வியாழன், 14 டிசம்பர், 2017

சாதியம் குறித்துப் பேசு பொருளாக்குங்கள்; அதுவே மனித உரிமைக்கான அறம்


சங்கர், சாதிய ஆணவப் படுகொலைக்கான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மூன்று வகைப்பட்ட போக்குகள் நிலவுகின்றன.

நிலவுகிற சமூக அமைப்பின் அரசு எந்திரம் வழங்கி இருக்கிற இது போன்ற தீர்ப்புகளே சாதியத்தையும் சாதியப் படுகொலைகளையும் ஒழித்து விடும் என நம்புவது ஒரு போக்கு.

மற்றொன்று , சாதிய ஆணவப் படுகொலைகளை ஆதரித்தும், சாதியத்தின் திமிரோடு காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வெளிப்படுத்தித் தீர்ப்புக்கு எதிரான ஒரு சாதிய உளவியலை உருவாக்கும் அல்லது இறுக்கமாக்கும் போக்கு .

இன்னொன்று, இது போன்ற குற்றங்களுக்காக மரண தண்டனை கூடாது என வாதிடும் போக்கு.

மேற்குறித்த மூன்று வகைப்பட்ட போக்குகளுமே நிலவுகிற அல்லது நிலவி வந்திருக்கிற சாதியச் சமூக அமைப்பின் இயங்குதலை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் சரிவரப் புரிந்து கொள்ளாமையால் உருவானவை.

சாதிய இறுக்கம் ஒரு புறமும், சாதியத் தளர்வுக்கான வேலைகள் ஒரு புறமும் பல காலமாக நடந்து கொண்டு தான் வருகின்றன. இதில் எதன் பக்கம் நிற்கிறோம் அல்லது நிற்கப் போகிறோம் என்பதே நம் முன் நிற்கிற கேள்வி. இதற்கு முன்னால் சாதியம் பற்றிய புரிதலில் தெளிவு தேவை .

மரண தண்டனை தீர்ப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தோழமைகளின் கருத்துகள் குறித்து தான் மறு விமர்சனம் செய்யப்படுகிறது . சாதியம் பற்றிய உரையாடல்களைப் பின்னுக்குத் தள்ளுவதில் என்னென்ன அக மற்றும் புறக் காரணிகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி , சாதியத் தகர்ப்புக்கான அணி சேர்க்கைக்கான அறைகூவல் தான் எம் போன்றவர்களின் விமர்சனப் போக்குகள்.

இது போன்ற விமர்சனங்கள் , உயர்த்திக் கொண்ட சாதிய சமூகத்திலிருந்து சமூக சனநாயக ஆற்றல்களாகப் பரிணமித்திருக்கும் தோழமைகளை சாதியவாதிகளாகச் சுருக்கிப் பார்ப்பதாகவோ , ஒடுக்கப்பட்டவர்களின் விரோதியாகப் பார்ப்பதாகவோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.  அவர்களது புரிதல் மீதும் கருத்தின் மீதும் தான் விமர்சனமே தவிர, அவர்கள் எதிராளிகள் அல்ல. விமர்சனம் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் யாவரும் எம் தோழரே.

சாதியப் பிரச்சினை குறித்துப் பேச வேண்டியதும், செயலாற்ற வேண்டியது குறித்தும் தோழர் தமிழரசன் அவர்களின் விவரிப்பு பின்வருமாறு:

' சாதிப் பிரச்சனை ஒவ்வொன்றுமே ஜனநாயக உரிமைக்கான பிரச்சனையாகும். சாதி ஒழிப்பிற்கான பிரச்சனையாகும் . சாதி ஒழிப்பிற்கான ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களைப் பாட்டாளி வர்க்கக் கட்சி வறட்டுவாதங்களில் சிக்கி சரியான நிலை எடுக்கத் தவறுவதால் நிலபிரபுத்துவ சாதிவெறிக் கொடுமையிலிருந்து தப்பித்தாக வேண்டிய கட்டாயத்தால் மக்கள் அச்சாதிவெறிக் கொடுமைகளைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் பிற்போக்கு வாதிகளின், வர்க்க சமரச சீர்திருத்தவாதிகளின் பின்னால் ஓடுகிறார்கள்.

பிற்போக்கு வாதிகளின் நோக்கம் உழைக்கும் மக்களை ஒன்றுபட்டு விடாதபடி பிரித்துவைத்திருப்பதே என்பதால் சனநாயக உரிமையை வழங்குவதை என்றுமே தீர்ப்பதில்லை. சீர்திருத்தவாதிகளோ மதமாற்றம், வகுப்புவாரி ஒதுக்கீடு, சாதி சங்கம் என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்று பிரச்சனையை ஓரிரு எலும்புத் துண்டோடு நிறுத்திவிடுகிறார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றிச் சாதிகளையே ஒழிப்பதை நோக்கி இட்டுச் செல்வதில்லை.

சாதிப் பிரச்சனை என்பது சனநாய பிரச்சனையில் சாதி ஒழிப்பின் வடிவமே. இது இந்தியாவிற்கு மட்டுமே, இந்தியத் துணைக்கண்டப் புரட்சிக்கு மட்டுமே உரியதென்பதால் மற்ற நாட்டு புரட்சி போலல்லாமல் இதற்குத் தனி கவனம் செலுத்தப்பட்டாக வேண்டும்.

இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே தீர்க்கப்பட முடியுமென்பதால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து சனநாயகப் போராட்டங்களுடனும் அதாவது புதிய சனநாயகப் புரட்சிக்குரிய சனநாயகப் போராட்டங்களுடனும் இணைக்கப்படவேண்டும். சாதி ஒழிப்புப் போராட்டங்கள் உழவர் விடுதலை, தமிழக விடுதலைப் போராட்டங்களுடன் இணைக்கப்பட்டாக வேண்டும்'.'

 -தோழர் தமிழரசன்
(''சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்'' எனும் நூலில் இருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக