புதன், 14 அக்டோபர், 2020

நவீன வர்ணாசிரமப் பாகுபாடும் பட்டியல் மாற்றக் கோரிக்கையும்: மகாராசன்

ஓர் இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவரும் மேல்சட்டைகூடப் போடாதவருமான ஆடு மேய்க்கும் ஒருவர்,  இன்னொரு இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்த மேல் சட்டை அணிந்திருக்கும் ஆடு மேய்ப்பவரைக் காலில் விழ வைத்திருக்கிறார். 

பார்பதற்கு இருவரும் கிட்டத்தட்ட ஒரே அளவு பொருளாதார  வாழ்நிலை உள்ளவர்கள் போலத் தெரிகிறது. 

தனியாகச் சிக்கிய ஒருவரைக் கூட்டமாக உள்ளவர்கள் அடக்கி ஆதிக்கம் செலுத்தும் நிலை எல்லாச் சாதியிலும் மட்டுமல்ல; ஒரே சாதிக்குள்ளும் இருக்கிறது.

ஆனால், ஒத்த வாழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு ஆதிக்க உணர்வும் ஒருவனுக்கு அடிமை உணர்வும் எப்படி வந்திருக்கிறது அல்லது வருகிறது? 

உயர்சாதி ஒரு தரப்பினராகவும் என்றும், கீழ்ச்சாதி இன்னொரு தரப்பினராகவும் வகைப்படுத்தி வைத்திருப்பது சாதி வர்ணாசிரமம் மட்டுமல்ல; இட ஒதுக்கீடுக்கென வகைப்படுத்தப்பட்டிருக்கும் ஓ.சி; பி.சி; எம்.பி.சி; எஸ்.சி; எஸ்.டி எனும் பட்டியல்களும்கூட நவீன சாதிய வர்ணாசிரமக் கட்டமைப்பாக உருமாறிக்கொண்டிருக்கின்றன.

ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் உள்ள சாதியினர் எல்லோருமே உயர்சாதி என நினைத்துக்கொள்ளும்படியான சமூக உளவியல் அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகின்றது. 

சமூகப் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்பினும் ஓ.சி / பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் இருக்கும் சாதியினர் தங்களை உயர்சாதி அல்லது உயர்த்திக்கொண்ட சாதி என நினைத்துக்கொண்டு தம்மளவிலான சமூக மதிப்பையும் சுயமரியாதையையும் பெற்றதான சாதிகளாகக் கருதிக் கொண்டிருக்கின்றன.

அதேவேளையில், எஸ்.சி எனும் பட்டியலில் உள்ள சாதியினர் அனைவரையும் தீண்டாச் சாதிகள்; இழி சாதிகள் என ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியல்களில் உள்ள மற்ற சாதியினர் இழிவாகக் கருதுவதும், இழி நடத்தையால் சமூக ஒதுக்கம் செய்வதும், அவர்களது சுயமரியாதையை அவமதிப்பதும் உயர்த்திக்கொண்ட சாதியினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆரிய வர்ணாசிரமம் கட்டமைத்திருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இப்போதைய ஓ.சி/பி.சி/எம்.பி.சி இடஒதுக்கீட்டுப் பட்டியல்களில் உள்ளவர்களும் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடைபிடிக்கும்  சாதிவாதிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 

அதாவது, எஸ்.சி பட்டியலில் இருக்கும் சாதியினரை மற்ற ஓ.சி/பி.சி/எம்.பி.சி பட்டியலில் இருக்கும் சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதும், இழிவாகக் கருதுவதும், சுய மரியாதையைப் பறிப்பதும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வகைப்பாட்டின் அய்ம்பதாண்டு கால சமூக விளைவு, அது நவீன வர்ணாசிரமக் கட்டமைப்பாக மாறிப்போயிருக்கிறது.

ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இடஒதுக்கீட்டுப் பட்டியல்களும் அவற்றின் சாதிகளும் மாற்றியும் மறுசீரமைப்பும் செய்யப்பட வேண்டும் என்ற அண்ணல் அம்பேத்கர் கூறியதைப் புறந்தள்ளியதன் விளைவே, இடஒதுக்கீட்டுப் பட்டியல்கள் நவீன வகையிலான சாதியக் கட்டமைப்பைப் பாதுகாப்பதாக மாறிப்போயிருக்கிறது.

அதனால்தான், எஸ்.சி எனும் பட்டியல் பிரிவில் இருக்கின்ற காரணத்தாலேயே சமூக ஒதுக்கல்களையும், சமூக அவமதிப்பையும், சுயமரியாதை இழிவையும் எதிர்கொண்டிருக்கும் ஒரு சமூகப்பிரிவினரான தேவேந்திரகுல வேளாளர்கள் தாங்கள் எஸ்.சி பட்டியலில் இருப்பதாலேயே இதுபோன்று நடத்தப்படுவதாகவும், அத்தகையச் சமூக இழிவிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் ஒரு பாதையாகவே எஸ்.சி எனும் பட்டியலை விட்டு வெளியேறி, வேறு பட்டியலுக்கு மாறுவதான பட்டியல் மாற்றக் கோரிக்கையை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வகையில், பட்டியல் மாற்றக் கோரிக்கை என்பது, நவீன வர்ணாசிரம சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான கோரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஏர் மகாராசன்

13.10. 2020

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்,

மக்கள் தமிழ் ஆய்வரண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக