ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

கண்ணகிக் கோயில் வழிபாட்டு உரிமையை மீட்டெடுப்போம்! திரு சீமான் அவர்களுக்கு வேண்டுகோள்





கண்ணகிக் கோயில் வழிபாட்டு உரிமையை மீட்டெடுப்போம்! வழிபாட்டு நெடும்பயணத்தில் பங்கேற்க, திரு சீமான் அவர்களுக்கு வேண்டுகோள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களுக்கு, வணக்கம்.

நடந்து முடிந்திருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் தாங்களும் தங்களது கட்சியினரும் மிக மிக அதிகமான உழைப்பைச் செலவழித்துத் தீவிரமான பரப்புரையை மேற்கொண்டு வந்தீர்கள். தாங்கள் முன் வைத்த அரசியல் செயல்பாடுகளுக்குப் பெருவாரியான ஆதரவு தமிழ் மக்களிடமிருந்து உருவாகி வந்திருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். எம்மைப் போன்ற பலரும் அதை அறிந்திருக்கிறோம்.

தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முடிவுகள் என்னவாக இருக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் ஆவலாய் இருப்பீர்கள். தேர்தல் பரப்புரைப் பணிகளை மேற்கொண்டிருந்த மாற்றுக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்கள். 

தங்களது உடல், குரல், மனம் என அனைத்தும் சலிப்பில்லாமல் பரப்புரைப் பயணத்தில் இயங்கிக் கொண்டிருந்தன. தங்களது உடலும் மனமும் ஓய்வைக் கெஞ்சிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஓய்வெடுக்க விடாமல் இடையீடு செய்வதற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் குறித்துப் பல்வேறு செய்திகள் தங்களது ஆட்சிச் செயல்பாட்டு வரைவில் கூறப்பட்டிருந்தன. அவற்றுள், கண்ணகி வழிபாட்டு நெடும்பயணம் குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. 

“அறம் காத்து மறம் போற்றிய மானத்தமிழ் மறத்தி கண்ணகியின் கோயில் இன்று கவனிப்பாரற்றுச் சிதிலமடைந்து கிடக்கின்றது. அந்த கோயிலுக்குத் தமிழகத்தின் வனப்பகுதியின் வழியாகச் செல்ல பாதை இருந்தும், தமிழக அரசு அந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.

கேரளா அரசின் எல்லைப்பகுதி வழியாகச் செல்லும் பாதையில் கேரளா வனச்சரகக் காவல்துறையும் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. எனவே, நாம் தமிழர் அரசு கண்ணகிக்குத் தனிக்கோட்டம் அமைத்துத் தமிழக வனப்பகுதி வழியாகவே பாதையை அமைத்துத் தரும். மேலும் பெரும்பாட்டி கண்ணகியின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலவு நாளில் கண்ணகி கோயிலை நோக்கிப் பெரும் பயணம் மேற்கொள்வோருக்குப் பாதுகாப்பைத் தரும். இது அரசு விழாவாகவும் அறிவிக்கப்படும்”. (நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026, பக்கம் 300) எனும் வரைவை, மக்கள் தமிழ் ஆய்வரண் வரவேற்றது; ஆதரித்தது.

எதிர்வரும் சித்திரை முழுநிலவு நாள் கண்ணகிக் கோயில் வழிபடு நாளாகும். இந்த ஒரு நாள் மட்டும்தான் அதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இந்நிலையில், தமிழரின் வழிபாட்டு உரிமைகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் மீட்பதற்கான பெருங்குரலைக் கண்ணகி மண்ணில் தாங்கள் எழுப்ப வேண்டும்; கண்ணகி வழிபாட்டு நெடும்பயணத்தில் தாங்கள் பங்கேற்க வேண்டும் எனும் வேண்டுகோளை முன்வைக்கிறோம். 

பறிபோகும் தமிழர் வழிபாட்டு உரிமைகள் குறித்தும், கேரள அரசின் அத்துமீறலைக் குறித்தும், தமிழக அரசு எந்திரத்தின் பாராமுகத்தைக் குறித்தும் மற்ற அரசியல் கட்சியினர் யாரும் இதுவரை பேசியதில்லை; இனியும் யாரும் பேசப் போவதில்லை. தாங்கள் மட்டும்தான் இதைக் குறித்து உண்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுவீர்கள் எனும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது. அதற்கான களமும் காலமும், அதனை உரத்துப் பேசுவதற்கான வாய்ப்பும் இப்போது நம் முன் கிடைத்திருக்கிறது. 

கடந்த ஆண்டு, கண்ணகிக் கோயில் வழிபாட்டு நெடும்பயணத்தில் நானும் பங்கேற்றேன். அதன் அனுபவங்கள் மிகுந்த மன வேதனையைத் தந்தன. 

கண்ணகிக் கோயில் வழிபாட்டுத் தளம் முழுவதுமாகக் கேரள அரசு எந்திரங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பெற்ற தாயை, சொந்த நாட்டிற்குள் பார்ப்பதற்குக்கூட ஓர் அகதி அல்லல்படும் உணர்வுகளே அன்று எமக்கும் இருந்தது. 

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாறும், வழிபாட்டு உரிமையும் முழுவதுமாகக் காவு கொடுத்திருக்கிறோம் என்பதாகவே உணர்கிறேன். தமிழர் நிலமும், வழிபாட்டு அடையாளமும், சடங்குகளும் கேரளமயமாகி இருப்பதோடு, அவை தமிழர்களிடமிருந்து முழுவதுமாகப் பறிபோயிருக்கிறது என்றே தெரிகிறது.  

கேரள அரசு எந்திரங்களின் அதிகாரத்திற்குள் தமிழ்நாட்டு அரசு எந்திரங்கள் மவுனித்துக் கிடக்கின்றன. தமிழ்நாட்டு அரசு எந்திரங்கள் எதுவும் செய்திட முடியாத அளவுக்குக் கேரள அரசு எந்திரங்களின் அதிகாரப் பலமும் வாய்ப்பும் உரிமையும் மேலோங்கியேதான் இருக்கின்றன.

இந்நிலையில், கண்ணகிக் கோட்டத்தைத் தமிழர்க்குச் சொந்தமாக்குவதே தமிழர் அடையாள மீட்பின் முதல் வேலையாகக் கருதி, எதிர்வரும் சித்திரை முழு நிலவு நாளில், கண்ணகிக் கோவில் வழிபாட்டு நெடும்பயணத்தில் தாங்களும் பங்கேற்று, நெடும்பயணத்தின் ஊடாகவே கள ஆய்வும் மேற்கொண்டு, பண்பாட்டுப் பெருந்திரள் கூட்டத்தின் உணர்வுகளை உள்வாங்கியபடி, கண்ணகிக் கோயில் வழிபாட்டு உரிமை மீட்புக்கான பெருங்குரலைக் கண்ணகி மண்ணில் நின்று ஓங்கி உரத்து ஒலிக்க வேண்டும்; உலகமெலாம் இந்தக் குரலையும் உணர்வையும் பரவச் செய்திட வேண்டும்; தமிழரின் பண்பாட்டு அடையாளங்களையும் வழிபாட்டு உரிமைகளையும் தன்வயப்படுத்தும் கேரள அரசைத் தட்டிக் கேட்க வேண்டும் எனும் வேண்டுகோளை மக்கள் தமிழ் ஆய்வரண் சார்பாக முன்வைக்கிறோம். 

தாங்களும் கட்சியினரும் கலந்து பேசி ஆவன செய்திடுங்கள். நன்றி. 

அன்புடன்

முனைவர் ஏர் மகாராசன்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

26.04.2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக