வெள்ளி, 1 டிசம்பர், 2017

மாணவர்கள் உதிரிகளும் அல்லர்; ஆசிரியர்கள் குற்றவாளிகளும் அல்லர்.


தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகுமளவுக்கு இளஞ்சிறார்களை உருவாக்கி இருப்பது பள்ளிகள் மட்டுமல்ல; உதிரிப் பண்பாட்டு நடத்தைகளால் சீரழிந்து கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தாலும் தான்.

மாணவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் இந்தச் சமூகம் எந்தளவுக்கு உற்று நோக்கி இருக்கிறது எனத் தெரியவில்லை. மாணவர்களை மதிப்பெண்களை மட்டுமே எடுக்கக் கூடிய வெறும் எந்திரங்களாகவே இந்தச் சமூகம் கருதிக் கொண்டிருக்கிறது.

மாணவர்களை இரு தரப்பினராகப் பாவிக்கும் பார்வை குறித்து நம்மில் பலரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதாவது, பத்தாவது வரை பயிலும் மாணவர்கள் ஒரு ரகம். மற்றொன்று மேல்நிலையில் 11, 12 ஆம் வகுப்பு பயில்கிறவர்கள் ஒரு ரகம். மேல்நிலை வகுப்புகளில் பயில்கிற மாணவர்கள் பதின்பருவச் சிக்கல்களோடு இருக்கும் நிலையினர். கவனச் சிதறல்களுக்கு ஆளாகும் பருவமும் கூட.

திரைப்பட மோகம், உள்ளூர் சாதிய மதவாத சக்திகளோடு நெருக்கம், கஞ்சா, புகையிலை, மது போன்ற பழக்கங்களோடும் அந்நபர்களோடும் நெருக்கம், கண்ணியக் குறைவான அருவருக்கத்தக்க தோற்றத்தில் கழுத்துப் பாசிகள், கைவளையல்கள், உள்ளாடை தெரிகிற வகையில் உடுப்புகள், அலங்கோலமான தலை முடி வெட்டுகள், பள்ளி வகுப்பறைச் சுவர்களில் சாதியப் பெயர்களோடு எழுதிப் போடுகிற அவன் டா இவன்டா வசனங்கள், புத்தகப் பையே கொண்டு வராமல் இரண்டு ஏனோ தானோ புத்தகங்கள் குறிப்பேடுகள், தாமதமான வருகை, அடிக்கடி விடுப்புகள், பள்ளிக்குள்ளும் வகுப்பறைக்குள்ளும் வெடி போடுதல், பள்ளிப் பொருட்களைச் சேதப்படுத்தல், மது போதையில் வகுப்பிற்குள் இருத்தல், உதட்டுக்குள் புகையிலை வைத்தல், மாணவர்களுக்குள் அடிதடி தகராறு, ஆசிரியரை அவமதித்தல், செல்பேசிப் பயன்பாடுகள், ஆபாசப் படங்கள் பார்த்தல்,  படிப்பில் கவனமின்மை போன்ற இன்னும் பல்வேறு சிக்கல்கள் பதின்பருவ மாணவர்களிடம் இருக்கின்றன.

இதையெல்லாம் களைவதும் அவர்களை நல்வழிப்படுத்துவதும் வேண்டுமானால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சந்தித்துப் பேசியாக வேண்டும். இது மாணவர்கள் பிரச்சினை மட்டுமல்ல, ஆசிரியர்களே குற்றவாளிகள் அல்ல. இது சமூகத்தின் பிரச்சினை. சமூகம் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். உதிரிப் பண்பாட்டு நடத்தைகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் மாணவத் தரப்பைப் பண்படுத்துவது ஆசிரியர் மட்டுமல்ல நம் அனைவரின் கடமையும் கூட.

மாணவத் தரப்பையோ அல்லது ஆசிரியத் தரப்பையோ மாற்றி மாற்றி குற்றம் சுமத்துவதால் மட்டுமே பிரச்சினைகள் தீர்ந்து விடுவதில்லை. இதைக் குறித்த உரையாடல்களைத் திறந்த மனதுடன் முன்னெடுக்க வேண்டியது உடனடித் தேவையும் கூட.

பனப்பாக்கத்தில்
உயிர் மாய்த்து மறைந்த
எம் பிள்ளைகளுக்கு எம் அஞ்சலி.

1 கருத்து:

  1. தாங்கள் சொல்வது வெகு நிதர்சனம். இது ஒரு சமூக பிரச்சனை.இதனை நன்கு உணர்ந்து இச் சமூகம் செயல்பட வேண்டும்

    பதிலளிநீக்கு