சனி, 28 மார்ச், 2020

தமிழர் மரபின் அறிவையும் அறத்தையும் மீட்டெடுப்போம்: மகாராசன்




தமிழரின் மரபு மருத்துவமான
'சித்த மருத்துவம்',
தமிழரின் உலகு தழுவிய வாழ்வொழுக்கமான 'அற இயல்' ஆகிய இரண்டு அறிவுப்புலங்களும் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் 1983 காலகட்டம் வரையிலும் இருந்துள்ளன.
தமிழரின் மரபு அறிவும்,
தமிழரின் மரபு ஒழுக்கமும் தமிழ்நாட்டுக் கல்விப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.
மரபறிவை விட்டொழிக்கச் செய்தல் அல்லது மறக்கச் செய்தல், மரபொழுக்கத்தை மழுங்கடிக்கச் செய்தல் அல்லது நுகர் வெறிச் சீரழிவில் பயணிக்கச் செய்தல் என்பதாகவே நவீனக் கல்விமுறையும் அதன் பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
மரபின் அறிவைப் புறந்தள்ளிவிட்டும், மரபொழுக்கத்தின் அறத்தை அறுத்தெரிந்துவிட்டும் உருவாகிற அல்லது உருவாக்கப்படுகிற அறிவு என்பதெல்லாம், இன்னபிறவற்றின் இரவலாகவும், கடன் வாங்கலாகவும், கையேந்தலாகத்தான்இருக்கும்.
எந்தவொரு சமூகம் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் திறனைப் பெற்றிருக்கிறதோ, அந்த சமூகம் தமது மரபறிவை ஆழமாகப் பெற்றிருக்கிறது என்று பொருள். தமிழ்ச் சமூகமும் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் தகவமைத்துக் கொள்வதற்கும் இழந்துவிட்ட அல்லது கைவிட்ட மரபறிவுப் புலங்களை மீட்டெடுத்து நவீனப்படுத்த முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் ஏற்கெனவே இருந்த சித்த மருத்துவம், அற இயல் போன்ற பாடப்பிரிவுகளை வருகின்ற கல்வி ஆண்டில் மீண்டும் கொண்டுவர தமிழ்நாடு அரசாங்கமும் பள்ளிக்கல்வித் துறையும் முன்வர வேண்டும்.
ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் தமிழ்நாடு அரசாங்கமானது, தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் புதிய சித்த மருத்துவக் கல்லூரிகளையும், ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளையும், ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்குவதற்கு முன்வரவேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழர்கள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்.
சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்த்தொற்றுகளுக்கு தமிழர் மரபு மருத்துவமான நிலவேம்புக் குடிநீர் மருத்துவப் பயனை அளித்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மரபு மருத்துவத்தின் முக்கியத்துவம் கருதுவதால், ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தை முற்றிலும் புறக்கணித்தல் என்பது பொருள் அல்ல. நமக்கான மருத்துவத்தை நமது மரபிலும் தேடலாம் என்பதே பொருள்.
பழமை என்கிற ஒன்றுக்காகவே மரபு அறிவைப் புறந்தள்ளுகிற ஒரு சமூகம், ஒருபோதும் எழுந்திருக்கப் போவதில்லை.
அறிவைத் தமிழர் மரபிலும் தேடுவோம்.
ஏர் மகாராசன்
28.03.2020.

1 கருத்து: