புதன், 13 டிசம்பர், 2017

சாதிய உளவியலும் பதற்றங்களும்


சங்கர் படுகொலைக் குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் வழங்கி இருக்கும் இந்தத் தீர்ப்பைக் குறித்து நாம் கொண்டாட வேண்டிய அவசியமில்லை; எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. வரவேற்க வேண்டிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டும்.

இதுவே இறுதித் தீர்ப்பும் அல்ல.  இங்குள்ள நீதிமன்றத் தீர்ப்புகள் சாதியத் தன்மைகளோடும் அவற்றின் சார்புகளோடும் தான் பெரும்பாலும் இயங்குகின்றன. விதிவிலக்காய் இந்தத் தீர்ப்பு அவ்வளவே.

மரண தண்டனை அல்லாமல் மற்ற தண்டனை வழங்கினால் மட்டும் தீண்டாமையோ படுகொலை நிகழ்வுகளோ நடக்காமல் இருக்கப்போவதில்லை. மரண தண்டனை கொடுப்பதால் மட்டும் அது குறைந்திடப் போவதுமில்லை. ஆனால் சாதியவாதிகளுக்கு ஓர் அச்சத்தையும் பதற்றத்தையும் இந்தத் தீர்ப்பு கொடுத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை . இதைப் பலருடைய  பதிவுகள் பதற்றத்தோடு வெளிப்படுத்துவதில் தெரிகின்றன.

இந்தத் தீர்ப்பால் சாதியம் ஒழிந்து விடும் என நான் நம்பவில்லை. ஆயினும் சாதிய உளவியல் பதறத் தொடங்கி இருப்பதாகவே கருதுகிறேன்.
முற்போக்கும் புரட்சியும் பேசுகிறவர்களுக்குள்ளிருந்து நிறைய சாதிய முகங்கள் வெளியே வந்து மனித உரிமை, மரண தண்டனை எதிர்ப்பு என்ற சாயங்களைப் பூசித்திரிகின்றதைப் பார்க்கும் போது தான் சாதியச் சமூகத்தின் வேர்த் தடங்கள் தெரியத் தொடங்குகின்றன.

சமூக விஞ்ஞானம் பயில்கின்றவர்கள் எனச் சொல்வோரிடமே சாதியம் குடியிருக்கிற போது, சாதிய வட்டத்தோடு நெருங்கி இருக்கிற சாமானியர்களின்  உளவியலை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.

இடைநிலைச் சாதிகள் அல்லது உயர்த்திக் கொண்ட சாதிகளில் உள்ள சமூக சனநாயக சக்திகள் இது போன்ற தீர்ப்புக்கு ஆதரவாக நிற்கும் போது தான், சாதியக்கட்டுமானத்தை மெல்ல மெல்ல அவிழ்க்கவும் அதைக் கரைக்கவும் முடியும். மாறாக, எதையோ ஒன்றைக் காரணம் காட்டி எதிர்த்து நின்றால், சாதியவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதாகவே அமைந்துவிடும்.

நிலவுகிற சமூக அமைப்பில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானது. அதுவும் சாதியம் பற்றிய தளத்தில் .

முற்போக்கு புரட்சி பற்றிப் பேசும் மிகப் பலரும்  கவுசல்யாவைப் பாராட்டித்தான் பேசுகிறார்கள். சாதியவாதிகள் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் தீர்ப்பை மட்டும் எதிர்க்கிறார்கள். மரண தண்டனை மனித உரிமை எனப் பேசி பதற்றமடைகிறார்கள். சாதியம் பற்றிய உரையாடலைத் திசை திருப்புகிறார்கள். இவை யாவும் சாதியத்தை ஏதோ ஒரு வகையில் முட்டுக் கொடுக்கும் வாதங்கள் தான்.

சாதிய ஒழிப்புப் போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் என்றுமே தயார் தான். உயர்த்திக் கொண்ட சாதிகளே இணையத் தயங்குகின்றன .

தமிழ்ச் சமூகத்தில் இந்தத் தயக்கத்தை கவுசல்யா உடைத்தெறிந்து புரட்சிகரப்  பெண் அறமாய் முன் நிற்கிறார் . நாம் அவரோடும் அவர் பக்கமும் நிற்பதே சாதிய ஒழிப்புப் போராட்டத்தின் அணி சேர்க்கை ஆகும்.

உயர்த்திக் கொண்ட சாதித் திமிரை ஒழித்துக் கட்டுவோம். உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக