட்டாய் முடங்கிக் கிடந்து,
கோடி கோடி கோடியென
பல்லாயிரம் கோடிகளாய்
ஊர்கள் முழுக்க
இரண்டொரு நாள்களில்
அள்ளிச் சிதறிய தாள்களில்
பொக்கைவாய்ச் சிரிப்புடன்
தென்பட்டார் காந்தி.
அவ்வப்போது விழுகின்ற
சில எச்சில் பழங்களோடு
ஆயிரம் ரூபாய்த் தாள்களையும்
தொட்டுக் கொள்ளும்போது
இன்னும் அதீதச் சுவை
கூடிக்கொண்டதால்
முட்டு மரங்களும்
இப்போது
மெல்லத் துளிர்க்கத் தொடங்கின.
தளிர் விடும்
முட்டு மரங்களின் பேரழகையும்,
சமூக நீதி
சாதி ஒழிப்பு
பாசிச எதிர்ப்பு என
இன்னபிற புரட்சிப் பூக்கள்
முட்டு மரத்தில்
பூத்துச் சிரிப்பதையும்
முட்டு மரங்களின் புரட்சியென
அல்லக்கைகள்
இனி எழுதத் தொடங்கும்.
பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி,
வாக்களிக்கும் சாமானியரை
ஆயிரம் ரூபாய்க்கு விலைபேசி,
சுரண்டலில் பங்குதாரர்களாய்
ஆக்கி வைத்துத்தான்
பாசிச எதிர்ப்பையும்
இடதுசாரி அரசியலையும்
ஒடுக்கப்பட்டோர் அரசியலையும்
முன்னெடுக்க வேண்டுமா?
அவ்வாறுதான் முன்னெடுக்க முடியுமா?
இந்தக் குரலை
இனி
எந்தக் கைகள்
எழுதப் போகின்றன?
செந்நிறத்துக் கொடியேந்தி
உயிர்நீத்த ஆத்மாக்களின் அழுகை
இனி
எவர் காதில் விழப்போகின்றன?
- மகாராசன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக